Thursday, December 12, 2019

தமிழக வாழ் ஈழ அகதிகளும் இந்தியக் குடியுரிமையும்

#CAB

2009 ல் தி.மு.க-காங் கைவிட்டதாகக் கதறிய எம் உறவுகளே 2019 ல் அ.தி.மு.க-பாஜக முதுகில் குத்திவிட்டதே. என்ன செய்யப் போகிறோம்? ஈழத்தமிழர்கள் மத மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை இனியாவது உணர்ந்துகொள்ளுங்கள்.

இந்து ஈழம் பெற்றுத்தர மத்திய அரசு முன்வருமென சொன்ன அந்த புரட்சிப் பாவலனை நினைத்து அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை. ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத் தலைவரின் செயல்பாடுகள் மிகவும் மோசமான ஒன்று. அவர் அகதிகளின் பிரதிநிதித்துவத் தலைவர் இல்லையே?

போரில் பயந்து ஓடியவர்கள்தானே நீங்கள்? இங்கே நாங்கள் உயிரோடு வாழவில்லையா? போர்தான் முடிந்து விட்டதே நாடு திரும்பி அறப்போராட்டம் செய்யலாம்தானே? என்பது போன்ற இழிவான சொற்களை வீசிக்கொண்டிருக்கிறார்கள் ஈழத்திலே (நாம் நம்பிக்கொண்டிருக்கும் நாடு) இருக்கின்ற இளைஞர்களில் சிலர். அறப்போராட்டம் தோற்றுத்தான் ஆயுதப் போரட்டத்துக்குள் தள்ளப்பட்டோம் என்கிற வரலாறு கூடவா இவர்களுக்குத் தெரியவில்லை? சரி இப்போது இப்படிப் பேசுகின்ற இவர்கள் தங்களுடைய காணிகளை இங்குள்ள அகதிகளுக்கு (நாடு திரும்பும் பட்சத்தில்) பகிர்ந்தளித்து வாழ்வதற்கு தயாராக முன்வருவார்களா? வரமாட்டார்கள்.

தமிழகத்தில் உள்ள அகதிகளைப் பார்த்து வீசும் வசைச்சொற்களை அமெரிக்க, ஐரோப்பிய தேசங்களில் உள்ள "புலம்பெயரிகளை" (அவர்கள் அகதிகள் என்ற சொல் இழிவானது என்பதால் புதிதாக கண்டடைந்து மாற்றாக பயன்படுத்தும் சொல்) நோக்கி வீசமாட்டார்கள். ஏனெனில் அங்கிருந்து கிடைக்கின்ற பணம்தான் காரணம்.  அங்கிருந்து அவர்கள் பாடுபட்டு அனுப்புகின்ற செல்வங்களில் வசதியாக இருந்துகொண்டு எப்படி வேண்டுமானாலும் தமிழக அகதிகளை உதாசீனப்படுத்தலாம் என்கிற வீராப்பை இவர்களுக்கு யார் வழங்கியது? இங்குள்ள அகதிகள் உங்களுக்கு கிள்ளுக்கீரைகளா?

தமிழினம் பண்டைய காலந்தொட்டு ஒற்றுமையின்மையாலே பல்வேறு குழுக்களாக பிளவுபட்டுக் கிடக்கிறது என்பதுதான் வரலாறு. என்றைக்குமே இவர்கள் ஒற்றுமைக்கான காய்களை முன்னகர்த்த மாட்டார்கள்.

தமிழகத்தில் வாழ்கின்ற 63000 பேரில் 30000 பேர் வரை இந்திய வம்சாவழியினர். இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இருநாட்டு அரசுகள் காகிதங்களில் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களால் வாழ்விழந்து நிலமிழந்தவர்கள். இவர்களை அங்கேயும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இங்கும் இப்போது கைவிட்டு விட்டார்கள். போர்க்காலத்தில் கடல் தாண்டிய ஒரே தவறு சட்டவிரோத குடியேறிகளாக்கியது. இனி என்ன செய்வது? இன்னொரு பாரிய இடப்பெயர்வுக்கு நாம் தயாராகுவதைத் தவிர. சாதிய வன்மங்களும், மத பேதமைகளும், வர்க்க முரண்களும் கொண்ட இலங்கைக்கு அனுப்புவதைக் காட்டிலும் இந்துமகா சமுத்திரத்தினுள் எல்லோரையும் கொன்றழித்துவிடுங்கள்.

தமிழக அதிகளைக்குறித்து அக்கறையோடு இந்திய மக்களவையில் குரல்கொடுத்த, குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முனைவர் இரவிக்குமார், தொல். திருமாவளவன் மற்றும் திமுக வின் நல்லுள்ளங்களுக்கு இந்நேரத்தில் அகதிகளாகிய நாம் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

அகதிகளாகிய நமக்குள்ளும் பல்வேறு குழுவாதங்கள் இருப்பதை ஒத்துக்கொண்டு அடுத்தகட்ட முன்னகர்வை மேற்கொள்வோம்.

- சுகன்யா ஞானசூரி
12/12/2019