Tuesday, March 28, 2023

மரணத்தின் வாசனையும் அது தரும் வாதையும்

மரணத்தின் வாசனையும் அது தரும் வாதையும்.

- சுகன்யா ஞானசூரி



கடல் யாரோ ஒருவரின் துயரத்தை உள்வாங்கி கரையில் மோதித் தெறிக்கிறது என்ற த. அகிலனின் சிறுகதையில் உள்ள வரிகள் அவ்வளவு எளிதாகக் கடந்துவிடும் ஒன்றல்ல. 

நீர் தன் இருப்பிடத்திற்கேற்ப்ப தன் வடிவத்தைக் காட்டுவதைப் போலவே இங்கு மரணம் தன் அரூப வாசத்தை நுகரச் செய்கிறது. யுத்த வாதைகளில் இனியும் சப்பிப் போட எதுவும் இல்லாதபடிக்கு புதிய புதிய விமானங்களின் குண்டுவீச்சுகள், வித விதமான எறிகணைகள் என பலதரப்பட்ட முதலாளிய வர்க்கங்களின் ஆடம்பரப் பசிக்கு எளிய உணவாகிப் போனதென்னவோ சனங்கள், விலங்குகள், புல் பூண்டு தாவரங்கள் என சகலமும் மரணத்தின் வாசனையை நுகர முடியாமல் எனது பன்னிரண்டாவது வயதில் வெளியேறினேன் என்பதை விடவும் வெளியேற்றப்பட்டேன் என்பதே பொருத்தமாகும். 

1995 வரையில் வன்னி நிலம் எத்தகையது என்பதை நான் அறியவில்லை. அந்த ஆண்டின் பாரிய இடப்பெயர்வான யாழ் வெளியேற்றம் (1990 களில் முதல் யாழ் வெளியேற்றம் எம் சகோதரர்களுக்கு நடந்த பிறகான சில ஆண்டுகளில்) பூநகரிக்கும் ஆனையிறவுக்கும் நடுவே கிளாலி நீரேரி வழியாக வன்னி நிலத்தில் கால்பதிக்க வைத்தது. பெரு வனங்களும் பெரு வெளிகளுமாக அச்சம் தருவதாக இருந்தாலும் புதிய அனுபவமாக இருந்தது அப்போது. அது சிறுவர்களுக்கே உரிய மனம். கிளிநொச்சி, மாங்குளம், கனகராயன்குளம், கொல்லர் புளியங்குளம், மல்லாவி, வலைப்பாடு இப்படியாக 1996 செப்டம்பர் வரையிலான காலகட்டத்துக்குள் எத்தனை இடப்பெயர்வு. மலேரியா, நெருப்புக் காய்ச்சல், பாம்புகளோடு உறக்கம், காட்டுப் பன்றிகள் தொல்லை இப்படி நிறைய நிறையவே புதிய அனுபவங்களை வன்னி மண் தந்திருந்ததை த. அகிலனின் "மரணத்தின் வாசனை" சிறுகதைகள் தொகுப்பு மீண்டுமொரு நினைவுப் பயணத்திற்குள் என்னை அழைத்துச் சென்றன என்றால் மிகையாகாது. 

எம்.ரி 90 வண்டிகள் இப்போது (யப்பான் கோண்டா தயாரிப்பு) ஹீரோ கோண்டா ஆகிடுச்சு என்ற வரிகளை வாசிக்கையில் மலேரியா காய்ச்சல் கண்ட அப்பாவை கொல்லர் புளியங்குளம் முகாமிலிருந்து மாங்குளம் சந்தி பெரிய ஆஸ்பத்திரிக்கு அப்பாவின் எம்.ரி 90 மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற நினைவுகளை மீட்டிச் சென்றது. 

போர் தின்ற சனங்களிடம் சொல்வதற்கு நிறைய நிறைய கதைகள் இருக்கிறது. இவைகளை ஒருபோதும் இலக்கியமாக யாரும் ஏற்பது இல்லை. இட்டுக்கட்டிய புனைவுகளையே போரிலக்கியம் என்று கூவிக் கூவி விற்கும் விற்பன்னர்களையே இன்றைய நவீன உலகம் அலங்கரித்து வருகிறது. 

அகிலனின் கதைகளுக்குள் இந்திய இராணுவத்தின் அடாவடியால் பாம்பு கடித்து மருத்துவமனை கொண்டு செல்ல முடியாமல் இறக்கும் அப்பா, ஊரைப் பிரிந்து இடம்பெயர்ந்து திரும்பி வருகையில் சிதறுண்ட கற்குவியலாய் இருக்கும் கோயிலை காணச் சகியாத அம்மம்மாவின் இறப்பு, காதல் நிறைவேறாத சித்தியின் இறப்பு, ஒருதலைக் காதலியான காயத்திரியின் இறப்பு, பள்ளி நண்பனின் இறப்பு, தெரியாத போராளி  ஒருவரின் மரணம் இப்படி பல்வேறு மரணங்களை தன் கதைகளுக்குள் உயிரோட்டமாக்கித் தந்துள்ளார். அத்தனை இறப்புகளுக்கும் போரும், போர்க்கருவிகளும், ஆக்கிரமிப்பாளர்களும், இடப்பெயர்வுகளும் காரண காரியங்களாகி நிற்பதை யாரும் நம்புவதேயில்லை. விதியின் மீது பழி போட்டு கடந்துவிடுவது எளிதாகி விடுகிறது. எளிய மனிதர்களால் அதைத்தவிர வேறென்ன செய்துவிட முடியும்? 

சில கதைகள் தேவைக்கு அதிகமாக நீண்டு செல்வதும், ஒரே லயத்தில் சொல்லல் முறை இருப்பது சுணக்கத்தை ஏற்படுத்தினாலும் அத்தனை கதைகளும் சிறு திருப்பங்களோடு மையக் கருவை சரியாக வந்தடைகின்றன. இதுவே எழுத்தின் வெற்றியுமாகும். 

அலைகளின் மீதலைதல் எனும் எனது முதல் கவிதைத் தொகுப்பில் "கடல் மீது/ கால் நனைப்பதாய்/ மறந்தும் மிதித்து விடாதீர்கள்/கரைதேடி அலைகளின் மீதலைகிறது /அவர்களின் ஆன்மாக்கள் என எழுதியிருப்பேன். அது என் கண்முன்னால் மூழ்கடிக்கப்பட்ட படகில் இறந்துபோனவர்களுக்காக எழுதியவை. இப்போதும் அந்த நாட்களை நினைத்தால் நெஞ்சம் பதறவே செய்கிறது. கரையென நம்பி மணல் திட்டுக்களில் இறக்கிவிட்ட படகோட்டிகளும், மணல்திட்டில் மூழ்கி இறந்து போனவர்களும் தப்பிப் பிழைத்தவர்களும் என ஒரு பெருங் கூட்டமாகவே 1996களில் தனுஷ்கோடி கரைகளில் கால் பதித்தோம். தாயையும் சகோதரிகளையும் காப்பாற்றிவிடும் எத்தனத்தில் கானல் நீர் முகத்துவாரத்தில் மூழ்கிச் சாவெய்துபவனின் கரம்பற்ற இயலாமல்போன குறுகுறுப்பை "கரைகளுக்கு" என்ற சிறுகதை புலப்பெயர்வின் விடியலை வைகறைக்குள் புதைத்துச் செல்லும் கதை. 

மொத்தம் 12 சிறுகதைகள். ஒவ்வொன்றும் விதவிதமான மரணத்தின் வாசனையை சாம்பிராணிப் புகையாட்டம் திணறச் செய்கிறது. அதன் வாதைகளிலிருந்து தப்பித்தால் நீங்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவீர்கள். 


நூல்: மரணத்தின் வாசனை

ஆசிரியர்: த. அகிலன் 

வெளியீடு: வடலி 

விலை: ₹160.

Monday, March 20, 2023

கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம்


 

"அந்தரம்" கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம்.

- சுகன்யா ஞானசூரி.


அம்மா என்கிற அதிகாரத்திடம் அழுது பால் குடித்தபடியால் வேடிக்கை பார்ப்பதற்கான சத்து இன்னும் இந்த உடம்பில் இருக்கிறது.


ஒரு சாமான்ய மனித வாழ்வின் அலைக்கழிப்பு என்பது அவனது/ளது சொந்த தேசத்தில் நடப்பதாக இருப்பின் ஏதோவொரு வகையில் தீர்வை எட்டிவிடும் அல்லது குறைந்தபட்சம் சமரசத்திற்குள்ளாவது கொண்டுவரப்படும். இவை இரண்டுக்குள்ளும் அடக்க முடியாத ஆற்றாமையின் வெளிப்பாடு சொந்த தேசத்தில் இல்லாமல் அந்நிய நிலமொன்றில் அந்தரித்து நிற்கும் தமிழ் அகதிகளின் வாழ்வே அந்தரம். 


என்னால் உரைநடையில் சொல்ல முடியாமலே இருந்த என் அந்தரத்தை கவிதை எனும் வடிவம் கொண்டு வெளிக்கொண்டு வந்தேன். இது ஒரு வகையான அதிகாரத்தின் அடக்குமுறைக்கு கீழ்படியும் செயல் என்பதைக் காட்டிலும் தப்பித்தல் என்றே சொல்லவேண்டும். எது எப்படி இருந்தாலும் இவ்வளவு வெளிப்படையாக தயக்கமின்றி கால் நூற்றாண்டு தமிழர்களின் அகதி வாழ்வை ஒரு தன்வரலாற்றுப் புதினமாக்கி வழங்கியுள்ளார் தோழர் தொ. பத்திநாதன். 


இத்தனை ஆண்டுகால அகதி வாழ்வில் என்ன வகையான சொத்துக்களை சேர்க்க முடிந்தது? ஆடம்பரம் சுகபோக வாழ்க்கை? ஒருவேளை உணவைத்தானும் கடன்காரர் ஆக்கினை இன்றி உண்ண முடிந்ததா? படித்த படிப்பிற்கேற்ற வேலை? வேலைக்கேற்ற ஊதியம்? ஒருமுறையாவது அதிகாரிகளிடம் இழந்துபோகாத தன்மானம்? எந்த ஒன்றிற்கும் அகதியால் பதில் சொல்லிவிட முடியாதபடிக்கு இந்த வாழ்க்கை தொலைக்கப்பட்டு விட்டது என்பதை விடவும் தமிழ் அகதிகள் தமிழ் அதிகாரிகளின் சப்பாத்துக்களின் கீழ் நசுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே முரண் நகையானது. 



பெண்மையை, பெண் சுதந்திரத்தைப் பேசாத எந்தவொரு படைப்பும் அத்துணை கலைத்தன்மை கொண்டதாக அமைந்துவிடாது. சாந்தி எனும் மையப் பாத்திரத்தின் நகர்வினூடாக பல்வேறுபட்ட முகாம் பெண்களையும் முகாம்களை ஒட்டியுள்ள ஊர்ப் பெண்களையும் அவர்களின் பார்வையில் முகாம் எனும் திறந்தவெளிச் சிறைச்சாலையின் பன்முகப் பார்வைகளை அவதானமாக கையாண்டுள்ளார். கரணம் தப்பினால் மரணம் என்ற வார்த்தையைப் போலத்தான் இருபக்கமும் கூர்மையுள்ள கத்தியின் மீது நடப்பதைப் போன்ற பதற்றமே அந்தரத்தினை வாசித்து முடிக்கும்வரை. 


இருபக்க உறவுகளுக்குள்ளும் பார்வைக் கோணல்கள் இருக்கிறது. அது சமய சந்தர்ப்பம் பார்த்து வெளிப்பட்டும் இருக்கிறது. இப்போதும் வெளிப்பட்டவண்ணம் இருப்பதையும் மறுக்க முடியாது. ராஜீவ்காந்தி கொலைக்கு முன் ராஜீவ்காந்தி கொலைக்குப் பின் என தமிழகத்தில் ஈழ அகதிகள் வரையறுத்துப் பார்க்கப்படுவதும் கண்கூடு. இன்றைக்கு எவரும் இல்லை ஆனால் அவலங்களைச் சுமப்பது என்னவோ சாமான்ய அகதிகள்தான். நரம்பில்லாத நாவுக்குத்தான் எத்தனை தடித்த சொற்களை வீசி எறிகிறது எளிதில். அது மனதில் ஆறாது அந்தரித்து நிற்கிறது மனம் நொந்தபடி. 


சாதி சமயம் இரண்டும் மனிதர்களை எந்த எல்லைக்கும் அழைத்துச் செல்லும். அதுபோல் வஸ்துகளின் பழக்கவழக்கங்களும், கொலைக் குற்றங்களும்,  முகாம் தலைவர் எனும் போதையும் அதிகாரிகளிடம் சொந்த மக்களையே காட்டிக்கொடுக்கும் கேவலமான செயலையும் செய்யத் தயங்காது என்பதை கந்தசாமி, முருகானந்தம் மாந்தர்கள் வழி எடுத்தியம்பிள்ளார். அதேபோல் கல்வியின் பெயரால் தொண்டு நிறுவனங்களும், மத நிறுவனங்களும் செய்த செய்கின்ற மோசடிகளும் கொஞ்சநஞ்சமல்ல. அகதிகளின் பெயரால் அவர்கள் பரலோகத்தில் நித்தியமடைவார்களாக ஆமென். 


அந்தரம் புதினத்தில் கதைசொல்லியாக பத்திநாதனே பயணிக்கிறார். தான் பார்த்த காட்சிகளை, தான் வாழ்ந்த வாழ்வை அவர் சொல்லிச் செல்வதைப் போலவே அமைத்துள்ளார். இங்கே ஜிகினா வேலைகளுக்கு இடமின்றி உள்ளதை உள்ளபடியே சொல்லியிருப்பதால் சக அகதியாக அவருக்கு என் ராயல் சல்யூட். மற்றபடி பெயர் மாற்றங்களும், கட்டிட மாற்றங்களும் நிகழ்ந்துவிடுவதால் மட்டும் எதுவும் உடனடியாக மாறிவிடாது. அதிகார வர்க்கத்தின் புலனாய்வு முற்றாக நீக்கப்பட்டு சுதந்திரமான வாழ்க்கை வழங்கப்பட்டால் மட்டுமே அந்தரித்து நிற்கும் மனங்களில் ஆறுதல் ஏற்படும். 


அவர் மன்னாரில் நின்றுகொண்டு கடந்துவந்த இந்த வாழ்வை வேடிக்கை பார்க்கிறார். நான் உள்ளுக்குள் இருந்துகொண்டே வாசித்து நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன்.


"அந்தரம்" தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகளின் கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் ஒரு காட்சிப் படம். 


ஆசிரியர்: தொ. பத்திநாதன் 

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

விலை: ₹250.