Saturday, September 30, 2023

தமிழ், தமிழடையாளம்


#நன்னூல் இதழில் வெளியாகியுள்ள தமிழவனின் சிறப்புக் கட்டுரையானது தமிழ்த் தேசியத்தைக் கோருபவர்கள் கூனிக்குறுகி நிற்பதா? அல்லது மார்தட்டிப் பெருமை கொள்வதா? என்ற கேள்வியை முன்வைக்கிறது. சமகாலத்தில் பெரியாரின் தேவை என்ன என்ற கேள்விக்கும் சிறப்பான பார்வைகளை பதிலாக வைத்துள்ளார். பெரியாரை கடவுள் மறுப்பாளராக, பிரச்சாரகராக மட்டுமே குறுக்கிப் பார்க்க வைத்திருக்கிறோம். ஒரு தத்துவவாதியாக, தமிழின் தனித்த சிந்தனையாளராக காணத் தவறியதையும், அறிஞர் அண்ணாவின் "சிந்திப்பீர்" என்ற சொல்லின் குறியீட்டு விளக்கம் இன்றைய மேடைப் பேச்சுக்களில் காணாமல் போனதன் அரசியலில் தனிமனித சிந்தனையற்ற கும்பல் மனப்பான்மைகளின் பெருக்கமும் அதன் உளவியல் வெளிப்பாடுகளை ஜெர்மனியின் மார்க்சிய மனிதாபிமானி உளவியல் நிபுணர் வில்ஹெல்ம் ரைக் எழுதிய 'பாசிசத்தின் கும்பல் உளவியல்' எனும் நூல் கொண்டு ஹிட்லரின் இயக்கத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி விபரிக்கிறார். 


பல்கலைக்கழகங்கள் தமிழரின் இருபது நூற்றாண்டு வரலாறை எழுதத் தவறியதையும், அதனை எழுத அவர்களைப் பணிக்காததும் தவறான கருத்து திரிபுவாதங்கள் தோன்றுவதையும், ஜே.என்.யு போன்ற அறிவுசார் தளத்தைக் கண்டு பாசிசம் பயப்படுவது போல் தமிழகத்தில் எந்தப் பல்கலைக்கழகமாவது இருக்கிறதா? குறிப்பாக தமிழ்ப் பல்கலைக்கழகம் இதனைச் செய்யத் தவறியதை அறிவுஜீவிகளின் குடுமிப்பிடி சண்டைகளும், பதவி மோகங்களும் படுத்தும் பாடுகளினூடாகச் சுட்டிக் காட்டுகிறார். 


பெரியாரின் மண்ணில் சாதியம் மெல்ல மறைந்து வரும் வேளையில் சாதியச் சங்கம் தன்னை அரசியல் கட்சியாக்கி சாதியை மீண்டும் வளர்த்து பெரியார் முகத்தில் கரியைப் பூசியதை சுட்டிக்காட்டும் இடத்தில் நாம் வெட்கப்படுவதைத் தவிர வேறில்லை.  அதேபோல் ஈழ அரசியல் தோற்கடிப்புக்குப் பின்னால் உள்ள வெற்றுக் கூச்சலிடும் வாய்சவடால் தலைமைகளும், கோடரிக் காம்புகளும் காரணகர்த்தாக்களாகியதையும் சுட்டிக்காட்டுகிறார்.


காட்சிப் பண்பாட்டின் குழந்தைகளாக தலைவர்களின் சிந்தனையே நம் சிந்தனை, தலைவர்களின் மேடைப்பேச்சே நம் பொன்மொழி என்ற போக்கை பிரெஞ்சு சமூகவியல் நிபுணர் பியர் பூர்தியூ ஆய்வுகள் கொண்டு விளக்குகிறார். குமரி முதல் சென்னை வரை இந்தப் போக்கு ஒவ்வொருவரிடமும் உருவாகியுள்ளதையும், கர்நாடகத்திலும், கேரளத்திலும் இந்தப் போக்கு மட்டுப்பட்டு தனிமனித அறிவுசார் சிந்தனை வளர்ந்திருப்பதையும் ஒப்பிட்டு விளக்குகிறார். காட்சிப் பண்பாடு நம்மை கேளிக்கை மிகுந்த வாழ்வுக்குள் தள்ளியுள்ளது என்றால் மிகையாகாது.


மொத்தத்தில் பத்துப் பக்கம் கொண்ட இக்கட்டுரை "தமிழ் வாழ்க" என ஒலியெழுப்பிக் கொண்டிராது வளரும் தலைமுறை தமிழ், தமிழ்த்தேசியம் என்பவற்றை பேசுவதற்கு முன்பு தமக்கான வரலாற்றை உண்மையுடன் எழுதிய பிறகு கோரலாம் என்பதை அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறது. சிறந்த இக்கட்டுரையை தவறாமல் வாசியுங்கள்.


- சுகன்யா ஞானசூரி

30/09/2022


இதழ்: நன்னூல்

விலை: ₹100 (தனி இதழ்)

தொடர்புக்கு: 86104 92679, புலன எண்: 99436 24956. 

Saturday, June 24, 2023

தமிழ்நாட்டில் ஈழ அகதிகளும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைப்பாடுகளும்

 

தமிழ்நாட்டில் ஈழ அகதிகளும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைப்பாடுகளும் 

(ஒரு அகதியின் ஒப்புதல் வாக்குமூலம்) - சுகன்யா ஞானசூரி.

காலம்தான் எவ்வளவு வேகமாகச் சுற்றிக் கொள்கிறது. ஒரு சொடக்குப் போடுவதற்குள் காலம் கடந்து விட்டதைப் போலிருக்கிறது நினைவின் தாழ்வாரத்தில் கடந்த காலம். பொங்குமாக்கடலின் அலை நுரைகளில் உப்புக் கரிப்பை வாழ்வு சுவைத்துக் கொண்டிருக்கிறது. அத்தனை விரைவாக நாம் நாடு திரும்பிவிடுவோம் அதுவரையில் உயிரைத் தக்கவைக்க ஒரு பாதுகாப்பான நிலம் தேடிப் புறப்பட்ட பாதங்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே இங்கு தங்கிவிட்டன இல்லை வேர் விட்டன என்பதே பொருத்தமாகும். "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்" என்ற வார்த்தைகள் நீர் மேல் எழுத்தாய்க் கலைந்து போனது. நிம்மதி தேடிப் புறப்பட்ட இவ்வாழ்க்கை நிர்கதியாகி நிற்கிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த துயர்பட்ட வாழ்வென்றே மூன்றாம் தலைமுறையும் கேள்வி கேட்கத் துவங்கிவிட்ட பின்பும் அனைவரின் கள்ள மெளனங்கள் புரியாத புதிராகவே உள்ளது. இது என் ஒருவரின் குரல் மட்டுமல்ல தமிழகத்தின் இருபத்தெட்டு மாவட்டங்களில் உள்ள நூற்றி ஆறு முகாம்களின் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஒட்டுமொத்தக் குரலாகவே உள்ளது. இங்கு அகதிகள் என்போர் ஒரு தனிப்பட்ட மதம் சார்தோ, பிரதேசம் சார்ந்தோ இல்லை. சைவர்கள், வேதக்காரர்கள், இஸ்லாமியர்கள் எனவும், மலையகத்தோர், வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசம் சார்ந்தோர் என கலந்துபட்ட விழிம்புநிலைச் சமூகமாகவே அகதிகள் என்னும் அடையாளத்தின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். 

முகாம் எனும் முள்வேலி: 

இதுவொரு திறந்தவெளிச் சிறைச்சாலை என்பதே பொருத்தமானது. ஒவ்வொரு முகாமும் மாவட்ட எல்லைகளுக்கு அப்பால் பொட்டல் வெளிகளிலும், வறண்ட பகுதிகளிலும், சுடுகாட்டு நிலங்களிலுமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் அருகில் உள்ள உள்ளூர் மக்கள் அச்சப்படும் படியான தோற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் நாளடைவில் தேவைகளின் பொருட்டு சந்திக்கவும், பொருட்களை விற்கவும் வாங்கவுமாக முகாம்களுக்குள் சாதாரண மக்களைத் தவிர வட்டிக்கு கடன் கொடுப்போரும், வியாபாரிகளும் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். முகாம் கழிவறை என்பது ஆரம்பத்தில் கருவேலங் காடுகள், தைலமரக் காடுகள், முந்திரி மரக் காடுகள் மற்றும் சுற்றியுள்ள பற்றைகள் போன்றவையே இருந்தன. பிற்பாடு ஐந்து வீட்டுக்கு ஒரு கழிவறை என சில தொண்டு நிறுவனங்களின் கருணையால் உருவாக்கப்பட்டன. இப்போதும் அதுவே தொடர்கிறது. ஒரு முகாம் சிறியது எனில் குறைந்தபட்சம் நூற்றைம்பது குடும்பங்களும், பெரியது எனில் அறுநூறு குடும்பங்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கோழிப்பண்ணைகளிலும், பழைய குடோன்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. வீட்டமைப்பு குதிரை லாயங்களைப் போன்று பத்து முதல் இருபது வீடுகள் சேர்ந்தாற்போல் லைன் (line) தொடர்ச்சியான வீடமைப்பைக் கொண்டது. அடுத்தவர் வீட்டு விம்மல் ஒலி துல்லியமாகக் கேட்கும்படியாக இருந்தது. தார் சீற்று என்று சொல்லப்படுகின்ற கறுப்பு அட்டையால் அமைக்கப்பட்டிருந்த ஆரம்பகால வீடுகள் தறப்பால்களால் சுற்றப்பட்டு இருந்தன. பின்னர் ஒற்றை செங்கல் வைத்து கட்டப்பட்டு ஆஸ்பெஸ்டாஸ் சீற்றுக்கு தரம் உயர்த்தப்பட்டிருந்தது. தற்பொழுது தமிழக அரசு அரசு ஊழியர்களின் தொகுப்பு வீடுகளைப்போல் சிறந்த வீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அடிபம்புகள் இருந்தநிலை மாறி நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து சீராக வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் குடிநீருக்காக பல தோட்டக் கிணறுகளைத் தேடிச் சென்று கிணற்றின் சொந்தக்காரர்களின் மோசமான திட்டுக்களில் கூனிக்குறுகி நின்ற நாட்கள் நினைவை விட்டு நீங்காமலே உள்ளது. 

கல்வி

அகதிகளாகி வந்த ஆரம்ப நாட்களில் கல்வி என்பது எட்டாக் தனியாகவே பார்க்கப்பட்டது. பின்னர் ஆரம்பக் கல்வியை முகாம்களுக்கு அருகிலிருந்த பள்ளிகளில் பயில அனுமதி வழங்கப்பட்டது. பிறகு உயர்கல்வி பயில அனுமதிக்கப்பட்டது. முன்னால் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கி பட்டப்படிப்புகள் வரையிலும் பயில அனுமதி வழங்கியிருந்தார். இந்த ஒதுக்கீடுகள் சில தொண்டு நிறுவனங்களின் தவறான போக்கால் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலிதா அவர்களால் குறைக்கப்பட்டது. பின்னர் அது முற்றாக நிறுத்தப்பட்டது. கலை அறிவியல் துறைசார் பட்டப்படிப்புகள் தவிர பிற துறைகளுக்கு எம்மவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டனர். மாநிலங்களின் அதிகாரத்திலிருந்து கல்வி மத்திய அரசின் அதிகாரத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் நீட் நுழைவுத்தேர்வு எனும் அரக்கன் முகாம் மாணவர்களின் மருத்துவக் கனவுகளை தகர்த்து விட்டது. இதுவரையில் முகாமிலிருந்து மருத்துவம் பயின்றவர்கள் முகாம்களுக்குள் எவ்வித செயல்பாடுகளையும் முன்னெடுக்காத சூழலில் இதுகுறித்து கவலைப்படுவதில் பிரியோசனம் இல்லை என நாம் கடந்து போக நினைத்தாலும் தொடர்ச்சியாக நடுவண் அரசு செயல்படுத்தி வரும் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு என்பது இன்னும் பல்வேறு உளவியல் சிக்கல்களுக்கு எம் மாணவர்களை இட்டுச் செல்லும் என்பதே நிதர்சனம். மருத்துவம், வேளாண்மை, சட்டம் மற்றும் கடல்சார் படிப்பு, போன்றவை எம் மாணவர்களுக்கு கிடைக்காமல் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது பொறியியல், கலை அறிவியல் மற்றும் டிப்ளமோ கல்விகளும் நுழைவுத்தேர்வு எனும் அரக்கத்தனமான செயலால் கல்வியற்ற சமூகத்தை நோக்கி நகர்த்தும் துர்ப்பாக்கிய சூழல் நெருக்கி நிற்கிறது. 

வேலைவாய்ப்பு

பெரும்பாலும் வேலைவாய்ப்பு என்பது இங்கு பெரிய உத்தியோகங்கள் என ஒன்றும் இல்லை. முகாம்களில் அடைபட்டிருந்த மக்கள் அரசு வழங்கிய பணக்கொடையிலும், ரேசன் பொருட்களிலுமே தங்களின் கால்வயிற்றை நிரப்பி வந்தனர். சில முகாம்களில் கட்டுப்பாடுகள் வரையறைக்கு உட்பட்டு நிர்மாணிக்கப்பட்ட சூழலில் வெளியே காலையில் வேலைக்குச் சென்று மாலைக்குள் முகாம்களுக்குள் திரும்பும்படியான இருவேளை கையெழுத்திடும் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. இது ஒரு சிறிய விடுதையுணர்வை எமக்கு வழங்கியது என்பதே நிதர்சனம். முகாம்களை ஒட்டியுள்ள கடைகளில் சொற்ப சம்பளத்தில் எடுபுடி வேலை, கட்டுமானப்பணிகளில் கொத்தனார், சித்தாள் பணிகள், கல்லுடைத்தல், வர்ணம் பூசுதல் வேலைகள் எமக்கு இப்போதும் செய்யக்கூடியதாக உள்ள அனுமதிக்கப்பட்ட வேலைகளாக இருக்கின்றன. சில படித்த இளையோர்கள் தங்களின் அகதி அடையாளங்களை மறைத்து படிப்பிற்கு ஏற்ற மேல் வேலைகளுக்கு செல்லத் துவங்கினர். இப்போதும் அப்படியே தொடர்கிறது. படித்தும் பெரிய வேலைகளுக்கு செல்ல முடியாது என்ற எண்ணம் படிக்கின்ற வயதிலேயே வேலைக்குச் செல்லத் தூண்டுகிறது. அப்படியான சூழலே இங்கு இருக்கையில் கல்விக்கு செலவு செய்ய மனம் விரும்புவதில்லை என்பது எதார்த்தம்தான். அகதி என்ற சொல் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் பெரும் சுமையாகவும், சவாலாகவும் இருக்கிறது என்பதே உண்மை.

சமூகச் சூழலும் எதிர்கொள்ளும் பிரச்சினைப்பாடுகளும்

"வீடு எப்படியோ அப்படியே நாடும்" என்பார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அகதிகள் முகாம்கள் அமைந்திருக்கின்ற இடங்களில் சுற்றியுள்ள சாதிய, மதப் பண்பாட்டுக் கூறுகள் சமீபகாலமாக முகாம்களுக்குள்ளும் தலைகாட்டத் துவங்கியுள்ளது. பெரும்பான்மையான ஆதிக்கம் கொண்ட சாதியை தங்களின் சாதிய அடையாளமாக வரித்துக் கொள்ளும் போக்கு ஆரோக்கியமற்ற இளைய சமூகத்தை உருவாக்கியிருக்கிறது. 

அரசின் மதுபானக் கடைகள் முகாம்களுக்கு அருகில் இருப்பதால் மதுப்பழக்கம் அகதிகள் முகாமுக்குள்ளும் ஒரு கலாச்சாரமாக பரவியுள்ளதைக் காண முடிகிறது. எல்லாக் கொண்டாட்டங்களிலும் மதுபானம் தவிர்க்க முடியாத ஒன்றாக பல குடும்பளின் சீரழிவுக்கும் இன்றைய இளைஞர்களால் ஏற்பட்டிருக்கிறது. மதுபோதையால் விபத்துக்கள் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. 

உலக தாராளமயமாக்கலும் நுகர்வுக் கலாச்சாரமும் அகதிச் சமூகத்திற்குள்ளும் ஊடுருவி சமூகச் சிக்கல்களை தோற்றுவித்து வருகிறது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. இருபத்தி நான்கு மணிநேரமும் கண்காணிக்கும் க்யூப் பிரிவு புலனாய்வு அமைப்புகள் இதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இம்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோர், எழுத்தாளர்கள், படைப்பார்கள், அறிவுஜீவிகள் ஒருங்கிணைக்கும் நிகழ்வுகள் ஒரு தீவிரவாதச் செயல்பாடாக உறுத்துவதால் உடனே விசாரணை எனும் பெயரில் முடக்குவதே முழுநேர நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர் என்பதே நிதர்சனம். 

இங்கு ஒவ்வொரு சமூகமும் சீர்பெற்ற ஆரோக்கியமான சமூகமாக வேண்டும் எனில் பேரறிஞர் சொன்னதுபோல் தங்களின் வீடுகளில் இருந்துதான் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அரசின் சட்டங்களும் கட்டுப்பாடுகளும்

முகாம்களில் காவல் நிலையம் ஒரு காவல் அதிகாரி மற்றும் புலனாய்வு அதிகாரி என்ற மட்டத்தில் செயல்படும். தாசில்தார் மாதாந்திர தணிக்கையின் போது வருவார். வெளியே செல்லும்போதும் உள்ளே வரும்போதும் காவல் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த நடைமுறை தற்சமயம் தளர்த்தப்பட்டு எவ்வித ஜனநாயக தேர்தல் விதிமுறையின்றி அதிகாரிகளின் சைகைகளுக்கு கட்டுப்படுகின்ற விசுவாசமான ஒருவரை முகாம் தலைவராக அதிகாரிகளே கைகாட்டும் முகாம் தலைவரிடம் சொல்லி விட்டுச் சென்று வரலாம். இவைகள் எழுதப்படாத சட்டங்களாகவே இன்றும் தொடர்கிறது. 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அகதிகளுக்கு ஏற்றதாக இல்லை. குறிப்பாக தமிழ் அகதிகளுக்கு. 1955 அரசியல் அமைப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்ட போதும் தமிழ் அகதிகளுக்கான வாசல் அடைக்கப்பட்டே இருக்கிறது. 2019 ல் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம், மியான்மார் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது. ஆனால் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக உள்ள தமிழ் அகதிகளுக்கு அதில் எந்தவொரு வரியும் குறிப்பிடாது தவிர்த்திருக்கிறது. திருத்தப்பட்ட 1955 சட்டம் 21 ன் பிரிவு 1987 க்குப் பிறகு ஆவணங்கள் இன்றி வந்தவருக்கு குடியுரிமை மறுக்கிறது. தமிழ் அகதியானவர் இந்தியப் பிரஜையை திருமணம் செய்தாலும், அவர்களுக்கு பிறக்கும் இந்தியக் குழந்தைக்கும் இந்தியப் பிரஜாவுரிமையை மறுக்கிறது. ஆக எந்த வகையிலும் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்காமல் தவிர்க்கின்றனர். இந்திய அரசைப் பொறுத்தமட்டில் தமிழ் அகதிகள் சட்டவிரோதக் குடியேறிகள் என்றே வரையறுக்கிறார்கள். 

முடிவாக

ஐக்கிய நாடுகள் சாசனத்தில் அகதிகளாக வருபவர்கள் அவர்களது விருப்பத்திற்கு எதிராக அவர்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படாமல், அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, மத உரிமை போன்றவைகள் வழங்கப்பட வேண்டும் எனவும், 

அதேவேளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்ததற்காக அவர்களை தண்டிக்கக் கூடாது என்றும், அவர்கள் நாட்டிற்குள் சுதந்திரமாக வாழ விடவேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் அகதிகளுக்கான சாசனத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதைக் காரணமாக்கி தமிழ் அகதிகளை சட்டவிரோதக் குடியேறிகளாகவே இந்திய அரசு அணுகி வருகிறது. 

அகதிகளை தண்டிக்கப் பயன்படுகின்ற சட்டம் ஏன் வாழ்வதற்கு பயன்படாமல் போகிறது என்கிற புதிர் மட்டும் இன்னும் விளங்காத கேள்வியாகவே உள்ளது.

- சுகன்யா ஞானசூரி

19.02.2023.

(கனடாவில் இருந்து வெளிவரும் உள்ளம் சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை சனவரி-மார்ச் 2023 இதழ்)




Sunday, June 11, 2023

செயற்கை நுண்ணறிவு (AI)


 செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence)

- சுகன்யா ஞானசூரி.

உலகம் முழுவதும் இன்று உச்சரிக்கும் ஒற்றைச் சொல் "ஏய்" (AI). தமிழில் "ஏய்" என யாரையேனும் நாம் விழித்தால் சற்று பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். அப்படியாகத்தான் இந்த ஒற்றைச் சொல் பலதரப்பட்டவர்களிடம் பல்வேறு விளைவுகளையும், விவாதங்களையும் சமீக காலமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் வேகமான வளர்ச்சியில் சாட் ஜிபிடி (ChatGPT) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் படுபயங்கரமாக கோலோச்சிக் கொண்டிருக்கிறது. 

செயற்கை நுண்ணறிவுக்கான விதை அதாவது இதுகுறித்த விஞ்ஞானச் செயல்பாடு 1960ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது எலிசா (ELIZA) என்ற பெயரோடு இயங்கத் துவங்கியிருக்கிறது. பின்னர் இதனை அடியொற்றி அலைஸ் (ALICE) எனும் செய்கை நுண்ணறிவுச் இயங்குதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்பிறகு அமேசானின் அலெக்ஸா (Alexa) உலகமே அறிந்த ஒன்றுதான். 

இப்போது பல்வேறு நிறுவனங்களின் தொழில்நுட்ப முதலாளிகளின் சந்தைக்கான போட்டியை இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் திறந்திருக்கிறது என்பதே எதார்த்தம். இன்றைக்கு இதன் பயன்பாட்டின் தேவைகளை விடவும் அச்சுறுத்தும் விதமான தேவையற்ற செயல்பாடுகளை விரைவாக்கிக் கொண்டிருக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவும் இன்னொன்றைக் கண்டடைய வேண்டியிருக்கிறது. கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பல்வேறு ஒளிப்படம் எடுக்கும் கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்த போது அதைக்கொண்டு மார்பிங் செய்து பலரது வாழ்வைச் சீரழித்த, அல்லது பணம் பறிக்க தவறான வழியில் பயன்படுத்தப்பட்டது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டியிருக்கிறது. அப்படியாகவே இன்று இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு குறைபாடுகளோடு தவறான பயன்பாடுகளுக்கு துணை போகிறது. 

காலமாற்றத்தின் வளர்ச்சிப் போக்கில் தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. இத் தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு மனிதர்களின் வேலை வாய்ப்புகளையும் பறிக்கிறது. இனி வருங்காலங்களில் மருத்துவ உலகம் இதைக்காட்டிலும் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மேம்பாடடையும் என எதிர்பார்க்கலாம். இவற்றை எதிர்த்து வேலைவாய்ப்புகளை தக்கவைக்கவும் நாம் போராடித்தான் ஆகவேண்டும். 

நாம் பாதி வாழ்வைக் கடந்து விட்டோம். நம் குழந்தைகளுக்கு இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்த இருக்கும் சவால்களையும், அவற்றிற்கு ஈடுகொடுத்து  வாழ்வை வெற்றிகரமாக்க இப்போதே கற்றுக் கொடுக்கத் தயாராக வேண்டும். 

1960 களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டது என்றாலும் இதற்கு மூலமாக இருந்தது எழுத்தாளர்களின் தீராத புதிய வேட்கைதான். பல்வேறு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு யாரோ ஒரு கவிஞர், எழுத்தாளர் உதிர்த்துச் சென்ற சொற்களே காரணிகளாகி இருக்கின்றன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் அப்பலோனியஸ் ரோட்ஸ் எழுதிய காவியமும், கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள் தொகுப்பின் சிட்டி ஆஃப் ப்ரேஸ் எனும் கதையும் இன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்துவரக் காரணியாகி இருக்கிறது என்பதை உங்களால் நம்பமுடியவில்லைதானே? ஆனால் அதுதான் உண்மை. படைப்பாளிகள் ஒரு தீர்க்கரிசிகள்தான். 

கேரளாவில் இருந்து வெளியாகும் மனோரமாவின் குழந்தைகளுக்கான இதழில் செயற்கை நுண்ணறிவு குறித்து ஆரம்பம் முதல் தற்போது வரை பல்வேறு கேள்விகளுக்கு விடையளிப்பதோடு நல்லவிதமாக எடுத்தியம்புகிறது. தமிழில் உள்ளதா தெரியவில்லை. முழுக்க முழுக்க எளிமையான ஆங்கிலத்தில்தான் உள்ளது. பெரியவர்களாகிய நாமும் வாசிப்பது நல்லது. குழந்தைகளோடு உரையாடுவதற்கும், தொழில்நுட்பத்தின் சாதக பாதகங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும் இது உதவுகிறது. 

விலை: ₹45.

Sunday, June 4, 2023

அகதிகள் மறுவாழ்வு முகாமிலிருந்து ஒரு குரல் - சுகன்யா ஞானசூரி

 







அகதிகள் மறுவாழ்வு முகாமிலிருந்து ஒரு குரல் 

**********

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

- கணியன் பூங்குன்றனார் 

ஒரு உலகளாவிய ஒற்றுமைப்பாடு கொண்ட பரந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒருவரால்தான் இப்படியான ஒரு வார்த்தையைச் சொல்ல முடியும். அப்படி அவர் சொல்வதற்கு நிச்சயம் ஏதாவதுதொரு ஒடுக்குமுறைக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். இதுதான் உண்மையாகவும் இருக்கக்கூடும். இல்லையெனில் சாதாரணமாக ஏன் கணியன் பூங்குன்றனார் இந்த வார்த்தைகளை உதிர்க்க வேண்டும் சொல்லுங்கள்? சரி நாம் இதுகுறித்து இன்னொரு ஆய்வுக் கட்டுரையில் பேசுவோம். விசயத்திற்கு வருகிறேன்.

சமீபத்தில் வெளியாகியுள்ள "யாதும் ஊரே யாவரும் கேளிர்" திரைப்படத்தை ஒட்டிய கதைத் திருட்டு சர்ச்சைதான். அகதிகள் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் தோழர் பத்தினாதன் கதைகள் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்தப் பதிலும் கூறப்படவில்லை. குறைந்தபட்சம் ஒரு உரையாடலுக்கான கதவுகூட திறக்கப்படவில்லை. இது இன்று நேற்றல்ல கறுப்பு வெள்ளைக் காலம் தொட்டு கலர்க்கலரா ரீல் விடுகின்ற  இன்றைய காலம்வரை தொடரும் ஒரு சாபக்கேடு. 

அகதிகள் முகாம் அகம் புறம்: 

முதலில் நாம் பிற தேசத்து அகதிகளோடு தமிழ்நாட்டில் வதியும் ஈழ அகதிகளை ஒப்புமைப்படுத்திப் பார்க்கும் மோசமான நீசத்தனத்தை தூக்கிப்போட வேண்டும். இங்கே உள்ள அகதிகளிலும் திறந்தவெளிச் சிறச்சாலையான மக்கள் நெருக்கமாக வாழும் முகாம்களுக்கும், பிற போராளிக் குழுக்கள் வசிக்கும் சிறப்பு முகாமுக்கும், போதை மருந்துக் கடத்தல், ஹவாலாப் பணப் பரிமாற்றம், கடவுச்சீட்டு மோசடி என பல குற்றப்பின்னணியோடு அடைக்கப்பட்டிருக்கும் "சிறப்பு முகாம்" எனும் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்குமான வேறுபாட்டை யாரும் உணர்ந்துகொள்வதே இல்லை. அவர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் செய்தித்தாளில் மொட்டையாக அகதி என்ற சொல்லில் செய்தியை முடித்துக் கொள்வார்கள். இப்படியான மோசமான செய்திகள் நாளடைவில் இவர்கள்மீது எப்போதும் ஒரு குற்றப்பின்னணியோடு கூடிய பார்வையை பொதுப்பரப்பில் பிம்பக்கட்டமைப்புச் செய்துவிடுகிறது என்பதுதான் எதார்த்தம். 

அகதிகள் முகாம்களுக்குள் குடியுரிமையற்று நாற்பது ஆண்டுகளாக எந்தவித சுகத்தையும் அனுபவிக்க முடியாமல் மனம் குமைந்து எமக்கான ஒரு வெளிச்சம் கிடைக்காதா என்ற அங்கலாய்ப்பில் கல்வி கற்று மேலே வந்தால் படிப்புக்கேற்ற வேலை இல்லை. சரி இந்தப் படிப்புக்கு வேறு நாடுகளில் வாய்ப்பு கிடைத்தால் கடவுச்சீட்டு எடுக்க முடியாத மோசமான சூழலில் அரசு சட்டவிரோதக் குடியேறியாக முத்திரை குத்தி வைத்திருக்கிறது. இப்படியான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் கடந்த காலத்தில் சிலர் படகில் ஆஸ்திரேலியாவுக்கு கள்ளத்தனமாக பயணித்ததையும் நாம் நாகரீகமாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இங்கே எவ்வித தீர்வுக்கும் வழியற்று இருக்கையில் மாற்றுவழி என்ன என்பதை தேடுவது மனித இயல்பு. 

சட்டவிரோதக் குடியேறியாக நடுவண் அரசு எம்மை முத்திரை குத்தி வைத்திருக்கிறது. திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாக்களில்கூட எதிரியென சித்தரித்துக் கொண்ட அண்டை நாட்டின் அகதிகளுக்கெல்லாம் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஈழ அகதிகளுக்கு அங்கே இடமில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் சரத்துகளில் கைச்சாத்திடாத காரணத்தையே இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் தூக்கிச் சுமப்பார்களோ தெரியவில்லை. 

கோடம்பாக்கத்தின் அகதிகள் குறித்த சினிமாவுக்கான கச்சாப்பொருட்கள் சிறப்பு முகாம் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. ஏனெனில் இவர்கள் யாரும் சாதாரண மக்கள் வசிக்கும் முகாம்களுக்குள் அனுமதியின்றி செல்லவோ, உரையாடவோ வழியில்லை என்ற எதார்த்தத்தினை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். செய்தித்தாள்களில், சமூக ஊடகங்களில் வருகின்ற செய்திகளை வெட்டி ஒட்டி பல தமிழ் சினிமாக்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

எழுத்தாளர் பத்தினாதன்: 

2007 ல் போரின் மறுபக்கம் தன்வரலாற்று நூல் வாயிலாக தமிழகத்தின் அகதிகள் பாடுகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர். பிறகு தமிழகத்தின் ஈழ அகதிகள் வரலாறு, தகிப்பின் வாழ்வு, சமீபத்தில் வெளியான அந்தரம் நாவல் மூலம் அகதிகள் முகாம்கள் குறித்த குறுக்குவெட்டுத் தோற்றத்தினை வெளியுலகு அறியச் செய்தவர். அவரது நூல்களை மேற்கோள் காட்டி சில தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. தெம்மாடுகள் நாவல் மூலம் உதயனும், ஏதிலி நாவல் மூலம் அ.சி.விஜிதரனும் எம் வாழ்வு குறித்து எழுதியவர்கள். ஆரம்பகட்டத்தில் புலனாய்வுத்துறையினரின் விசாரணைகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் கவிதை எனும் கருவி மூலம் சிவா.மகேந்திரன், ஈழபாரதி, நடராஜா சரவணன், அ.சி.விஜிதரன், சுகன்யா ஞானசூரி போன்றவர்களோடு இன்றும் புதிய இளையவர்கள் எம் வாழ்வை வெளியுலகத்திற்கு படம்பிடித்துக் காட்டுகிறார்கள். இப்படியான அவலப்பாடுகளோடு மேலெழுந்து வரும் மக்களைத்தான் தமிழ்ச் சினிமா மிக மோசமாக சித்தரித்து வருகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் சர்ச்சை

தோழர் பத்தினாதனின் கதைகளின் காட்சியமைப்புகள் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பத்தினாதன் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு படக்குழுவினர் இன்னமும் பதிலளிக்கவில்லை. இதுகுறித்து ஒரு திறந்த உரையாடலுக்கு பத்தினாதன் அழைப்பு விடுத்தபோதும் அதை அவர்கள் புறக்கணித்து அவரது முகநூல் கணக்கை முடக்கச் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது சென்னைவரை வரவைத்து அலைக்கழிப்பு செய்திருக்கின்றனர். இதுதான் பொதுவுடைமை கொள்கையாளன் என தன்னை கூறிக்கொள்ளும் இயக்குநருக்கு அழகா? ஒட்டுமொத்தமாக நான் யாரையும் குறைகூறமாட்டேன். முதலாளித்துவத்தை, ஏகபோகத்துவத்தை சமன்படுத்தி எல்லோருக்கும் எல்லாமும் சம அளவில் கிடைக்கச் செய்வதுதானே பொதுவுடைமை? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதுதானே பொதுவுடைமை? சமீபகாலமாமா பொதுவுடைமையின் பெயரால் உழைப்புச் சுரண்டல், நிறுவனங்களின் சொத்துக்களை அபகரித்தல் என ஏகபோக முதலாளிகளாக முயற்சித்து அம்பலப்பட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் இப்படத்தின் இயக்குநரும் இருக்கிறாரா?  எல்லோருக்கும் வயிறு என்ற ஒன்று இருக்கிறதுதானே? 

படம் முன்வைக்கும் அரசியல்

 அகதிகள் குறித்து அபத்தமான காட்சிகளை இப்படத்தில் வைத்திருப்பதன் வாயிலாக அகதிகள் மீது மேலும் மேலும் களங்கம் கற்பிக்க நினைக்கிறார்கள். நிறவாதம் இங்கே தலைவிரித்து ஆடத்துவங்குகிறது. இனவாதத்தால் அழிந்து பட்ட சமூகம் நிறவாதத்தின் துணைக்கோடலோடு சாதிய மேட்டிமைகளை மீட்டுருவாக்கம் செய்ய முற்படுகிறது. மேலும் நாயக பிம்பக் கட்டமைப்புச் சினிமாவில் நாம் எம் வாழ்வு குறித்த எதார்த்தத்தை எதிர்பாக்க முடியாது. இதில் தமிழகத்தில் உள்ள அகதி நாயகன் வெளிநாட்டுக்கு எப்படிச் சென்றார்? அதற்கான சாத்தியக்கூறுகள் இந்திய வெளியுறவுக் கொள்கையில் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறதா? அதற்கான வாய்ப்புகள் இருப்பின் ஏன் கடல்வழியாக கள்ளத்தனமாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அகதிகள் புலம்பெயரப்போகிறார்கள்? இவை எல்லாவற்றிற்கும் மேலாக வெளிநாடு சென்ற  நாயகன் இலங்கையில் சர்வசன வாக்குரிமை நடாத்தக் கோருவது சுத்த அபத்தம். தமிழகத்தில் உள்ள அகதிகளின் குடியுரிமை குறித்தல்லவா அவர் கோரிக்கை வைத்திருக்க வேண்டும்? இங்கே நாற்பது ஆண்டுகளாக வசிக்கும் மக்களில் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி அவரிடம் கேள்வி கேட்டுப் பாருங்கள் எது எமக்கு அவசியமானது என்பதை பொட்டில் அடித்ததுபோல் சொல்லியிருப்பார். ஆகவே இது என்ஜிஓ (NGO) ஒன்றின் அரசியல் லாபியாகவே  தெரிகிறது.

நீண்டகாலமாக எம் மக்களின் அரசியல் பிரதிநிதிகளென தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டு செயல்பட்டுவரும் ஒரு தொண்டு நிறுவனத்தின் பிரச்சார ஊதுகுழலாக இத்திரைப்படம் தன் அரசியலை முன்வைக்கிறது. இது இங்குள்ள அகதிகளை மீளவும் நாடு திரும்ப வைக்கும் தமிழ்தேசிய படுகுழி அரசியலை முன்வைக்கிறது. இத்திரைப்படப் படப்பிடிப்பில் அத்தொண்டு நிறுவனமும் சில உதவிகளைச் செய்திருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போதைக்கு எல்லோருக்குமான அரசியல் துருப்புச் சீட்டாக தமிழகத்தின் ஈழ அகதிகள் இருக்கிறார்கள். முன்னர் இருந்தது போலவே இப்போதும் ஏமாளிகளாக இருக்கிறார்கள் என்ற எண்ணங்களை அனைவரும் கைவிடவேண்டும். ஏனெனில் கடந்த பத்தாண்டுகளில் எல்லா அரசியல் போக்குகளையும் புரிந்துகொண்டே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். படைப்பாளிகளும் உருவாகி வருகிறார்கள்.

தீர்வு:

ஒரு படத்தின் எட்டுக் காட்சியமைப்புகள் குற்றம் சாட்டுபவரின் படைப்புகளோடு ஒத்துப் போகும் எனில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வழியிருப்பதாக சட்டம் சொல்கிறது. படைப்பையும் படத்தையும் வரிக்கு வரி காட்சிக்குக் காட்சி படித்துப் பார்த்து பக்கம் பக்கமாக அறிக்கை தாக்கல் செய்து ஆண்டுக்கணக்காக காத்திருந்தாலும் நிவாரணம் என்பது கிடைக்காது என்பதே நாம் கடந்து வந்த பாதைகள் சொல்லும் செய்தி. விசாரணையின் கரங்கள் எம் குரல்வளையை நசுக்கவே எத்தனிக்கும். குறைந்தபட்சம் இப்படியான அநீதிகள் நடைபெறுகிறது என்பதை பொதுவெளியில் வைப்பது என்பதே எமது போராட்டமாகிறது.

நிறைவாக

மீண்டும் மீண்டும் நாம் சொல்வதுதான் தமிழகத்தின் ஈழ அகதிகள் விடையம் இன்னும் எம் படைப்புகளில்கூட முழுமையாக சொல்லப்படவில்லை. ஒரே இனம், ஒரே மொழி பேசினாலும் இந்த நிலத்தில் எம் வாழ்வின் சிக்கலான கூறுகள் இன்னமும் நீடித்திருக்கிறது. அப்படி இருக்கையில் ஆளாளுக்கு ஒரு கதையை அகதிகள் கதையென கோடம்பாக்கத்தில் தூக்கிக்கொண்டு வந்தால் நேரடியாக முகாம்களுக்குள் வந்து களநிலவரம் தெரிந்து பேசுங்கள், படம் எடுங்கள். அதைவிடுத்து எம்மை குற்றப்பரம்பரைகள் ஆக்காதீர்கள் என்பதை கனிவோடு வேண்டிக் கொள்கிறோம். நாம் இப்போது எதிர்பார்த்திருப்பது எமக்கான ஒரு குடியுரிமை பெற்ற சுதந்திரமான வாழ்வை மட்டுமே. நாடற்று நாதியற்று இருக்கும் எமக்கு இப்போதைக்கு  எல்லாமே யாதும் ஊரே யாவரும் கேளிர்.

அகதிகள் மறுவாழ்வு முகாமிலிருந்து 

சுகன்யா ஞானசூரி.

04/06/2023



Friday, May 12, 2023

சாத்தான்களின் அந்தப்புரம்

 சாத்தான்களின் அந்தப்புரம் 



நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதைப் பிரதியினை வாசித்துக் கொண்டிருந்தேன். சற்று ஓய்வறைக்குச் சென்று திரும்புகையில் மனைவி வாசித்துக் கொண்டிருந்தார். ஆச்சரியம் மேலிட சில கவிதைகளை அவரை வாசிக்கச் சொன்னேன். தன்னியல்பாக வரி பிரித்து வாசித்ததைக் கேட்டதும் எனக்கு வியப்பாகவே இருந்தது. அன்பாக முத்தங்களை வழங்கிவிட்டு தொகுப்பை மேலும் வாசித்து முடித்தேன். கிட்டத்தட்ட அத்தொகுப்பு வெளிவந்து பத்தாண்டு ஆகப்போகிறது. ஒரு தொகுப்பு ஒரு தசாப்தத்திற்குப் பிறகும் வாசிப்பவருக்கு புதிய அனுபவங்களையும், அதிர்வுகளையும் வழங்கும் எனில் அது சிறந்த படைப்பாகிறது. அத்தகைய படைப்பில் இத்தொகுப்பும் ஒன்று என்றால் மிகையாகாது.


\\உங்கள் நிர்வாணத்தை 

ஒன்றுமில்லாமல் செய்யத் துணிந்த நாட்களில்தான் 

நீங்கள் எங்களை ஒன்றுமில்லாதபடிக்கு 

தள்ளிவைத்து தெய்வமாக்கினீர்கள்//


தாய்வழிச் சமூகத்தை புறந்தள்ளி ஆண்வழிச் சமூகமாக ஆதிக்கம் பெற்ற மேட்டிமைத் தனத்தை, பெண் உழைப்பின் மீதான சுரண்டலை பகடி செய்யும் சிறந்த கவிதை. 


பெண் ஒடுக்குமுறை, பெண் உடல்மீதான அத்துமீறல் என சமூகத்தின் அழுத்தப்படுகள் ஒருபுறம் எனில் வீட்டில் கணவனால், உறவுகளால் ஏற்படும் அழுத்தப்பாடுகள் மறுபுறம் என நைந்துகிடக்கும் மனம் கவிதையாகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது. 


இலகுவான சொற்களும், நல்ல முதிர்ச்சியான சொற்பிரயோகமும் இத்தொகுப்பை சிறப்புறச் செய்கிறது. இவர் பொதுவுடைமை சிந்தாந்தத்தில் ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறார் என்பதையும் அறியமுடிவதால் சமூகம் குறித்த அதிலும் சமூகத்தில் பெண்களின் இடம் குறித்த கவனப்படுத்தலை கவிதைகளின் வாயிலாக நம்மோடு உரையாடுகிறார்.

அப்படித்தான் நான் பார்க்கிறேன். 


ஆண் × பெண் ஆண் × ஆண் பெண் × பெண் பெண் × ஆண் என இருமை கொண்ட பழைய வாசிப்பை விலக்கி தனிமனிதர் × பொதுமனிதர் எனும் பார்வையில் வாசிக்கையில் புதிய பார்வைகள் புலப்படுகிறது. திறக்கப்படும் உடல் மற்றும் அண்டங்களின் சக்கரவர்த்தி என்ற கவிதைகள் இதற்குச் சிறந்த சான்றாக அமைகின்றன. திணிப்பு எனும் கவிதை நுகர்வுக் கலாச்சாரத்தை திணிக்கும் விளம்பரங்களை தோலுரிக்கிறது. 


மேலோட்டமாக வாசிப்பவர் கண்களுக்கு இத்தொகுப்பு கணவன் மனைவியின் அல்லது ஒரு ஆண் பெண் ஊடல் மற்றும் கூடல் என்பதாகமட்டுமே தெரியுமெனில் அது அவர்களின் வாசிப்பின் போதாமையாக மட்டுமே கொள்ளப்படும். உடலரசியலின் நுண்ணரசியல் சதிராட்டங்களை சாவதானமாக கவிதையாக்கித் தந்துள்ளார் தோழர் தேவி எனும் நறுமுகை தேவி அவர்கள். 


இது ஒரு புது எழுத்து வெளியீடு.


- சுகன்யா ஞானசூரி

12.05.2023.



Tuesday, March 28, 2023

மரணத்தின் வாசனையும் அது தரும் வாதையும்

மரணத்தின் வாசனையும் அது தரும் வாதையும்.

- சுகன்யா ஞானசூரி



கடல் யாரோ ஒருவரின் துயரத்தை உள்வாங்கி கரையில் மோதித் தெறிக்கிறது என்ற த. அகிலனின் சிறுகதையில் உள்ள வரிகள் அவ்வளவு எளிதாகக் கடந்துவிடும் ஒன்றல்ல. 

நீர் தன் இருப்பிடத்திற்கேற்ப்ப தன் வடிவத்தைக் காட்டுவதைப் போலவே இங்கு மரணம் தன் அரூப வாசத்தை நுகரச் செய்கிறது. யுத்த வாதைகளில் இனியும் சப்பிப் போட எதுவும் இல்லாதபடிக்கு புதிய புதிய விமானங்களின் குண்டுவீச்சுகள், வித விதமான எறிகணைகள் என பலதரப்பட்ட முதலாளிய வர்க்கங்களின் ஆடம்பரப் பசிக்கு எளிய உணவாகிப் போனதென்னவோ சனங்கள், விலங்குகள், புல் பூண்டு தாவரங்கள் என சகலமும் மரணத்தின் வாசனையை நுகர முடியாமல் எனது பன்னிரண்டாவது வயதில் வெளியேறினேன் என்பதை விடவும் வெளியேற்றப்பட்டேன் என்பதே பொருத்தமாகும். 

1995 வரையில் வன்னி நிலம் எத்தகையது என்பதை நான் அறியவில்லை. அந்த ஆண்டின் பாரிய இடப்பெயர்வான யாழ் வெளியேற்றம் (1990 களில் முதல் யாழ் வெளியேற்றம் எம் சகோதரர்களுக்கு நடந்த பிறகான சில ஆண்டுகளில்) பூநகரிக்கும் ஆனையிறவுக்கும் நடுவே கிளாலி நீரேரி வழியாக வன்னி நிலத்தில் கால்பதிக்க வைத்தது. பெரு வனங்களும் பெரு வெளிகளுமாக அச்சம் தருவதாக இருந்தாலும் புதிய அனுபவமாக இருந்தது அப்போது. அது சிறுவர்களுக்கே உரிய மனம். கிளிநொச்சி, மாங்குளம், கனகராயன்குளம், கொல்லர் புளியங்குளம், மல்லாவி, வலைப்பாடு இப்படியாக 1996 செப்டம்பர் வரையிலான காலகட்டத்துக்குள் எத்தனை இடப்பெயர்வு. மலேரியா, நெருப்புக் காய்ச்சல், பாம்புகளோடு உறக்கம், காட்டுப் பன்றிகள் தொல்லை இப்படி நிறைய நிறையவே புதிய அனுபவங்களை வன்னி மண் தந்திருந்ததை த. அகிலனின் "மரணத்தின் வாசனை" சிறுகதைகள் தொகுப்பு மீண்டுமொரு நினைவுப் பயணத்திற்குள் என்னை அழைத்துச் சென்றன என்றால் மிகையாகாது. 

எம்.ரி 90 வண்டிகள் இப்போது (யப்பான் கோண்டா தயாரிப்பு) ஹீரோ கோண்டா ஆகிடுச்சு என்ற வரிகளை வாசிக்கையில் மலேரியா காய்ச்சல் கண்ட அப்பாவை கொல்லர் புளியங்குளம் முகாமிலிருந்து மாங்குளம் சந்தி பெரிய ஆஸ்பத்திரிக்கு அப்பாவின் எம்.ரி 90 மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற நினைவுகளை மீட்டிச் சென்றது. 

போர் தின்ற சனங்களிடம் சொல்வதற்கு நிறைய நிறைய கதைகள் இருக்கிறது. இவைகளை ஒருபோதும் இலக்கியமாக யாரும் ஏற்பது இல்லை. இட்டுக்கட்டிய புனைவுகளையே போரிலக்கியம் என்று கூவிக் கூவி விற்கும் விற்பன்னர்களையே இன்றைய நவீன உலகம் அலங்கரித்து வருகிறது. 

அகிலனின் கதைகளுக்குள் இந்திய இராணுவத்தின் அடாவடியால் பாம்பு கடித்து மருத்துவமனை கொண்டு செல்ல முடியாமல் இறக்கும் அப்பா, ஊரைப் பிரிந்து இடம்பெயர்ந்து திரும்பி வருகையில் சிதறுண்ட கற்குவியலாய் இருக்கும் கோயிலை காணச் சகியாத அம்மம்மாவின் இறப்பு, காதல் நிறைவேறாத சித்தியின் இறப்பு, ஒருதலைக் காதலியான காயத்திரியின் இறப்பு, பள்ளி நண்பனின் இறப்பு, தெரியாத போராளி  ஒருவரின் மரணம் இப்படி பல்வேறு மரணங்களை தன் கதைகளுக்குள் உயிரோட்டமாக்கித் தந்துள்ளார். அத்தனை இறப்புகளுக்கும் போரும், போர்க்கருவிகளும், ஆக்கிரமிப்பாளர்களும், இடப்பெயர்வுகளும் காரண காரியங்களாகி நிற்பதை யாரும் நம்புவதேயில்லை. விதியின் மீது பழி போட்டு கடந்துவிடுவது எளிதாகி விடுகிறது. எளிய மனிதர்களால் அதைத்தவிர வேறென்ன செய்துவிட முடியும்? 

சில கதைகள் தேவைக்கு அதிகமாக நீண்டு செல்வதும், ஒரே லயத்தில் சொல்லல் முறை இருப்பது சுணக்கத்தை ஏற்படுத்தினாலும் அத்தனை கதைகளும் சிறு திருப்பங்களோடு மையக் கருவை சரியாக வந்தடைகின்றன. இதுவே எழுத்தின் வெற்றியுமாகும். 

அலைகளின் மீதலைதல் எனும் எனது முதல் கவிதைத் தொகுப்பில் "கடல் மீது/ கால் நனைப்பதாய்/ மறந்தும் மிதித்து விடாதீர்கள்/கரைதேடி அலைகளின் மீதலைகிறது /அவர்களின் ஆன்மாக்கள் என எழுதியிருப்பேன். அது என் கண்முன்னால் மூழ்கடிக்கப்பட்ட படகில் இறந்துபோனவர்களுக்காக எழுதியவை. இப்போதும் அந்த நாட்களை நினைத்தால் நெஞ்சம் பதறவே செய்கிறது. கரையென நம்பி மணல் திட்டுக்களில் இறக்கிவிட்ட படகோட்டிகளும், மணல்திட்டில் மூழ்கி இறந்து போனவர்களும் தப்பிப் பிழைத்தவர்களும் என ஒரு பெருங் கூட்டமாகவே 1996களில் தனுஷ்கோடி கரைகளில் கால் பதித்தோம். தாயையும் சகோதரிகளையும் காப்பாற்றிவிடும் எத்தனத்தில் கானல் நீர் முகத்துவாரத்தில் மூழ்கிச் சாவெய்துபவனின் கரம்பற்ற இயலாமல்போன குறுகுறுப்பை "கரைகளுக்கு" என்ற சிறுகதை புலப்பெயர்வின் விடியலை வைகறைக்குள் புதைத்துச் செல்லும் கதை. 

மொத்தம் 12 சிறுகதைகள். ஒவ்வொன்றும் விதவிதமான மரணத்தின் வாசனையை சாம்பிராணிப் புகையாட்டம் திணறச் செய்கிறது. அதன் வாதைகளிலிருந்து தப்பித்தால் நீங்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவீர்கள். 


நூல்: மரணத்தின் வாசனை

ஆசிரியர்: த. அகிலன் 

வெளியீடு: வடலி 

விலை: ₹160.

Monday, March 20, 2023

கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம்


 

"அந்தரம்" கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம்.

- சுகன்யா ஞானசூரி.


அம்மா என்கிற அதிகாரத்திடம் அழுது பால் குடித்தபடியால் வேடிக்கை பார்ப்பதற்கான சத்து இன்னும் இந்த உடம்பில் இருக்கிறது.


ஒரு சாமான்ய மனித வாழ்வின் அலைக்கழிப்பு என்பது அவனது/ளது சொந்த தேசத்தில் நடப்பதாக இருப்பின் ஏதோவொரு வகையில் தீர்வை எட்டிவிடும் அல்லது குறைந்தபட்சம் சமரசத்திற்குள்ளாவது கொண்டுவரப்படும். இவை இரண்டுக்குள்ளும் அடக்க முடியாத ஆற்றாமையின் வெளிப்பாடு சொந்த தேசத்தில் இல்லாமல் அந்நிய நிலமொன்றில் அந்தரித்து நிற்கும் தமிழ் அகதிகளின் வாழ்வே அந்தரம். 


என்னால் உரைநடையில் சொல்ல முடியாமலே இருந்த என் அந்தரத்தை கவிதை எனும் வடிவம் கொண்டு வெளிக்கொண்டு வந்தேன். இது ஒரு வகையான அதிகாரத்தின் அடக்குமுறைக்கு கீழ்படியும் செயல் என்பதைக் காட்டிலும் தப்பித்தல் என்றே சொல்லவேண்டும். எது எப்படி இருந்தாலும் இவ்வளவு வெளிப்படையாக தயக்கமின்றி கால் நூற்றாண்டு தமிழர்களின் அகதி வாழ்வை ஒரு தன்வரலாற்றுப் புதினமாக்கி வழங்கியுள்ளார் தோழர் தொ. பத்திநாதன். 


இத்தனை ஆண்டுகால அகதி வாழ்வில் என்ன வகையான சொத்துக்களை சேர்க்க முடிந்தது? ஆடம்பரம் சுகபோக வாழ்க்கை? ஒருவேளை உணவைத்தானும் கடன்காரர் ஆக்கினை இன்றி உண்ண முடிந்ததா? படித்த படிப்பிற்கேற்ற வேலை? வேலைக்கேற்ற ஊதியம்? ஒருமுறையாவது அதிகாரிகளிடம் இழந்துபோகாத தன்மானம்? எந்த ஒன்றிற்கும் அகதியால் பதில் சொல்லிவிட முடியாதபடிக்கு இந்த வாழ்க்கை தொலைக்கப்பட்டு விட்டது என்பதை விடவும் தமிழ் அகதிகள் தமிழ் அதிகாரிகளின் சப்பாத்துக்களின் கீழ் நசுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே முரண் நகையானது. 



பெண்மையை, பெண் சுதந்திரத்தைப் பேசாத எந்தவொரு படைப்பும் அத்துணை கலைத்தன்மை கொண்டதாக அமைந்துவிடாது. சாந்தி எனும் மையப் பாத்திரத்தின் நகர்வினூடாக பல்வேறுபட்ட முகாம் பெண்களையும் முகாம்களை ஒட்டியுள்ள ஊர்ப் பெண்களையும் அவர்களின் பார்வையில் முகாம் எனும் திறந்தவெளிச் சிறைச்சாலையின் பன்முகப் பார்வைகளை அவதானமாக கையாண்டுள்ளார். கரணம் தப்பினால் மரணம் என்ற வார்த்தையைப் போலத்தான் இருபக்கமும் கூர்மையுள்ள கத்தியின் மீது நடப்பதைப் போன்ற பதற்றமே அந்தரத்தினை வாசித்து முடிக்கும்வரை. 


இருபக்க உறவுகளுக்குள்ளும் பார்வைக் கோணல்கள் இருக்கிறது. அது சமய சந்தர்ப்பம் பார்த்து வெளிப்பட்டும் இருக்கிறது. இப்போதும் வெளிப்பட்டவண்ணம் இருப்பதையும் மறுக்க முடியாது. ராஜீவ்காந்தி கொலைக்கு முன் ராஜீவ்காந்தி கொலைக்குப் பின் என தமிழகத்தில் ஈழ அகதிகள் வரையறுத்துப் பார்க்கப்படுவதும் கண்கூடு. இன்றைக்கு எவரும் இல்லை ஆனால் அவலங்களைச் சுமப்பது என்னவோ சாமான்ய அகதிகள்தான். நரம்பில்லாத நாவுக்குத்தான் எத்தனை தடித்த சொற்களை வீசி எறிகிறது எளிதில். அது மனதில் ஆறாது அந்தரித்து நிற்கிறது மனம் நொந்தபடி. 


சாதி சமயம் இரண்டும் மனிதர்களை எந்த எல்லைக்கும் அழைத்துச் செல்லும். அதுபோல் வஸ்துகளின் பழக்கவழக்கங்களும், கொலைக் குற்றங்களும்,  முகாம் தலைவர் எனும் போதையும் அதிகாரிகளிடம் சொந்த மக்களையே காட்டிக்கொடுக்கும் கேவலமான செயலையும் செய்யத் தயங்காது என்பதை கந்தசாமி, முருகானந்தம் மாந்தர்கள் வழி எடுத்தியம்பிள்ளார். அதேபோல் கல்வியின் பெயரால் தொண்டு நிறுவனங்களும், மத நிறுவனங்களும் செய்த செய்கின்ற மோசடிகளும் கொஞ்சநஞ்சமல்ல. அகதிகளின் பெயரால் அவர்கள் பரலோகத்தில் நித்தியமடைவார்களாக ஆமென். 


அந்தரம் புதினத்தில் கதைசொல்லியாக பத்திநாதனே பயணிக்கிறார். தான் பார்த்த காட்சிகளை, தான் வாழ்ந்த வாழ்வை அவர் சொல்லிச் செல்வதைப் போலவே அமைத்துள்ளார். இங்கே ஜிகினா வேலைகளுக்கு இடமின்றி உள்ளதை உள்ளபடியே சொல்லியிருப்பதால் சக அகதியாக அவருக்கு என் ராயல் சல்யூட். மற்றபடி பெயர் மாற்றங்களும், கட்டிட மாற்றங்களும் நிகழ்ந்துவிடுவதால் மட்டும் எதுவும் உடனடியாக மாறிவிடாது. அதிகார வர்க்கத்தின் புலனாய்வு முற்றாக நீக்கப்பட்டு சுதந்திரமான வாழ்க்கை வழங்கப்பட்டால் மட்டுமே அந்தரித்து நிற்கும் மனங்களில் ஆறுதல் ஏற்படும். 


அவர் மன்னாரில் நின்றுகொண்டு கடந்துவந்த இந்த வாழ்வை வேடிக்கை பார்க்கிறார். நான் உள்ளுக்குள் இருந்துகொண்டே வாசித்து நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன்.


"அந்தரம்" தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகளின் கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் ஒரு காட்சிப் படம். 


ஆசிரியர்: தொ. பத்திநாதன் 

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

விலை: ₹250.