Tuesday, September 14, 2021

நாடிலியின் தணிக்கைக்குப் பிறகான புதுகை ஆளுமைகளின் சந்திப்பு

 



அகதிகள் முகாமில் தணிக்கை தொடர்பாக இன்று புதுக்கோட்டை சென்றிருந்தேன். ஏற்கனவே இரண்டு முறை அழைக்கப்பட்டபோது பணியிடத்தில் விடுப்பு எடுக்க முடியாத நிலை. ஒருவழியாக மதியத்திற்கு மேல் கடமையை நிறைவேற்றி தற்காலிகமாக தப்பித்திருந்தாலும் அடுத்தடுத்த மாதங்களிலும் இத்துயர் தொடரத்தான் செய்யும். ஆனாலும் வாழ்ந்துதானே ஆகவேண்டும். 



கிடைத்த சொற்ப நேரங்களை வீணடிக்காமல் புதுக்கோட்டையின் இரு ஆளுமைகளைச் சந்திக்க முடிந்தது எல்லாத் துயரங்களையும் போக்கி சற்று இளைப்பாறுதலைத் தந்தது. 



1999ல் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது புதுக்கோட்டை ஐடியல் டியூசன் சென்டர் ஏற்பாடு செய்திருந்த கவிதைப் பட்டறையில் கவிதை என்றால் என்ன, எவ்வாறு எழுதலாம் என்று வகுப்பெடுதபோதும், பிறகு 2004ல் இளங்கலை அறிவியல் படிக்கையில் ஆலங்குடியில் ஒரே மேடையில் கவியரங்கம் செய்தபோதும், இன்று பல்வேறு வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றரை மணித்தியாலம் இலக்கியம், சினிமா, அரசியல், கல்விப் புலம் என பல்வேறு விடையங்களை உரையாடியபோதும் அந்த காந்தக் குரல் ஒன்றாகவே இருக்கிறது. கவிஞர் தங்க மூர்த்தி ஐயாவின் அந்தக் குரலுக்கு நான் பரம ரசிகன். இன்று #நாடிலி கவிதைத் தொகுப்பினை வழங்கியபோது மாணவரின் வெற்றியைக் கொண்டாடும் ஆசிரியரின் முகமலர்ச்சியை தரிசித்தேன் என்றே சொல்லவேண்டும். 


கவிஞர் வைகறை அண்ணனால் அறிமுகமாகிய வீதி கலை இலக்கிய நிகழ்வில் புன்னகை பூத்த முகத்துடன் அன்போடு கவனித்த தேவதா தமிழ் (மு.கீதா) அம்மா அதே மாறாத புன்னகையோடு தேநீரும், ரொட்டியும் வழங்கி வீதி கூட்டத்தில் மீண்டும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். வீதி நண்பர்களுக்கான பிரதிகளை அம்மா அவர்களிடம் தந்துவிட்டு வந்தேன். பிறிதொரு நாளில் இன்னும் முக்கியமானவர்களையும் சந்திக்க வேண்டும். காலமும் நேரமும் கூடிவரட்டும். அதுவரை காத்திரு மனமே என என்னை நானே சமாதானம் செய்துகொள்கிறேன். 


- சுகன்யா ஞானசூரி

13/09/2021.

2 comments:

  1. சிறந்த ஆளுமைகள்
    அருமையான சந்திப்பு
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இனிய சந்திப்பு. வாழ்த்துகள்.

    ReplyDelete