Friday, August 6, 2021

நாடிலி - எழுத்தாளர் வாசு முருகவேல் பார்வையில்



நாடிலி - சுகன்யா ஞானசூரி
-

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்
என் பாதம் பதித்து 
நடக்கும் 
இடத்தில் மட்டும் 
நிழல் தேடி
என்னோடு அலைந்து 
எரிகிகிறது
ஒருபிடி நிலம்

கவிஞர் பிரமிளின் இந்தக் கவிதையைத்தான் என்னுடைய "புத்திரன்" நாவலின் தொடக்கத்தில் பதிவு செய்திருந்தேன். கவிஞர் சுகன்யா ஞானசூரி தன்னுடைய "நாடிலி" கவிதைத் தொகுப்பின் முன்னுரையை அதே பிரமிளின் கவிதையுடன்தான் தொடங்குகிறார். நாங்கள் அகதிகளாக அலையும் காலம் முடிவற்று நீண்டு கொண்டே செல்கிறது ஒரு பிடி நிலம் தேடி. அகதிகள் என்ற வார்த்தையிலும் பல அரசியல் இருக்கிறது. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் "அகதிகள்" என்ற அடையாளத்துடனும் ஒரு அணி பங்கேற்கிறது. அதில் ஏன் ஈழத்தமிழர்கள் இல்லை என்று தமிழக நண்பர் ஒருவர் என்னிடம் கேள்வி எழுப்பி இருந்தார். உலகெங்கும் ஈழத்தமிழர் பரந்து வாழ்வதால் எல்லோரும் அகதிகள் என்ற அளவில் அவருடைய புரிதல் இருக்கிறது. தாய் நிலத்தை பிரிந்த வலி என்பது அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால், ஈழத்தவர் ஒவ்வொருவரின் நிலையும் ஒன்றல்லவே. பெரும்பாலான ஈழத்தமிழர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளில் குடியுரிமையைப் பெற்று விட்டார்கள். அகதியாக வந்து இறங்கியது முதல் இந்த நிமிடம் வரை அகதியாகவே வாழ்கிறவர்கள் என்றால் இந்திய நிலத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் மட்டும் தான். அதிலும் முகாமுக்கு உள்ளும் - வெளியிலும் கூட அன்றாட சிக்கல்கள் மாறுபடுகின்றன. பாரிசிலும், லண்டனிலும், ரொரன்டோவிலும் இருந்து எழுத்துவது போலல்ல ஒருவன் தமிழகத்தில் அகதியாக இருந்து எழுதுவதும் / குரல் கொடுப்பதும். அகதி நீ அரசியல் பேசாதீர். அம்மணமாக அடித்து துரத்த வேண்டும். இப்படி எத்தனை வசவுகள். கம்யூனிஸ்ட் பெரியாரிஸ்ட் என்று எத்தனை இஷங்கள் கழுத்தை நெரிக்கின்றன. ஈழத்தமிழன் தலை விதி அப்படி !.

இன்னும் இருக்கிறது . இன்னும் நிறையவே இருக்கிறது. அகதியாக இறக்கும்  வரையிலும் எழுதமுடியாதவை நிறைய இருக்கிறது.
-

அகதிகள் வீடடைதல்

புழுதிகள் அடங்கி வெப்பம் தணியும்
கோடையின் இரவுகளைத்தான்
வரவேற்று மகிழ்கிறோம்
தார் சீற்றின் கீழே
அடுப்பின் வெக்கைக்குள்
வெதும்பிய குரல்கள் பேசிக்கொண்டிருக்கின்றன
இதோ
மரத்தினடியில்தான் கோடையின் பகல்கள்
சீட்டாட்டமாகவும்
விரல் சுண்டும் கேரம் போர்டாகவும்
ஊர் பேச்சோடு நகர்ந்தபடி இருக்கிறது சூரியன்
இதற்காகவே நாங்கள் மரங்களை வளர்த்தோம் 
உங்களுக்கு 
அவர்களோடு உறவென்ன இருக்கப்போகிறது தெரியாது
கால் நூற்றாண்டு அகதி வாழ்வில்
ஆஸ்பெட்டாஷ் சீற்றுக்கு மாறியிருக்கிறது
பத்துக்குப் பத்து என்பதொரு கணித சூத்திரம்
இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்
கல்லறையின் அளவை
அந்திக்கருக்கலில் விடைபெற்றுச் செல்லும்
சூரியனைப் போல் மெல்ல விடைபெறுகிறோம்
மரங்களை விட்டு
வீடுகளுக்குள் வெளிச்சம் பரவுகிறது
மண்ணெண்ணெய்க் குப்பி விளக்கிலிருந்து
குண்டு பல்புக்கு மாறிவிட்டோம்
புழுக்கத்தின் நாற்றம் மிகக் கொடியது
இரவுகளை
அடக்கம் செய்யவே விரும்புகிறோம்
கோடையில் பெய்யும் 
பனியின் வெம்மையில்
குளிர் மெல்லப் பரவுகிறது
போர்த்தி உறங்குவதற்குள் விடியல் துவங்கிவிடுகிறது
மீண்டும் மரங்களோடு உறவாடுதலும்
அகதிகள் வீடடைவதும் தொடர்கதையாகிறது
மறந்துவிட்டேன்
நாளை வந்து கையெப்பம் இட்டுச் செல்லும்படி ஆணை

-

வாழ்த்துகள் Suganya Gnanasoory  🖤

 

1 comment: