Saturday, June 25, 2016

நஞ்சுண்டகாடு-குணா கவியழகன்



பெரும் சுமையொன்றை முடிக்கும் போது சுமக்கச் செய்கிறது நஞ்சுண்ட காட்டுக்குள் துயிலும் ஏணைப்பிறை. மனம் கிடந்து உளைகிறது. எத்தனையெத்தனை சுகுமார்களையும் அவன் குடும்பத்து துயரத்தையும் இந்த பூமி சுமந்திட இயலும்? பொறுப்பற்ற குடும்பத்தாரின் சூழலும், தொடர் மரணங்களுமென எத்தனையெத்தனை சோதனைகளை தாங்கி நிற்கும் அக்கா. 1990 களில் எங்கள் குடும்பத்தில் ஒரேயாண்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்களின் நிகழ்வுகளை கிளறிவிடுகிறது காட்டின் இருண்ட பக்கங்களென.

இது சுகுமாரின்ர வீட்டின் நிகழ்வல்ல. அத்தேசத்தின் ஒட்டுமொத்த சனத்தின் வாழ்வுக்குமான பொது விதியென இட்டுச் சென்றது போரின் மறுபக்கம். இழப்புகள் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை. இழப்புகள் எண்ணிக்கை அதிகமாகும்போது அது தோல்விக்கே வழிவகுக்கும். எவ்வளவு தீர்க்கமாய்ச் சொல்லியுள்ளான் சுகுமார். இன்று தேசமற்று நிற்கும் எம்மினம் புரிந்துகொண்டிருக்கும்.

படித்து முடிக்கும் நொடிகளில் சுகுமாரின் அக்கா ஒவ்வொருவர் உள்ளத்துக்குள்ளயும் விலக்கமுடியாமல் ஒட்டிக்கொள்வாள். ஒரு மிடறு சோறு தண்ணீர் நெஞ்சுக்குள் சிக்கிச் சுழன்டு அடைத்துக் கொள்கிறது. போரின் பெயரால் நிகழ்த்தப்பட்ட விதி. தொடர் மரணங்களால் நிலைகுலைந்த சுகுமாரின் அக்கா நம் அருகில் இருப்பதை மறந்து நாம் திரிகின்றோம். ஒரு  போராளியின் வாழ்வும் அப்போராளியின் குடும்பச் சூழலும் என நஞ்சுண்ட காட்டின் இருள் தொடர்கிறது....