Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Sunday, April 6, 2025

சிறுபிராயத்து நினைவின் துளிர்ப்பு

 சிறுபிராயத்து நினைவின் துளிர்ப்பு

**************************************



ஈழத்தில் எனது சிறு பிராயத்தில் அதாவது ஏழு வயதாக இருக்கும் போது ஈழநாடு, ஈழநாதம், உதயன் மற்றும் வீரகேசரி போன்ற பத்திரிகைகளை வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். அபோதுதான் எனது அப்பாவின் அப்பா கதிரன் மாணிக்கம் அவர்கள் (அவர் ஒரு பெரியாரிஸ்ட்) இராமாயணம் புத்தகத்தை அவருக்காக வாசிக்க வேண்டியிருந்தார். ஏனெனில் அப்போது அவர் வயது மூப்பின் காரணமாக நடக்க முடியாமலும், பார்வைக் குறைபாடுடனும் இருந்தார். அப்பப்பாவுக்காக வாசிக்கப் பழகிய பிறகுதான் எனக்கு நிறைய காமிக்ஸ் புத்தகங்கள், கதைப் புத்தகங்கள் வாங்கி வாசிக்கும் ஆவல் எழுந்தது. அச்சுவேலியில் இயங்கி வந்த வாடகை நூலகம் ஒன்றில் (சரியாக நினைவில் இல்லை யார் நடாத்தியது என்று) ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என வீட்டில் வாங்கிச் சென்று புத்தகங்களை வாங்கி வருவதும், வாசித்து முடித்ததும் திருப்பிக் கொடுத்துவிட்டு வேறு நூல்கள் வாங்கி வருவதும் என வாசிப்பு எனக்கு உணவை விடவும் மேலானதாக இருந்தது. வாசிப்புதான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. 


ஏன் இங்கே இதனைச் சொல்கிறேன் என்றால் இன்று (06.04.2025) காலையில் கமநிதாவின் “கசங்கிய மரம்” தொகுப்பினை வாசித்து முடித்ததும் எனது பால்ய காலங்கள் நினைவுக்கு வந்துவிட்டன. 


மார்ச் மாதம் இறுதியில் (30.03.2025) திருச்சி மாநகரில் தீ இனிது இலக்கிய இயக்கம் ஒருங்கிணைத்த நான்கு புத்தகங்களுக்கான அறிமுக நிகழ்வில் கும்பகோணம் நகரில் இருந்து வருகை தந்து சிறப்பித்த சொல்வெளி அமைப்பின் தோழர் பாரதி மோகன் அவர்கள் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் எனது மகளின் கரங்களில் தந்து சென்றார். 


நான் ஒன்பதாவது படிக்கையில் வெண்ணிலா பற்றிய கவிதையே எழுதினேன். கமநிதாவும் வெண்ணிலவு பற்றிய கவிதையிலேயே துவங்கியுள்ளார். இது இன்னும் கூடுதல் ஈர்ப்பினை எனக்குள் ஏற்படுத்தியது. ஆறாம் வகுப்பில். எவ்வளவு திறமை, எவ்வளவு அவதானிப்பு, எவ்வளவு புத்திக் கூர்மை. ஒவ்வொரு கவிதையிலும் தனித்துவம் மிளிர்கிறது.



தந்தை ஒரு கவிஞர் என்பதால் இது சாத்தியமாகியது என்றெல்லாம் சொல்லிக் கடந்துவிட முடியாது. அதுவொரு தவறான புரிதலை உருவாக்கும். குழந்தையின் இந்த ஆர்வத்தினை நாமே முளையில் கிள்ளி எறிவதற்கு இணையானது. 


நாற்பது கவிதைகள் கொண்ட இத்தொகுப்பில் அழகழகாய் படங்களையும் தேர்வு செய்துள்ளார். முதல் கவிதையிலேயே பெரிய வினாவுடன்தான் நம்மை உள்ளேகச் செய்கிறார். அதேபோல் குழந்தைமைக்கே உரித்தான குறும்புத்தனம் கொண்ட கவிதையையும் தந்துள்ளார் பக்கம் 39, 53 கவிதைகள் இதற்கு சாட்சி. காகிதப் பூவினைக் கொண்டு தேனியை ஏமாற்றுவதாக நினைத்தாலும் தேனீ அமராமல் பறந்து விடுவதனை பார்த்து அழவோ, கோவமோ கொள்ளாமல் குதூகலிக்கிறார். இது கண்ணாமூச்சி விளையாட்டு போன்று அமைகிறது. 


பக்கம் 43, 59, 67, 71 கவிதைகள் நல்ல எள்ளல் தொனியில் அமைந்துள்ள கவிதைகள். எள்ளல் தொனி இயல்பாக கவிதையில் அமரும்போது நம்மை சிந்திக்கச் செய்கிறது. இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்...


கடற்கரையில் 

சுடச்சுட சுண்டல் கட்டித்தந்த 

செய்தித்தாளில் 

ஆறிப்போன செய்திகள்” சமூக ஊடகங்கள் இப்படித்தான் ஆறிப்போன செய்திகளை பரபரப்பாக்கி தந்து கொண்டிருக்கின்றன. 


பக்: 23, 29 கவிதைகள் சமூகத்தின் மீதும், சுற்றுச் சூழல் மீதும் கவிஞருக்கு உள்ள அவதானிப்பைச் சுட்டுகின்றன. 33 ஆம் பக்கத்தில் உள்ள கவிதை காகிதத்துக்கும் தூரிகைக்கும் இடையிலான போரில் அழகிய ஓவியம் பிறந்துள்ளதாக பிரகடனம் செய்கிறார். 


வால் முளைத்த பட்டம் 

காற்றின் 

திசைவழிப் பறவை” 


இந்தக் கவிதை நல்ல கவித்துவத்திற்கான சிறந்த உதாரணம். மேலும் 

காகிதத்தில் செய்த 

ரோஜாவில் வீசியது 

பச்சை வாசம்” என்ற கவிதை என் மனமெங்கும் கமநிதாவின் கவித்துவ வாசத்தை நிறைத்திருக்கிறது. பெரியவர்களை விடவும் குழந்தைகளிடம் படைப்பின் கூர்மை தனித்துவமாக மிளிர்கிறது. 


வெற்றுக் காகிதமாய் 

குழந்தைகள் 

கிழித்து அவரவர்களுக்கான 

பொம்மைகளை செய்துகொள்கிறார்கள் 

பெற்றோர்கள்” என கமநிதா பெற்றோர்களைச் சாடுகிறார். உண்மைதான் குழந்தைகளை குழந்தைகளாக பெற்றோர்கள் வளர விடுவதேயில்லை. கமநிதா போன்ற குழந்தைகளே இன்றைக்கு சமூகத்துக்கு அவசியம் வேண்டும். 


இதுபோல் இன்னும் சிறந்த கவிதைகளைப் படைக்க, வாழ்வில் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன் அன்பு மகளே.


வாழ்த்துகளுடன் 

சுகன்யா ஞானசூரி.

06.04.2025.        


நூல்: கசங்கிய மரம் 

ஆசிரியர்: கமநிநிதா 

பதிப்பகம்: பரிதி பதிப்பகம் 

விலை: ரூ 120 

வெளியீடு: டிசம்பர் 2024.

தொடர்புக்கு: 72006 93200

Tuesday, October 22, 2024

ஆங்கரை பைரவியின் என்னிடம் கொஞ்சம் காஞ்சுருட்டான் இருக்கிறது



ஆங்கரை பைரவியின் என்னிடம் கொஞ்சம் காஞ்சுருட்டான் இருக்கிறது தொகுப்பின் மீதான வாசிப்பினை முன்வைத்து. - சுகன்யா ஞானசூரி 

"நதிக்கரை நாகரிகங்களில் 
சிறந்த இனவழி வந்தவர்களில் 
கடல்வழி கடந்தபோது 
அகதி என்றழைக்கப்பட்டவர்களில் 
நானும் ஒருவன்" 

என்ற எனது நாடிலி கவிதையிலிருந்து தொடங்குவதே இக்கவிதைத் தொகுப்புக்கு நான் செய்யும் மரியாதை ஆகும். ஏனெனில் கடலோடு வாழ்ந்த எங்களுக்கு நதியின் சலசலப்பை செவிமடுப்பதில் ஒரு அலாதி இன்பம். வாழ்வெனும் நாணயத்தின் இரு பக்கங்களைப்போல் எப்போதும் ஓயாமல் இரைந்து கொண்டிருக்கும் நதியும் கடலும் ஏதோவொன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. அப்படித்தான் இந்தத் தொகுப்பினுள் என் கைபிடித்து அழைத்து வந்தது ஒரு கவிதை. 

"நதிக்கரைகளில் நடந்த எங்களின் வாழ்க்கை 
இருண்டு கிடக்கிறது...
நடக்க முடியாத நதிக்கரைகள்"(பக்: 44) 
அவைகள் முடமாகிப் போனதிற்கு நம் ஆலை முதலாளிகளின் நாணயமற்ற இச்செயலை நாசுக்காக பதிவிடுகிறார் இப்படியாக 
"அரசு வரைபடம் சொல்கிறது 
நதி 
ஆலைக் கழிவுகளின் 
சாக்கடையென." பக்: 43)



ஆங்கரை: திருச்சி - இலால்குடி சாலையில் அமைந்துள்ள அழகிய கிராமம். காவிரியின் கிளை நதியான கொள்ளிடத்தின் கரையில் அமைந்துள்ள கிராமம். வாழை சாகுபடி எப்போதும் இருக்கும். முதன்முதலாய் வாழை திரைப்படம் பார்த்ததும் விகடன் தடம் நேர்காணலில் இரண்டு வாழைத் நார்களை சும்மாட்டில் சுமந்து நின்ற தோழர் பைரவியே எனக்கு நினைவிற்கு வந்தார். சிவனைந்தன் எனக்கு பைரவியாகவே தெரிந்தார். தன் உழைப்பில் உண்மையாக இருக்க வேண்டும் என்ற உறுதிமிக்க நல்ல மனிதர். சொம்படித்திருந்தால் திருச்சியின் முக்கிய பெரும்புள்ளியாக இந்நேரம் வலம் வந்திருக்க வேண்டியவர். ஆனால் அதை அவர் புறங்கையால் தள்ளிவிட்டு இதுதான் நான், இதுதான் என் வழி என அமைதியாக வாழ்ந்து வரும் அகிம்சாவாதி. கோபம் வருகையில் சொற்கள் சாட்டைகளாக வீசிக்கொ(ல்)ள்ளும். 

இனிக் கவிதைகளுக்குள் செல்வோம்....

"இப்போது 
களத்தில் இருக்கிறேன் 
போட்டிக்கு வருகிறவர்கள் 
வரலாம் (பக்: 9) 
இனி ஒருபோதும் திரும்பி வரமாட்டார், உடைந்து போய் ஓரமாக மூலையில் குந்திவிட்டார் என்ற எதிரிகளின் ஏளனப் பேச்சுக்களுக்கு அறைகூவல் விடுக்கும் முகமாக இருக்கிறது. 

"உண்மையை மட்டுமே 
உள்வாங்கும் 
ஒலிவாங்கி என்றிருந்தால் 
கழிப்பறையில் மட்டும்தான் 
ஒலித்துக் கொண்டிருக்கும் 
உன் குரல்"  (பக்: 38)

என அரசியல்வாதியின் கபடப் பேச்சுக்களை எள்ளி நகையாடுகிறார். அரசியல்வாதிகளுக்கு உள்ள பல முகங்களுக்கு இத்தொகுப்பில் நிறையக் கவிதைகள் இருக்கின்றன. அதேபோல் இலக்கியவாதியின் கையூட்டு பற்றிய எள்ளலாக "ஒன்லி கூகுள் பேதான்' என்ற கவிதையைக் குறிப்பிடலாம். போகிற போக்கில் இசைஞானிக்கும் ஒரு கொட்டு வைத்து விடுகிறார் இப்படியாக 
"ஆர்மோனியம் தந்த 
அத்தனை இசைகளையும் 
ஒரு ஜால்ரா 
விழுங்கிக் கொண்டது' (பக்: 38)

இரும்புப் பெண்மணிக்கும் இரண்டு கவிதைகளை இத்தொகுப்பில் மானசீகமாக பதிவு செய்துள்ளார். 

"அவன் மந்திரச் சொற்களில் மயங்கி 
தம்பிகளும் படகில் ஏறிக் கொள்கிறார்கள்...
...
கடலில் தத்தளிக்கும் 
என் பெயரைக் கேட்டீர்கள் 
சொல்ல மறந்து விட்டேன் 
என் பெயர் விஜயலட்சுமி" (பக்: 99) 
என்ற கவிதை யாருக்கானது என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. 

ரெங்கசாமியும், ராமசாமியும் :

ராமசாமி விழிப்பில் இருப்பதால்தான் ரெங்கசாமி ஆனந்த சயனத்தில் பாதுகாப்புடன் உறங்குகிறார் இல்லையா. அப்படியான மதநல்லிணக்கம் கொண்ட காவிரிக்கரை இது. சொர்க்கவாசல் திறப்பு குறித்த தந்தை தனையன் உரையாடல் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. "யோவ் ராமசாமி" ஒரு புதிய திறப்பினை கூறும் கவிதை. 

"பிட்டுக்கு 
மண் சுமக்க வந்தாய் 
பிள்ளைக்கறி 
கேட்டு வந்தாய் 
 பீ அள்ள வரமாட்டாயா"? (பக்: 54) 

"மலக்குழியில் விழுந்த 
என் தாத்தன் 
கதறியபோது மட்டும் 
எந்த வீட்டில் வெண்ணையை 
நக்கிக் கொண்டிருந்தாய்? (பக்: 48) 

என மாமன் மச்சான் கடவுள்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு எப்போதும் அமைதியே பதிலாக இருக்கிறது. மலக்குழி மரணங்களுக்கு நிவாரணத்தைத் தவிர அரசாங்கத்திடமே தீர்வு எட்டாமல் தொடர்கிறது இன்றைய அறிவியல் வளர்ச்சி பெற்ற நவீன காலத்திலும். ஏனென்று கேட்க நாதியற்ற விளிம்பு நிலைச் சமூகம்தானே பலியாடுகளாகின்றனர். 

மதவாதிகளுக்கு, இனவாதிகளுக்கு, துரோகிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு, உறவுமுறை பாராட்டி ஏமாற்றுவோருக்கு என நிறையவே காஞ்சுருட்டான்களை கவிதைகளுக்குள் கண்ணிவெடியாய் வைத்திருக்கிறார். அக்கம் பக்கம் (பக்: 95) கவிதையில் ரொமான்ஸ் இருக்கிறது. இயற்கை மீதான கனிவும், அக்கறையும் நிறைந்து இருக்கிறது. 

"மிஸ் யூ" (பக்: 85) கவிதை காதல் கோட்டை காலத்துக்கு முன்பானதாக இருப்பினும் இப்போதைய காலத்தில் இது இளைய தலைமுறைகளின் போக்கினை கூர்ந்து அவதானிக்க வேண்டிய அவசியத்தை,  மகளின் நாசுக்கான உரையாடல் வழி கவிதை ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. "ஒன்லி கூகுள் பேதான்'" கவிதை சமகாலத்துக்கான டிஜிட்டல் சமூகத்தின் போக்கினை படம்பிடிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நகைச்சுவை உணர்வு அதிகமாக இக்கவிதைகளில் நிறைந்து இருக்கிறது. 

இத்தொகுப்பில் "ஒவ்வாமை" (பக்: 13) கவிதை மட்டும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளால் புனைவுத்தனமாக துருத்திக் கொண்டிருக்கிறது. ஒருவேளை இதில் இந்தி என்பதற்குப் பதிலீடாக சாதி என்பதை வைத்து யாத்திருந்தால் ஒரு அருமையான கவிதைக்கான படிமமாக அமைந்திருக்கும் என்பது எனது வாசிப்பின் புரிதல். சில எழுத்துப் பிழைகள் அல்லது தட்டச்சுப் பிழைகளாகக் கூட இருக்கலாம். இவற்றை கொஞ்சம் ஊன்றிக் கவனித்திருக்கலாம். மேலும் கவிதைகளின் வடிவமைப்பில் கூடுதல் கவனமும் தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் அடுத்த பதிப்பில் சரி செய்வீர்கள் என நம்புகிறேன். 

இறுதியாக: 

பிச்சை எடுப்பேன் 
உங்களிடம் அல்ல 
உங்கள் முன்பும் அல்ல 
பிறழ்வு நிலையில் 
கதறி அழுவேன் 
உங்களிடம் அல்ல 
உங்கள் முன்பும் அல்ல 
ஆனால் ...
வாழ்ந்து காட்டுவேன் 
உங்களிடமும் உங்கள் முன்பும். (பக்:100) 

ஒரு படைப்பாளனுக்குரிய அத்தனை சுயமரியாதையும், கர்வமும் இக்கவிதைக்குள் அடங்கியுள்ளன. இதுதான் பைரவி. பைரவிதான் இக்கவிதை. படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் காஞ்சுருட்டானின் (செந்தட்டி, காஞ்சுண்டி) நமைச்சல் ஏதோவொரு இடத்தில் இருந்தே தீரும். அப்படி இல்லை என்பவர்கள் முதல் கல்லை எறியும் பாக்கியசாலி ஆவீர்கள். 

நூல்: என்னிடம் கொஞ்சம் காஞ்சுருட்டான் இருக்கிறது 
ஆசிரியர்: ஆங்கரை பைரவி 
பதிப்பகம்: செவ்வி வெளியீடு 
விலை: ₹ 150
தொடர்புக்கு: 9976350636

Saturday, July 31, 2021

நாடிலி தொகுப்பு குறித்து சுப்ரா. வே. சுப்ரமணியம் பார்வை

 







“ நாடிலி “ – கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் – சுகன்யா ஞானசூரி . [ 97903 50714 ]

வெளியீடு – கடற்காகம் வெளியீடு .

விலை – ரூ 110 . [ முதல் பதிப்பு ஜூன் 2021 ]

மா . ஞானசூரி எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் யாழ்ப்பாணம் அச்சுவேலி வடக்கில் 1984 ல் பிறந்து , 1996 ல் தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்ந்தவர் . தற்சமயம் திருச்சியில் வசித்து வருகிறார் . அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது .

தொகுப்பின் தலைப்பே போதும் உள்ளிருக்கும் கவிதைகள் வாசிப்பவர்களிடம் உருவாக்கப்போகும் வலிகளை உணர்த்துவதற்கு .

வருமானம் தேடி புலம் பெயர்தல் வேறு ; வாழ்விடம் இழந்து , வாழ்வாதாரம் இழந்து வலியோடு புலம் பெயர்தல் வேறு . வந்த இடத்திலும் தனியொரு அடையாளம் இன்றி அகதி என்ற ஒற்றை அடையாளத்தோடு வாழ்தல் தரும் வலி மிகப் பெரிது . அந்த வலி குறித்து பல புதினங்களும் , சிறுகதைகளும் வந்து கொண்டேயிருந்தாலும் கவிதை என்ற வடிவத்தில் அவை வாசிப்பவர்களிடமும் அந்த வலியை எளிதாகக் கடத்தி விடுகின்றன . இந்த தொகுப்பு முழுவதும் அத்தகைய வலி தரும் வரிகள்தான் . பழைய நினைவுகள் தரும் வலிகளையும் , வந்த இடத்தில் அனுபவிக்கும் வலிகளையும் மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார் கவிஞர் . கவித்துவமான வரிகளையும் மீறி வாசித்து முடிக்கையில் நம்மிடம் எஞ்சி நிற்பவை வலி …. வலி…. வலி …. தவிர வேறொன்றுமில்லை .

அரசின் பதிவேட்டில் / அங்க அடையாளங்களோடு

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் மிச்சம் மீதியாயிருக்கும்

உயிரைக் காக்கப் போராடும் / “ அடிமையான அகதி நாங்கள் “

வேறென்ன அடையாளம் சொல்ல ? 

அகதிகள் முகாம்களில் நிகழும் கொடுமைகளை பட்டியலிட்டு முடிக்கிறார் ஒரு கவிதையை - 

உங்களுக்கு யாழ்ப்பாணம் தெரிவதைப் போல

யாழினிகள் தெரிவதில்லை . 

முகாம்களில் வாழ்விடம் என்பது ஒருவகையான வெற்றிடமே எனக் காட்டும் வரிகள் -

பத்துக்கு பத்து என்பதொரு கணித சூத்திரம்

இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்

கல்லறையின் அளவை . 

அகதி வாழ்வு என்பது எவ்வளவு கொடுமையான மனநிலையைத் தருகிறது இந்த வரிகளில் -

மஞ்சள் கனியொன்றின் / பற்குறியில்

உறைந்து கிடக்கும் / குருதியென வீச்சமடிக்கிறது

இந்த வாழ்வு . 

பழைய நினைவுகளில் மூழ்கியெழுந்து வெளியேறி தற்போதைய வாழ்வு நிலையை எளிமையான வரிகளில் கடத்திச் செல்கின்றது கவிதை ஒன்று - 

சீவல் தொழிலற்று

சீவியம் போன மூத்த குடியானவன் பிள்ளை

பனை நிழலும் அற்றுப்போனான் . 

கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளை சற்றே மாற்றிப் போட்டுள்ள வரிகளின் வீரியம் எவ்வளவு வெப்பத்தைக் கொணர்கிறது -

சமுத்திரத்தின் பெருவெளியில்

படகுகளோடு மூழ்கிய குழந்தைகளையொதுக்கும்

கரையில் நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்

யாதும் ஊருமில்லை / யாவரும் உறவுமில்லை . 

அகதிகளின் வாழ்வில் எதுவுமே நிரந்தரமல்ல எனினும் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற நம்பிக்கையை தனக்குள்ளாகவே உருவாக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழி ?

அன்றன்றைக்குப் பெய்யும் / மழையை

அன்றன்றே ரசித்துவிடு / பிறிதொரு நாளில்

அது அதுவாகவும் நாம் நாமாகவும்

இருப்போமா தெரியாது .  

 


வாழ்வு தேடி வந்த இடத்திலும் வாடிக்கையான கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன – ஆனால் எவ்வளவு மனப்புழுக்கம் !

கந்து வட்டியில்தான் இந்த வருடமும்

எமக்கான தீபாவளி / அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது .  

தங்களது வலிகளை பிறரிடம் பகிர்கையில் எத்தனை சோகத்தை மனதில் தேக்கி வைத்திருந்தால் இந்த வரிகள் உருவாகும் –

இடப்பெயர்வின் வலிகளை

அகதியானவர்களிடத்து கேட்டுப் பாருங்கள்

கண்ணீரில் மிதக்கும் வாழ்வில்

நீந்த முடியாது அலைவுறுவீர்கள் . 

இந்த வரிகளை வாசிக்கையில் நமக்குள் ஏற்படும் குற்ற உணர்வை அவ்வளவு எளிதில் உதறிச் செல்ல முடியாது - 

போரை எவரும் விரும்பி ஏற்பதில்லை

ஆனால் அதுதரும் / விளைவுகள் குறித்து அச்சப்படுகிறேன்

போர் திணித்த இடப்பெயர்வில்

எப்படி நீங்கள் என்னை / அகதியென விளிக்கிறீர்கள் ?  

மழை குறித்துதான் எத்தனை கவிதைகளை வாசித்து விட்டோம் . ஆனால் அந்த மழை ஒரு நாடிலியின் பார்வையில் வேறு ஒரு உணர்வுகளை உருவாக்கி விடுவதை உணர்த்தும் வரிகள் -

யார் / கவிழ்த்துவிட்டது / அந்த மதுப்புட்டியை ?

இப்படிப் / பொங்கி வழிந்தோடுகிறதே

நிலமெங்கும் வெள்ளமென அகதிகளின் கண்ணீராய் . 

எவ்வளவுதான் வேதனைகள் சூழ்ந்திருந்தாலும் இயற்கையை இரசிக்காமல் இருக்க முடியவில்லைதான் . ஆனால் அந்த இயற்கையும் ஒரு சுய பச்சாதாபத்தைத்தானே உருவாக்கி விடுகிறது -

தாயகமிழந்த என்னை / நீங்கள்

அகதி என்றழைப்பதைபோல்

சாயமிழந்த வண்ணத்துப்பூச்சிகளை

என்ன பெயரால் அழைக்கிறீர்கள் ?  

உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பெருந்தொற்று காலக் காட்சிகள் ஒரு நாடிலியின் பார்வையில் தொற்று குறித்த பயத்தைவிட தனது எதிர்காலம் குறித்த அச்சத்தை மட்டுமே உருவாக்கி விடுகின்றன என்பதை உணர்த்தும் ஓர் ஒப்புமை -

ஊடகத்தில் நிரம்பி வழியும் / பெருந்தொற்றில்

சாலைகள் மரணித்துக் கிடக்கின்றன

நிச்சயமற்ற எதிர்காலத்தின் / சூனியத்துழலும் ஏதிலிபோல்

அச்சம் ஒவ்வொரு இல்லத்திலும் அடைந்திருக்கிறது . 

புலம் பெயர்ந்த வலியை மிகுதியாகப் பேசினாலும் , உலகின் பொதுவான பிரச்சினைகளையும் பாடுபொருளாகக் கொண்டு சில கவிதைகளைத் தருகிறார் – சற்றே பகடி கலந்து தன் வலி மறக்கும் முயற்சியாக .

மேலைத்தேய கார்ட்டூன்கள்

அறிவையும் அன்பையும் போதிக்கும்வேளையில்

அடைக்கல தேசத்தின் கார்ட்டூன்கள் நஞ்சூட்டுகின்றன . 

சிறு சிறு வார்த்தைகள்தான் ; ஆனால் எத்தனை அர்த்தம் பொதிந்தவை –

கடல்மீதும் / சிறுதுண்டு நிலம்

தேடும் / அகதியின் பாதம் . 

ஒரு சில வரிகள் படைப்பாளியின் குரல் வழியே அனைத்து நாடிலிகளின் மனக் குமுறல்களையும் வலி பொதிந்து தருகின்றன -

அடைக்கலமான தேசத்தில் / நடைப்பிணங்களாய்த் திரிகின்றோம் / நினைவில் / ஊரைச் சுமந்தபடி . 

*************************************

தினந்தினம் இப்படி இறப்பதைக் காட்டிலும்

போர் நிலத்தில் / ஒரு கணம்

இறந்தே போயிருக்கலாம் / புலம் பெயராது . 

வாசிக்கும் யாரையும் உலுக்காமல் விடாது இந்த வரிகள் -

துயர்மறந்து விடியலை நோக்கும் / என் கனவுகளை

அகதியென்னும் ஒற்றைச் சொல்லில் / சிதைத்துவிடுகிறீர்கள் . 

தொகுப்பை வாசித்து முடித்ததும் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்வு குறித்த வலி மிகுந்த உணர்வுகளை நம்மிடம் கடத்தி விடுவதன் மூலம் படைப்பாளி அவரது முயற்சிக்கான முழு பயனையும் அடைந்து வெற்றி பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும் ; நாடிலிகளின் வலி குறித்த வலிமையான வரிகளைத் தாங்கிய தொகுப்பு .   

- சுப்ரா .