Saturday, July 24, 2021

அரூபா - கோ. கலியமூர்த்தி


 அரூபா - கோ. கலியமூர்த்தி

ஒரு பிரதி முன்வைக்கும் கருத்துகளை நாம் படைப்பாளரின் அந்தரங்கத்தோடு ஒப்பிட்டு அலசுவது படைப்புக்கு நாம் செய்யும் துரோகம். பிரதி என்ன சொல்ல வருகிறது என்பதை மட்டுமே நாம் உற்று நோக்க வேண்டும். ஒரு பெண் காதல், காமம் குறித்து ஒரு பிரதியை முன்வைத்த பிறகு ஒருவேளை இப்படித்தான் இருப்பாரோ? அப்படித்தான் இருப்பாரோ என்ற எண்ணங்களால் துளைத்தெடுக்கும் துயரம் தமிழ் இலக்கிய வெளியில் இன்னும் தொட்டுத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் ஆண் படைப்பாளி முன்வைக்கும் பிரதியை இப்படியெல்லாம் துளைத்தெடுப்பதில்லை. பெண் என்பவள் இப்போதும் போகத்துக்கானவள் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு இது. 


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் துணைத் தலைவரும், பேச்சாளரும், கவிஞருமான அன்புத் தோழர் கோ. கலியமூர்த்தி அவர்களின் "அரூபா" மானசீகமான அன்புள்ளம் கொண்ட அனைவருக்குமானவள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வந்தவராகவும், தங்கிச் சென்றவராகவும், அல்லது நிரந்தரமாக தங்கியவராகவும் அரூபாக்கள் இருக்கலாம். அரூபாக்கள் இடத்தில் அரூபன்களை பெண்கள் பொருத்திக் கொண்டு கவிதைக்குள் உள்நுழைவதில் கடினமில்லை. 


தோழர் கோ. கலியமூர்த்தி அவர்களின் அரூபா ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விசையங்களை மறைபொருளாக பேசுகிறார். அல்லது கவிஞர் அரூபமாகிவிடுகிறார். காதலும், மழையும் அரூபாவின் உலகத்தில் அதிகமாகப் பொழிகிறது. ஐந்திணைகளிலும் வெவ்வேறு வகையாக மழை பொழிவதை காட்சியாக்கியுள்ளார். பாரதி கண்ணம்மா வை தன் காதலியாக்கிப் பாடியுள்ளதைப் போல், ஆண்டாள் தன் பாசுரங்களில் திருமாலை அரூபமாக்கி பாடியதுபோல், தன் சகிகளை அரூபாவாக்கி நம் முன்னால் ஒரு ரூபத்தை உருவாக்கிக் காட்டுகிறார். 


தொண்ணூறுகளுக்கு முன்னான தோல்வியுற்ற, அல்லது நிறைவேறாது போன தன் காதலின் வசந்த காலத்தை மட்டுமே பேசுவது அல்ல. சமூகத்தின் அவலங்களையும் அரூபமாக பேசுகிறார். இரட்டைக் குவளை முறை, சாதிய அடக்குமுறை, வன்புணர்வு, நிறபேதம், அரசியல் என சமூகத்தின் அவலங்களையும் கவித்துவமாக சொல்கின்ற இடத்தில் அரூபா வெற்றி பெறுகிறாள். சிறுகோட்டுப் பெரும்பழமாக காதலும் காமமும் விருட்சமாகி நிற்கும் கவிதைகளில் அரூபாவை இப்படிச் சொல்கிறார் 

"காதல் ஒரு பேய் வீடு

சாந்திபெறா ஆவிகளின் தீராக்காமம்". 


காதலின் (இந்த சமூகத்தின் மீதான காதல் என்றும் கொள்ளலாம்) பித்து நிலை என்பது ஒரு சித்தரின் மனநிலைதான். 

"சிந்தனை முற்றிய சித்தம் 

சித்தம் பரவசம் சிலிர்க்கும் பித்தம்". 


"தன்னை மறக்கும் பித்தர்களுக்கே 

தன்னைக் காட்டும் தரிசனம் அரூபா" என ஒரு சித்தரின் மனநிலையில் அரூப தரிசனத்தைக் கண்டடைய துடிக்கிறார். ஆத்திகம் நாத்திகம் இரண்டுக்கும் இடையில் அரூபாவைக் கண்டடைகிறார். 


"நானோ தொழில்நுட்பம் கோலோச்சும் காலத்திலும் 

காற்றும் மழையும் காலமும் தின்றது போக 

பாறையில் எஞ்சிய தொல்குடி ஓவியம்" 

அரூபாவை நாம் அகழாய்வு செய்துகொண்டே போகலாம் அல்லது அவரவர் அரூபங்கள் நினைவோடைகளில் மேல் எழலாம். அர்த்தம் என்று தனியாக ஒன்றுமில்லை. பொருள்படுத்திக் கொள்வதில்தான் உருவாகிறது அர்த்தம். சமகாலத்தோடு நாஸ்டால்ஜியாவை கலந்து செய்த உணர்வே அரூபா. 

கவிஞர்கள் சொற்களில் எப்போதும் நிர்வாணத்தைப் போல் அம்மணங்களை விரும்புவதேயில்லை. வாழ்த்துக்கள் கவிஞருக்கு. 

விலை: ₹80

வெளியீடு: வெற்றிமொழி வெளியீட்டகம், திண்டுக்கல்.

தொடர்புக்கு: 97151 85309.

Wednesday, July 14, 2021

நாடிலி நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்


 

நாடிலி - கோ. கலியமூர்த்தி த.க.இ.பெ.ம


 சுகன்யா ஞானசூரியின் 'நாடிலி '...

************************************

       நாம் 

       அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்

       யாதும் ஊருமில்லை

       யாவரும் உறவுமில்லை

-என்று, கணியன் பூங்குன்றனுக்கு, எதிர்நிலை எடுக்கிற கவிதைகளோடு வந்திருக்கிறார் Suganya Gnanasoory.

காரணம் தலைப்பிலிருக்கிறது, 'நாடிலி '.

     ஆம்.நாடிலிகளுக்கு நாடுள்ளவர்களின் மதிப்பீடுகளோடும் பெருமிதங்களோடும் உடன்பட முடிவதில்லை.

     கையறுநிலையில்

     கரையொதுக்கப்பட்டு

     காலத்திற்கும் மாறாத வடுவொன்றை

     சுமந்தலைபவர்கள்

    நாம்

என்று, மேலும் விவரிக்கிறார்.     

     கடல் மீதும்

     சிறுதுண்டு நிலம்

     தேடும்

     அகதியின் பாதம்

என, இன்னும் கொஞ்சம் அழகியல் கூட்டிச் சொல்கிறார்.

      கால்நூற்றாண்டு அகதிவாழ்வில்

      ஆஸ்பெஷ்டாஸ்கீற்றுக்கு

மாறியிருக்கிறது 

      பத்துக்குப் பத்து என்பதொரு

       கணிதசூத்திரம்

என்று, அகதிமுகாம் வீடுகளை விவரிக்கும் கவிஞர், கடைசியில்,

     இன்னும் மாற்றாமலிருக்கிறார்கள்

     கல்லறையின் அளவை

எனச்சொல்லி, அதிர்ச்சியூட்டுகிறார்.

      அகதிமுகாமில் தீபாவளி, அகதிப்பிணம் என அகதி மனநிலையிலேயே அதிகக் கவிதைகள் இருந்தாலும்,மாறுபட்ட பொருண்மைகளும் உண்டு.

     கல் வீட்டுக்கொரு மழையும்

      மண் வீட்டுக்கொரு மழையும் 

      எப்போதும் பெய்வதேயில்லை

       மழை

       மழையாக மட்டுமே பெய்கிறது

எனத், தத்துவ அழகியல் பேசுகிறார். 

      அதிகாரமே இல்லாத

      அகதிக்குத்தான்    

       எத்தனை

       வண்ண வண்ண

       அடையாள அட்டைகள்

என, அட்டைகள் சூழ்ந்த வாழ்வின் அவலம் பேசுகிறார்.

     அனைவரும் அகதிகளாக உணரும் காலத்தில், நிலத்தில், கூடுதல் பொருள் பெறுகின்றன கவிதைகள்.

பிரதிக்கு 

சுகன்யா ஞானசூரி - 97903 50714

விலை: ரூ 110.



நாடிலி - புதிய பரிமாணம்


 தோழர் சுகன்யா ஞானசூரியின் “நாடிலி” கவிதைத் தொகுப்பு சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. தமிழ்நாட்டின் ஈழத்தமிழருக்கான அகதி முகாம் ஒன்றில் வசித்துவருகிறார். 90 களில் நடைபெற்ற யாழ்ப்பாண, வன்னி சமர்களின் தொடர்ச்சியாக நடைபெற்ற இடப்பெயர்வுகளில் இவருடைய குடும்பமும் இடம்பெற்றிருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

1980 களில் பள்ளிப் பருவத்தில் முத்துப்பேட்டை நகரில் நடைபெற்ற ஏராளமான ஈழ ஆதரவு ஆர்ப்பாட்டங்கள், நிதித் திரட்டல்கள், முத்துப்பேட்டையில் குடியேறிய கணக்கற்ற ஈழ சொந்தங்கள் என் நினைவுக்கு வருகின்றன. புலம்பெயர்ந்த ஈழ சொந்தங்களுக்கு சிரமமின்றி வாடகை வீடுகள் கிடைப்பதற்கு அப்போது இளைஞர்கள் களம் இற‌ங்கியிருந்தார்கள். அவர்களின் துயரம் துடைக்கும் அனைத்துப் பணிகளிலும் அப்போதைய இளைஞர்கள் சமரசமின்றி ஈடுபட்டதை நான் அறிவேன். தொடர்ச்சியாக ஈழ விடுதலைப் போராட்டம், அதையொட்டி செழித்து வளர்ந்த கடத்தல் தொழில், ஈழத்தின் சகோதர யுத்தங்கள், இந்திய அமைதிப்படையினாலும், இலங்கைப் படைகளினாலும், பிற்பாடு உலகின் பல்வேறு ராணுவங்களும் சேர்ந்து நடத்திய கொடுமையான இன அழிப்பு இவை அனைத்தையும் எவரும் மறந்துவிடுவதற்கில்லை. அனைத்தும் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தின் எந்தவொரு ஈழ அகதி முகாமும் சிறை வாழ்க்கையை நினைவுகூரவே செய்யும். தனது சொந்த இன மக்களின் மீது அகதிப்பட்டம் சுமத்தி வெகு சாமர்த்தியமாக அவர்களின் மீது பல்வேறு துன்பங்களை நாம் சுமத்தி வருகிறோம். கடலூருக்கு அருகில் இருக்கும் ஈழ அகதி முகாம் வாழ்க்கையை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அகதி முகாம் வாழ்க்கையை தோழர்கள் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் இரண்டாம்தரக் குடிமக்களாகவே அவர்கள் இன்னமும் நடத்தப்படுகிறார்கள். அவர்களின் குடியுரிமைக் கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. தோழரின் வலி மிகுந்த கவிதைகளின் ஒவ்வொரு வரியும் எனக்கு மேற்சொன்னவைகளை நினைவுக்குக் கொண்டுவந்தவண்ணமே உள்ளன. இவ்வுலகில் அகதியாய் இருப்பதன் பெருத்த வலியை அவரின் ஒவ்வொரு கவிதையும் சொல்லிச் செல்கின்றன.

“மழை நனைத்த மண்மீது
நடந்து அலைந்து தேசம் முழுமையும்
திரியவேண்டும்
பாடும் பறவையைப்போல்”

கவிஞரின் ஏக்கத்தை இக்கொடும் உலகம் எப்படி நிறைவேற்றப்போகிறது?

“என் தந்தையிடம்
இன்றும் கேட்கிறேன்
ஏன் என்னை அகதியாக்கினீங்கள்?”

என்னும் வரிகளினூடே முப்பது வருடங்களுக்கு முந்தைய ஈழத்து வாழ்க்கைச் சித்திரத்தை நமக்கு வரைந்து தருகிறார் கவிஞர்.

“நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்
யாதும் ஊருமில்லை
யாவரும் உறவுமில்லை”

என்னும் வரிகள் தமிழ்மண்ணின் பெரும் புகழை கேள்விக்கு உட்படுத்திவிடுகின்றன. இன்றைய தமிழனின் செயல்கள் பழம்பெருமைக்கு ஏற்ப அமைகிறதா? என்னும் கேள்வியும் கூடவே தொக்கி நிற்கிறது.

காடும், நதியும் காணாமலடிக்கப்பட்டதையும் கவிஞரின் உள்ளம் பேசும்போது கவிஞரின் அகண்ட மனசையும் நாம் தரிசனம் செய்யமுடிகிறது.

யாழ் வெளியேற்றம் என்னும் கவிதை வரிகளில் கவிஞரின் பரந்த உள்ளத்தை தரிசிக்க முடிகிறது.

கவிஞரின் அரசியலும், அன்பும், போர் தின்ற நிலத்தின் மீதான பற்றும், அகதி முகாம் வாழ்வும் வெறும் வார்த்தைகளால் விளக்கப்பட முடியாதவை. அவரின் கவிதை வரிகளினூடே நாம் அதை தரிசிக்க மட்டுமே முடியும்.

“போர் நிலத்தில்
ஒருகணம்
இறந்தே போயிருக்கலாம்
புலம் பெயராது”

என்னும் வரிகள் என்னை இன்னமும் ஏதேதோ செய்துகொண்டுதானிருக்கிறது.

நாடிலி – கவிதை
மா. ஞானசூரி
கடற்காகம் வெளியீடு
விலை ரூ. 110.
தொடர்புக்கு : 9790350714

நாடிலி- சரவணன் மாணிக்கவாசகம்

 


நாடிலி - சுகன்யா ஞானசூரி:


ஆசிரியர் குறிப்பு:


யாழ்ப்பாணத்திலுள்ள அச்சுவேலி வடக்கில் பிறந்தவர். முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர். 1996ல் தமிழ்நாட்டுக்குப் புலம் பெயர்ந்தவர். அலைகளின் மீதலைதல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. இது இரண்டாவதாக சமீபத்தில் வெளிவந்த கவிதைத்தொகுப்பு.


அடுத்த தலைமுறைக்கு எமது வாழ்வியலைக் கடத்துவது எமது படைப்புகள் என்றிருக்கிறார் முன்னுரையில். எப்போதும் வெற்றி பெற்றவர்கள் எழுதுவதே வரலாறு, தோற்றவர்களால் இலக்கியத்தில் மட்டுமே அதை சொல்ல முடியும். Shirani Rajapakse போன்றவர்கள் இலக்கியத்திலும் அதை மாற்றுகிறார்கள்.(Scattered -short story)


பொங்கல் என்றால் அரைகுறை தூக்கத்தில் குளித்து வாசலில் பொங்கல் பானையில் பொங்கி வடிவதைப் பார்த்து கத்திய சிறுவயதுப் பருவத்தின் நினைவுகள் மேல் வந்து படிகின்றன இந்த வரிகள்:


" இப்போது கரம் பற்றியிருந்த

பொங்கல் பானையருகே

மண்ணை முத்தமிட்டபடியிருந்தது

துண்டாக்கியவளின் தலை"


ஏதிலிகள் எந்த நாட்டுக்கும் வேண்டாதவர்கள். பங்களாதேஷில் இருந்து வந்த அகதிகளை வைத்துக்கொள்ள Secular nation என்ற லேபிள் இருந்தது போல நமக்கு இலங்கையில் இருந்து வந்தவர்களை வைத்துக்கொள்ள எந்த நிர்பந்தமும் இருந்திருக்கவில்லை.


" கால்நூற்றாண்டு அகதி வாழ்வில்

ஆஸ்பெட்டாஷ் சீற்றுக்கு மாறியிருக்கிறது

பத்துக்குப் பத்து என்பதொரு

கணித சூத்திரம்

இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்

கல்லறையின் அளவை

அந்திக்கருக்கலில் விடைபெற்றுச்செல்லும்

சூரியனைப் போல் மெல்ல விடைபெறுகிறோம் மரங்களை விட்டு

வீடுகளுக்குள் வெளிச்சம் பரவுகிறது

மண்ணெண்ணெய் குப்பி விளக்கிலிருந்து

குண்டு பல்புக்கு மாறிவிட்டோம்"


" எண்திசைகள் குறித்து

யாரும் அலட்டிக்கொள்வதில்லை

இடதுபக்கம் கருவேலங்காடும்

வலதுபக்கம் தைலமரக்காடும்

ஆண்களுக்கும் பெண்களுக்குமான

வெளித்திசை என்பது

முகாம்வாசிகளின் ஒன்பதாவது திசை"


"வீட்டின் விறாந்தைகளில் துணையின்றி

வாசல் பார்த்துத் தனித்திருக்கும்

மூப்பின் நரையேறிய மூதாயின் விழிகளில்

படரும் ஏக்கம்

நாடிலிகளின் மனமொத்திருக்கிறது"


சுகன்யா ஞானசூரியின் கவிதைகள் பெரும்பாலும் அகதி வாழ்வைச் சுற்றியே வருகின்றன. பாரீஸில், ஆஸ்திரேலியாவில், லண்டனில் அகதி என்று அழைக்கப்படுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது, தாய்த்தமிழகத்தில் எப்படி அகதியாக முடியும்! மொழி ஒன்றே எனில் நிலம் வேறு.


வாசிப்பதற்கே மிகுந்த வலியை ஏற்படுத்தும் இந்தத் தொகுப்பில் காணும் வாழ்க்கையைத் தான் இன்னும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சொந்த நாட்டிலேயே வசதி இல்லாதவர்களுடன் காவல்துறையும், மற்ற அதிகாரிகளும் நடந்து கொள்வதைப் பார்த்தவர்களுக்கு, அகதிகளிடம் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று யூகிக்க கற்பனாசக்தி எதுவும் தேவையில்லை.


தான் வாழ்ந்த, பார்த்த வாழ்க்கையை சுகன்யா ஞானசூரி ஆவணமாக்கும் முயற்சியே இந்தக் கவிதைத் தொகுப்பு. விடுதலைப்புலிகள் மட்டுமல்ல, புலம்பெயர்ந்தவர்களும் கூட போர்க்களத்தில் கௌரவமாக இறந்திருக்கலாம் என்று மருகும் ஒரு அவலவாழ்வு. பிள்ளைகளிடம் தான் பிறந்த ஊரின் பெருமையை சொல்லாதவர்கள் யார்? மகள் தாய்நாடு பற்றிக்கேட்டதும் "பிரபஞ்சத்தின் மேலிருந்து ஒற்றைச் சுருக்கில் தொங்குகிறேன்"  என்பதைத் தாண்டிச் சொல்லவோ, விளக்கவோ என்ன இருக்கிறது?


பிரதிக்கு:


கடற்காகம் வெளியீடு 78716 78748

முதல்பதிப்பு ஜூன் 2021

விலை ரூ.110.

Tuesday, March 23, 2021

ஐ.நா மன்றமும் தமிழர் நிலையும்



 ஐ.நா மன்றமும் தமிழர் நிலையும்

***********************************

ஐ.நா வில் இந்தியா ஒருபோதும் தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களிக்காது. அது காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் சரி பா.ஜ.க ஆட்சி நடந்தாலும் சரி. ஒருவேளை இந்தியா நடுநிலையோடு வாக்களிக்காமல் இருந்தாலும் அது இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவே இருக்கும். தமிழர்களுக்கு எந்த அனுகூலமும் கிடைக்கப்போவதில்லை. தனிநாடு, அரசமைப்பு எந்த ஒன்றும் இல்லாத தமிழர்களை ஆதரித்து என்ன பயன் என்பதே பெரும்பாலான அரசுகளின் எண்ணமாக இருக்கிறது. குறைந்தபட்சம் நாடுகடந்த தமிழர்கள் ஒரு வலிமையான அரச கட்டமைப்பை (புலி ஆதரவு எதிர்ப்பு என்பதற்கு அப்பால் சிவில் சமூகங்களின் நலன் சார்ந்து) உருவாக்கத் தவறிவிட்டார்கள். எல்லாம் அதிகாரப் பசி. சுகபோக வாழ்வின் மோகம். இப்படியாக நாம் வலிமையற்று இருந்துகொண்டு இந்தியா ஆதரவு தந்தால் தமிழர்களுக்கு தனி நாடு கிடைத்துவிடும் என்ற எண்ணம் சுத்த அபத்தம். ஒருபோதும் ஒரு குற்றவாளி இன்னொரு குற்றவாளியை காட்டிக்குடுக்கமாட்டான். இதுதான் அரசுகளின் இராஜதந்திரம். இப்போதைக்கு குறைந்தபட்சம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைகள் என்ன? அவர்கள் உயிரோடு உள்ளார்களா? கொல்லப்பட்டு விட்டார்களா? என்பதையாவது தெரிவிக்க வேண்டி மனச்சாட்சியற்ற மனிதவுரிமைகள் ஆணையம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக நாடுகளின் ஆதரவை அது கோரத்தேவையில்லை. மனிதவுரிமைகள் தொடர்பாக நிகழும் வாக்கெடுப்பு என்பது இலங்கையிடமிருந்து தங்களுக்கான ஆதாயங்களுக்காக நடாத்தப்படுகின்ற குதிரைபேரங்கள் அன்றி வேறொன்றும் இல்லை. 

- சுகன்யா ஞானசூரி

23/03/2021.

Thursday, January 7, 2021

திருச்சியில் இலக்கியச் செயல்பாடுகளின் தொய்வு ஏன்?

 

இன்று திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் ஒரு சுவரொட்டி. இலக்கிய தாகம் எனும் இதழ் அறிமுகம் செய்யும் நிகழ்வினை ஒரு அறக்கட்டளை ஒருங்கிணைக்கிறது. திரைப்பட இயக்குநர் சிறப்பு விருந்தினர். நிகழ்வு நேற்றா, இன்றா அல்லது நாளையா என சுவரொட்டியின் நான்கு மூலையைத் தாண்டியும் தேடினேன். நிகழ்விடம், நேரம், நாள் ஏன் ஒரு தொடர்பு எண்கூட இல்லை. ஆனால் கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஆன்மீக அன்பர்கள் அனைவரும் வருக என ஒரு கேப்சன். யாருக்காக இப்படியான நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார்கள்?

திருச்சியில் இலக்கியக் கூட்டம் என்பதே அத்தி பூத்தாற்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இப்போது நிகழ்கின்றன. அதுவும் வெளியூர் (உள்ளூர் ஆட்டக்காரர்களுக்கு மதிப்பில்லை) படைப்பாளர்களாலே சாத்தியமாகிறது. சில வருடங்களுக்கு முன்னால் தமிழ் இலக்கியக் கழகம், கிராமியன், நோயல் இருதயராஜ், சுதீர் செந்தில் என இலக்கியங்களை சோறு போட்டு வாழ வைத்தவர்கள் என நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டு வியப்படைந்தேன். அப்படி சிறப்புற்று விளங்கிய திருச்சி இலக்கிய நிகழ்வுகள் ஏன் இப்படி ஆயின?

கடந்த பத்தாண்டுகளாக திருச்சியில் வசித்து வருகிறேன். ஜோ.டி.குரூஸ், சு.வெங்கடேசன், சமயவேல், பெருந்தேவி, அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி, இனியன் என சில நண்பர்கள் உரையாற்றிய சில நிகழ்வுகளில் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. அதுவும் Markandan Muthusamy ஐயா மற்றும் Manikandan Thirunavukkarasu அண்ணன் போன்றவர்கள் தகவல் அறிந்து அழைத்தாலோ அல்லது உரையாற்ற வருகின்ற நம் நண்பர்கள் தகவல் தந்தாலோ மட்டுமே சாத்தியமாகும். 2019 ல் எழுத்தாளர் கலைச்செல்வி அவர்கள் கூட திருச்சியில் ஒரு இலக்கிய அமைப்பை உருவாக்க வேண்டும் என முகநூலில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அது எந்த நிலையில் இருக்கிறது என தெரியவில்லை. புதுக்கோட்டை வீதி, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், கோவை வசந்தவாசல் போன்றவற்றின் தொய்வற்ற செயல்பாடுகளைப்போல் எல்லா ஊர்களிலும் இலக்கியம் பரவவேண்டும்.

110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பாகவே திருச்சி சார் இலக்கிய அறிவிப்புகள் செல்கின்றன. கவிஞர் Yavanika Sriram தோழரை பிரதம ஆசிரியராகக் கொண்டு இதழ் ஒன்றை கொண்டுவர வேண்டும் என மார்கண்டன் ஐயாவும் மணிகண்டன் அண்ணனும் நானுமாக கடந்தாண்டு முடிவு செய்திருந்தோம். பெருந்தொற்றின் அடைப்பினால் சுணங்கிவிட்டது. அது இப்போது அவசிய தேவையாகவே இருக்கிறது என நினைக்கிறேன். கூடவே மாதாந்திர இலக்கிய நிகழ்வொன்றும் நடாத்த வேண்டும். வெற்றிநடை போடும் தமிழகத்தில், ஐயா எடப்பாடி ஆட்சியில் காவிரிகூட திருச்சியில் தொய்வின்றி பாய்கிறாள். தமிழ் இலக்கியம் பாயும் சேதி இன்பத் தேனாய் நம் செவிகளில் பாய வேண்டாமா தோழர்களே?

- சுகன்யா ஞானசூரி
07/01/2021.

Friday, January 1, 2021

கலை மெய்மை அரசியல்


 கிழக்கு லண்டனில் பிறந்த நாடக மேதை. பிரித்தானிய அரசையும், ஐக்கிய அமெரிக்கா அரசையும் விமர்சிக்கும் நெஞ்சுரமிக்க எழுத்தாளர். மானுடத்தின் மீதான பற்றுதலும், வல்லரசுகளின் ஏகாதிபத்தியத்தினால் சிதைக்கப்படும் மக்களின்பால் குரல் கொடுக்கும் கவிஞனுமாக நோபல் பரிசு பெற்றவரும ஹெரால்ட் பின்ட்டரின் கலை மெய்மை அரசியல் எனும் சிறு நூல் தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்களின் மொழியாக்கத்தில் வாசிக்கக் கிடைத்தது. என்.சி.பி.எச் சிறுநூல் வரிசை வெளியீடு. 


அரசியல் செயல்பாடுகளில் கலையின் பங்களிப்பு எத்தகையது? அதன் வகிபாகம் என்ன? ஒரு கலைச் செயல்பாட்டாளன் அரசியல் களச்செயல்பாட்டுக்குள் பங்காற்றுதல் என விரிந்து குர்து, நிகரகுவா, ஈராக் என பல பலிக்களங்களை எடுத்துக்காட்டுகளாக விவரித்து பின்ட்டர் ஆற்றுகின்ற உரையில் எப்படியெல்லாம் பொய்களை மெய்களாக்கி வல்லரசுகள் தங்களின் ஆக்டோபஸ் கரங்களை (இராணுவ கேந்திரங்களை) விரிக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஒருவேளை அவர் இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்திருந்தால் ஈழத்தில் நிகழ்ந்த யுத்தப் படுகொலைகளையும் சுட்டியிருப்பார். 


மரணம் எனும் அவரது கவிதை கைவிடப்பட்ட ஒரு சடலத்தின் மீதான ஒரு விசாரணையைக் கோருவது போன்ற விவரணைகள் ஒரு புலன்விசாரணை. உண்மையிலேயே தமிழில் இப்படியான எழுத்தாளன், கவிஞன், செயல்பாட்டாளன் இருந்தால் தவறான முத்திரை குத்துதல், காயடிப்ச் செய்தல் என நிகழ்ந்துவிடும் அபாயம் உள்ளது. அதை இங்கே தேர்வு செய்யவும் விரும்புவதில்லை. 

* எழுத்தாளனுடைய வாழ்க்கை என்பது அதி பலவீனமானது. அநேகமாக அம்மணமான நடவடிக்கை. அதற்காக நாம் அழுது கொண்டிருக்கத் தேவையில்லை.

* நாம் காண்பதெல்லாம் என்றும் முடிவுறாத பிரதிபலிப்புகள்தான். 

ஆம் பின்ட்டரிஸ் எனும் கோட்பாட்டை புதிதாக உருவாக்கியவரின் இந்த வார்த்தைகள் எத்தகைய நிதர்சனமானவை. 

- சுகன்யா ஞானசூரி

01/01/2021.

குணா கவியழகனின் கர்ப்பநிலங்கள் சொல்வதென்ன?


 

http://puthiyaparimaanam.in/?p=1733 இணைய இதழில் வெளியாகியுள்ள நாவல்கள் குறித்த மதிப்புரை உங்கள் வாசிப்புக்கு வசதியாக கீழே.


தமிழ் இலக்கியத்தில் போர் இலக்கியத்திற்கு ஈராயிரம் ஆண்டு பாரம்பரியம் இருக்கிறது. புறநானூற்றுக்குப் பிறகு போரினை மையம் கொண்ட படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் விரல்சுட்டும் அளவில்கூட இல்லை. சமகாலத்தில் ஈழப்போர் அதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பதாகவே தெரிகிறது. குணா கவியழகன் இந்த போர் இலக்கியங்களில் தவிர்க்கவே முடியாதவராக தனது ஐந்து நாவல்களினூடாக சாட்சியமாக்கியிருக்கிறார். நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம், கர்ப்ப நிலம்-1&2 என தொடர்ச்சியாக வாசித்தவர்கள் இதை விளங்கிக்கொள்வர். இவைகள் ஒரு நிலமிழந்த சமூகத்தின் ஆவணமாகின்றன. இது மிகையல்ல. இவ்விரு நாவல்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிகக் கனமான செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. அஃறிணை, உயர்திணை என்ற பாகுபாடுகள் அற்று அவையவை தமது பாத்திர வெளிப்பாடுகளை செவ்வனே செய்கின்றன. ஒவ்வொன்றையும் தனித்தனியாக விவரித்து எழுத விருப்பம்தான். நீளமாகிவிடும் அபாயம் கருதி முக்கியமான சில பேசுபொருளை மட்டும் சுருக்கமாக இங்கே சுட்டியிருக்கிறேன். இது எனது வாசிப்பிலும், நான் வாழ்ந்த வாழ்க்கையிலும் கண்டவைகளும் மட்டுமே. இதுவே முழுமையானதும் அல்ல.


பிரிட்டனின் நாடகமேதை ஹெரால்ட் பின்ட்டரின் நாடகங்களில் "அறை" ஒரு முக்கியமான உயிரியாக இடம்பெறுவதைப் போலவே "நிலம்" என்ற ஒன்றே குணா கவியழகனின் அனைத்து நாவலிலும் களமாக, பிரதான உயிரியாக, பாத்திரமாகிறது. ஈழம் எனும் ஒரு குட்டி தேசத்தின் நிலங்களின் வெவ்வேறு குணாம்சங்களை அவரது ஒவ்வொரு நாவலிலும் காணமுடியும். அது இரத்தத்தாலும், கண்ணீராலும், வியர்வையாலும் சூழ்ந்த நிலம். இதிகாசம் துவங்கி முடிந்து போன முள்ளிவாய்க்கால் யுத்தம் வரை இந்த நிலம் போரினையே பல நூற்றாண்டுகள் காவித்திரிந்த நிலம். இத்தகையதொரு நிலத்தில் வேரூன்றி நின்ற சமூகம் வேரறுத்து புலம்பெயர்ந்து வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவுகளுக்குள் தம்மை பிணைத்துக்கொண்ட வாழ்வியலை வெற்றி, தோல்வி, குரோதம், ஏக்கம் என பல்வேறு உணர்வுகளை மீளவும் நினைத்துப் பார்க்கும்படியாக அமைந்திருக்கின்றன கர்ப்பநிலங்கள்.


1995 அக்கோடபர் 30 ல் யாழ்ப்பாணத்தை விட்டு மக்கள் கிளாலி நீரேரி வழியாக வன்னி எனும் பெரிய வனாந்தரமான பெரும் நிலப்பரப்பிற்குள் செல்வது வரையான காலகட்டங்களில் நிகழ்ந்த சம்பவங்களை கர்ப்பநிலம் -1 வனமேகு காதை சொல்கிறது. யாழ் குடாநாட்டிலிருந்து மக்கள் கைதடிப் பாலம் வழியாக வெளியேறிய துயர்மிகு கதைகள் அவை. அதுவரையிலும் நினைத்துப் பார்த்திராத பாரிய புலப்பெயர்வு அது. கர்ப்பநிலம் -2 போருழல் காதை அந்த பெரும்நிலத்தில் நிகழ்ந்த போர்களையும், பெருங்காட்டுக்குள் நோய்களாலும், பட்டினிகளாலும் அல்லலுற்ற சமூகத்தின் அவலங்களை சொல்கிறது. இது இரண்டாயிரம் ஆண்டளவு வரையான காலகட்டத்தை பேசுகின்றது. அதன்பிறகு நடந்தவைகளை இந்த உலகமே பார்த்துக்கொண்டுதான் இருந்தது. இரண்டு நிலங்களிலிருந்தும் பிய்த்தெறியப்பட்டு மூன்றாம் நிலத்தில் இருந்துகொண்டு எழுதும் நான் அத்தனைக்கும் சாட்சியமாகி நிற்பதை உணர்கிறேன்.


இது தமிழ் - சிங்களம் என இரு இனங்களின் அரசியல் பிளவுபாடுகளுக்கு அப்பால் இரு இனமும் தனித்தனி இனமல்ல இரண்டும் ஒன்றேயான திராவிட இனம் என வலியுறுத்துவதாகவே நான் பார்க்கிறேன். அதுதான் விஞ்ஞான உண்மையும்கூட.  ரத்னநாயக்கா-நாகமணி என இரு தரப்பிலும் சாமான்ய வாழ்வில் புயலடிப்பதுபோல் கலவரங்களும், போரும், அரசியல் காய்நகர்த்தலும், மக்களின் அவலமான வாழ்க்கையென சொல்லப்படும் வரலாற்று நிகழ்வுகளுக்குள் மணிநாகன் எனும் தொன்ம கதாபாத்திரம் வழியே நாவலை தொய்வின்றி கடத்தியிருப்பது சிறப்பு. மூப்பனாக மாதவன் ஐயாவைக் கண்டடையும் இடங்களும், மாதவன்-மயிலு காதல் என காட்டின் இன்னொரு குறுங்காவியம்.




கொலராவால் அன்ரனின் தாயார் இறப்பதும், அன்ரன் கொலராவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் நாகமணியின் மகளும் அன்ரனின் மனைவியுமான தேவி இவர்களோடு படும் துன்பம் என நோய்களால் போர்நிலம் மறுபுறம் மடிந்துகொண்டிருந்தது. இன்றைக்கு தீநுண்மியால் (கொரோனா) உலகமே முடமாகியிருக்கிறது. கட்டற்று மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. இதில் போர் ஏற்பட்டு, மருந்துத் தட்டுப்பாடும், உணவுத்தட்டுப்பாடும் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது இல்லையா? அப்படித்தான் நிகழ்ந்தது. இல்லை நிகழ்த்தப்பட்டது. கொலரா எனும் நோயாலும், குலைப்பன் என்று அழைக்கப்படும் மலேரியா நோயாலும் பெருங்காட்டுக்குள் மக்கள் பாதிக்கப்பட்டு செத்து வீழ்ந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சுகாதாரப் பிரிவினரால் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்ட விதம் என்றென்றும் நினைவுகூரத்தக்கது. கொல்லர் புளியங்குளம் காட்டுக்குள் ஒருவர் மாற்றி ஒருவர் என குலைப்பன் நோயால் நாங்கள் பட்ட பாடுகள் சொல்லி மாளாது. அதோடு மாலை வேளையானால் மொய்க்கும் சக்கரபாணி வண்டுகளின் தொந்தரவோ கொடியது. புலிகளிலிருந்து மக்களையும், மக்களிலிருந்து புலிகளையும் பிரிப்பதற்காக உளவியல்ரீதியாக ஆட்சியாளர்கள் செயல்பட்ட விதம், போரின் தந்ரோபாயங்கள் என  மிகக்கொடிய நாட்கள் அவை. நோய்களும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகின.


 இரண்டு சிவில் சமூகங்களுக்கும் போர் என்பது பல்வேறு இழப்புகளையே வழங்கினாலும் அரசியல் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களை அண்டிப் பிழைக்கும் சுரண்டல்வாதிகளுக்கு போர் பெரும் லாபம் ஈட்டிக் கொடுக்கும் தொழிலாகியிருந்திருக்கிறது. இதை அவர்கள் ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்தியுள்ளார்கள். ரத்னநாயக்காவின் இரண்டு மகன்களில் தமிழர்கள் மீது செய்யும் போரை வெறுத்து ஆட்சியாளர்களைக் கண்டிக்கும் இடதுசாரியச் செயல்பாடுகளோடு உள்ள மலிங்காவிற்கும், மரம் அறுத்து ஆரியரத்னா எனும் அரசியல்வாதியோடு சேர்ந்து செய்யும் சுரண்டல்வாதியாகும் மலிங்காவின் சகோதரன்  விஜயதாசா போன்றோருக்கு இடையிலான வேறுபாடுகள் சிங்களச் சிவில் சமூகத்தின் இரண்டு வேறுபட்ட வாழ்வை வெளிப்படுத்துகின்றன. இன்றைக்கு இது தமிழ் சிங்களம் எனும் பாகுபாடின்றி வெளிப்படுகின்றது என்பதை சமீபகால அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன. 


ஈழ மக்கள் மத்தியில் இடதுசாரிய அமைப்புகள் மீதான நம்பிக்கையின்மை என்பது இடையில் நிகழ்ந்த ஒன்றுதான். சிங்கள இடதுசாரிய அமைப்பான ஜேவிபியின் தமிழர்களுக்கு எதிரான துவேச செயல்களும், இடதுசாரிய கொள்கைகளோடு தமிழீழ கோசத்தை முன்வைத்து இயங்கிய புலிகள் அல்லாத சகோதர இயக்கங்களின் நம்பிக்கைத்தன்மையற்ற செயல்பாடுகளுமே காரணமாகின. விடுதலைப் புலிகள் இடதுசாரிய சிந்தனையற்றவர்கள் என நினைப்பவர்களைவிட அதிமுட்டாள்கள் எவரும் இருக்க முடியாது. மொட்டைமோகன் எனும் கதாபாத்திரம் இவற்றை மெய்ப்பிப்பதை காணலாம். அவர் விடுதலைப் புலிகள் மீது வெறுப்புக்கொண்ட சகோதர இயக்கத்தைச் சேர்ந்தவர். அவர் தன் அமைப்பினரின் செயல்களை புலிகள் அமைப்போடு ஒப்பிட்டு தன் அமைப்பினரின் செயல்பாடுகளின் மீது கொள்ளும் அதிருப்தியான இடங்கள் இவற்றை மெய்ப்பிக்கின்றன. இடதுசாரிய சிந்தனை என்பது ஈழத்தில் முழுதாக கைவிடப்படவில்லை. 


குழந்தைகளின் மனம் கூட்டமாக வாழ்வதைக் கண்டு குதூகலிக்கின்றது. அதுதான் குழந்தை மனதின் இயல்பு. போரினால் இடம்பெயர்ந்து வந்த சிறுவர்கள் ஒன்றாகி விளையாடுவதும், குட்டிச் சமையல்கள் செய்வதும் என அவர்களின் உலகம் ஒரு சுதந்திரமான உலகம் என்பதை நாகமணியின் பேரன் கதிர் ஊடாக நாம் காணலாம். கூட்டாஞ்சோறு ஆக்கும் சிறுவர்கள் மத்தியில் கதிரின் அக்காவை மற்றவர்களோடு சேரவிடாது பெரிய பிள்ளையாயிட்ட என தடுத்து வைக்கிறார் கதிரின் தாயார். தன்னோடு விளையாட வராத தமக்கையின் மீது வெறுப்பு உருவாகுவதும். தன்னோடு விளையாடும் பக்கத்து வீட்டு தயாளினி அக்கா மீது பாசம் அதிகரிப்பதும் என குழந்தைகளின் மனம் ஊற்றி வைக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப நீர் தன் வடிவத்தை அமைக்கும் என்ற விதியை மெய்ப்பிக்கிறது. பெரியவளாகிட்ட எனும் சொல்லால் சிறுவர்களின் எல்லையை நாமேதான் தீர்மானிக்கிறோம் இல்லையா? செல் விழுந்து தலை சிதறிச் சாகும் தயாளினியின் இறப்பு கதிரின் மனதை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என்பதினூடாக ஒட்டுமொத்த சிறுவர்களின் மனங்களையும் நாம் உணர முடியும். அச்சம் ஒரு கட்டத்தில் வெறுப்பாகி வெறுப்பு குரோதமாகும் இடத்தில் பழிவாங்கல் உணர்வு தானாகவே சிறுவர்களை ஆட்கொள்ளும். அதுவே போருக்கு செல்வதற்கான மனநிலையை உந்தித்தள்ளும். அதை நாம் விடுதலை எனும் பெயரால் அறுவடை செய்கிறோம் இல்லையா?


நிலம்மீள் காதை என கர்ப்பநிலம்-3 வராதா எனும் ஏக்கம் புலம்பெயர்ந்து கிடக்கும் ஈழத்துச் சமூகங்களின் தாய்மண்ணை காணும் பேராவலைப் போன்றிருக்கிறது. நாவல் வருவதும் வாராது இருப்பதும் எழுத்தாளர் கையில் இருப்பதுபோல் தேசம் கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் ஒட்டுமொத்த மக்களின் கைகளில்தான் இருக்கிறது. 

- சுகன்யா ஞானசூரி.

soorymicro@gmail.com


தோழர் பொதியவெற்பனின் அரை நூற்றாண்டுப் பயணம்

 


இன்று திருச்சி என்.சி.பி.எச் சென்றிருந்தபோது நான்கு சிறுநூல்கள் வாங்கிவந்தேன். அதில் முதல் நூலாக தோழர் பொதியவெற்பன் எனும் பெரும் ஆளுமையை இச்சிறுநூல் வழி இன்று கொஞ்சம் அறிந்துகொண்டேன். இதுவரை நேரில் பார்த்ததில்லை. முகநூலில் அவரது பதிவுகளை தொடர்ந்து வாசித்து வந்த எனக்கு இது ஒரு சிறு நூல் எனினும் வீ.அரசு அவர்களின் உழைப்பு பல்வேறு தளங்களில் தோழர் பொதியவெற்பன் அவர்களை அணுகியிருக்கும் விதம் பின்வரும் தலைமுறை எடுத்தாள ஒரு துவக்கப்புள்ளியை இட்டுச் செல்கிறது. கனமான புத்தகங்களை வாசிப்பதைக் காட்டிலும் கனமான விடையமுள்ள இச்சிறு நூல்கள் எனக்கு வாசிப்பதற்கு ஏற்றதாக இருப்பதாக (ரொம்பச் சோம்பேறி ஆகிவிட்டேன்) உணர்கிறேன். வாய்ப்புள்ளோர் வாசித்துப் பாருங்கள். தோழர் பொதியவெற்பன் பொதிகைச் சித்தராக வந்து நிற்கும் இடத்தை அறிந்துகொள்ளலாம். அவரை நாம் எந்த ஒன்றிற்குள்ளும் அடைத்துவிட முடியாத தமிழின் மிகப்பெரும் ஆளுமையே.

- சுகன்யா ஞானசூரி

24/12/2020.

Tuesday, November 10, 2020

செம்மொழித்தமிழ்


 

செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள்

தொல்காப்பியம் முதல் இறையனார் அகப்பொருள் வரையிலான 41 நூல்களின் தொகுப்பு. நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த சங்க இலக்கிய நூல்களில் விளக்கவுரையுடனான சில பழைய நூல்களை சமீபத்தில் வாங்கியிருந்தாலும் மொத்தமாக ஒரே புத்தகமாக கிடைத்ததில் அளவில்லாத மகிழ்ச்சி. விளக்கவுரை இல்லை என்பது சிறு குறையாக இருப்பினும் பதம் பிரித்து பதிப்பித்திருப்பது எளிதாக விளங்கிக்கொள்ள முடிகிறது. நேரில் சென்று வாங்க எண்ணியிருந்தேன். ஆனாலும் சூழல் அமையவில்லை. கடைசி நாளில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி அழைத்தால் அழைப்பை எடுக்காதது சற்று பதற்றமாக (பணத்திற்காக அல்ல நூல் கிடைக்குமோ கிடைக்காதோ என்றே) இருந்தது. ஆனால் நூல் கைக்கு வந்ததும்தான் மனம் நிறைவானது. குறைந்த விலையில் நிறைவான தமிழ் நூல் என்றால் மிகையில்லை. பதிப்பித்து பத்தாண்டுகள் கழித்து கவனம் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதும் தமிழ் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதற்கு சான்று பகர்கிறது.

- சுகன்யா ஞானசூரி

கைகழுவிய காலம்


இது எப்படி உள்ளதென நீங்கள்தான் சொல்லவேண்டும் நண்பர்களே. படைப்பு குழுமம் நடாத்தும் கவிக்கோவின் பிறந்தநாள் போட்டிக்கு என்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கவிதை. 


https://padaippu.com/submitted/kaviko2020/116

கைகழுவிய காலத்தின் கவி!

*************

ஒரு மதுக்குவளையைக் கவிழ்த்து வைக்கும் இடைவெளியில் 

காலங்களை அனாயசமாய்ப் புரட்டிப் பார்க்கிறான் கவிஞன். 

கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இழுத்துவந்து 

நிகழ்காலத்தின் துயரக் கோடுகளோடு முடிச்சிடுகிறான். 

மரபணு அடையாள உணரட்டை அணிந்த 

சூப்பர் மனிதர்கள் கடந்த காலங்களுக்கு பயணிக்கிறார்கள்

நோவாக்கள் கட்டிய கலங்களையொத்தவை அவை.

மனிதர்களின் வளர்ச்சிகளோடும் அரசுகளின் போட்டி அதிகாரத்தோடும் 

இணைந்தேயிருக்கிறது நுண்மிகளின் பரிணாம மாற்றம்.

நுகர்வுக் கலாச்சாரம் கொடிய நோய்களையே பரிசளிக்கிறது.

நூற்றாண்டுகளுக்கு இடையிலான தொலைவில்தான் இருக்கின்றன 

அடிமையுழைப்பில் ரேகை தொலைத்தவர்களும் நுண்மிகளால் 

கைகழுவியே ரேகையுதிர்ந்தவர்களும் வாழ்ந்த காலங்கள்.

நுண்மிகளின் பரவுநிலை பொருளாதார மந்தநிலை அகதிகளாகி 

செத்து வீழும் மக்கள் எதுபற்றியும் கவலையின்றி 

நாளாந்தம் உரையாற்றும் பொறுப்பற்ற தலைவர்கள் 

மாற்றம் பெறவில்லை என்றபடிக்கு மனுசங்களின் 

காலவெளிகளில் பயணித்துத் திரும்பும் சூப்பர் மனிதர்கள்

புறக்கதிர்களின் துணைகொண்டு தத்தமது 

கைகளையும் கலங்களையும் தூய்மை செய்கின்றனர் 

நோவாவின் காலத்திற்கும் சூப்பர் நோவாவின் காலத்திற்கும் 

பயணித்த களைப்பில் உறங்கும் கவி 

கைகழுவிய பின்பே ஒரு மிடறைச் செலுத்தினான்.

- சுகன்யா ஞானசூரி.

திருச்சி.

 https://m.facebook.com/story.php?story_fbid=3178778738899259&id=100003014920463

Wednesday, November 4, 2020

புதிய பரிமாணத்தில் எனது கவிதைகள்


இம்மாதம் புதிய பரிமாணம் இணைய இதழில் வெளியாகியுள்ள "நோய்க்காலத்து அகதியின் பாடல்" என்ற எனது 16 கவிதைகளை இந்த இணையச் சுட்டியில் ச்் http://puthiyaparimaanam.in/?p=1288 சென்று வாசிக்கலாம் தோழர்களே. என் கவிதைகள் குறித்து தங்கள் அனுபவங்களை பதிவு செய்யவும் வேண்டுகிறேன். 



Saturday, October 24, 2020

றாம் சந்தோஷின் சொல் வெளித் தவளைகள் - என் மனவெளியில்


 

றாம் சந்தோஷின் சொல் வெளித் தவளைகள் 


கவிதையில் அழகியல் குறித்து, அரசியல் கவிதைகள் அழகியலற்ற வறட்டு நிலைகுறித்து, தத்துவார்த்தமும், படிமங்களும், தொன்மங்களும், மிகையுணர்ச்சிகளும், ஒருவித சோக இழையோட்டமும் இன்னபிற என அமைந்தால்தான் தரமான கவிதை என்ற இதுநாள்வரையான அத்தனை எண்ணவோட்டத்தையும், எனக்குண்டாகியிருந்த பீதியையும் சொல் வெளித் தவளைகள் கலைத்துப்போட்டு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. 


இந்த தரமான, தரமற்ற என்ற பதங்களை உதிர்ப்பவர்களை வைத்தே இந்த கவிதையியலின் கலாச்சார காவலர்கள் யார் என்பதை நாம் இனங்காண முடியும். ஆனால் இவை எவற்றுக்குள்ளும் அடைபடாத புதிய பாணியிலமைந்த அதாவது பின்நவீன கோட்பாட்டில் (இது தோழர். ஜமாலனின் முன்னுரையில் சுட்டப்பட்டுள்ளது.) அமைந்துள்ள சுய பகடித் தன்மையுடன் கூடிய கவிதைகள். சங்க காலம் தொட்டு எங்க காலம் வரை (தோழர். ஜமாலன் கூற்று முன்னுரையில்) எல்லாக் காலத்தையும் சுய எள்ளலோடு எளிய வரிகளில் கவித்துவம் குன்றாமல் (இங்கு நானே உதிர்க்க வேண்டியதாகிவிடுகிறது) மன வெளியெங்கும் தவளைகள் பாய்ச்சலை நிகழ்த்துகின்றன. 


ஒரு தமிழ் ஆய்வு மாணவர் என்ற வகையில் அவரது தமிழ் இலக்கண, இலக்கிய மரபுகள் இந்த புதிய சிந்தனைக்கு கைகொடுத்திருக்கிறது என்பதற்கு அப்பால் சமகாலத்தில் அதன் தேவை கருதி படைப்பாக்கம் ஆக்கியிருக்கும் மனதிற்கு ஆயிரமாயிரம் கைகுலுக்கல்கள் பத்தாது. 


பிரதிக்கு வெளியே ஒன்றுமில்லை என்கிறார் ழாக் தெரிதா. அத்தனை சமாச்சாரங்களையும் இந்த ஒற்றைப் பிரதிக்குள் முயன்றிருக்கிறார். இப்படியான பரிசோதனை முயற்சியான பிரதியுருவாக்கம் தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஒரு அவசியத் தேவை. இவைகள் காலத்திற்கும் நின்று பேசக்கூடியவை. 


பூனைகளை கவிதைக்குள் கொண்டுவரவில்லை எனில் கவிஞர் என அழைக்கமாட்டார்கள் போல. ஆனால் இங்கே யானை, புலி, நாய், பன்றி, மாடு, மான், நரி, வெளவால் என விலங்குகள் கவிதைகளுக்குள் உலவ விட்டுள்ளார். டாக்கிங் டாமாக பூனை உலவுகின்றது. அதேபோல் கம்யூனிஸ்டுகள், திராவிடர்கள், தமிழ்த் தேசியர்களின் போர்வையில் உலவுகின்ற போலிகளின் முகமூடிகளை கிழித்தெறிகிறார். உடல் உறுப்புகளை களவாடும் மருத்துவத் துறையின் அயோக்கியத்தனத்தை சுட்டும் "எனக்கு நலம் சரியில்லை" கவிதையில் நகுலனை கண்டுகொண்டேன். மாட்டரசியல், பணமதிப்பிழப்பு, கோமியக் குடிக்கிகளின் சங்கித்தனம், இலக்கியவாதிகளின் மேட்டிமைத்தனம், கடவுளர்கள் என பலவற்றையும் பகடிகளோடு குறிப்பால் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். சரி எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தினால் பதில்தான் என்ன? எல்லாவற்றையும் தோலுரித்தால் அங்கே ஒன்றுமே மிஞ்சப்போவதில்லையே? (ஆமாம் வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றுமில்லைதான். விலை கண்ணீர் வர வைக்கிறதே. ஆனாலும் பயன்படுத்தாமல் இருக்க முடிகிறதா? ) மனிதம் எனும் அறம் ஒன்றே அதன் பதிலாகிறது. இந்த நூற்றாண்டின் நுகர்வுக் கலாச்சாரத்தில் அதை நாம் தொலைத்துவிட்டோம். அதைக் கண்டடைய இத்தகைய பிரதியாக்கங்களை அடையாளப்படுத்துகிறோம்.


இத்தொகுப்பில் கீறப்பட்ட சித்திரங்கள் சிறப்பான குறியீட்டு தன்மையோடு கவிதைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. புதிய முயற்சிகள் ஒரு கனவு முயற்சி. First impression is the best impression என்பார்கள். தோழர் றாம் சந்தோஷ் இதை மனதிற்கொண்டு சிறப்பாகச் செய்துள்ளார் என்றால் மிகையில்லை. ஏனெனில் பிரபலமாக இருக்கக்கூடிய பலரும் தங்கள் முதல் பிரதிகளை மறைத்தே வைத்திருப்பர். அதுகுறித்து நான் சொல்லத் தேவையில்லைதானே? 


பின்குறிப்பு: இவற்றை நான் எனது கைப்பேசியில் கழிவறையில் அமர்ந்துதான் டைப் செய்தேன். வெஸ்டர்ன் டாய்லெட்டைக் கண்டுபிடித்தவருக்கு ஆயிரம் நன்றிகள். 

- சுகன்யா ஞானசூரி

24/10/2020

வெளியீடு: சொன்மை பதிப்பகம் 

விலை: ₹110

இது முதற்பதிப்பு. இரண்டாம் பதிப்பை எதிர் வெளியீடு கொண்டுவந்துள்ளதாக அறிகிறேன்.

Monday, October 19, 2020

ழாக் தெரிதா - கட்டவிழ்ப்பு

 


"ழாக் தெரிதா" கட்டவிழ்ப்பு எனும் கோட்பாட்டின் தந்தை என்றே அழைக்கலாம். தத்துவம், இலக்கியம் மற்றும் ஓவியம் என எல்லா தளத்திலும் தனது கட்டவிழ்ப்பு எனும் புதுவகைச் செயல்பாட்டின் மூலம் ஐரோப்பியர்களின் கருத்துக்களை நிர்மூலமாக்கியவர் என்றே சொல்லலாம். இந்தக் கட்டவிழ்ப்பின் செயலால் நண்பர் ஒருவருக்கு ஆதரவாக எழுதி கட்டவிழ்ப்பு கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கி இறுதிக்காலத்தில் மெளனிக்கப்பட்டவர். மார்க்சியத்தையும் கட்டவிழ்ப்பு செய்து மார்க்சியர்களின் வெறுப்பைச் சம்பாதித்தார்.  


எம்.ஜி. சுரேஷின் இந்தச் சிறுநூல் அறிமுக வாசிப்பாளர்களுக்கு ஆகச் சிறந்த ஒரு கையேடு என்றே சொல்வேன். எளிமையான எடுத்துக்காட்டுகளோடு குறியியல் குறித்தும் பிராய்டிசம் குறித்தும் விளக்கிச் செல்கிறார். அடையாளம் பதிப்பகத்தின் பின்நவீன சிந்தனையாளர் வரிசை நூல்களில் மற்றவற்றையும் வாசிக்க வேண்டும் எனும் ஆர்வம் எழுகிறது. வாய்ப்புள்ளோர் வாசித்துப் பாருங்கள். 


- சுகன்யா ஞானசூரி

19/10/2020.

நன்றி: Markandan Muthusamy ஐயா.

Saturday, September 19, 2020

தற்சார்பு வாழ்க்கையின் முதல்நிலை



 "#தற்சார்பு" வாழ்க்கையின் முதல்நிலை. இன்றைய தினத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்திருக்கிறது எதேச்சையாக ஊன்றிவைத்த விதை. 


தம்பி அடுத்து என்ன அரசியலில்தானே என உங்கள் மைன்ட் வாய்ஸ் கேட்குது. நமக்கு சோறுதான் முக்கியம்.


 #அகதி அரசியல் பேசுதல் வேண்டும்.


- சுகன்யா ஞானசூரி

19/09/2020.





வெள்ளி விழா ஆண்டில்


 வெள்ளி விழா ஆண்டில் 

*********


18.09.1996 மாலை 6.30 மணிக்கு வலைப்பாடு கடற்பகுதியில் இருந்து புறப்பட்டு 19.09.1996 காலை 8 மணிக்கு தனுஷ்கோடி கரையில் இறங்கிய எமக்கு "அகதி" என முத்திரை குத்தப்பட்டு இன்று 25வது ஆண்டில். சாதனையா? வேதனையா? என பட்டிமன்றம் மட்டும் வைக்கவில்லை. இன்னும் எத்தனை காலத்துக்கு நாம் இப்படியே வாழ? இந்திய தேசத்திடம் நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இங்கு எமக்கு குடியுரிமை தருக. இயலவில்லை எனில் வேறு தேசங்களுக்கு அனுப்புக. 


அந்த அலைகள் ஏன் 

இந்தப் பக்கமாய் 

எம்மை ஒதுக்கின?


- சுகன்யா ஞானசூரி

19/09/2020.

Sunday, September 6, 2020

தொட்டால் சிணுங்கி




 #தொட்டால்_சிணுங்கி 

வழக்கமாக பயன்படுத்துகின்ற வழி கொரோனாவினால் அடைபட்டிருந்ததால் மாற்றுவழியில் இன்று வருகையில் கண்டுகொண்டேன். சிறுபிராயத்து உணர்வுகள் மேலெழுந்து நர்த்தனமாடத் துவங்கியது. உடனே மகளை அழைத்துவந்து மகளோடு நானும் தொட்டுத் தொட்டு மகிழ்ந்தோம். முதலில் தொட்டதும் சுருங்கியதைக் கண்டு பயந்த மகளோ அந்தச் செடியை வீட்டுக்கு எடுத்துப் போகலாம் எனும் அளவுக்கு வசியமாகிவிட்டார். மன அழுத்தத்தை போக்கி வசியம் செய்யும் மாயக்காரச் செடி என்பது சாலப் பொருத்தம்தான். கான்கிரீட் காடுகளாகிப் போன மாநகரத்தில் இவைகள் காணக்கிடைப்பதே அரிதினும் அரிதான ஒன்று. தரையோடு படரும் மமோசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இச்செடியை மலையாளத்தில் #தொட்டாவாடி என்று அழைப்பார்களாம். #இந்தியில்_எனக்குத்_தெரியாது. 

- சுகன்யா ஞானசூரி

06/09/2020.




Saturday, July 11, 2020

ஆயிரம் கைகள் சேர்ந்து மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை..."

எந்தவொரு இனமும், எந்தவொரு மொழியும் தன் அழிவுகளிலிருந்து சரி தவறுகளை ஆய்ந்து மீளக் கட்டமைக்கவே முயலும். அதுவே அந்த மக்களின் இருப்பினை உறுதிசெய்யும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக, தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடிக்கும் முகமாக, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ், தமிழ்த்தேசியம் எனும் உணர்வுகள் ஏற்படாவண்ணம் நாளொரு சர்ச்சைகள்வழி அவரவருக்காக தரப்பட்ட அஜென்டாவை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறார்கள். ஒரு இனம், மொழி தன் மக்களாலே கொச்சைப்படுத்தப்படும் பேரவலம் தமிழ்ச்சமூகத்தில் மட்டுமே. இது தமிழ்ச்சமூகத்தைப் பீடித்திருக்கும் சாபக்கேடு. இது அவரவர் சார்ந்திருக்கும் அமைப்பியலின் பார்ப்பனிய மனோபாவமே இப்படி ஆட்டுவிக்கிறது.


ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பிறகு தமிழ்த்தேசியம் குறித்த அவதானமும், கடந்த காலங்களில் ஏற்பட்ட தமிழ்த்தேசியத்தின் தோற்றுவாய்களின் தெளிவும், திராவிட இயக்கத்தின் பிறப்பு, தலித் அரசியலின் வகிபாகம், பொதுவுடைமையாளர்களின் செயல்பாடு, ஆரிய சமாஜ்யங்களின் வரவும் அவர்களூடான பார்ப்பனர்களின் அதிகார வேட்கையில் விளைந்த இந்து தேசியம் எவ்வாறு தமிழ்த்தேசியத்தை காலத்துக்கும் அடக்கியொடுக்கி தன்னை விஸ்தாரமாக்கியது என ஐயா தொ.ப வினால் தொகுக்கப்பட்ட இச்சிறு நூல் பல்வேறு விடையங்களை இன்றைய தலைமுறைக்கு அறியத்தரும் பொக்கிஷம் என்பேன்.

"ஆயிரம் கைகள் சேர்ந்து மறைத்தாலும்
ஆதவன் மறைவதில்லை..."

- சுகன்யா ஞானசூரி
11/07/2020.

நன்றி: படவருடியாக அனுப்பி உதவிய தோழர் செ.சண்முகசுந்தரம் அவர்களுக்கு.


Friday, May 1, 2020

மே மாதம்








ஈழ எழுத்தாளர் தாமரைச் செல்வி அவர்களது ' வீதியெல்லாம் தோரணம்', ' தாகம்' நாவல்கள் மற்றும் 'அழுவதற்கு நேரமில்லை' சிறுகதை தொகுப்பு என ஒரே மூச்சாக இன்று வாசித்து முடித்தேன். மனமோ கனமாக இருக்கிறது. உறக்கம் வர மறுக்கிறது. பழைய நாட்களுக்குள் அழைத்துச் செல்லுகின்றன. மனதை உலுக்கி எடுக்கிறது. புனைவுகளற்ற எதார்த்தமான கதைகள். கிளாலிக் கடலேரியில் அன்றைக்கு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட அம்மம்மாவும், அத்தையும் நினைவுகளில் வந்து தொந்தரவு செய்கிறார்கள். இன்றைய தலைமுறைகள் எல்லாவற்றையும் வசதியாக மறந்துவிட எத்தனிக்கிறது. எல்லாவற்றையும் நாம் மறந்துவிடத்தான் முடியுமா? இவற்றை மீள் வாசிப்பு செய்வதனூடாக எமது வரலாற்றின் பக்கங்களில் ஏற்பட்ட வலிகளையும், வேதனைகளையும் அறியமுடியும். எல்லோருடைய அரசியலுக்கும் பகடியாகிப் போகிற துயரங்களை நாம் சுமந்தலைவோம் என்பதை கனவிலும் நினைத்திருக்க மாட்டோம். எல்லாவற்றையும் மறந்துதான் ஆக வேண்டும். இல்லையெனில் விசர் பிடித்தாட்டும். ஒரு தசாப்தமாக மே என்பது எமக்கு துயரத்தை வரலாறாக்கிய மாதம். 

- சுகன்யா ஞானசூரி
01/05/2020.