Thursday, January 7, 2021

திருச்சியில் இலக்கியச் செயல்பாடுகளின் தொய்வு ஏன்?

 

இன்று திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் ஒரு சுவரொட்டி. இலக்கிய தாகம் எனும் இதழ் அறிமுகம் செய்யும் நிகழ்வினை ஒரு அறக்கட்டளை ஒருங்கிணைக்கிறது. திரைப்பட இயக்குநர் சிறப்பு விருந்தினர். நிகழ்வு நேற்றா, இன்றா அல்லது நாளையா என சுவரொட்டியின் நான்கு மூலையைத் தாண்டியும் தேடினேன். நிகழ்விடம், நேரம், நாள் ஏன் ஒரு தொடர்பு எண்கூட இல்லை. ஆனால் கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஆன்மீக அன்பர்கள் அனைவரும் வருக என ஒரு கேப்சன். யாருக்காக இப்படியான நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார்கள்?

திருச்சியில் இலக்கியக் கூட்டம் என்பதே அத்தி பூத்தாற்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இப்போது நிகழ்கின்றன. அதுவும் வெளியூர் (உள்ளூர் ஆட்டக்காரர்களுக்கு மதிப்பில்லை) படைப்பாளர்களாலே சாத்தியமாகிறது. சில வருடங்களுக்கு முன்னால் தமிழ் இலக்கியக் கழகம், கிராமியன், நோயல் இருதயராஜ், சுதீர் செந்தில் என இலக்கியங்களை சோறு போட்டு வாழ வைத்தவர்கள் என நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டு வியப்படைந்தேன். அப்படி சிறப்புற்று விளங்கிய திருச்சி இலக்கிய நிகழ்வுகள் ஏன் இப்படி ஆயின?

கடந்த பத்தாண்டுகளாக திருச்சியில் வசித்து வருகிறேன். ஜோ.டி.குரூஸ், சு.வெங்கடேசன், சமயவேல், பெருந்தேவி, அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி, இனியன் என சில நண்பர்கள் உரையாற்றிய சில நிகழ்வுகளில் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. அதுவும் Markandan Muthusamy ஐயா மற்றும் Manikandan Thirunavukkarasu அண்ணன் போன்றவர்கள் தகவல் அறிந்து அழைத்தாலோ அல்லது உரையாற்ற வருகின்ற நம் நண்பர்கள் தகவல் தந்தாலோ மட்டுமே சாத்தியமாகும். 2019 ல் எழுத்தாளர் கலைச்செல்வி அவர்கள் கூட திருச்சியில் ஒரு இலக்கிய அமைப்பை உருவாக்க வேண்டும் என முகநூலில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அது எந்த நிலையில் இருக்கிறது என தெரியவில்லை. புதுக்கோட்டை வீதி, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், கோவை வசந்தவாசல் போன்றவற்றின் தொய்வற்ற செயல்பாடுகளைப்போல் எல்லா ஊர்களிலும் இலக்கியம் பரவவேண்டும்.

110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பாகவே திருச்சி சார் இலக்கிய அறிவிப்புகள் செல்கின்றன. கவிஞர் Yavanika Sriram தோழரை பிரதம ஆசிரியராகக் கொண்டு இதழ் ஒன்றை கொண்டுவர வேண்டும் என மார்கண்டன் ஐயாவும் மணிகண்டன் அண்ணனும் நானுமாக கடந்தாண்டு முடிவு செய்திருந்தோம். பெருந்தொற்றின் அடைப்பினால் சுணங்கிவிட்டது. அது இப்போது அவசிய தேவையாகவே இருக்கிறது என நினைக்கிறேன். கூடவே மாதாந்திர இலக்கிய நிகழ்வொன்றும் நடாத்த வேண்டும். வெற்றிநடை போடும் தமிழகத்தில், ஐயா எடப்பாடி ஆட்சியில் காவிரிகூட திருச்சியில் தொய்வின்றி பாய்கிறாள். தமிழ் இலக்கியம் பாயும் சேதி இன்பத் தேனாய் நம் செவிகளில் பாய வேண்டாமா தோழர்களே?

- சுகன்யா ஞானசூரி
07/01/2021.

Friday, January 1, 2021

கலை மெய்மை அரசியல்


 கிழக்கு லண்டனில் பிறந்த நாடக மேதை. பிரித்தானிய அரசையும், ஐக்கிய அமெரிக்கா அரசையும் விமர்சிக்கும் நெஞ்சுரமிக்க எழுத்தாளர். மானுடத்தின் மீதான பற்றுதலும், வல்லரசுகளின் ஏகாதிபத்தியத்தினால் சிதைக்கப்படும் மக்களின்பால் குரல் கொடுக்கும் கவிஞனுமாக நோபல் பரிசு பெற்றவரும ஹெரால்ட் பின்ட்டரின் கலை மெய்மை அரசியல் எனும் சிறு நூல் தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்களின் மொழியாக்கத்தில் வாசிக்கக் கிடைத்தது. என்.சி.பி.எச் சிறுநூல் வரிசை வெளியீடு. 


அரசியல் செயல்பாடுகளில் கலையின் பங்களிப்பு எத்தகையது? அதன் வகிபாகம் என்ன? ஒரு கலைச் செயல்பாட்டாளன் அரசியல் களச்செயல்பாட்டுக்குள் பங்காற்றுதல் என விரிந்து குர்து, நிகரகுவா, ஈராக் என பல பலிக்களங்களை எடுத்துக்காட்டுகளாக விவரித்து பின்ட்டர் ஆற்றுகின்ற உரையில் எப்படியெல்லாம் பொய்களை மெய்களாக்கி வல்லரசுகள் தங்களின் ஆக்டோபஸ் கரங்களை (இராணுவ கேந்திரங்களை) விரிக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஒருவேளை அவர் இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்திருந்தால் ஈழத்தில் நிகழ்ந்த யுத்தப் படுகொலைகளையும் சுட்டியிருப்பார். 


மரணம் எனும் அவரது கவிதை கைவிடப்பட்ட ஒரு சடலத்தின் மீதான ஒரு விசாரணையைக் கோருவது போன்ற விவரணைகள் ஒரு புலன்விசாரணை. உண்மையிலேயே தமிழில் இப்படியான எழுத்தாளன், கவிஞன், செயல்பாட்டாளன் இருந்தால் தவறான முத்திரை குத்துதல், காயடிப்ச் செய்தல் என நிகழ்ந்துவிடும் அபாயம் உள்ளது. அதை இங்கே தேர்வு செய்யவும் விரும்புவதில்லை. 

* எழுத்தாளனுடைய வாழ்க்கை என்பது அதி பலவீனமானது. அநேகமாக அம்மணமான நடவடிக்கை. அதற்காக நாம் அழுது கொண்டிருக்கத் தேவையில்லை.

* நாம் காண்பதெல்லாம் என்றும் முடிவுறாத பிரதிபலிப்புகள்தான். 

ஆம் பின்ட்டரிஸ் எனும் கோட்பாட்டை புதிதாக உருவாக்கியவரின் இந்த வார்த்தைகள் எத்தகைய நிதர்சனமானவை. 

- சுகன்யா ஞானசூரி

01/01/2021.

குணா கவியழகனின் கர்ப்பநிலங்கள் சொல்வதென்ன?


 

http://puthiyaparimaanam.in/?p=1733 இணைய இதழில் வெளியாகியுள்ள நாவல்கள் குறித்த மதிப்புரை உங்கள் வாசிப்புக்கு வசதியாக கீழே.


தமிழ் இலக்கியத்தில் போர் இலக்கியத்திற்கு ஈராயிரம் ஆண்டு பாரம்பரியம் இருக்கிறது. புறநானூற்றுக்குப் பிறகு போரினை மையம் கொண்ட படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் விரல்சுட்டும் அளவில்கூட இல்லை. சமகாலத்தில் ஈழப்போர் அதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பதாகவே தெரிகிறது. குணா கவியழகன் இந்த போர் இலக்கியங்களில் தவிர்க்கவே முடியாதவராக தனது ஐந்து நாவல்களினூடாக சாட்சியமாக்கியிருக்கிறார். நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம், கர்ப்ப நிலம்-1&2 என தொடர்ச்சியாக வாசித்தவர்கள் இதை விளங்கிக்கொள்வர். இவைகள் ஒரு நிலமிழந்த சமூகத்தின் ஆவணமாகின்றன. இது மிகையல்ல. இவ்விரு நாவல்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிகக் கனமான செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. அஃறிணை, உயர்திணை என்ற பாகுபாடுகள் அற்று அவையவை தமது பாத்திர வெளிப்பாடுகளை செவ்வனே செய்கின்றன. ஒவ்வொன்றையும் தனித்தனியாக விவரித்து எழுத விருப்பம்தான். நீளமாகிவிடும் அபாயம் கருதி முக்கியமான சில பேசுபொருளை மட்டும் சுருக்கமாக இங்கே சுட்டியிருக்கிறேன். இது எனது வாசிப்பிலும், நான் வாழ்ந்த வாழ்க்கையிலும் கண்டவைகளும் மட்டுமே. இதுவே முழுமையானதும் அல்ல.


பிரிட்டனின் நாடகமேதை ஹெரால்ட் பின்ட்டரின் நாடகங்களில் "அறை" ஒரு முக்கியமான உயிரியாக இடம்பெறுவதைப் போலவே "நிலம்" என்ற ஒன்றே குணா கவியழகனின் அனைத்து நாவலிலும் களமாக, பிரதான உயிரியாக, பாத்திரமாகிறது. ஈழம் எனும் ஒரு குட்டி தேசத்தின் நிலங்களின் வெவ்வேறு குணாம்சங்களை அவரது ஒவ்வொரு நாவலிலும் காணமுடியும். அது இரத்தத்தாலும், கண்ணீராலும், வியர்வையாலும் சூழ்ந்த நிலம். இதிகாசம் துவங்கி முடிந்து போன முள்ளிவாய்க்கால் யுத்தம் வரை இந்த நிலம் போரினையே பல நூற்றாண்டுகள் காவித்திரிந்த நிலம். இத்தகையதொரு நிலத்தில் வேரூன்றி நின்ற சமூகம் வேரறுத்து புலம்பெயர்ந்து வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவுகளுக்குள் தம்மை பிணைத்துக்கொண்ட வாழ்வியலை வெற்றி, தோல்வி, குரோதம், ஏக்கம் என பல்வேறு உணர்வுகளை மீளவும் நினைத்துப் பார்க்கும்படியாக அமைந்திருக்கின்றன கர்ப்பநிலங்கள்.


1995 அக்கோடபர் 30 ல் யாழ்ப்பாணத்தை விட்டு மக்கள் கிளாலி நீரேரி வழியாக வன்னி எனும் பெரிய வனாந்தரமான பெரும் நிலப்பரப்பிற்குள் செல்வது வரையான காலகட்டங்களில் நிகழ்ந்த சம்பவங்களை கர்ப்பநிலம் -1 வனமேகு காதை சொல்கிறது. யாழ் குடாநாட்டிலிருந்து மக்கள் கைதடிப் பாலம் வழியாக வெளியேறிய துயர்மிகு கதைகள் அவை. அதுவரையிலும் நினைத்துப் பார்த்திராத பாரிய புலப்பெயர்வு அது. கர்ப்பநிலம் -2 போருழல் காதை அந்த பெரும்நிலத்தில் நிகழ்ந்த போர்களையும், பெருங்காட்டுக்குள் நோய்களாலும், பட்டினிகளாலும் அல்லலுற்ற சமூகத்தின் அவலங்களை சொல்கிறது. இது இரண்டாயிரம் ஆண்டளவு வரையான காலகட்டத்தை பேசுகின்றது. அதன்பிறகு நடந்தவைகளை இந்த உலகமே பார்த்துக்கொண்டுதான் இருந்தது. இரண்டு நிலங்களிலிருந்தும் பிய்த்தெறியப்பட்டு மூன்றாம் நிலத்தில் இருந்துகொண்டு எழுதும் நான் அத்தனைக்கும் சாட்சியமாகி நிற்பதை உணர்கிறேன்.


இது தமிழ் - சிங்களம் என இரு இனங்களின் அரசியல் பிளவுபாடுகளுக்கு அப்பால் இரு இனமும் தனித்தனி இனமல்ல இரண்டும் ஒன்றேயான திராவிட இனம் என வலியுறுத்துவதாகவே நான் பார்க்கிறேன். அதுதான் விஞ்ஞான உண்மையும்கூட.  ரத்னநாயக்கா-நாகமணி என இரு தரப்பிலும் சாமான்ய வாழ்வில் புயலடிப்பதுபோல் கலவரங்களும், போரும், அரசியல் காய்நகர்த்தலும், மக்களின் அவலமான வாழ்க்கையென சொல்லப்படும் வரலாற்று நிகழ்வுகளுக்குள் மணிநாகன் எனும் தொன்ம கதாபாத்திரம் வழியே நாவலை தொய்வின்றி கடத்தியிருப்பது சிறப்பு. மூப்பனாக மாதவன் ஐயாவைக் கண்டடையும் இடங்களும், மாதவன்-மயிலு காதல் என காட்டின் இன்னொரு குறுங்காவியம்.




கொலராவால் அன்ரனின் தாயார் இறப்பதும், அன்ரன் கொலராவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் நாகமணியின் மகளும் அன்ரனின் மனைவியுமான தேவி இவர்களோடு படும் துன்பம் என நோய்களால் போர்நிலம் மறுபுறம் மடிந்துகொண்டிருந்தது. இன்றைக்கு தீநுண்மியால் (கொரோனா) உலகமே முடமாகியிருக்கிறது. கட்டற்று மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. இதில் போர் ஏற்பட்டு, மருந்துத் தட்டுப்பாடும், உணவுத்தட்டுப்பாடும் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது இல்லையா? அப்படித்தான் நிகழ்ந்தது. இல்லை நிகழ்த்தப்பட்டது. கொலரா எனும் நோயாலும், குலைப்பன் என்று அழைக்கப்படும் மலேரியா நோயாலும் பெருங்காட்டுக்குள் மக்கள் பாதிக்கப்பட்டு செத்து வீழ்ந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சுகாதாரப் பிரிவினரால் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்ட விதம் என்றென்றும் நினைவுகூரத்தக்கது. கொல்லர் புளியங்குளம் காட்டுக்குள் ஒருவர் மாற்றி ஒருவர் என குலைப்பன் நோயால் நாங்கள் பட்ட பாடுகள் சொல்லி மாளாது. அதோடு மாலை வேளையானால் மொய்க்கும் சக்கரபாணி வண்டுகளின் தொந்தரவோ கொடியது. புலிகளிலிருந்து மக்களையும், மக்களிலிருந்து புலிகளையும் பிரிப்பதற்காக உளவியல்ரீதியாக ஆட்சியாளர்கள் செயல்பட்ட விதம், போரின் தந்ரோபாயங்கள் என  மிகக்கொடிய நாட்கள் அவை. நோய்களும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகின.


 இரண்டு சிவில் சமூகங்களுக்கும் போர் என்பது பல்வேறு இழப்புகளையே வழங்கினாலும் அரசியல் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களை அண்டிப் பிழைக்கும் சுரண்டல்வாதிகளுக்கு போர் பெரும் லாபம் ஈட்டிக் கொடுக்கும் தொழிலாகியிருந்திருக்கிறது. இதை அவர்கள் ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்தியுள்ளார்கள். ரத்னநாயக்காவின் இரண்டு மகன்களில் தமிழர்கள் மீது செய்யும் போரை வெறுத்து ஆட்சியாளர்களைக் கண்டிக்கும் இடதுசாரியச் செயல்பாடுகளோடு உள்ள மலிங்காவிற்கும், மரம் அறுத்து ஆரியரத்னா எனும் அரசியல்வாதியோடு சேர்ந்து செய்யும் சுரண்டல்வாதியாகும் மலிங்காவின் சகோதரன்  விஜயதாசா போன்றோருக்கு இடையிலான வேறுபாடுகள் சிங்களச் சிவில் சமூகத்தின் இரண்டு வேறுபட்ட வாழ்வை வெளிப்படுத்துகின்றன. இன்றைக்கு இது தமிழ் சிங்களம் எனும் பாகுபாடின்றி வெளிப்படுகின்றது என்பதை சமீபகால அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன. 


ஈழ மக்கள் மத்தியில் இடதுசாரிய அமைப்புகள் மீதான நம்பிக்கையின்மை என்பது இடையில் நிகழ்ந்த ஒன்றுதான். சிங்கள இடதுசாரிய அமைப்பான ஜேவிபியின் தமிழர்களுக்கு எதிரான துவேச செயல்களும், இடதுசாரிய கொள்கைகளோடு தமிழீழ கோசத்தை முன்வைத்து இயங்கிய புலிகள் அல்லாத சகோதர இயக்கங்களின் நம்பிக்கைத்தன்மையற்ற செயல்பாடுகளுமே காரணமாகின. விடுதலைப் புலிகள் இடதுசாரிய சிந்தனையற்றவர்கள் என நினைப்பவர்களைவிட அதிமுட்டாள்கள் எவரும் இருக்க முடியாது. மொட்டைமோகன் எனும் கதாபாத்திரம் இவற்றை மெய்ப்பிப்பதை காணலாம். அவர் விடுதலைப் புலிகள் மீது வெறுப்புக்கொண்ட சகோதர இயக்கத்தைச் சேர்ந்தவர். அவர் தன் அமைப்பினரின் செயல்களை புலிகள் அமைப்போடு ஒப்பிட்டு தன் அமைப்பினரின் செயல்பாடுகளின் மீது கொள்ளும் அதிருப்தியான இடங்கள் இவற்றை மெய்ப்பிக்கின்றன. இடதுசாரிய சிந்தனை என்பது ஈழத்தில் முழுதாக கைவிடப்படவில்லை. 


குழந்தைகளின் மனம் கூட்டமாக வாழ்வதைக் கண்டு குதூகலிக்கின்றது. அதுதான் குழந்தை மனதின் இயல்பு. போரினால் இடம்பெயர்ந்து வந்த சிறுவர்கள் ஒன்றாகி விளையாடுவதும், குட்டிச் சமையல்கள் செய்வதும் என அவர்களின் உலகம் ஒரு சுதந்திரமான உலகம் என்பதை நாகமணியின் பேரன் கதிர் ஊடாக நாம் காணலாம். கூட்டாஞ்சோறு ஆக்கும் சிறுவர்கள் மத்தியில் கதிரின் அக்காவை மற்றவர்களோடு சேரவிடாது பெரிய பிள்ளையாயிட்ட என தடுத்து வைக்கிறார் கதிரின் தாயார். தன்னோடு விளையாட வராத தமக்கையின் மீது வெறுப்பு உருவாகுவதும். தன்னோடு விளையாடும் பக்கத்து வீட்டு தயாளினி அக்கா மீது பாசம் அதிகரிப்பதும் என குழந்தைகளின் மனம் ஊற்றி வைக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப நீர் தன் வடிவத்தை அமைக்கும் என்ற விதியை மெய்ப்பிக்கிறது. பெரியவளாகிட்ட எனும் சொல்லால் சிறுவர்களின் எல்லையை நாமேதான் தீர்மானிக்கிறோம் இல்லையா? செல் விழுந்து தலை சிதறிச் சாகும் தயாளினியின் இறப்பு கதிரின் மனதை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என்பதினூடாக ஒட்டுமொத்த சிறுவர்களின் மனங்களையும் நாம் உணர முடியும். அச்சம் ஒரு கட்டத்தில் வெறுப்பாகி வெறுப்பு குரோதமாகும் இடத்தில் பழிவாங்கல் உணர்வு தானாகவே சிறுவர்களை ஆட்கொள்ளும். அதுவே போருக்கு செல்வதற்கான மனநிலையை உந்தித்தள்ளும். அதை நாம் விடுதலை எனும் பெயரால் அறுவடை செய்கிறோம் இல்லையா?


நிலம்மீள் காதை என கர்ப்பநிலம்-3 வராதா எனும் ஏக்கம் புலம்பெயர்ந்து கிடக்கும் ஈழத்துச் சமூகங்களின் தாய்மண்ணை காணும் பேராவலைப் போன்றிருக்கிறது. நாவல் வருவதும் வாராது இருப்பதும் எழுத்தாளர் கையில் இருப்பதுபோல் தேசம் கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் ஒட்டுமொத்த மக்களின் கைகளில்தான் இருக்கிறது. 

- சுகன்யா ஞானசூரி.

soorymicro@gmail.com


தோழர் பொதியவெற்பனின் அரை நூற்றாண்டுப் பயணம்

 


இன்று திருச்சி என்.சி.பி.எச் சென்றிருந்தபோது நான்கு சிறுநூல்கள் வாங்கிவந்தேன். அதில் முதல் நூலாக தோழர் பொதியவெற்பன் எனும் பெரும் ஆளுமையை இச்சிறுநூல் வழி இன்று கொஞ்சம் அறிந்துகொண்டேன். இதுவரை நேரில் பார்த்ததில்லை. முகநூலில் அவரது பதிவுகளை தொடர்ந்து வாசித்து வந்த எனக்கு இது ஒரு சிறு நூல் எனினும் வீ.அரசு அவர்களின் உழைப்பு பல்வேறு தளங்களில் தோழர் பொதியவெற்பன் அவர்களை அணுகியிருக்கும் விதம் பின்வரும் தலைமுறை எடுத்தாள ஒரு துவக்கப்புள்ளியை இட்டுச் செல்கிறது. கனமான புத்தகங்களை வாசிப்பதைக் காட்டிலும் கனமான விடையமுள்ள இச்சிறு நூல்கள் எனக்கு வாசிப்பதற்கு ஏற்றதாக இருப்பதாக (ரொம்பச் சோம்பேறி ஆகிவிட்டேன்) உணர்கிறேன். வாய்ப்புள்ளோர் வாசித்துப் பாருங்கள். தோழர் பொதியவெற்பன் பொதிகைச் சித்தராக வந்து நிற்கும் இடத்தை அறிந்துகொள்ளலாம். அவரை நாம் எந்த ஒன்றிற்குள்ளும் அடைத்துவிட முடியாத தமிழின் மிகப்பெரும் ஆளுமையே.

- சுகன்யா ஞானசூரி

24/12/2020.

Tuesday, November 10, 2020

செம்மொழித்தமிழ்


 

செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள்

தொல்காப்பியம் முதல் இறையனார் அகப்பொருள் வரையிலான 41 நூல்களின் தொகுப்பு. நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த சங்க இலக்கிய நூல்களில் விளக்கவுரையுடனான சில பழைய நூல்களை சமீபத்தில் வாங்கியிருந்தாலும் மொத்தமாக ஒரே புத்தகமாக கிடைத்ததில் அளவில்லாத மகிழ்ச்சி. விளக்கவுரை இல்லை என்பது சிறு குறையாக இருப்பினும் பதம் பிரித்து பதிப்பித்திருப்பது எளிதாக விளங்கிக்கொள்ள முடிகிறது. நேரில் சென்று வாங்க எண்ணியிருந்தேன். ஆனாலும் சூழல் அமையவில்லை. கடைசி நாளில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி அழைத்தால் அழைப்பை எடுக்காதது சற்று பதற்றமாக (பணத்திற்காக அல்ல நூல் கிடைக்குமோ கிடைக்காதோ என்றே) இருந்தது. ஆனால் நூல் கைக்கு வந்ததும்தான் மனம் நிறைவானது. குறைந்த விலையில் நிறைவான தமிழ் நூல் என்றால் மிகையில்லை. பதிப்பித்து பத்தாண்டுகள் கழித்து கவனம் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதும் தமிழ் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதற்கு சான்று பகர்கிறது.

- சுகன்யா ஞானசூரி

கைகழுவிய காலம்


இது எப்படி உள்ளதென நீங்கள்தான் சொல்லவேண்டும் நண்பர்களே. படைப்பு குழுமம் நடாத்தும் கவிக்கோவின் பிறந்தநாள் போட்டிக்கு என்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கவிதை. 


https://padaippu.com/submitted/kaviko2020/116

கைகழுவிய காலத்தின் கவி!

*************

ஒரு மதுக்குவளையைக் கவிழ்த்து வைக்கும் இடைவெளியில் 

காலங்களை அனாயசமாய்ப் புரட்டிப் பார்க்கிறான் கவிஞன். 

கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இழுத்துவந்து 

நிகழ்காலத்தின் துயரக் கோடுகளோடு முடிச்சிடுகிறான். 

மரபணு அடையாள உணரட்டை அணிந்த 

சூப்பர் மனிதர்கள் கடந்த காலங்களுக்கு பயணிக்கிறார்கள்

நோவாக்கள் கட்டிய கலங்களையொத்தவை அவை.

மனிதர்களின் வளர்ச்சிகளோடும் அரசுகளின் போட்டி அதிகாரத்தோடும் 

இணைந்தேயிருக்கிறது நுண்மிகளின் பரிணாம மாற்றம்.

நுகர்வுக் கலாச்சாரம் கொடிய நோய்களையே பரிசளிக்கிறது.

நூற்றாண்டுகளுக்கு இடையிலான தொலைவில்தான் இருக்கின்றன 

அடிமையுழைப்பில் ரேகை தொலைத்தவர்களும் நுண்மிகளால் 

கைகழுவியே ரேகையுதிர்ந்தவர்களும் வாழ்ந்த காலங்கள்.

நுண்மிகளின் பரவுநிலை பொருளாதார மந்தநிலை அகதிகளாகி 

செத்து வீழும் மக்கள் எதுபற்றியும் கவலையின்றி 

நாளாந்தம் உரையாற்றும் பொறுப்பற்ற தலைவர்கள் 

மாற்றம் பெறவில்லை என்றபடிக்கு மனுசங்களின் 

காலவெளிகளில் பயணித்துத் திரும்பும் சூப்பர் மனிதர்கள்

புறக்கதிர்களின் துணைகொண்டு தத்தமது 

கைகளையும் கலங்களையும் தூய்மை செய்கின்றனர் 

நோவாவின் காலத்திற்கும் சூப்பர் நோவாவின் காலத்திற்கும் 

பயணித்த களைப்பில் உறங்கும் கவி 

கைகழுவிய பின்பே ஒரு மிடறைச் செலுத்தினான்.

- சுகன்யா ஞானசூரி.

திருச்சி.

 https://m.facebook.com/story.php?story_fbid=3178778738899259&id=100003014920463

Wednesday, November 4, 2020

புதிய பரிமாணத்தில் எனது கவிதைகள்


இம்மாதம் புதிய பரிமாணம் இணைய இதழில் வெளியாகியுள்ள "நோய்க்காலத்து அகதியின் பாடல்" என்ற எனது 16 கவிதைகளை இந்த இணையச் சுட்டியில் ச்் http://puthiyaparimaanam.in/?p=1288 சென்று வாசிக்கலாம் தோழர்களே. என் கவிதைகள் குறித்து தங்கள் அனுபவங்களை பதிவு செய்யவும் வேண்டுகிறேன். 



Saturday, October 24, 2020

றாம் சந்தோஷின் சொல் வெளித் தவளைகள் - என் மனவெளியில்


 

றாம் சந்தோஷின் சொல் வெளித் தவளைகள் 


கவிதையில் அழகியல் குறித்து, அரசியல் கவிதைகள் அழகியலற்ற வறட்டு நிலைகுறித்து, தத்துவார்த்தமும், படிமங்களும், தொன்மங்களும், மிகையுணர்ச்சிகளும், ஒருவித சோக இழையோட்டமும் இன்னபிற என அமைந்தால்தான் தரமான கவிதை என்ற இதுநாள்வரையான அத்தனை எண்ணவோட்டத்தையும், எனக்குண்டாகியிருந்த பீதியையும் சொல் வெளித் தவளைகள் கலைத்துப்போட்டு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. 


இந்த தரமான, தரமற்ற என்ற பதங்களை உதிர்ப்பவர்களை வைத்தே இந்த கவிதையியலின் கலாச்சார காவலர்கள் யார் என்பதை நாம் இனங்காண முடியும். ஆனால் இவை எவற்றுக்குள்ளும் அடைபடாத புதிய பாணியிலமைந்த அதாவது பின்நவீன கோட்பாட்டில் (இது தோழர். ஜமாலனின் முன்னுரையில் சுட்டப்பட்டுள்ளது.) அமைந்துள்ள சுய பகடித் தன்மையுடன் கூடிய கவிதைகள். சங்க காலம் தொட்டு எங்க காலம் வரை (தோழர். ஜமாலன் கூற்று முன்னுரையில்) எல்லாக் காலத்தையும் சுய எள்ளலோடு எளிய வரிகளில் கவித்துவம் குன்றாமல் (இங்கு நானே உதிர்க்க வேண்டியதாகிவிடுகிறது) மன வெளியெங்கும் தவளைகள் பாய்ச்சலை நிகழ்த்துகின்றன. 


ஒரு தமிழ் ஆய்வு மாணவர் என்ற வகையில் அவரது தமிழ் இலக்கண, இலக்கிய மரபுகள் இந்த புதிய சிந்தனைக்கு கைகொடுத்திருக்கிறது என்பதற்கு அப்பால் சமகாலத்தில் அதன் தேவை கருதி படைப்பாக்கம் ஆக்கியிருக்கும் மனதிற்கு ஆயிரமாயிரம் கைகுலுக்கல்கள் பத்தாது. 


பிரதிக்கு வெளியே ஒன்றுமில்லை என்கிறார் ழாக் தெரிதா. அத்தனை சமாச்சாரங்களையும் இந்த ஒற்றைப் பிரதிக்குள் முயன்றிருக்கிறார். இப்படியான பரிசோதனை முயற்சியான பிரதியுருவாக்கம் தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஒரு அவசியத் தேவை. இவைகள் காலத்திற்கும் நின்று பேசக்கூடியவை. 


பூனைகளை கவிதைக்குள் கொண்டுவரவில்லை எனில் கவிஞர் என அழைக்கமாட்டார்கள் போல. ஆனால் இங்கே யானை, புலி, நாய், பன்றி, மாடு, மான், நரி, வெளவால் என விலங்குகள் கவிதைகளுக்குள் உலவ விட்டுள்ளார். டாக்கிங் டாமாக பூனை உலவுகின்றது. அதேபோல் கம்யூனிஸ்டுகள், திராவிடர்கள், தமிழ்த் தேசியர்களின் போர்வையில் உலவுகின்ற போலிகளின் முகமூடிகளை கிழித்தெறிகிறார். உடல் உறுப்புகளை களவாடும் மருத்துவத் துறையின் அயோக்கியத்தனத்தை சுட்டும் "எனக்கு நலம் சரியில்லை" கவிதையில் நகுலனை கண்டுகொண்டேன். மாட்டரசியல், பணமதிப்பிழப்பு, கோமியக் குடிக்கிகளின் சங்கித்தனம், இலக்கியவாதிகளின் மேட்டிமைத்தனம், கடவுளர்கள் என பலவற்றையும் பகடிகளோடு குறிப்பால் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். சரி எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தினால் பதில்தான் என்ன? எல்லாவற்றையும் தோலுரித்தால் அங்கே ஒன்றுமே மிஞ்சப்போவதில்லையே? (ஆமாம் வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றுமில்லைதான். விலை கண்ணீர் வர வைக்கிறதே. ஆனாலும் பயன்படுத்தாமல் இருக்க முடிகிறதா? ) மனிதம் எனும் அறம் ஒன்றே அதன் பதிலாகிறது. இந்த நூற்றாண்டின் நுகர்வுக் கலாச்சாரத்தில் அதை நாம் தொலைத்துவிட்டோம். அதைக் கண்டடைய இத்தகைய பிரதியாக்கங்களை அடையாளப்படுத்துகிறோம்.


இத்தொகுப்பில் கீறப்பட்ட சித்திரங்கள் சிறப்பான குறியீட்டு தன்மையோடு கவிதைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. புதிய முயற்சிகள் ஒரு கனவு முயற்சி. First impression is the best impression என்பார்கள். தோழர் றாம் சந்தோஷ் இதை மனதிற்கொண்டு சிறப்பாகச் செய்துள்ளார் என்றால் மிகையில்லை. ஏனெனில் பிரபலமாக இருக்கக்கூடிய பலரும் தங்கள் முதல் பிரதிகளை மறைத்தே வைத்திருப்பர். அதுகுறித்து நான் சொல்லத் தேவையில்லைதானே? 


பின்குறிப்பு: இவற்றை நான் எனது கைப்பேசியில் கழிவறையில் அமர்ந்துதான் டைப் செய்தேன். வெஸ்டர்ன் டாய்லெட்டைக் கண்டுபிடித்தவருக்கு ஆயிரம் நன்றிகள். 

- சுகன்யா ஞானசூரி

24/10/2020

வெளியீடு: சொன்மை பதிப்பகம் 

விலை: ₹110

இது முதற்பதிப்பு. இரண்டாம் பதிப்பை எதிர் வெளியீடு கொண்டுவந்துள்ளதாக அறிகிறேன்.

Monday, October 19, 2020

ழாக் தெரிதா - கட்டவிழ்ப்பு

 


"ழாக் தெரிதா" கட்டவிழ்ப்பு எனும் கோட்பாட்டின் தந்தை என்றே அழைக்கலாம். தத்துவம், இலக்கியம் மற்றும் ஓவியம் என எல்லா தளத்திலும் தனது கட்டவிழ்ப்பு எனும் புதுவகைச் செயல்பாட்டின் மூலம் ஐரோப்பியர்களின் கருத்துக்களை நிர்மூலமாக்கியவர் என்றே சொல்லலாம். இந்தக் கட்டவிழ்ப்பின் செயலால் நண்பர் ஒருவருக்கு ஆதரவாக எழுதி கட்டவிழ்ப்பு கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கி இறுதிக்காலத்தில் மெளனிக்கப்பட்டவர். மார்க்சியத்தையும் கட்டவிழ்ப்பு செய்து மார்க்சியர்களின் வெறுப்பைச் சம்பாதித்தார்.  


எம்.ஜி. சுரேஷின் இந்தச் சிறுநூல் அறிமுக வாசிப்பாளர்களுக்கு ஆகச் சிறந்த ஒரு கையேடு என்றே சொல்வேன். எளிமையான எடுத்துக்காட்டுகளோடு குறியியல் குறித்தும் பிராய்டிசம் குறித்தும் விளக்கிச் செல்கிறார். அடையாளம் பதிப்பகத்தின் பின்நவீன சிந்தனையாளர் வரிசை நூல்களில் மற்றவற்றையும் வாசிக்க வேண்டும் எனும் ஆர்வம் எழுகிறது. வாய்ப்புள்ளோர் வாசித்துப் பாருங்கள். 


- சுகன்யா ஞானசூரி

19/10/2020.

நன்றி: Markandan Muthusamy ஐயா.

Saturday, September 19, 2020

தற்சார்பு வாழ்க்கையின் முதல்நிலை



 "#தற்சார்பு" வாழ்க்கையின் முதல்நிலை. இன்றைய தினத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்திருக்கிறது எதேச்சையாக ஊன்றிவைத்த விதை. 


தம்பி அடுத்து என்ன அரசியலில்தானே என உங்கள் மைன்ட் வாய்ஸ் கேட்குது. நமக்கு சோறுதான் முக்கியம்.


 #அகதி அரசியல் பேசுதல் வேண்டும்.


- சுகன்யா ஞானசூரி

19/09/2020.





வெள்ளி விழா ஆண்டில்


 வெள்ளி விழா ஆண்டில் 

*********


18.09.1996 மாலை 6.30 மணிக்கு வலைப்பாடு கடற்பகுதியில் இருந்து புறப்பட்டு 19.09.1996 காலை 8 மணிக்கு தனுஷ்கோடி கரையில் இறங்கிய எமக்கு "அகதி" என முத்திரை குத்தப்பட்டு இன்று 25வது ஆண்டில். சாதனையா? வேதனையா? என பட்டிமன்றம் மட்டும் வைக்கவில்லை. இன்னும் எத்தனை காலத்துக்கு நாம் இப்படியே வாழ? இந்திய தேசத்திடம் நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இங்கு எமக்கு குடியுரிமை தருக. இயலவில்லை எனில் வேறு தேசங்களுக்கு அனுப்புக. 


அந்த அலைகள் ஏன் 

இந்தப் பக்கமாய் 

எம்மை ஒதுக்கின?


- சுகன்யா ஞானசூரி

19/09/2020.

Sunday, September 6, 2020

தொட்டால் சிணுங்கி




 #தொட்டால்_சிணுங்கி 

வழக்கமாக பயன்படுத்துகின்ற வழி கொரோனாவினால் அடைபட்டிருந்ததால் மாற்றுவழியில் இன்று வருகையில் கண்டுகொண்டேன். சிறுபிராயத்து உணர்வுகள் மேலெழுந்து நர்த்தனமாடத் துவங்கியது. உடனே மகளை அழைத்துவந்து மகளோடு நானும் தொட்டுத் தொட்டு மகிழ்ந்தோம். முதலில் தொட்டதும் சுருங்கியதைக் கண்டு பயந்த மகளோ அந்தச் செடியை வீட்டுக்கு எடுத்துப் போகலாம் எனும் அளவுக்கு வசியமாகிவிட்டார். மன அழுத்தத்தை போக்கி வசியம் செய்யும் மாயக்காரச் செடி என்பது சாலப் பொருத்தம்தான். கான்கிரீட் காடுகளாகிப் போன மாநகரத்தில் இவைகள் காணக்கிடைப்பதே அரிதினும் அரிதான ஒன்று. தரையோடு படரும் மமோசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இச்செடியை மலையாளத்தில் #தொட்டாவாடி என்று அழைப்பார்களாம். #இந்தியில்_எனக்குத்_தெரியாது. 

- சுகன்யா ஞானசூரி

06/09/2020.




Saturday, July 11, 2020

ஆயிரம் கைகள் சேர்ந்து மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை..."

எந்தவொரு இனமும், எந்தவொரு மொழியும் தன் அழிவுகளிலிருந்து சரி தவறுகளை ஆய்ந்து மீளக் கட்டமைக்கவே முயலும். அதுவே அந்த மக்களின் இருப்பினை உறுதிசெய்யும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக, தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடிக்கும் முகமாக, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ், தமிழ்த்தேசியம் எனும் உணர்வுகள் ஏற்படாவண்ணம் நாளொரு சர்ச்சைகள்வழி அவரவருக்காக தரப்பட்ட அஜென்டாவை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறார்கள். ஒரு இனம், மொழி தன் மக்களாலே கொச்சைப்படுத்தப்படும் பேரவலம் தமிழ்ச்சமூகத்தில் மட்டுமே. இது தமிழ்ச்சமூகத்தைப் பீடித்திருக்கும் சாபக்கேடு. இது அவரவர் சார்ந்திருக்கும் அமைப்பியலின் பார்ப்பனிய மனோபாவமே இப்படி ஆட்டுவிக்கிறது.


ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பிறகு தமிழ்த்தேசியம் குறித்த அவதானமும், கடந்த காலங்களில் ஏற்பட்ட தமிழ்த்தேசியத்தின் தோற்றுவாய்களின் தெளிவும், திராவிட இயக்கத்தின் பிறப்பு, தலித் அரசியலின் வகிபாகம், பொதுவுடைமையாளர்களின் செயல்பாடு, ஆரிய சமாஜ்யங்களின் வரவும் அவர்களூடான பார்ப்பனர்களின் அதிகார வேட்கையில் விளைந்த இந்து தேசியம் எவ்வாறு தமிழ்த்தேசியத்தை காலத்துக்கும் அடக்கியொடுக்கி தன்னை விஸ்தாரமாக்கியது என ஐயா தொ.ப வினால் தொகுக்கப்பட்ட இச்சிறு நூல் பல்வேறு விடையங்களை இன்றைய தலைமுறைக்கு அறியத்தரும் பொக்கிஷம் என்பேன்.

"ஆயிரம் கைகள் சேர்ந்து மறைத்தாலும்
ஆதவன் மறைவதில்லை..."

- சுகன்யா ஞானசூரி
11/07/2020.

நன்றி: படவருடியாக அனுப்பி உதவிய தோழர் செ.சண்முகசுந்தரம் அவர்களுக்கு.


Friday, May 1, 2020

மே மாதம்








ஈழ எழுத்தாளர் தாமரைச் செல்வி அவர்களது ' வீதியெல்லாம் தோரணம்', ' தாகம்' நாவல்கள் மற்றும் 'அழுவதற்கு நேரமில்லை' சிறுகதை தொகுப்பு என ஒரே மூச்சாக இன்று வாசித்து முடித்தேன். மனமோ கனமாக இருக்கிறது. உறக்கம் வர மறுக்கிறது. பழைய நாட்களுக்குள் அழைத்துச் செல்லுகின்றன. மனதை உலுக்கி எடுக்கிறது. புனைவுகளற்ற எதார்த்தமான கதைகள். கிளாலிக் கடலேரியில் அன்றைக்கு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட அம்மம்மாவும், அத்தையும் நினைவுகளில் வந்து தொந்தரவு செய்கிறார்கள். இன்றைய தலைமுறைகள் எல்லாவற்றையும் வசதியாக மறந்துவிட எத்தனிக்கிறது. எல்லாவற்றையும் நாம் மறந்துவிடத்தான் முடியுமா? இவற்றை மீள் வாசிப்பு செய்வதனூடாக எமது வரலாற்றின் பக்கங்களில் ஏற்பட்ட வலிகளையும், வேதனைகளையும் அறியமுடியும். எல்லோருடைய அரசியலுக்கும் பகடியாகிப் போகிற துயரங்களை நாம் சுமந்தலைவோம் என்பதை கனவிலும் நினைத்திருக்க மாட்டோம். எல்லாவற்றையும் மறந்துதான் ஆக வேண்டும். இல்லையெனில் விசர் பிடித்தாட்டும். ஒரு தசாப்தமாக மே என்பது எமக்கு துயரத்தை வரலாறாக்கிய மாதம். 

- சுகன்யா ஞானசூரி
01/05/2020.

Tuesday, April 28, 2020

முன் '96' பின் (நினைவோடைக் குறிப்புகள்)

முன் '96' பின் 
(நினைவோடைக் குறிப்புகள்)



பகுதி-1

"96" எனும் திரைப்படம் பலருக்கும் ஒரு நினைவினை ஆழ்மனதிலிருந்து கிளறிவிட்டு பல ரைட்டப்புகளை எழுத வைத்திருக்கிறது. சிலரது ரைட்டப் சிரிப்பாக இருந்தது. சிலரது ஒருதலை ராகமாக இருந்தது. 96 ஐ முன்வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரைட்டப் முகநூல், டிவிட்டர் என எழுதியதை வாசித்தபோது எனக்கும் சிந்தையில் ஒரு பொறி தட்டியது. 96 படம் அல்ல அதாவது 1996 எனது வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திருப்புமுனையாக அமைந்த ஆண்டு. ஒரு தேசத்திலிருந்து இன்னொரு தேசத்திற்கு புலம்பெயர்ந்த ஆண்டு. அதனால்தான் நான் இந்த 96ஐ 96 க்கு முன் பின் என இரண்டாக பிரித்து எனது நினைவுக் குறிப்புகளை எழுதினால் என்ன என்று தோன்றியது. 

நினைவுக் குறிப்புகள் எழுதுவதற்கு நீ நிறைய அனுபவங்களை பெற்றுவிட்ட வயோதிபனா என என் உள்மனம் என்னை நக்கலாக வினவினாலும் கொரோனாவின் கொடுங்காலத்தில் நாளை என்பது நிச்சயமற்று இருப்பதால் கிடைத்த அனுபவங்களை குறிப்புகளாக தொகுத்து எனது வலையில் ஏற்றி வைக்க முடிவு செய்தேன். 2015 ல் இருந்து வலைப்பதிவில் எழுதத் துவங்கிய நான் இதுவரை 89 பதிவுகளை மட்டுமே பதிவேற்றியிருக்கிறேன். இனிமேல் நானும் புதுமையாக எழுத வேண்டும் எனும் முயற்சியில் இருந்தபோதுதான் இப்படி ஒன்றை நான் எழுதினால் என்ன என்ற கேள்வி முன்வந்து நின்றது. அந்தக் கேள்வியின் செயல்வடிவே இந்த நினைவோடைக் குறிப்புகள். 

நினைவோடைக் குறிப்புகள் எழுதும்போது சில வேண்டாத விடையங்களையும் சொல்லிவிட்டால் அதனால் ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால் என்ன செய்வது என தயங்கி நின்றபோது வள்ளுவனாரின் 

'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு'

எனும் இந்தக் குறளே என்னை எழுதத் துணிய வைத்தது. 

தமிழீழத்தின் வன்னிப் பெரும் நிலத்தின் வலைப்பாடு எனும் கடற்கரையிலிருந்து பின்னேரம் ஆறு மணியளவில் புற்பட்டு தமிழ்நாட்டின் தனுஷ்கோடி கடற்கரைக்கு காலையில் எட்டு மணியளவில் (கிட்டத்தட்ட 14 மணித்தியாலங்கள் நாம் இந்துமா சமுத்திரத்தில் பிரயாணித்திருந்தோம். ஏன் இவ்வளவு மணித்தியாலம் ஆனது என்பதை பின்னால் விரிவாக சொல்கிறேன்.) புலம்பெயர்ந்த 96 ல் எனக்கு வயது 12. நாளை தமிழீழம் மலரும் சுதந்திர தேசத்திற்கு நாம் விரைவில் திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கையோடு வந்து இங்கேயே கால் நூற்றாண்டைத் தொட்டுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. 

கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல் ஒன்றில் 'கவிதைக்குப் பொய் அழகு' என்ற போது என்னால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒரு கவிஞன் இறந்தகாலத்தை நிகழ்காலத்தில் காட்சிப்படுத்தவும், எதிர்காலத்தை நிகழ்காலத்தில் முன்னறிவிப்புச் செய்யும் அதி உன்னதமான படைப்பு மனம் வாய்க்கப் பெற்றவர்கள். அவர்கள் எப்படி பொய் அழகு எனலாம் என என் மனம் குமுறிக் கிடந்த அந்நாளில் எம் உணர்ச்சிப் பாவலன் காசி ஆனந்தன் அவர்களின் 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டில் அடிமை விலங்கு தெறிக்கும்' என்ற கவிதை வரிகள் எம் தேச விடுதலையின் முன் அனுமானத்தை கட்டியம் கூறுவதாக இருப்பதாக நண்பர்களோடு சிலாகிப்பேன். அதேபோல் சுப்ரமணிய பாரதியின் 'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்' என்ற கவிதைகளையும் அன்றைய நாளில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தபோது எனது முதல் கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதையில் தமிழர் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என புதிய ஏட்டினில் பாடல் சமைப்போம் என எழுதினேன். உணர்ச்சியின் வேகத்தில் எழுதப்படுகின்ற பாடல்கள் பொய்த்துப் போனதை 2009 களுக்குப் பிறகு உணர்ந்துகொண்டேன். நம்பிக்கை தகர்ந்துபோன நாட்கள் அவை. உப்புக் கடல் நீரேரிக்குள் மொத்தக் கனவினையும் புதைத்த மே நாளது. இப்போதுகூட சங்கப் புலவன் கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரிகளை உச்சரிக்க தகுதியற்றவர்களாக அகதி முகாமுக்குள் அடைபட்டு இருக்கிறோம். கவிதைக்குப் பொய் பேரழகுதான். வாழ்வோ பெருந் துயரம்.

(தொடரும்)

Tuesday, April 7, 2020

அப்பல்லோ

அப்பல்லோ - சுகன்யா ஞானசூரி யின் வாசிப்பிலிருந்து....

அண்டனூர் சுரா மூன்று நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்பு என குறுகிய காலத்திற்குள் பலப் பரிசுகளுக்கும் பாராட்டுக்கும் உரியவராகி வருகிறார். அப்பல்லோ இவரது மூன்றாவது நாவல்.

அப்பல்லோ என்றதும் கிரேக்கத்தின் கடவுளென நம்பப்படும் உண்மையின் கடவுளை சமகாலதினருக்கு நினைவுக்கு வராதபடிக்கு செய்ய சமகால நிகழ்வொன்று சாட்சியம் ஆகிப்போனது. தினம் ஒரு அறிக்கையும், அவலமான கூத்தும் நிகழ்ந்த இடம் அது. இங்கிருந்துதான் அண்டனூர் சுரா தன் கதையை துவக்குகிறார். ஆதி மருத்துவ குடிகளின் அழிவை சொல்ல ஹோமரின் காப்பியங்களின் கதாபாத்திரங்களை நாவலின் கதாபாத்திரங்களாக்கி ராஜா காலத்து கதையில் நம்மையெல்லாம் அழைத்துச் சென்றாலும் பல்வேறு நிகழ்வுகளை, வரலாற்று சம்பவங்களை கதைகளினூடாக வாசிப்பவர்களிடத்து கடத்துகிறார்.

ஆரிய திராவிட யுத்தம் இக்கதையில் பிரதானமாக இருக்கிறது. தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் மந்திர தந்திரங்களை பயன்படுத்தி மன்னனை ஆட்டுவிக்கும் மந்திரவாதிகள் மருத்துவ குடியை வதைத்து அழிக்கின்றனர். வெண்மணி படுகொலையையும், கூடவே ஈழத்தின் இறுதிப் படுகொலையையும் நினைவுபடுத்துகிறது.

பல்வேறு சம்பவங்களை சிறப்பான ராஜா காலத்து கதை வழி சொல்லும் சுராவுக்கு நன்றாக கதை சொல்ல வந்திருக்கிறது. காட்சிகளின் வர்ணனை சிறப்பாக இருக்கிறது. நாட்டார் வழக்குகளின் சொற்றொடர்களையும் நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். அதேவேளையில் மிகு புனைவு வாசிப்பவருக்கு அயர்ச்சியையோ அல்லது சிரிப்பையோ வரவழைக்கும். இந்நாவலிலும் அது போலான வேகத்தடைகள் இருக்கவே செய்கின்றன. கொங்கையும் பிருஷ்டம் மட்டுமே பெண் உடல் இல்லை. பெண் உடல் மீதான மிகு வர்ணனையும், ஆங்கில படப் பாணியில் பாயும் விலங்கைப் போல் அந்த மருத்துவன் காடுமேடெல்லாம் பாய்வதும், யுத்தம் முடிந்து இரண்டு மாதங்களின் பின்னும் ஒருவன் உயிரோடு இருப்பது போன்ற நிகழ்வுகள் சினிமாத்தனமாக இருக்கிறது.

மூன் மன்னனின் சோரியாசிஸ் நோயும், மருத்துவ குடிகள் மயிர் மழிக்கும் குடியாகி போனதன் பின்னுள்ள தந்திரங்களும் சூழ்ச்சிகளும், காதுகள் கால்களில் இருந்தால் அந்த அரசும் மக்களும் என்னாவார்கள்? அதன் பாரதூரம் எத்தகையது என்பதையும் அந்தக் காலே அம்மன்னனுக்கு எமனாய் அமைவதையும், காலை தொழுதவர்கள் ஆட்சிக் கட்டிலுக்கு வந்தால் என்ன ஆகும் என்பதையும், அன்று முதல் இன்று வரை மருத்துவ கனவை சிதைக்க கொண்டுவரும் திட்டங்களும், திருத்தங்களும், நீட்டின் கொடுமைகள் என கதையின் போக்கில் எள்ளலோடு சொல்லிச் செல்கிறார்.

"முக்கோணக் காதல் கதைபோல் இது முக்கோண அரசின் அரசியல் கதை".

அப்லாஸ் எனும் வாரிசின் பெயரின் ஊடாகவே நாம் அப்பல்லோவை கண்டடைகிறோம். இங்கு அப்பல்லோ மருத்துவக் குடில் அல்ல மருத்துவக் குடியின் எச்சம்.

சரித்திரப் புனைவை தொய்வின்றி பல்வேறு முடிச்சுகளை அவிழ்த்து எதார்த்தமாக வாசிப்பதற்கு தங்குதடையின்றி கதை சொல்வதில் கல்கி, சாண்டில்யன், அகிலன், பாலகுமாரன் வரிசையில் அண்டனூர் சுராவும் இடம் பெறுகிறார்.

சுரா இந்த நிலையோடு தேங்கி விடாமல் மென்மேலும் சிறந்த படைப்புகளைத் தர வேண்டும்.

கால்களற்ற மெனிலாஸை அந்த தாழிக்குள் புதைப்பதாக கனவு காணும் சிறுமி சிந்தி போல் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமான அந்த சந்தேகம் தீராமல் இருக்கிறது. உண்மையிலேயே அவரது கால் வெட்டி எடுக்கப்பட்டதா?

ஆசிரியர்: அண்டனூர் சுரா
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை: ₹245

Monday, March 16, 2020

பூமிப்பந்தின் நாஸ்டால்ஜியா மனம்

பூமிப்பந்தின் நாஸ்டால்ஜியா மனம்!
***************
வான்பாதைகள் நடைபாதைகள்
சனம் கூடும் பொதுவிடங்கள்
வெறிச்சோடிக் கிடக்கின்றன.
பொருளாதாரத்தின்
தேவைகளும் தேக்கங்களும்
இடத்திற்கொன்றாய் மாறுபட்டிருக்கிறது.
உற்பத்தியாளர் நுகர்வோர்க்கிடையில்
பெருத்த வெற்றிடம் ஒன்று இருக்கிறதுதானே?
வீசும் காற்றில் விசம் பரவட்டும் என
அறம் பாடிய தமிழ்க்கவியின் கூற்று
எதிரொலிக்கிறது என் செவிப்பறைக்குள்.
கவிகள் ஒரு தீர்க்கதரிசிகள்.
அபரிமிதமான ஆக்கமும் அழிப்பும்
நுண்ணிய ஒவ்வொன்றிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
அறிவார்ந்த சமூகத்தின் பெயர் சூட்டல்கள் அச்சுறுத்தலாம்
அச்சமே பெரும் மூலதனம்
அச்சப்படாதீர்கள்....
காலவெள்ளத்தில் அனைத்தும் நீர்த்துப்போகும்.
கரோனாவிற்கு
முன்பும் பல கொள்ளை நோய்களும்
பேரழிவுகளும் வந்தனதான்.
இனியும் வராதென்பதும் நிச்சயமில்லை
உலகத்தின் சமநிலைப் பேணல்
என சமாதானம் கூறிக்கொள்ளும்
அற்ப மனிதர்களோ
ஒன்றை விளங்கிகொள்வதேயில்லை.
நாஸ்டால்ஜியா மனம்
அனைத்துக்கும் பொதுவானதொன்று.
இந்தப் பூமிப்பந்து
பழைய இடத்தில் தன்னை
இருத்திப் பார்க்க எத்தனிக்கிறது.

- சுகன்யா ஞானசூரி
16/03/2020.

Sunday, February 2, 2020

தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்- ஓவியர் புகழேந்தி



2006 ல் முதல் பதிப்பு கண்டு, 2018ல் ஐந்தாம் பதிப்பாகவும் திருத்தப்பட்டும், விரிவுபடுத்தப்பட்டும் வந்திருக்கும் தொகுப்பு. ஒரு ஓவியன் தூரிகைகளால் தற்சமயம் இழந்து போன ஒரு தேசத்தை எழுத்தின்வழி ஆவணப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தில் இருந்து தமிழீழத்திற்குப் பயணப்பட்ட ஓவியர் தான் கண்டதையும் தன்னைக் கண்டதையும் தொகுப்பாக்கித் தந்திருப்பது பொய்மைகளற்ற நேரடிச் சாட்சியம்.

"ப்ராஜெக்ட் பேக்கன்" திட்டத்தின்படி 2009 ல் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ அரசாங்கத்தின் அத்தனை கூறுகளையும் 2004ல் முதன்முதலாகப் பயணப்படும் ஓவியர் புகழேந்தி அவர்கள் மீண்டும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஓவியம் பயிற்றுவிக்க செல்வதும் தமிழீழ நிலமெங்கும் ஓவியங்களை காட்சிப்படுத்துவதும், ஓவியங்களை பார்வையிட்ட போராளிகள், பொதுமக்கள், மாணவர்கள் எழுதிய குறிப்புகள் என ஒவ்வொரு ஊர்வாரியாக பதிவு செய்துள்ளார். இவர்களில் யாரும் உயிரோடு இருப்பார்களா? காணாமலாக்கப்பட்டவர்களுக்குள் இருப்பார்களா? என்பதை நினைக்கும்போது மனசு கனதியாகிறது. பெரும்பாலான போராளிகளும், தளபதிகளும், இல்லை என மனம் நம்ப மறுக்கிறது.

1943ல் மா வோசேதுங்கின் சென்சேனைப்படை யேனான் பகுதியையும், 1974ல் எரித்திரியா விடுதலை இயக்கம் அஸ்மாறா எனும் தலைநகரையும் இழந்து பின் மீட்டெடுத்த வரலாறு போலத்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் யாழ் மண்ணை இழந்து பின்னர் படிப்படியாக வெற்றிகொண்டு வரும் சந்தர்ப்பத்தில் சமாதானத்தின் பெயரால் வேவு பார்கப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்டு நந்திக்கடலில் தோற்கடிக்கப்பட்டார்கள். தோற்கடிப்பின் பின்னால் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் மட்டுமல்லாது எமது மக்களின் சாதிய மனோபாவமும், பிறர் பிள்ளைகள் களமாட தம்பிள்ளைகள் காப்பாற்றும் முகமாக மக்கள் மனம் மாறியதன் பின்னணிகளும் முக்கிய பங்காற்றியுள்ளன. நாம் நிலமிழந்து, நாடிழந்து ஏதிலிகளாக இருக்கும் இந்நேரத்தில் தனித்துவமான வரலாறிழந்து போய்விடும் துயரார்ந்த சூழலில்தான் அரசமைப்புகளும் சமூகச் சூழலும் நிறுத்தியிருக்கிறது.

விழிநீரைச் சுண்டிவிடும் விரலாக ஓவியர் புகழேந்தி ஐயா அவர்கள் தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும் நூலில் தமிழீழ அரசாங்கத்தின் அத்தனை துறைகளையும் பற்றி துறைசார்ந்தவர்களோடு நேரடியாக உரையாடி அவற்றைத் தொகுத்திருக்கிறார். ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாகச் சென்று அவற்றின் களநிலவரங்களையும், நிலக்காட்சிகளையும், வளங்களையும் காட்சிப்படுத்தியுள்ளார். வரலாற்றுப் புரட்டுகளுக்கு இடமளிக்காதபடி தேதி, மாதம், ஆண்டு விபரங்களோடு பல்வேறு போராட்டங்களையும், நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தியுள்ளார். மணலாறு விஜயனின் "மெளனப் புதைக்கழிக்குள்"  நூலை ஓவியர் வாசிப்பதனூடாகவும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பல்வேறு படுகொலைகளை வெளியுலகிற்கு காட்சிப்படுத்துகிறார். பெரும்பாலும் பொதுவெளிக்கு வராத படுகொலைகள் பலவற்றை இந்நூல் வழி அறியத்தருகிறார். நாவலுக்குள்ளும் செல்லாமல், பயணக் கட்டுரைக்குள்ளும் செல்லாமல் புதிய வடிவொன்றில் இந்நூல் வந்துள்ளது.

ஒவ்வொன்றையும் நான் இங்கே விவரித்து எழுதிவிட்டால் அதுவொரு நூலாகிவிடும் அபாயமிருப்பதால் சுருக்கமாக எழுதிவிடுகிறேன். நான் எழுதுவதைக் காட்டிலும் ஒவ்வொருவரும் இந்த நூலை வாசித்தால் மட்டுமே உங்களால் நிதர்சனத்தினை தரிசிக்க முடியும். இப்படியான ஒரு நூல் எம்மிடம் இருக்கிறதா என்ற கேள்விக்கு கேள்வியோடு நிற்காமல் பதிலளிக்கும் முகமாக ஆவணமாக்கி அனைவர் முன்னும் தந்திருக்கிறார்.

எப்போதும் அலைபேசியில் உரையாடும்போது ஓவியர் புகழேந்தி ஐயா அவர்கள் ஒன்றைச் சொல்லி மனம் வெதும்புவார். எந்த தமிழகம் விடுதலை வேட்கையோடு செயல்பட்ட புலிகளை ஆதரித்ததோ அதே தமிழகத்தில் புலிகளை கொச்சைப்படுத்தி எழுத களம் அமைத்துத் தருகிறார்கள். இது தெரியாமலே பலர் இந்த புதைக்குழிக்குள் வீழ்ந்துகிடக்கின்றனர். ஆயிரம் கைக்கொண்டு தடுத்தாலும் சூரியனை மறைத்திடத்தான் முடியுமா? என்பார். உண்மைதானே? சமீபத்தில் நடந்துமுடிந்த சென்னை புத்தகச் சந்தையில் எதிரும் புதிருமாக எழுதிவந்த ஈழ எழுத்தாளர்கள் ஒன்றாய் நின்றிருந்த காட்சியை காண நேர்ந்தது. இதுவொரு நல்ல முன்னேற்றம்தான். இவர்கள் ஒன்றாகியது கண்டு கிண்டலாகவும், தூற்றியும் எழுதியவர்களையும் காணமுடிந்தது. "நாம் ஒன்றாதல் கண்டு எம் பகைவர் எங்கோ மறைந்தனர்" என்ற கவிஞரின் வரிகளே நினைவிற்கு  வருகிறது.

வெற்றிபெற்றவர்களே வரலாற்றை எழுதுகிறார்கள். அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக தோற்கடிக்கப்பட்டவர்களை மேலும் காயப்படுத்துவதாகவே அமைகிறது. தோற்கடிக்கப்பட்டோர் எழுதும் வரலாறுகள் எப்போதும் அனைவருக்குமானதாக அமையும். நாம் நம் வரலாறுகளை மீட்டெடுக்க இதுபோன்ற ஆவணங்கள் இன்றியமையாத ஒன்று. ஈழவரலாற்றில் புலிகளின் தமிழீழ அரசின் வரலாற்றை அறிந்துகொள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய அவசியமான நூல் இதுவென்பேன்.

- சுகன்யா ஞானசூரி
02/02/2020

பதிப்பகம்: தோழமை
விலை: 400.

Monday, January 20, 2020

சிறீலங்காவின் தேசியத் தற்கொலை - பிரமிள்

இதுவொரு தாமதமான வாசிப்புதான். ஆனால் பிரமிளை கவிஞனாக, கறாரான விமர்சகனாக அறிந்திருந்த எனக்கு இந்த நூலை வாசித்த பிறகு சிறந்த சமூக நோக்குள்ள படைப்பாளனாகவும், கட்டுரையாளனாகவும் எனக்குள் அறிமுகமாகியுள்ளார். தமிழ்த்தேசியம், திராவிடம், மார்க்சியம் போன்ற பார்வைகளிலிருந்து இலங்கையின் தமிழ்-சிங்கள இனமுறுகல் எவ்வாறு பெரும் பகையாக மாறியது, அவற்றிற்கு காரணியானவர்கள் யார்? அதில் குளிர்காய்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என 1984 வரையான காலகட்டம் வரை சட்டகப்படுத்தியிருக்கிறார்.

இலங்கையின் பூர்வகுடிகள் யார் என்பதில் துவங்கி வரலாற்று ரீதியாக நிறுவுவதும், இலங்கைத் தமிழர்-மலையகத் தமிழர்-சிங்களவர் வாக்குவங்கிகள், இவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் தோற்றுவிக்கப்பட்டதன் காரண காரியங்களும், விஜயனின் வருகையில் ஆரம்பித்து ஈழ ஆயுதப் போராளிகள் உருவாகிய காலங்களுக்கிடையிலான காலகட்டத்தை சிறிய நூலுக்குள் இரத்தினச் சுருக்கமாக சொல்லியிருக்கிறார்.

1984 க்கு பிறகு நூல் விரிவாக்கம் கண்டதா தெரியவில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் வரைமட்டுமல்லாது இன்றும் புத்த பிட்சுகளுக்கு அச்சப்பட்டே சிங்கள ஆட்சியாளர்கள் தமிழின விரோதப் போக்கை கைக்கொள்கின்றனர்.

மதம் மக்களுக்கான அரசியலை சீரழிக்கும் ஒரு லாகிரி.

- சுகன்யா ஞானசூரி
20/01/2020

Sunday, January 19, 2020

துரோகங்களின் சதிராட்டம்

புள்ளிகள் கரைந்தபொழுது - ஆதிலட்சுமி சிவக்குமார்

துரோகங்களின் சதிராட்டம்.
*****************************

நம்பிக்கைத் துரோகங்களால் வீழ்த்தப்படும்போது அது தரும் வாதை வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஒன்று. 2009ல் எமது தேசம் வீழ்த்தப்பட்டது போது அடைந்த அதே வேதனையும், மனவுளைவும் 2019 முடிவில் எனது தொழிலில் நான் வீழ்த்தப்பட்ட போதும் உணர முடிந்தது. தீ விபத்து ஏற்பட்ட அந்த இரவில் (எனக்கு மகவு பிறந்து ஒரு வயதாக இருக்கும் இரு தினங்களுக்கு முன்னர்) உயிரைக் துச்சமாக நினைத்து நிறுவனத்தைக் காப்பாற்றி எனது தனித்துவத்தை, தரத்தை நிரூபித்தாலும் அந்த தீ எனது உடலில் கொடுத்த எரிச்சலைக் காட்டிலும் நம்பிக்கைத் துரோகத் தீ மிகவும் எரிச்சலாக இருக்கிறது. சிறியவர்கள் பெரியவர்கள் என்கிற பாகுபாடு மட்டும் துரோகமிழைப்பவர்களில் இருப்பதே இல்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. தற்கொலை ஒரு கோழைத்தனம் என நண்பர்களுக்கு அறிவுரை சொன்னாலும் இப்படியான சூழலில் அது எப்படி எழுகிறது என்பதை அறியும் போதுதான் ஊருக்கு மட்டும்தானா உன் உபதேசம் என மனம் அதைத் தவிர்க்கச் செய்தது வாசிப்பு என்பதைக் காட்டிலும் அன்பான ஆதரவான வார்த்தைகள் அவசியம் என்பதை உணர முடிந்தது. அப்படியான அன்போடும், ஆதரவோடும், தன்னம்பிக்கையையும் எனக்குக் கூறிய முகநூல் அன்புகளுக்கும், உள்பெட்டியில் உரையாடிய நட்புகளுக்கும், அலைபேசிய அரசெழிலன் ஐயா, ஓவியர் புகழேந்தி ஐயா போன்றவர்களுக்கும் பேரன்பும் நன்றிகளும். என்ன செய்வது அனைத்தையும் கடந்துதானே செல்ல வேண்டும். இதுவும் கடந்து போகும் என்பது உண்மைதான்.
*****************************

எந்த ஒன்றையும் வாசிக்க இயலாத மனநிலையில் இருந்த என்னிடம் ஆதிலட்சுமி சிவக்குமார் அவர்கள் எழுதிய "புள்ளிகள் கரைந்தபொழுது" நாவலை அனுப்பி இதை வாசிங்க தம்பி உங்கட மனத்துயர் இதன் கீழ் சிறு புள்ளியாகும் என்றார் ஓவியர் புகழேந்தி ஐயா. வாசித்து முடித்த பிறகு இது எவ்வளவு உண்மை என்பதை உணர்ந்தேன்.

புள்ளிகள் கரைந்தபொழுது நாவல் 2009 ல் தோற்கடிக்கப்பட்ட ஈழத் தமிழினத்தின் பாடுகளை செல்வராசா எனும் சாமான்ய கதாபாத்திரத்தினூடாக செல்வபுரத்தில் துவங்கி நந்திக்கடலில் மெளனிப்பது வரையான காலவெளிக்குள் நிகழ்ந்த அவலங்களை இரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்துகிறது.

செல்வராசாவை நம்பி வழிகளில் இணையும் இரண்டு மூன்று குடும்பங்களையும் உள்ளடக்கி ஒவ்வொரு ஊராக இடம்பெயர்வதன் வலிகளையும் வேதனைகளையும் கண்முன்னே காணும் அவலங்களையும் சுமந்துகொண்டு நந்திக்கடலில் இராணுவப் பகுதிக்குள் தன்னை நம்பி வந்தவர்களையும் சிக்க வைத்துவிட்டோமோ எனும் கையறு நிலையில் நிற்கும் செல்வராசா ஒரு குறியீடாகவே எனக்குத் தோன்றுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து 1995 ல் வன்னிக்கு இடம்பெயர்ந்த செல்வராசா கிளிநொச்சியிலிருந்து சற்றுத் தொலைவில் கண்டி வீதியில் செல்வபுரத்தில் ஒரு வீட்டை கடன் பட்டு கட்டிமுடித்து வாழ்ந்த நிலையில் மீண்டுமொரு இடப்பெயர்வு மனச்சிதைவுகளை ஏற்படுத்துகிறது. நாவலின் ஆரம்பத்தில் வருகின்ற பூவரச மரத்தின் காட்சிகளும் வர்ணனைகளும் பெருமாள் முருகனின் மாதொருபாகனை நினைவுபடுத்தினாலும் இரண்டும் வேறு வேறு களம்.

விமானங்களின் வகைகளையும், குண்டுகளின் வகைகளையும், வகைதொகை இல்லாமல் அழிக்கப்பட்ட சனங்களையும், சிதறிக்கிடந்த உடலங்கள், அழக்கூட நேரமின்றி சடலங்களை போட்டது போட்டபடியே விட்டுவிட்டு ஓடும் மனிதர்கள், இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்குள் நிலவுகின்ற ஒற்றுமைகள், வேற்றுமைகள், பொருள் இழப்பு, இடப்பற்றாக்குறை, அரசியல் பழிதீர்ப்புகள், சமாதான காலம் ஏற்படுத்திய மனமாற்றம், அரசியல்வாதிகளின் சுகபோக வாழ்வு, காட்டிக்கொடுத்தல், துரோகத்தின் சதிராட்டம் என மனசை கனதியாக்கும்படியாகச் செய்கிறது. இடையிடையே கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலாமல் மூடி வைத்துவிட்டு மனதைக் திடப்படுத்திக்கொண்டே வாசிப்பை தொடர முடிந்தது என்றால் மிகையில்லை.

"நான் அழியலாம்; நாங்கள் அழியக்கூடாது" என்ற கூற்றுக்கமைய ஒரு வரலாற்றுச் சம்பவத்துக்குள் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை கூறிச் செல்வதினூடாக அடுத்த தலைமுறைக்கு எமது வாழ்வின் துன்பியல் நிகழ்வுகளை அறியத்தந்து ஆவணமாக்கியிருக்கிறார். இந்நாவலை ஒவ்வொருவரும் தவறாமல் வாசிக்க வேண்டும். ஏனெனில் இதுவொரு நேரடிச் சாட்சியம்.

- சுகன்யா ஞானசூரி
19/01/2020.

ஆசிரியர்: ஆதிலட்சுமி சிவக்குமார்
பதிப்பகம்: தோழமை
விலை: ₹250.