Monday, March 19, 2018

வேங்கையின் மைந்தன்

மும்முடிச் சோழன், கங்கைகொண்ட சோழபுரத்தை கட்டுவித்த மாமன்னன் இராஜேந்திர சோழர் காலத்தில் நிகழும் வாழ்வின் நிலைகளை, செப்பேடுகள், கல்வெட்டுக்கள், களநிலவரங்கள் ஆகியவற்றின் துணையோடு கற்பனைப் பறவையின் சிறகுகளை தாராளமாய் பறக்க விட்டிருக்கிறார் ஆசிரியர் அகிலன்.

கொடும்பாளூர் இளவரசர் இளங்கோவேள் இங்கு கதையின் நாயகனாக வலம் வந்தாலும், தன்னடக்கத்தோடு இராஜேந்திர சோழரையே முதன்மைப்படுத்தி நிற்கிறார். ஈழத்திலிருந்து பாண்டியர்களின் மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் இழந்த மணிமுடியை ரோகணத்து இளவரசி ரோகினியின் துணையோடு மீட்டு வருவதும், ரோகிணி மீதான காதலும், பின்நாளில் நிகழும் ஆபத்துகளும், பாண்டியர்கள், மேலை சாளுக்கியர்கள், போன்றவர்களின் சூழ்ச்சிகள் என விறுவிறுப்பாக செல்கிறது.

இங்கும் பொன்னியின் செல்வரோடு பயணித்த வந்தியத்தேவன் வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் இளங்கோவோடு திரிகிறார்.

வீரமல்லன் எனும் நட்பின் பகைமையும், மல்லன் மாறன் எனும் நட்பின் தியாகமும் இருவேறு துருவங்களாக நிற்கின்றன.

அருண்மொழி இராஜேந்திரரின் புதல்வி அப்படியே பொன்னியின் செல்வனின் குந்தவைப் பிராட்டியை நினைவில் கொண்டுவருகிறார். இளங்கோவின் முறைப் பெண்.

இளங்கோ-ரோகிணி-அருண்மொழி என முக்கோணக் காதல் கதையில் கங்கை கொண்ட சோழபுரத்தின் உருவாக்கமும், கொடும்பாளூர் நகரின் நிர்மூலமும் என தொடரும் கதை கடாரத்தை இளங்கோ இராஜேந்திர சக்கரவர்த்திக்காக வெற்றிகண்டு வருவதுடன், அரசகுல தர்மத்தின்படி இருவரையும் கைத்தலம் பற்றுவதில் முடிவு பெறுகிறது.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:11
தலைப்பு: வேங்கையின் மைந்தன்-நாவல்
ஆசிரியர்: அகிலன்
மொத்தப் பக்கம்: 646 (மின்நூல்)

Sunday, March 18, 2018

சொற்கள்

உன் விருப்பம் போல் எழுது
உனக்கு பிடித்த முறை எதுவாயினும்
அந்த முறையில் எழுது
பாலத்துக்கடியில்
மிக அதிகமான ரத்தம் பாய்ந்துவிட்டது
தொடர்ந்து நம்பிக் கொண்டிரு
அந்த ஒரே ஒரு பாதைதான் சரியானதென்று
கவிதையில் எல்லாவற்றுக்கும் இடமுண்டு
இயல்பாகவே ஒரே ஒரு நிபந்தனைதான்
ஒரு வெற்றுப் பக்கத்தை நீ மேம்படுத்த வேண்டும்.

ஸ்பானிஷ் கவி நிகனோர் பர்ராவின் இக்கவிதை புதிதாக எழுதவரும் இளம் கவிஞர்களுக்கான ஒரு எளிய வழிகாட்டி.

சொற்கள் முழுக்க முழுக்க கவிதைகளுக்கான காலாண்டிதழ்.

சிக்மா, பத்மஜா அய்யங்கார், எலிசபெத் குரியன் மோனா மற்றும் மந்திரபு ஹைமாவதி கவிதைகளை மதுமிதா மொழியாக்கம் செய்துள்ளார். யயாதி மதன் காந்தி கவிதையை பத்மஜாவும் நிகனோர் பர் ராவின் கவிதைகளை எம்.கார்திகேயனும் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்.

என்.பெரியசாமி, வெய்யில், இசை, கார்த்திக் நேத்தா, மோகனரங்கன், லட்சுமி மணிவண்ணன், ஆகாசமுத்து, ப.தமிழ்ச்செல்வன், சிவமணி, இர. தங்கபாலு, மீரா வில்வம், அழகு நிலா, ஆத்மாஜீ, வே.பாபு, ஆனந்த், ஷா அ, வேல் கண்ணன், ஜான் சுந்தர், ஸ்ரீ சங்கர விஸ்வநாதன், ஜேப்ராங்க்ளின் குமார், யாழி, கனிமொழி ஜி, குமார நந்தன், விஷ்ணுகுமார், பின்னி மோசஸ், ராஜேஷ் ஜீவா, கௌதம சித்தார்த்தன், பழனி பாரதி என இருபத்தி எட்டு கவிஞர்களின் கவிதைகளோடு தனது முதல் பயணத்தை துவங்கியுள்ளது சொற்கள். இவர்களில் சிலரை நான் முகநூல் வழியே வாசித்திருக்கிறேன், சிலரை வேறு சில சிற்றிதழ்களில் வாசித்திருக்கிறேன். சிலர் இப்போதுதான் புதியவர்கள். எல்லோரையும் ஒரே இதழில் வாசிக்கும்போது கவிதைகளின் வெளியையும், போக்கையும் அவதானிக்க முடிகிறது.

ஆத்மாநாம் உடனான பிரம்மராஜனின் நேர்காணல் மிக அருமை. நிறைய விடையங்களை விபரித்து சென்றுள்ளது. இதுபோன்ற நேர்காணல்கள் கவிதைகள் மீதான சந்தேகங்களுக்கு நிவர்த்தியாக அமையும்.

சிற்றிதழ்கள் நீண்டகாலம் உயிர் வாழ்தல் என்பது நடவாத ஒன்றாகவே உள்ளது. ஆனால் வாழும் காலத்தில் அவை தரமாக வாழ்ந்துவிடுவதில் இன்னும் உயிர்ப்பு இருக்கிறது.

தலையங்கத்தில் ஆசிரியர் சாத்வீக முறையிலான கவிதைகளோடு இருக்க விரும்புகிறார். இது இன்றைய நிலையில் எழும் மனதின் நிலைப்பாடுதான். அதேபோல் கவிதைகளைத் தருவிப்பதிலும், கவிஞர்களை அடையாளம் காணுவதிலும் சோர்வுற்றுப் போனதாக எழுதியுள்ளார். வரும் இதழ்களில் அந்த சோர்வுகள் இருக்காது என்ற நம்பிக்கையை இந்த இதழ் வெளிப்படுத்தியுள்ளது.

சி.மணிக்கு சமர்ப்பணத்தோடு கவிதைகளுக்காகவே சிறப்பாக தன்னம்பிக்கையோடு வெளியிட்டிருக்கும் திரு. கே.சி.செந்தில்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காது தொடர்ந்து இதழ் தனது வெற்றி பயணத்தை தொடர வாழ்த்துக்கள்.


அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:12
தலைப்பு: சொற்கள் (கவிதைக்கான காலாண்டிதழ்)
ஆசிரியர்: கே.சி.செந்தில்குமார்
மொத்தப் பக்கம்: 48
விலை: ₹50 

Tuesday, March 13, 2018

எல்வின் கண்ட பழங்குடிகள்

வெரியர் எல்வின் இங்கிலாந்தில் கென்ட் மாகாணத்தில் 1902ல் பிறந்தவர். 1964ல் இந்தியாவில் தன் வாழ்வின் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டவர்.

பக்தவச்சல பாரதி அவர்களது அறிமுக உரையில் சொல்லப்பட்டது போல "தமிழில் எழுதப்பட்ட தன்வரலாறுகளை விட தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட தன்வரலாறுகளே மிகுந்த கவனம் பெற்றவை."

இங்கிலாந்திலிருந்து கிறித்துவ திருச்சபை பணியாளராக இந்தியா வந்து, இந்தியத்துவால் ஈர்க்கப்பட்டு கிறித்துவ சபையிலிருந்து விலகி ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே இந்திய விடுதலை இயக்கத்தை ஆதரித்து, இந்தியப் பழங்குடிப் பெண்ணை மணந்து நான்கு மகன்களுக்கும் இந்தியப் பெயர்களையே சூட்டி, இந்திய அரசில் பணியாற்றி, இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியக் குடியுரிமை பெற்று இந்தியராகவே மாறி பத்ம பூஷண் விருது பெற்று இந்தியாவிலேயே உயிர் துறந்த மானிடவியலாளரே வெரியர் எல்வின்.

மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் வாழ்ந்த ஒருவர் கீழை நாட்டுக் கலாச்சாரத்தில் அதிலும் பழங்குடிகள் கலாச்சாரத்தில் தன்னை ஐக்கியப்படுத்தி தன் வாழ்க்கை முழுவதையும் அவர்களோடு ஒன்றிப்பழகிய ஒரு தன்னிகரற்ற மாமனிதர். அவர்களைப் பற்றிய யாரும் அறிந்திடாத பல்வேறு விடயங்களை நேரில் சென்று வாழ்ந்து வெளி உலகிற்கு அறிமுகம் செய்வது சாகசமாகவே உணரமுடிகிறது.

இலங்கை, ஆப்ரிக்கா, இந்தியாவின் மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளின் பழங்குடி மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக்கூறுகள், மொழி, காதல், உறவுமுறைகள், உணவுகள், தொழில் என பல விடையங்களை பதினோரு தலைப்புகளில் இந்நூல் விவரிக்கிறது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு பிறகு சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களும் இந்த ஆதிவாசிகள் மீது சீர்திருத்தம் எனும் பெயரால் நிகழ்த்திய கொடுமைகளையும், அதனால் பழங்குடி மக்கள் தங்கள் இயல்பான சுதந்திரத்தை இழந்துவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். சுதந்திர இந்தியா பழங்குடிகளின் சுதந்திரத்தை பறித்தே விட்டது. வனங்களை அரசே நிர்வாகம் செய்யத் துவங்கியது. அவர்களது விவசாய நிலங்களை கையகப் படுத்தியிருக்கிறது. இயல்பான அவர்களது நடனங்களை, கலைகளை அவர்கள் இழந்துவிட்டார்கள்.

இந்த நூலை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாசகர் வட்டம் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறது. பின்னர் முப்பத்தாறு ஆண்களுக்குப் பின் அதாவது 2003ல் விழுதுகள் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சில செய்திகளை கூடுதலாக இணைத்து இப்போது அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் (1910-2006).

வெரியர் எல்வின் இந்தியப் பழங்குடிகளின் வாழ்வியலை வெளி உலகு அறியச் செய்த விடிவெள்ளி என்றால் மிகையல்ல.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:10
தலைப்பு: எல்வின் கண்ட பழங்குடிகள்
ஆசிரியர்: வெரியர் எல்வின்
வெளியீடு: அடையாளம்
மொத்தப் பக்கம்: 224
விலை: ₹160 

Monday, March 5, 2018

உலோகம்-கறல் ஏறிய தகரத் துண்டு

வாசிப்பை நேசிப்போம் வழி அறிமுகமான ப்ரதீஷ் எனும் நண்பர் மூலமாக எனக்கு வாசிக்கக் கிட்டியதுதான் இந்த நாவல். இதை நாவல் என சொல்வதைக் காட்டிலும் அதீதமான கற்பனைகள் நிரம்பிய ஒருவரது சுயசரிதை என்பேன். என் நன்றிகளை நண்பர் ப்ரதீஷ் அவர்களுக்கு முதலில் சொல்லிவிடுகிறேன்.

பலரும் பல்வேறுவிதமாக இதை விமர்சனம் செய்திருப்பதை அறிவேன். அதனால்தான் நண்பர்கள் என்னிடம் இதைப்பற்றி விவாதம் செய்யும்போதுகூட அமைதியாக இருந்திருக்கிறேன். வாசிக்காமல் நாம் எந்த முடிபுக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பவன்.

மின்னஞ்சல் வாயிலாக தினமும் ஜெயமோகன் அவர்களது பத்தி எழுத்துகளை வாசிப்பவன். எழுத்து வசீகரத்தை குறைசொல்ல ஏலாது. அதற்காக அந்த எழுத்துகளை, மொழியை தவறாக பயன்படுத்துவதை சகித்துக்கொள்ள இயலாதுதானே? அப்படியாகத்தான் இந்த நூல் முழுவதும் சகித்துக்கொள்ள இயலாத அபத்தமான, ஆபாசமான விடயங்கள் விரவிக் கிடக்கின்றன.

எந்த ஒரு போராட்டக் குழுவும் விமர்சனத்துக்கு உட்படாமல் இயங்க இயலாது. இதுதான் நியதி. அப்படித்தான் விடுதலைப் புலிகள் இயக்கமும். கொரில்லா முறை போரிலிருந்து மரபு ரீதியான இராணுவ அமைப்பாக தங்களை கட்டமைத்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலைகள் அதிகம். இறுதிக்கட்டப் போரில் புலிகள் செய்த தவறுகளை நானும் விமர்சனப் பார்வையோடுதான் பார்க்கிறேன்.

உலோகம் ஒரு சினிமா பாணியில் எழுதப்பட்ட மாபியாக் கூட்டத்தின் கதையாகவே என்னளவில் இருக்கிறது. விந்தின் துர்நாற்றமும், இரத்தத்தின் கவுச்சியும், பாலியல் வறட்சி, புகை வாடை, அதீதமான செயல்பாடுகள் என நூல் எங்கும் துர்நாற்றம் வீசுகிறது.பெண்ணுடல் மீதான வேட்கை அபத்தமானது. இது புலிகள் அமைப்பில் இல்லாத ஓன்று என்பதை அனைவரும் அறிவர். அதே நேரம் "ரோ" எனும் உளவு அமைப்பை அதிசிறப்பான ஓர் அமைப்பாக காட்ட முனைந்திருக்கிறார். அதன் விளைவு புலிகள் அமைப்பை கொச்சைப்படுத்தி கதையை நகர்தியிருக்கிறார். ரோ வின் செயல்பாடுகளை ஈழ வரலாறு உள்ளவரை மாற்றி எழுத இயலாது. அதன் கசப்பான நிகழ்வுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டன. இன்றைக்கும் இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதன் கசப்பான சம்பவங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன என்பதும் ஆசிரியர் அறிவார்.

"உலோகம் கறல் ஏறிய தகரத் துண்டு" என்றுதான் வாசித்து முடித்ததும் உணர்ந்துகொண்டது.

#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:9
தலைப்பு: உலோகம்-நாவல்
ஆசிரியர்: ஜெயமோகன்
மொத்தப் பக்கம்: 140 (மின்நூல்)

Sunday, March 4, 2018

சிவந்த மண்-சுகன்யா ஞானசூரி

  (அனைவருக்கும் வணக்கம்... நான் சிறுகதை ஒன்றை எழுத முயற்சி செய்துள்ளேன். கீழே அந்த கதை பதிவு செய்துள்ளேன். வாசித்துவிட்டு சொல்லுங்கள்.)

சிவந்த மண்

பசுமை போர்த்திய அந்தப் பெருங் காடுகள் ஒருபோதும் எண்ணிப் பார்த்திருக்காது தங்களது இந்த நிலையை. பறவைகள், விலங்குகள், பூச்சிகள் மனிதர்கள் என கொஞ்சம் மாற்றமான உலகுதான். எம் காட்டில் உள்ள மரங்களில் பாதிகூட உலகத்தின் காடுகளில் இல்லையென செருக்குற்று இருந்திருக்கக்  கூடும் அந்தக்  காடுகள்.

       இராணுவத்தின் டாங்குகளின் அதிர்வுகளில், பீரங்கிகளின் முழக்கத்தில் மொத்தக் காடும் கலங்கித்தான் போய்விட்டது. பறக்க எத்தனித்த பறவைகளின் சிறகுகள்கூட எரிந்து போனது. உலக வல்லாதிக்கப் படைகள் எல்லாம் ஓரிடத்தில் கூடினால் சின்னத்  தேசம் என்ன செய்யும்? வெடிச் சத்தத்தில் மொத்தக் காடும் அழுகுரல்களின் கூடாரமகியது.

        உச்சகட்ட தாகுதல்களுக்கிடையே ஒரு குரல் காற்றில் கரைந்து கொண்டிருகிறது. அடியோடு பெயர்ந்து விழும் அந்த மரங்களுக்கிடையே..... பாஸ்பரஸ் குண்டுகளின் அமில மழைகளுகிடையே..... அந்தக் குரல் விட்டு விட்டு ஒலிக்கிறது......

        வெடித்து சிதறிய சன்னங்கள் மனித உடல்களை மட்டுமல்ல காட்டு விலங்குகளையும் இரத்ததில் குளியாட்டுகிறது...... அமிலத் தீயில் மரங்களோடு பல உடலங்களும் எரிந்து பொசுங்கிக் கொண்டிருக்கிறது.......
   
         உடல் கருகும் வாடைகள் காற்றில் கலந்து குடலைப் புரட்டுகிறது....... மனதில் ஒருவித வெறி தொற்றத்தான் செய்கிறது...... வானூர்திகளின் பேரிரைச்சல் களுக்கிடையே பானு....பானு....என ஒரு ஆண் குரல் காற்றில் கலந்து கேட்கிறது. மொத்த சக்திகளையும் இழந்து இறுதித் தவிப்புகளில் தேடுவதாகவே தெரிகிறது.
   
         இரத்தமும் சேறுமாய் இருக்கும் உடலங்களை அவன் திருப்பித் திருப்பிப் பார்க்கிறான். பானுவுக்கு ஒன்றும் ஆகியிராது என்று அவன் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாலும் மனம் பதற்றத்தோடு தேடுகிறது. அவனது சிறுவயது எண்ணங்களும் பின்னோக்கி ஓடுகிறது.

           தீரன் சீக்கிரம் வா.... பொம்பர்க்காரன் (ஒரு வகையான போர் விமானம்) வட்டமடிக்குறதைப் பார்த்தால் ஏதோ அசுமாத்தம் நடக்கப் போவுதெண்டு நினைக்குறேன் தீரா..... வீட்டுக்கு சீக்கிரம் போய்விடுவோம் வா பானு......  என இருவரும் மரங்களின் மறைவுகளினுடே வானத்தைப் பார்த்தவாறு மறைந்து மறைந்து நடக்கின்றனர்.

            அன்றுதான் அந்த துயர சம்பவம் நடந்தது. பள்ளி முடித்து வீட்டுக்கு கிளம்பியபோது வட்டமடித்த அந்த விமானம் பீப்பாய் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றது. வெடித்த அந்தக் குண்டுகளில் சுக்கு நூறாய்ப் போனது பானுவின் வீடு மட்டுமல்ல அவளது பெற்றோரும்தான்.

             அனாதையாக நின்றவளை என்னால் என் வீட்டுக்கு கூட்டிச் செல்ல முடியவில்லை. வீட்டில் யாரெண்டு கேட்டால் நண்பி எண்டு சொன்னாலும் நம்பமாட்டார்கள். காதலி எண்டு சொல்லவும் முடியாது. சொல்லிவிடும் துணிவும் எனக்கில்லை. சொல்லுகின்ற வயதுமில்லை அது. செஞ்சோலை இல்லம் அவளை அழைத்துச் சென்றது. காதல் மட்டும் கண்களில் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

             இங்கு காதல் அப்படித்தான். துரித உணவுகளைப் போல செரிக்காத காதல்கள் இங்கில்லை. ஆரோக்கிய உணவுகளைப் போன்றவர்கள். ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அன்புகளை மட்டுமே பரிமாறிக் கொள்வார்கள்.

              சில ஆண்டுகளுக்குப் பிறகு நாங்களும் யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர நேர்ந்தது. வன்னியில் சித்தி குடியிருந்ததால் நாங்களும் அங்கு குடியேறினோம்.

               முதன்முதலாக வன்னிக் காட்டை பார்த்தபோது பிரமித்துப் போய்விட்டேன். அவ்வளவு பசுமையும், நெடுமரங்களும் என அழகாய் காட்சி தந்தது.

                 இந்தக் காடுகள் எம்மைப் போல் இடம் பெயர்ந்துவிடக் கூடாது. அப்படி ஒருவேளை நிகழ்ந்து விட்டால் எமது பண்பாட்டுக் கூறுகளை, எம் இனத்தின் அடையாளங்களை நாம் இழந்து விடக்கூடும்.

                   வன்னிக்கு வந்தபோதுதான் பானுவையும் பார்க்க நேரிட்டது. பானுவை மீண்டும் அங்கு கண்டபோது வார்த்தைகள் எழவே இல்லை. அவளைக் கட்டியணைத்து அழுதுவிட வேண்டுமென மனம் துடித்தது. இத்தனை ஆண்டுகளில் பானு நிறையவே மாறிவிட்டாள். என்னைமட்டும் மறக்கவில்லை.

                    பானுவைக் கண்டத்தில் நான் என்னையே முழுவதுமாய் இழந்து விட்டதாக எனக்குள் தோன்றியது. இருக்காதா பின்ன..... எத்தனை நாட்களாகிவிட்டது அவளைப் பார்த்து பேசி.

                   இப்படியாக ஒருசில ஆண்டுகள் நான் பானுவை பார்ப்பதும் கதைப்பதும் தொடர்ந்தது.

                    அன்றைய தினம் அப்படி நான் பானுவை பார்க்க சென்றபோதுதான் அந்த இறுதிக் கணங்களுக்குள் நானும் அகப்பட்டுக் கொண்டேன்.

                     எரிந்து கருகும் உடலங்களின் வாடையும், அமிலக் குண்டுகளின் நெடியும் நிலைகுலையச் செய்துவிட்டது. இன்னொரு கிரோஷிமா, நாகசாகியின் கதிர்வீச்சுக்கள் எம் மண்ணிலும் தங்கியிருக்கக் கூடும். இங்கே செத்துப் பிழைக்கும் உயிர்களில் நிச்சயம் அது கடத்தப்படக்கூடும்.

                      இறந்து கிடக்கும் உடலங்களை வல்லாதிக்க அரக்கர்கள் வன்புணர்வு கொள்வதைக் கண்டு மனம் நொந்தது. ஐயோ... பானு  நீ உயிரோடு இந்த அரக்கர்கள் கையில் அகப்படக்கூடாது.... மனம் துடியாத் துடித்தது.

                       இந்த வல்லூறுகளுக்கு எதிராக நாம் சண்டையிடுவது தவறா? எமக்கென்று ஒரு வாழ்க்கை....அதில் கொஞ்சம் சந்தோசம் எதிர்பார்ப்பது தவறா? ஆதிமுதல் ஆண்ட இனம் தனக்கென தனித் தேசம் கேட்பது தவறா? இத்தனை இலட்சம் உயிர்களை கொல்லும் போர் வேண்டுமா? அன்பைப் போதிக்கச் சொன்ன புத்தனின் குழந்தைகள் ஏன் எம் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட வேண்டும்?

                        அவனுக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது. இங்கு கத்துகிற கதறல் சத்தங்கள் கூட கடல் தாண்டிக் கேட்குமென நம்பமுடியாது. இதோ இங்கிருக்கும் கஜவர்களின் கூட்டத்தில் பல நாட்டுக் கறுப்பாடுகளும் சேர்ந்ததல்லவா ஒரு இனத்தை வேட்டையாடுகிறது.

                        எம் இனம் கட்டியெழுப்பிய கண்ணியமான, கட்டுக்கோப்பான வளர்ச்சி பொறுக்காது ஏற்படுத்தப்பட்ட போராகவே எமக்குத் தெரிகிறது. தமது இயலாமைகளை எமது பெண்கள் மீது வன்புணர்வின் ஊடாக தீர்த்துக் கொண்டல்லவா இருக்கிறார்கள்.

                        உண்மையான போர்வீரன் ஒருபோதும் இந்த இழிசெயலை செய்ய கனவிலும் நினைக்கமாட்டானே.

                        பானு.... பானு.....நீ எங்குதான் இருக்கிறாய்? நீ பாதுகாப்பு வலயத்துக்குள் சென்றிருந்தால்கூட சந்தோசம்தான் பானு. பாதுகாப்பு வலையத்துக்குள் பானு சென்றிருக்கக் கூடுமென நினைத்து திரும்புகையில் தீரா.......... அடி ஈனசுரத்திலிருந்து ஒரு பெண் குரல். தீரா ....... தீரா ........ அது பானுவின் குரலாகவே தெரிகிறது. அதோ....... அதோ........ அவள்தான்...... பானு...... நான் தேடிக்கொண்டிருந்த பானு....... கண்கள் பனிக்க அவளை ஆரத் தழுவ ஓடுகிறேன்...... சப்பாத்துக் கால்களோடு சில ஓநாய்கள் அவளை மிதித்துக் கொண்டிருக்கிறது.

                         ஐயோ...... பானு....... உன்னையும் இந்த வல்லூறுகள் விட்டு வைக்கவில்லையா? பானு..... பானு..... கதறிக்கொண்டு அவளருகில் செல்வதற்குள் துப்பாக்கிகள் வெடித்தது. உடலெங்கும் இரத்தம் பீறிட்டெழ மிச்சம் மீதியாய் இருந்த அந்த வெண்மணல் பரப்பும் சிவந்தது.

Friday, March 2, 2018

பொன்னியின் செல்வன்-கல்கி

பொன்னியின் செல்வனை வாசிக்காதவர்கள் இருப்பார்களா என்றால் சந்தேகம்தான். ஏனெனில் ஒவ்வொரு சென்னை புத்தகச் சந்தையிலும் இன்றுவரை அதிகம் விற்பனையாகும் நூல்களில் பொன்னியின் செல்வனும் ஓன்று. கல்கி அவர்களது சிறப்பான நடைச் சித்திரம் இந்த நூலின் பக்கம் பல வாசகர்களை இழுத்துள்ளது என்பேன். உண்மை எது? புனைவு எது? என பிரித்தறிய முடியாதபடிக்கு கதைகளை தொய்வின்றி எழுதியிருக்கிறார். வரலாற்றுக் குறிப்புகள், கள ஆய்வுகளைக் கொண்டு மூன்றரை ஆண்டுகாலம் தொடராக எழுதியிருக்கிறார். அந்த மூன்றரை ஆண்டுகாலமும் தொடர்ச்சியாக காத்திருந்து வாசித்த அன்றைய வாசிப்பாளர்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். பொன்னியின் செல்வன் பற்றி பிறர் பேசக் கேட்டு பெரும் ஆவலோடு வாசிக்க அலைந்துகொண்டிருந்தேன் என்று சொன்னாலும் தப்பில்லை. தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டை ஒட்டி எல்.கே.எம் பப்ளிகேசன் ஐந்து பாகங்களும் அடங்கிய தொகுப்பொன்றை சலுகை விலையில் அறிவித்திருந்தது. சங்கர் படத்தைப் போன்ற பிரம்மாண்டத்தினை இந்த நாவலை வாசித்து முடித்ததும் உணர்ந்தேன்.

பிற்காலச் சோழர்களில் குறிப்பாக அருள் மொழி வர்மன் எனும் இராச இராச சோழனை கதை நாயகனாக கொண்டு உருவாக்கப்பட்ட வரலாற்று சரித்திரமிக்க நாவல் இது. வல்லவராயன் வந்தியதேவனும், நந்தினியும் என் மனதை பாதித்த கதாபாத்திரங்கள். இவர்கள் இருவரும்தான் மொத்த கதைக்கான அச்சாணி. இவர்கள் இல்லாமல் போயிருந்தால் இந்தக் கதைகள் சுவாரசியம் அற்றுப் போயிருக்கும். சோழ சாம்ராச்சியத்தின் பலம், பலவீனம், அன்றைய காலகட்டத்தில் இருந்த கிராமங்கள், நகரங்கள், ஓடிய ஆறு, ஆர்ப்பரிக்கும் கடல், வனிகத் தொடர்புகள், கலை கலாச்சாரம் போன்றவற்றை ஆவணமாக்கியிருக்கிறது.

நாளைய தலைமுறைக்கும் இந்நூல் போர் கலையோடு இன்ன பிறவற்றையும் கடத்திச் செல்லும் ஒரு முக்கிய பெட்டகமாக இருக்கும். இது தமிழுக்கும், தமிழர்க்கும் கிடைத்திருக்கும் முக்கியமான தகவல் களஞ்சியம். இன்றைக்கும் நிமிர்ந்து நிற்கும் பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றின் சாட்சியம். தமிழர்களின் சிறப்பான கட்டிடக்கலைக்கு சான்று.

பொன்னியின் செல்வனைப் போன்று இன்னும் பல அரசர்களின், அரசிகளின் வாழ்க்கை முறைகளை, அகம், புறம் போன்றவற்றை எவ்வித பக்கச் சார்புகளுமின்றி நடுநிலையோடு எழுத வேண்டும். சோழப் பேரரசுகளை மட்டுமல்லாது சேர, பாண்டிய பேரரசுகளையும் நாம் ஆவணப்படுத்த வேண்டும்.

அடையாள எண்: NV 104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:8
தலைப்பு: பொன்னியின் செல்வன்-சரித்திர நாவல்
ஆசிரியர்: அமரர் கல்கி
மொத்தப் பக்கம்: 856
வெளியீடு: எல்.கே.எம் பப்ளிகேசன்
விலை: ₹290

Wednesday, February 28, 2018

புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்- ஈழபாரதி


நேற்று முந்தினம் (26/02/2018) எனது சகோதரனின் திருமணத்திற்கு அம்மா மற்றும் அண்ணாவோடு வந்திருந்த ஈழபாரதி தனது நான்காவது நூலான "புலம்பெயர்ந்தோர் கவிதையும்,வலியும்" எனும் நூலினை தந்துவிட்டு சென்றிருந்தார். முழுக்க முழுக்க புலம் பெயர்ந்தவர்களால் எழுதப்பட்ட கவிதைகளை தேடிக் கண்டடைந்த கட்டுரைத் தொகுப்பு.

ஈழபாரதிக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அதுதான் எமக்கான அடையாளமும் கூட. "ஏதிலி" என்பதே அது.

எனக்கு ஈழபாரதியை மாணவப் பருவத்திலிருந்தே அறிமுகம். மாணவர் விடியல் எனும் இதழில் (முகாம்களுக்குள் உள்ள மாணவர்களுக்காக திண்டுக்கல் பெஸ்கி இல்லத்திலிருந்து அருட்தந்தை வின்னி ஜோசப் அவர்களால் கொண்டுவரப்பட்ட இதழ்) நானும் சிறு சிறு கவிதைகள் எழுதிய போது, நிக்சன் எனும் பெயரில் வெளிவந்த இவரது கவிதைகளை வாசித்து வந்தேன். பிறகு கல்லூரி மாணவர்கள் பேரவையின் சந்திப்பின் ஊடாக நேரில் சந்தித்து உரையாடினோம். அதன்பிறகு "வேர்விடும் நம்பிக்கை", "வளரி" போன்ற சிற்றிதழ்கள் எம்மை அடையாளப்படுத்தின.

நான் "அலைகளின் மீதலைதல்" எனும் எனது கவிதை நூலினை வெளியிட்ட ஆண்டில்தான் என நினைக்கிறேன் ஈழபாரதி "சருகுகள்" என்ற முதல் கவிதைத் தொகுப்பினூடாக விருட்சம் பெற துவங்கியிருந்தார். பின்னர் "பனைமரக் காடுகள்" மற்றும் நாட்குறிப்பற்றவனின் இரகசியக் குறிப்புகள்" எனும் கவிதைத் தொகுப்புகள் மூலமாக கவனம்பெறத் துவங்கியிருந்தார். அவரது நான்காவது நூலே இந்தக் கட்டுரைத் தொகுப்பு.

 சிறு சிறு கட்டுரைகளாக மொத்தம் பதின்நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான கவிதைகளை இரண்டாக வகைப்படுத்தியுள்ளார்.
1. ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் வலிகளை தாங்களே எழுதுவது
2. புலம் பெயர்ந்தவர்கள் பற்றி மற்றவர்கள் எழுதியது.

"இராமேசுவரத்தில் எல்லோரும்
குளித்துக் கரையேறுகிறார்கள்
நாங்கள் குதித்துக் கரையேறுகின்றோம்"
எனும் கவிஞர் அறிவுமதியின் கவிதையோடு முதல் கட்டுரை நிறைவு பெறுகிறது.

தமிழக முகாம்களில் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கவிதைகளின் வாயிலாக பல கவிஞர்கள் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்கள் அல்லாமல் முகாம்களுக்கு வெளியே வெளிப்பதிவில் இருந்தும் சிலர் தங்கள் படைப்புகளின் வாயிலாக புலம் பெயர்ந்தோர் வலிகளை பதிவு செய்துள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து சிலர் அங்குள்ள வலிகளையும், வாழ்வியலையும் பதிவு செய்துள்ளனர்.

ஐக்கூ வடிவிலும் எமது புலம்பெயர் வாழ்வின் வலிகளை பதிவு செய்துள்ளதை தனிக் கட்டுரையாக உருவாக்கியுள்ளார். அதிகாரத்தின் அடக்குமுறைகள், வலிநிறை வாழ்வு என கட்டுரைகள் பேசுகின்றன.

"கரை சேராப் படகுகள்" எனும் கட்டுரையில் எனது கவிதையினையும் இணைத்து எழுதியுள்ளது எனக்குக் கிடைத்திருக்கும் அடையாளமாகவே பார்க்கிறேன். இதே போல உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், வ.ஐ. ச.ஜெயபாலன், சு.சிவா,தொ. பத்தினாதன்,அகரமுதல்வன், தமிழ்நதி, ஈழவாணி, பேனா. மனோகரன், பன்னீர்செல்வம், வேலனையுர் பொன்னன்னா, ஞானக்குமரன், சு.செங்குட்டுவன், தமிழினி போன்றவர்கள் அல்லாமல் இன்னும் விடுபட்டவர்கள் ஏராளம் இருக்கக்கூடும். இவர்களைக் கண்டடைய வேண்டியதும் அவசியமாகும்.

கனடா டொரண்டோ நகரத்தில் மட்டும் 1,70,000 அகதிகளை அதிகளவில் ஏற்றுக்கொண்ட நாடு என நோபல் பரிசு பெற்றிருக்கிறது. அடுத்தபடியாக இந்தியாவில் தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 110 முகாம்களில் 1,07,435 அகதிகளில் முகாம்களில் வாழ்பவர்கள் சுமார் 60,185, முகாமுக்கு வெளியில் தங்கி வாழ்பவர்கள் 37,000 பேரும், இருப்பதாக 2000ல் வெளியான தேசபக்தன் இதழின் புள்ளிவிபரம் கூட அரசிடம் இல்லாமல் போன கூத்தையும் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். இன்னும் இதில் தெளிவில்லாத நிலையே உள்ளது என்பதும் இந்தியாவின் அகதிகள் கொள்கையின் அவலப் போக்கு வெட்டவெளிச்சம் ஆகிறது. இப்புள்ளி விபரங்களை கட்டுரையில் எடுத்தாண்டு இருப்பது சிறப்பு.

இக்கட்டுரைத் தொகுப்பு இன்னும் ஆழமாகவும், தெளிவாகவும் அடுத்தகட்டத்துக்கு பயணப்படவேண்டிய தொலைவு இன்னும் இருக்கிறது. இவற்றை மனதில் கொண்டு இன்னும் விரிவாக மேன்மைப்படுத்த வேண்டுமாக கேட்டுக்கொள்கிறேன். இது எமது புலம்பெயர் சமூகத்திற்கு கிடைத்திருக்கும் ஒரு வரலாற்று ஆவணம் என்றே நான் கருதுகின்றேன்.

அடையாள எண்: NV 104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:7
புலம்பெயர்ந்தோர் கவிதையும்,வலியும்-கட்டுரைகள்
ஆசிரியர்: ஈழபாரதி
மொத்தப் பக்கம்: 72
வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம்
விலை: ₹80

Tuesday, February 27, 2018

ஆதிவாசிகள் இனி நடனமாடமாட்டார்கள்



ஹண்ஸ்டா சௌவேந்த்ர சேகர் 2015 ம் ஆண்டுக்கான சாகித்ய அக்காடமியின் யுவ புரஸ்கார் விருது பெற்ற ஜார்கண்ட் அரசாங்கத்தின் மருத்துவத்துறை அதிகாரி.

 தாதுப்பொருட்கள் நிரம்பிய மண்வளம் கொண்ட மண்ணின் மைந்தர்கள் வாழ்வும், அவர்களின் அவலங்களும், அதிகாரத்தின் கொடுங்கரங்கள் அந்த மக்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகளும் அதனால் சிதைந்து போகும் சாந்தால் எனும் ஆதிவாசி மக்களின் விளிம்பு நிலையை கதைகளாகியுள்ளார்.

இந்த தொகுப்பில் மொத்தம் 10 சிறுகதைகள் உள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாந்தால் இன மக்களின் வாழ்வை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய ஆவணமாக இத்தொகுப்பு உள்ளது என்றால் மிகையல்ல. 

அசைவம் சாப்பிடுகிறார்கள் மற்றும் ஆதிவாசிகள் இனி நடனமாடமாட்டார்கள் கதைகள் அரசின் செவுளில் அறைவதைப்போல் சொல்லியிருக்கிறார். 

பழங்குடி மக்கள் மீதான கார்ப்பரேட் அரசின் பொருளாதாரச் சுரண்டல்கள், இடப்பெயர்வுகள், வாழ்வாதாரத்துக்கான தேடல், உடலை மூலதனமாக்கும் பெண்கள், பெண்களை காப்பாற்ற இயலாத ஆண்கள் என கதைகளில் மாந்தர்களின் பாத்திரப்படைப்புகள் மனதை கனமாக்குகின்றன. 

தமிழில் அழகாகவும் வாசிப்புத் தடங்கல் இல்லாமலும் மொழிபெயர்ப்பு செய்துள்ள லியோ ஜோசப் அவர்களின் கடின உழைப்பு தெரிகிறது. 

அடையாள எண்: NV 104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல்:6
ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள் - சிறுகதை தொகுப்பு
ஆசிரியர்(தமிழில்): லியோ ஜோசப்
மொத்தப் பக்கம்: 192
வெளியீடு: எதிர் வெளியீடு
விலை: ₹180

Wednesday, February 21, 2018

பெருமாள் முருகனின் மூன்று நாவல்கள்

பெருமாள் முருகனின் மூன்று நாவல்கள். 

2017 சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கியது. மாதொரு பாகன் சர்ச்சைகளால் அதை வாசிக்க விரும்பி தேடியபொழுது மூன்று நாவல்களை ஒரே தொகுப்பாக காலச்சுவடு சிறப்புத் தள்ளுபடியில் வெளியிட்டதை அறிந்து வாங்கினேன். இப்போதுதான் வாசிக்கும் சூழல் அமைந்திருக்கிறது. பெருமாள் முருகனை அதுவரையில் நான் வாசித்திருக்கவில்லை. ஆனால் ஒரு எழுத்தாளன் மீது தொடுக்கப்பட்ட அந்த சர்ச்சைதான் அவர் யார் என்பதை அடையாளம் காட்டியது. இங்கு நாம் எழுத்துக்களைக் கொண்டாடும் அளவுக்கு எழுத்தாளர்களை கொண்டாடுவதில்லை. இலக்கியம் என்றால் சங்கப் பாடல்கள் மட்டுமே இலக்கியம் எனும் மன நிலையிலிருந்து நாம் இன்னும் வெளிவரவில்லை. அவர்கள் அன்றைக்கான சமகால பிரச்சினைகளை பாடுபொருளாகினர். இன்றைய சமகாலத்தினை புனைவுகளின் ஊடாக சொல்லிச்செல்வதும் இலக்கியம்தான்.

1.மாதொரு பாகன்: 

பூவரசம் பூவின் மஞ்சள் வண்ணத்தில் துவங்கும் கதை அதன் செந்நிறத்தில் முடிகிறது. காளி எனும் பாத்திரத்தின் மனம் இறுதியில் எடுக்கும் முடிவு மனதை கனக்க வைக்கிறது. பொன்னா எனும் பத்திரம் அன்றைய பெண்களின் நிலைகளை சுமந்து நிற்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் இக்கதை நிகழ்கிறது. வாரிசு வேண்டி கரட்டு மலைக்கு பெருநோம்பி செல்லும் பொன்னா ஓர் அபலையின் குறியீடு. பொன்னா மீது காதலை கொட்டும் காளியால் பொன்னாவின் வயிற்றை ரொப்ப முடியாதது இயலாமை. கரட்டு மலையில் பெருநோம்பி அன்று கடவுளின் பெயரால் வேறு ஒரு ஆணோடு புணர்ந்து குழந்தை பாக்கியம் பெறுவதை, அது கடவுளின் குழந்தை என வளர்ப்பதை சிலர் ஏற்றுக்கொண்டாலும் காளியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகவும் கருத இடமுண்டு. தாய்,தந்தை,அண்ணன் மற்றும் மாமியாரின் சம்மதத்தோடு பெருநோம்பியில் கரட்டு மலையில் வேறு ஒரு ஆணுடன் புணரும் பொன்னா கணவன் களியோடு புணருவதாகவே நம்புகிறாள். காளியின் மனம் படும் பாடும், ஏமாற்றமும் அளவுக்கதிகமான குடியும் அவனது இறுதி முடிவை எடுக்கிறது. மாமனாரின் வீட்டில் இருந்து கொண்டுவந்து வைத்த பூவரசு செழிப்புடன் அவனுக்கான முடிவையும் தருகிறது.

2.அர்த்தநாரி: 

தொண்டுப்பட்டியில் செழிப்பாக நிற்கும் அந்த பூவரசின் கிளைகளில் ஒன்றை வெட்டுவதிலிருந்து துவங்குகிறது. பொன்னா வேறு ஆணோடு கூடிய துக்கம் தாளாமல் பூவரசில் தூக்கில் தொங்கும் காளியை காப்பற்றி விடுகிறார்கள். ஒரே வீட்டில் இருந்துகொண்டு பொன்னாவும் காளியும் ஒருவரை ஒருவர் பார்க்காமலும், பேசாமலும் ஒவ்வொரு நாட்களாக கழிகிறது. பொன்னாவின் உடலில் மாற்றங்கள் தெரிகிறது. மாசம் பத்து வந்து குழந்தையும் பிறந்துவிடுகிறது. குழந்தையை ஏறெடுத்தும் பார்க்காமல் செல்லும் காளியின் மனம் மாறும் என நம்புகிறாள் பொன்னா. ஆனால் காளியின் மனமோ மாறவில்லை. மனமுடைந்த பொன்னா விட்டதில் சேலையில் தூக்கு மாட்டச் செல்லும்போது ஆதுரமாக காளியின் கை பற்றுகிறது. சிவன் தன் உடல்பாகத்தில் உமையை ஏற்றுக்கொள்ளும் நிலையை அர்த்தநாரி என்கிறோம். இங்கும் அது பொருந்துகிறது.

3.ஆலவாயன்: 

காளி இறந்துவிட பொன்னா குழந்தையோடு வாழுகிறாள். தொண்டுப்பட்டிக்குள் காளி அரூபமாய் வந்து செல்கிறான். ஒரு ஆண் துணை இல்லாத வீட்டில் எப்படியான இன்னல்கள் அவளை நெருக்குகின்றன என்பதை விபரிக்கிறார். கரட்டுமலையில் பெருநோம்பியன்று கலவி கொண்டவனோடு போய் சேர்ந்து வழலாமா எனும் பெரும் மனப் போராட்டங்கள் பொன்னாவினுள் வதைக்கின்றன. அவன் பெயர் அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது அவனுக்கு அவள் வைத்த பெயராக இருக்கிறது. குழந்தையோடு கொஞ்சிப் பேசும் பொன்னா குழந்தைக்கு பெயர் வைக்க ஆசைப்படுகிறாள். குழந்தையின் காதில் ரகசியமாய் அந்தப் பெயரைச் சொல்கிறாள். அந்தப் பெயர் ஆலவாயன். 

மாதொரு பாகனின் முடிவிலிருந்து இருவேறு நாவல்களை உருவாக்கி பரீச்சார்த்தம் செய்திருக்கிறார். தமிழில் இப்படியான செயல்பாடுகள் அரிதினும் அரிதே. மூன்று நாவல்களையும் ஒரே மூச்சில் படித்தது சிறப்பு. பிசிறு தட்டாத எழுத்து வாசிப்புக்கான வேகத்தை தருகிறது. 

அடையாள எண்: NV 104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல்:5
மாதொரு பாகன், ஆலவாயன், அர்த்தநாரி-நாவல்கள்
ஆசிரியர்: பெருமாள் முருகன்
மொத்தப் பக்கம்: 544
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ₹260


Monday, February 19, 2018

தஞ்சை நாடோடிக் கதைகள்-தஞ்சை பிரகாஷ்

அடையாள எண்: NV 104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:4
தஞ்சை நாடோடிக் கதைகள்- சிறுகதை தொகுப்பு
ஆசிரியர்: தொகுப்பு(தஞ்சை பிரகாஷ்)
மொத்தப் பக்கம்: 120
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: ₹100
தஞ்சை என்றதும் எனது முதுகலை அறிவியல் படிப்பு நாட்களே(2006-2008)நினைவில் எழுகின்றன. தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு எதிரே இருக்கும் அக்ரஹாரத் தெருவில் ஒரு வீட்டின் மாடியில் உள்ள சிறிய அறையில்தான் நானும் நண்பர்கள் கார்த்திகேயன், மணிகண்டன் போன்றவர்களோடு இருந்தேன். நண்பர்கள் வீடு செல்லும் விடுமுறை நாட்களின் தனிமை பல நேரங்களில் என்னை அச்சுறுத்தும். அவ்வளவு அமைதியான இடம். அந்த அச்சுறுதலில் இருந்து என்னை தற்காத்துக்கொள்ள இரவு பகல் பாராமல் பெரியகோவில், சிவகங்கை பூங்கா, சரசுவதி மஹால், அரண்மனை, மணிமண்டபம், குமரன், ஜூபிடர் திரையரங்கம், நகர்மன்ற நிகழ்வுகள், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் என நடந்தே திரிந்தேன். இப்படியாகத்தான் நான் தஞ்சையை தெரிந்துகொண்டேன்.

தஞ்சை நாடோடிக் கதைகள் என்றதும் பெயருக்காகவே இந்த நூலை வாங்கியிருந்தேன். தஞ்சை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து எழுதியவர்களின் சிறுகதைகளை தேடித் தேடி சேகரம் செய்து தொகுத்துள்ளார் எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் அவர்கள். மொத்தம் 22 சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது. சில கதைகளை எழுதியவர் விபரம் கிடைக்கவில்லை. ஒரு ஊரில் என்று கதை சொல்லும் பாட்டி கதைகளை ஒத்து இருக்கிறது அத்தனை கதைகளும். சிறுவர்களுக்கும் இந்த கதைகளை பரிந்துரை செய்யலாம். அவ்வளவு அற்புதமான நாடோடிக் கதைகள். இந்த கதைகளை எழுதியவர்கள் இன்னும் எழுத்துகிறார்களா எனும் ஆவல் எழுவது இயல்பு.

ஒவ்வொரு கதையிலும் தஞ்சையின் மண் வாசமும், எள்ளலும் கூடவே பயணிக்கிறது. 22 கதைகளும் ஒரே ஆள் எழுதியது போன்ற நேர்த்தி குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற கதைகள் அந்த ஊரின் அத்தனை விழுமியங்களை கால காலத்திற்கும் கடத்திச் செல்லும் ஒரு நினைவுப் பேழை. ஆவணக் குறிப்புகள். நெல்லின் வாசமும் காவிரியின் ஈரமும் நிறைந்த தஞ்சை இன்று மாநகர வெக்கையில் வெந்து தவிக்கிறது.

- சுகன்யா ஞானசூரி.

Sunday, February 18, 2018

உறுபசி-எஸ்.ராமகிருஷ்ணன்

புதுக்கோட்டையில் 2015ல் நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர் நிகழ்வில்தான் நான் முதன்முதலாக எஸ்.ராவை சந்தித்தேன். அவரது பேச்சினை கேட்டேன். அந்தப் பேச்சில் வசியப்பட்டுப் போனேன் என்பதே உண்மை. அதுவரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவரை வாசித்தாலும் முழுமையாக வாசிக்கவில்லை. அப்படி வாசிக்கப் பிரியப்பட்டு வாங்கியதுதான் உறுபசி எனும் நாவல். 

சம்பத் எனும் நண்பனின் மரணம் அவனது நண்பர்கள் துரை, ராமதுரை, மாரியப்பன் மற்றும் கதைசொல்லி ஆகியோரது மன வெளிகளில் பயணிக்கிறது கதை. எடுத்த எடுப்பிலேயே எவ்வித வர்ணனையும் இன்றி எளிமையாக கதையை துவக்கிவிடுகிறார். இது வாசிப்பாளனுக்கு சலிப்பினை ஏற்படுத்தாது வாசிக்கத் தூண்டுகிறது.

கானல் காடு நோக்கிச் செல்லும் நண்பர்களின் பயணம் சம்பத் எனும் நண்பனின் இறப்பின் வலிகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான, மனதை ஆசுவாசப்படுத்துவதற்கான உத்தி. நான் எனும் அந்த கதாபாத்திரம் வாசிக்கும் நீங்களாகக்கூட இருக்கலாம். வாசித்து முடிக்கும்போது எனக்கு அந்த நான் பாத்திரம் நானாகவே தெரிந்தது.

சம்பத் எனும் மனிதன் தான்தோன்றித் தனமாக, மது மாது சகவாசங்களில் ஊறித் திளைத்தவனாக, நிலையற்ற மனம் கொண்டவனாக வாழ்த்திருக்கிறான். அவன் அப்படியாக மாறுவதற்கு அவனது குடும்பமும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறார்கள். கானல்காட்டில் நண்பர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் சம்பத்தின் நினைவுகள் எழுவதைக்கொண்டு கதையை தொய்வின்றி நகர்தியிருக்கிறார். சம்பத் தனக்கான வாழ்வை யாருடைய சமரசத்துக்கும் இடமின்றி சுதந்திரமாக வாழ்த்திருக்கிறான். ஏனெனில் அவன் அவனாகவே இருந்திருக்கிறான்.

கானல்காட்டை விட்டு கீழ் இறங்கும் நண்பர்கள் சமூக வாழ்வில் தாம் பொருந்திக் கொள்ளாமல் போயின் இன்னும் இன்னுமென சம்பத்தின் நினைவுகளால் அலைக்கழிக்கப் படுவோம் எனக் கூறுவதும், மலையை திரும்பிப் பார்க்கையில் அங்குமட்டும் மழை பெய்வதாக முடிகிறது.

தமிழில் இப்படி உளவியல் ரீதியாக தத்துவார்த்த அடிப்படையில் அமைந்த நாவல் என்றால் மிகையல்ல. மரணம் ஏற்படுத்தும் பயமும், வாழ்தலுக்கான கட்டாயமும் உந்தித்தள்ளும் இந்த நவீன காலத்தில் இவர்களைப் போன்ற நண்பர்கள் ஏராளமாய் இருந்து வருகிறார்கள் என்பதே எதார்த்தம்.

#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல்:3
உறுபசி-நாவல்
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
மொத்தப் பக்கம்: 136
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: ₹115.
-சுகன்யா ஞானசூரி(NV 104)


Friday, February 16, 2018

ஆதிமுகத்தின் காலப்பிரதி-இரா.பூபாலன்

ஒரு கவிதை வாசிப்பவருக்கு சிறு அதிர்வை உருவாக்கிச் செல்லுமேயானால் அது சிறந்த கவிதையாக வாசிக்கும் மனதுக்கு இருக்கும். ஒரு சிறந்த கவிதை வாசிப்பாளருக்கும் வரிகளுக்குமிடையில் இடைவெளியைக் குறைக்கும் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

இரா.பூபாலனின் "ஆதிமுகத்தின் காலப்பிரதியில்" ஒவ்வொரு கவிதையும் அதிர்வை உருவாக்குகிறது. மனசை பிசைகிறது. இவரது கவிதைகளில் வலி, ஏக்கம், விரக்தி போன்றவைகள் அடிநாதமாக எல்லாக் கவிதைகளிலும் வெளிப்படுகின்றன. இது கவிமனத்தின் வெளிப்பாடா? சமூகத்தின் செயல்பாடுகளா? எனும் கேள்விகள் எழுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது.

இத்தொகுப்பில் தலைப்பில்லாத கவிதைகள் நிறைய விடையங்களை பேசுகின்றன. பெண்கள் மீதும், சிறுவர்கள் மீதும் நிகழ்த்தப்படும் கொடுமைகளைக் கண்டு கவிஞர் மனம் பதை பதைப்பதும், அவைகளை தட்டிக் கேட்க இயலாமையில் கவிதைகளாக அடையாளப்படுத்தும் சாமானிய மனிதன்தான் தானும் என்பதை இக்கவிதைகளை வாசிக்கையில் உணர முடியும்.
"இருளில் மட்டுமே
திரிந்து கொண்டிருந்த
ஓநாய்க் கூட்டங்கள்
வெளிச்சத்தின் ருசிக்குப்
பழகிவிட்டிருந்தன."

"ராமனை விடவும்
ராவணன் மீது
நல் அபிப்பிராயம்
வந்திருப்பது
உண்மைதான்."

"ஆதிப் பிணத்தின் 
மீதுதான்
புதைத்துக் கொண்டே
இருக்கிறோம்
நம்
ஒவ்வோரு பிணத்தையும்."

"தத்தித் தாவும் சாபம்", "போலச் செய்தல்" போன்ற கவிதைகளில் குழந்தையாக மாறிவிடுகிறார். குழந்தைகளை அதிகம் நேசிக்கிறார்.

வாழைப்பழத்தில் ஊசியைச் செலுத்துவது போல் அரசியல் கவிதைகளையும் ஆர்ப்பாட்டமின்றி எழுதி செல்கிறார். "ஆகாயத் தாமரையினடியில் ஒளியும் குளம்" மற்றும் "விதி" ஆகியவை இதில் அடக்கம். விதி டிஜிட்டல் இந்தியாவின் அலைவரிசையின் வேகத்தை பகடி செய்திருக்கிறது.

"காலாதிகாலக் கூறு" கவிதையில் சிலைவழி பெண்களின் நிலையைக் கூறும் நுட்பம் அசல். இக்கவிதையை வாசித்து முடித்ததும் நள்ளிரவில் கதறும் அச்சிலைகளை நீங்கள் காணக்கூடும். அவற்றின் கதறல் காதுகளை செவிடாக்கும்.

"என் ஆதிமுகத்தின் மேல்
தினமொரு முகத்தைப்
பூசிக்கொள்ள வேண்டியிருக்கிறது
உங்களுக்குத் தோதாக"
உண்மை முகங்களை மறைத்து நாளும்,பொழுதுக்குமாக ஒவ்வொரு முகங்களை மனிதர்கள் அணிந்துகொண்டு திரிவதை கூறுகிறார். இன்றைய எதார்த்தமும் இதுவாகத்தான் இருக்கிறது.

எளிமையான வார்தைகளைக் கொண்டு வலிமிகுந்த கவிதைகளை யாத்துள்ளார். இது கவிஞரின் மூன்றாவது தொகுப்பு.

#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல்:2
ஆதிமுகத்தின் காலப்பிரதி-கவிதைத் தொகுப்பு
ஆசிரியர்: இரா.பூபாலன்
மொத்தப் பக்கம்: 95
வெளியீடு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
விலை: ₹70.

- சுகன்யா ஞானசூரி (NV 104)

நீலி-மாலதி மைத்ரி

கவிதைகளை உருவாக்குதல் என்பது ஒரு பெருங்கலை. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலே கவிதை. சங்க காலத்திற்குப் பிறகு இன்றைய காலத்தில்தான் பெண் கவிகளின் எழுச்சி வீரியம் பெற்றிருக்கிறது. பெண்ணியம், தலித்தியம் என தன் தளங்களில் சிறந்த கவிதையை அடர்த்தியாக எழுதி வரும் புதுச்சேரியைச் சேர்ந்த பெண் கவி தோழர் மாலதி மைத்ரி. இது இவரது மூன்றாவது தொகுப்பு. தனது சமூக செயல்பாடுகளை அன்றாடம் முகநூலில் பதிவு செய்து வருகிறார். பெண்களின் தொகுப்புகளை வெளியிடும் "அணங்கு" பதிப்பகம் இவருடையது ஆகும்.

வார்த்தைகளின் பேரரசி முகமற்று ஒலிக்கும் ஒவ்வொரு இசையையும் தனிமைத் துயரோடு காட்சிப்படுத்தி வார்த்தை ஜாலம் புரிகிறாள்.
"சொற்களின் அரசிகளே
குளிருக்கான கம்பளத்தை
நம் உடல்களால் நெய்வோம்
முகமற்று ஒலிக்கும்
தூரத்து மத்தள ஓசையைக் கேட்டபடி."

வெள்ளை ஏகாதிபத்தியம் இன்னும் நம்மை ஆட்கொண்டு திரிகிறது. அது இத்தேசத்தை இன்னும் இன்னுமென உறிஞ்சுகிறது. Made in USA எனும் கவிதை இதற்கு நல்ல உதாரணம்.
"வெள்ளை மாளிகையின்
மேல்மாடி ஜன்னல் வழியே
வெளி வழிந்து
சுவரோடு உரசி அசைகிறது
சாத்தானின் வால்...."
"அவரவர் தானியத்திலும்
அவரவர் பெயர்
நம் அனைவரின் சடலத்திலும்
Made in USA"

நுகர்பொருள் கலாச்சாரத்தின் சீரழிவுகளும், அது பெண்களின் மீது நிகழ்த்தும் வன்கொடுமைகளும் ஏராளம். அதை நம் வீட்டின் தொலைக்காட்சி வழி ஏற்றுக்கொள்வது தாராளம். அப்படியாகத்தான் "நுகர்பொருள்" எனும் கவிதை பின்னிரவில் பிரியாணிப் போட்டலத்தோடு ஒரு பைத்தியக்காரியை சிதைக்கும் கொடுமையை விவரிக்கிறது.

இவரது கவிதைகளில் நிறைய பைத்தியக்காரிகள் உலா வருகிறார்கள். "தெருப்பாடகி", "ஹராக்கிரி" போன்றவர்கள் நம்மைப் பார்த்து காறி உமிழ்வதுபோல் பேசி செல்கிறார்கள். சாலையோரங்களில் எங்கேனும் நாம் சந்தித்தவர்களாகக்கூட இருக்கலாம். அவர்களுக்கு "புனிதவதி" போல் சிவபதம் அடையும் வித்தை கிட்டியிருக்குமேயானால் இங்கே பைத்தியங்களாக உலா வந்திருக்க மாட்டார்கள். அதனால்தான் அவர்கள் நீலியாக உருமாறி எதையும் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டார்கள்.
"பேயின் மொழி
விடுதலை
பூமிக்கு வெளியே
நிற்கிறாள்
நீலி".

#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல்:1/ நாள்: 3
நீலி-கவிதைத் தொகுப்பு
ஆசிரியர்: மாலதி மைத்ரி
மொத்தப் பக்கம்: 72
வெளியீடு: காலச்சுவடு
விலை: ₹75.

- சுகன்யா ஞானசூரி (NV 104)

Wednesday, November 8, 2017

முத்தன் பள்ளம்

எத்தகைய பெரிய ஆண்ட சமூகமாக இருந்தாலும் இன்றைய நிலையில் அவர்களின் இருப்பை சமூக பொருளாதார அரசியலே தீர்மா னிக்கிறது.

ஒரு நவீன விளையாட்டின் மூலமாக அறியப்படாத ஓர் இருப்பிடத்தை தேடி செல்வதும், அதைக் கண்டடைந்த பின்னால் மனம் கனத்துப் போவதுமாக நாவல் முற்றுப் பெறுகிறது.முத்தன் பள்ளம் வாசித்து முடிக்கையில் மனதுக்குள் பெரும் பள்ளம் விழுவதையும் அங்கே கண்ணீர் தேங்குவதையும் உணர முடியும்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தை தொட்டு, முத்தரையர் சமூகத்தின் வாழ்வியலையும், அதில் ஒரு பிரிவார் (பாட்டன் வழித்தோன்றல்கள்) இந்த நவீன யுகத்தில் படும் அவஸ்தை என போக்கிமான் பூச்சியின் பயணத்தில் கதையை உருவாக்கியதில் புதிய கதை சொல்லல் முறை புலப்படுகிறது. ஓரிடம் தவிர்த்து மற்ற இடங்களில் வரலாற்றுச் சம்பவங்களை விழிக்கும் பொருட்டு அந்த காலத்தினை (ஆண்டுகளை) துல்லியமாக அல்லது தோராயமாக பதிவு செய்தல் அவசியமான ஒன்றாகும். இது புதுகை வரலாறு அறிந்தவர்கள் எளிதாக புரிந்துகொள்வர். புதிய வாசிப்பாளர்களுக்கும் அறியாதவர்களுக்கும் குழப்பமான வாசிப்பில் அயர்ச்சியை உருவாக்கும்.

முத்தனுக்கும் முத்தாயிக்குமான உறவு என்பது சடுதியில் தொடங்குவதும், முன் பின் அறிமுகம் இல்லாத முத்தனோடு ஒரு இரவில் கலவியில் ஈடுபடுதல் போன்ற காட்சிகள் சினிமாத்தனமான இருப்பது நெருடுகிறது. இன்னும் இந்த பகுதியில் கவனம் செலுத்தியிருந்தால் புனைவு வீரியம் பெற்றிருக்கும்.

மார்த்தாண்ட பைரவ தொண்டைமானின் காதலும், வெளிநாட்டுக் காதலியை இழக்க விரும்பாமல் பட்டம் பதவிகளை துறத்தலும், காங்கிரசாரைப் பார்த்து மன்னன் சொல்லும் அந்த வரிகள் சிறப்பு.

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் முத்தன் பள்ளம் ஒரு சமூகத்தின் ஆவணமாக இல்லாமல் ஒரு வரலாற்று ஆவணமாக இருந்திருக்கும் என்பது எனது பார்வை. அரசின் கவனத்திற்கு முத்தன் பள்ளத்தின் அவலத்தை நகர்த்தி விடிவை ஏற்படுத்த வேண்டியது நமது கடமை. அதற்கான முதல்படியை தன் வரலாற்றுப் புதினத்தின் வாயிலாக எடுத்து வைத்திருக்கும் தோழர் அண்டனூர் சுராவுக்கு வாழ்த்துக்கள்.


ஆசிரியர் : அண்டனூர் சுரா

பதிப்பகம் : மேன்மை

விலை : ₹150

Tuesday, March 28, 2017

தமிழகம் வாழ் ஈழ ஏதிலிய படைப்பாளிகளுக்கான பயிலரங்கு.


தமிழகம் வாழ் ஈழ ஏதிலிய படைப்பாளிகளுக்கான பயிலரங்கு.

இடம்: வேலூர்
நாள்: 26/03/2017

மூன்று தசாப்தங்களாக தமிழகத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் பத்துக்குப் பத்து அளவு கொண்ட வீடுகளிலும் சீலை மறைப்புகளுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்ற ஈழத்து ஏதிலியர்கள் மத்தியில் பல திறமையாளர்கள் இருந்தும் இலக்கியப் பொதுவெளியில் அவர்களுக்கான இடம் இதுநாள்வரை வெற்றிடமாகவே இருந்து வருகிறது. இந்த வெற்றிடத்தை போக்கும் விதமாக 26.03.2017 அன்று வேலூர் மாநகரத்தில் 5 மாவட்ட முகாம்களில் இருந்து வாசிப்பு மற்றும் எழுத்தின்மீது ஆர்வம்கொண்ட 30 பேரை ஒருங்கிணைத்து பயிலரங்கு ஒன்றினை நடாத்தி புத்தொளி பாய்ச்சியிருக்கிறார்கள்.

இதில் முதல் கட்டமாக சிறுகதை மற்றும் கவிதைகளை எவ்வாறு உருவாக்குவது, உருவாக்கிய படைப்புகளை எவ்வாறு பொதுவெளியில் முன்வைப்பது போன்றவை குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.

எழுத்தாளர் திரு.ஜி.முருகன் அவர்கள் சிறுகதை உருவாக்கம் பற்றி மிக அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அவரது சிறுகதைகளில் சிறு உயிரினங்களும் முக்கிய அங்கம் வசிக்கின்றன. ஒரு கதையை எழுதி முடித்ததும் அது சரியான வடிவத்துக்கு வரும்வரை திரும்பத் திரும்ப வாசித்து சரிசெய்ய வேண்டும் என்றார்.நீங்கள் சொல்ல வரும் விஷத்துக்குள் அதீதமான புனைவுகளை உள்நுழைக்க வேண்டிய அவசியம் தேவையில்லை என்பதோடு நேர்மையோடு ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

எழுத்தாளரும் கவிஞருமான திரு அகரமுதல்வன் அவர்கள் கவிதை உருவாக்கம் மற்றும் அது தொடர்பான உரையாடலை முன்வைத்து பேசுகையில் இத்தனை ஆண்டுகால முகாம் வாழ்வில் ஒரு படைப்பாளியைக்கூட உருவாக்க இயலாமல் போனது நமது இனத்துக்கு கிடைத்த சாபக்கேடு என்றார். யூத மக்களை கொன்றழித்த அவலத்தை, அதுதொடர்பான வரலாற்றை பதுங்குகுழிக்குள் இருந்துகொண்டு எழுதியது 14 வயதே ஆன ஒரு சிறுமி. நமக்கும் இத்தகைய பொறுப்பு இருப்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நாம் அகதிதானே தவிர அடிமைகள் இல்லை.ஒவ்வொருவரும் இலக்கியத்தினூடாக நமது வரலாற்றை உருவாக்க வேண்டும் என்றார்.

எழுத்தாளர் திரு பத்தினாதன் அவர்கள் காலச்சுவடு பத்திரிக்கையில் பணியாற்றுகின்ற முகாம் படைப்பாளி. 1990 முதல் 1999 வரையில் மதுரை உச்சப்பட்டி முகாமில் வசித்தவர். அகதிகள் தொடர்பான இரு நூல்களை எழுதியுள்ளார். இன்றைக்கு பொதுவெளியில் அகதிகள் தொடர்பான விடயங்களை முன்னெடுத்து வருகின்றார். அகதிச் சமூகத்தில் நிகழும் அவலங்களை நாம் இலக்கியங்களினூடாக பிறரிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.

இலக்கிய வெளியில் தமிழகம் வாழ் ஈழ ஏதிலிகளின் நிலை குறித்து முகாம் படைப்பாளர்கள், கவிஞர்கள் சு.சிவா, சுகன்யா ஞானசூரி, நடராஜா சரவணன், சரோகராஜ் மற்றும் செந்தூரன் போன்றவர்கள் முகாம்களில் படைப்பாளர்கள் இல்லை என்பதை மறுத்தார்கள். இருக்கிறார்கள், அவர்களை அடையாளப்படுத்த தவறிவிட்டார்கள். அவர்களின் படைப்புகளை அங்கீகரிப்பதற்கான தளம் அப்போது கிடைக்கவில்லை, முகாம்களில் இருந்துகொண்டே சு.சிவா, சுகன்யா ஞானசூரி போன்றவர்கள் கவிதைத் தொகுப்புகளை வெளியீடு செய்திருக்கிறார்கள், சிற்றிதழ் (வேர் விடும் நம்பிக்கை) நடத்தியிருக்கிறார்கள், இப்படி திறமையானவர்கள் ஒவ்வொரு முகாமில் கண்டடைய முடியாமல் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறை படைப்பாளிகளை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு இப்பொழுது  எம்மிடத்தில் இருக்கிறது. அதற்க்கு புதிதாக எழுத வருபவர்கள் செய்ய வேண்டியது படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் இலக்கியங்கள் குறித்த வாசிப்புகளையும் முன்னெடுக்க வேண்டும். பெண்கள் எழுதுவதற்கு முன்வரவேண்டும், முகாம்களில் உள்ள நூலகங்கள் பராமரிக்கப்பட வேண்டும், ஒன்றுகூடி விவாதிப்பதை விரிவுபடுத்த வேண்டும், அரசியல் இலக்கியங்களையும் தேடி வாசிக்க வேண்டும், நமது பண்பாடுகள் தொன்மங்கள் குறித்து அறிந்து எழுத வேண்டும் என்ற ஆலோசனைகளை முன்வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு செய்திருந்த JRS திருச்சபையின் பணியாளர் திரு.ரவீந்திரன் அவர்கள் இந்த நிகழ்வோடு இது முடியாமல் தொடர வேண்டும் என வாழ்த்தி நன்றி கூறினார். வந்திருந்த அனைவருக்கும் ரூபாய் 500 க்கும் அதிக மதிப்பிலான நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. புலம்பெயர் இலக்கியத்தில் தமிழகம் வாழ் ஈழ ஏதிலியர் இலக்கியமும் முக்கிய அங்கம் வகிக்கும் என்னும் நம்பிக்கை துளிர்திருக்கிறது.

நிகழ்வு தொகுப்பு
சுகன்யா ஞானசூரி
28/03/2017

Sunday, January 15, 2017

மேய்ச்சலுக்குச் சென்றதில் மற்றபடி குறையொன்றுமில்லை...

பத்தாண்டுகளாக முயற்சி செய்து ஏதோ சில காரணங்களால் செல்ல முடியாமலே போனது. இந்த வருடமும் செல்வதற்கான முயற்சிகளை எடுத்தபோது குழந்தையின் உடல்நலம் தடுத்தது. இரண்டு தினத்தின் பின்பாக இன்றுதான் நிறைவேறியது 40வது புத்தகச் சந்தைக்கு செல்வதற்கு. இந்நிகழ்வுக்கு செல்ல பக்க பலமாக இருந்து என்னோடு கூட வந்தவர் முனைவர் Manikandan Thirunavukkarasu அவர்கள்.
எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் அவர்களோடு.(மேலே)

எழுத்தாளர்கள் லக்ஷ்மி சரவணக்குமார் மற்றும் கார்த்திகைப் பாண்டியன் ஆகியோரைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தோழர் கா.பா அவர்கள் தனது நூல்களுக்கு எனக்கு சிறப்புக் கழிவு செய்து தந்தது மறக்க முடியாத தருணம்.
எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன் அவர்களோடு(மேலே)

அகரமுதல்வன், பெருமாள் முருகன் மற்றும் சரவணன் சந்திரன் போன்றவர்களை சந்திக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.

ஒரே நாளில் பாதிக்குப் பாதி அரங்கங்களை மட்டுமே பார்க்க முடிந்தது.

வாங்க வேண்டுமென பட்டியலிட்டு எடுத்துச் சென்றவற்றில் சிலவற்றை வாங்க இயலாமல் போனதும், எதிர்பாராத சில நூல்களை வாங்கியதுமென 18 நூல்களை வாங்கியது கண்டு கொஞ்சம் பிரமிப்பாக உள்ளது.
முனைவர். மணிகண்டன்.தி மற்றும் எச்.டி.எப்.சி வங்கியின் துணை மேலாளரும் நண்பருமான பிரபு (நடுவில் நிற்பவர்) ஆகியோரோடு.

வாசிப்பாளர் அத்தனைபேரும் பெரிய தனவந்தர்கள் இல்லை என்பதை நினைவில் கொண்டு பதிப்பக நண்பர்கள் நூல்களுக்கான விலையினை நிர்ணயம் செய்ய வேண்டுகிறேன். ஏனெனில் உள்ளூர்வாசிகளைக் காட்டிலும் வெளியூர்வாசிகளே செலவு செய்து வருகிறார்கள் என்பதை இங்கு கண்கூடாய்க் கண்டேன்.

மேய்ச்சலுக்குச் சென்றதில் மற்றபடி குறையொன்றுமில்லை...

- சுகன்யா ஞானசூரி
15/01/2017

Sunday, January 1, 2017

கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க


"சக மனிதர்களின் குறைகளைப் பேசாமல் நம்முடைய நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் நம்மைப் பின்பற்றியும் சிலர் உருவாகக்கூடும்."(வி.சி.வில்வம்).

ஒரு சாமானிய நாயகனின் பெயர் சரவணன், நாயகியின் பெயர் கோமதி. நாயகன் பெரியாரிய சிந்தனையாளர். நூல்கள் மீது தீராக் காதலன். நாயகி பிறக்கும்போது சில இருதய நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர். தொடர் சிகிச்சைகள் பெற்றும் சரியாகவில்லையென கைவிடப்படுகிறார்.

நாயகன் நாயகி நிலையறிந்து உதவ முன்வந்து திருச்சி, மதுரை, சென்னையென பல ஊர்களின் சிறப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்கிறார். இப்படி திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஊர் ஊராகச் சுற்றுவதாக ஊராரும் உறவுகளும் தவறாக எண்ணி பிரச்சினை செய்கிறார்கள். (நம் சமூகம் அப்படித்தானே...அடுத்தவர் முதுகில் இருக்கும் அழுக்கை காண்பதில்தான் ஆர்வமாக இருப்பர்...தன் முதுகில் இருக்கும் அழுக்கினை சரிசெய்வதேயில்லை.) இங்கு நிற்க.

என் விசயத்தை முதலில் சொல்லிவிடுகிறேன். புது வருசத்தின் முதல் நாளில் புத்தக வாசிப்போடு துவங்க வேண்டும் என நினைத்திருந்தேன். அதன்படிதான் ஒரு நூலை இன்று வாசிக்கத் துவங்கினேன்...நல்லதொரு துவக்கமாக அமைந்துவிட்டது. ஒரு கட்டுரை மட்டுமே இப்போது வாசித்து முடித்தேன். இன்னும் 29 கட்டுரைகள் இருக்கிறது இந்நூலில். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வெளியீடு கண்ட நூலை நான்கு நாட்களுக்கு முன்னர் என் ஆய்வகத்திற்கு நேரில் வந்து தந்துவிட்டுச் சென்றார். பணம் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார். அவர் யார்? என்ன நூல்? என்பதினை இறுதியில் அறியத் தருகிறேன். "தலைசிறந்த மனிதநேயம்" எனும் முதல் கட்டுரை என்னை இப்படி எழுதத் தூண்டியது. எங்க கிளம்பிட்டீங்க? இருங்க கதைக்கு வருகிறேன் வாங்க... 

சரி, இப்படி சமூகம் தவறாக பேசவும் உடல்நலம் குன்றியிருந்த நாயகி மனதளவிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, இப்பவோ அப்பவோ என இறுதி நாளினை எண்ணியிருப்பவரை திருமணம் செய்வதா எனும் பெற்றோர் மற்றும் உறவுகளின் வசவுகளுக்கு மத்தியில் திருமணம் செய்துவிடுகிறார்.

இருபதாண்டு திருமண வாழ்வினை 26.04.2008 அன்றோடு முடித்துக்கொண்டு விடைபெற்றார். உடலுறவு கொள்வதற்கான உடல் வலிமை இன்மையால் குழந்தைகளும் இல்லை அவர்களுக்கு. புத்தகங்களோடும், காலன் அழைத்துச் சென்றவரின் நினைவுகளோடும் திருச்சி கே.கே நகரில் வாழ்ந்து வருகிறார் திருமணத்தின்மீது நாட்டமற்ற நாயகன் சரவணன் எனும் தோழர் தி.மா.சரவணன் அவர்கள்.

சரி, நூல் பற்றியும் ஆசிரியர் பற்றிய விபரம் அறியலாம் வருக...

நூல்: கிளம்பிட்டாங்கய்யா....கிளம்பிட்டாங்க

ஆசிரியர்: வி.சி.வில்வம்
(இவர் கியூபாவின் மறைந்த புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மீது கொண்ட ஈர்ப்பால் தன் மகளுக்கு கியூபா என பெயர் சூட்டியதோடு நில்லாமல் பெயர் சூட்டியது குறித்து பிடலுக்கு மடல் ஒன்றும் அனுப்பினார். பிடலும் பதில் மடல் ஒன்றினை அனுப்பி பெருமைப்படுத்தினார். புதுக்கோட்டையில் 2015 இல் நடாத்தப்பட்ட வலைப்பதிவர் சந்திப்பில்தான் நான் ஆசிரியரை முதலில் சந்தித்து உரையாடினேன்.)
நூல் வகை: கட்டுரை
விலை: ரூ. 100/-
பதிப்பகம்: கியூபா பதிப்பகம், 41, சுருளி கோயில் 3வது தெரு, திருவெறும்பூர்,
 திருச்சி-620 013. பேச- 98424 87645.

தொடரும்...

Thursday, December 29, 2016

பாடும் பறவையைப்போல்....

சூரியன் எழாத காலை வேளை
மழை நனைத்த மண் சாலை
பூக்களைத் தூவும் மலர்களின் சோலை
ஒரு குவளை சூடான தேநீர்...
இலைகளில் தங்கிவிட்டிருக்கும்
பேரருவியொன்றின் எச்சங்களை
உலுப்பியுலுப்பி நீராடும்
பனங்காய்ச் சில்லு வண்டியோட்டும்
அச்சிறுவனுக்குள் சிக்குண்டு
சிந்தைக்குள் பின்னோக்கிச் செல்கின்றேன்!
விசங்களைச் சுமந்தபடிக்கு அலையும் காற்றும்
தலையொடிந்த நெடும்பனைகளும்
குருதி வீச்சமும் கூப்பாட்டுச் சத்தமும்
சிந்தை கலங்கி நிகழ்காலம் சேர்த்தது.
மலர் தூவும் வாசனையோடு
மழை நனைத்த மண்மீது
நடந்து அழைந்து தேசம் முழுமையும்
திரிய வேண்டும் பாடும் பறவையைப்போல்
சுதந்திரக் காற்றை சுவாசித்தபடி!

[பரணி காலாண்டிதழில் (அக்டோபர் - டிசம்பர் 2016) வெளியாகியுள்ள எனது கவிதை]


வரவிருக்கும் புத்தாண்டிலாவது பாடும் இப்பறவைகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் எனும் நம்பிக்கையோடு வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை கூறி மகிழ்கிறேன்.

Sunday, December 18, 2016

பயிற்சிப் பட்டறையின் புகைப்படத் தொகுப்புகள்

பயிற்ச்சிப் பட்டறை புகைப்படங்கள்
கணினித் தமிழ்ச் சங்கத்தினரால் புதுக்கோட்டை மெளண்ட்சீயோன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையின் புகைப்படத் தொகுப்புகள்


வலைச்சித்தர் திருமிகு திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களோடு


புதுக்கோட்டையின் இலக்கிய ஆளுமைகளோடு(இடமிருந்து வலமாக கவிஞர் முத்து நிலவன் ஐயா, தோழர் மகா.சுந்தர் ஐயா, கவிஞர் தங்கம் மூர்த்தி ஐயா, தோழர் கவிமதி சோலச்சி மற்றும் திருச்சியைச் சேர்ந்த கவிஞர் ஜெயராமன் ஐயா ஆகியோரோடு)



விக்கிபீடியா பயிற்றுநர் திருமிகு பிரின்ஸ்.என்.ஆர்.எஸ் தோழர் அவர்களோடு



வலைப்பதிவின் முன்னோடிகள் திருமிகு முனைவர் ஜம்புலிங்கம் ஐயா மற்றும் தேவகோட்டை கில்லர்ஜி ஐயா ஆகியோருடன்



கவிஞர் திருமிகு தங்கம் மூர்த்தி ஐயா அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகையில்


கணினித் தமிழ்ச் சங்கத்தின் பயிற்சிக்கான கையேட்டினை கவிஞர் தங்கம் மூர்த்தி ஐயாவிடமிருந்து பெற்றுக்கொள்பவர் திருமிகு கவிஞர் கீதா அம்மா அவர்கள்.

Saturday, December 17, 2016

வருக... பயன் பெறுக... வலைப் பதிவுகள் குறித்த ஒருநாள் பயிற்சிப் பட்டறை

வணக்கம் வலைப்பூ உறவுகளே...

சென்றாண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற வலைப்பதிவர்களுக்கான சந்திப்பே வலைப்பூவில் என்னையும் இணைத்துக் கொண்டது. உலகமெங்கிலும் இருந்து திரளான வலைப் பதிவர்கள் பங்குபற்றி விழாவினை வெற்றிபெறச் செய்தனர்.

இப்போதுதான் புத்தகத் திருவிழாவினை வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளனர். அதற்குள் மீண்டுமொரு நிகழ்வினை திட்டமிட்டு சிறப்பாகச் செயல்படுத்தி வாருகின்றனர்.

 புதுக்கோட்டையில் வலைப்பதிவுகள் தொடர்பாக பயிற்சி பட்டறை ஒன்றினை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (18/12/2016) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறவுள்ளது.

விழா அழைப்பிதளினை இதில் இணைத்துள்ளேன். மேலதிக விபரங்களுக்கும், விளக்கங்களுக்கும் கவிஞர் முத்து நிலவன் ஐயா அவார்களின் வலையில் காண வேண்டுகிறேன்.

சரியான முன்தயாரிப்புடன் விழாவிற்கான ஏற்பாட்டினை செய்து வரும் விழா அமைப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ....