Saturday, September 30, 2023

தமிழ், தமிழடையாளம்


#நன்னூல் இதழில் வெளியாகியுள்ள தமிழவனின் சிறப்புக் கட்டுரையானது தமிழ்த் தேசியத்தைக் கோருபவர்கள் கூனிக்குறுகி நிற்பதா? அல்லது மார்தட்டிப் பெருமை கொள்வதா? என்ற கேள்வியை முன்வைக்கிறது. சமகாலத்தில் பெரியாரின் தேவை என்ன என்ற கேள்விக்கும் சிறப்பான பார்வைகளை பதிலாக வைத்துள்ளார். பெரியாரை கடவுள் மறுப்பாளராக, பிரச்சாரகராக மட்டுமே குறுக்கிப் பார்க்க வைத்திருக்கிறோம். ஒரு தத்துவவாதியாக, தமிழின் தனித்த சிந்தனையாளராக காணத் தவறியதையும், அறிஞர் அண்ணாவின் "சிந்திப்பீர்" என்ற சொல்லின் குறியீட்டு விளக்கம் இன்றைய மேடைப் பேச்சுக்களில் காணாமல் போனதன் அரசியலில் தனிமனித சிந்தனையற்ற கும்பல் மனப்பான்மைகளின் பெருக்கமும் அதன் உளவியல் வெளிப்பாடுகளை ஜெர்மனியின் மார்க்சிய மனிதாபிமானி உளவியல் நிபுணர் வில்ஹெல்ம் ரைக் எழுதிய 'பாசிசத்தின் கும்பல் உளவியல்' எனும் நூல் கொண்டு ஹிட்லரின் இயக்கத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி விபரிக்கிறார். 


பல்கலைக்கழகங்கள் தமிழரின் இருபது நூற்றாண்டு வரலாறை எழுதத் தவறியதையும், அதனை எழுத அவர்களைப் பணிக்காததும் தவறான கருத்து திரிபுவாதங்கள் தோன்றுவதையும், ஜே.என்.யு போன்ற அறிவுசார் தளத்தைக் கண்டு பாசிசம் பயப்படுவது போல் தமிழகத்தில் எந்தப் பல்கலைக்கழகமாவது இருக்கிறதா? குறிப்பாக தமிழ்ப் பல்கலைக்கழகம் இதனைச் செய்யத் தவறியதை அறிவுஜீவிகளின் குடுமிப்பிடி சண்டைகளும், பதவி மோகங்களும் படுத்தும் பாடுகளினூடாகச் சுட்டிக் காட்டுகிறார். 


பெரியாரின் மண்ணில் சாதியம் மெல்ல மறைந்து வரும் வேளையில் சாதியச் சங்கம் தன்னை அரசியல் கட்சியாக்கி சாதியை மீண்டும் வளர்த்து பெரியார் முகத்தில் கரியைப் பூசியதை சுட்டிக்காட்டும் இடத்தில் நாம் வெட்கப்படுவதைத் தவிர வேறில்லை.  அதேபோல் ஈழ அரசியல் தோற்கடிப்புக்குப் பின்னால் உள்ள வெற்றுக் கூச்சலிடும் வாய்சவடால் தலைமைகளும், கோடரிக் காம்புகளும் காரணகர்த்தாக்களாகியதையும் சுட்டிக்காட்டுகிறார்.


காட்சிப் பண்பாட்டின் குழந்தைகளாக தலைவர்களின் சிந்தனையே நம் சிந்தனை, தலைவர்களின் மேடைப்பேச்சே நம் பொன்மொழி என்ற போக்கை பிரெஞ்சு சமூகவியல் நிபுணர் பியர் பூர்தியூ ஆய்வுகள் கொண்டு விளக்குகிறார். குமரி முதல் சென்னை வரை இந்தப் போக்கு ஒவ்வொருவரிடமும் உருவாகியுள்ளதையும், கர்நாடகத்திலும், கேரளத்திலும் இந்தப் போக்கு மட்டுப்பட்டு தனிமனித அறிவுசார் சிந்தனை வளர்ந்திருப்பதையும் ஒப்பிட்டு விளக்குகிறார். காட்சிப் பண்பாடு நம்மை கேளிக்கை மிகுந்த வாழ்வுக்குள் தள்ளியுள்ளது என்றால் மிகையாகாது.


மொத்தத்தில் பத்துப் பக்கம் கொண்ட இக்கட்டுரை "தமிழ் வாழ்க" என ஒலியெழுப்பிக் கொண்டிராது வளரும் தலைமுறை தமிழ், தமிழ்த்தேசியம் என்பவற்றை பேசுவதற்கு முன்பு தமக்கான வரலாற்றை உண்மையுடன் எழுதிய பிறகு கோரலாம் என்பதை அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறது. சிறந்த இக்கட்டுரையை தவறாமல் வாசியுங்கள்.


- சுகன்யா ஞானசூரி

30/09/2022


இதழ்: நன்னூல்

விலை: ₹100 (தனி இதழ்)

தொடர்புக்கு: 86104 92679, புலன எண்: 99436 24956. 

Saturday, June 24, 2023

தமிழ்நாட்டில் ஈழ அகதிகளும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைப்பாடுகளும்

 

தமிழ்நாட்டில் ஈழ அகதிகளும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைப்பாடுகளும் 

(ஒரு அகதியின் ஒப்புதல் வாக்குமூலம்) - சுகன்யா ஞானசூரி.

காலம்தான் எவ்வளவு வேகமாகச் சுற்றிக் கொள்கிறது. ஒரு சொடக்குப் போடுவதற்குள் காலம் கடந்து விட்டதைப் போலிருக்கிறது நினைவின் தாழ்வாரத்தில் கடந்த காலம். பொங்குமாக்கடலின் அலை நுரைகளில் உப்புக் கரிப்பை வாழ்வு சுவைத்துக் கொண்டிருக்கிறது. அத்தனை விரைவாக நாம் நாடு திரும்பிவிடுவோம் அதுவரையில் உயிரைத் தக்கவைக்க ஒரு பாதுகாப்பான நிலம் தேடிப் புறப்பட்ட பாதங்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே இங்கு தங்கிவிட்டன இல்லை வேர் விட்டன என்பதே பொருத்தமாகும். "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்" என்ற வார்த்தைகள் நீர் மேல் எழுத்தாய்க் கலைந்து போனது. நிம்மதி தேடிப் புறப்பட்ட இவ்வாழ்க்கை நிர்கதியாகி நிற்கிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த துயர்பட்ட வாழ்வென்றே மூன்றாம் தலைமுறையும் கேள்வி கேட்கத் துவங்கிவிட்ட பின்பும் அனைவரின் கள்ள மெளனங்கள் புரியாத புதிராகவே உள்ளது. இது என் ஒருவரின் குரல் மட்டுமல்ல தமிழகத்தின் இருபத்தெட்டு மாவட்டங்களில் உள்ள நூற்றி ஆறு முகாம்களின் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஒட்டுமொத்தக் குரலாகவே உள்ளது. இங்கு அகதிகள் என்போர் ஒரு தனிப்பட்ட மதம் சார்தோ, பிரதேசம் சார்ந்தோ இல்லை. சைவர்கள், வேதக்காரர்கள், இஸ்லாமியர்கள் எனவும், மலையகத்தோர், வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசம் சார்ந்தோர் என கலந்துபட்ட விழிம்புநிலைச் சமூகமாகவே அகதிகள் என்னும் அடையாளத்தின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். 

முகாம் எனும் முள்வேலி: 

இதுவொரு திறந்தவெளிச் சிறைச்சாலை என்பதே பொருத்தமானது. ஒவ்வொரு முகாமும் மாவட்ட எல்லைகளுக்கு அப்பால் பொட்டல் வெளிகளிலும், வறண்ட பகுதிகளிலும், சுடுகாட்டு நிலங்களிலுமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் அருகில் உள்ள உள்ளூர் மக்கள் அச்சப்படும் படியான தோற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் நாளடைவில் தேவைகளின் பொருட்டு சந்திக்கவும், பொருட்களை விற்கவும் வாங்கவுமாக முகாம்களுக்குள் சாதாரண மக்களைத் தவிர வட்டிக்கு கடன் கொடுப்போரும், வியாபாரிகளும் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். முகாம் கழிவறை என்பது ஆரம்பத்தில் கருவேலங் காடுகள், தைலமரக் காடுகள், முந்திரி மரக் காடுகள் மற்றும் சுற்றியுள்ள பற்றைகள் போன்றவையே இருந்தன. பிற்பாடு ஐந்து வீட்டுக்கு ஒரு கழிவறை என சில தொண்டு நிறுவனங்களின் கருணையால் உருவாக்கப்பட்டன. இப்போதும் அதுவே தொடர்கிறது. ஒரு முகாம் சிறியது எனில் குறைந்தபட்சம் நூற்றைம்பது குடும்பங்களும், பெரியது எனில் அறுநூறு குடும்பங்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கோழிப்பண்ணைகளிலும், பழைய குடோன்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. வீட்டமைப்பு குதிரை லாயங்களைப் போன்று பத்து முதல் இருபது வீடுகள் சேர்ந்தாற்போல் லைன் (line) தொடர்ச்சியான வீடமைப்பைக் கொண்டது. அடுத்தவர் வீட்டு விம்மல் ஒலி துல்லியமாகக் கேட்கும்படியாக இருந்தது. தார் சீற்று என்று சொல்லப்படுகின்ற கறுப்பு அட்டையால் அமைக்கப்பட்டிருந்த ஆரம்பகால வீடுகள் தறப்பால்களால் சுற்றப்பட்டு இருந்தன. பின்னர் ஒற்றை செங்கல் வைத்து கட்டப்பட்டு ஆஸ்பெஸ்டாஸ் சீற்றுக்கு தரம் உயர்த்தப்பட்டிருந்தது. தற்பொழுது தமிழக அரசு அரசு ஊழியர்களின் தொகுப்பு வீடுகளைப்போல் சிறந்த வீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அடிபம்புகள் இருந்தநிலை மாறி நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து சீராக வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் குடிநீருக்காக பல தோட்டக் கிணறுகளைத் தேடிச் சென்று கிணற்றின் சொந்தக்காரர்களின் மோசமான திட்டுக்களில் கூனிக்குறுகி நின்ற நாட்கள் நினைவை விட்டு நீங்காமலே உள்ளது. 

கல்வி

அகதிகளாகி வந்த ஆரம்ப நாட்களில் கல்வி என்பது எட்டாக் தனியாகவே பார்க்கப்பட்டது. பின்னர் ஆரம்பக் கல்வியை முகாம்களுக்கு அருகிலிருந்த பள்ளிகளில் பயில அனுமதி வழங்கப்பட்டது. பிறகு உயர்கல்வி பயில அனுமதிக்கப்பட்டது. முன்னால் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கி பட்டப்படிப்புகள் வரையிலும் பயில அனுமதி வழங்கியிருந்தார். இந்த ஒதுக்கீடுகள் சில தொண்டு நிறுவனங்களின் தவறான போக்கால் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலிதா அவர்களால் குறைக்கப்பட்டது. பின்னர் அது முற்றாக நிறுத்தப்பட்டது. கலை அறிவியல் துறைசார் பட்டப்படிப்புகள் தவிர பிற துறைகளுக்கு எம்மவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டனர். மாநிலங்களின் அதிகாரத்திலிருந்து கல்வி மத்திய அரசின் அதிகாரத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் நீட் நுழைவுத்தேர்வு எனும் அரக்கன் முகாம் மாணவர்களின் மருத்துவக் கனவுகளை தகர்த்து விட்டது. இதுவரையில் முகாமிலிருந்து மருத்துவம் பயின்றவர்கள் முகாம்களுக்குள் எவ்வித செயல்பாடுகளையும் முன்னெடுக்காத சூழலில் இதுகுறித்து கவலைப்படுவதில் பிரியோசனம் இல்லை என நாம் கடந்து போக நினைத்தாலும் தொடர்ச்சியாக நடுவண் அரசு செயல்படுத்தி வரும் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு என்பது இன்னும் பல்வேறு உளவியல் சிக்கல்களுக்கு எம் மாணவர்களை இட்டுச் செல்லும் என்பதே நிதர்சனம். மருத்துவம், வேளாண்மை, சட்டம் மற்றும் கடல்சார் படிப்பு, போன்றவை எம் மாணவர்களுக்கு கிடைக்காமல் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது பொறியியல், கலை அறிவியல் மற்றும் டிப்ளமோ கல்விகளும் நுழைவுத்தேர்வு எனும் அரக்கத்தனமான செயலால் கல்வியற்ற சமூகத்தை நோக்கி நகர்த்தும் துர்ப்பாக்கிய சூழல் நெருக்கி நிற்கிறது. 

வேலைவாய்ப்பு

பெரும்பாலும் வேலைவாய்ப்பு என்பது இங்கு பெரிய உத்தியோகங்கள் என ஒன்றும் இல்லை. முகாம்களில் அடைபட்டிருந்த மக்கள் அரசு வழங்கிய பணக்கொடையிலும், ரேசன் பொருட்களிலுமே தங்களின் கால்வயிற்றை நிரப்பி வந்தனர். சில முகாம்களில் கட்டுப்பாடுகள் வரையறைக்கு உட்பட்டு நிர்மாணிக்கப்பட்ட சூழலில் வெளியே காலையில் வேலைக்குச் சென்று மாலைக்குள் முகாம்களுக்குள் திரும்பும்படியான இருவேளை கையெழுத்திடும் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. இது ஒரு சிறிய விடுதையுணர்வை எமக்கு வழங்கியது என்பதே நிதர்சனம். முகாம்களை ஒட்டியுள்ள கடைகளில் சொற்ப சம்பளத்தில் எடுபுடி வேலை, கட்டுமானப்பணிகளில் கொத்தனார், சித்தாள் பணிகள், கல்லுடைத்தல், வர்ணம் பூசுதல் வேலைகள் எமக்கு இப்போதும் செய்யக்கூடியதாக உள்ள அனுமதிக்கப்பட்ட வேலைகளாக இருக்கின்றன. சில படித்த இளையோர்கள் தங்களின் அகதி அடையாளங்களை மறைத்து படிப்பிற்கு ஏற்ற மேல் வேலைகளுக்கு செல்லத் துவங்கினர். இப்போதும் அப்படியே தொடர்கிறது. படித்தும் பெரிய வேலைகளுக்கு செல்ல முடியாது என்ற எண்ணம் படிக்கின்ற வயதிலேயே வேலைக்குச் செல்லத் தூண்டுகிறது. அப்படியான சூழலே இங்கு இருக்கையில் கல்விக்கு செலவு செய்ய மனம் விரும்புவதில்லை என்பது எதார்த்தம்தான். அகதி என்ற சொல் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் பெரும் சுமையாகவும், சவாலாகவும் இருக்கிறது என்பதே உண்மை.

சமூகச் சூழலும் எதிர்கொள்ளும் பிரச்சினைப்பாடுகளும்

"வீடு எப்படியோ அப்படியே நாடும்" என்பார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அகதிகள் முகாம்கள் அமைந்திருக்கின்ற இடங்களில் சுற்றியுள்ள சாதிய, மதப் பண்பாட்டுக் கூறுகள் சமீபகாலமாக முகாம்களுக்குள்ளும் தலைகாட்டத் துவங்கியுள்ளது. பெரும்பான்மையான ஆதிக்கம் கொண்ட சாதியை தங்களின் சாதிய அடையாளமாக வரித்துக் கொள்ளும் போக்கு ஆரோக்கியமற்ற இளைய சமூகத்தை உருவாக்கியிருக்கிறது. 

அரசின் மதுபானக் கடைகள் முகாம்களுக்கு அருகில் இருப்பதால் மதுப்பழக்கம் அகதிகள் முகாமுக்குள்ளும் ஒரு கலாச்சாரமாக பரவியுள்ளதைக் காண முடிகிறது. எல்லாக் கொண்டாட்டங்களிலும் மதுபானம் தவிர்க்க முடியாத ஒன்றாக பல குடும்பளின் சீரழிவுக்கும் இன்றைய இளைஞர்களால் ஏற்பட்டிருக்கிறது. மதுபோதையால் விபத்துக்கள் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. 

உலக தாராளமயமாக்கலும் நுகர்வுக் கலாச்சாரமும் அகதிச் சமூகத்திற்குள்ளும் ஊடுருவி சமூகச் சிக்கல்களை தோற்றுவித்து வருகிறது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. இருபத்தி நான்கு மணிநேரமும் கண்காணிக்கும் க்யூப் பிரிவு புலனாய்வு அமைப்புகள் இதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இம்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோர், எழுத்தாளர்கள், படைப்பார்கள், அறிவுஜீவிகள் ஒருங்கிணைக்கும் நிகழ்வுகள் ஒரு தீவிரவாதச் செயல்பாடாக உறுத்துவதால் உடனே விசாரணை எனும் பெயரில் முடக்குவதே முழுநேர நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர் என்பதே நிதர்சனம். 

இங்கு ஒவ்வொரு சமூகமும் சீர்பெற்ற ஆரோக்கியமான சமூகமாக வேண்டும் எனில் பேரறிஞர் சொன்னதுபோல் தங்களின் வீடுகளில் இருந்துதான் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அரசின் சட்டங்களும் கட்டுப்பாடுகளும்

முகாம்களில் காவல் நிலையம் ஒரு காவல் அதிகாரி மற்றும் புலனாய்வு அதிகாரி என்ற மட்டத்தில் செயல்படும். தாசில்தார் மாதாந்திர தணிக்கையின் போது வருவார். வெளியே செல்லும்போதும் உள்ளே வரும்போதும் காவல் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த நடைமுறை தற்சமயம் தளர்த்தப்பட்டு எவ்வித ஜனநாயக தேர்தல் விதிமுறையின்றி அதிகாரிகளின் சைகைகளுக்கு கட்டுப்படுகின்ற விசுவாசமான ஒருவரை முகாம் தலைவராக அதிகாரிகளே கைகாட்டும் முகாம் தலைவரிடம் சொல்லி விட்டுச் சென்று வரலாம். இவைகள் எழுதப்படாத சட்டங்களாகவே இன்றும் தொடர்கிறது. 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அகதிகளுக்கு ஏற்றதாக இல்லை. குறிப்பாக தமிழ் அகதிகளுக்கு. 1955 அரசியல் அமைப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்ட போதும் தமிழ் அகதிகளுக்கான வாசல் அடைக்கப்பட்டே இருக்கிறது. 2019 ல் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம், மியான்மார் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது. ஆனால் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக உள்ள தமிழ் அகதிகளுக்கு அதில் எந்தவொரு வரியும் குறிப்பிடாது தவிர்த்திருக்கிறது. திருத்தப்பட்ட 1955 சட்டம் 21 ன் பிரிவு 1987 க்குப் பிறகு ஆவணங்கள் இன்றி வந்தவருக்கு குடியுரிமை மறுக்கிறது. தமிழ் அகதியானவர் இந்தியப் பிரஜையை திருமணம் செய்தாலும், அவர்களுக்கு பிறக்கும் இந்தியக் குழந்தைக்கும் இந்தியப் பிரஜாவுரிமையை மறுக்கிறது. ஆக எந்த வகையிலும் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்காமல் தவிர்க்கின்றனர். இந்திய அரசைப் பொறுத்தமட்டில் தமிழ் அகதிகள் சட்டவிரோதக் குடியேறிகள் என்றே வரையறுக்கிறார்கள். 

முடிவாக

ஐக்கிய நாடுகள் சாசனத்தில் அகதிகளாக வருபவர்கள் அவர்களது விருப்பத்திற்கு எதிராக அவர்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படாமல், அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, மத உரிமை போன்றவைகள் வழங்கப்பட வேண்டும் எனவும், 

அதேவேளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்ததற்காக அவர்களை தண்டிக்கக் கூடாது என்றும், அவர்கள் நாட்டிற்குள் சுதந்திரமாக வாழ விடவேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் அகதிகளுக்கான சாசனத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதைக் காரணமாக்கி தமிழ் அகதிகளை சட்டவிரோதக் குடியேறிகளாகவே இந்திய அரசு அணுகி வருகிறது. 

அகதிகளை தண்டிக்கப் பயன்படுகின்ற சட்டம் ஏன் வாழ்வதற்கு பயன்படாமல் போகிறது என்கிற புதிர் மட்டும் இன்னும் விளங்காத கேள்வியாகவே உள்ளது.

- சுகன்யா ஞானசூரி

19.02.2023.

(கனடாவில் இருந்து வெளிவரும் உள்ளம் சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை சனவரி-மார்ச் 2023 இதழ்)




Sunday, June 11, 2023

செயற்கை நுண்ணறிவு (AI)


 செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence)

- சுகன்யா ஞானசூரி.

உலகம் முழுவதும் இன்று உச்சரிக்கும் ஒற்றைச் சொல் "ஏய்" (AI). தமிழில் "ஏய்" என யாரையேனும் நாம் விழித்தால் சற்று பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். அப்படியாகத்தான் இந்த ஒற்றைச் சொல் பலதரப்பட்டவர்களிடம் பல்வேறு விளைவுகளையும், விவாதங்களையும் சமீக காலமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் வேகமான வளர்ச்சியில் சாட் ஜிபிடி (ChatGPT) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் படுபயங்கரமாக கோலோச்சிக் கொண்டிருக்கிறது. 

செயற்கை நுண்ணறிவுக்கான விதை அதாவது இதுகுறித்த விஞ்ஞானச் செயல்பாடு 1960ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது எலிசா (ELIZA) என்ற பெயரோடு இயங்கத் துவங்கியிருக்கிறது. பின்னர் இதனை அடியொற்றி அலைஸ் (ALICE) எனும் செய்கை நுண்ணறிவுச் இயங்குதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்பிறகு அமேசானின் அலெக்ஸா (Alexa) உலகமே அறிந்த ஒன்றுதான். 

இப்போது பல்வேறு நிறுவனங்களின் தொழில்நுட்ப முதலாளிகளின் சந்தைக்கான போட்டியை இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் திறந்திருக்கிறது என்பதே எதார்த்தம். இன்றைக்கு இதன் பயன்பாட்டின் தேவைகளை விடவும் அச்சுறுத்தும் விதமான தேவையற்ற செயல்பாடுகளை விரைவாக்கிக் கொண்டிருக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவும் இன்னொன்றைக் கண்டடைய வேண்டியிருக்கிறது. கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பல்வேறு ஒளிப்படம் எடுக்கும் கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்த போது அதைக்கொண்டு மார்பிங் செய்து பலரது வாழ்வைச் சீரழித்த, அல்லது பணம் பறிக்க தவறான வழியில் பயன்படுத்தப்பட்டது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டியிருக்கிறது. அப்படியாகவே இன்று இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு குறைபாடுகளோடு தவறான பயன்பாடுகளுக்கு துணை போகிறது. 

காலமாற்றத்தின் வளர்ச்சிப் போக்கில் தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. இத் தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு மனிதர்களின் வேலை வாய்ப்புகளையும் பறிக்கிறது. இனி வருங்காலங்களில் மருத்துவ உலகம் இதைக்காட்டிலும் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மேம்பாடடையும் என எதிர்பார்க்கலாம். இவற்றை எதிர்த்து வேலைவாய்ப்புகளை தக்கவைக்கவும் நாம் போராடித்தான் ஆகவேண்டும். 

நாம் பாதி வாழ்வைக் கடந்து விட்டோம். நம் குழந்தைகளுக்கு இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்த இருக்கும் சவால்களையும், அவற்றிற்கு ஈடுகொடுத்து  வாழ்வை வெற்றிகரமாக்க இப்போதே கற்றுக் கொடுக்கத் தயாராக வேண்டும். 

1960 களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டது என்றாலும் இதற்கு மூலமாக இருந்தது எழுத்தாளர்களின் தீராத புதிய வேட்கைதான். பல்வேறு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு யாரோ ஒரு கவிஞர், எழுத்தாளர் உதிர்த்துச் சென்ற சொற்களே காரணிகளாகி இருக்கின்றன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் அப்பலோனியஸ் ரோட்ஸ் எழுதிய காவியமும், கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள் தொகுப்பின் சிட்டி ஆஃப் ப்ரேஸ் எனும் கதையும் இன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்துவரக் காரணியாகி இருக்கிறது என்பதை உங்களால் நம்பமுடியவில்லைதானே? ஆனால் அதுதான் உண்மை. படைப்பாளிகள் ஒரு தீர்க்கரிசிகள்தான். 

கேரளாவில் இருந்து வெளியாகும் மனோரமாவின் குழந்தைகளுக்கான இதழில் செயற்கை நுண்ணறிவு குறித்து ஆரம்பம் முதல் தற்போது வரை பல்வேறு கேள்விகளுக்கு விடையளிப்பதோடு நல்லவிதமாக எடுத்தியம்புகிறது. தமிழில் உள்ளதா தெரியவில்லை. முழுக்க முழுக்க எளிமையான ஆங்கிலத்தில்தான் உள்ளது. பெரியவர்களாகிய நாமும் வாசிப்பது நல்லது. குழந்தைகளோடு உரையாடுவதற்கும், தொழில்நுட்பத்தின் சாதக பாதகங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும் இது உதவுகிறது. 

விலை: ₹45.

Sunday, June 4, 2023

அகதிகள் மறுவாழ்வு முகாமிலிருந்து ஒரு குரல் - சுகன்யா ஞானசூரி

 







அகதிகள் மறுவாழ்வு முகாமிலிருந்து ஒரு குரல் 

**********

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

- கணியன் பூங்குன்றனார் 

ஒரு உலகளாவிய ஒற்றுமைப்பாடு கொண்ட பரந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒருவரால்தான் இப்படியான ஒரு வார்த்தையைச் சொல்ல முடியும். அப்படி அவர் சொல்வதற்கு நிச்சயம் ஏதாவதுதொரு ஒடுக்குமுறைக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். இதுதான் உண்மையாகவும் இருக்கக்கூடும். இல்லையெனில் சாதாரணமாக ஏன் கணியன் பூங்குன்றனார் இந்த வார்த்தைகளை உதிர்க்க வேண்டும் சொல்லுங்கள்? சரி நாம் இதுகுறித்து இன்னொரு ஆய்வுக் கட்டுரையில் பேசுவோம். விசயத்திற்கு வருகிறேன்.

சமீபத்தில் வெளியாகியுள்ள "யாதும் ஊரே யாவரும் கேளிர்" திரைப்படத்தை ஒட்டிய கதைத் திருட்டு சர்ச்சைதான். அகதிகள் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் தோழர் பத்தினாதன் கதைகள் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்தப் பதிலும் கூறப்படவில்லை. குறைந்தபட்சம் ஒரு உரையாடலுக்கான கதவுகூட திறக்கப்படவில்லை. இது இன்று நேற்றல்ல கறுப்பு வெள்ளைக் காலம் தொட்டு கலர்க்கலரா ரீல் விடுகின்ற  இன்றைய காலம்வரை தொடரும் ஒரு சாபக்கேடு. 

அகதிகள் முகாம் அகம் புறம்: 

முதலில் நாம் பிற தேசத்து அகதிகளோடு தமிழ்நாட்டில் வதியும் ஈழ அகதிகளை ஒப்புமைப்படுத்திப் பார்க்கும் மோசமான நீசத்தனத்தை தூக்கிப்போட வேண்டும். இங்கே உள்ள அகதிகளிலும் திறந்தவெளிச் சிறச்சாலையான மக்கள் நெருக்கமாக வாழும் முகாம்களுக்கும், பிற போராளிக் குழுக்கள் வசிக்கும் சிறப்பு முகாமுக்கும், போதை மருந்துக் கடத்தல், ஹவாலாப் பணப் பரிமாற்றம், கடவுச்சீட்டு மோசடி என பல குற்றப்பின்னணியோடு அடைக்கப்பட்டிருக்கும் "சிறப்பு முகாம்" எனும் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்குமான வேறுபாட்டை யாரும் உணர்ந்துகொள்வதே இல்லை. அவர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் செய்தித்தாளில் மொட்டையாக அகதி என்ற சொல்லில் செய்தியை முடித்துக் கொள்வார்கள். இப்படியான மோசமான செய்திகள் நாளடைவில் இவர்கள்மீது எப்போதும் ஒரு குற்றப்பின்னணியோடு கூடிய பார்வையை பொதுப்பரப்பில் பிம்பக்கட்டமைப்புச் செய்துவிடுகிறது என்பதுதான் எதார்த்தம். 

அகதிகள் முகாம்களுக்குள் குடியுரிமையற்று நாற்பது ஆண்டுகளாக எந்தவித சுகத்தையும் அனுபவிக்க முடியாமல் மனம் குமைந்து எமக்கான ஒரு வெளிச்சம் கிடைக்காதா என்ற அங்கலாய்ப்பில் கல்வி கற்று மேலே வந்தால் படிப்புக்கேற்ற வேலை இல்லை. சரி இந்தப் படிப்புக்கு வேறு நாடுகளில் வாய்ப்பு கிடைத்தால் கடவுச்சீட்டு எடுக்க முடியாத மோசமான சூழலில் அரசு சட்டவிரோதக் குடியேறியாக முத்திரை குத்தி வைத்திருக்கிறது. இப்படியான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் கடந்த காலத்தில் சிலர் படகில் ஆஸ்திரேலியாவுக்கு கள்ளத்தனமாக பயணித்ததையும் நாம் நாகரீகமாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இங்கே எவ்வித தீர்வுக்கும் வழியற்று இருக்கையில் மாற்றுவழி என்ன என்பதை தேடுவது மனித இயல்பு. 

சட்டவிரோதக் குடியேறியாக நடுவண் அரசு எம்மை முத்திரை குத்தி வைத்திருக்கிறது. திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாக்களில்கூட எதிரியென சித்தரித்துக் கொண்ட அண்டை நாட்டின் அகதிகளுக்கெல்லாம் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஈழ அகதிகளுக்கு அங்கே இடமில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் சரத்துகளில் கைச்சாத்திடாத காரணத்தையே இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் தூக்கிச் சுமப்பார்களோ தெரியவில்லை. 

கோடம்பாக்கத்தின் அகதிகள் குறித்த சினிமாவுக்கான கச்சாப்பொருட்கள் சிறப்பு முகாம் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. ஏனெனில் இவர்கள் யாரும் சாதாரண மக்கள் வசிக்கும் முகாம்களுக்குள் அனுமதியின்றி செல்லவோ, உரையாடவோ வழியில்லை என்ற எதார்த்தத்தினை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். செய்தித்தாள்களில், சமூக ஊடகங்களில் வருகின்ற செய்திகளை வெட்டி ஒட்டி பல தமிழ் சினிமாக்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

எழுத்தாளர் பத்தினாதன்: 

2007 ல் போரின் மறுபக்கம் தன்வரலாற்று நூல் வாயிலாக தமிழகத்தின் அகதிகள் பாடுகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர். பிறகு தமிழகத்தின் ஈழ அகதிகள் வரலாறு, தகிப்பின் வாழ்வு, சமீபத்தில் வெளியான அந்தரம் நாவல் மூலம் அகதிகள் முகாம்கள் குறித்த குறுக்குவெட்டுத் தோற்றத்தினை வெளியுலகு அறியச் செய்தவர். அவரது நூல்களை மேற்கோள் காட்டி சில தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. தெம்மாடுகள் நாவல் மூலம் உதயனும், ஏதிலி நாவல் மூலம் அ.சி.விஜிதரனும் எம் வாழ்வு குறித்து எழுதியவர்கள். ஆரம்பகட்டத்தில் புலனாய்வுத்துறையினரின் விசாரணைகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் கவிதை எனும் கருவி மூலம் சிவா.மகேந்திரன், ஈழபாரதி, நடராஜா சரவணன், அ.சி.விஜிதரன், சுகன்யா ஞானசூரி போன்றவர்களோடு இன்றும் புதிய இளையவர்கள் எம் வாழ்வை வெளியுலகத்திற்கு படம்பிடித்துக் காட்டுகிறார்கள். இப்படியான அவலப்பாடுகளோடு மேலெழுந்து வரும் மக்களைத்தான் தமிழ்ச் சினிமா மிக மோசமாக சித்தரித்து வருகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் சர்ச்சை

தோழர் பத்தினாதனின் கதைகளின் காட்சியமைப்புகள் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பத்தினாதன் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு படக்குழுவினர் இன்னமும் பதிலளிக்கவில்லை. இதுகுறித்து ஒரு திறந்த உரையாடலுக்கு பத்தினாதன் அழைப்பு விடுத்தபோதும் அதை அவர்கள் புறக்கணித்து அவரது முகநூல் கணக்கை முடக்கச் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது சென்னைவரை வரவைத்து அலைக்கழிப்பு செய்திருக்கின்றனர். இதுதான் பொதுவுடைமை கொள்கையாளன் என தன்னை கூறிக்கொள்ளும் இயக்குநருக்கு அழகா? ஒட்டுமொத்தமாக நான் யாரையும் குறைகூறமாட்டேன். முதலாளித்துவத்தை, ஏகபோகத்துவத்தை சமன்படுத்தி எல்லோருக்கும் எல்லாமும் சம அளவில் கிடைக்கச் செய்வதுதானே பொதுவுடைமை? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதுதானே பொதுவுடைமை? சமீபகாலமாமா பொதுவுடைமையின் பெயரால் உழைப்புச் சுரண்டல், நிறுவனங்களின் சொத்துக்களை அபகரித்தல் என ஏகபோக முதலாளிகளாக முயற்சித்து அம்பலப்பட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் இப்படத்தின் இயக்குநரும் இருக்கிறாரா?  எல்லோருக்கும் வயிறு என்ற ஒன்று இருக்கிறதுதானே? 

படம் முன்வைக்கும் அரசியல்

 அகதிகள் குறித்து அபத்தமான காட்சிகளை இப்படத்தில் வைத்திருப்பதன் வாயிலாக அகதிகள் மீது மேலும் மேலும் களங்கம் கற்பிக்க நினைக்கிறார்கள். நிறவாதம் இங்கே தலைவிரித்து ஆடத்துவங்குகிறது. இனவாதத்தால் அழிந்து பட்ட சமூகம் நிறவாதத்தின் துணைக்கோடலோடு சாதிய மேட்டிமைகளை மீட்டுருவாக்கம் செய்ய முற்படுகிறது. மேலும் நாயக பிம்பக் கட்டமைப்புச் சினிமாவில் நாம் எம் வாழ்வு குறித்த எதார்த்தத்தை எதிர்பாக்க முடியாது. இதில் தமிழகத்தில் உள்ள அகதி நாயகன் வெளிநாட்டுக்கு எப்படிச் சென்றார்? அதற்கான சாத்தியக்கூறுகள் இந்திய வெளியுறவுக் கொள்கையில் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறதா? அதற்கான வாய்ப்புகள் இருப்பின் ஏன் கடல்வழியாக கள்ளத்தனமாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அகதிகள் புலம்பெயரப்போகிறார்கள்? இவை எல்லாவற்றிற்கும் மேலாக வெளிநாடு சென்ற  நாயகன் இலங்கையில் சர்வசன வாக்குரிமை நடாத்தக் கோருவது சுத்த அபத்தம். தமிழகத்தில் உள்ள அகதிகளின் குடியுரிமை குறித்தல்லவா அவர் கோரிக்கை வைத்திருக்க வேண்டும்? இங்கே நாற்பது ஆண்டுகளாக வசிக்கும் மக்களில் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி அவரிடம் கேள்வி கேட்டுப் பாருங்கள் எது எமக்கு அவசியமானது என்பதை பொட்டில் அடித்ததுபோல் சொல்லியிருப்பார். ஆகவே இது என்ஜிஓ (NGO) ஒன்றின் அரசியல் லாபியாகவே  தெரிகிறது.

நீண்டகாலமாக எம் மக்களின் அரசியல் பிரதிநிதிகளென தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டு செயல்பட்டுவரும் ஒரு தொண்டு நிறுவனத்தின் பிரச்சார ஊதுகுழலாக இத்திரைப்படம் தன் அரசியலை முன்வைக்கிறது. இது இங்குள்ள அகதிகளை மீளவும் நாடு திரும்ப வைக்கும் தமிழ்தேசிய படுகுழி அரசியலை முன்வைக்கிறது. இத்திரைப்படப் படப்பிடிப்பில் அத்தொண்டு நிறுவனமும் சில உதவிகளைச் செய்திருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போதைக்கு எல்லோருக்குமான அரசியல் துருப்புச் சீட்டாக தமிழகத்தின் ஈழ அகதிகள் இருக்கிறார்கள். முன்னர் இருந்தது போலவே இப்போதும் ஏமாளிகளாக இருக்கிறார்கள் என்ற எண்ணங்களை அனைவரும் கைவிடவேண்டும். ஏனெனில் கடந்த பத்தாண்டுகளில் எல்லா அரசியல் போக்குகளையும் புரிந்துகொண்டே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். படைப்பாளிகளும் உருவாகி வருகிறார்கள்.

தீர்வு:

ஒரு படத்தின் எட்டுக் காட்சியமைப்புகள் குற்றம் சாட்டுபவரின் படைப்புகளோடு ஒத்துப் போகும் எனில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வழியிருப்பதாக சட்டம் சொல்கிறது. படைப்பையும் படத்தையும் வரிக்கு வரி காட்சிக்குக் காட்சி படித்துப் பார்த்து பக்கம் பக்கமாக அறிக்கை தாக்கல் செய்து ஆண்டுக்கணக்காக காத்திருந்தாலும் நிவாரணம் என்பது கிடைக்காது என்பதே நாம் கடந்து வந்த பாதைகள் சொல்லும் செய்தி. விசாரணையின் கரங்கள் எம் குரல்வளையை நசுக்கவே எத்தனிக்கும். குறைந்தபட்சம் இப்படியான அநீதிகள் நடைபெறுகிறது என்பதை பொதுவெளியில் வைப்பது என்பதே எமது போராட்டமாகிறது.

நிறைவாக

மீண்டும் மீண்டும் நாம் சொல்வதுதான் தமிழகத்தின் ஈழ அகதிகள் விடையம் இன்னும் எம் படைப்புகளில்கூட முழுமையாக சொல்லப்படவில்லை. ஒரே இனம், ஒரே மொழி பேசினாலும் இந்த நிலத்தில் எம் வாழ்வின் சிக்கலான கூறுகள் இன்னமும் நீடித்திருக்கிறது. அப்படி இருக்கையில் ஆளாளுக்கு ஒரு கதையை அகதிகள் கதையென கோடம்பாக்கத்தில் தூக்கிக்கொண்டு வந்தால் நேரடியாக முகாம்களுக்குள் வந்து களநிலவரம் தெரிந்து பேசுங்கள், படம் எடுங்கள். அதைவிடுத்து எம்மை குற்றப்பரம்பரைகள் ஆக்காதீர்கள் என்பதை கனிவோடு வேண்டிக் கொள்கிறோம். நாம் இப்போது எதிர்பார்த்திருப்பது எமக்கான ஒரு குடியுரிமை பெற்ற சுதந்திரமான வாழ்வை மட்டுமே. நாடற்று நாதியற்று இருக்கும் எமக்கு இப்போதைக்கு  எல்லாமே யாதும் ஊரே யாவரும் கேளிர்.

அகதிகள் மறுவாழ்வு முகாமிலிருந்து 

சுகன்யா ஞானசூரி.

04/06/2023



Friday, May 12, 2023

சாத்தான்களின் அந்தப்புரம்

 சாத்தான்களின் அந்தப்புரம் 



நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதைப் பிரதியினை வாசித்துக் கொண்டிருந்தேன். சற்று ஓய்வறைக்குச் சென்று திரும்புகையில் மனைவி வாசித்துக் கொண்டிருந்தார். ஆச்சரியம் மேலிட சில கவிதைகளை அவரை வாசிக்கச் சொன்னேன். தன்னியல்பாக வரி பிரித்து வாசித்ததைக் கேட்டதும் எனக்கு வியப்பாகவே இருந்தது. அன்பாக முத்தங்களை வழங்கிவிட்டு தொகுப்பை மேலும் வாசித்து முடித்தேன். கிட்டத்தட்ட அத்தொகுப்பு வெளிவந்து பத்தாண்டு ஆகப்போகிறது. ஒரு தொகுப்பு ஒரு தசாப்தத்திற்குப் பிறகும் வாசிப்பவருக்கு புதிய அனுபவங்களையும், அதிர்வுகளையும் வழங்கும் எனில் அது சிறந்த படைப்பாகிறது. அத்தகைய படைப்பில் இத்தொகுப்பும் ஒன்று என்றால் மிகையாகாது.


\\உங்கள் நிர்வாணத்தை 

ஒன்றுமில்லாமல் செய்யத் துணிந்த நாட்களில்தான் 

நீங்கள் எங்களை ஒன்றுமில்லாதபடிக்கு 

தள்ளிவைத்து தெய்வமாக்கினீர்கள்//


தாய்வழிச் சமூகத்தை புறந்தள்ளி ஆண்வழிச் சமூகமாக ஆதிக்கம் பெற்ற மேட்டிமைத் தனத்தை, பெண் உழைப்பின் மீதான சுரண்டலை பகடி செய்யும் சிறந்த கவிதை. 


பெண் ஒடுக்குமுறை, பெண் உடல்மீதான அத்துமீறல் என சமூகத்தின் அழுத்தப்படுகள் ஒருபுறம் எனில் வீட்டில் கணவனால், உறவுகளால் ஏற்படும் அழுத்தப்பாடுகள் மறுபுறம் என நைந்துகிடக்கும் மனம் கவிதையாகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது. 


இலகுவான சொற்களும், நல்ல முதிர்ச்சியான சொற்பிரயோகமும் இத்தொகுப்பை சிறப்புறச் செய்கிறது. இவர் பொதுவுடைமை சிந்தாந்தத்தில் ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறார் என்பதையும் அறியமுடிவதால் சமூகம் குறித்த அதிலும் சமூகத்தில் பெண்களின் இடம் குறித்த கவனப்படுத்தலை கவிதைகளின் வாயிலாக நம்மோடு உரையாடுகிறார்.

அப்படித்தான் நான் பார்க்கிறேன். 


ஆண் × பெண் ஆண் × ஆண் பெண் × பெண் பெண் × ஆண் என இருமை கொண்ட பழைய வாசிப்பை விலக்கி தனிமனிதர் × பொதுமனிதர் எனும் பார்வையில் வாசிக்கையில் புதிய பார்வைகள் புலப்படுகிறது. திறக்கப்படும் உடல் மற்றும் அண்டங்களின் சக்கரவர்த்தி என்ற கவிதைகள் இதற்குச் சிறந்த சான்றாக அமைகின்றன. திணிப்பு எனும் கவிதை நுகர்வுக் கலாச்சாரத்தை திணிக்கும் விளம்பரங்களை தோலுரிக்கிறது. 


மேலோட்டமாக வாசிப்பவர் கண்களுக்கு இத்தொகுப்பு கணவன் மனைவியின் அல்லது ஒரு ஆண் பெண் ஊடல் மற்றும் கூடல் என்பதாகமட்டுமே தெரியுமெனில் அது அவர்களின் வாசிப்பின் போதாமையாக மட்டுமே கொள்ளப்படும். உடலரசியலின் நுண்ணரசியல் சதிராட்டங்களை சாவதானமாக கவிதையாக்கித் தந்துள்ளார் தோழர் தேவி எனும் நறுமுகை தேவி அவர்கள். 


இது ஒரு புது எழுத்து வெளியீடு.


- சுகன்யா ஞானசூரி

12.05.2023.



Tuesday, March 28, 2023

மரணத்தின் வாசனையும் அது தரும் வாதையும்

மரணத்தின் வாசனையும் அது தரும் வாதையும்.

- சுகன்யா ஞானசூரி



கடல் யாரோ ஒருவரின் துயரத்தை உள்வாங்கி கரையில் மோதித் தெறிக்கிறது என்ற த. அகிலனின் சிறுகதையில் உள்ள வரிகள் அவ்வளவு எளிதாகக் கடந்துவிடும் ஒன்றல்ல. 

நீர் தன் இருப்பிடத்திற்கேற்ப்ப தன் வடிவத்தைக் காட்டுவதைப் போலவே இங்கு மரணம் தன் அரூப வாசத்தை நுகரச் செய்கிறது. யுத்த வாதைகளில் இனியும் சப்பிப் போட எதுவும் இல்லாதபடிக்கு புதிய புதிய விமானங்களின் குண்டுவீச்சுகள், வித விதமான எறிகணைகள் என பலதரப்பட்ட முதலாளிய வர்க்கங்களின் ஆடம்பரப் பசிக்கு எளிய உணவாகிப் போனதென்னவோ சனங்கள், விலங்குகள், புல் பூண்டு தாவரங்கள் என சகலமும் மரணத்தின் வாசனையை நுகர முடியாமல் எனது பன்னிரண்டாவது வயதில் வெளியேறினேன் என்பதை விடவும் வெளியேற்றப்பட்டேன் என்பதே பொருத்தமாகும். 

1995 வரையில் வன்னி நிலம் எத்தகையது என்பதை நான் அறியவில்லை. அந்த ஆண்டின் பாரிய இடப்பெயர்வான யாழ் வெளியேற்றம் (1990 களில் முதல் யாழ் வெளியேற்றம் எம் சகோதரர்களுக்கு நடந்த பிறகான சில ஆண்டுகளில்) பூநகரிக்கும் ஆனையிறவுக்கும் நடுவே கிளாலி நீரேரி வழியாக வன்னி நிலத்தில் கால்பதிக்க வைத்தது. பெரு வனங்களும் பெரு வெளிகளுமாக அச்சம் தருவதாக இருந்தாலும் புதிய அனுபவமாக இருந்தது அப்போது. அது சிறுவர்களுக்கே உரிய மனம். கிளிநொச்சி, மாங்குளம், கனகராயன்குளம், கொல்லர் புளியங்குளம், மல்லாவி, வலைப்பாடு இப்படியாக 1996 செப்டம்பர் வரையிலான காலகட்டத்துக்குள் எத்தனை இடப்பெயர்வு. மலேரியா, நெருப்புக் காய்ச்சல், பாம்புகளோடு உறக்கம், காட்டுப் பன்றிகள் தொல்லை இப்படி நிறைய நிறையவே புதிய அனுபவங்களை வன்னி மண் தந்திருந்ததை த. அகிலனின் "மரணத்தின் வாசனை" சிறுகதைகள் தொகுப்பு மீண்டுமொரு நினைவுப் பயணத்திற்குள் என்னை அழைத்துச் சென்றன என்றால் மிகையாகாது. 

எம்.ரி 90 வண்டிகள் இப்போது (யப்பான் கோண்டா தயாரிப்பு) ஹீரோ கோண்டா ஆகிடுச்சு என்ற வரிகளை வாசிக்கையில் மலேரியா காய்ச்சல் கண்ட அப்பாவை கொல்லர் புளியங்குளம் முகாமிலிருந்து மாங்குளம் சந்தி பெரிய ஆஸ்பத்திரிக்கு அப்பாவின் எம்.ரி 90 மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற நினைவுகளை மீட்டிச் சென்றது. 

போர் தின்ற சனங்களிடம் சொல்வதற்கு நிறைய நிறைய கதைகள் இருக்கிறது. இவைகளை ஒருபோதும் இலக்கியமாக யாரும் ஏற்பது இல்லை. இட்டுக்கட்டிய புனைவுகளையே போரிலக்கியம் என்று கூவிக் கூவி விற்கும் விற்பன்னர்களையே இன்றைய நவீன உலகம் அலங்கரித்து வருகிறது. 

அகிலனின் கதைகளுக்குள் இந்திய இராணுவத்தின் அடாவடியால் பாம்பு கடித்து மருத்துவமனை கொண்டு செல்ல முடியாமல் இறக்கும் அப்பா, ஊரைப் பிரிந்து இடம்பெயர்ந்து திரும்பி வருகையில் சிதறுண்ட கற்குவியலாய் இருக்கும் கோயிலை காணச் சகியாத அம்மம்மாவின் இறப்பு, காதல் நிறைவேறாத சித்தியின் இறப்பு, ஒருதலைக் காதலியான காயத்திரியின் இறப்பு, பள்ளி நண்பனின் இறப்பு, தெரியாத போராளி  ஒருவரின் மரணம் இப்படி பல்வேறு மரணங்களை தன் கதைகளுக்குள் உயிரோட்டமாக்கித் தந்துள்ளார். அத்தனை இறப்புகளுக்கும் போரும், போர்க்கருவிகளும், ஆக்கிரமிப்பாளர்களும், இடப்பெயர்வுகளும் காரண காரியங்களாகி நிற்பதை யாரும் நம்புவதேயில்லை. விதியின் மீது பழி போட்டு கடந்துவிடுவது எளிதாகி விடுகிறது. எளிய மனிதர்களால் அதைத்தவிர வேறென்ன செய்துவிட முடியும்? 

சில கதைகள் தேவைக்கு அதிகமாக நீண்டு செல்வதும், ஒரே லயத்தில் சொல்லல் முறை இருப்பது சுணக்கத்தை ஏற்படுத்தினாலும் அத்தனை கதைகளும் சிறு திருப்பங்களோடு மையக் கருவை சரியாக வந்தடைகின்றன. இதுவே எழுத்தின் வெற்றியுமாகும். 

அலைகளின் மீதலைதல் எனும் எனது முதல் கவிதைத் தொகுப்பில் "கடல் மீது/ கால் நனைப்பதாய்/ மறந்தும் மிதித்து விடாதீர்கள்/கரைதேடி அலைகளின் மீதலைகிறது /அவர்களின் ஆன்மாக்கள் என எழுதியிருப்பேன். அது என் கண்முன்னால் மூழ்கடிக்கப்பட்ட படகில் இறந்துபோனவர்களுக்காக எழுதியவை. இப்போதும் அந்த நாட்களை நினைத்தால் நெஞ்சம் பதறவே செய்கிறது. கரையென நம்பி மணல் திட்டுக்களில் இறக்கிவிட்ட படகோட்டிகளும், மணல்திட்டில் மூழ்கி இறந்து போனவர்களும் தப்பிப் பிழைத்தவர்களும் என ஒரு பெருங் கூட்டமாகவே 1996களில் தனுஷ்கோடி கரைகளில் கால் பதித்தோம். தாயையும் சகோதரிகளையும் காப்பாற்றிவிடும் எத்தனத்தில் கானல் நீர் முகத்துவாரத்தில் மூழ்கிச் சாவெய்துபவனின் கரம்பற்ற இயலாமல்போன குறுகுறுப்பை "கரைகளுக்கு" என்ற சிறுகதை புலப்பெயர்வின் விடியலை வைகறைக்குள் புதைத்துச் செல்லும் கதை. 

மொத்தம் 12 சிறுகதைகள். ஒவ்வொன்றும் விதவிதமான மரணத்தின் வாசனையை சாம்பிராணிப் புகையாட்டம் திணறச் செய்கிறது. அதன் வாதைகளிலிருந்து தப்பித்தால் நீங்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவீர்கள். 


நூல்: மரணத்தின் வாசனை

ஆசிரியர்: த. அகிலன் 

வெளியீடு: வடலி 

விலை: ₹160.

Monday, March 20, 2023

கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம்


 

"அந்தரம்" கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம்.

- சுகன்யா ஞானசூரி.


அம்மா என்கிற அதிகாரத்திடம் அழுது பால் குடித்தபடியால் வேடிக்கை பார்ப்பதற்கான சத்து இன்னும் இந்த உடம்பில் இருக்கிறது.


ஒரு சாமான்ய மனித வாழ்வின் அலைக்கழிப்பு என்பது அவனது/ளது சொந்த தேசத்தில் நடப்பதாக இருப்பின் ஏதோவொரு வகையில் தீர்வை எட்டிவிடும் அல்லது குறைந்தபட்சம் சமரசத்திற்குள்ளாவது கொண்டுவரப்படும். இவை இரண்டுக்குள்ளும் அடக்க முடியாத ஆற்றாமையின் வெளிப்பாடு சொந்த தேசத்தில் இல்லாமல் அந்நிய நிலமொன்றில் அந்தரித்து நிற்கும் தமிழ் அகதிகளின் வாழ்வே அந்தரம். 


என்னால் உரைநடையில் சொல்ல முடியாமலே இருந்த என் அந்தரத்தை கவிதை எனும் வடிவம் கொண்டு வெளிக்கொண்டு வந்தேன். இது ஒரு வகையான அதிகாரத்தின் அடக்குமுறைக்கு கீழ்படியும் செயல் என்பதைக் காட்டிலும் தப்பித்தல் என்றே சொல்லவேண்டும். எது எப்படி இருந்தாலும் இவ்வளவு வெளிப்படையாக தயக்கமின்றி கால் நூற்றாண்டு தமிழர்களின் அகதி வாழ்வை ஒரு தன்வரலாற்றுப் புதினமாக்கி வழங்கியுள்ளார் தோழர் தொ. பத்திநாதன். 


இத்தனை ஆண்டுகால அகதி வாழ்வில் என்ன வகையான சொத்துக்களை சேர்க்க முடிந்தது? ஆடம்பரம் சுகபோக வாழ்க்கை? ஒருவேளை உணவைத்தானும் கடன்காரர் ஆக்கினை இன்றி உண்ண முடிந்ததா? படித்த படிப்பிற்கேற்ற வேலை? வேலைக்கேற்ற ஊதியம்? ஒருமுறையாவது அதிகாரிகளிடம் இழந்துபோகாத தன்மானம்? எந்த ஒன்றிற்கும் அகதியால் பதில் சொல்லிவிட முடியாதபடிக்கு இந்த வாழ்க்கை தொலைக்கப்பட்டு விட்டது என்பதை விடவும் தமிழ் அகதிகள் தமிழ் அதிகாரிகளின் சப்பாத்துக்களின் கீழ் நசுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே முரண் நகையானது. 



பெண்மையை, பெண் சுதந்திரத்தைப் பேசாத எந்தவொரு படைப்பும் அத்துணை கலைத்தன்மை கொண்டதாக அமைந்துவிடாது. சாந்தி எனும் மையப் பாத்திரத்தின் நகர்வினூடாக பல்வேறுபட்ட முகாம் பெண்களையும் முகாம்களை ஒட்டியுள்ள ஊர்ப் பெண்களையும் அவர்களின் பார்வையில் முகாம் எனும் திறந்தவெளிச் சிறைச்சாலையின் பன்முகப் பார்வைகளை அவதானமாக கையாண்டுள்ளார். கரணம் தப்பினால் மரணம் என்ற வார்த்தையைப் போலத்தான் இருபக்கமும் கூர்மையுள்ள கத்தியின் மீது நடப்பதைப் போன்ற பதற்றமே அந்தரத்தினை வாசித்து முடிக்கும்வரை. 


இருபக்க உறவுகளுக்குள்ளும் பார்வைக் கோணல்கள் இருக்கிறது. அது சமய சந்தர்ப்பம் பார்த்து வெளிப்பட்டும் இருக்கிறது. இப்போதும் வெளிப்பட்டவண்ணம் இருப்பதையும் மறுக்க முடியாது. ராஜீவ்காந்தி கொலைக்கு முன் ராஜீவ்காந்தி கொலைக்குப் பின் என தமிழகத்தில் ஈழ அகதிகள் வரையறுத்துப் பார்க்கப்படுவதும் கண்கூடு. இன்றைக்கு எவரும் இல்லை ஆனால் அவலங்களைச் சுமப்பது என்னவோ சாமான்ய அகதிகள்தான். நரம்பில்லாத நாவுக்குத்தான் எத்தனை தடித்த சொற்களை வீசி எறிகிறது எளிதில். அது மனதில் ஆறாது அந்தரித்து நிற்கிறது மனம் நொந்தபடி. 


சாதி சமயம் இரண்டும் மனிதர்களை எந்த எல்லைக்கும் அழைத்துச் செல்லும். அதுபோல் வஸ்துகளின் பழக்கவழக்கங்களும், கொலைக் குற்றங்களும்,  முகாம் தலைவர் எனும் போதையும் அதிகாரிகளிடம் சொந்த மக்களையே காட்டிக்கொடுக்கும் கேவலமான செயலையும் செய்யத் தயங்காது என்பதை கந்தசாமி, முருகானந்தம் மாந்தர்கள் வழி எடுத்தியம்பிள்ளார். அதேபோல் கல்வியின் பெயரால் தொண்டு நிறுவனங்களும், மத நிறுவனங்களும் செய்த செய்கின்ற மோசடிகளும் கொஞ்சநஞ்சமல்ல. அகதிகளின் பெயரால் அவர்கள் பரலோகத்தில் நித்தியமடைவார்களாக ஆமென். 


அந்தரம் புதினத்தில் கதைசொல்லியாக பத்திநாதனே பயணிக்கிறார். தான் பார்த்த காட்சிகளை, தான் வாழ்ந்த வாழ்வை அவர் சொல்லிச் செல்வதைப் போலவே அமைத்துள்ளார். இங்கே ஜிகினா வேலைகளுக்கு இடமின்றி உள்ளதை உள்ளபடியே சொல்லியிருப்பதால் சக அகதியாக அவருக்கு என் ராயல் சல்யூட். மற்றபடி பெயர் மாற்றங்களும், கட்டிட மாற்றங்களும் நிகழ்ந்துவிடுவதால் மட்டும் எதுவும் உடனடியாக மாறிவிடாது. அதிகார வர்க்கத்தின் புலனாய்வு முற்றாக நீக்கப்பட்டு சுதந்திரமான வாழ்க்கை வழங்கப்பட்டால் மட்டுமே அந்தரித்து நிற்கும் மனங்களில் ஆறுதல் ஏற்படும். 


அவர் மன்னாரில் நின்றுகொண்டு கடந்துவந்த இந்த வாழ்வை வேடிக்கை பார்க்கிறார். நான் உள்ளுக்குள் இருந்துகொண்டே வாசித்து நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன்.


"அந்தரம்" தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகளின் கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் ஒரு காட்சிப் படம். 


ஆசிரியர்: தொ. பத்திநாதன் 

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

விலை: ₹250.

Friday, November 26, 2021

பாக்களத்தம்மா - எங்கள் கதை

அன்பின் தோழர் புலியூர் முருகேசன் அவர்களுக்கு தோழமை வணக்கங்கள். 


நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலம் என்றே நம்புகிறேன்.


பொதுவாக கடிதம் எழுதி நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டது. தங்களின் பாக்களத்தம்மா வாசித்ததும் தங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் எனத் தோன்றியது. கடிதம் வழிதான் உயிரோட்டம் உள்ளவற்றை கூறமுடியும் என்பது கடித வரலாறு. 


கருத்த வானம் குமுறிக் கொண்டிருக்கும் இன்றைய (26/11/2021) காலையில் பாக்களத்தம்மாவை வாசித்து முடித்தேன். நவம்பர் 7 அன்று கும்பகோணம் பக்கங்கள் நிகழ்வுக்குப் பிறகு அம்மா சத்திரம் தோழர் சரவணன் இல்லத்தில் நீங்கள் உங்களின் பாக்களத்தம்மா நாவலை எனக்கு தந்தீர்கள். நாவல் வெளியாகி சரியாக பதினொரு மாதங்கள் ஆகிறது. பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு பெரிய துயரார்ந்த கதையை நாவலாக்கியுள்ளீர்கள். இருபது வருசத்துக்கு முன்னால் (அப்போது எனக்கு 17 வயசு) எங்கள் குடும்பத்தில் நடந்த துயர நிகழ்வுகளை நான் மீண்டும் நினைத்துப் பார்ப்பேன் என நினைக்கவில்லை. பாக்களத்தம்மா இன்று அத்தனையையும் மீண்டும் நினைவுபடுத்தி நெஞ்சை கனதியாக்கிவிட்டார். 


அகதியாகி வந்த நிலத்தில், முருகனின் தீவிர பக்தையான அம்மம்மாக் கிழவியின் மரணத்திற்குப் பிறகு எங்கள் பெரிய குடும்பம் எப்படிச் சிதறியது, யாரால் சிதறியது என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். என் அம்மாவின் உடன்பிறந்தவர்களால் அப்பாவும் அம்மாவும் ஏமாற்றப்பட்ட நாளில் நவீன வளர்ச்சி எங்களின் வாடகை சைக்கிள் கடையையும் காவு வாங்கியது. பெயிண்ட் வேலை, வார்னிஷ் பூச்சு வேலை, அறுப்பு வேலை என அப்பாவுக்கு ஒத்தாசையாக வேலை பார்த்த நாட்களை மீண்டும் பாக்களத்தம்மா நினைத்துப் பார்க்க வைத்துள்ளார். வசதியான முறையில் வாழ்ந்த பிள்ளைகள் இப்படி பாதியில் கஷ்டப்படுவதை நினைத்து தந்தை கண்கலங்கி புலம்பியதை கண்கூடாகப் பார்த்தவன் நான். இன்றும் அந்த நிகழ்வுகள் வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதே எங்கள் அவாவாக இருக்கிறது.


உடன்பிறப்பால் ஏமாற்றப்பட்ட பிறகும் தன் நான்கு பிள்ளைகளையும் பட்டதாரியாக்கியே தீருவேன் என்ற வைராக்கியத்தில் தாலிக்கொடியைக்கூட வித்து சாதிச்சுக் காட்டிய என் பெற்றோருக்கு இன்று பிள்ளைகள் தலையெடுத்து, பேரப்பிள்ளைகளோடு சந்தோஷமாக இருந்தாலும் அந்த ஏமாற்றத்தின் வடு அவ்வப்போது நெருடுவதை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பேச்சு காட்டிவிடும். வாழ்ந்த வீட்டை இழந்து,  நிலத்தினை இழந்து எல்லாவற்றையும் தாண்டி நாங்கள் வாழ்வது ஆச்சரியமான ஒன்றுதான். அது இவர்கள் முன்னால் நாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற அம்மாவின் சபதமே. பெண்களால்தான் இந்த உலகம் இன்னமும் உயிர்ப்போடும், உறுதியோடும் இயங்குகிறது என்றால் மிகையில்லை.

வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் கதைகள் மிகவும் ரணமானது. பாக்களத்தம்மா அப்படியான ஒரு வாழ்வியலின்  கதை. நாகையா போன்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் இருப்பதுதான் உறவுகள் அறுபடாமல் கொண்டிழுக்கிறது. அவைகள் நல்லபடியாக செல்லும்பட்சத்தில் வாழ்கின்ற அக்குடும்பத்தின் கெத்தாகும். அதுவே தீதாகையில் வெறுமையே மிஞ்சும். 


மூக்குத்திக் காசிக்குப் பிறகு நான் வாசிக்கும் தங்களின் நாவல் இது. இரண்டுக்கும் இடையிலான காலவெளியில் தங்களின் எழுத்து மெருகேறியிருக்கிறது. பரமபத விளையாட்டைப் போலவே வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் மிகுந்தது. ஒரு தொன்மக் கதையாடலையும் ஊடுபாவாக  இந்த நாவலில் நிகழ்த்திக் காட்டும் சாத்தியம் இருந்தும் ஏன் அதனைத் தவறவிட்டீர்கள்? அப்படி இருந்திருந்தால் நாவல் எனும் வகைமைக்கு ஒரு முழுமை கிடைத்திருக்கும் என்பது எனது அவதானிப்பு. அகதியெனும் மனநிலை நீங்கி  புலியூர் நிலத்தில் நீங்கள் கால்பதித்து வாழ வாழ்த்துகிறேன்.


எங்கள் கதையை எழுதிய தங்களுக்கு ஆயிரம் முத்தங்கள் தோழா.

- சுகன்யா ஞானசூரி

26/11/2021.

 

Friday, October 15, 2021

நாடிலி - தோழர் பொதியவெற்பன் ஐயா பார்வையில்



புலம்பெயர் ஏதிலி நினைவில்

'உடனலைந்து எரியும் ஒருபிடி நிலம்':2

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


2.'கடல்மீதும் சிறுதுண்டு நிலந்தேடும் ஏதிலிபாதம்' -

ஞானசூரியின் 'நாடிலி' மீதான என் வாசிப்பின் பிரதி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


"உலகத்தின் வீதிகளில் ஒரு முகவரி தேடி

அலைகிறது என்னினம்...." -

கிழவன் வைகறை வாணன்  


"இங்குவந்த எனக்கு/

புலம்பெயர்ந்த புள்ளிவிபரம் பொருந்தாது/

ஊன்றிய காலை எடுத்து இன்னொரு/

இடத்தில் வைத்தால்/

முந்திய இடமும் பிந்திய இடமும்/

பூமிதான் எனக்கு/

எனவே எனக்கு நாடில்லை/

நாமம் இதுவென்று ஒன்றில்லை."


இப்படியாகப் புலம்பெயர் வாழ்விலும் பிறந்த மண்ணையும் புகலிட மண்ணையும் தமக்கான பூமிதான்என வீற்றிருக்கும் பிரமிளாலும் கூட,


"பார்த்த இடமெல்லாம்/ கண்குளிரும்/ பொன்மணல்

என் பாதம் பதித்து/ நடக்கும்/ இடத்தில் மட்டும்/

நிழல் தேடி/ என்னோடு அலைந்து/ எரிகிறது/

ஒருபிடி  நிலம்"

புகலிட நிகழ்தகவிலும்    புலம்பெயர்ந்துடனேயே

அலைந்து எரியும் ஒருபிடி நிலத்தை உதறிடவா முடியும்?


இதனால்தான், சச்சிதானந்தனின் ' நினைவில் காடுள்ள மிருகம் போல் எரியும் தம் நிலத்தை நினைவுகளில் தூக்கிச் சுமந்தலைகிறோம் என்னும் ஞானசூரி அதுதரும் வாதையிலிருந்து தப்பித்துக்கொள்ளப் படைப்பிலக்கியத்தின் வழியே சற்று ஆசுவாசம் கொள்கின்றோம் என்கின்றார்.


புகலிட வாழ்வூடே முந்தைய இடமும் பிந்தைய இடமும்

பூமிதான் தமக்கென்றாலும் 'உடன் அலைந்தே தான்

தீரும் ஒருபிடி நிலம்'. அந்த அல்லாட்டமே 'நாடிலி'.


*


"யாதும் ஊர்தான் யாவரும் கேளிர்தான்/

வேறு வழியில்லை/ ஊரற்றவனுக்கு உலகே வீடு/

என்பதெல்லாம் ஊரற்றுப்போன துயரம்/

மறக்கவே" - கலியமூர்த்தி

 மாறாக மறக்க அல்லாமல் அதனை மறுக்கவே 

செய்கின்றன ஏதிலியர் கவிக்குரல்கள்:


"சமுத்திரத்தின் பெருவெளியில்/ படகுகளோடு  மூழ்கிய குழந்தைகளை ஒதுக்கும் /கரையில்/நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்/ யாதும் ஊருமில்லை/யாவரும் உறவுமில்லை" 


"வெளித்திசை என்பது/ முகாம்வாசிகளின் ஒன்பதாவது

திசை."


"போர் திணித்த இடப்பெயர்வில்/ எப்படி நீங்கள்/என்னை/ அகதியென விளிக்கின்றீர்கள்?"

"முகாம்வாசிகளின் உள்ளத்தில்/ தீயின் கங்கு எப்போதும்/

கனன்றுகொண்டே இருக்கிறது/ அகதியென/ நீங்கள்

விளிக்கும் போதெல்லாம்/ நீராவி என்ஜினைப் போல்

எரிந்தடங்கும்" - ஞானசூரி


"அடையாளங்களற்ற நான்/ அதை நினைப்பதிலோ

நடுக்கம் எழுகிறது/ தலையைப் பிடித்தாட்டும் கைகள்

ஆயிரம்/ நாடுமில்லை/ இது என் பெயருமில்லை/

அடையாளங்களற்ற நான் அகதியும் இல்லையாம்" -

தர்மினி ('இருள் மிதக்கும் பொய்கை)


*


'கடல்வழி வந்த அகதி நதிபார்த்தல் ' சிவரமணியின்

வண்ணத்துப்பூச்சி பார்த்தலை நினைவூட்டுகின்றது.

இரண்டுமே நம்மனோர் முருகியலைப் போலாது அதில்

லயிக்கொணா வாழ்மானத்தின் சித்திரிப்புகளே:


மாலைவெய்யில்/ இரவு ஒளிகள்/ நதிநீரின் சலசலப்பு/

குறுமணலின் பளபளப்பு எல்லாம் அழகென்று நீங்கள்

வர்ணிக்கின்றீர்கள்/ இதுகாறும் நான் பார்க்கவில்லை

என்பதை விட/ இரசிக்க விடப்படவில்லை" எனத் தொடரும் கவிதை நதிக்கரை நாகரிகங்களில் சிறந்த இனவழி வந்தும் அகதியெனப்பட்ட தானடைபட்டாக வேண்டிய பட்டிக்குள் மாலைக்குள் சென்றடைந்தாகணுமே என அத்தருணப் பதைபதைப்பை முன்னிறுத்துகிறார்.


செவ்வலரி பூத்தவானமும் செங்குருதி தேங்கியதம்

நிலத்தையே பிரதிபலிப்பது  ஆகிப்போகையில்

அந்த அழகை எல்லாம் அவர்களால் எவ்வாறு ரசிக்க ஏலும்?


"இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு/ துப்பாக்கி

நீட்டப்படும் போது/ ஒரு மெல்லிய பூநுனியில்/

உக்காரக்கூடிய/ வண்ணத்துப்பூச்சியின் கனவு / எனக்குச் சம்பந்தமற்ற / ஒரு சம்பவிப்பு மட்டுமே."- சிவரமணி ('செல்வி சிவரமணி கவிதைகள்')

Thiru Arasu 

*


 

"ஒட்டஒட்ட வெட்டப்பட்ட/ அவர்களுடைய புன்னகை

போன்றே/ என்னுடைய புன்னகையும் இருந்தது/

என்னைப் போன்றே மொழி தெரியாத/ இரவல் முகங்கள்இரண்டை அகதிகள் தேசத்தில் / அவர்களும் அணிந்திருந்தனர்" - தில்லை Thillai Jeganathan 


"ஒட்டஒட்ட வெட்டப்பட்ட அவர்களுடைய புன்னகைபோன்றே/ என்னுடையபுன்னகையும் இருந்தது - என்ற வரிகளில் உறைந்திருக்கும் இறுக்கம் நாட்டை இழந்து துயரைச் சுமக்கும் பெண்களின் அடையாளம்.


'ஒரு தேசத்துக்காகக் கடலைத் தந்த/ எனது கண்களைப் போன்று/ அவர்கள் கண்களும் பூமிக்கே தாழ்ந்திருந்தது என்ற வரிகளுங் கூட, அத்துயரின் பிரமாண்டமான வடிவத்தை ஒரு சில வார்த்தைகளால் சொல்லிச் செல்வது." - குட்டிரேவதி ('ஆண்குறிமையப் புனைவைச்சிதைத்த பிரதிகள்') Kutti Revathi 


இவ்வாறே ஞானசூரியும்  'புன்னகைக்கும் ஒவ்வோர் முகத்திலும்/ வலியின் ரேகை பாதாளம் பாய்கிறது' என்னும் போது  வெவ்வேறு அகதிதேசப் புன்னகைகளும் ஒருசேர அதளபாதாளம் பாய்வன ஆகிவிடுகின்றன.


*


"உன் பாட்டனின் மூஞ்சியில்/ செத்த மாட்டீரலைச் சுட்டுத் தின்றுவிட்டு/ என் பாட்டன்விட்ட/ குணமும் மணமும் நிறைந்த குசுவிலிருந்து/ எடுத்துக் கொண்டிருக்கிறேன்/என் அசலான கவிதைக்கான/ கச்சாப் பொருட்களை." - ம.மதிவண்ணன் Mani Mathivannan 


"தத்துவார்த்தப் பின்புலத்திலிருந்து சாதியத்தின்

வேர்களைக் கோபத்தோடு அசைத்துப் பார்ப்பவை

ம.மதிவண்ணன் கவிதைகள்."


"இதற்கான கவிதைமொழியைக் கவனியுங்கள். அருள்

பாலித்தல்,உபதேசம்,அபயம், ஆக்கினை,ஸ்மிருதி

முதலிய பிராமணைத்துவச் சொற்கள் ஒரு பக்கம்;

இதற்கு முரணாக வெளிப்படுகின்ற சொற்கள் எவை?

குணமும் மணமும் என்ற வழமையான தொடரோடு 'குசு'என்ற சொல் செய்கிற வேலை என்ன? இத்தகைய கவிதை எழுதுவதற்குரிய மொழிச்சாதனத்தை மனத்திலாக்கிக் கொள்ளவேண்டும்." - தி.சு.நடராசன்

('கவிதை என்னும் மொழி')


ஞானசூரி தனக்கான மொழியை எங்கெங்கிருந்து

எல்லாம் எடுத்துக்கொள்கின்றார்:


"பிரபஞ்சத்தின்/ ஒவ்வொரு துகள்களுக்குள்ளும்/ என்

கவிதைக்கான சொற்களை / ஒளித்து வைத்து/

வேடிக்கை காட்டுகிறது மொழி."


"களமாடிக் காலிழந்து /ஒண்டிக் குடித்தனமாய்/

ஒடுங்கிப்போன/ ஒற்றைக்கால் அண்ணனின்/ மேனியில் விளாசிய/ பலநூறு கசையடித் தழும்புகளில்/ எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்/ என் மொழியை"


*


ஆதிவாணியரும் (மாற்றுப் பாலினத்தார்) ஏதிலியரும்

அன்பின் அரவணைப்புக்கு ஏங்கிக்கிடப்போரே.


"நடு இரவில்/ திடுக்கிட்டெழும் குழந்தையைப்போல்/

அலறியெழுபவனுக்கு ஆதுரமான/ ஒரு சொல்

தேவையாயிருக்கிறது


" விழவில் தப்பிய செங்கட் சேய்/ கொளுவிய கூறினும்

ஒழுகாது அலமர/ஒருதாய்த் தேடி உவந்து/ பெருமடி

புதைக்கும் பெற்றித்தே தோழீ! - பெருஞ்சித்திரனார்

('நூறாசிரியம்' - நினைவிலிருந்து)


திருவிழாக் கூட்டத்தில் தாயைப் பிரிந்தே தப்பிய குழந்தை யார் தேற்றுதலுக்கும் அமைதியடையாது அதற்கப்பால் அன்னையைக்கண்டதும் ஓடோடி வந்தவள் மடியில் முகம்புதைக்கும் தன்மையே போல..


"எத்தனை / வசந்த காலம் வந்தென்ன/ ஒரு போதும்

துளிர்ப்பதேயில்லை/ பட்டமரம்"


"ஒரு /பச்சிலையின் துளிர்ப்பைப் போல்/ நம்பிக்கை

அளிக்கும் /ஒற்றைச் சொல்லைக் / கேட்கும் நாளே/

அகதிகளின் வசந்தகாலம்


*


அடைக்கலமாகிய தேசத்தின் தேர்தலுக்கு அவர்கள்

பகடைகள் ஆக்கப்படுவதையும்: மக்களின் சிறு வாழ்வையுங் களவாடும், ஆண்டுமுழுதும் பறக்கும் தேசமன்னர் மாதவிலக்கு நாட்களின் எண்ணிக்கையில் மட்டும் தேசத்தில் இருப்பதாகச் சொல்லப்படுவதையும் சுட்டாமல் விட்டாரில்லை.  நம்மனச்சான்றை உலுக்கி முகத்தில் அறையும் நிகழாய் நம்மில் குற்ற உணர்வைப் பற்றவைக்கின்றது 'நாடிலி' அதனதன் பேசுபொருளை நம்முள் தொற்றவைத்துக் கடத்தவல்ல கவித்துவமும் வாய்க்கப் பெற்றுள்ளதே ஞானசூரியின் கவிதைமொழி.


 இன்னமுங் கூட தம்மைத் தாமே செதுக்கிச் செதுக்கிச் சிற்பிக்கவும் அவர்களாலும் இயலும். நாளாந்தமும் பதைபதைப்பான பாதுகாப்பின்மையில் உழல்தரும்  அத்தகு ஏதிலிவாழ்வில் ஆதுரமான அரவணைப்பை நாமும் அவர்கட்க்கு வழங்க முற்படுகையில் பத்திநாதன்களும் ஞானசூரிகளும் விஸ்வரூபித்தே விகசிப்பார்தாமே? (பத்திநாதன்களும் Pathi Nathan 

இங்கில்லாவிடிலும் எம்மூடேதானே அவர்கள் இருப்பும்!)


*


இவ்வாசிப்பின் பிரதியில் இறுதி முத்தாய்ப்பாக

ஒரு தொகுப்பாக்கக் கவிதை:


நமோ நமோ ததாகதா!

~~~~~~~~~~~~~~~~~

 

"போதி மரத்தின் நிழல்/ இருள்மண்டிக் கிடக்கிறது/ஒன்று/அவ்விடம் விட்டு விலகு/ இல்லையேல்/ நிழலை/வெட்டி வீழ்த்து.

அச்சமோ/ அழுகையோ /ஏதோவொன்று/ஒரு முறையாவது/ புத்தனின் கண்கள் திறந்து மூடுவதைப் / பார்த்துவிடும்/ அவாயெனக்கு"


"குறுநுண் பெரும்புயல் அசைத்திருந்தது/ வேம்பின்

கிளையில் முளைத்திருந்த காக்கைக் கூட்டினை.../

அடுத்தடுத்துக் கிளையுரசி குருதித் தோய்வோடு/

இறையாண்மை நதியில் வீழ்ந்திருந்த/ குஞ்சிற்குப்

புலியின் கண்கள்.


இறந்து காய்ந்திருந்த/ தவளையைத் தின்ற வாயோடு

பாய்ந்து நீந்திக்/ கவ்விப் பிடித்திழுத்துச் செல்கின்ற/

நாய்க்கு/ அச்சு அசலாய்ப் புத்தனின் கண்கள்"


"லட்சம் உடல்களில் ஓற்றை மரணம்/

ஆம் ஒற்றை உடலின் ஒரு லட்சம் மரணம்/

நமோ புத்தா"


"நரமாம்ச இரைவேட்டைச் சிங்களப் புத்தனுக்கு 

எதிரான  வியூகத்தில் சைவப்புலிகள்

காவி ஆக்டோபஸோடு கைகோத்த முரண்நகை!

நமோநமோ ததாகதா"

(சுகன்யா ஞானசூரி *  த.விஜய்ராஜ்  * ரமேஷ் பிரேதன்  *பொதிகைச்சித்தர் *)


Suganya Gnanasoory.  Vijayaraj Cholan. Ramesh Predan


#EXILE.


 

Saturday, October 2, 2021

என்சிபிஎச் உங்கள் நூலகம்- நாடிலி-அண்டனூர் சுரா

 



நூல் விமர்சனம் – நாடிலி 

நூலாசிரியர் – சுகன்யா ஞானசூரி

கடற்காகம் பதிப்பகம்,மதுரை


கடல் மீதும் துண்டு நிலம் தேடும் நாடிலியின் பாதக்குறிப்பு

- அண்டனூர் சுரா

அலைகளின் மீதலைதலும், கடலலையில் இளைப்பாற ஒரு துண்டு நிலம் தேடுதலும் காணி நிலமேனும் சொந்தம் கொண்டவருக்குப் புத்துயிர் அனுபவம் தருவதாக இருக்கலாம். உள்ளம் கெலிக்கும் குதூகலமாகலாம். அவர்களுக்குக் கடல் என்பது நீலத்தாய். அலைகள் நுரைப்பு, பூரித்த பொங்கோதம். இதுவே நிலமற்ற, மண்ணற்ற, நாடற்றவர்களுக்கு? அல்லது நிலத்தையும் மண்ணையும் நாட்டையும் தொலைத்தவர்களுக்கு? கடல் என்பதும், அலை என்பதும் சாபம்! இந்த நீலக்கடலுக்கு ஏன்தான் இவ்வளவு பரந்துவிரிந்த நிலம்? இந்தக் கடல் கொஞ்சம் தன்னை உள்வாங்கிக்கொண்டால், இரண்டு கால்களில் ஒன்றையேனும் ஊன்றிக் கொள்ளலாம் தானே!. ஒரே கடல்தான். ஒரே அலைதான்! ஒருவருக்கு வர்ணனைக்கான மூலப்பொருளாக இருக்கிறது. மற்றொருவருக்கு வாழ்வதற்கான ஆதாரம் தேடும் இடமாக இருக்கிறது! 


அலைகளின் மீதலைதல், கவிஞர் சுகன்யா ஞானசூரிக்கு கற்பனை அல்ல, புலம்பெயர் அனுபவம். அதுவே அவரது முதல் கவிதைத் தொகுப்பும் கூட. நாட்டைத் தொலைத்துவிட்டு, அலைஅலையாக அலைகளில் வாழ்விடம் தேடிய அகதிகளின் துர்வாழ்வை கவிதையாக்கம் கொண்ட நூல் அது. கவனம் பெற்றது. வாசித்தவர்களின் கண்களில் கண்ணீர் கோர்த்தது. இவரது அடுத்த படைப்பு நாடடைந்த, தொலைத்த நாட்டைக் கண்டடைந்த கதம்பக் கொத்தாக இருக்குமென்றே, நானும், என்னைப் போல நீங்களுமாய் காத்திருந்தோம். அடுத்தத் தொகுப்பைத் தந்திருக்கிறார். மதுரை கடற்காகம் பதிப்பகம் வழியே, ‘நாடிலி’. இத்தொகுப்பிற்கு ஏதிலி என்றோ அகதி என்றோ தலைப்பு தந்திருந்தால் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்திருக்கும். ‘ஏதிலி’யைப் போன்று, ‘அகதி’யைப்போன்று, ‘நாடிலி’ அதற்கு நிகரான சொல் அல்ல. 


அகதி, ஏதிலி இவ்விரு சொற்கள் தமிழக மக்களுக்குப் பரிச்சயமானவை. நாடிலி, பயன்பாட்டளவில் புதியது.  ஏதுமற்றவர்கள் ஏதிலி. எல்லா நாட்டிலும் ஏதிலிகள் உண்டு. இவர்கள் வாழும் நாட்டிலேயே நாதியற்றவர்களாக ஆக்கப்படுகிறவர்கள். நாடோடியாக வாழ்ந்து, பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்ள உரிமை பெற்றவர்கள். பழங்குடிகளின் வாழ்வு இப்படியாகத்தான் ஆகிக்கொண்டிருக்கிறது. மலை மேல் குடியிருக்கும் மலைவாசிகள், பெருஞ்சுரண்டலால், மண், நிலம், பூர்வீகத்தை இழந்துவிடுகிறார்கள். அதேநேரம், இவர்கள், எங்கையும் வாழ்ந்துகொள்ளலாம், என்கிற உரிமை கொண்டவர்களாகிவிடுகிறார்கள். 


அகதி, தான் வாழ்ந்த நிலத்தை விடுத்து, பிற காரணங்களால்  இடம் அல்லது புலம் பெயர்பவர்கள். இடம் பெயர்வும் புலம் பெயர்வும் ஒன்றல்ல. கிளிநொச்சியை விடுத்து, யாழ்ப்பாணத்தில் குடியேறுவது இடம் பெயர்வு. ஈழத்தை விடுத்து கனடாவை நோக்கி நகர்வது புலம் பெயர்வு. புலம் என்பதற்கு துறை, துறைமுகம், நிலம், அறிவு, துருவம், இடம் என இன்னும் பல பொருளுண்டு. இங்குப் புலம் என்பது நிலம். சொந்த நாட்டினரால், சொந்த மக்கள் அகதியாக்கப்படும் சூழல், போர்ப்பெருங்கலைகளில் ஒன்றாகி வருகிறது. 


அகதிகள், ஒரு கட்டத்தில் சொந்த புலம் அல்லது இடத்திற்குத் திரும்புகையில், விடுத்துச் சென்ற இடம் திரும்பவும் கிடைக்கையில், அவர்கள் ‘வீடடைதல்’ ஆகிறார்கள். நாடிலி, கவிதைத் தொகுப்பில், ஒரு கவிதையில் ஒரு பறவை அப்படியாக வீடடைகிறது. அதே விட்டுச் சென்ற இடம், கொடுங்கர ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, அவர்களின் வாழ்ந்ததற்கான அடையாளம் அழித்தொழிக்கப்படுகையில், நிலத்தை இழந்தவர்கள், நாடிலி ஆகிறார்கள்.  


நாடிலி என்பவர் நாடற்றவர்கள் அல்ல. நாட்டை இழந்தவர். நாட்டைப் பறிகொடுத்தவர்கள். ஞானசூரியின் இக்கவிதைத்தொகுப்பு, நாடிழந்த, நாட்டை இழந்ததன் மூலம் மண், மரம், செடி, கொடி, இணை உயிர்கள், காற்று, சுதந்திரம், வாழ்க்கை, தொழில், சொந்தம், உறவு, நிம்மதி, அமைதி,..என பலவற்றையும் இழந்தவர்களின் ஒவ்வொரு நொடி வாழ்தலையும் திணையாகக் கொண்டு பாடுகிறது.  அகத்திணையில் வறட்சி, வெப்பம் பிரிவு, துக்கம் என இடர்களைக் கொண்டது பாலை திணை. அதேபோன்று நாடிலி, நாடிழந்தவர்களின் துயர், துன்பம், துக்கங்களைத் திணையாக பாடுகிறது. 


ஒரு கவிதையில் குயிலின் ஓசையொன்று பெரும் கட்டடங்கள் முளைத்த மாநகரில் கேட்கிறது. குயில் வனத்தைத் தேடும் குயிலுக்கு, அது அமர்ந்து பாட எப்படியோ ஒரு மரம் கிடைத்துவிடுகிறது. வனம் தொலைத்த குயிலுக்கு, அந்த ஒரு மரம் சிறுவனமாக கிடைத்துவிட்ட மகிழ்ச்சி அதற்கு. தன் மரத்தை இழந்து, குடைந்தடைய மரமற்று, ஒரு சில்வண்டு தனக்கான இடத்திற்காக வெப்பம் பொதிந்த பொழுதில் தன் புலத்தைத் தேடி உரக்க ரீங்கரிக்கிறது. குயிலின் கூவுதலும், சில்லுவண்டின் ரீங்காரமும் ஒன்றல்ல. ஞானசூரியின் கவிதைகள் சில்லுவண்டின் ரீங்காரத்திற்கு ஒத்தவை. தொலைத்த புலத்தை, தொலைவிற்குக் காரணமான, காது கொடுத்துக் கேட்க மறுப்பவர்களின் காதுகளைக் குடையும் குரல். 

நாடிலி, இந்நூலை கவிஞர், "நாடற்று அலையும் அத்தனை ஏதிலிகளுக்கும் " சமர்ப்பணம் செய்துள்ளார். நாடிலி, என்கிற சொல்லைக் கண்டதும், எனக்கு வகிபாகம் சொல்லுடனான ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், பேசும் பொருளாக மாறியிருக்கையில், ஒரு பத்திரிகைக்கு எழுதிய ஒரு கட்டுரையில், வகிபாகம் என்றொரு சொல்லைப் பயன்படுத்தியிருந்தேன். கட்டுரையைப் பிரசுரப்பதற்கு முன்பாக, அப்பத்திரிகையின் ஆசிரியர் வகிபாகம் சொல் குறித்து, விளக்கம் கேட்டார். விளக்கத்தை உள்வாங்கிய அவர், இது ஈழச் சொல் அல்லவா, இதை ஏன் தமிழ்நாட்டில் புகுத்துகிறீர்கள், என்றார். ஈழச்சொல் தமிழ்ச்சொல்தானே, என்றேன். 

வகிபாகம், என்கிற சொல் இங்கே வேரிட்டிடக் கூடாது, என்பதும் ஈழ நாடிலிகள் இங்கே நிரந்தரமாக குடியேறிவிடக்கூடாது, என்பதும் இருவேற்றுமை அல்ல. இந்த உரையாடல் நடந்த ஒரு மாதத்தில், தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், கொள்கை முடிவு வெளியானது. இந்தத் திருத்தத்தில் மியான்மர், பூடான், வங்கதேசத்து, பாகிஸ்தான் இந்துக்களை இந்திய குடிமகன்களாக ஏற்க முன்வந்த அரசு, ஈழத்தமிழர்கள் இந்துக்களாக இருந்த போதிலும், இந்தியாவின் அடையாளமாக இதிகாசிக்கப்படும் இராமாயணத்தின் கதை அங்கு நடந்தேறியிருந்த போதிலும், அவர்களை ஒரு பொருட்டாக நினைக்கவோ, உள்வாங்கும் முடிவைப் பரிசீலிக்கவோ இல்லை. இப்படியான தருணத்தில்தான், நாடிலி என்கிற இக்கவிதைத் தொகுப்பும், நாடிலி ஒருவரால் எழுதப்படும் பாடுபொருளும் அதிமுக்கியத்துவம் பெறுகிறது. 


"அலைக்கழிக்கும் பறவை" என்றொரு கவிதையில், அந்தகார இருளுக்கப்பால் பெருவெளியெங்கும் தேடியலையும் பறவை ஒரு வேளை உங்கள் பார்வைக்குப் புலப்பட்டால் அப்பறவை குறித்து சிறுகுறிப்பு வரைக, என்கிறார் கவிஞர். அதற்கான குறும்பதில், " காணாமல் ஆக்கப்பட்டவை" என்கிற கவிதையில் கிடைக்கப் பெறுகிறது. ஓயாமல் ஒலித்த படியிருக்கும் பூச்சிகளின் ரீங்காரம், பெருங்காட்டைத் தொலைத்த பறவைகளுக்கும் சேர்த்து குரல் எழுப்புகிறது. ஓயாமல் ஒலிக்கும் நாடிலி பூச்சி, கவிஞர் சுகன்யா ஞானசூரி. 

நாடற்றவர்களின் வாழ்வில் வேறு என்னவெல்லாம் கனவாக இருக்கின்றன, என்பதைக் கவிதைகளால் இடறிவிடும் சொற்கதிர்கள் புலப்படுத்துகின்றன. தாயகம், பறவை, தாய்நிலம், அடையாளம், முகாம், வீடடைதல், வாழ்வு, வைகறை, நாளை,ஆசை, வானம்,ஆதிக்குத் திரும்புதல்,முகம், அரசியல்,நவதிசை,மழை,ஊர், நதி பார்த்தல், சொற்கள்,பெருவெளி,மொழி,. இவைப் பாடுபொருளாகவும், அதன் மீதான கனவும் கனம் பொதிந்த வாழ்வும் கவிதைகளாக களம் கொள்கின்றன. 

ஒரு நாடிலியிடம், இப்படியான நிலைக்குத் தள்ளிய அதிகாரம், கேள்வி எழுப்புகிறது. உனது அடையாளம் என்ன? என்று.  “ மிச்ச மீதியாயிருக்கும் / உயிரைக் காக்கப் போராடும் / அடிமையான அகதி நாங்கள்/ வேறென்ன அடையாளம் சொல்ல?, என்கிறது ஒரு கவிதை. அதிகாரமே இல்லாத அகதிக்குத்தான்/ எத்தனை வண்ண வண்ண /அடையாள அட்டைகள் என்கிறது மற்றொரு கவிதை. அகதிகளின் வண்ணமயமான அடையாள அட்டையில் பொதிந்து கிடக்கும் நிறமற்ற இருண்ட வாழ்வைக் கண்களுக்கும் வெளியே கண்ணீராக வடிக்கிறது. 


போதி மரத்தின் நிழல் வரலாற்றுக் கதையாடலில் ஞானம், நிலம், அமைதி கொடுக்கும் உருவமாக இருக்கிறது. ஆனால் அதன் நிஜமோ, நிழல் எது இருள் எது எனப் பிரித்தறிய முடியாத இருண்மையைக் கொண்டிருக்கிறது. அந்த நிழல் அச்சமூட்டுவதாகவும், கொலை ஆயுதம் நீட்டுவதுமாக இருக்கிறது. அந்த நிழலிருந்து விலகு என்கிறார் கவிஞர். இல்லையேல் நிழலை வெட்டி வீழ்த்து என்கிறார். நிஜத்தை வீழ்த்தாமல், நிழலை வெட்டி வீழ்த்துவது அத்தனை எளிதா, என்ன? 

அச்சமோ அழுகையோ / ஏதோவொன்று / ஒரு முறையாவது / புத்தனின் கண்கள் திறந்துமூடுவதைப் பார்த்துவிடும் / அவா எனக்கு, என்கிறார் கவிஞர். அவருக்கு மட்டுமா?

வாழ்வதற்கு நாடற்ற நாடிலிக்கு சாவுவதற்கேனும் ஒரு நாடு வேண்டும், எனக் கேட்பது, என்னே கொடியது. நாடே இல்லையாயினும் அவனுக்கு உரிமையான ஒரு மரத்தின் கிளையேனும் வேணும், எனப் பாடுவது, எத்தனை வலியது. எல்லையற்ற வெளியில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் / மகள் இப்போது என் தாய்நாடு பற்றி வினவுகிறாள் / நான் பிரபஞ்சத்தின் மேலிருந்து ஒற்றைச் சுருக்கில் தொங்குகிறேன். என எழுதுகிறார் கவிஞர்.  தான் பெற்ற மகள், என் தாய்நாடு எனக் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல இயலா ஒரு தந்தையால் வேறென்ன செய்ய இயலும்?. பிரபஞ்சத்தில் தொங்கம் ஒற்றைச் சுருக்கு கயிறை விடவும், மகளின் நாடு பற்றியக் கேள்வி பதைக்க வைக்கிறது.


தான் பேசும் மொழியில், சா தீயை, மதத்தைத் தேடும் குரூரம் நவநாகரிக பழக்கமாகி வந்துள்ளது. நாடிலி என்பதே ஒரு சாதியாகவும் மதமாகவும் ஆகிவரும் இவரிடம் அதை ஏன் தேடுவானேன்? கவிஞனின் ஒரு நாள் கழிவு, எத்தகையது எனத் தேடினேன். `ஒரு நாளின் 24 மணி நேரம் என்பது / அகதிகளான எங்களுக்குப் / பெரும் அவஸ்தை’ என்கிறார். மருத்துவ ஆய்வகத்தில் நுண்ணோக்கியில் அலைவுறும் நுண்ணுயிரிகளின் வெளியில் / அவருக்கான உயிர்க்காட்டைத்/ தேடும் கவிஞர், அந்த ஆய்வகம் இருந்த இடத்தில் அத்தனை இரைச்சலுக்குமிடையில் கூவும் ஒற்றை குயிலின் கூவுதலில் தொலைத்த வனத்தைத் தேடும் பறவையோடு அவருக்கான வனத்தையும் தேடுகிறார். பச்சை மட்டுமே வாழ்ந்த இடத்தில், இப்போது சிவப்பு மஞ்சள் பச்சை. 

அலைக்கழிக்கும் பறவை, உருமாறுகிறது வெண்ணிலவு, நட்சத்திரங்களினூடே, கொடிய நிழல், ஆதிக்குத் திரும்புதல், புலம் பெயராது இருந்திருக்கலாம், வெறுங்கழுத்தி, பெருந்தொற்றில், இருள் விலகா மௌனம் தலைப்புகளில் நாடிலியின் இருபத்து நான்கு மணி நேரங்கள் அலையாடுகிறது. ஒரு கவிதை, குளத்தின் வட்டச்சுழல் அதிர்வையும் மனஅதிர்வையும் ஒப்பிட்டு சுழலாற்றுகிறது. 

சிறு கல் / விழுந்த குளத்தின் / அதிர்வென விரியும் / வட்டச்சுழலில் / நினைவதிர்வொன்று / சுழன்றபடி இருக்கிறது / ஒரு பாடல் / நுழைந்த மனதில்.


ஒரு கவிதையில், ஏன் என்னை அகதியாக்கினீங்கள்? எனக் கேட்கிறார். அவரது தந்தையிடம் அவர் கேட்கும் கேள்வியாக அது இருந்தாலும், அக்கேள்வி இந்த உலகத்தைப் பார்த்துக் கேட்கும் கேள்வியாகவும் இருக்கிறது. அப்படியாகக் கேட்ட கவிஞர்தான், தன் என்னுரையை இவ்வாறு முடிக்கிறார், “ அகதிகள் இல்லா உலகம் உருவாக வேண்டுகிறேன் ” சபிக்கப்பட்டவர்களால் நிரம்பிக் கிடக்கும் இந்த உலகில், இந்த வேண்டலை அவர் யாரிடம் கேட்டிருக்கக் கூடும்? காது உடையவர்களிடமா? இல்லை, மென்மெல்லிய இதயம் உள்ளவர்களிடம்!  

கடல் மீதும் துண்டு நிலம் தேடும் நாடிலியின் பாதங்கள், தனக்கான புலத்தைச் சென்றடைய வேண்டும், என்பது என் வாழ்த்துகை அல்ல, வேண்டல்!! 

- அண்டனூர் சுரா

1546 C,மகாத்மா நகர்

கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம்- 613301

அலைபேசி - 9585657108


இவ்வளவு விரிவாக நாடிலியை முன்வைத்த தோழர் அண்டனூர் சுரா அவர்களுக்கு என் அன்பும் நன்றிகளும் என்றென்றும். ப்ரியங்கள் தோழர்.




Tuesday, September 14, 2021

நாடிலியின் தணிக்கைக்குப் பிறகான புதுகை ஆளுமைகளின் சந்திப்பு

 



அகதிகள் முகாமில் தணிக்கை தொடர்பாக இன்று புதுக்கோட்டை சென்றிருந்தேன். ஏற்கனவே இரண்டு முறை அழைக்கப்பட்டபோது பணியிடத்தில் விடுப்பு எடுக்க முடியாத நிலை. ஒருவழியாக மதியத்திற்கு மேல் கடமையை நிறைவேற்றி தற்காலிகமாக தப்பித்திருந்தாலும் அடுத்தடுத்த மாதங்களிலும் இத்துயர் தொடரத்தான் செய்யும். ஆனாலும் வாழ்ந்துதானே ஆகவேண்டும். 



கிடைத்த சொற்ப நேரங்களை வீணடிக்காமல் புதுக்கோட்டையின் இரு ஆளுமைகளைச் சந்திக்க முடிந்தது எல்லாத் துயரங்களையும் போக்கி சற்று இளைப்பாறுதலைத் தந்தது. 



1999ல் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது புதுக்கோட்டை ஐடியல் டியூசன் சென்டர் ஏற்பாடு செய்திருந்த கவிதைப் பட்டறையில் கவிதை என்றால் என்ன, எவ்வாறு எழுதலாம் என்று வகுப்பெடுதபோதும், பிறகு 2004ல் இளங்கலை அறிவியல் படிக்கையில் ஆலங்குடியில் ஒரே மேடையில் கவியரங்கம் செய்தபோதும், இன்று பல்வேறு வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றரை மணித்தியாலம் இலக்கியம், சினிமா, அரசியல், கல்விப் புலம் என பல்வேறு விடையங்களை உரையாடியபோதும் அந்த காந்தக் குரல் ஒன்றாகவே இருக்கிறது. கவிஞர் தங்க மூர்த்தி ஐயாவின் அந்தக் குரலுக்கு நான் பரம ரசிகன். இன்று #நாடிலி கவிதைத் தொகுப்பினை வழங்கியபோது மாணவரின் வெற்றியைக் கொண்டாடும் ஆசிரியரின் முகமலர்ச்சியை தரிசித்தேன் என்றே சொல்லவேண்டும். 


கவிஞர் வைகறை அண்ணனால் அறிமுகமாகிய வீதி கலை இலக்கிய நிகழ்வில் புன்னகை பூத்த முகத்துடன் அன்போடு கவனித்த தேவதா தமிழ் (மு.கீதா) அம்மா அதே மாறாத புன்னகையோடு தேநீரும், ரொட்டியும் வழங்கி வீதி கூட்டத்தில் மீண்டும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். வீதி நண்பர்களுக்கான பிரதிகளை அம்மா அவர்களிடம் தந்துவிட்டு வந்தேன். பிறிதொரு நாளில் இன்னும் முக்கியமானவர்களையும் சந்திக்க வேண்டும். காலமும் நேரமும் கூடிவரட்டும். அதுவரை காத்திரு மனமே என என்னை நானே சமாதானம் செய்துகொள்கிறேன். 


- சுகன்யா ஞானசூரி

13/09/2021.

Wednesday, September 8, 2021

ஷம்பாலா - தமிழவன்


நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் வாசித்திருக்கும் நாவல் தமிழவன் அவர்களின் ஷம்பாலா எனும் அரசியல் நாவல். துவக்கத்தில் தொடுவதற்கு சற்று தயக்கமாகத்தான் இருந்தது. ஏனெனில் அவரது ஸ்ரக்சுரலிசம் நூலை வாசிப்தற்காக நான் தோழர்கள் Jamalan Tamil , Mubeen Sadhika , Yukaanthan Yuva போன்றவர்களின் எழுத்துகளின் வாயிலாகவே உள்ளேக முடிந்திருந்தாலும் இன்னும் வாசிப்பினை தொடராமலே உள்ளது. ஆனால் அதற்கு நேர்மாறாக எளிமையாக இருந்தது ஷம்பாலா. 


ஷம்பாலா அதிகாரத்தின் உறைவிடம். வலதுசாரியச் சித்தாந்தத்தின் புதிய கொள்கைகளும், அது தொடர்ச்சியாக பெற்றுவரும் வெற்றிகளும், அதிகாரத்திற்கு எதிரானவர்களை அதிலும் குறிப்பாக படைப்பாளர்களை பழிதீர்ப்பதில் செயல்படும் நுணுக்கங்களையும் (கெளரி லங்கேஷ் படுகொலை, வரவர ராவ் போன்றவர்கள் நினைவில் வந்து செல்வார்கள்) மூன்றாம் ஹிட்லர் எனும் நீலக்கண் அரசியல்வாதியூடாக விறுவிறுப்பான நடையில் சமகால அரசியலை அலசிச் செல்கிறது.


ஷம்பாலா ஹிட்லரின் சிறுபிராயம், வளரிளம் பருவம், காதல் தோல்வி, அரசியல் தாதாவாகுதல், திருமணத்தினை மறைத்தல் என பல்வேறு விடையங்களை நீங்கள் வாசித்தால் மட்டுமே யார் யார் என்பதை கண்டடைய முடியும்.


ஜெர்மானிய ஹிட்லரை தோற்கடித்து, வலதுசாரியச் சிந்தனையை வேரறுத்தவர் ரஷ்யாவின் ஸ்டாலின் அரசு என்பதை அமர்நாத் பாத்திரம் அழுத்தமாக சொல்வது சமகாலத்திலும் எதார்த்தமாக அமைந்துள்ளதா? அல்லது விதிப்பயனா? 


//நாம் சாதாரணமானவர் என்று பிறர் கூறும்படி அப்படியே இருந்தோமென்றால் இப்போது போலவேதான் எப்போதும் இருக்க வேண்டியவர்களாவோம்.// லாமாக்களின் இந்தப் போதனை ஒவ்வொருவரையும் அவரவரின்  இயங்கியலை நிறுவுகிறது. 


முழுமையான ஒரு அரசியல் நாவல். நாம் சாதாரணமானவர் இல்லை. இனி தமிழவனின் அடுத்தடுத்த நூல்களையும் வாசித்துவிடுவேன் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது. 


- சுகன்யா ஞானசூரி

08/09/2021.




 

Monday, September 6, 2021

குடியுரிமை கோரிக்கை தொடர்பான கலந்துரையாடலும் எனது கவனப்பாடும் - சுகன்யா ஞானசூரி

 இந்தியா, தமிழகம் வாழ் அகதிகளுக்கான அரசின் அறிவிப்புகளும், பிரதிபலிப்புகளும் எனும் நேற்றைய நிகழ்வினையொட்டிய என் கவனப்பாடு.


1.

இந்திய குடியுரிமை கோருபவர்கள் முதலில் ஈழப் பெருமைகள் பேசுவதை விடுத்து தம்மை இந்திய இறையாண்மைக்குள் இணக்கமாக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் தோழர் பத்திநாதன். இது இங்கே சரியான பார்வையாக இருக்கிறது (அதாவது தற்சமயம் குடியுரிமை கோருவதன் காலச்சூழல் பொருத்தப்பாட்டில்). இதை நாம் அடுத்த தலைமுறையில் நம் ஆவணங்கள் அத்தனையையும் அழித்துவிடுவதின் வாயிலாக துவக்கலாம். இதுவே இதற்கான சரியான துவக்கமாகவும் இருக்கமுடியும். எம் தலைமுறையிலிருந்து துவங்கும்போது உளவியல்ரீதியாக பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும். மேற்குலக நாடுகளில் குடியுரிமை கோருபவர்களுக்கு இதுபோன்ற இக்கட்டான சூழல் இல்லாமை நல்லதாகப் போய்விட்டது. இன்றைய தமிழக ஈழ அகதிகள் முகாம்களில் அடையாள அரசியல்கள், சாதிய மனோபாவ வெளிப்பாடுகள் என புதிய புதிய அடையாளங்களை ஏற்று தங்களைத் தாங்களே தலைமைகளாக கட்டமைத்துக் கொண்டிருக்கும் இச்சூழலில் நாம் அடையாள அழிப்பைச் செய்வதில் தவறில்லை. அதேபோல் நாடு திரும்புவோரின் மீள்குடியேற்றச் சிக்கல்களை வெளிப்படையாக பேசவில்லை என்றாலும் அதன் மெளனம் ஒரே அர்த்தத்தை தெளிவாகச் சொல்லிவிடுகிறது. இங்கே நாடு திரும்ப ஆசையூட்டுவோரின் பேச்சை நம்பவேண்டாம்.


2.

வடக்கு கிழக்கு நிலைமைகள் என்பவைகள் ஒருவேளை தமிழீழம் என்ற ஒன்று உருவாகியிருந்தால் பேசவேண்டிய ஒன்று. அது 2009  ஆண்டோடு முடிந்து போன ஒன்று. நீங்கள் தனித்தமிழீழக் கோரிக்கை தொடர்பான உரையாடலில் வேண்டுமானால் கோரலாம். தமிழகத்தின் அகதிகள் குடியுரிமை கோரிக்கை என்பது இவற்றிலிருந்து மாறுபட்ட ஒன்று. மதரீதியான முன்னெடுப்புகள் கோமாளித்தனமான ஒன்று. மலர்மகள் அம்மாவின் பேச்சுகள் அகதிகள் குடியுரிமை கோரிக்கை தொடர்பானவற்றிற்கு சம்பந்தம் இல்லாத ஒன்று. 


3.

இந்திய வம்சாவளித் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என பிரித்து குடியுரிமைக் கோரிக்கை கேட்பான் குற்றச்சாட்டுகள் ஒருபக்கம் நிகழ்ந்தாலும் ஒரு அமைப்பாக முதலில் வாய்ப்புள்ளவர்களுக்கான பாதையை அடைவது முக்கியம். அதையொட்டி மற்றவர்களுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்று பல்வேறு கட்டுரைகளிலும் நேர்ப்பேச்சிலும் கூறியதை தோழர் ந. சரவணனின் உரை இருந்தது. அது சரியான பாதையில் சென்று கொண்டும் இருக்கிறது. வாழ்த்துக்கள். 


4.

சட்டத்த்தரணி இளங்கோ அய்யாவின் ஊகமான பேச்சுக்களால் எவ்வித பலனும் இல்லை. அகதிகளின் குடியுரிமைக் கோரிக்கையில் மறுவாழ்வுத் துறையின் கீழ் செயல்படுகின்ற சட்டத்தரணிகள் ஏன் பங்குபற்றாது கள்ள மெளனம் காக்கிறார்கள் என்பது எனது பலநாள் கேள்வி. 1991 இராசீவ்காந்தி படுகொலை குடியுரிமை கோரிக்கையில் சிறிய தாக்கத்தினை செலுத்துகிறதுதான். இப்போது காங்கிரஸ் இல்லாத பாஜக அரசுதானே உள்ளது. சட்டச் சிக்கல்களை எடுத்துச் சொல்லியிருந்தால் உபயோகமாக இருந்திருக்கும். 


5.

செயற்பாட்டாளர் சுபாஷினி அவர்கள் மறுபடியும் மறுபடியும் நம்மை மறுவாழ்வுத்துறையிடமே கோருவது போன்று பேசுவது அறியாமையினால்  செய்வது போல் உள்ளது. மறுவாழ்வுத்துறையின் NGO செயல்பாடு நாடு திரும்புதல் என்ற ஒற்றைச் செயல்பாட்டில் உள்ள அமைப்பு. அவர்கள் நினைத்திருந்தால் 2009 க்கு பிறகு அதனை முன்னெடுத்திருக்கலாம். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை அவர்கள் செய்கிறார்கள். நாம் அவர்களிடத்தில் மறுபடியும் எம்மை அடமானம் வைக்க முடியாது. 


6.

கஸ்தம்பாடி அனோஜன் அவர்களின் பேச்சு முதிர்ச்சியான ஒன்று. பல்வேறு விடையங்களை சிறப்பாக கூறியிருந்தார். அவரை இன்னும் நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.


ஈழ விடுதலை இயக்கங்களுக்குள் சகோதர சண்டைகள் நிகழ்ந்ததைப்போல் இங்கு இப்போது குடியுரிமை கோரிக்கை தொடர்பில் பல்வேறு குழுக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டிருந்தாலும் கொள்கை என்பது இந்தியக் குடியுரிமை கோருதல் ஒன்றே பிரதானமாக உள்ளது. அது தமிழீழம் என்ற ஒன்றை இல்லாது ஆக்கியதைப்போல் ஆகிவிடாமல் எல்லோரும் ஓரணியில் நின்று இன்றைய நம்பிக்கை நட்சத்திரமான மு.க. ஸ்ராலின் அவர்களின் தமிழக அரசின் முன்னெடுப்புகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்க வேண்டும். அதேவேளை சட்டரீதியான செயல்பாடுகளை அரசோடு இணைந்து செய்யவேண்டிய பொறுப்பும் நம் முன்னால் உள்ளது. தமிழக அரசோடு இணைந்துதான் நாம் ஒன்றிய அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டிய கடப்பாடும் உள்ளது. மக்களிடத்தில் அகதிகளின் குடியுரிமை கோருதல் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பொறுப்புணர்ந்து செயல்படுவோம் தோழர்களே. 


இவண்

சுகன்யா ஞானசூரி

06/09/2021.

Sunday, August 22, 2021

நாடிலி - கையறு நிலையின் கணங்கள்- பேராசிரியர் அ. ராமசாமி.



#நாடிலி குறித்த விரிவான விமர்சனக் கட்டுரை ஒன்றினை பேராசிரியர் அ. ராமசாமி ஐயா அவர்கள் 14/08/2021 தீம்புனல் இதழில் எழுதியுள்ளார். மிக்க அன்பும் நன்றியும் ஐயா. 


//சொந்த நாட்டைவிட்டு அகதி முகாம் என்ற வெளியில் இருக்கும் தன்னிலையின் உணர்வுகளும் இருப்பும் என்பதை சுகன்யா ஞான சூரியின் கவிதைகள் விரிவாகக் கவனப்படுத்தியுள்ளன.//

//அகதி முகாமின் துயரச்சித்திரத்தின் பல நிலைகளையும் வடிவங்களையும் சொல்லும் விதமாகத்   தலைப்பிலேயே முன்வைக்கின்றன பல கவிதைகள். அவல முகாம், அகதிகள் வீடடைதல், அகதி வாழ்வு, ஏன் என்னை அகதியாக்கினீங்கள்?  நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம், அகதி முகாமில் தீபாவளி, அகதிப்பிணம், அகதிகள் முகாமில், கடல்வழி வந்த அகதி நதி பார்த்தல், அகதி வாழ்வு, குடிகார அகதியின் சலம்பல் என விதம் விதமாக முன்வைக்கின்றன.  அஞ்சலி பற்றிய அகதியின் பாடல் என்ற கவிதை அகதி முகாம் வாழ்வின் வேறொரு சித்திரத்தை அதே துயரத்தின் – இழப்பின் விளைவாக விவரிக்கின்றது.//

//இதுவரையிலான எனது வாசிப்பில் இந்திய அகதி முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் பாடுகளைக் கட்டுரைகளாகவே வாசித்திருக்கிறேன். தொ.பத்திநாதன் போன்றவர்களின் அனுபவப்பகிர்வுகளும் வேறு சிலரின் சிறுகதைப் புனைகதைகளும் வாசிக்கக்கிடைத்துள்ளன. ஆனால் உணர்வுகளின் திரட்சியான கவிதை வடிவில் – அகதி முகாம்களில் படும் வேதனைகளை ஞானசூரியின் அளவுக்கு முன்வைத்த கவிதைகளை வாசித்ததில்லை. இந்தப்பாடுகளுக்கான காரணங்களையோ, கோரிக்கைகளை முன்வைத்து விடுதலையையோ கோராமல், இருப்பை மட்டுமே தீவிரமாக முன்வைக்கிறார். அதன் மூலம் ஒட்டுமொத்தமான அகதி வாழ்வின் பாடுகளாக மாற்ற முனைந்துள்ளார் என்பது குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியதாக இருக்கிறது.//

பேராசிரியரின் வலைப்பக்கத்தில் விரிவாக கட்டுரையினை வாசிக்கலாம். அதன் இணைப்பு கீழே தந்துள்ளேன். 

https://ramasamywritings.blogspot.com/2021/08/2021.html?m=1



Saturday, August 21, 2021

நாடிலி - தோழர் தேனி விசாகன் பார்வையில்


 

காற்றில் அலைவுறும் துகள்...

---------------------------------------

1


தனிமனித சாதனை மற்றும் தனிமனித படைப்பு ஆகியவை முன்னிலைப் படுத்துவது மீண்டும் அதிகாரப் போக்குகளையே நிறுவுகின்றன என்ற ஒரு கருத்தினை நாம் பரிசீலிக்க வேண்டுமென்றாலும்கூட, அதில் நாம் கவனங்கொள்ளத்தக்க அரசியல் இருக்கிறதென்றாலுங்கூட, ஒரு படைப்பு தனிமனிதனை எவ்வாறு முன்னிலைப்படுத்திட முடியும் என்கிற கேள்வியையும் கேட்டாக வேண்டியிருக்கிறது. ஒரு சமூகம் பற்றிய கருத்துகளடங்கிய படைப்பை ஒரு தனிமனிதன் எழுதியிருந்தால், அப்படைப்பு அத்தனி மனிதனை மட்டுமே முன்னிலைப்படுத்துமா...? 


2


சுகன்யா ஞானசூரி எழுதிய "நாடிலி" என்கிற கவிதைத் தொகுப்பை நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதற்காக என்னாலான இந்த சின்னஞ்சிறிய அளவிலான குறிப்புகளை எழுதுவதற்கு எனக்கு நிறைய மெனக்கெடல் தேவைப்பட்டது. ஒரு மனிதனுக்கு சில குணங்கள் இயல்பில் அமையும் என்பதைப் போல ஞானசூரி அமைதியான, இதயக்குளிர்மை கொண்டவராக இருக்கிறார். ஆனால் ஒருவரைத் தொற்றிக்கொள்ளும் பதற்றம் இயல்பானது அல்ல என்பதைப் போல, அவரின் உடலும் மனமும் எப்போதும் படபடப்பாகவே இருக்கிறது என்பதையும், முந்தைய அமைதியும் குளிர்மையும், அவரின் பதற்றத்தினை அடக்கியாண்டு வெளிப்படுவதைப் போல நானுணர்கிறேன். அப்படித் அவரைத் தொற்றிக்கொண்ட பதற்றத்திற்கு என்ன காரணம்...


3


அதிகாரத்தின் தாக்குதலுக்காளாவதிலிருந்தும், அதை எதிர்க்கும் மனநிலை கொள்வதிலிருந்தும் தன்னை விலக்கிக்கொள்பவன் இவ்வுலகில் ஒருவன் கூட இருக்க முடியாது. காயத்திற்கும் எதிர்ப்பிற்குமான அளவு வேண்டுமானால் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். ஆனால் எப்படியான நிலையிலும் எத்தனை கீழான நிலையிலும் இருக்கின்ற ஒருவனுக்குக் கூட அதிகாரத்தை எதிர்க்கும் மனநிலை அவனளவிற்காகவது வாய்க்கும், இது பொது விதி. அப்படியான ஒரு பொதுவிதி கூட பொருந்தாது போகின்ற ஒரு இனமிருக்கிறது, அது நாடிலியினம். மனமும் குரலும் மிதித்து நசுக்கப்பட்ட அவ்வினத்திலிருந்து, முன்பொருநாள் ஒரு தேசத்தின் செல்லப் பிள்ளையாயிருந்த ஒரு கவிஞன் வந்து பாடுகிறான் தோழர்களே கேளுங்கள்... உப்புக்குச்சப்பாக ஒப்புக்கேனும் அல்லது சொல்வதற்கேனும் ஒரு நாட்டின் பெயரைக் கொண்டுள்ள தோழர்களே மனதுவைத்துக் கேளுங்கள்... 


இயற்கையை ரசித்தபடி

இன்னல்கள் ஏதுமின்றி

இன்பமாய்ச் சென்ற பேருந்துப் பயணம்

இப்போதெல்லாம் சலிப்பையே தருகிறது

மனதுக்கு ஒட்டாத இசையும்

மரங்களைத் தொலைத்த சாலையும்

இன்ப துன்பங்களைச் சுமந்தபடி

பேரிரைச்சலோடு கதறும்

கைப்பேசி உரையாடல்களும்

கொஞ்கம் புத்தகமும்

சன்னலோர இருக்கை இருந்தும்

பயனற்றுப் போகிறது

மெல்லச் சிணுங்கும் கைப்பேசியை

எடுப்பதாயில்லை...


கவிஞர் கையாண்டிருக்கின்ற பாடுபொருள் என்ன...? கவிஞர் முன்வைக்கின்ற அரசியல் என்ன...? முன்பு நாடற்றவனானவனை பின்பு ஏதுமற்றவனாக்கிவிடும் அவலமிகு இவ்வுலகிற்கு பாடம் நடத்துகின்ற பாடுபொருள் மூலமாக, துயர்மிகு அரசியலை அதிகாரத்தின் நெற்றிப்பொட்டில் அறைகிறார் ஞானசூரி. 


மஞ்சள் கனியொன்றின்

பற்குறியில்

உறைந்து கிடக்கும்

குருதியென வீச்சமெடுக்கிறது

அகதியெனும் இவ்வாழ்வு.


4


ஞானசூரியின் "நாடிலி" என்கிற தலைப்பிலான 96 பக்க கவிதைத் தொகுப்பு அவரின் "என்னுரையுடனும்" பின்பு கவிஞர் யவனிகாவின் முன்னுரையுடன் தொடங்குகிறது. அடர்த்தியான தன்னுடைய முன்னுரையில், தொகுப்பிலுள்ள ஒட்டுமொத்தக் கவிதைகளையும் சுருக்கிப் பிழியக் கிடைக்கும் ஒரு சொட்டுச் சாறாய் "நினைவிலும் வாழ்விலும் தனித்துவிடப்பட்டு, தன் வாழ்வை செப்பம் செய்தபடி புலம்பெயர்ந்த இடத்தில் தன் பிறப்பிட அகபுற கனவுகளை அல்லது புகலிடப் பதற்றத்தை இன்னும் நிலைத்தன்மை அற்ற அச்சத்துடன் கவிதைகளாக இந்நூல் பதிவு செய்திருக்கிறது என்கிறார். ஞானசூரியின் கவிதைகள் அனைத்திலும் ஒரு அகதி மனம் ஆதிக்கம் செய்கிறது. மனிதன் அகதியாகிப் பார்த்திருக்கிறோம், பார்த்துவருகிறோம். மனம் அகதியானால்...? அம்மனம் படைப்பு மனமாகவும் மாறிப்போனால்...! மனமெங்கிலும் வலி! வலி! வலி! படைப்பெங்கிலும் வலி! வலி! வலி! அப்படியான ஒரு வலியை, வாசிக்கும் வாசகனின் மனத்தையும் மூளையையும் நேரடியாகத் தாக்குகின்ற கவிதைகளைத் தன்னுடைய தொகுப்பில் வைத்திருக்கும் ஞானசூரியின் கவிதை மொழியானது வளமும் எளிமையும் கொண்டிருக்கும் ஒரு சமகால வியப்பு.  ஒட்டுமொத்த நாடிலி சமூகத்திற்கான ஒற்றைக் குரலாகத் தன் கவிதைகளைக் கையளித்திருக்கும் ஞானசூரியின் படைப்பு தனிமனிதப் படைப்பு என்றாலும் கூட அது ஒரு சமூகத்தின் வலியைக் காட்டுகின்ற படைப்பாதலால், அதில் ஞானசூரி முன்னிற்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுவதும், அவரை நாம் முன்னிலைப்படுத்துவதும் தவறில்லை. 


அந்தரங்கத்தில் எந்தவொரு பிடிப்பின்றித் தொங்கும் ஒற்றைக் கயிறு உணர்கின்ற பதற்றம் பற்றிச் சொல்ல சொற்கள் கிடைக்குமா என்ன...? ஞானசூரிக்குக் கிடைத்திருக்கிறது. ".... வாதையிலிருந்து தப்பித்துக்கொள்ள படைப்பிலக்கியம் வழி சற்று ஆசுவாசம் கொள்கிறோம். இப்படியாக வாழ்வின் அவலங்களை, புலம்பல்களை எழுதுவதன் மூலம் எனது இறப்பைச் சற்றுத் தள்ளிவைத்து வாழ்நாளை நீட்டிக்கொள்கிறேன்..." என்று தன்னுடைய "பதற்றம்" என்பதற்குப் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதையும் தன்னுடைய "தன்னுரையில்" குறிப்பிட்டிருக்கிறார் ஞானசூரி. 


5


காற்றில் அலைவுறும் துகள்களையெல்லாம்

தன் நீர்மைகொண்டு

தனக்கொரு கூடு நெய்யும்

சிலந்தியைப் போல்

ஒவ்வொருமுறையும்

துயர்மறந்து விடியலை நோக்கும்

என் கனவுகளை

அகதியெனும் ஒற்றைச்சொல்லில்

சிதைத்துவிடுகிறீர்கள்...


முன்பு இலங்கையைப் போன்று, பிற நாடுகளைப் போன்று, இன்று, இதோ ஆப்கானிஸ்தானிலும் நம் கண் முன்னாலேயே ஆயிரக்கணக்கான மனம் சிதைக்கப்பட்டு வருகிறது. நாளை...?


---Visagan

தொடர்பு கொள்க: 9790 350 714 

இப்போது

https://www.commonfolks.in/books/d/naadili 

இணையத்திலும் நாடிலி நூல் கிடைக்கிறது.


Friday, August 6, 2021

நாடிலி - வி.ரங்கராஜன் வழக்கறிஞர், திருச்சி மாநகர தமுஎகச தலைவரின் பார்வையில்.


 

#நாடிலி 


"எனது இனத்தின் அழிவை

இந்த உலகமே

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது

இன்றும் 

மௌனமாக

கடப்பதொன்றைத் தவிர

நாம்தான்

வேறென்ன செய்தோம் "


-------------------------------------------------------------


அகதிகளின்

வருத்தமும் கோபமும்

மீண்டும் மீண்டும் 

பதிவு செய்ய படுகிறது.


செய்தியாக 

கடந்து போகின்றோம் !


வலியை எப்பொழுது

உணர போகின்றோம் ?


அகதிகள் இல்லா

உலகம் உருவாக்குவோம் !!


அகதிகளின்

வலியை கடத்துவதில்,

தவிர்க்க இயலா படைப்பு !!

சுகன்யா ஞானசூரி-யின்

நாடிலி..


- வழக்கறிஞர் வி. ரங்கராஜன்

தமுஎகச மவட்டத் தலைவர்

திருச்சி மாவட்டம்.

நாடிலி - எழுத்தாளர் வாசு முருகவேல் பார்வையில்



நாடிலி - சுகன்யா ஞானசூரி
-

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்
என் பாதம் பதித்து 
நடக்கும் 
இடத்தில் மட்டும் 
நிழல் தேடி
என்னோடு அலைந்து 
எரிகிகிறது
ஒருபிடி நிலம்

கவிஞர் பிரமிளின் இந்தக் கவிதையைத்தான் என்னுடைய "புத்திரன்" நாவலின் தொடக்கத்தில் பதிவு செய்திருந்தேன். கவிஞர் சுகன்யா ஞானசூரி தன்னுடைய "நாடிலி" கவிதைத் தொகுப்பின் முன்னுரையை அதே பிரமிளின் கவிதையுடன்தான் தொடங்குகிறார். நாங்கள் அகதிகளாக அலையும் காலம் முடிவற்று நீண்டு கொண்டே செல்கிறது ஒரு பிடி நிலம் தேடி. அகதிகள் என்ற வார்த்தையிலும் பல அரசியல் இருக்கிறது. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் "அகதிகள்" என்ற அடையாளத்துடனும் ஒரு அணி பங்கேற்கிறது. அதில் ஏன் ஈழத்தமிழர்கள் இல்லை என்று தமிழக நண்பர் ஒருவர் என்னிடம் கேள்வி எழுப்பி இருந்தார். உலகெங்கும் ஈழத்தமிழர் பரந்து வாழ்வதால் எல்லோரும் அகதிகள் என்ற அளவில் அவருடைய புரிதல் இருக்கிறது. தாய் நிலத்தை பிரிந்த வலி என்பது அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால், ஈழத்தவர் ஒவ்வொருவரின் நிலையும் ஒன்றல்லவே. பெரும்பாலான ஈழத்தமிழர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளில் குடியுரிமையைப் பெற்று விட்டார்கள். அகதியாக வந்து இறங்கியது முதல் இந்த நிமிடம் வரை அகதியாகவே வாழ்கிறவர்கள் என்றால் இந்திய நிலத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் மட்டும் தான். அதிலும் முகாமுக்கு உள்ளும் - வெளியிலும் கூட அன்றாட சிக்கல்கள் மாறுபடுகின்றன. பாரிசிலும், லண்டனிலும், ரொரன்டோவிலும் இருந்து எழுத்துவது போலல்ல ஒருவன் தமிழகத்தில் அகதியாக இருந்து எழுதுவதும் / குரல் கொடுப்பதும். அகதி நீ அரசியல் பேசாதீர். அம்மணமாக அடித்து துரத்த வேண்டும். இப்படி எத்தனை வசவுகள். கம்யூனிஸ்ட் பெரியாரிஸ்ட் என்று எத்தனை இஷங்கள் கழுத்தை நெரிக்கின்றன. ஈழத்தமிழன் தலை விதி அப்படி !.

இன்னும் இருக்கிறது . இன்னும் நிறையவே இருக்கிறது. அகதியாக இறக்கும்  வரையிலும் எழுதமுடியாதவை நிறைய இருக்கிறது.
-

அகதிகள் வீடடைதல்

புழுதிகள் அடங்கி வெப்பம் தணியும்
கோடையின் இரவுகளைத்தான்
வரவேற்று மகிழ்கிறோம்
தார் சீற்றின் கீழே
அடுப்பின் வெக்கைக்குள்
வெதும்பிய குரல்கள் பேசிக்கொண்டிருக்கின்றன
இதோ
மரத்தினடியில்தான் கோடையின் பகல்கள்
சீட்டாட்டமாகவும்
விரல் சுண்டும் கேரம் போர்டாகவும்
ஊர் பேச்சோடு நகர்ந்தபடி இருக்கிறது சூரியன்
இதற்காகவே நாங்கள் மரங்களை வளர்த்தோம் 
உங்களுக்கு 
அவர்களோடு உறவென்ன இருக்கப்போகிறது தெரியாது
கால் நூற்றாண்டு அகதி வாழ்வில்
ஆஸ்பெட்டாஷ் சீற்றுக்கு மாறியிருக்கிறது
பத்துக்குப் பத்து என்பதொரு கணித சூத்திரம்
இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்
கல்லறையின் அளவை
அந்திக்கருக்கலில் விடைபெற்றுச் செல்லும்
சூரியனைப் போல் மெல்ல விடைபெறுகிறோம்
மரங்களை விட்டு
வீடுகளுக்குள் வெளிச்சம் பரவுகிறது
மண்ணெண்ணெய்க் குப்பி விளக்கிலிருந்து
குண்டு பல்புக்கு மாறிவிட்டோம்
புழுக்கத்தின் நாற்றம் மிகக் கொடியது
இரவுகளை
அடக்கம் செய்யவே விரும்புகிறோம்
கோடையில் பெய்யும் 
பனியின் வெம்மையில்
குளிர் மெல்லப் பரவுகிறது
போர்த்தி உறங்குவதற்குள் விடியல் துவங்கிவிடுகிறது
மீண்டும் மரங்களோடு உறவாடுதலும்
அகதிகள் வீடடைவதும் தொடர்கதையாகிறது
மறந்துவிட்டேன்
நாளை வந்து கையெப்பம் இட்டுச் செல்லும்படி ஆணை

-

வாழ்த்துகள் Suganya Gnanasoory  🖤