Friday, November 26, 2021

பாக்களத்தம்மா - எங்கள் கதை

அன்பின் தோழர் புலியூர் முருகேசன் அவர்களுக்கு தோழமை வணக்கங்கள். 


நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலம் என்றே நம்புகிறேன்.


பொதுவாக கடிதம் எழுதி நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டது. தங்களின் பாக்களத்தம்மா வாசித்ததும் தங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் எனத் தோன்றியது. கடிதம் வழிதான் உயிரோட்டம் உள்ளவற்றை கூறமுடியும் என்பது கடித வரலாறு. 


கருத்த வானம் குமுறிக் கொண்டிருக்கும் இன்றைய (26/11/2021) காலையில் பாக்களத்தம்மாவை வாசித்து முடித்தேன். நவம்பர் 7 அன்று கும்பகோணம் பக்கங்கள் நிகழ்வுக்குப் பிறகு அம்மா சத்திரம் தோழர் சரவணன் இல்லத்தில் நீங்கள் உங்களின் பாக்களத்தம்மா நாவலை எனக்கு தந்தீர்கள். நாவல் வெளியாகி சரியாக பதினொரு மாதங்கள் ஆகிறது. பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு பெரிய துயரார்ந்த கதையை நாவலாக்கியுள்ளீர்கள். இருபது வருசத்துக்கு முன்னால் (அப்போது எனக்கு 17 வயசு) எங்கள் குடும்பத்தில் நடந்த துயர நிகழ்வுகளை நான் மீண்டும் நினைத்துப் பார்ப்பேன் என நினைக்கவில்லை. பாக்களத்தம்மா இன்று அத்தனையையும் மீண்டும் நினைவுபடுத்தி நெஞ்சை கனதியாக்கிவிட்டார். 


அகதியாகி வந்த நிலத்தில், முருகனின் தீவிர பக்தையான அம்மம்மாக் கிழவியின் மரணத்திற்குப் பிறகு எங்கள் பெரிய குடும்பம் எப்படிச் சிதறியது, யாரால் சிதறியது என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். என் அம்மாவின் உடன்பிறந்தவர்களால் அப்பாவும் அம்மாவும் ஏமாற்றப்பட்ட நாளில் நவீன வளர்ச்சி எங்களின் வாடகை சைக்கிள் கடையையும் காவு வாங்கியது. பெயிண்ட் வேலை, வார்னிஷ் பூச்சு வேலை, அறுப்பு வேலை என அப்பாவுக்கு ஒத்தாசையாக வேலை பார்த்த நாட்களை மீண்டும் பாக்களத்தம்மா நினைத்துப் பார்க்க வைத்துள்ளார். வசதியான முறையில் வாழ்ந்த பிள்ளைகள் இப்படி பாதியில் கஷ்டப்படுவதை நினைத்து தந்தை கண்கலங்கி புலம்பியதை கண்கூடாகப் பார்த்தவன் நான். இன்றும் அந்த நிகழ்வுகள் வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதே எங்கள் அவாவாக இருக்கிறது.


உடன்பிறப்பால் ஏமாற்றப்பட்ட பிறகும் தன் நான்கு பிள்ளைகளையும் பட்டதாரியாக்கியே தீருவேன் என்ற வைராக்கியத்தில் தாலிக்கொடியைக்கூட வித்து சாதிச்சுக் காட்டிய என் பெற்றோருக்கு இன்று பிள்ளைகள் தலையெடுத்து, பேரப்பிள்ளைகளோடு சந்தோஷமாக இருந்தாலும் அந்த ஏமாற்றத்தின் வடு அவ்வப்போது நெருடுவதை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பேச்சு காட்டிவிடும். வாழ்ந்த வீட்டை இழந்து,  நிலத்தினை இழந்து எல்லாவற்றையும் தாண்டி நாங்கள் வாழ்வது ஆச்சரியமான ஒன்றுதான். அது இவர்கள் முன்னால் நாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற அம்மாவின் சபதமே. பெண்களால்தான் இந்த உலகம் இன்னமும் உயிர்ப்போடும், உறுதியோடும் இயங்குகிறது என்றால் மிகையில்லை.

வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் கதைகள் மிகவும் ரணமானது. பாக்களத்தம்மா அப்படியான ஒரு வாழ்வியலின்  கதை. நாகையா போன்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் இருப்பதுதான் உறவுகள் அறுபடாமல் கொண்டிழுக்கிறது. அவைகள் நல்லபடியாக செல்லும்பட்சத்தில் வாழ்கின்ற அக்குடும்பத்தின் கெத்தாகும். அதுவே தீதாகையில் வெறுமையே மிஞ்சும். 


மூக்குத்திக் காசிக்குப் பிறகு நான் வாசிக்கும் தங்களின் நாவல் இது. இரண்டுக்கும் இடையிலான காலவெளியில் தங்களின் எழுத்து மெருகேறியிருக்கிறது. பரமபத விளையாட்டைப் போலவே வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் மிகுந்தது. ஒரு தொன்மக் கதையாடலையும் ஊடுபாவாக  இந்த நாவலில் நிகழ்த்திக் காட்டும் சாத்தியம் இருந்தும் ஏன் அதனைத் தவறவிட்டீர்கள்? அப்படி இருந்திருந்தால் நாவல் எனும் வகைமைக்கு ஒரு முழுமை கிடைத்திருக்கும் என்பது எனது அவதானிப்பு. அகதியெனும் மனநிலை நீங்கி  புலியூர் நிலத்தில் நீங்கள் கால்பதித்து வாழ வாழ்த்துகிறேன்.


எங்கள் கதையை எழுதிய தங்களுக்கு ஆயிரம் முத்தங்கள் தோழா.

- சுகன்யா ஞானசூரி

26/11/2021.

 

Friday, October 15, 2021

நாடிலி - தோழர் பொதியவெற்பன் ஐயா பார்வையில்



புலம்பெயர் ஏதிலி நினைவில்

'உடனலைந்து எரியும் ஒருபிடி நிலம்':2

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


2.'கடல்மீதும் சிறுதுண்டு நிலந்தேடும் ஏதிலிபாதம்' -

ஞானசூரியின் 'நாடிலி' மீதான என் வாசிப்பின் பிரதி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


"உலகத்தின் வீதிகளில் ஒரு முகவரி தேடி

அலைகிறது என்னினம்...." -

கிழவன் வைகறை வாணன்  


"இங்குவந்த எனக்கு/

புலம்பெயர்ந்த புள்ளிவிபரம் பொருந்தாது/

ஊன்றிய காலை எடுத்து இன்னொரு/

இடத்தில் வைத்தால்/

முந்திய இடமும் பிந்திய இடமும்/

பூமிதான் எனக்கு/

எனவே எனக்கு நாடில்லை/

நாமம் இதுவென்று ஒன்றில்லை."


இப்படியாகப் புலம்பெயர் வாழ்விலும் பிறந்த மண்ணையும் புகலிட மண்ணையும் தமக்கான பூமிதான்என வீற்றிருக்கும் பிரமிளாலும் கூட,


"பார்த்த இடமெல்லாம்/ கண்குளிரும்/ பொன்மணல்

என் பாதம் பதித்து/ நடக்கும்/ இடத்தில் மட்டும்/

நிழல் தேடி/ என்னோடு அலைந்து/ எரிகிறது/

ஒருபிடி  நிலம்"

புகலிட நிகழ்தகவிலும்    புலம்பெயர்ந்துடனேயே

அலைந்து எரியும் ஒருபிடி நிலத்தை உதறிடவா முடியும்?


இதனால்தான், சச்சிதானந்தனின் ' நினைவில் காடுள்ள மிருகம் போல் எரியும் தம் நிலத்தை நினைவுகளில் தூக்கிச் சுமந்தலைகிறோம் என்னும் ஞானசூரி அதுதரும் வாதையிலிருந்து தப்பித்துக்கொள்ளப் படைப்பிலக்கியத்தின் வழியே சற்று ஆசுவாசம் கொள்கின்றோம் என்கின்றார்.


புகலிட வாழ்வூடே முந்தைய இடமும் பிந்தைய இடமும்

பூமிதான் தமக்கென்றாலும் 'உடன் அலைந்தே தான்

தீரும் ஒருபிடி நிலம்'. அந்த அல்லாட்டமே 'நாடிலி'.


*


"யாதும் ஊர்தான் யாவரும் கேளிர்தான்/

வேறு வழியில்லை/ ஊரற்றவனுக்கு உலகே வீடு/

என்பதெல்லாம் ஊரற்றுப்போன துயரம்/

மறக்கவே" - கலியமூர்த்தி

 மாறாக மறக்க அல்லாமல் அதனை மறுக்கவே 

செய்கின்றன ஏதிலியர் கவிக்குரல்கள்:


"சமுத்திரத்தின் பெருவெளியில்/ படகுகளோடு  மூழ்கிய குழந்தைகளை ஒதுக்கும் /கரையில்/நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்/ யாதும் ஊருமில்லை/யாவரும் உறவுமில்லை" 


"வெளித்திசை என்பது/ முகாம்வாசிகளின் ஒன்பதாவது

திசை."


"போர் திணித்த இடப்பெயர்வில்/ எப்படி நீங்கள்/என்னை/ அகதியென விளிக்கின்றீர்கள்?"

"முகாம்வாசிகளின் உள்ளத்தில்/ தீயின் கங்கு எப்போதும்/

கனன்றுகொண்டே இருக்கிறது/ அகதியென/ நீங்கள்

விளிக்கும் போதெல்லாம்/ நீராவி என்ஜினைப் போல்

எரிந்தடங்கும்" - ஞானசூரி


"அடையாளங்களற்ற நான்/ அதை நினைப்பதிலோ

நடுக்கம் எழுகிறது/ தலையைப் பிடித்தாட்டும் கைகள்

ஆயிரம்/ நாடுமில்லை/ இது என் பெயருமில்லை/

அடையாளங்களற்ற நான் அகதியும் இல்லையாம்" -

தர்மினி ('இருள் மிதக்கும் பொய்கை)


*


'கடல்வழி வந்த அகதி நதிபார்த்தல் ' சிவரமணியின்

வண்ணத்துப்பூச்சி பார்த்தலை நினைவூட்டுகின்றது.

இரண்டுமே நம்மனோர் முருகியலைப் போலாது அதில்

லயிக்கொணா வாழ்மானத்தின் சித்திரிப்புகளே:


மாலைவெய்யில்/ இரவு ஒளிகள்/ நதிநீரின் சலசலப்பு/

குறுமணலின் பளபளப்பு எல்லாம் அழகென்று நீங்கள்

வர்ணிக்கின்றீர்கள்/ இதுகாறும் நான் பார்க்கவில்லை

என்பதை விட/ இரசிக்க விடப்படவில்லை" எனத் தொடரும் கவிதை நதிக்கரை நாகரிகங்களில் சிறந்த இனவழி வந்தும் அகதியெனப்பட்ட தானடைபட்டாக வேண்டிய பட்டிக்குள் மாலைக்குள் சென்றடைந்தாகணுமே என அத்தருணப் பதைபதைப்பை முன்னிறுத்துகிறார்.


செவ்வலரி பூத்தவானமும் செங்குருதி தேங்கியதம்

நிலத்தையே பிரதிபலிப்பது  ஆகிப்போகையில்

அந்த அழகை எல்லாம் அவர்களால் எவ்வாறு ரசிக்க ஏலும்?


"இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு/ துப்பாக்கி

நீட்டப்படும் போது/ ஒரு மெல்லிய பூநுனியில்/

உக்காரக்கூடிய/ வண்ணத்துப்பூச்சியின் கனவு / எனக்குச் சம்பந்தமற்ற / ஒரு சம்பவிப்பு மட்டுமே."- சிவரமணி ('செல்வி சிவரமணி கவிதைகள்')

Thiru Arasu 

*


 

"ஒட்டஒட்ட வெட்டப்பட்ட/ அவர்களுடைய புன்னகை

போன்றே/ என்னுடைய புன்னகையும் இருந்தது/

என்னைப் போன்றே மொழி தெரியாத/ இரவல் முகங்கள்இரண்டை அகதிகள் தேசத்தில் / அவர்களும் அணிந்திருந்தனர்" - தில்லை Thillai Jeganathan 


"ஒட்டஒட்ட வெட்டப்பட்ட அவர்களுடைய புன்னகைபோன்றே/ என்னுடையபுன்னகையும் இருந்தது - என்ற வரிகளில் உறைந்திருக்கும் இறுக்கம் நாட்டை இழந்து துயரைச் சுமக்கும் பெண்களின் அடையாளம்.


'ஒரு தேசத்துக்காகக் கடலைத் தந்த/ எனது கண்களைப் போன்று/ அவர்கள் கண்களும் பூமிக்கே தாழ்ந்திருந்தது என்ற வரிகளுங் கூட, அத்துயரின் பிரமாண்டமான வடிவத்தை ஒரு சில வார்த்தைகளால் சொல்லிச் செல்வது." - குட்டிரேவதி ('ஆண்குறிமையப் புனைவைச்சிதைத்த பிரதிகள்') Kutti Revathi 


இவ்வாறே ஞானசூரியும்  'புன்னகைக்கும் ஒவ்வோர் முகத்திலும்/ வலியின் ரேகை பாதாளம் பாய்கிறது' என்னும் போது  வெவ்வேறு அகதிதேசப் புன்னகைகளும் ஒருசேர அதளபாதாளம் பாய்வன ஆகிவிடுகின்றன.


*


"உன் பாட்டனின் மூஞ்சியில்/ செத்த மாட்டீரலைச் சுட்டுத் தின்றுவிட்டு/ என் பாட்டன்விட்ட/ குணமும் மணமும் நிறைந்த குசுவிலிருந்து/ எடுத்துக் கொண்டிருக்கிறேன்/என் அசலான கவிதைக்கான/ கச்சாப் பொருட்களை." - ம.மதிவண்ணன் Mani Mathivannan 


"தத்துவார்த்தப் பின்புலத்திலிருந்து சாதியத்தின்

வேர்களைக் கோபத்தோடு அசைத்துப் பார்ப்பவை

ம.மதிவண்ணன் கவிதைகள்."


"இதற்கான கவிதைமொழியைக் கவனியுங்கள். அருள்

பாலித்தல்,உபதேசம்,அபயம், ஆக்கினை,ஸ்மிருதி

முதலிய பிராமணைத்துவச் சொற்கள் ஒரு பக்கம்;

இதற்கு முரணாக வெளிப்படுகின்ற சொற்கள் எவை?

குணமும் மணமும் என்ற வழமையான தொடரோடு 'குசு'என்ற சொல் செய்கிற வேலை என்ன? இத்தகைய கவிதை எழுதுவதற்குரிய மொழிச்சாதனத்தை மனத்திலாக்கிக் கொள்ளவேண்டும்." - தி.சு.நடராசன்

('கவிதை என்னும் மொழி')


ஞானசூரி தனக்கான மொழியை எங்கெங்கிருந்து

எல்லாம் எடுத்துக்கொள்கின்றார்:


"பிரபஞ்சத்தின்/ ஒவ்வொரு துகள்களுக்குள்ளும்/ என்

கவிதைக்கான சொற்களை / ஒளித்து வைத்து/

வேடிக்கை காட்டுகிறது மொழி."


"களமாடிக் காலிழந்து /ஒண்டிக் குடித்தனமாய்/

ஒடுங்கிப்போன/ ஒற்றைக்கால் அண்ணனின்/ மேனியில் விளாசிய/ பலநூறு கசையடித் தழும்புகளில்/ எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்/ என் மொழியை"


*


ஆதிவாணியரும் (மாற்றுப் பாலினத்தார்) ஏதிலியரும்

அன்பின் அரவணைப்புக்கு ஏங்கிக்கிடப்போரே.


"நடு இரவில்/ திடுக்கிட்டெழும் குழந்தையைப்போல்/

அலறியெழுபவனுக்கு ஆதுரமான/ ஒரு சொல்

தேவையாயிருக்கிறது


" விழவில் தப்பிய செங்கட் சேய்/ கொளுவிய கூறினும்

ஒழுகாது அலமர/ஒருதாய்த் தேடி உவந்து/ பெருமடி

புதைக்கும் பெற்றித்தே தோழீ! - பெருஞ்சித்திரனார்

('நூறாசிரியம்' - நினைவிலிருந்து)


திருவிழாக் கூட்டத்தில் தாயைப் பிரிந்தே தப்பிய குழந்தை யார் தேற்றுதலுக்கும் அமைதியடையாது அதற்கப்பால் அன்னையைக்கண்டதும் ஓடோடி வந்தவள் மடியில் முகம்புதைக்கும் தன்மையே போல..


"எத்தனை / வசந்த காலம் வந்தென்ன/ ஒரு போதும்

துளிர்ப்பதேயில்லை/ பட்டமரம்"


"ஒரு /பச்சிலையின் துளிர்ப்பைப் போல்/ நம்பிக்கை

அளிக்கும் /ஒற்றைச் சொல்லைக் / கேட்கும் நாளே/

அகதிகளின் வசந்தகாலம்


*


அடைக்கலமாகிய தேசத்தின் தேர்தலுக்கு அவர்கள்

பகடைகள் ஆக்கப்படுவதையும்: மக்களின் சிறு வாழ்வையுங் களவாடும், ஆண்டுமுழுதும் பறக்கும் தேசமன்னர் மாதவிலக்கு நாட்களின் எண்ணிக்கையில் மட்டும் தேசத்தில் இருப்பதாகச் சொல்லப்படுவதையும் சுட்டாமல் விட்டாரில்லை.  நம்மனச்சான்றை உலுக்கி முகத்தில் அறையும் நிகழாய் நம்மில் குற்ற உணர்வைப் பற்றவைக்கின்றது 'நாடிலி' அதனதன் பேசுபொருளை நம்முள் தொற்றவைத்துக் கடத்தவல்ல கவித்துவமும் வாய்க்கப் பெற்றுள்ளதே ஞானசூரியின் கவிதைமொழி.


 இன்னமுங் கூட தம்மைத் தாமே செதுக்கிச் செதுக்கிச் சிற்பிக்கவும் அவர்களாலும் இயலும். நாளாந்தமும் பதைபதைப்பான பாதுகாப்பின்மையில் உழல்தரும்  அத்தகு ஏதிலிவாழ்வில் ஆதுரமான அரவணைப்பை நாமும் அவர்கட்க்கு வழங்க முற்படுகையில் பத்திநாதன்களும் ஞானசூரிகளும் விஸ்வரூபித்தே விகசிப்பார்தாமே? (பத்திநாதன்களும் Pathi Nathan 

இங்கில்லாவிடிலும் எம்மூடேதானே அவர்கள் இருப்பும்!)


*


இவ்வாசிப்பின் பிரதியில் இறுதி முத்தாய்ப்பாக

ஒரு தொகுப்பாக்கக் கவிதை:


நமோ நமோ ததாகதா!

~~~~~~~~~~~~~~~~~

 

"போதி மரத்தின் நிழல்/ இருள்மண்டிக் கிடக்கிறது/ஒன்று/அவ்விடம் விட்டு விலகு/ இல்லையேல்/ நிழலை/வெட்டி வீழ்த்து.

அச்சமோ/ அழுகையோ /ஏதோவொன்று/ஒரு முறையாவது/ புத்தனின் கண்கள் திறந்து மூடுவதைப் / பார்த்துவிடும்/ அவாயெனக்கு"


"குறுநுண் பெரும்புயல் அசைத்திருந்தது/ வேம்பின்

கிளையில் முளைத்திருந்த காக்கைக் கூட்டினை.../

அடுத்தடுத்துக் கிளையுரசி குருதித் தோய்வோடு/

இறையாண்மை நதியில் வீழ்ந்திருந்த/ குஞ்சிற்குப்

புலியின் கண்கள்.


இறந்து காய்ந்திருந்த/ தவளையைத் தின்ற வாயோடு

பாய்ந்து நீந்திக்/ கவ்விப் பிடித்திழுத்துச் செல்கின்ற/

நாய்க்கு/ அச்சு அசலாய்ப் புத்தனின் கண்கள்"


"லட்சம் உடல்களில் ஓற்றை மரணம்/

ஆம் ஒற்றை உடலின் ஒரு லட்சம் மரணம்/

நமோ புத்தா"


"நரமாம்ச இரைவேட்டைச் சிங்களப் புத்தனுக்கு 

எதிரான  வியூகத்தில் சைவப்புலிகள்

காவி ஆக்டோபஸோடு கைகோத்த முரண்நகை!

நமோநமோ ததாகதா"

(சுகன்யா ஞானசூரி *  த.விஜய்ராஜ்  * ரமேஷ் பிரேதன்  *பொதிகைச்சித்தர் *)


Suganya Gnanasoory.  Vijayaraj Cholan. Ramesh Predan


#EXILE.


 

Saturday, October 2, 2021

என்சிபிஎச் உங்கள் நூலகம்- நாடிலி-அண்டனூர் சுரா

 



நூல் விமர்சனம் – நாடிலி 

நூலாசிரியர் – சுகன்யா ஞானசூரி

கடற்காகம் பதிப்பகம்,மதுரை


கடல் மீதும் துண்டு நிலம் தேடும் நாடிலியின் பாதக்குறிப்பு

- அண்டனூர் சுரா

அலைகளின் மீதலைதலும், கடலலையில் இளைப்பாற ஒரு துண்டு நிலம் தேடுதலும் காணி நிலமேனும் சொந்தம் கொண்டவருக்குப் புத்துயிர் அனுபவம் தருவதாக இருக்கலாம். உள்ளம் கெலிக்கும் குதூகலமாகலாம். அவர்களுக்குக் கடல் என்பது நீலத்தாய். அலைகள் நுரைப்பு, பூரித்த பொங்கோதம். இதுவே நிலமற்ற, மண்ணற்ற, நாடற்றவர்களுக்கு? அல்லது நிலத்தையும் மண்ணையும் நாட்டையும் தொலைத்தவர்களுக்கு? கடல் என்பதும், அலை என்பதும் சாபம்! இந்த நீலக்கடலுக்கு ஏன்தான் இவ்வளவு பரந்துவிரிந்த நிலம்? இந்தக் கடல் கொஞ்சம் தன்னை உள்வாங்கிக்கொண்டால், இரண்டு கால்களில் ஒன்றையேனும் ஊன்றிக் கொள்ளலாம் தானே!. ஒரே கடல்தான். ஒரே அலைதான்! ஒருவருக்கு வர்ணனைக்கான மூலப்பொருளாக இருக்கிறது. மற்றொருவருக்கு வாழ்வதற்கான ஆதாரம் தேடும் இடமாக இருக்கிறது! 


அலைகளின் மீதலைதல், கவிஞர் சுகன்யா ஞானசூரிக்கு கற்பனை அல்ல, புலம்பெயர் அனுபவம். அதுவே அவரது முதல் கவிதைத் தொகுப்பும் கூட. நாட்டைத் தொலைத்துவிட்டு, அலைஅலையாக அலைகளில் வாழ்விடம் தேடிய அகதிகளின் துர்வாழ்வை கவிதையாக்கம் கொண்ட நூல் அது. கவனம் பெற்றது. வாசித்தவர்களின் கண்களில் கண்ணீர் கோர்த்தது. இவரது அடுத்த படைப்பு நாடடைந்த, தொலைத்த நாட்டைக் கண்டடைந்த கதம்பக் கொத்தாக இருக்குமென்றே, நானும், என்னைப் போல நீங்களுமாய் காத்திருந்தோம். அடுத்தத் தொகுப்பைத் தந்திருக்கிறார். மதுரை கடற்காகம் பதிப்பகம் வழியே, ‘நாடிலி’. இத்தொகுப்பிற்கு ஏதிலி என்றோ அகதி என்றோ தலைப்பு தந்திருந்தால் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்திருக்கும். ‘ஏதிலி’யைப் போன்று, ‘அகதி’யைப்போன்று, ‘நாடிலி’ அதற்கு நிகரான சொல் அல்ல. 


அகதி, ஏதிலி இவ்விரு சொற்கள் தமிழக மக்களுக்குப் பரிச்சயமானவை. நாடிலி, பயன்பாட்டளவில் புதியது.  ஏதுமற்றவர்கள் ஏதிலி. எல்லா நாட்டிலும் ஏதிலிகள் உண்டு. இவர்கள் வாழும் நாட்டிலேயே நாதியற்றவர்களாக ஆக்கப்படுகிறவர்கள். நாடோடியாக வாழ்ந்து, பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்ள உரிமை பெற்றவர்கள். பழங்குடிகளின் வாழ்வு இப்படியாகத்தான் ஆகிக்கொண்டிருக்கிறது. மலை மேல் குடியிருக்கும் மலைவாசிகள், பெருஞ்சுரண்டலால், மண், நிலம், பூர்வீகத்தை இழந்துவிடுகிறார்கள். அதேநேரம், இவர்கள், எங்கையும் வாழ்ந்துகொள்ளலாம், என்கிற உரிமை கொண்டவர்களாகிவிடுகிறார்கள். 


அகதி, தான் வாழ்ந்த நிலத்தை விடுத்து, பிற காரணங்களால்  இடம் அல்லது புலம் பெயர்பவர்கள். இடம் பெயர்வும் புலம் பெயர்வும் ஒன்றல்ல. கிளிநொச்சியை விடுத்து, யாழ்ப்பாணத்தில் குடியேறுவது இடம் பெயர்வு. ஈழத்தை விடுத்து கனடாவை நோக்கி நகர்வது புலம் பெயர்வு. புலம் என்பதற்கு துறை, துறைமுகம், நிலம், அறிவு, துருவம், இடம் என இன்னும் பல பொருளுண்டு. இங்குப் புலம் என்பது நிலம். சொந்த நாட்டினரால், சொந்த மக்கள் அகதியாக்கப்படும் சூழல், போர்ப்பெருங்கலைகளில் ஒன்றாகி வருகிறது. 


அகதிகள், ஒரு கட்டத்தில் சொந்த புலம் அல்லது இடத்திற்குத் திரும்புகையில், விடுத்துச் சென்ற இடம் திரும்பவும் கிடைக்கையில், அவர்கள் ‘வீடடைதல்’ ஆகிறார்கள். நாடிலி, கவிதைத் தொகுப்பில், ஒரு கவிதையில் ஒரு பறவை அப்படியாக வீடடைகிறது. அதே விட்டுச் சென்ற இடம், கொடுங்கர ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, அவர்களின் வாழ்ந்ததற்கான அடையாளம் அழித்தொழிக்கப்படுகையில், நிலத்தை இழந்தவர்கள், நாடிலி ஆகிறார்கள்.  


நாடிலி என்பவர் நாடற்றவர்கள் அல்ல. நாட்டை இழந்தவர். நாட்டைப் பறிகொடுத்தவர்கள். ஞானசூரியின் இக்கவிதைத்தொகுப்பு, நாடிழந்த, நாட்டை இழந்ததன் மூலம் மண், மரம், செடி, கொடி, இணை உயிர்கள், காற்று, சுதந்திரம், வாழ்க்கை, தொழில், சொந்தம், உறவு, நிம்மதி, அமைதி,..என பலவற்றையும் இழந்தவர்களின் ஒவ்வொரு நொடி வாழ்தலையும் திணையாகக் கொண்டு பாடுகிறது.  அகத்திணையில் வறட்சி, வெப்பம் பிரிவு, துக்கம் என இடர்களைக் கொண்டது பாலை திணை. அதேபோன்று நாடிலி, நாடிழந்தவர்களின் துயர், துன்பம், துக்கங்களைத் திணையாக பாடுகிறது. 


ஒரு கவிதையில் குயிலின் ஓசையொன்று பெரும் கட்டடங்கள் முளைத்த மாநகரில் கேட்கிறது. குயில் வனத்தைத் தேடும் குயிலுக்கு, அது அமர்ந்து பாட எப்படியோ ஒரு மரம் கிடைத்துவிடுகிறது. வனம் தொலைத்த குயிலுக்கு, அந்த ஒரு மரம் சிறுவனமாக கிடைத்துவிட்ட மகிழ்ச்சி அதற்கு. தன் மரத்தை இழந்து, குடைந்தடைய மரமற்று, ஒரு சில்வண்டு தனக்கான இடத்திற்காக வெப்பம் பொதிந்த பொழுதில் தன் புலத்தைத் தேடி உரக்க ரீங்கரிக்கிறது. குயிலின் கூவுதலும், சில்லுவண்டின் ரீங்காரமும் ஒன்றல்ல. ஞானசூரியின் கவிதைகள் சில்லுவண்டின் ரீங்காரத்திற்கு ஒத்தவை. தொலைத்த புலத்தை, தொலைவிற்குக் காரணமான, காது கொடுத்துக் கேட்க மறுப்பவர்களின் காதுகளைக் குடையும் குரல். 

நாடிலி, இந்நூலை கவிஞர், "நாடற்று அலையும் அத்தனை ஏதிலிகளுக்கும் " சமர்ப்பணம் செய்துள்ளார். நாடிலி, என்கிற சொல்லைக் கண்டதும், எனக்கு வகிபாகம் சொல்லுடனான ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், பேசும் பொருளாக மாறியிருக்கையில், ஒரு பத்திரிகைக்கு எழுதிய ஒரு கட்டுரையில், வகிபாகம் என்றொரு சொல்லைப் பயன்படுத்தியிருந்தேன். கட்டுரையைப் பிரசுரப்பதற்கு முன்பாக, அப்பத்திரிகையின் ஆசிரியர் வகிபாகம் சொல் குறித்து, விளக்கம் கேட்டார். விளக்கத்தை உள்வாங்கிய அவர், இது ஈழச் சொல் அல்லவா, இதை ஏன் தமிழ்நாட்டில் புகுத்துகிறீர்கள், என்றார். ஈழச்சொல் தமிழ்ச்சொல்தானே, என்றேன். 

வகிபாகம், என்கிற சொல் இங்கே வேரிட்டிடக் கூடாது, என்பதும் ஈழ நாடிலிகள் இங்கே நிரந்தரமாக குடியேறிவிடக்கூடாது, என்பதும் இருவேற்றுமை அல்ல. இந்த உரையாடல் நடந்த ஒரு மாதத்தில், தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், கொள்கை முடிவு வெளியானது. இந்தத் திருத்தத்தில் மியான்மர், பூடான், வங்கதேசத்து, பாகிஸ்தான் இந்துக்களை இந்திய குடிமகன்களாக ஏற்க முன்வந்த அரசு, ஈழத்தமிழர்கள் இந்துக்களாக இருந்த போதிலும், இந்தியாவின் அடையாளமாக இதிகாசிக்கப்படும் இராமாயணத்தின் கதை அங்கு நடந்தேறியிருந்த போதிலும், அவர்களை ஒரு பொருட்டாக நினைக்கவோ, உள்வாங்கும் முடிவைப் பரிசீலிக்கவோ இல்லை. இப்படியான தருணத்தில்தான், நாடிலி என்கிற இக்கவிதைத் தொகுப்பும், நாடிலி ஒருவரால் எழுதப்படும் பாடுபொருளும் அதிமுக்கியத்துவம் பெறுகிறது. 


"அலைக்கழிக்கும் பறவை" என்றொரு கவிதையில், அந்தகார இருளுக்கப்பால் பெருவெளியெங்கும் தேடியலையும் பறவை ஒரு வேளை உங்கள் பார்வைக்குப் புலப்பட்டால் அப்பறவை குறித்து சிறுகுறிப்பு வரைக, என்கிறார் கவிஞர். அதற்கான குறும்பதில், " காணாமல் ஆக்கப்பட்டவை" என்கிற கவிதையில் கிடைக்கப் பெறுகிறது. ஓயாமல் ஒலித்த படியிருக்கும் பூச்சிகளின் ரீங்காரம், பெருங்காட்டைத் தொலைத்த பறவைகளுக்கும் சேர்த்து குரல் எழுப்புகிறது. ஓயாமல் ஒலிக்கும் நாடிலி பூச்சி, கவிஞர் சுகன்யா ஞானசூரி. 

நாடற்றவர்களின் வாழ்வில் வேறு என்னவெல்லாம் கனவாக இருக்கின்றன, என்பதைக் கவிதைகளால் இடறிவிடும் சொற்கதிர்கள் புலப்படுத்துகின்றன. தாயகம், பறவை, தாய்நிலம், அடையாளம், முகாம், வீடடைதல், வாழ்வு, வைகறை, நாளை,ஆசை, வானம்,ஆதிக்குத் திரும்புதல்,முகம், அரசியல்,நவதிசை,மழை,ஊர், நதி பார்த்தல், சொற்கள்,பெருவெளி,மொழி,. இவைப் பாடுபொருளாகவும், அதன் மீதான கனவும் கனம் பொதிந்த வாழ்வும் கவிதைகளாக களம் கொள்கின்றன. 

ஒரு நாடிலியிடம், இப்படியான நிலைக்குத் தள்ளிய அதிகாரம், கேள்வி எழுப்புகிறது. உனது அடையாளம் என்ன? என்று.  “ மிச்ச மீதியாயிருக்கும் / உயிரைக் காக்கப் போராடும் / அடிமையான அகதி நாங்கள்/ வேறென்ன அடையாளம் சொல்ல?, என்கிறது ஒரு கவிதை. அதிகாரமே இல்லாத அகதிக்குத்தான்/ எத்தனை வண்ண வண்ண /அடையாள அட்டைகள் என்கிறது மற்றொரு கவிதை. அகதிகளின் வண்ணமயமான அடையாள அட்டையில் பொதிந்து கிடக்கும் நிறமற்ற இருண்ட வாழ்வைக் கண்களுக்கும் வெளியே கண்ணீராக வடிக்கிறது. 


போதி மரத்தின் நிழல் வரலாற்றுக் கதையாடலில் ஞானம், நிலம், அமைதி கொடுக்கும் உருவமாக இருக்கிறது. ஆனால் அதன் நிஜமோ, நிழல் எது இருள் எது எனப் பிரித்தறிய முடியாத இருண்மையைக் கொண்டிருக்கிறது. அந்த நிழல் அச்சமூட்டுவதாகவும், கொலை ஆயுதம் நீட்டுவதுமாக இருக்கிறது. அந்த நிழலிருந்து விலகு என்கிறார் கவிஞர். இல்லையேல் நிழலை வெட்டி வீழ்த்து என்கிறார். நிஜத்தை வீழ்த்தாமல், நிழலை வெட்டி வீழ்த்துவது அத்தனை எளிதா, என்ன? 

அச்சமோ அழுகையோ / ஏதோவொன்று / ஒரு முறையாவது / புத்தனின் கண்கள் திறந்துமூடுவதைப் பார்த்துவிடும் / அவா எனக்கு, என்கிறார் கவிஞர். அவருக்கு மட்டுமா?

வாழ்வதற்கு நாடற்ற நாடிலிக்கு சாவுவதற்கேனும் ஒரு நாடு வேண்டும், எனக் கேட்பது, என்னே கொடியது. நாடே இல்லையாயினும் அவனுக்கு உரிமையான ஒரு மரத்தின் கிளையேனும் வேணும், எனப் பாடுவது, எத்தனை வலியது. எல்லையற்ற வெளியில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் / மகள் இப்போது என் தாய்நாடு பற்றி வினவுகிறாள் / நான் பிரபஞ்சத்தின் மேலிருந்து ஒற்றைச் சுருக்கில் தொங்குகிறேன். என எழுதுகிறார் கவிஞர்.  தான் பெற்ற மகள், என் தாய்நாடு எனக் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல இயலா ஒரு தந்தையால் வேறென்ன செய்ய இயலும்?. பிரபஞ்சத்தில் தொங்கம் ஒற்றைச் சுருக்கு கயிறை விடவும், மகளின் நாடு பற்றியக் கேள்வி பதைக்க வைக்கிறது.


தான் பேசும் மொழியில், சா தீயை, மதத்தைத் தேடும் குரூரம் நவநாகரிக பழக்கமாகி வந்துள்ளது. நாடிலி என்பதே ஒரு சாதியாகவும் மதமாகவும் ஆகிவரும் இவரிடம் அதை ஏன் தேடுவானேன்? கவிஞனின் ஒரு நாள் கழிவு, எத்தகையது எனத் தேடினேன். `ஒரு நாளின் 24 மணி நேரம் என்பது / அகதிகளான எங்களுக்குப் / பெரும் அவஸ்தை’ என்கிறார். மருத்துவ ஆய்வகத்தில் நுண்ணோக்கியில் அலைவுறும் நுண்ணுயிரிகளின் வெளியில் / அவருக்கான உயிர்க்காட்டைத்/ தேடும் கவிஞர், அந்த ஆய்வகம் இருந்த இடத்தில் அத்தனை இரைச்சலுக்குமிடையில் கூவும் ஒற்றை குயிலின் கூவுதலில் தொலைத்த வனத்தைத் தேடும் பறவையோடு அவருக்கான வனத்தையும் தேடுகிறார். பச்சை மட்டுமே வாழ்ந்த இடத்தில், இப்போது சிவப்பு மஞ்சள் பச்சை. 

அலைக்கழிக்கும் பறவை, உருமாறுகிறது வெண்ணிலவு, நட்சத்திரங்களினூடே, கொடிய நிழல், ஆதிக்குத் திரும்புதல், புலம் பெயராது இருந்திருக்கலாம், வெறுங்கழுத்தி, பெருந்தொற்றில், இருள் விலகா மௌனம் தலைப்புகளில் நாடிலியின் இருபத்து நான்கு மணி நேரங்கள் அலையாடுகிறது. ஒரு கவிதை, குளத்தின் வட்டச்சுழல் அதிர்வையும் மனஅதிர்வையும் ஒப்பிட்டு சுழலாற்றுகிறது. 

சிறு கல் / விழுந்த குளத்தின் / அதிர்வென விரியும் / வட்டச்சுழலில் / நினைவதிர்வொன்று / சுழன்றபடி இருக்கிறது / ஒரு பாடல் / நுழைந்த மனதில்.


ஒரு கவிதையில், ஏன் என்னை அகதியாக்கினீங்கள்? எனக் கேட்கிறார். அவரது தந்தையிடம் அவர் கேட்கும் கேள்வியாக அது இருந்தாலும், அக்கேள்வி இந்த உலகத்தைப் பார்த்துக் கேட்கும் கேள்வியாகவும் இருக்கிறது. அப்படியாகக் கேட்ட கவிஞர்தான், தன் என்னுரையை இவ்வாறு முடிக்கிறார், “ அகதிகள் இல்லா உலகம் உருவாக வேண்டுகிறேன் ” சபிக்கப்பட்டவர்களால் நிரம்பிக் கிடக்கும் இந்த உலகில், இந்த வேண்டலை அவர் யாரிடம் கேட்டிருக்கக் கூடும்? காது உடையவர்களிடமா? இல்லை, மென்மெல்லிய இதயம் உள்ளவர்களிடம்!  

கடல் மீதும் துண்டு நிலம் தேடும் நாடிலியின் பாதங்கள், தனக்கான புலத்தைச் சென்றடைய வேண்டும், என்பது என் வாழ்த்துகை அல்ல, வேண்டல்!! 

- அண்டனூர் சுரா

1546 C,மகாத்மா நகர்

கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம்- 613301

அலைபேசி - 9585657108


இவ்வளவு விரிவாக நாடிலியை முன்வைத்த தோழர் அண்டனூர் சுரா அவர்களுக்கு என் அன்பும் நன்றிகளும் என்றென்றும். ப்ரியங்கள் தோழர்.




Tuesday, September 14, 2021

நாடிலியின் தணிக்கைக்குப் பிறகான புதுகை ஆளுமைகளின் சந்திப்பு

 



அகதிகள் முகாமில் தணிக்கை தொடர்பாக இன்று புதுக்கோட்டை சென்றிருந்தேன். ஏற்கனவே இரண்டு முறை அழைக்கப்பட்டபோது பணியிடத்தில் விடுப்பு எடுக்க முடியாத நிலை. ஒருவழியாக மதியத்திற்கு மேல் கடமையை நிறைவேற்றி தற்காலிகமாக தப்பித்திருந்தாலும் அடுத்தடுத்த மாதங்களிலும் இத்துயர் தொடரத்தான் செய்யும். ஆனாலும் வாழ்ந்துதானே ஆகவேண்டும். 



கிடைத்த சொற்ப நேரங்களை வீணடிக்காமல் புதுக்கோட்டையின் இரு ஆளுமைகளைச் சந்திக்க முடிந்தது எல்லாத் துயரங்களையும் போக்கி சற்று இளைப்பாறுதலைத் தந்தது. 



1999ல் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது புதுக்கோட்டை ஐடியல் டியூசன் சென்டர் ஏற்பாடு செய்திருந்த கவிதைப் பட்டறையில் கவிதை என்றால் என்ன, எவ்வாறு எழுதலாம் என்று வகுப்பெடுதபோதும், பிறகு 2004ல் இளங்கலை அறிவியல் படிக்கையில் ஆலங்குடியில் ஒரே மேடையில் கவியரங்கம் செய்தபோதும், இன்று பல்வேறு வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றரை மணித்தியாலம் இலக்கியம், சினிமா, அரசியல், கல்விப் புலம் என பல்வேறு விடையங்களை உரையாடியபோதும் அந்த காந்தக் குரல் ஒன்றாகவே இருக்கிறது. கவிஞர் தங்க மூர்த்தி ஐயாவின் அந்தக் குரலுக்கு நான் பரம ரசிகன். இன்று #நாடிலி கவிதைத் தொகுப்பினை வழங்கியபோது மாணவரின் வெற்றியைக் கொண்டாடும் ஆசிரியரின் முகமலர்ச்சியை தரிசித்தேன் என்றே சொல்லவேண்டும். 


கவிஞர் வைகறை அண்ணனால் அறிமுகமாகிய வீதி கலை இலக்கிய நிகழ்வில் புன்னகை பூத்த முகத்துடன் அன்போடு கவனித்த தேவதா தமிழ் (மு.கீதா) அம்மா அதே மாறாத புன்னகையோடு தேநீரும், ரொட்டியும் வழங்கி வீதி கூட்டத்தில் மீண்டும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். வீதி நண்பர்களுக்கான பிரதிகளை அம்மா அவர்களிடம் தந்துவிட்டு வந்தேன். பிறிதொரு நாளில் இன்னும் முக்கியமானவர்களையும் சந்திக்க வேண்டும். காலமும் நேரமும் கூடிவரட்டும். அதுவரை காத்திரு மனமே என என்னை நானே சமாதானம் செய்துகொள்கிறேன். 


- சுகன்யா ஞானசூரி

13/09/2021.

Wednesday, September 8, 2021

ஷம்பாலா - தமிழவன்


நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் வாசித்திருக்கும் நாவல் தமிழவன் அவர்களின் ஷம்பாலா எனும் அரசியல் நாவல். துவக்கத்தில் தொடுவதற்கு சற்று தயக்கமாகத்தான் இருந்தது. ஏனெனில் அவரது ஸ்ரக்சுரலிசம் நூலை வாசிப்தற்காக நான் தோழர்கள் Jamalan Tamil , Mubeen Sadhika , Yukaanthan Yuva போன்றவர்களின் எழுத்துகளின் வாயிலாகவே உள்ளேக முடிந்திருந்தாலும் இன்னும் வாசிப்பினை தொடராமலே உள்ளது. ஆனால் அதற்கு நேர்மாறாக எளிமையாக இருந்தது ஷம்பாலா. 


ஷம்பாலா அதிகாரத்தின் உறைவிடம். வலதுசாரியச் சித்தாந்தத்தின் புதிய கொள்கைகளும், அது தொடர்ச்சியாக பெற்றுவரும் வெற்றிகளும், அதிகாரத்திற்கு எதிரானவர்களை அதிலும் குறிப்பாக படைப்பாளர்களை பழிதீர்ப்பதில் செயல்படும் நுணுக்கங்களையும் (கெளரி லங்கேஷ் படுகொலை, வரவர ராவ் போன்றவர்கள் நினைவில் வந்து செல்வார்கள்) மூன்றாம் ஹிட்லர் எனும் நீலக்கண் அரசியல்வாதியூடாக விறுவிறுப்பான நடையில் சமகால அரசியலை அலசிச் செல்கிறது.


ஷம்பாலா ஹிட்லரின் சிறுபிராயம், வளரிளம் பருவம், காதல் தோல்வி, அரசியல் தாதாவாகுதல், திருமணத்தினை மறைத்தல் என பல்வேறு விடையங்களை நீங்கள் வாசித்தால் மட்டுமே யார் யார் என்பதை கண்டடைய முடியும்.


ஜெர்மானிய ஹிட்லரை தோற்கடித்து, வலதுசாரியச் சிந்தனையை வேரறுத்தவர் ரஷ்யாவின் ஸ்டாலின் அரசு என்பதை அமர்நாத் பாத்திரம் அழுத்தமாக சொல்வது சமகாலத்திலும் எதார்த்தமாக அமைந்துள்ளதா? அல்லது விதிப்பயனா? 


//நாம் சாதாரணமானவர் என்று பிறர் கூறும்படி அப்படியே இருந்தோமென்றால் இப்போது போலவேதான் எப்போதும் இருக்க வேண்டியவர்களாவோம்.// லாமாக்களின் இந்தப் போதனை ஒவ்வொருவரையும் அவரவரின்  இயங்கியலை நிறுவுகிறது. 


முழுமையான ஒரு அரசியல் நாவல். நாம் சாதாரணமானவர் இல்லை. இனி தமிழவனின் அடுத்தடுத்த நூல்களையும் வாசித்துவிடுவேன் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது. 


- சுகன்யா ஞானசூரி

08/09/2021.




 

Monday, September 6, 2021

குடியுரிமை கோரிக்கை தொடர்பான கலந்துரையாடலும் எனது கவனப்பாடும் - சுகன்யா ஞானசூரி

 இந்தியா, தமிழகம் வாழ் அகதிகளுக்கான அரசின் அறிவிப்புகளும், பிரதிபலிப்புகளும் எனும் நேற்றைய நிகழ்வினையொட்டிய என் கவனப்பாடு.


1.

இந்திய குடியுரிமை கோருபவர்கள் முதலில் ஈழப் பெருமைகள் பேசுவதை விடுத்து தம்மை இந்திய இறையாண்மைக்குள் இணக்கமாக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் தோழர் பத்திநாதன். இது இங்கே சரியான பார்வையாக இருக்கிறது (அதாவது தற்சமயம் குடியுரிமை கோருவதன் காலச்சூழல் பொருத்தப்பாட்டில்). இதை நாம் அடுத்த தலைமுறையில் நம் ஆவணங்கள் அத்தனையையும் அழித்துவிடுவதின் வாயிலாக துவக்கலாம். இதுவே இதற்கான சரியான துவக்கமாகவும் இருக்கமுடியும். எம் தலைமுறையிலிருந்து துவங்கும்போது உளவியல்ரீதியாக பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும். மேற்குலக நாடுகளில் குடியுரிமை கோருபவர்களுக்கு இதுபோன்ற இக்கட்டான சூழல் இல்லாமை நல்லதாகப் போய்விட்டது. இன்றைய தமிழக ஈழ அகதிகள் முகாம்களில் அடையாள அரசியல்கள், சாதிய மனோபாவ வெளிப்பாடுகள் என புதிய புதிய அடையாளங்களை ஏற்று தங்களைத் தாங்களே தலைமைகளாக கட்டமைத்துக் கொண்டிருக்கும் இச்சூழலில் நாம் அடையாள அழிப்பைச் செய்வதில் தவறில்லை. அதேபோல் நாடு திரும்புவோரின் மீள்குடியேற்றச் சிக்கல்களை வெளிப்படையாக பேசவில்லை என்றாலும் அதன் மெளனம் ஒரே அர்த்தத்தை தெளிவாகச் சொல்லிவிடுகிறது. இங்கே நாடு திரும்ப ஆசையூட்டுவோரின் பேச்சை நம்பவேண்டாம்.


2.

வடக்கு கிழக்கு நிலைமைகள் என்பவைகள் ஒருவேளை தமிழீழம் என்ற ஒன்று உருவாகியிருந்தால் பேசவேண்டிய ஒன்று. அது 2009  ஆண்டோடு முடிந்து போன ஒன்று. நீங்கள் தனித்தமிழீழக் கோரிக்கை தொடர்பான உரையாடலில் வேண்டுமானால் கோரலாம். தமிழகத்தின் அகதிகள் குடியுரிமை கோரிக்கை என்பது இவற்றிலிருந்து மாறுபட்ட ஒன்று. மதரீதியான முன்னெடுப்புகள் கோமாளித்தனமான ஒன்று. மலர்மகள் அம்மாவின் பேச்சுகள் அகதிகள் குடியுரிமை கோரிக்கை தொடர்பானவற்றிற்கு சம்பந்தம் இல்லாத ஒன்று. 


3.

இந்திய வம்சாவளித் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என பிரித்து குடியுரிமைக் கோரிக்கை கேட்பான் குற்றச்சாட்டுகள் ஒருபக்கம் நிகழ்ந்தாலும் ஒரு அமைப்பாக முதலில் வாய்ப்புள்ளவர்களுக்கான பாதையை அடைவது முக்கியம். அதையொட்டி மற்றவர்களுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்று பல்வேறு கட்டுரைகளிலும் நேர்ப்பேச்சிலும் கூறியதை தோழர் ந. சரவணனின் உரை இருந்தது. அது சரியான பாதையில் சென்று கொண்டும் இருக்கிறது. வாழ்த்துக்கள். 


4.

சட்டத்த்தரணி இளங்கோ அய்யாவின் ஊகமான பேச்சுக்களால் எவ்வித பலனும் இல்லை. அகதிகளின் குடியுரிமைக் கோரிக்கையில் மறுவாழ்வுத் துறையின் கீழ் செயல்படுகின்ற சட்டத்தரணிகள் ஏன் பங்குபற்றாது கள்ள மெளனம் காக்கிறார்கள் என்பது எனது பலநாள் கேள்வி. 1991 இராசீவ்காந்தி படுகொலை குடியுரிமை கோரிக்கையில் சிறிய தாக்கத்தினை செலுத்துகிறதுதான். இப்போது காங்கிரஸ் இல்லாத பாஜக அரசுதானே உள்ளது. சட்டச் சிக்கல்களை எடுத்துச் சொல்லியிருந்தால் உபயோகமாக இருந்திருக்கும். 


5.

செயற்பாட்டாளர் சுபாஷினி அவர்கள் மறுபடியும் மறுபடியும் நம்மை மறுவாழ்வுத்துறையிடமே கோருவது போன்று பேசுவது அறியாமையினால்  செய்வது போல் உள்ளது. மறுவாழ்வுத்துறையின் NGO செயல்பாடு நாடு திரும்புதல் என்ற ஒற்றைச் செயல்பாட்டில் உள்ள அமைப்பு. அவர்கள் நினைத்திருந்தால் 2009 க்கு பிறகு அதனை முன்னெடுத்திருக்கலாம். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை அவர்கள் செய்கிறார்கள். நாம் அவர்களிடத்தில் மறுபடியும் எம்மை அடமானம் வைக்க முடியாது. 


6.

கஸ்தம்பாடி அனோஜன் அவர்களின் பேச்சு முதிர்ச்சியான ஒன்று. பல்வேறு விடையங்களை சிறப்பாக கூறியிருந்தார். அவரை இன்னும் நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.


ஈழ விடுதலை இயக்கங்களுக்குள் சகோதர சண்டைகள் நிகழ்ந்ததைப்போல் இங்கு இப்போது குடியுரிமை கோரிக்கை தொடர்பில் பல்வேறு குழுக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டிருந்தாலும் கொள்கை என்பது இந்தியக் குடியுரிமை கோருதல் ஒன்றே பிரதானமாக உள்ளது. அது தமிழீழம் என்ற ஒன்றை இல்லாது ஆக்கியதைப்போல் ஆகிவிடாமல் எல்லோரும் ஓரணியில் நின்று இன்றைய நம்பிக்கை நட்சத்திரமான மு.க. ஸ்ராலின் அவர்களின் தமிழக அரசின் முன்னெடுப்புகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்க வேண்டும். அதேவேளை சட்டரீதியான செயல்பாடுகளை அரசோடு இணைந்து செய்யவேண்டிய பொறுப்பும் நம் முன்னால் உள்ளது. தமிழக அரசோடு இணைந்துதான் நாம் ஒன்றிய அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டிய கடப்பாடும் உள்ளது. மக்களிடத்தில் அகதிகளின் குடியுரிமை கோருதல் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பொறுப்புணர்ந்து செயல்படுவோம் தோழர்களே. 


இவண்

சுகன்யா ஞானசூரி

06/09/2021.

Sunday, August 22, 2021

நாடிலி - கையறு நிலையின் கணங்கள்- பேராசிரியர் அ. ராமசாமி.



#நாடிலி குறித்த விரிவான விமர்சனக் கட்டுரை ஒன்றினை பேராசிரியர் அ. ராமசாமி ஐயா அவர்கள் 14/08/2021 தீம்புனல் இதழில் எழுதியுள்ளார். மிக்க அன்பும் நன்றியும் ஐயா. 


//சொந்த நாட்டைவிட்டு அகதி முகாம் என்ற வெளியில் இருக்கும் தன்னிலையின் உணர்வுகளும் இருப்பும் என்பதை சுகன்யா ஞான சூரியின் கவிதைகள் விரிவாகக் கவனப்படுத்தியுள்ளன.//

//அகதி முகாமின் துயரச்சித்திரத்தின் பல நிலைகளையும் வடிவங்களையும் சொல்லும் விதமாகத்   தலைப்பிலேயே முன்வைக்கின்றன பல கவிதைகள். அவல முகாம், அகதிகள் வீடடைதல், அகதி வாழ்வு, ஏன் என்னை அகதியாக்கினீங்கள்?  நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம், அகதி முகாமில் தீபாவளி, அகதிப்பிணம், அகதிகள் முகாமில், கடல்வழி வந்த அகதி நதி பார்த்தல், அகதி வாழ்வு, குடிகார அகதியின் சலம்பல் என விதம் விதமாக முன்வைக்கின்றன.  அஞ்சலி பற்றிய அகதியின் பாடல் என்ற கவிதை அகதி முகாம் வாழ்வின் வேறொரு சித்திரத்தை அதே துயரத்தின் – இழப்பின் விளைவாக விவரிக்கின்றது.//

//இதுவரையிலான எனது வாசிப்பில் இந்திய அகதி முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் பாடுகளைக் கட்டுரைகளாகவே வாசித்திருக்கிறேன். தொ.பத்திநாதன் போன்றவர்களின் அனுபவப்பகிர்வுகளும் வேறு சிலரின் சிறுகதைப் புனைகதைகளும் வாசிக்கக்கிடைத்துள்ளன. ஆனால் உணர்வுகளின் திரட்சியான கவிதை வடிவில் – அகதி முகாம்களில் படும் வேதனைகளை ஞானசூரியின் அளவுக்கு முன்வைத்த கவிதைகளை வாசித்ததில்லை. இந்தப்பாடுகளுக்கான காரணங்களையோ, கோரிக்கைகளை முன்வைத்து விடுதலையையோ கோராமல், இருப்பை மட்டுமே தீவிரமாக முன்வைக்கிறார். அதன் மூலம் ஒட்டுமொத்தமான அகதி வாழ்வின் பாடுகளாக மாற்ற முனைந்துள்ளார் என்பது குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியதாக இருக்கிறது.//

பேராசிரியரின் வலைப்பக்கத்தில் விரிவாக கட்டுரையினை வாசிக்கலாம். அதன் இணைப்பு கீழே தந்துள்ளேன். 

https://ramasamywritings.blogspot.com/2021/08/2021.html?m=1



Saturday, August 21, 2021

நாடிலி - தோழர் தேனி விசாகன் பார்வையில்


 

காற்றில் அலைவுறும் துகள்...

---------------------------------------

1


தனிமனித சாதனை மற்றும் தனிமனித படைப்பு ஆகியவை முன்னிலைப் படுத்துவது மீண்டும் அதிகாரப் போக்குகளையே நிறுவுகின்றன என்ற ஒரு கருத்தினை நாம் பரிசீலிக்க வேண்டுமென்றாலும்கூட, அதில் நாம் கவனங்கொள்ளத்தக்க அரசியல் இருக்கிறதென்றாலுங்கூட, ஒரு படைப்பு தனிமனிதனை எவ்வாறு முன்னிலைப்படுத்திட முடியும் என்கிற கேள்வியையும் கேட்டாக வேண்டியிருக்கிறது. ஒரு சமூகம் பற்றிய கருத்துகளடங்கிய படைப்பை ஒரு தனிமனிதன் எழுதியிருந்தால், அப்படைப்பு அத்தனி மனிதனை மட்டுமே முன்னிலைப்படுத்துமா...? 


2


சுகன்யா ஞானசூரி எழுதிய "நாடிலி" என்கிற கவிதைத் தொகுப்பை நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதற்காக என்னாலான இந்த சின்னஞ்சிறிய அளவிலான குறிப்புகளை எழுதுவதற்கு எனக்கு நிறைய மெனக்கெடல் தேவைப்பட்டது. ஒரு மனிதனுக்கு சில குணங்கள் இயல்பில் அமையும் என்பதைப் போல ஞானசூரி அமைதியான, இதயக்குளிர்மை கொண்டவராக இருக்கிறார். ஆனால் ஒருவரைத் தொற்றிக்கொள்ளும் பதற்றம் இயல்பானது அல்ல என்பதைப் போல, அவரின் உடலும் மனமும் எப்போதும் படபடப்பாகவே இருக்கிறது என்பதையும், முந்தைய அமைதியும் குளிர்மையும், அவரின் பதற்றத்தினை அடக்கியாண்டு வெளிப்படுவதைப் போல நானுணர்கிறேன். அப்படித் அவரைத் தொற்றிக்கொண்ட பதற்றத்திற்கு என்ன காரணம்...


3


அதிகாரத்தின் தாக்குதலுக்காளாவதிலிருந்தும், அதை எதிர்க்கும் மனநிலை கொள்வதிலிருந்தும் தன்னை விலக்கிக்கொள்பவன் இவ்வுலகில் ஒருவன் கூட இருக்க முடியாது. காயத்திற்கும் எதிர்ப்பிற்குமான அளவு வேண்டுமானால் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். ஆனால் எப்படியான நிலையிலும் எத்தனை கீழான நிலையிலும் இருக்கின்ற ஒருவனுக்குக் கூட அதிகாரத்தை எதிர்க்கும் மனநிலை அவனளவிற்காகவது வாய்க்கும், இது பொது விதி. அப்படியான ஒரு பொதுவிதி கூட பொருந்தாது போகின்ற ஒரு இனமிருக்கிறது, அது நாடிலியினம். மனமும் குரலும் மிதித்து நசுக்கப்பட்ட அவ்வினத்திலிருந்து, முன்பொருநாள் ஒரு தேசத்தின் செல்லப் பிள்ளையாயிருந்த ஒரு கவிஞன் வந்து பாடுகிறான் தோழர்களே கேளுங்கள்... உப்புக்குச்சப்பாக ஒப்புக்கேனும் அல்லது சொல்வதற்கேனும் ஒரு நாட்டின் பெயரைக் கொண்டுள்ள தோழர்களே மனதுவைத்துக் கேளுங்கள்... 


இயற்கையை ரசித்தபடி

இன்னல்கள் ஏதுமின்றி

இன்பமாய்ச் சென்ற பேருந்துப் பயணம்

இப்போதெல்லாம் சலிப்பையே தருகிறது

மனதுக்கு ஒட்டாத இசையும்

மரங்களைத் தொலைத்த சாலையும்

இன்ப துன்பங்களைச் சுமந்தபடி

பேரிரைச்சலோடு கதறும்

கைப்பேசி உரையாடல்களும்

கொஞ்கம் புத்தகமும்

சன்னலோர இருக்கை இருந்தும்

பயனற்றுப் போகிறது

மெல்லச் சிணுங்கும் கைப்பேசியை

எடுப்பதாயில்லை...


கவிஞர் கையாண்டிருக்கின்ற பாடுபொருள் என்ன...? கவிஞர் முன்வைக்கின்ற அரசியல் என்ன...? முன்பு நாடற்றவனானவனை பின்பு ஏதுமற்றவனாக்கிவிடும் அவலமிகு இவ்வுலகிற்கு பாடம் நடத்துகின்ற பாடுபொருள் மூலமாக, துயர்மிகு அரசியலை அதிகாரத்தின் நெற்றிப்பொட்டில் அறைகிறார் ஞானசூரி. 


மஞ்சள் கனியொன்றின்

பற்குறியில்

உறைந்து கிடக்கும்

குருதியென வீச்சமெடுக்கிறது

அகதியெனும் இவ்வாழ்வு.


4


ஞானசூரியின் "நாடிலி" என்கிற தலைப்பிலான 96 பக்க கவிதைத் தொகுப்பு அவரின் "என்னுரையுடனும்" பின்பு கவிஞர் யவனிகாவின் முன்னுரையுடன் தொடங்குகிறது. அடர்த்தியான தன்னுடைய முன்னுரையில், தொகுப்பிலுள்ள ஒட்டுமொத்தக் கவிதைகளையும் சுருக்கிப் பிழியக் கிடைக்கும் ஒரு சொட்டுச் சாறாய் "நினைவிலும் வாழ்விலும் தனித்துவிடப்பட்டு, தன் வாழ்வை செப்பம் செய்தபடி புலம்பெயர்ந்த இடத்தில் தன் பிறப்பிட அகபுற கனவுகளை அல்லது புகலிடப் பதற்றத்தை இன்னும் நிலைத்தன்மை அற்ற அச்சத்துடன் கவிதைகளாக இந்நூல் பதிவு செய்திருக்கிறது என்கிறார். ஞானசூரியின் கவிதைகள் அனைத்திலும் ஒரு அகதி மனம் ஆதிக்கம் செய்கிறது. மனிதன் அகதியாகிப் பார்த்திருக்கிறோம், பார்த்துவருகிறோம். மனம் அகதியானால்...? அம்மனம் படைப்பு மனமாகவும் மாறிப்போனால்...! மனமெங்கிலும் வலி! வலி! வலி! படைப்பெங்கிலும் வலி! வலி! வலி! அப்படியான ஒரு வலியை, வாசிக்கும் வாசகனின் மனத்தையும் மூளையையும் நேரடியாகத் தாக்குகின்ற கவிதைகளைத் தன்னுடைய தொகுப்பில் வைத்திருக்கும் ஞானசூரியின் கவிதை மொழியானது வளமும் எளிமையும் கொண்டிருக்கும் ஒரு சமகால வியப்பு.  ஒட்டுமொத்த நாடிலி சமூகத்திற்கான ஒற்றைக் குரலாகத் தன் கவிதைகளைக் கையளித்திருக்கும் ஞானசூரியின் படைப்பு தனிமனிதப் படைப்பு என்றாலும் கூட அது ஒரு சமூகத்தின் வலியைக் காட்டுகின்ற படைப்பாதலால், அதில் ஞானசூரி முன்னிற்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுவதும், அவரை நாம் முன்னிலைப்படுத்துவதும் தவறில்லை. 


அந்தரங்கத்தில் எந்தவொரு பிடிப்பின்றித் தொங்கும் ஒற்றைக் கயிறு உணர்கின்ற பதற்றம் பற்றிச் சொல்ல சொற்கள் கிடைக்குமா என்ன...? ஞானசூரிக்குக் கிடைத்திருக்கிறது. ".... வாதையிலிருந்து தப்பித்துக்கொள்ள படைப்பிலக்கியம் வழி சற்று ஆசுவாசம் கொள்கிறோம். இப்படியாக வாழ்வின் அவலங்களை, புலம்பல்களை எழுதுவதன் மூலம் எனது இறப்பைச் சற்றுத் தள்ளிவைத்து வாழ்நாளை நீட்டிக்கொள்கிறேன்..." என்று தன்னுடைய "பதற்றம்" என்பதற்குப் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதையும் தன்னுடைய "தன்னுரையில்" குறிப்பிட்டிருக்கிறார் ஞானசூரி. 


5


காற்றில் அலைவுறும் துகள்களையெல்லாம்

தன் நீர்மைகொண்டு

தனக்கொரு கூடு நெய்யும்

சிலந்தியைப் போல்

ஒவ்வொருமுறையும்

துயர்மறந்து விடியலை நோக்கும்

என் கனவுகளை

அகதியெனும் ஒற்றைச்சொல்லில்

சிதைத்துவிடுகிறீர்கள்...


முன்பு இலங்கையைப் போன்று, பிற நாடுகளைப் போன்று, இன்று, இதோ ஆப்கானிஸ்தானிலும் நம் கண் முன்னாலேயே ஆயிரக்கணக்கான மனம் சிதைக்கப்பட்டு வருகிறது. நாளை...?


---Visagan

தொடர்பு கொள்க: 9790 350 714 

இப்போது

https://www.commonfolks.in/books/d/naadili 

இணையத்திலும் நாடிலி நூல் கிடைக்கிறது.


Friday, August 6, 2021

நாடிலி - வி.ரங்கராஜன் வழக்கறிஞர், திருச்சி மாநகர தமுஎகச தலைவரின் பார்வையில்.


 

#நாடிலி 


"எனது இனத்தின் அழிவை

இந்த உலகமே

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது

இன்றும் 

மௌனமாக

கடப்பதொன்றைத் தவிர

நாம்தான்

வேறென்ன செய்தோம் "


-------------------------------------------------------------


அகதிகளின்

வருத்தமும் கோபமும்

மீண்டும் மீண்டும் 

பதிவு செய்ய படுகிறது.


செய்தியாக 

கடந்து போகின்றோம் !


வலியை எப்பொழுது

உணர போகின்றோம் ?


அகதிகள் இல்லா

உலகம் உருவாக்குவோம் !!


அகதிகளின்

வலியை கடத்துவதில்,

தவிர்க்க இயலா படைப்பு !!

சுகன்யா ஞானசூரி-யின்

நாடிலி..


- வழக்கறிஞர் வி. ரங்கராஜன்

தமுஎகச மவட்டத் தலைவர்

திருச்சி மாவட்டம்.

நாடிலி - எழுத்தாளர் வாசு முருகவேல் பார்வையில்



நாடிலி - சுகன்யா ஞானசூரி
-

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்
என் பாதம் பதித்து 
நடக்கும் 
இடத்தில் மட்டும் 
நிழல் தேடி
என்னோடு அலைந்து 
எரிகிகிறது
ஒருபிடி நிலம்

கவிஞர் பிரமிளின் இந்தக் கவிதையைத்தான் என்னுடைய "புத்திரன்" நாவலின் தொடக்கத்தில் பதிவு செய்திருந்தேன். கவிஞர் சுகன்யா ஞானசூரி தன்னுடைய "நாடிலி" கவிதைத் தொகுப்பின் முன்னுரையை அதே பிரமிளின் கவிதையுடன்தான் தொடங்குகிறார். நாங்கள் அகதிகளாக அலையும் காலம் முடிவற்று நீண்டு கொண்டே செல்கிறது ஒரு பிடி நிலம் தேடி. அகதிகள் என்ற வார்த்தையிலும் பல அரசியல் இருக்கிறது. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் "அகதிகள்" என்ற அடையாளத்துடனும் ஒரு அணி பங்கேற்கிறது. அதில் ஏன் ஈழத்தமிழர்கள் இல்லை என்று தமிழக நண்பர் ஒருவர் என்னிடம் கேள்வி எழுப்பி இருந்தார். உலகெங்கும் ஈழத்தமிழர் பரந்து வாழ்வதால் எல்லோரும் அகதிகள் என்ற அளவில் அவருடைய புரிதல் இருக்கிறது. தாய் நிலத்தை பிரிந்த வலி என்பது அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால், ஈழத்தவர் ஒவ்வொருவரின் நிலையும் ஒன்றல்லவே. பெரும்பாலான ஈழத்தமிழர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளில் குடியுரிமையைப் பெற்று விட்டார்கள். அகதியாக வந்து இறங்கியது முதல் இந்த நிமிடம் வரை அகதியாகவே வாழ்கிறவர்கள் என்றால் இந்திய நிலத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் மட்டும் தான். அதிலும் முகாமுக்கு உள்ளும் - வெளியிலும் கூட அன்றாட சிக்கல்கள் மாறுபடுகின்றன. பாரிசிலும், லண்டனிலும், ரொரன்டோவிலும் இருந்து எழுத்துவது போலல்ல ஒருவன் தமிழகத்தில் அகதியாக இருந்து எழுதுவதும் / குரல் கொடுப்பதும். அகதி நீ அரசியல் பேசாதீர். அம்மணமாக அடித்து துரத்த வேண்டும். இப்படி எத்தனை வசவுகள். கம்யூனிஸ்ட் பெரியாரிஸ்ட் என்று எத்தனை இஷங்கள் கழுத்தை நெரிக்கின்றன. ஈழத்தமிழன் தலை விதி அப்படி !.

இன்னும் இருக்கிறது . இன்னும் நிறையவே இருக்கிறது. அகதியாக இறக்கும்  வரையிலும் எழுதமுடியாதவை நிறைய இருக்கிறது.
-

அகதிகள் வீடடைதல்

புழுதிகள் அடங்கி வெப்பம் தணியும்
கோடையின் இரவுகளைத்தான்
வரவேற்று மகிழ்கிறோம்
தார் சீற்றின் கீழே
அடுப்பின் வெக்கைக்குள்
வெதும்பிய குரல்கள் பேசிக்கொண்டிருக்கின்றன
இதோ
மரத்தினடியில்தான் கோடையின் பகல்கள்
சீட்டாட்டமாகவும்
விரல் சுண்டும் கேரம் போர்டாகவும்
ஊர் பேச்சோடு நகர்ந்தபடி இருக்கிறது சூரியன்
இதற்காகவே நாங்கள் மரங்களை வளர்த்தோம் 
உங்களுக்கு 
அவர்களோடு உறவென்ன இருக்கப்போகிறது தெரியாது
கால் நூற்றாண்டு அகதி வாழ்வில்
ஆஸ்பெட்டாஷ் சீற்றுக்கு மாறியிருக்கிறது
பத்துக்குப் பத்து என்பதொரு கணித சூத்திரம்
இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்
கல்லறையின் அளவை
அந்திக்கருக்கலில் விடைபெற்றுச் செல்லும்
சூரியனைப் போல் மெல்ல விடைபெறுகிறோம்
மரங்களை விட்டு
வீடுகளுக்குள் வெளிச்சம் பரவுகிறது
மண்ணெண்ணெய்க் குப்பி விளக்கிலிருந்து
குண்டு பல்புக்கு மாறிவிட்டோம்
புழுக்கத்தின் நாற்றம் மிகக் கொடியது
இரவுகளை
அடக்கம் செய்யவே விரும்புகிறோம்
கோடையில் பெய்யும் 
பனியின் வெம்மையில்
குளிர் மெல்லப் பரவுகிறது
போர்த்தி உறங்குவதற்குள் விடியல் துவங்கிவிடுகிறது
மீண்டும் மரங்களோடு உறவாடுதலும்
அகதிகள் வீடடைவதும் தொடர்கதையாகிறது
மறந்துவிட்டேன்
நாளை வந்து கையெப்பம் இட்டுச் செல்லும்படி ஆணை

-

வாழ்த்துகள் Suganya Gnanasoory  🖤

 

Saturday, July 31, 2021

நாடிலி தொகுப்பு குறித்து சுப்ரா. வே. சுப்ரமணியம் பார்வை

 







“ நாடிலி “ – கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் – சுகன்யா ஞானசூரி . [ 97903 50714 ]

வெளியீடு – கடற்காகம் வெளியீடு .

விலை – ரூ 110 . [ முதல் பதிப்பு ஜூன் 2021 ]

மா . ஞானசூரி எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் யாழ்ப்பாணம் அச்சுவேலி வடக்கில் 1984 ல் பிறந்து , 1996 ல் தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்ந்தவர் . தற்சமயம் திருச்சியில் வசித்து வருகிறார் . அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது .

தொகுப்பின் தலைப்பே போதும் உள்ளிருக்கும் கவிதைகள் வாசிப்பவர்களிடம் உருவாக்கப்போகும் வலிகளை உணர்த்துவதற்கு .

வருமானம் தேடி புலம் பெயர்தல் வேறு ; வாழ்விடம் இழந்து , வாழ்வாதாரம் இழந்து வலியோடு புலம் பெயர்தல் வேறு . வந்த இடத்திலும் தனியொரு அடையாளம் இன்றி அகதி என்ற ஒற்றை அடையாளத்தோடு வாழ்தல் தரும் வலி மிகப் பெரிது . அந்த வலி குறித்து பல புதினங்களும் , சிறுகதைகளும் வந்து கொண்டேயிருந்தாலும் கவிதை என்ற வடிவத்தில் அவை வாசிப்பவர்களிடமும் அந்த வலியை எளிதாகக் கடத்தி விடுகின்றன . இந்த தொகுப்பு முழுவதும் அத்தகைய வலி தரும் வரிகள்தான் . பழைய நினைவுகள் தரும் வலிகளையும் , வந்த இடத்தில் அனுபவிக்கும் வலிகளையும் மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார் கவிஞர் . கவித்துவமான வரிகளையும் மீறி வாசித்து முடிக்கையில் நம்மிடம் எஞ்சி நிற்பவை வலி …. வலி…. வலி …. தவிர வேறொன்றுமில்லை .

அரசின் பதிவேட்டில் / அங்க அடையாளங்களோடு

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் மிச்சம் மீதியாயிருக்கும்

உயிரைக் காக்கப் போராடும் / “ அடிமையான அகதி நாங்கள் “

வேறென்ன அடையாளம் சொல்ல ? 

அகதிகள் முகாம்களில் நிகழும் கொடுமைகளை பட்டியலிட்டு முடிக்கிறார் ஒரு கவிதையை - 

உங்களுக்கு யாழ்ப்பாணம் தெரிவதைப் போல

யாழினிகள் தெரிவதில்லை . 

முகாம்களில் வாழ்விடம் என்பது ஒருவகையான வெற்றிடமே எனக் காட்டும் வரிகள் -

பத்துக்கு பத்து என்பதொரு கணித சூத்திரம்

இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்

கல்லறையின் அளவை . 

அகதி வாழ்வு என்பது எவ்வளவு கொடுமையான மனநிலையைத் தருகிறது இந்த வரிகளில் -

மஞ்சள் கனியொன்றின் / பற்குறியில்

உறைந்து கிடக்கும் / குருதியென வீச்சமடிக்கிறது

இந்த வாழ்வு . 

பழைய நினைவுகளில் மூழ்கியெழுந்து வெளியேறி தற்போதைய வாழ்வு நிலையை எளிமையான வரிகளில் கடத்திச் செல்கின்றது கவிதை ஒன்று - 

சீவல் தொழிலற்று

சீவியம் போன மூத்த குடியானவன் பிள்ளை

பனை நிழலும் அற்றுப்போனான் . 

கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளை சற்றே மாற்றிப் போட்டுள்ள வரிகளின் வீரியம் எவ்வளவு வெப்பத்தைக் கொணர்கிறது -

சமுத்திரத்தின் பெருவெளியில்

படகுகளோடு மூழ்கிய குழந்தைகளையொதுக்கும்

கரையில் நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்

யாதும் ஊருமில்லை / யாவரும் உறவுமில்லை . 

அகதிகளின் வாழ்வில் எதுவுமே நிரந்தரமல்ல எனினும் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற நம்பிக்கையை தனக்குள்ளாகவே உருவாக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழி ?

அன்றன்றைக்குப் பெய்யும் / மழையை

அன்றன்றே ரசித்துவிடு / பிறிதொரு நாளில்

அது அதுவாகவும் நாம் நாமாகவும்

இருப்போமா தெரியாது .  

 


வாழ்வு தேடி வந்த இடத்திலும் வாடிக்கையான கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன – ஆனால் எவ்வளவு மனப்புழுக்கம் !

கந்து வட்டியில்தான் இந்த வருடமும்

எமக்கான தீபாவளி / அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது .  

தங்களது வலிகளை பிறரிடம் பகிர்கையில் எத்தனை சோகத்தை மனதில் தேக்கி வைத்திருந்தால் இந்த வரிகள் உருவாகும் –

இடப்பெயர்வின் வலிகளை

அகதியானவர்களிடத்து கேட்டுப் பாருங்கள்

கண்ணீரில் மிதக்கும் வாழ்வில்

நீந்த முடியாது அலைவுறுவீர்கள் . 

இந்த வரிகளை வாசிக்கையில் நமக்குள் ஏற்படும் குற்ற உணர்வை அவ்வளவு எளிதில் உதறிச் செல்ல முடியாது - 

போரை எவரும் விரும்பி ஏற்பதில்லை

ஆனால் அதுதரும் / விளைவுகள் குறித்து அச்சப்படுகிறேன்

போர் திணித்த இடப்பெயர்வில்

எப்படி நீங்கள் என்னை / அகதியென விளிக்கிறீர்கள் ?  

மழை குறித்துதான் எத்தனை கவிதைகளை வாசித்து விட்டோம் . ஆனால் அந்த மழை ஒரு நாடிலியின் பார்வையில் வேறு ஒரு உணர்வுகளை உருவாக்கி விடுவதை உணர்த்தும் வரிகள் -

யார் / கவிழ்த்துவிட்டது / அந்த மதுப்புட்டியை ?

இப்படிப் / பொங்கி வழிந்தோடுகிறதே

நிலமெங்கும் வெள்ளமென அகதிகளின் கண்ணீராய் . 

எவ்வளவுதான் வேதனைகள் சூழ்ந்திருந்தாலும் இயற்கையை இரசிக்காமல் இருக்க முடியவில்லைதான் . ஆனால் அந்த இயற்கையும் ஒரு சுய பச்சாதாபத்தைத்தானே உருவாக்கி விடுகிறது -

தாயகமிழந்த என்னை / நீங்கள்

அகதி என்றழைப்பதைபோல்

சாயமிழந்த வண்ணத்துப்பூச்சிகளை

என்ன பெயரால் அழைக்கிறீர்கள் ?  

உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பெருந்தொற்று காலக் காட்சிகள் ஒரு நாடிலியின் பார்வையில் தொற்று குறித்த பயத்தைவிட தனது எதிர்காலம் குறித்த அச்சத்தை மட்டுமே உருவாக்கி விடுகின்றன என்பதை உணர்த்தும் ஓர் ஒப்புமை -

ஊடகத்தில் நிரம்பி வழியும் / பெருந்தொற்றில்

சாலைகள் மரணித்துக் கிடக்கின்றன

நிச்சயமற்ற எதிர்காலத்தின் / சூனியத்துழலும் ஏதிலிபோல்

அச்சம் ஒவ்வொரு இல்லத்திலும் அடைந்திருக்கிறது . 

புலம் பெயர்ந்த வலியை மிகுதியாகப் பேசினாலும் , உலகின் பொதுவான பிரச்சினைகளையும் பாடுபொருளாகக் கொண்டு சில கவிதைகளைத் தருகிறார் – சற்றே பகடி கலந்து தன் வலி மறக்கும் முயற்சியாக .

மேலைத்தேய கார்ட்டூன்கள்

அறிவையும் அன்பையும் போதிக்கும்வேளையில்

அடைக்கல தேசத்தின் கார்ட்டூன்கள் நஞ்சூட்டுகின்றன . 

சிறு சிறு வார்த்தைகள்தான் ; ஆனால் எத்தனை அர்த்தம் பொதிந்தவை –

கடல்மீதும் / சிறுதுண்டு நிலம்

தேடும் / அகதியின் பாதம் . 

ஒரு சில வரிகள் படைப்பாளியின் குரல் வழியே அனைத்து நாடிலிகளின் மனக் குமுறல்களையும் வலி பொதிந்து தருகின்றன -

அடைக்கலமான தேசத்தில் / நடைப்பிணங்களாய்த் திரிகின்றோம் / நினைவில் / ஊரைச் சுமந்தபடி . 

*************************************

தினந்தினம் இப்படி இறப்பதைக் காட்டிலும்

போர் நிலத்தில் / ஒரு கணம்

இறந்தே போயிருக்கலாம் / புலம் பெயராது . 

வாசிக்கும் யாரையும் உலுக்காமல் விடாது இந்த வரிகள் -

துயர்மறந்து விடியலை நோக்கும் / என் கனவுகளை

அகதியென்னும் ஒற்றைச் சொல்லில் / சிதைத்துவிடுகிறீர்கள் . 

தொகுப்பை வாசித்து முடித்ததும் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்வு குறித்த வலி மிகுந்த உணர்வுகளை நம்மிடம் கடத்தி விடுவதன் மூலம் படைப்பாளி அவரது முயற்சிக்கான முழு பயனையும் அடைந்து வெற்றி பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும் ; நாடிலிகளின் வலி குறித்த வலிமையான வரிகளைத் தாங்கிய தொகுப்பு .   

- சுப்ரா .