Monday, June 24, 2019

மொழிபெயர்ப்பு...



மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழி பேசும் சமூகத்தின் பண்பாடு, கலாச்சாரம், கலை இலக்கியத்தினை பிற மொழி பேசும் சமூகங்களின் மொழியில் அறியத் தருவது. தருமொழி, பெறுமொழி, வழிமொழி என மூன்றாக மொழிபெயர்ப்பின் தன்மையை குறிக்கிறார் முனைவர் ம. இளங்கோவன். தருமொழி என்பது மூல நூல். பெறுமொழி என்பது எந்த மொழிக்கு பெயர்க்க உள்ளோமொ அதுவே. வழிமொழி என்பது எடுத்துக்காட்டாக ரஷ்ய மூல நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கொண்டுவருவதாகும். பெரும்பாலும் தமிழில் வழிமொழி வழியாகவே நிறைய படைப்புகளை கொண்டுவருகின்றனர்.

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் யாவும் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" - மகாகவி பாரதி. மகாகவியின் கூற்றினை மெய்ப்பிற்கும்படியாக தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பாளர்கள் (என் வாசிப்பின் சிற்றறிவின் நினைவில்) சோவியத் ருஸ்யாவிலிருந்தும், லத்தீன் அமெரிக்காவிலிருந்தும், ஆப்பிரிக்காவிலிருந்தும், சீனம், வங்காளம், மலையாளம் என பன்மொழிகளின் அதி உன்னதமான படைப்புகளை தமிழுக்குத் தந்துகொண்டே இருக்கிறார்கள். எம்.ஏ.சுசீலா, எஸ்.பாலசுப்ரமணியன், வெ.சிறிராம், ஜி.குப்புசாமி, பிரம்மராஜன், சோ.தர்மன், தேவதாஸ், அமரந்தா, த.ந. குமாரஸ்வாமி, கே. கணேஷ், வீ.ப.கணேசன், ஏ.ஜே. கனகரட்ணா, இந்திரன், சமயவேல், கார்த்திகைப் பாண்டியன் போன்றவர்களின் பங்களிப்பில் தமிழில் பல்வேறுபட்ட இலக்கியச் சுவைகளை நாம் சுவைத்து வருகிறோம். சரி இப்படியே தமிழுக்கு இறக்குமதி செய்து சுவைத்துககொண்டிருந்தால் எம் தமிழ் சீரும் சிறப்புமாக வளர்ந்து விடுமா? தமிழ் மொழியினை பிற மொழி பேசுவோரின் மொழிகளில் கொண்டு சென்றால்தானே எம் தமிழின் சிறப்புகளை பிறர் அறியச் செய்ய முடியும். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லவா?

கவிஞர் அமரன், லதா ராமகிருஷ்ணன் போன்றவர்கள் தமிழ்க் கவிதைகளை பிற மொழிகளுக்கு கொண்டு சேர்க்கின்றனர். சமீபத்தில் எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன் அவர்கள் ஐந்து மொழிகளில் தமிழ் எழுத்துக்களை கொண்டு சேர்க்கும் சிறப்பினை செய்து வருகிறார். நாம் மாவுச் சண்டைகளுக்கும், மன்னர்களின் செய்கைகளுக்குமாக மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறோம். "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்" - மகாகவி பாரதி. எனும் மகாகவியின் இந்த வரிகளை மெய்ப்பிக்கத் துவங்கியிருக்கும் இவர்களை அடியொற்றி நாம் தமிழை பிற மொழிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உலகம் உள்ளங்கையில் சுருண்டு கிடக்கும் இந்தக் காலத்தில் நாம் தமிழ்மொழியினை காக்கத் தவறுவோமாயின் அடுத்த தலைமுறை நம்மைக் காறி உமிழும். இது மொழித் திணிப்பல்ல. மொழிகளை காக்கும் ஒரு உத்தி. "தமிழ் வாழ்க" என உரைத்தால் மட்டும் போதாது. அவற்றை நாம் செயல்பாட்டில் காட்ட வேண்டும். தமிழ்ப்படைப்புகளை பிற மொழிகளுக்கு கொண்டு சேர்க்கும் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

- சுகன்யா ஞானசூரி
24/06/2019

Saturday, June 1, 2019

நிலவெளி- இதழ் அறிமுகம்

எல்லா இதழ்களும் முதலில் வருவது போல் இறுதிவரை வருவதில்லை சிற்றிதழ்களின் ஆயுள் என்பது அதில் வரக்கூடிய படைப்புகளை பொருத்து மாறுபடுகிறது. ஆரம்பத்தில் காத்திரமான படைப்புகளை தரும் சிற்றிதழ்கள் போகப்போக தேய்ந்து போகிறது. நிலவெளியின் போக்கினை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொல்லியல் துறை சார்ந்த நல்ல விளக்கங்களை தொல்லியல் அறிஞர் திரு சாந்தலிங்கம் அவர்கள் மூலமாக தெளிவுபட வைத்திருக்கிறது அவருடனான நேர்காணல். கள ஆய்வின் மூலமே நாம் தொல்லியல் எச்சங்களை காணமுடியும். அதுவல்லாமல் சமூக வலைத்தளங்களில் இருந்து கொண்டு தொல்லியல் அறிஞர்கள் ஆக பெயர் எடுக்க முடியாது என இன்றைய தலைமுறையின் சோம்பல் போக்கினை சுட்டிக்காட்டுகிறார்.

என். ஸ்ரீராமின் துருத்தி நடனம் வட்டார வழக்கில் எழுதப்பட்ட சிறுகதை. அரிச்சந்திர புராணக் கதை நிழலாக கதையை நகர்த்திச் செல்கிறது. வட்டார மொழியில் சொல்லப்படும் கதைகள் எப்போதும் தனிக்கவனம் பெறக்கூடியவை. ஆனால் குமாரசெல்வாவின் கட்டுரை வட்டார மொழி எழுத்தாக்கத்தில் அடையும் சிக்கல்களை படைப்பு நிலையிலிருந்து பேசுகிறது. அடக்குமுறையாளர்களின் மொழிக்கும், அடக்கப்பட்டவர்களின் மொழிக்குமான வேறுபாடுகள் பாரிய அளவினதாக இருக்கிறது. ஒவ்வொரு பொருட்களுக்குமான அர்த்தங்கள் அவர்களுக்கும் இவர்களுக்கும் பேசும் வார்த்தைகளில் வேறுபடுகிறது. இவற்றை ஒவ்வொன்றாகச் சொல்லி விளக்கிச் சொல்லும்போது ஏற்றத்தாழ்வு கொண்ட வட்டார மொழிகளின் இருமுகத்தை அறிய முடிகிறது.

இப்படி இவைகள் இருக்க மூன்றாவதாக நாடற்று அகதிகளாக தமிழகத்தின் பல்வேறு வட்டாரங்களில் வசித்து வரும் ஈழத்தமிழ் அகதிகள் மூன்று தசாப்தங்களாக தங்கள் மொழிகளை, அடையாளத்தை அந்தந்த வட்டாரத்தின் வழக்கில் தொலைத்து நிற்கும் அவர்களுக்கு குடியுரிமை ஒன்றே தீர்வாக அமையும். அந்த குடியுரிமையின் சட்ட சிக்கல்கள் பற்றியும், தமிழக அரசியல்வாதிகளின் தெளிவற்ற வாக்குறுதிகள் என நண்பர் தொ. பத்திநாதனின் கட்டுரை விளக்குகிறது. "நாடற்ற அகதிகளின் வலியும் வேதனையும் பொதுவெளியில் கவனப்படுத்துமாறு சூழல் மாறியிருப்பது நம்பிக்கையளிக்கிறது." எனும் சொற்கள் சத்தியத்தின் வார்த்தைகள். எமக்கான சாதகமான இச்சூழலை நாங்கள் விவாதித்துதான் தெளிவுபடுத்த முடியும்.

குழுவாத அரசியலற்ற தமிழர், தமிழ்மொழி வளர்ச்சி சார்ந்தும், அடுத்த தலைமுறைகள் உண்மையை குழப்பமின்றி தெரிந்துகொள்ளும் ஒரு ஆவணமாக நிலவெளி  தொடர்ந்து சிறப்புற வெளிவர வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்களுடன்
சுகன்யா ஞானசூரி
01/06/2019