Saturday, October 24, 2020

றாம் சந்தோஷின் சொல் வெளித் தவளைகள் - என் மனவெளியில்


 

றாம் சந்தோஷின் சொல் வெளித் தவளைகள் 


கவிதையில் அழகியல் குறித்து, அரசியல் கவிதைகள் அழகியலற்ற வறட்டு நிலைகுறித்து, தத்துவார்த்தமும், படிமங்களும், தொன்மங்களும், மிகையுணர்ச்சிகளும், ஒருவித சோக இழையோட்டமும் இன்னபிற என அமைந்தால்தான் தரமான கவிதை என்ற இதுநாள்வரையான அத்தனை எண்ணவோட்டத்தையும், எனக்குண்டாகியிருந்த பீதியையும் சொல் வெளித் தவளைகள் கலைத்துப்போட்டு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. 


இந்த தரமான, தரமற்ற என்ற பதங்களை உதிர்ப்பவர்களை வைத்தே இந்த கவிதையியலின் கலாச்சார காவலர்கள் யார் என்பதை நாம் இனங்காண முடியும். ஆனால் இவை எவற்றுக்குள்ளும் அடைபடாத புதிய பாணியிலமைந்த அதாவது பின்நவீன கோட்பாட்டில் (இது தோழர். ஜமாலனின் முன்னுரையில் சுட்டப்பட்டுள்ளது.) அமைந்துள்ள சுய பகடித் தன்மையுடன் கூடிய கவிதைகள். சங்க காலம் தொட்டு எங்க காலம் வரை (தோழர். ஜமாலன் கூற்று முன்னுரையில்) எல்லாக் காலத்தையும் சுய எள்ளலோடு எளிய வரிகளில் கவித்துவம் குன்றாமல் (இங்கு நானே உதிர்க்க வேண்டியதாகிவிடுகிறது) மன வெளியெங்கும் தவளைகள் பாய்ச்சலை நிகழ்த்துகின்றன. 


ஒரு தமிழ் ஆய்வு மாணவர் என்ற வகையில் அவரது தமிழ் இலக்கண, இலக்கிய மரபுகள் இந்த புதிய சிந்தனைக்கு கைகொடுத்திருக்கிறது என்பதற்கு அப்பால் சமகாலத்தில் அதன் தேவை கருதி படைப்பாக்கம் ஆக்கியிருக்கும் மனதிற்கு ஆயிரமாயிரம் கைகுலுக்கல்கள் பத்தாது. 


பிரதிக்கு வெளியே ஒன்றுமில்லை என்கிறார் ழாக் தெரிதா. அத்தனை சமாச்சாரங்களையும் இந்த ஒற்றைப் பிரதிக்குள் முயன்றிருக்கிறார். இப்படியான பரிசோதனை முயற்சியான பிரதியுருவாக்கம் தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஒரு அவசியத் தேவை. இவைகள் காலத்திற்கும் நின்று பேசக்கூடியவை. 


பூனைகளை கவிதைக்குள் கொண்டுவரவில்லை எனில் கவிஞர் என அழைக்கமாட்டார்கள் போல. ஆனால் இங்கே யானை, புலி, நாய், பன்றி, மாடு, மான், நரி, வெளவால் என விலங்குகள் கவிதைகளுக்குள் உலவ விட்டுள்ளார். டாக்கிங் டாமாக பூனை உலவுகின்றது. அதேபோல் கம்யூனிஸ்டுகள், திராவிடர்கள், தமிழ்த் தேசியர்களின் போர்வையில் உலவுகின்ற போலிகளின் முகமூடிகளை கிழித்தெறிகிறார். உடல் உறுப்புகளை களவாடும் மருத்துவத் துறையின் அயோக்கியத்தனத்தை சுட்டும் "எனக்கு நலம் சரியில்லை" கவிதையில் நகுலனை கண்டுகொண்டேன். மாட்டரசியல், பணமதிப்பிழப்பு, கோமியக் குடிக்கிகளின் சங்கித்தனம், இலக்கியவாதிகளின் மேட்டிமைத்தனம், கடவுளர்கள் என பலவற்றையும் பகடிகளோடு குறிப்பால் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். சரி எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தினால் பதில்தான் என்ன? எல்லாவற்றையும் தோலுரித்தால் அங்கே ஒன்றுமே மிஞ்சப்போவதில்லையே? (ஆமாம் வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றுமில்லைதான். விலை கண்ணீர் வர வைக்கிறதே. ஆனாலும் பயன்படுத்தாமல் இருக்க முடிகிறதா? ) மனிதம் எனும் அறம் ஒன்றே அதன் பதிலாகிறது. இந்த நூற்றாண்டின் நுகர்வுக் கலாச்சாரத்தில் அதை நாம் தொலைத்துவிட்டோம். அதைக் கண்டடைய இத்தகைய பிரதியாக்கங்களை அடையாளப்படுத்துகிறோம்.


இத்தொகுப்பில் கீறப்பட்ட சித்திரங்கள் சிறப்பான குறியீட்டு தன்மையோடு கவிதைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. புதிய முயற்சிகள் ஒரு கனவு முயற்சி. First impression is the best impression என்பார்கள். தோழர் றாம் சந்தோஷ் இதை மனதிற்கொண்டு சிறப்பாகச் செய்துள்ளார் என்றால் மிகையில்லை. ஏனெனில் பிரபலமாக இருக்கக்கூடிய பலரும் தங்கள் முதல் பிரதிகளை மறைத்தே வைத்திருப்பர். அதுகுறித்து நான் சொல்லத் தேவையில்லைதானே? 


பின்குறிப்பு: இவற்றை நான் எனது கைப்பேசியில் கழிவறையில் அமர்ந்துதான் டைப் செய்தேன். வெஸ்டர்ன் டாய்லெட்டைக் கண்டுபிடித்தவருக்கு ஆயிரம் நன்றிகள். 

- சுகன்யா ஞானசூரி

24/10/2020

வெளியீடு: சொன்மை பதிப்பகம் 

விலை: ₹110

இது முதற்பதிப்பு. இரண்டாம் பதிப்பை எதிர் வெளியீடு கொண்டுவந்துள்ளதாக அறிகிறேன்.

Monday, October 19, 2020

ழாக் தெரிதா - கட்டவிழ்ப்பு

 


"ழாக் தெரிதா" கட்டவிழ்ப்பு எனும் கோட்பாட்டின் தந்தை என்றே அழைக்கலாம். தத்துவம், இலக்கியம் மற்றும் ஓவியம் என எல்லா தளத்திலும் தனது கட்டவிழ்ப்பு எனும் புதுவகைச் செயல்பாட்டின் மூலம் ஐரோப்பியர்களின் கருத்துக்களை நிர்மூலமாக்கியவர் என்றே சொல்லலாம். இந்தக் கட்டவிழ்ப்பின் செயலால் நண்பர் ஒருவருக்கு ஆதரவாக எழுதி கட்டவிழ்ப்பு கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கி இறுதிக்காலத்தில் மெளனிக்கப்பட்டவர். மார்க்சியத்தையும் கட்டவிழ்ப்பு செய்து மார்க்சியர்களின் வெறுப்பைச் சம்பாதித்தார்.  


எம்.ஜி. சுரேஷின் இந்தச் சிறுநூல் அறிமுக வாசிப்பாளர்களுக்கு ஆகச் சிறந்த ஒரு கையேடு என்றே சொல்வேன். எளிமையான எடுத்துக்காட்டுகளோடு குறியியல் குறித்தும் பிராய்டிசம் குறித்தும் விளக்கிச் செல்கிறார். அடையாளம் பதிப்பகத்தின் பின்நவீன சிந்தனையாளர் வரிசை நூல்களில் மற்றவற்றையும் வாசிக்க வேண்டும் எனும் ஆர்வம் எழுகிறது. வாய்ப்புள்ளோர் வாசித்துப் பாருங்கள். 


- சுகன்யா ஞானசூரி

19/10/2020.

நன்றி: Markandan Muthusamy ஐயா.