Saturday, July 11, 2020

ஆயிரம் கைகள் சேர்ந்து மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை..."

எந்தவொரு இனமும், எந்தவொரு மொழியும் தன் அழிவுகளிலிருந்து சரி தவறுகளை ஆய்ந்து மீளக் கட்டமைக்கவே முயலும். அதுவே அந்த மக்களின் இருப்பினை உறுதிசெய்யும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக, தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடிக்கும் முகமாக, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ், தமிழ்த்தேசியம் எனும் உணர்வுகள் ஏற்படாவண்ணம் நாளொரு சர்ச்சைகள்வழி அவரவருக்காக தரப்பட்ட அஜென்டாவை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறார்கள். ஒரு இனம், மொழி தன் மக்களாலே கொச்சைப்படுத்தப்படும் பேரவலம் தமிழ்ச்சமூகத்தில் மட்டுமே. இது தமிழ்ச்சமூகத்தைப் பீடித்திருக்கும் சாபக்கேடு. இது அவரவர் சார்ந்திருக்கும் அமைப்பியலின் பார்ப்பனிய மனோபாவமே இப்படி ஆட்டுவிக்கிறது.


ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பிறகு தமிழ்த்தேசியம் குறித்த அவதானமும், கடந்த காலங்களில் ஏற்பட்ட தமிழ்த்தேசியத்தின் தோற்றுவாய்களின் தெளிவும், திராவிட இயக்கத்தின் பிறப்பு, தலித் அரசியலின் வகிபாகம், பொதுவுடைமையாளர்களின் செயல்பாடு, ஆரிய சமாஜ்யங்களின் வரவும் அவர்களூடான பார்ப்பனர்களின் அதிகார வேட்கையில் விளைந்த இந்து தேசியம் எவ்வாறு தமிழ்த்தேசியத்தை காலத்துக்கும் அடக்கியொடுக்கி தன்னை விஸ்தாரமாக்கியது என ஐயா தொ.ப வினால் தொகுக்கப்பட்ட இச்சிறு நூல் பல்வேறு விடையங்களை இன்றைய தலைமுறைக்கு அறியத்தரும் பொக்கிஷம் என்பேன்.

"ஆயிரம் கைகள் சேர்ந்து மறைத்தாலும்
ஆதவன் மறைவதில்லை..."

- சுகன்யா ஞானசூரி
11/07/2020.

நன்றி: படவருடியாக அனுப்பி உதவிய தோழர் செ.சண்முகசுந்தரம் அவர்களுக்கு.