Showing posts with label சென்ரியு. Show all posts
Showing posts with label சென்ரியு. Show all posts

Monday, March 20, 2023

கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம்


 

"அந்தரம்" கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம்.

- சுகன்யா ஞானசூரி.


அம்மா என்கிற அதிகாரத்திடம் அழுது பால் குடித்தபடியால் வேடிக்கை பார்ப்பதற்கான சத்து இன்னும் இந்த உடம்பில் இருக்கிறது.


ஒரு சாமான்ய மனித வாழ்வின் அலைக்கழிப்பு என்பது அவனது/ளது சொந்த தேசத்தில் நடப்பதாக இருப்பின் ஏதோவொரு வகையில் தீர்வை எட்டிவிடும் அல்லது குறைந்தபட்சம் சமரசத்திற்குள்ளாவது கொண்டுவரப்படும். இவை இரண்டுக்குள்ளும் அடக்க முடியாத ஆற்றாமையின் வெளிப்பாடு சொந்த தேசத்தில் இல்லாமல் அந்நிய நிலமொன்றில் அந்தரித்து நிற்கும் தமிழ் அகதிகளின் வாழ்வே அந்தரம். 


என்னால் உரைநடையில் சொல்ல முடியாமலே இருந்த என் அந்தரத்தை கவிதை எனும் வடிவம் கொண்டு வெளிக்கொண்டு வந்தேன். இது ஒரு வகையான அதிகாரத்தின் அடக்குமுறைக்கு கீழ்படியும் செயல் என்பதைக் காட்டிலும் தப்பித்தல் என்றே சொல்லவேண்டும். எது எப்படி இருந்தாலும் இவ்வளவு வெளிப்படையாக தயக்கமின்றி கால் நூற்றாண்டு தமிழர்களின் அகதி வாழ்வை ஒரு தன்வரலாற்றுப் புதினமாக்கி வழங்கியுள்ளார் தோழர் தொ. பத்திநாதன். 


இத்தனை ஆண்டுகால அகதி வாழ்வில் என்ன வகையான சொத்துக்களை சேர்க்க முடிந்தது? ஆடம்பரம் சுகபோக வாழ்க்கை? ஒருவேளை உணவைத்தானும் கடன்காரர் ஆக்கினை இன்றி உண்ண முடிந்ததா? படித்த படிப்பிற்கேற்ற வேலை? வேலைக்கேற்ற ஊதியம்? ஒருமுறையாவது அதிகாரிகளிடம் இழந்துபோகாத தன்மானம்? எந்த ஒன்றிற்கும் அகதியால் பதில் சொல்லிவிட முடியாதபடிக்கு இந்த வாழ்க்கை தொலைக்கப்பட்டு விட்டது என்பதை விடவும் தமிழ் அகதிகள் தமிழ் அதிகாரிகளின் சப்பாத்துக்களின் கீழ் நசுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே முரண் நகையானது. 



பெண்மையை, பெண் சுதந்திரத்தைப் பேசாத எந்தவொரு படைப்பும் அத்துணை கலைத்தன்மை கொண்டதாக அமைந்துவிடாது. சாந்தி எனும் மையப் பாத்திரத்தின் நகர்வினூடாக பல்வேறுபட்ட முகாம் பெண்களையும் முகாம்களை ஒட்டியுள்ள ஊர்ப் பெண்களையும் அவர்களின் பார்வையில் முகாம் எனும் திறந்தவெளிச் சிறைச்சாலையின் பன்முகப் பார்வைகளை அவதானமாக கையாண்டுள்ளார். கரணம் தப்பினால் மரணம் என்ற வார்த்தையைப் போலத்தான் இருபக்கமும் கூர்மையுள்ள கத்தியின் மீது நடப்பதைப் போன்ற பதற்றமே அந்தரத்தினை வாசித்து முடிக்கும்வரை. 


இருபக்க உறவுகளுக்குள்ளும் பார்வைக் கோணல்கள் இருக்கிறது. அது சமய சந்தர்ப்பம் பார்த்து வெளிப்பட்டும் இருக்கிறது. இப்போதும் வெளிப்பட்டவண்ணம் இருப்பதையும் மறுக்க முடியாது. ராஜீவ்காந்தி கொலைக்கு முன் ராஜீவ்காந்தி கொலைக்குப் பின் என தமிழகத்தில் ஈழ அகதிகள் வரையறுத்துப் பார்க்கப்படுவதும் கண்கூடு. இன்றைக்கு எவரும் இல்லை ஆனால் அவலங்களைச் சுமப்பது என்னவோ சாமான்ய அகதிகள்தான். நரம்பில்லாத நாவுக்குத்தான் எத்தனை தடித்த சொற்களை வீசி எறிகிறது எளிதில். அது மனதில் ஆறாது அந்தரித்து நிற்கிறது மனம் நொந்தபடி. 


சாதி சமயம் இரண்டும் மனிதர்களை எந்த எல்லைக்கும் அழைத்துச் செல்லும். அதுபோல் வஸ்துகளின் பழக்கவழக்கங்களும், கொலைக் குற்றங்களும்,  முகாம் தலைவர் எனும் போதையும் அதிகாரிகளிடம் சொந்த மக்களையே காட்டிக்கொடுக்கும் கேவலமான செயலையும் செய்யத் தயங்காது என்பதை கந்தசாமி, முருகானந்தம் மாந்தர்கள் வழி எடுத்தியம்பிள்ளார். அதேபோல் கல்வியின் பெயரால் தொண்டு நிறுவனங்களும், மத நிறுவனங்களும் செய்த செய்கின்ற மோசடிகளும் கொஞ்சநஞ்சமல்ல. அகதிகளின் பெயரால் அவர்கள் பரலோகத்தில் நித்தியமடைவார்களாக ஆமென். 


அந்தரம் புதினத்தில் கதைசொல்லியாக பத்திநாதனே பயணிக்கிறார். தான் பார்த்த காட்சிகளை, தான் வாழ்ந்த வாழ்வை அவர் சொல்லிச் செல்வதைப் போலவே அமைத்துள்ளார். இங்கே ஜிகினா வேலைகளுக்கு இடமின்றி உள்ளதை உள்ளபடியே சொல்லியிருப்பதால் சக அகதியாக அவருக்கு என் ராயல் சல்யூட். மற்றபடி பெயர் மாற்றங்களும், கட்டிட மாற்றங்களும் நிகழ்ந்துவிடுவதால் மட்டும் எதுவும் உடனடியாக மாறிவிடாது. அதிகார வர்க்கத்தின் புலனாய்வு முற்றாக நீக்கப்பட்டு சுதந்திரமான வாழ்க்கை வழங்கப்பட்டால் மட்டுமே அந்தரித்து நிற்கும் மனங்களில் ஆறுதல் ஏற்படும். 


அவர் மன்னாரில் நின்றுகொண்டு கடந்துவந்த இந்த வாழ்வை வேடிக்கை பார்க்கிறார். நான் உள்ளுக்குள் இருந்துகொண்டே வாசித்து நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன்.


"அந்தரம்" தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகளின் கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் ஒரு காட்சிப் படம். 


ஆசிரியர்: தொ. பத்திநாதன் 

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

விலை: ₹250.

Friday, January 15, 2016

துளித் துளியாய்....


@
யாருமற்ற கானகத்தில்
பிரசவம்
துளிர்க்கும் விதைகள்!

@
நீர் நிலையெங்கும்
நீராடும் தேவதை
நிலா!

@
தகிக்கும் வெப்பம்
குளிக்க முடியவில்லை
கானல் நீர்!

@
வண்ணமோ கருமை
எண்ணமோ மேன்மை
கரைந்துண்ணும் காக்கை!

@
திட்டமிட்ட வாழ்வு
உணர்த்திச் செல்கிறது
குளிர்கால எறும்பு!

@
சுமையெனக் கருதாது
மகிழ்வோடு
பனியைத் தாங்கும் புற்கள்!

@
இரத்தம் தோய்ந்த நாப்கின்
பக்குவமாய் வீசுகிறாள்
செவிலி!

@
என்ன சொல்லியிருக்கும் நதி?
வெட்கித்து நிற்கின்றன
கரையோர நாணல்!
@
புகழ்ந்தபடி செல்கின்றனவோ நதிகள்?
தலை சாய்ந்தவண்ணம் வெட்கத்தில்
கரையோர நாணல்!
- சுகன்யா ஞானசூரி.

Sunday, October 25, 2015

ஹைக்கூக்கள்


#அடர்வன இருள்
கொஞ்சம் வெளிச்சம்
மின்மினிகள்!

#சாதிகள் பார்க்காது
வேலிகள் தாண்டும்
காற்றும் காதலும்!

#பறக்கத் தவிக்கிறது
காற்றில் அசையும் உதிர்ந்த
இறகு!

#அடுக்ககக் கட்டிடத்தின் எழுச்சி
அழுது சரிகிறது
மலைகள்!

#அரிதாரம் பூசிய அழகி
அழகாய்ப் பறக்கிறாள்
வண்ணத்துப் பூச்சி!

#பால்வடியும் முகம்
பயமற்று இரவு உலா
முழுநிலவு!

#அளவுக்கதிக போதை
தாறுமாறாய் சுற்றுகிறது
ரீங்கார வண்டு!

#மலர்களை நாடும்
மது விரும்பிகள்
தேனீக்கள்!

#யார் உதைத்துத் தள்ளியது
ஆக்ரோசமாய் விழுகிறது
அருவி!

#மேகக் குடம் உடைந்தது
மலைவழியே வடிகிறது
அருவி!

#என் முகத்தில்மட்டும் தூறல்
செல்லக் குழந்தை துப்பிய
எச்சில்!

#ஒற்றைக்கால் கொக்கின் காத்திருப்பும்
உறுமீன் வரவும் உயிர்ப்போடு
சித்திரத்தில்!

#கரைமீது அதீத காதல்
கரைபுரண்டு ஓடுகிறது காட்டாற்று
வெள்ளம்!

@
சோம்பல் முறித்து
எழுகிறான் கீழ்வானில்
ஆதவச் சிறுவன்!

@
பஷ்பமானது பனித்துளி
காலை வேளை
பகலவன் பார்வை!

@
இரவு கூடல்
அதிகாலைப் புல்மேல்
பனி!

@
பயணக் களைப்பு
கடலில் ஓய்வு
நதி!

@
எண்ணற்ற மரங்களை அழித்து
எண்ணிட்ட மர நடுகை
நெடுஞ்சாலை!

@
ஆபாசமற்ற
குளியல் காட்சி மழையில்
வண்ணத்துப் பூச்சி!
@
ஆகாயத்தில் பறக்கும் அட்டையென
ஆற்றுப் பாலத்தில்
இரயில்!

@
உடைந்து கிடந்தது
முகில்களுக்கிடையில்
நிலவு!

@
தேகம் சிலிர்த்தது
தீண்டியது
தென்றல்!

- சுகன்யா ஞானசூரி,

Friday, October 23, 2015

துளிப்பாக்கள்!

1.தட்சனையால் கொச்சையான
புனிதம்...
திருமணம்.

2.வானவீதியில்
கண்டன ஆர்ப்பாட்டம்...
கார்மேகம்.

3.கோடையில் வழிந்தோடும்
வற்றாத ஜீவநதி...
வியர்வை!

4.நிறைய முகங்கள்
பெயர் தெரியாமல்
இதயப் புகைப்படத்தில்!

5.ஆறறிவு கொண்ட
மிருகம்...
மனிதன்.

6.ஒளிரும் மகிழ்வில்
ஆனந்தக் கண்ணீர்
எரியும் மெழுகுவர்த்தி!

7.அழகிப்போட்டியில் வெற்றியோ
புல்லாள் தலையில்
பனித்துளிக் கிரீடம்.

8.காமனோடு காலன்
உருவாக்கிய கூட்டணி...
எயிட்ஸ்!

9.தன் வயித்தெரிச்சலை
காட்டுது புகைச்சலாக...
அடுப்பு.

10.மற்றவர்களின் தேவைக்காக
நாள்தோறும் உயிர்துறக்கிறது
தினசரி நாட்காட்டி.

11.தரிசாய் ஆவது
இவர்களது வாழ்வும்தான்
முதிர்கன்னி.

12.தூசு தட்டப்படாமல்
ஏக்கத்தோடு நூலகத்தில்
புத்தகங்கள்.

13.நிலவாளின் களியாட்டத்தில்
சிந்திய பழரசம்
பனித்துளிகள்!

14.இளந்தளிர்களுக்கு
வழிவிட்ட தியாகிகள்
சருகுகள்.

15.நவீன உலகில்
தொலைந்துபோன வார்த்தை
மனிதம்.

16.மனிதர்கள்
இரையாகிப் போனார்கள்
இலவசங்களுக்கு.

17.ஜனநாயகக் கடமை
ஜனங்களுக்கு தொந்தரவு
தேர்தல்!

18.கொலைக் குற்றவாளிகளே
பொது இடங்களில்
புகைப்பவர்களும்!

19.காற்றில் கரைவது
புகை மட்டுமல்ல
உயிரும்.

20.இருப்புப் பாதையெங்கும்
அட்டைப்பூச்சி...
இரயில்கள்.

21.பள்ளி மைதானங்கள்
கவலையில் குழந்தைகள்
விடுமுறையில்!

22.பூங்காக்கள் மகிழ்கிறது
குழந்தைகளின்
குதூகலத்தில்.

23.கருவறைக்கு
இரும்புக் கதவு
கடவுள் சந்நிதி.

24.நாடிருந்தும்
நாடோடிகளாய்
ஈழத்தமிழர்.

25.காட்சிப் பிழைகளாய்
காவியத் தமிழர்
ஈழதேசத்தில்.

- சுகன்யா ஞானசூரி,