Tuesday, November 10, 2020

செம்மொழித்தமிழ்


 

செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள்

தொல்காப்பியம் முதல் இறையனார் அகப்பொருள் வரையிலான 41 நூல்களின் தொகுப்பு. நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த சங்க இலக்கிய நூல்களில் விளக்கவுரையுடனான சில பழைய நூல்களை சமீபத்தில் வாங்கியிருந்தாலும் மொத்தமாக ஒரே புத்தகமாக கிடைத்ததில் அளவில்லாத மகிழ்ச்சி. விளக்கவுரை இல்லை என்பது சிறு குறையாக இருப்பினும் பதம் பிரித்து பதிப்பித்திருப்பது எளிதாக விளங்கிக்கொள்ள முடிகிறது. நேரில் சென்று வாங்க எண்ணியிருந்தேன். ஆனாலும் சூழல் அமையவில்லை. கடைசி நாளில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி அழைத்தால் அழைப்பை எடுக்காதது சற்று பதற்றமாக (பணத்திற்காக அல்ல நூல் கிடைக்குமோ கிடைக்காதோ என்றே) இருந்தது. ஆனால் நூல் கைக்கு வந்ததும்தான் மனம் நிறைவானது. குறைந்த விலையில் நிறைவான தமிழ் நூல் என்றால் மிகையில்லை. பதிப்பித்து பத்தாண்டுகள் கழித்து கவனம் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதும் தமிழ் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதற்கு சான்று பகர்கிறது.

- சுகன்யா ஞானசூரி

கைகழுவிய காலம்


இது எப்படி உள்ளதென நீங்கள்தான் சொல்லவேண்டும் நண்பர்களே. படைப்பு குழுமம் நடாத்தும் கவிக்கோவின் பிறந்தநாள் போட்டிக்கு என்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கவிதை. 


https://padaippu.com/submitted/kaviko2020/116

கைகழுவிய காலத்தின் கவி!

*************

ஒரு மதுக்குவளையைக் கவிழ்த்து வைக்கும் இடைவெளியில் 

காலங்களை அனாயசமாய்ப் புரட்டிப் பார்க்கிறான் கவிஞன். 

கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இழுத்துவந்து 

நிகழ்காலத்தின் துயரக் கோடுகளோடு முடிச்சிடுகிறான். 

மரபணு அடையாள உணரட்டை அணிந்த 

சூப்பர் மனிதர்கள் கடந்த காலங்களுக்கு பயணிக்கிறார்கள்

நோவாக்கள் கட்டிய கலங்களையொத்தவை அவை.

மனிதர்களின் வளர்ச்சிகளோடும் அரசுகளின் போட்டி அதிகாரத்தோடும் 

இணைந்தேயிருக்கிறது நுண்மிகளின் பரிணாம மாற்றம்.

நுகர்வுக் கலாச்சாரம் கொடிய நோய்களையே பரிசளிக்கிறது.

நூற்றாண்டுகளுக்கு இடையிலான தொலைவில்தான் இருக்கின்றன 

அடிமையுழைப்பில் ரேகை தொலைத்தவர்களும் நுண்மிகளால் 

கைகழுவியே ரேகையுதிர்ந்தவர்களும் வாழ்ந்த காலங்கள்.

நுண்மிகளின் பரவுநிலை பொருளாதார மந்தநிலை அகதிகளாகி 

செத்து வீழும் மக்கள் எதுபற்றியும் கவலையின்றி 

நாளாந்தம் உரையாற்றும் பொறுப்பற்ற தலைவர்கள் 

மாற்றம் பெறவில்லை என்றபடிக்கு மனுசங்களின் 

காலவெளிகளில் பயணித்துத் திரும்பும் சூப்பர் மனிதர்கள்

புறக்கதிர்களின் துணைகொண்டு தத்தமது 

கைகளையும் கலங்களையும் தூய்மை செய்கின்றனர் 

நோவாவின் காலத்திற்கும் சூப்பர் நோவாவின் காலத்திற்கும் 

பயணித்த களைப்பில் உறங்கும் கவி 

கைகழுவிய பின்பே ஒரு மிடறைச் செலுத்தினான்.

- சுகன்யா ஞானசூரி.

திருச்சி.

 https://m.facebook.com/story.php?story_fbid=3178778738899259&id=100003014920463

Wednesday, November 4, 2020

புதிய பரிமாணத்தில் எனது கவிதைகள்


இம்மாதம் புதிய பரிமாணம் இணைய இதழில் வெளியாகியுள்ள "நோய்க்காலத்து அகதியின் பாடல்" என்ற எனது 16 கவிதைகளை இந்த இணையச் சுட்டியில் ச்் http://puthiyaparimaanam.in/?p=1288 சென்று வாசிக்கலாம் தோழர்களே. என் கவிதைகள் குறித்து தங்கள் அனுபவங்களை பதிவு செய்யவும் வேண்டுகிறேன்.