Sunday, June 11, 2023

செயற்கை நுண்ணறிவு (AI)


 செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence)

- சுகன்யா ஞானசூரி.

உலகம் முழுவதும் இன்று உச்சரிக்கும் ஒற்றைச் சொல் "ஏய்" (AI). தமிழில் "ஏய்" என யாரையேனும் நாம் விழித்தால் சற்று பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். அப்படியாகத்தான் இந்த ஒற்றைச் சொல் பலதரப்பட்டவர்களிடம் பல்வேறு விளைவுகளையும், விவாதங்களையும் சமீக காலமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் வேகமான வளர்ச்சியில் சாட் ஜிபிடி (ChatGPT) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் படுபயங்கரமாக கோலோச்சிக் கொண்டிருக்கிறது. 

செயற்கை நுண்ணறிவுக்கான விதை அதாவது இதுகுறித்த விஞ்ஞானச் செயல்பாடு 1960ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது எலிசா (ELIZA) என்ற பெயரோடு இயங்கத் துவங்கியிருக்கிறது. பின்னர் இதனை அடியொற்றி அலைஸ் (ALICE) எனும் செய்கை நுண்ணறிவுச் இயங்குதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்பிறகு அமேசானின் அலெக்ஸா (Alexa) உலகமே அறிந்த ஒன்றுதான். 

இப்போது பல்வேறு நிறுவனங்களின் தொழில்நுட்ப முதலாளிகளின் சந்தைக்கான போட்டியை இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் திறந்திருக்கிறது என்பதே எதார்த்தம். இன்றைக்கு இதன் பயன்பாட்டின் தேவைகளை விடவும் அச்சுறுத்தும் விதமான தேவையற்ற செயல்பாடுகளை விரைவாக்கிக் கொண்டிருக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவும் இன்னொன்றைக் கண்டடைய வேண்டியிருக்கிறது. கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பல்வேறு ஒளிப்படம் எடுக்கும் கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்த போது அதைக்கொண்டு மார்பிங் செய்து பலரது வாழ்வைச் சீரழித்த, அல்லது பணம் பறிக்க தவறான வழியில் பயன்படுத்தப்பட்டது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டியிருக்கிறது. அப்படியாகவே இன்று இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு குறைபாடுகளோடு தவறான பயன்பாடுகளுக்கு துணை போகிறது. 

காலமாற்றத்தின் வளர்ச்சிப் போக்கில் தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. இத் தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு மனிதர்களின் வேலை வாய்ப்புகளையும் பறிக்கிறது. இனி வருங்காலங்களில் மருத்துவ உலகம் இதைக்காட்டிலும் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மேம்பாடடையும் என எதிர்பார்க்கலாம். இவற்றை எதிர்த்து வேலைவாய்ப்புகளை தக்கவைக்கவும் நாம் போராடித்தான் ஆகவேண்டும். 

நாம் பாதி வாழ்வைக் கடந்து விட்டோம். நம் குழந்தைகளுக்கு இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்த இருக்கும் சவால்களையும், அவற்றிற்கு ஈடுகொடுத்து  வாழ்வை வெற்றிகரமாக்க இப்போதே கற்றுக் கொடுக்கத் தயாராக வேண்டும். 

1960 களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டது என்றாலும் இதற்கு மூலமாக இருந்தது எழுத்தாளர்களின் தீராத புதிய வேட்கைதான். பல்வேறு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு யாரோ ஒரு கவிஞர், எழுத்தாளர் உதிர்த்துச் சென்ற சொற்களே காரணிகளாகி இருக்கின்றன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் அப்பலோனியஸ் ரோட்ஸ் எழுதிய காவியமும், கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள் தொகுப்பின் சிட்டி ஆஃப் ப்ரேஸ் எனும் கதையும் இன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்துவரக் காரணியாகி இருக்கிறது என்பதை உங்களால் நம்பமுடியவில்லைதானே? ஆனால் அதுதான் உண்மை. படைப்பாளிகள் ஒரு தீர்க்கரிசிகள்தான். 

கேரளாவில் இருந்து வெளியாகும் மனோரமாவின் குழந்தைகளுக்கான இதழில் செயற்கை நுண்ணறிவு குறித்து ஆரம்பம் முதல் தற்போது வரை பல்வேறு கேள்விகளுக்கு விடையளிப்பதோடு நல்லவிதமாக எடுத்தியம்புகிறது. தமிழில் உள்ளதா தெரியவில்லை. முழுக்க முழுக்க எளிமையான ஆங்கிலத்தில்தான் உள்ளது. பெரியவர்களாகிய நாமும் வாசிப்பது நல்லது. குழந்தைகளோடு உரையாடுவதற்கும், தொழில்நுட்பத்தின் சாதக பாதகங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும் இது உதவுகிறது. 

விலை: ₹45.

No comments:

Post a Comment