Tuesday, April 28, 2020

முன் '96' பின் (நினைவோடைக் குறிப்புகள்)

முன் '96' பின் 
(நினைவோடைக் குறிப்புகள்)



பகுதி-1

"96" எனும் திரைப்படம் பலருக்கும் ஒரு நினைவினை ஆழ்மனதிலிருந்து கிளறிவிட்டு பல ரைட்டப்புகளை எழுத வைத்திருக்கிறது. சிலரது ரைட்டப் சிரிப்பாக இருந்தது. சிலரது ஒருதலை ராகமாக இருந்தது. 96 ஐ முன்வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரைட்டப் முகநூல், டிவிட்டர் என எழுதியதை வாசித்தபோது எனக்கும் சிந்தையில் ஒரு பொறி தட்டியது. 96 படம் அல்ல அதாவது 1996 எனது வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திருப்புமுனையாக அமைந்த ஆண்டு. ஒரு தேசத்திலிருந்து இன்னொரு தேசத்திற்கு புலம்பெயர்ந்த ஆண்டு. அதனால்தான் நான் இந்த 96ஐ 96 க்கு முன் பின் என இரண்டாக பிரித்து எனது நினைவுக் குறிப்புகளை எழுதினால் என்ன என்று தோன்றியது. 

நினைவுக் குறிப்புகள் எழுதுவதற்கு நீ நிறைய அனுபவங்களை பெற்றுவிட்ட வயோதிபனா என என் உள்மனம் என்னை நக்கலாக வினவினாலும் கொரோனாவின் கொடுங்காலத்தில் நாளை என்பது நிச்சயமற்று இருப்பதால் கிடைத்த அனுபவங்களை குறிப்புகளாக தொகுத்து எனது வலையில் ஏற்றி வைக்க முடிவு செய்தேன். 2015 ல் இருந்து வலைப்பதிவில் எழுதத் துவங்கிய நான் இதுவரை 89 பதிவுகளை மட்டுமே பதிவேற்றியிருக்கிறேன். இனிமேல் நானும் புதுமையாக எழுத வேண்டும் எனும் முயற்சியில் இருந்தபோதுதான் இப்படி ஒன்றை நான் எழுதினால் என்ன என்ற கேள்வி முன்வந்து நின்றது. அந்தக் கேள்வியின் செயல்வடிவே இந்த நினைவோடைக் குறிப்புகள். 

நினைவோடைக் குறிப்புகள் எழுதும்போது சில வேண்டாத விடையங்களையும் சொல்லிவிட்டால் அதனால் ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால் என்ன செய்வது என தயங்கி நின்றபோது வள்ளுவனாரின் 

'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு'

எனும் இந்தக் குறளே என்னை எழுதத் துணிய வைத்தது. 

தமிழீழத்தின் வன்னிப் பெரும் நிலத்தின் வலைப்பாடு எனும் கடற்கரையிலிருந்து பின்னேரம் ஆறு மணியளவில் புற்பட்டு தமிழ்நாட்டின் தனுஷ்கோடி கடற்கரைக்கு காலையில் எட்டு மணியளவில் (கிட்டத்தட்ட 14 மணித்தியாலங்கள் நாம் இந்துமா சமுத்திரத்தில் பிரயாணித்திருந்தோம். ஏன் இவ்வளவு மணித்தியாலம் ஆனது என்பதை பின்னால் விரிவாக சொல்கிறேன்.) புலம்பெயர்ந்த 96 ல் எனக்கு வயது 12. நாளை தமிழீழம் மலரும் சுதந்திர தேசத்திற்கு நாம் விரைவில் திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கையோடு வந்து இங்கேயே கால் நூற்றாண்டைத் தொட்டுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. 

கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல் ஒன்றில் 'கவிதைக்குப் பொய் அழகு' என்ற போது என்னால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒரு கவிஞன் இறந்தகாலத்தை நிகழ்காலத்தில் காட்சிப்படுத்தவும், எதிர்காலத்தை நிகழ்காலத்தில் முன்னறிவிப்புச் செய்யும் அதி உன்னதமான படைப்பு மனம் வாய்க்கப் பெற்றவர்கள். அவர்கள் எப்படி பொய் அழகு எனலாம் என என் மனம் குமுறிக் கிடந்த அந்நாளில் எம் உணர்ச்சிப் பாவலன் காசி ஆனந்தன் அவர்களின் 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டில் அடிமை விலங்கு தெறிக்கும்' என்ற கவிதை வரிகள் எம் தேச விடுதலையின் முன் அனுமானத்தை கட்டியம் கூறுவதாக இருப்பதாக நண்பர்களோடு சிலாகிப்பேன். அதேபோல் சுப்ரமணிய பாரதியின் 'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்' என்ற கவிதைகளையும் அன்றைய நாளில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தபோது எனது முதல் கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதையில் தமிழர் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என புதிய ஏட்டினில் பாடல் சமைப்போம் என எழுதினேன். உணர்ச்சியின் வேகத்தில் எழுதப்படுகின்ற பாடல்கள் பொய்த்துப் போனதை 2009 களுக்குப் பிறகு உணர்ந்துகொண்டேன். நம்பிக்கை தகர்ந்துபோன நாட்கள் அவை. உப்புக் கடல் நீரேரிக்குள் மொத்தக் கனவினையும் புதைத்த மே நாளது. இப்போதுகூட சங்கப் புலவன் கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரிகளை உச்சரிக்க தகுதியற்றவர்களாக அகதி முகாமுக்குள் அடைபட்டு இருக்கிறோம். கவிதைக்குப் பொய் பேரழகுதான். வாழ்வோ பெருந் துயரம்.

(தொடரும்)

6 comments:

  1. உங்கள் நினைவுகளை பதிவு செய்வது நல்ல விஷயம். உங்கள் ஊரிலிருந்து இங்கே வந்து சேர்ந்தது கடினமான ஒன்று. தொடருங்கள் உங்கள் நினைவுகளை.

    ReplyDelete
  2. கடைசி வரிகள் மனதை கனக்க வைத்துவிட்டன. இவ்வாறான பதிவுகள் நம்மை திரும்பிப்பார்க்கவும், நம் மனச்சுமையைக் குறைக்கவும் உதவும். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா. நிச்சயம் எழுதுகிறேன்.

      Delete
  3. பல நினைவுகளை பதிவு செய்வதற்கு இது தகுந்த நேரமே...

    வீணான மனக்குழப்பம் குறையும்...

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete