Sunday, June 4, 2023

அகதிகள் மறுவாழ்வு முகாமிலிருந்து ஒரு குரல் - சுகன்யா ஞானசூரி

 







அகதிகள் மறுவாழ்வு முகாமிலிருந்து ஒரு குரல் 

**********

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

- கணியன் பூங்குன்றனார் 

ஒரு உலகளாவிய ஒற்றுமைப்பாடு கொண்ட பரந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒருவரால்தான் இப்படியான ஒரு வார்த்தையைச் சொல்ல முடியும். அப்படி அவர் சொல்வதற்கு நிச்சயம் ஏதாவதுதொரு ஒடுக்குமுறைக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். இதுதான் உண்மையாகவும் இருக்கக்கூடும். இல்லையெனில் சாதாரணமாக ஏன் கணியன் பூங்குன்றனார் இந்த வார்த்தைகளை உதிர்க்க வேண்டும் சொல்லுங்கள்? சரி நாம் இதுகுறித்து இன்னொரு ஆய்வுக் கட்டுரையில் பேசுவோம். விசயத்திற்கு வருகிறேன்.

சமீபத்தில் வெளியாகியுள்ள "யாதும் ஊரே யாவரும் கேளிர்" திரைப்படத்தை ஒட்டிய கதைத் திருட்டு சர்ச்சைதான். அகதிகள் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் தோழர் பத்தினாதன் கதைகள் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்தப் பதிலும் கூறப்படவில்லை. குறைந்தபட்சம் ஒரு உரையாடலுக்கான கதவுகூட திறக்கப்படவில்லை. இது இன்று நேற்றல்ல கறுப்பு வெள்ளைக் காலம் தொட்டு கலர்க்கலரா ரீல் விடுகின்ற  இன்றைய காலம்வரை தொடரும் ஒரு சாபக்கேடு. 

அகதிகள் முகாம் அகம் புறம்: 

முதலில் நாம் பிற தேசத்து அகதிகளோடு தமிழ்நாட்டில் வதியும் ஈழ அகதிகளை ஒப்புமைப்படுத்திப் பார்க்கும் மோசமான நீசத்தனத்தை தூக்கிப்போட வேண்டும். இங்கே உள்ள அகதிகளிலும் திறந்தவெளிச் சிறச்சாலையான மக்கள் நெருக்கமாக வாழும் முகாம்களுக்கும், பிற போராளிக் குழுக்கள் வசிக்கும் சிறப்பு முகாமுக்கும், போதை மருந்துக் கடத்தல், ஹவாலாப் பணப் பரிமாற்றம், கடவுச்சீட்டு மோசடி என பல குற்றப்பின்னணியோடு அடைக்கப்பட்டிருக்கும் "சிறப்பு முகாம்" எனும் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்குமான வேறுபாட்டை யாரும் உணர்ந்துகொள்வதே இல்லை. அவர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் செய்தித்தாளில் மொட்டையாக அகதி என்ற சொல்லில் செய்தியை முடித்துக் கொள்வார்கள். இப்படியான மோசமான செய்திகள் நாளடைவில் இவர்கள்மீது எப்போதும் ஒரு குற்றப்பின்னணியோடு கூடிய பார்வையை பொதுப்பரப்பில் பிம்பக்கட்டமைப்புச் செய்துவிடுகிறது என்பதுதான் எதார்த்தம். 

அகதிகள் முகாம்களுக்குள் குடியுரிமையற்று நாற்பது ஆண்டுகளாக எந்தவித சுகத்தையும் அனுபவிக்க முடியாமல் மனம் குமைந்து எமக்கான ஒரு வெளிச்சம் கிடைக்காதா என்ற அங்கலாய்ப்பில் கல்வி கற்று மேலே வந்தால் படிப்புக்கேற்ற வேலை இல்லை. சரி இந்தப் படிப்புக்கு வேறு நாடுகளில் வாய்ப்பு கிடைத்தால் கடவுச்சீட்டு எடுக்க முடியாத மோசமான சூழலில் அரசு சட்டவிரோதக் குடியேறியாக முத்திரை குத்தி வைத்திருக்கிறது. இப்படியான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் கடந்த காலத்தில் சிலர் படகில் ஆஸ்திரேலியாவுக்கு கள்ளத்தனமாக பயணித்ததையும் நாம் நாகரீகமாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இங்கே எவ்வித தீர்வுக்கும் வழியற்று இருக்கையில் மாற்றுவழி என்ன என்பதை தேடுவது மனித இயல்பு. 

சட்டவிரோதக் குடியேறியாக நடுவண் அரசு எம்மை முத்திரை குத்தி வைத்திருக்கிறது. திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாக்களில்கூட எதிரியென சித்தரித்துக் கொண்ட அண்டை நாட்டின் அகதிகளுக்கெல்லாம் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஈழ அகதிகளுக்கு அங்கே இடமில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் சரத்துகளில் கைச்சாத்திடாத காரணத்தையே இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் தூக்கிச் சுமப்பார்களோ தெரியவில்லை. 

கோடம்பாக்கத்தின் அகதிகள் குறித்த சினிமாவுக்கான கச்சாப்பொருட்கள் சிறப்பு முகாம் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. ஏனெனில் இவர்கள் யாரும் சாதாரண மக்கள் வசிக்கும் முகாம்களுக்குள் அனுமதியின்றி செல்லவோ, உரையாடவோ வழியில்லை என்ற எதார்த்தத்தினை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். செய்தித்தாள்களில், சமூக ஊடகங்களில் வருகின்ற செய்திகளை வெட்டி ஒட்டி பல தமிழ் சினிமாக்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

எழுத்தாளர் பத்தினாதன்: 

2007 ல் போரின் மறுபக்கம் தன்வரலாற்று நூல் வாயிலாக தமிழகத்தின் அகதிகள் பாடுகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர். பிறகு தமிழகத்தின் ஈழ அகதிகள் வரலாறு, தகிப்பின் வாழ்வு, சமீபத்தில் வெளியான அந்தரம் நாவல் மூலம் அகதிகள் முகாம்கள் குறித்த குறுக்குவெட்டுத் தோற்றத்தினை வெளியுலகு அறியச் செய்தவர். அவரது நூல்களை மேற்கோள் காட்டி சில தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. தெம்மாடுகள் நாவல் மூலம் உதயனும், ஏதிலி நாவல் மூலம் அ.சி.விஜிதரனும் எம் வாழ்வு குறித்து எழுதியவர்கள். ஆரம்பகட்டத்தில் புலனாய்வுத்துறையினரின் விசாரணைகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் கவிதை எனும் கருவி மூலம் சிவா.மகேந்திரன், ஈழபாரதி, நடராஜா சரவணன், அ.சி.விஜிதரன், சுகன்யா ஞானசூரி போன்றவர்களோடு இன்றும் புதிய இளையவர்கள் எம் வாழ்வை வெளியுலகத்திற்கு படம்பிடித்துக் காட்டுகிறார்கள். இப்படியான அவலப்பாடுகளோடு மேலெழுந்து வரும் மக்களைத்தான் தமிழ்ச் சினிமா மிக மோசமாக சித்தரித்து வருகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் சர்ச்சை

தோழர் பத்தினாதனின் கதைகளின் காட்சியமைப்புகள் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பத்தினாதன் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு படக்குழுவினர் இன்னமும் பதிலளிக்கவில்லை. இதுகுறித்து ஒரு திறந்த உரையாடலுக்கு பத்தினாதன் அழைப்பு விடுத்தபோதும் அதை அவர்கள் புறக்கணித்து அவரது முகநூல் கணக்கை முடக்கச் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது சென்னைவரை வரவைத்து அலைக்கழிப்பு செய்திருக்கின்றனர். இதுதான் பொதுவுடைமை கொள்கையாளன் என தன்னை கூறிக்கொள்ளும் இயக்குநருக்கு அழகா? ஒட்டுமொத்தமாக நான் யாரையும் குறைகூறமாட்டேன். முதலாளித்துவத்தை, ஏகபோகத்துவத்தை சமன்படுத்தி எல்லோருக்கும் எல்லாமும் சம அளவில் கிடைக்கச் செய்வதுதானே பொதுவுடைமை? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதுதானே பொதுவுடைமை? சமீபகாலமாமா பொதுவுடைமையின் பெயரால் உழைப்புச் சுரண்டல், நிறுவனங்களின் சொத்துக்களை அபகரித்தல் என ஏகபோக முதலாளிகளாக முயற்சித்து அம்பலப்பட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் இப்படத்தின் இயக்குநரும் இருக்கிறாரா?  எல்லோருக்கும் வயிறு என்ற ஒன்று இருக்கிறதுதானே? 

படம் முன்வைக்கும் அரசியல்

 அகதிகள் குறித்து அபத்தமான காட்சிகளை இப்படத்தில் வைத்திருப்பதன் வாயிலாக அகதிகள் மீது மேலும் மேலும் களங்கம் கற்பிக்க நினைக்கிறார்கள். நிறவாதம் இங்கே தலைவிரித்து ஆடத்துவங்குகிறது. இனவாதத்தால் அழிந்து பட்ட சமூகம் நிறவாதத்தின் துணைக்கோடலோடு சாதிய மேட்டிமைகளை மீட்டுருவாக்கம் செய்ய முற்படுகிறது. மேலும் நாயக பிம்பக் கட்டமைப்புச் சினிமாவில் நாம் எம் வாழ்வு குறித்த எதார்த்தத்தை எதிர்பாக்க முடியாது. இதில் தமிழகத்தில் உள்ள அகதி நாயகன் வெளிநாட்டுக்கு எப்படிச் சென்றார்? அதற்கான சாத்தியக்கூறுகள் இந்திய வெளியுறவுக் கொள்கையில் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறதா? அதற்கான வாய்ப்புகள் இருப்பின் ஏன் கடல்வழியாக கள்ளத்தனமாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அகதிகள் புலம்பெயரப்போகிறார்கள்? இவை எல்லாவற்றிற்கும் மேலாக வெளிநாடு சென்ற  நாயகன் இலங்கையில் சர்வசன வாக்குரிமை நடாத்தக் கோருவது சுத்த அபத்தம். தமிழகத்தில் உள்ள அகதிகளின் குடியுரிமை குறித்தல்லவா அவர் கோரிக்கை வைத்திருக்க வேண்டும்? இங்கே நாற்பது ஆண்டுகளாக வசிக்கும் மக்களில் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி அவரிடம் கேள்வி கேட்டுப் பாருங்கள் எது எமக்கு அவசியமானது என்பதை பொட்டில் அடித்ததுபோல் சொல்லியிருப்பார். ஆகவே இது என்ஜிஓ (NGO) ஒன்றின் அரசியல் லாபியாகவே  தெரிகிறது.

நீண்டகாலமாக எம் மக்களின் அரசியல் பிரதிநிதிகளென தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டு செயல்பட்டுவரும் ஒரு தொண்டு நிறுவனத்தின் பிரச்சார ஊதுகுழலாக இத்திரைப்படம் தன் அரசியலை முன்வைக்கிறது. இது இங்குள்ள அகதிகளை மீளவும் நாடு திரும்ப வைக்கும் தமிழ்தேசிய படுகுழி அரசியலை முன்வைக்கிறது. இத்திரைப்படப் படப்பிடிப்பில் அத்தொண்டு நிறுவனமும் சில உதவிகளைச் செய்திருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போதைக்கு எல்லோருக்குமான அரசியல் துருப்புச் சீட்டாக தமிழகத்தின் ஈழ அகதிகள் இருக்கிறார்கள். முன்னர் இருந்தது போலவே இப்போதும் ஏமாளிகளாக இருக்கிறார்கள் என்ற எண்ணங்களை அனைவரும் கைவிடவேண்டும். ஏனெனில் கடந்த பத்தாண்டுகளில் எல்லா அரசியல் போக்குகளையும் புரிந்துகொண்டே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். படைப்பாளிகளும் உருவாகி வருகிறார்கள்.

தீர்வு:

ஒரு படத்தின் எட்டுக் காட்சியமைப்புகள் குற்றம் சாட்டுபவரின் படைப்புகளோடு ஒத்துப் போகும் எனில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வழியிருப்பதாக சட்டம் சொல்கிறது. படைப்பையும் படத்தையும் வரிக்கு வரி காட்சிக்குக் காட்சி படித்துப் பார்த்து பக்கம் பக்கமாக அறிக்கை தாக்கல் செய்து ஆண்டுக்கணக்காக காத்திருந்தாலும் நிவாரணம் என்பது கிடைக்காது என்பதே நாம் கடந்து வந்த பாதைகள் சொல்லும் செய்தி. விசாரணையின் கரங்கள் எம் குரல்வளையை நசுக்கவே எத்தனிக்கும். குறைந்தபட்சம் இப்படியான அநீதிகள் நடைபெறுகிறது என்பதை பொதுவெளியில் வைப்பது என்பதே எமது போராட்டமாகிறது.

நிறைவாக

மீண்டும் மீண்டும் நாம் சொல்வதுதான் தமிழகத்தின் ஈழ அகதிகள் விடையம் இன்னும் எம் படைப்புகளில்கூட முழுமையாக சொல்லப்படவில்லை. ஒரே இனம், ஒரே மொழி பேசினாலும் இந்த நிலத்தில் எம் வாழ்வின் சிக்கலான கூறுகள் இன்னமும் நீடித்திருக்கிறது. அப்படி இருக்கையில் ஆளாளுக்கு ஒரு கதையை அகதிகள் கதையென கோடம்பாக்கத்தில் தூக்கிக்கொண்டு வந்தால் நேரடியாக முகாம்களுக்குள் வந்து களநிலவரம் தெரிந்து பேசுங்கள், படம் எடுங்கள். அதைவிடுத்து எம்மை குற்றப்பரம்பரைகள் ஆக்காதீர்கள் என்பதை கனிவோடு வேண்டிக் கொள்கிறோம். நாம் இப்போது எதிர்பார்த்திருப்பது எமக்கான ஒரு குடியுரிமை பெற்ற சுதந்திரமான வாழ்வை மட்டுமே. நாடற்று நாதியற்று இருக்கும் எமக்கு இப்போதைக்கு  எல்லாமே யாதும் ஊரே யாவரும் கேளிர்.

அகதிகள் மறுவாழ்வு முகாமிலிருந்து 

சுகன்யா ஞானசூரி.

04/06/2023



Friday, May 12, 2023

சாத்தான்களின் அந்தப்புரம்

 சாத்தான்களின் அந்தப்புரம் 



நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதைப் பிரதியினை வாசித்துக் கொண்டிருந்தேன். சற்று ஓய்வறைக்குச் சென்று திரும்புகையில் மனைவி வாசித்துக் கொண்டிருந்தார். ஆச்சரியம் மேலிட சில கவிதைகளை அவரை வாசிக்கச் சொன்னேன். தன்னியல்பாக வரி பிரித்து வாசித்ததைக் கேட்டதும் எனக்கு வியப்பாகவே இருந்தது. அன்பாக முத்தங்களை வழங்கிவிட்டு தொகுப்பை மேலும் வாசித்து முடித்தேன். கிட்டத்தட்ட அத்தொகுப்பு வெளிவந்து பத்தாண்டு ஆகப்போகிறது. ஒரு தொகுப்பு ஒரு தசாப்தத்திற்குப் பிறகும் வாசிப்பவருக்கு புதிய அனுபவங்களையும், அதிர்வுகளையும் வழங்கும் எனில் அது சிறந்த படைப்பாகிறது. அத்தகைய படைப்பில் இத்தொகுப்பும் ஒன்று என்றால் மிகையாகாது.


\\உங்கள் நிர்வாணத்தை 

ஒன்றுமில்லாமல் செய்யத் துணிந்த நாட்களில்தான் 

நீங்கள் எங்களை ஒன்றுமில்லாதபடிக்கு 

தள்ளிவைத்து தெய்வமாக்கினீர்கள்//


தாய்வழிச் சமூகத்தை புறந்தள்ளி ஆண்வழிச் சமூகமாக ஆதிக்கம் பெற்ற மேட்டிமைத் தனத்தை, பெண் உழைப்பின் மீதான சுரண்டலை பகடி செய்யும் சிறந்த கவிதை. 


பெண் ஒடுக்குமுறை, பெண் உடல்மீதான அத்துமீறல் என சமூகத்தின் அழுத்தப்படுகள் ஒருபுறம் எனில் வீட்டில் கணவனால், உறவுகளால் ஏற்படும் அழுத்தப்பாடுகள் மறுபுறம் என நைந்துகிடக்கும் மனம் கவிதையாகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது. 


இலகுவான சொற்களும், நல்ல முதிர்ச்சியான சொற்பிரயோகமும் இத்தொகுப்பை சிறப்புறச் செய்கிறது. இவர் பொதுவுடைமை சிந்தாந்தத்தில் ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறார் என்பதையும் அறியமுடிவதால் சமூகம் குறித்த அதிலும் சமூகத்தில் பெண்களின் இடம் குறித்த கவனப்படுத்தலை கவிதைகளின் வாயிலாக நம்மோடு உரையாடுகிறார்.

அப்படித்தான் நான் பார்க்கிறேன். 


ஆண் × பெண் ஆண் × ஆண் பெண் × பெண் பெண் × ஆண் என இருமை கொண்ட பழைய வாசிப்பை விலக்கி தனிமனிதர் × பொதுமனிதர் எனும் பார்வையில் வாசிக்கையில் புதிய பார்வைகள் புலப்படுகிறது. திறக்கப்படும் உடல் மற்றும் அண்டங்களின் சக்கரவர்த்தி என்ற கவிதைகள் இதற்குச் சிறந்த சான்றாக அமைகின்றன. திணிப்பு எனும் கவிதை நுகர்வுக் கலாச்சாரத்தை திணிக்கும் விளம்பரங்களை தோலுரிக்கிறது. 


மேலோட்டமாக வாசிப்பவர் கண்களுக்கு இத்தொகுப்பு கணவன் மனைவியின் அல்லது ஒரு ஆண் பெண் ஊடல் மற்றும் கூடல் என்பதாகமட்டுமே தெரியுமெனில் அது அவர்களின் வாசிப்பின் போதாமையாக மட்டுமே கொள்ளப்படும். உடலரசியலின் நுண்ணரசியல் சதிராட்டங்களை சாவதானமாக கவிதையாக்கித் தந்துள்ளார் தோழர் தேவி எனும் நறுமுகை தேவி அவர்கள். 


இது ஒரு புது எழுத்து வெளியீடு.


- சுகன்யா ஞானசூரி

12.05.2023.



Tuesday, March 28, 2023

மரணத்தின் வாசனையும் அது தரும் வாதையும்

மரணத்தின் வாசனையும் அது தரும் வாதையும்.

- சுகன்யா ஞானசூரி



கடல் யாரோ ஒருவரின் துயரத்தை உள்வாங்கி கரையில் மோதித் தெறிக்கிறது என்ற த. அகிலனின் சிறுகதையில் உள்ள வரிகள் அவ்வளவு எளிதாகக் கடந்துவிடும் ஒன்றல்ல. 

நீர் தன் இருப்பிடத்திற்கேற்ப்ப தன் வடிவத்தைக் காட்டுவதைப் போலவே இங்கு மரணம் தன் அரூப வாசத்தை நுகரச் செய்கிறது. யுத்த வாதைகளில் இனியும் சப்பிப் போட எதுவும் இல்லாதபடிக்கு புதிய புதிய விமானங்களின் குண்டுவீச்சுகள், வித விதமான எறிகணைகள் என பலதரப்பட்ட முதலாளிய வர்க்கங்களின் ஆடம்பரப் பசிக்கு எளிய உணவாகிப் போனதென்னவோ சனங்கள், விலங்குகள், புல் பூண்டு தாவரங்கள் என சகலமும் மரணத்தின் வாசனையை நுகர முடியாமல் எனது பன்னிரண்டாவது வயதில் வெளியேறினேன் என்பதை விடவும் வெளியேற்றப்பட்டேன் என்பதே பொருத்தமாகும். 

1995 வரையில் வன்னி நிலம் எத்தகையது என்பதை நான் அறியவில்லை. அந்த ஆண்டின் பாரிய இடப்பெயர்வான யாழ் வெளியேற்றம் (1990 களில் முதல் யாழ் வெளியேற்றம் எம் சகோதரர்களுக்கு நடந்த பிறகான சில ஆண்டுகளில்) பூநகரிக்கும் ஆனையிறவுக்கும் நடுவே கிளாலி நீரேரி வழியாக வன்னி நிலத்தில் கால்பதிக்க வைத்தது. பெரு வனங்களும் பெரு வெளிகளுமாக அச்சம் தருவதாக இருந்தாலும் புதிய அனுபவமாக இருந்தது அப்போது. அது சிறுவர்களுக்கே உரிய மனம். கிளிநொச்சி, மாங்குளம், கனகராயன்குளம், கொல்லர் புளியங்குளம், மல்லாவி, வலைப்பாடு இப்படியாக 1996 செப்டம்பர் வரையிலான காலகட்டத்துக்குள் எத்தனை இடப்பெயர்வு. மலேரியா, நெருப்புக் காய்ச்சல், பாம்புகளோடு உறக்கம், காட்டுப் பன்றிகள் தொல்லை இப்படி நிறைய நிறையவே புதிய அனுபவங்களை வன்னி மண் தந்திருந்ததை த. அகிலனின் "மரணத்தின் வாசனை" சிறுகதைகள் தொகுப்பு மீண்டுமொரு நினைவுப் பயணத்திற்குள் என்னை அழைத்துச் சென்றன என்றால் மிகையாகாது. 

எம்.ரி 90 வண்டிகள் இப்போது (யப்பான் கோண்டா தயாரிப்பு) ஹீரோ கோண்டா ஆகிடுச்சு என்ற வரிகளை வாசிக்கையில் மலேரியா காய்ச்சல் கண்ட அப்பாவை கொல்லர் புளியங்குளம் முகாமிலிருந்து மாங்குளம் சந்தி பெரிய ஆஸ்பத்திரிக்கு அப்பாவின் எம்.ரி 90 மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற நினைவுகளை மீட்டிச் சென்றது. 

போர் தின்ற சனங்களிடம் சொல்வதற்கு நிறைய நிறைய கதைகள் இருக்கிறது. இவைகளை ஒருபோதும் இலக்கியமாக யாரும் ஏற்பது இல்லை. இட்டுக்கட்டிய புனைவுகளையே போரிலக்கியம் என்று கூவிக் கூவி விற்கும் விற்பன்னர்களையே இன்றைய நவீன உலகம் அலங்கரித்து வருகிறது. 

அகிலனின் கதைகளுக்குள் இந்திய இராணுவத்தின் அடாவடியால் பாம்பு கடித்து மருத்துவமனை கொண்டு செல்ல முடியாமல் இறக்கும் அப்பா, ஊரைப் பிரிந்து இடம்பெயர்ந்து திரும்பி வருகையில் சிதறுண்ட கற்குவியலாய் இருக்கும் கோயிலை காணச் சகியாத அம்மம்மாவின் இறப்பு, காதல் நிறைவேறாத சித்தியின் இறப்பு, ஒருதலைக் காதலியான காயத்திரியின் இறப்பு, பள்ளி நண்பனின் இறப்பு, தெரியாத போராளி  ஒருவரின் மரணம் இப்படி பல்வேறு மரணங்களை தன் கதைகளுக்குள் உயிரோட்டமாக்கித் தந்துள்ளார். அத்தனை இறப்புகளுக்கும் போரும், போர்க்கருவிகளும், ஆக்கிரமிப்பாளர்களும், இடப்பெயர்வுகளும் காரண காரியங்களாகி நிற்பதை யாரும் நம்புவதேயில்லை. விதியின் மீது பழி போட்டு கடந்துவிடுவது எளிதாகி விடுகிறது. எளிய மனிதர்களால் அதைத்தவிர வேறென்ன செய்துவிட முடியும்? 

சில கதைகள் தேவைக்கு அதிகமாக நீண்டு செல்வதும், ஒரே லயத்தில் சொல்லல் முறை இருப்பது சுணக்கத்தை ஏற்படுத்தினாலும் அத்தனை கதைகளும் சிறு திருப்பங்களோடு மையக் கருவை சரியாக வந்தடைகின்றன. இதுவே எழுத்தின் வெற்றியுமாகும். 

அலைகளின் மீதலைதல் எனும் எனது முதல் கவிதைத் தொகுப்பில் "கடல் மீது/ கால் நனைப்பதாய்/ மறந்தும் மிதித்து விடாதீர்கள்/கரைதேடி அலைகளின் மீதலைகிறது /அவர்களின் ஆன்மாக்கள் என எழுதியிருப்பேன். அது என் கண்முன்னால் மூழ்கடிக்கப்பட்ட படகில் இறந்துபோனவர்களுக்காக எழுதியவை. இப்போதும் அந்த நாட்களை நினைத்தால் நெஞ்சம் பதறவே செய்கிறது. கரையென நம்பி மணல் திட்டுக்களில் இறக்கிவிட்ட படகோட்டிகளும், மணல்திட்டில் மூழ்கி இறந்து போனவர்களும் தப்பிப் பிழைத்தவர்களும் என ஒரு பெருங் கூட்டமாகவே 1996களில் தனுஷ்கோடி கரைகளில் கால் பதித்தோம். தாயையும் சகோதரிகளையும் காப்பாற்றிவிடும் எத்தனத்தில் கானல் நீர் முகத்துவாரத்தில் மூழ்கிச் சாவெய்துபவனின் கரம்பற்ற இயலாமல்போன குறுகுறுப்பை "கரைகளுக்கு" என்ற சிறுகதை புலப்பெயர்வின் விடியலை வைகறைக்குள் புதைத்துச் செல்லும் கதை. 

மொத்தம் 12 சிறுகதைகள். ஒவ்வொன்றும் விதவிதமான மரணத்தின் வாசனையை சாம்பிராணிப் புகையாட்டம் திணறச் செய்கிறது. அதன் வாதைகளிலிருந்து தப்பித்தால் நீங்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவீர்கள். 


நூல்: மரணத்தின் வாசனை

ஆசிரியர்: த. அகிலன் 

வெளியீடு: வடலி 

விலை: ₹160.

Monday, March 20, 2023

கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம்


 

"அந்தரம்" கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம்.

- சுகன்யா ஞானசூரி.


அம்மா என்கிற அதிகாரத்திடம் அழுது பால் குடித்தபடியால் வேடிக்கை பார்ப்பதற்கான சத்து இன்னும் இந்த உடம்பில் இருக்கிறது.


ஒரு சாமான்ய மனித வாழ்வின் அலைக்கழிப்பு என்பது அவனது/ளது சொந்த தேசத்தில் நடப்பதாக இருப்பின் ஏதோவொரு வகையில் தீர்வை எட்டிவிடும் அல்லது குறைந்தபட்சம் சமரசத்திற்குள்ளாவது கொண்டுவரப்படும். இவை இரண்டுக்குள்ளும் அடக்க முடியாத ஆற்றாமையின் வெளிப்பாடு சொந்த தேசத்தில் இல்லாமல் அந்நிய நிலமொன்றில் அந்தரித்து நிற்கும் தமிழ் அகதிகளின் வாழ்வே அந்தரம். 


என்னால் உரைநடையில் சொல்ல முடியாமலே இருந்த என் அந்தரத்தை கவிதை எனும் வடிவம் கொண்டு வெளிக்கொண்டு வந்தேன். இது ஒரு வகையான அதிகாரத்தின் அடக்குமுறைக்கு கீழ்படியும் செயல் என்பதைக் காட்டிலும் தப்பித்தல் என்றே சொல்லவேண்டும். எது எப்படி இருந்தாலும் இவ்வளவு வெளிப்படையாக தயக்கமின்றி கால் நூற்றாண்டு தமிழர்களின் அகதி வாழ்வை ஒரு தன்வரலாற்றுப் புதினமாக்கி வழங்கியுள்ளார் தோழர் தொ. பத்திநாதன். 


இத்தனை ஆண்டுகால அகதி வாழ்வில் என்ன வகையான சொத்துக்களை சேர்க்க முடிந்தது? ஆடம்பரம் சுகபோக வாழ்க்கை? ஒருவேளை உணவைத்தானும் கடன்காரர் ஆக்கினை இன்றி உண்ண முடிந்ததா? படித்த படிப்பிற்கேற்ற வேலை? வேலைக்கேற்ற ஊதியம்? ஒருமுறையாவது அதிகாரிகளிடம் இழந்துபோகாத தன்மானம்? எந்த ஒன்றிற்கும் அகதியால் பதில் சொல்லிவிட முடியாதபடிக்கு இந்த வாழ்க்கை தொலைக்கப்பட்டு விட்டது என்பதை விடவும் தமிழ் அகதிகள் தமிழ் அதிகாரிகளின் சப்பாத்துக்களின் கீழ் நசுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே முரண் நகையானது. 



பெண்மையை, பெண் சுதந்திரத்தைப் பேசாத எந்தவொரு படைப்பும் அத்துணை கலைத்தன்மை கொண்டதாக அமைந்துவிடாது. சாந்தி எனும் மையப் பாத்திரத்தின் நகர்வினூடாக பல்வேறுபட்ட முகாம் பெண்களையும் முகாம்களை ஒட்டியுள்ள ஊர்ப் பெண்களையும் அவர்களின் பார்வையில் முகாம் எனும் திறந்தவெளிச் சிறைச்சாலையின் பன்முகப் பார்வைகளை அவதானமாக கையாண்டுள்ளார். கரணம் தப்பினால் மரணம் என்ற வார்த்தையைப் போலத்தான் இருபக்கமும் கூர்மையுள்ள கத்தியின் மீது நடப்பதைப் போன்ற பதற்றமே அந்தரத்தினை வாசித்து முடிக்கும்வரை. 


இருபக்க உறவுகளுக்குள்ளும் பார்வைக் கோணல்கள் இருக்கிறது. அது சமய சந்தர்ப்பம் பார்த்து வெளிப்பட்டும் இருக்கிறது. இப்போதும் வெளிப்பட்டவண்ணம் இருப்பதையும் மறுக்க முடியாது. ராஜீவ்காந்தி கொலைக்கு முன் ராஜீவ்காந்தி கொலைக்குப் பின் என தமிழகத்தில் ஈழ அகதிகள் வரையறுத்துப் பார்க்கப்படுவதும் கண்கூடு. இன்றைக்கு எவரும் இல்லை ஆனால் அவலங்களைச் சுமப்பது என்னவோ சாமான்ய அகதிகள்தான். நரம்பில்லாத நாவுக்குத்தான் எத்தனை தடித்த சொற்களை வீசி எறிகிறது எளிதில். அது மனதில் ஆறாது அந்தரித்து நிற்கிறது மனம் நொந்தபடி. 


சாதி சமயம் இரண்டும் மனிதர்களை எந்த எல்லைக்கும் அழைத்துச் செல்லும். அதுபோல் வஸ்துகளின் பழக்கவழக்கங்களும், கொலைக் குற்றங்களும்,  முகாம் தலைவர் எனும் போதையும் அதிகாரிகளிடம் சொந்த மக்களையே காட்டிக்கொடுக்கும் கேவலமான செயலையும் செய்யத் தயங்காது என்பதை கந்தசாமி, முருகானந்தம் மாந்தர்கள் வழி எடுத்தியம்பிள்ளார். அதேபோல் கல்வியின் பெயரால் தொண்டு நிறுவனங்களும், மத நிறுவனங்களும் செய்த செய்கின்ற மோசடிகளும் கொஞ்சநஞ்சமல்ல. அகதிகளின் பெயரால் அவர்கள் பரலோகத்தில் நித்தியமடைவார்களாக ஆமென். 


அந்தரம் புதினத்தில் கதைசொல்லியாக பத்திநாதனே பயணிக்கிறார். தான் பார்த்த காட்சிகளை, தான் வாழ்ந்த வாழ்வை அவர் சொல்லிச் செல்வதைப் போலவே அமைத்துள்ளார். இங்கே ஜிகினா வேலைகளுக்கு இடமின்றி உள்ளதை உள்ளபடியே சொல்லியிருப்பதால் சக அகதியாக அவருக்கு என் ராயல் சல்யூட். மற்றபடி பெயர் மாற்றங்களும், கட்டிட மாற்றங்களும் நிகழ்ந்துவிடுவதால் மட்டும் எதுவும் உடனடியாக மாறிவிடாது. அதிகார வர்க்கத்தின் புலனாய்வு முற்றாக நீக்கப்பட்டு சுதந்திரமான வாழ்க்கை வழங்கப்பட்டால் மட்டுமே அந்தரித்து நிற்கும் மனங்களில் ஆறுதல் ஏற்படும். 


அவர் மன்னாரில் நின்றுகொண்டு கடந்துவந்த இந்த வாழ்வை வேடிக்கை பார்க்கிறார். நான் உள்ளுக்குள் இருந்துகொண்டே வாசித்து நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன்.


"அந்தரம்" தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகளின் கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் ஒரு காட்சிப் படம். 


ஆசிரியர்: தொ. பத்திநாதன் 

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

விலை: ₹250.

Friday, November 26, 2021

பாக்களத்தம்மா - எங்கள் கதை

அன்பின் தோழர் புலியூர் முருகேசன் அவர்களுக்கு தோழமை வணக்கங்கள். 


நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலம் என்றே நம்புகிறேன்.


பொதுவாக கடிதம் எழுதி நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டது. தங்களின் பாக்களத்தம்மா வாசித்ததும் தங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் எனத் தோன்றியது. கடிதம் வழிதான் உயிரோட்டம் உள்ளவற்றை கூறமுடியும் என்பது கடித வரலாறு. 


கருத்த வானம் குமுறிக் கொண்டிருக்கும் இன்றைய (26/11/2021) காலையில் பாக்களத்தம்மாவை வாசித்து முடித்தேன். நவம்பர் 7 அன்று கும்பகோணம் பக்கங்கள் நிகழ்வுக்குப் பிறகு அம்மா சத்திரம் தோழர் சரவணன் இல்லத்தில் நீங்கள் உங்களின் பாக்களத்தம்மா நாவலை எனக்கு தந்தீர்கள். நாவல் வெளியாகி சரியாக பதினொரு மாதங்கள் ஆகிறது. பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு பெரிய துயரார்ந்த கதையை நாவலாக்கியுள்ளீர்கள். இருபது வருசத்துக்கு முன்னால் (அப்போது எனக்கு 17 வயசு) எங்கள் குடும்பத்தில் நடந்த துயர நிகழ்வுகளை நான் மீண்டும் நினைத்துப் பார்ப்பேன் என நினைக்கவில்லை. பாக்களத்தம்மா இன்று அத்தனையையும் மீண்டும் நினைவுபடுத்தி நெஞ்சை கனதியாக்கிவிட்டார். 


அகதியாகி வந்த நிலத்தில், முருகனின் தீவிர பக்தையான அம்மம்மாக் கிழவியின் மரணத்திற்குப் பிறகு எங்கள் பெரிய குடும்பம் எப்படிச் சிதறியது, யாரால் சிதறியது என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். என் அம்மாவின் உடன்பிறந்தவர்களால் அப்பாவும் அம்மாவும் ஏமாற்றப்பட்ட நாளில் நவீன வளர்ச்சி எங்களின் வாடகை சைக்கிள் கடையையும் காவு வாங்கியது. பெயிண்ட் வேலை, வார்னிஷ் பூச்சு வேலை, அறுப்பு வேலை என அப்பாவுக்கு ஒத்தாசையாக வேலை பார்த்த நாட்களை மீண்டும் பாக்களத்தம்மா நினைத்துப் பார்க்க வைத்துள்ளார். வசதியான முறையில் வாழ்ந்த பிள்ளைகள் இப்படி பாதியில் கஷ்டப்படுவதை நினைத்து தந்தை கண்கலங்கி புலம்பியதை கண்கூடாகப் பார்த்தவன் நான். இன்றும் அந்த நிகழ்வுகள் வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதே எங்கள் அவாவாக இருக்கிறது.


உடன்பிறப்பால் ஏமாற்றப்பட்ட பிறகும் தன் நான்கு பிள்ளைகளையும் பட்டதாரியாக்கியே தீருவேன் என்ற வைராக்கியத்தில் தாலிக்கொடியைக்கூட வித்து சாதிச்சுக் காட்டிய என் பெற்றோருக்கு இன்று பிள்ளைகள் தலையெடுத்து, பேரப்பிள்ளைகளோடு சந்தோஷமாக இருந்தாலும் அந்த ஏமாற்றத்தின் வடு அவ்வப்போது நெருடுவதை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பேச்சு காட்டிவிடும். வாழ்ந்த வீட்டை இழந்து,  நிலத்தினை இழந்து எல்லாவற்றையும் தாண்டி நாங்கள் வாழ்வது ஆச்சரியமான ஒன்றுதான். அது இவர்கள் முன்னால் நாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற அம்மாவின் சபதமே. பெண்களால்தான் இந்த உலகம் இன்னமும் உயிர்ப்போடும், உறுதியோடும் இயங்குகிறது என்றால் மிகையில்லை.

வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் கதைகள் மிகவும் ரணமானது. பாக்களத்தம்மா அப்படியான ஒரு வாழ்வியலின்  கதை. நாகையா போன்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் இருப்பதுதான் உறவுகள் அறுபடாமல் கொண்டிழுக்கிறது. அவைகள் நல்லபடியாக செல்லும்பட்சத்தில் வாழ்கின்ற அக்குடும்பத்தின் கெத்தாகும். அதுவே தீதாகையில் வெறுமையே மிஞ்சும். 


மூக்குத்திக் காசிக்குப் பிறகு நான் வாசிக்கும் தங்களின் நாவல் இது. இரண்டுக்கும் இடையிலான காலவெளியில் தங்களின் எழுத்து மெருகேறியிருக்கிறது. பரமபத விளையாட்டைப் போலவே வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் மிகுந்தது. ஒரு தொன்மக் கதையாடலையும் ஊடுபாவாக  இந்த நாவலில் நிகழ்த்திக் காட்டும் சாத்தியம் இருந்தும் ஏன் அதனைத் தவறவிட்டீர்கள்? அப்படி இருந்திருந்தால் நாவல் எனும் வகைமைக்கு ஒரு முழுமை கிடைத்திருக்கும் என்பது எனது அவதானிப்பு. அகதியெனும் மனநிலை நீங்கி  புலியூர் நிலத்தில் நீங்கள் கால்பதித்து வாழ வாழ்த்துகிறேன்.


எங்கள் கதையை எழுதிய தங்களுக்கு ஆயிரம் முத்தங்கள் தோழா.

- சுகன்யா ஞானசூரி

26/11/2021.

 

Friday, October 15, 2021

நாடிலி - தோழர் பொதியவெற்பன் ஐயா பார்வையில்



புலம்பெயர் ஏதிலி நினைவில்

'உடனலைந்து எரியும் ஒருபிடி நிலம்':2

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


2.'கடல்மீதும் சிறுதுண்டு நிலந்தேடும் ஏதிலிபாதம்' -

ஞானசூரியின் 'நாடிலி' மீதான என் வாசிப்பின் பிரதி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


"உலகத்தின் வீதிகளில் ஒரு முகவரி தேடி

அலைகிறது என்னினம்...." -

கிழவன் வைகறை வாணன்  


"இங்குவந்த எனக்கு/

புலம்பெயர்ந்த புள்ளிவிபரம் பொருந்தாது/

ஊன்றிய காலை எடுத்து இன்னொரு/

இடத்தில் வைத்தால்/

முந்திய இடமும் பிந்திய இடமும்/

பூமிதான் எனக்கு/

எனவே எனக்கு நாடில்லை/

நாமம் இதுவென்று ஒன்றில்லை."


இப்படியாகப் புலம்பெயர் வாழ்விலும் பிறந்த மண்ணையும் புகலிட மண்ணையும் தமக்கான பூமிதான்என வீற்றிருக்கும் பிரமிளாலும் கூட,


"பார்த்த இடமெல்லாம்/ கண்குளிரும்/ பொன்மணல்

என் பாதம் பதித்து/ நடக்கும்/ இடத்தில் மட்டும்/

நிழல் தேடி/ என்னோடு அலைந்து/ எரிகிறது/

ஒருபிடி  நிலம்"

புகலிட நிகழ்தகவிலும்    புலம்பெயர்ந்துடனேயே

அலைந்து எரியும் ஒருபிடி நிலத்தை உதறிடவா முடியும்?


இதனால்தான், சச்சிதானந்தனின் ' நினைவில் காடுள்ள மிருகம் போல் எரியும் தம் நிலத்தை நினைவுகளில் தூக்கிச் சுமந்தலைகிறோம் என்னும் ஞானசூரி அதுதரும் வாதையிலிருந்து தப்பித்துக்கொள்ளப் படைப்பிலக்கியத்தின் வழியே சற்று ஆசுவாசம் கொள்கின்றோம் என்கின்றார்.


புகலிட வாழ்வூடே முந்தைய இடமும் பிந்தைய இடமும்

பூமிதான் தமக்கென்றாலும் 'உடன் அலைந்தே தான்

தீரும் ஒருபிடி நிலம்'. அந்த அல்லாட்டமே 'நாடிலி'.


*


"யாதும் ஊர்தான் யாவரும் கேளிர்தான்/

வேறு வழியில்லை/ ஊரற்றவனுக்கு உலகே வீடு/

என்பதெல்லாம் ஊரற்றுப்போன துயரம்/

மறக்கவே" - கலியமூர்த்தி

 மாறாக மறக்க அல்லாமல் அதனை மறுக்கவே 

செய்கின்றன ஏதிலியர் கவிக்குரல்கள்:


"சமுத்திரத்தின் பெருவெளியில்/ படகுகளோடு  மூழ்கிய குழந்தைகளை ஒதுக்கும் /கரையில்/நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்/ யாதும் ஊருமில்லை/யாவரும் உறவுமில்லை" 


"வெளித்திசை என்பது/ முகாம்வாசிகளின் ஒன்பதாவது

திசை."


"போர் திணித்த இடப்பெயர்வில்/ எப்படி நீங்கள்/என்னை/ அகதியென விளிக்கின்றீர்கள்?"

"முகாம்வாசிகளின் உள்ளத்தில்/ தீயின் கங்கு எப்போதும்/

கனன்றுகொண்டே இருக்கிறது/ அகதியென/ நீங்கள்

விளிக்கும் போதெல்லாம்/ நீராவி என்ஜினைப் போல்

எரிந்தடங்கும்" - ஞானசூரி


"அடையாளங்களற்ற நான்/ அதை நினைப்பதிலோ

நடுக்கம் எழுகிறது/ தலையைப் பிடித்தாட்டும் கைகள்

ஆயிரம்/ நாடுமில்லை/ இது என் பெயருமில்லை/

அடையாளங்களற்ற நான் அகதியும் இல்லையாம்" -

தர்மினி ('இருள் மிதக்கும் பொய்கை)


*


'கடல்வழி வந்த அகதி நதிபார்த்தல் ' சிவரமணியின்

வண்ணத்துப்பூச்சி பார்த்தலை நினைவூட்டுகின்றது.

இரண்டுமே நம்மனோர் முருகியலைப் போலாது அதில்

லயிக்கொணா வாழ்மானத்தின் சித்திரிப்புகளே:


மாலைவெய்யில்/ இரவு ஒளிகள்/ நதிநீரின் சலசலப்பு/

குறுமணலின் பளபளப்பு எல்லாம் அழகென்று நீங்கள்

வர்ணிக்கின்றீர்கள்/ இதுகாறும் நான் பார்க்கவில்லை

என்பதை விட/ இரசிக்க விடப்படவில்லை" எனத் தொடரும் கவிதை நதிக்கரை நாகரிகங்களில் சிறந்த இனவழி வந்தும் அகதியெனப்பட்ட தானடைபட்டாக வேண்டிய பட்டிக்குள் மாலைக்குள் சென்றடைந்தாகணுமே என அத்தருணப் பதைபதைப்பை முன்னிறுத்துகிறார்.


செவ்வலரி பூத்தவானமும் செங்குருதி தேங்கியதம்

நிலத்தையே பிரதிபலிப்பது  ஆகிப்போகையில்

அந்த அழகை எல்லாம் அவர்களால் எவ்வாறு ரசிக்க ஏலும்?


"இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு/ துப்பாக்கி

நீட்டப்படும் போது/ ஒரு மெல்லிய பூநுனியில்/

உக்காரக்கூடிய/ வண்ணத்துப்பூச்சியின் கனவு / எனக்குச் சம்பந்தமற்ற / ஒரு சம்பவிப்பு மட்டுமே."- சிவரமணி ('செல்வி சிவரமணி கவிதைகள்')

Thiru Arasu 

*


 

"ஒட்டஒட்ட வெட்டப்பட்ட/ அவர்களுடைய புன்னகை

போன்றே/ என்னுடைய புன்னகையும் இருந்தது/

என்னைப் போன்றே மொழி தெரியாத/ இரவல் முகங்கள்இரண்டை அகதிகள் தேசத்தில் / அவர்களும் அணிந்திருந்தனர்" - தில்லை Thillai Jeganathan 


"ஒட்டஒட்ட வெட்டப்பட்ட அவர்களுடைய புன்னகைபோன்றே/ என்னுடையபுன்னகையும் இருந்தது - என்ற வரிகளில் உறைந்திருக்கும் இறுக்கம் நாட்டை இழந்து துயரைச் சுமக்கும் பெண்களின் அடையாளம்.


'ஒரு தேசத்துக்காகக் கடலைத் தந்த/ எனது கண்களைப் போன்று/ அவர்கள் கண்களும் பூமிக்கே தாழ்ந்திருந்தது என்ற வரிகளுங் கூட, அத்துயரின் பிரமாண்டமான வடிவத்தை ஒரு சில வார்த்தைகளால் சொல்லிச் செல்வது." - குட்டிரேவதி ('ஆண்குறிமையப் புனைவைச்சிதைத்த பிரதிகள்') Kutti Revathi 


இவ்வாறே ஞானசூரியும்  'புன்னகைக்கும் ஒவ்வோர் முகத்திலும்/ வலியின் ரேகை பாதாளம் பாய்கிறது' என்னும் போது  வெவ்வேறு அகதிதேசப் புன்னகைகளும் ஒருசேர அதளபாதாளம் பாய்வன ஆகிவிடுகின்றன.


*


"உன் பாட்டனின் மூஞ்சியில்/ செத்த மாட்டீரலைச் சுட்டுத் தின்றுவிட்டு/ என் பாட்டன்விட்ட/ குணமும் மணமும் நிறைந்த குசுவிலிருந்து/ எடுத்துக் கொண்டிருக்கிறேன்/என் அசலான கவிதைக்கான/ கச்சாப் பொருட்களை." - ம.மதிவண்ணன் Mani Mathivannan 


"தத்துவார்த்தப் பின்புலத்திலிருந்து சாதியத்தின்

வேர்களைக் கோபத்தோடு அசைத்துப் பார்ப்பவை

ம.மதிவண்ணன் கவிதைகள்."


"இதற்கான கவிதைமொழியைக் கவனியுங்கள். அருள்

பாலித்தல்,உபதேசம்,அபயம், ஆக்கினை,ஸ்மிருதி

முதலிய பிராமணைத்துவச் சொற்கள் ஒரு பக்கம்;

இதற்கு முரணாக வெளிப்படுகின்ற சொற்கள் எவை?

குணமும் மணமும் என்ற வழமையான தொடரோடு 'குசு'என்ற சொல் செய்கிற வேலை என்ன? இத்தகைய கவிதை எழுதுவதற்குரிய மொழிச்சாதனத்தை மனத்திலாக்கிக் கொள்ளவேண்டும்." - தி.சு.நடராசன்

('கவிதை என்னும் மொழி')


ஞானசூரி தனக்கான மொழியை எங்கெங்கிருந்து

எல்லாம் எடுத்துக்கொள்கின்றார்:


"பிரபஞ்சத்தின்/ ஒவ்வொரு துகள்களுக்குள்ளும்/ என்

கவிதைக்கான சொற்களை / ஒளித்து வைத்து/

வேடிக்கை காட்டுகிறது மொழி."


"களமாடிக் காலிழந்து /ஒண்டிக் குடித்தனமாய்/

ஒடுங்கிப்போன/ ஒற்றைக்கால் அண்ணனின்/ மேனியில் விளாசிய/ பலநூறு கசையடித் தழும்புகளில்/ எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்/ என் மொழியை"


*


ஆதிவாணியரும் (மாற்றுப் பாலினத்தார்) ஏதிலியரும்

அன்பின் அரவணைப்புக்கு ஏங்கிக்கிடப்போரே.


"நடு இரவில்/ திடுக்கிட்டெழும் குழந்தையைப்போல்/

அலறியெழுபவனுக்கு ஆதுரமான/ ஒரு சொல்

தேவையாயிருக்கிறது


" விழவில் தப்பிய செங்கட் சேய்/ கொளுவிய கூறினும்

ஒழுகாது அலமர/ஒருதாய்த் தேடி உவந்து/ பெருமடி

புதைக்கும் பெற்றித்தே தோழீ! - பெருஞ்சித்திரனார்

('நூறாசிரியம்' - நினைவிலிருந்து)


திருவிழாக் கூட்டத்தில் தாயைப் பிரிந்தே தப்பிய குழந்தை யார் தேற்றுதலுக்கும் அமைதியடையாது அதற்கப்பால் அன்னையைக்கண்டதும் ஓடோடி வந்தவள் மடியில் முகம்புதைக்கும் தன்மையே போல..


"எத்தனை / வசந்த காலம் வந்தென்ன/ ஒரு போதும்

துளிர்ப்பதேயில்லை/ பட்டமரம்"


"ஒரு /பச்சிலையின் துளிர்ப்பைப் போல்/ நம்பிக்கை

அளிக்கும் /ஒற்றைச் சொல்லைக் / கேட்கும் நாளே/

அகதிகளின் வசந்தகாலம்


*


அடைக்கலமாகிய தேசத்தின் தேர்தலுக்கு அவர்கள்

பகடைகள் ஆக்கப்படுவதையும்: மக்களின் சிறு வாழ்வையுங் களவாடும், ஆண்டுமுழுதும் பறக்கும் தேசமன்னர் மாதவிலக்கு நாட்களின் எண்ணிக்கையில் மட்டும் தேசத்தில் இருப்பதாகச் சொல்லப்படுவதையும் சுட்டாமல் விட்டாரில்லை.  நம்மனச்சான்றை உலுக்கி முகத்தில் அறையும் நிகழாய் நம்மில் குற்ற உணர்வைப் பற்றவைக்கின்றது 'நாடிலி' அதனதன் பேசுபொருளை நம்முள் தொற்றவைத்துக் கடத்தவல்ல கவித்துவமும் வாய்க்கப் பெற்றுள்ளதே ஞானசூரியின் கவிதைமொழி.


 இன்னமுங் கூட தம்மைத் தாமே செதுக்கிச் செதுக்கிச் சிற்பிக்கவும் அவர்களாலும் இயலும். நாளாந்தமும் பதைபதைப்பான பாதுகாப்பின்மையில் உழல்தரும்  அத்தகு ஏதிலிவாழ்வில் ஆதுரமான அரவணைப்பை நாமும் அவர்கட்க்கு வழங்க முற்படுகையில் பத்திநாதன்களும் ஞானசூரிகளும் விஸ்வரூபித்தே விகசிப்பார்தாமே? (பத்திநாதன்களும் Pathi Nathan 

இங்கில்லாவிடிலும் எம்மூடேதானே அவர்கள் இருப்பும்!)


*


இவ்வாசிப்பின் பிரதியில் இறுதி முத்தாய்ப்பாக

ஒரு தொகுப்பாக்கக் கவிதை:


நமோ நமோ ததாகதா!

~~~~~~~~~~~~~~~~~

 

"போதி மரத்தின் நிழல்/ இருள்மண்டிக் கிடக்கிறது/ஒன்று/அவ்விடம் விட்டு விலகு/ இல்லையேல்/ நிழலை/வெட்டி வீழ்த்து.

அச்சமோ/ அழுகையோ /ஏதோவொன்று/ஒரு முறையாவது/ புத்தனின் கண்கள் திறந்து மூடுவதைப் / பார்த்துவிடும்/ அவாயெனக்கு"


"குறுநுண் பெரும்புயல் அசைத்திருந்தது/ வேம்பின்

கிளையில் முளைத்திருந்த காக்கைக் கூட்டினை.../

அடுத்தடுத்துக் கிளையுரசி குருதித் தோய்வோடு/

இறையாண்மை நதியில் வீழ்ந்திருந்த/ குஞ்சிற்குப்

புலியின் கண்கள்.


இறந்து காய்ந்திருந்த/ தவளையைத் தின்ற வாயோடு

பாய்ந்து நீந்திக்/ கவ்விப் பிடித்திழுத்துச் செல்கின்ற/

நாய்க்கு/ அச்சு அசலாய்ப் புத்தனின் கண்கள்"


"லட்சம் உடல்களில் ஓற்றை மரணம்/

ஆம் ஒற்றை உடலின் ஒரு லட்சம் மரணம்/

நமோ புத்தா"


"நரமாம்ச இரைவேட்டைச் சிங்களப் புத்தனுக்கு 

எதிரான  வியூகத்தில் சைவப்புலிகள்

காவி ஆக்டோபஸோடு கைகோத்த முரண்நகை!

நமோநமோ ததாகதா"

(சுகன்யா ஞானசூரி *  த.விஜய்ராஜ்  * ரமேஷ் பிரேதன்  *பொதிகைச்சித்தர் *)


Suganya Gnanasoory.  Vijayaraj Cholan. Ramesh Predan


#EXILE.