Tuesday, April 7, 2020

அப்பல்லோ

அப்பல்லோ - சுகன்யா ஞானசூரி யின் வாசிப்பிலிருந்து....

அண்டனூர் சுரா மூன்று நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்பு என குறுகிய காலத்திற்குள் பலப் பரிசுகளுக்கும் பாராட்டுக்கும் உரியவராகி வருகிறார். அப்பல்லோ இவரது மூன்றாவது நாவல்.

அப்பல்லோ என்றதும் கிரேக்கத்தின் கடவுளென நம்பப்படும் உண்மையின் கடவுளை சமகாலதினருக்கு நினைவுக்கு வராதபடிக்கு செய்ய சமகால நிகழ்வொன்று சாட்சியம் ஆகிப்போனது. தினம் ஒரு அறிக்கையும், அவலமான கூத்தும் நிகழ்ந்த இடம் அது. இங்கிருந்துதான் அண்டனூர் சுரா தன் கதையை துவக்குகிறார். ஆதி மருத்துவ குடிகளின் அழிவை சொல்ல ஹோமரின் காப்பியங்களின் கதாபாத்திரங்களை நாவலின் கதாபாத்திரங்களாக்கி ராஜா காலத்து கதையில் நம்மையெல்லாம் அழைத்துச் சென்றாலும் பல்வேறு நிகழ்வுகளை, வரலாற்று சம்பவங்களை கதைகளினூடாக வாசிப்பவர்களிடத்து கடத்துகிறார்.

ஆரிய திராவிட யுத்தம் இக்கதையில் பிரதானமாக இருக்கிறது. தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் மந்திர தந்திரங்களை பயன்படுத்தி மன்னனை ஆட்டுவிக்கும் மந்திரவாதிகள் மருத்துவ குடியை வதைத்து அழிக்கின்றனர். வெண்மணி படுகொலையையும், கூடவே ஈழத்தின் இறுதிப் படுகொலையையும் நினைவுபடுத்துகிறது.

பல்வேறு சம்பவங்களை சிறப்பான ராஜா காலத்து கதை வழி சொல்லும் சுராவுக்கு நன்றாக கதை சொல்ல வந்திருக்கிறது. காட்சிகளின் வர்ணனை சிறப்பாக இருக்கிறது. நாட்டார் வழக்குகளின் சொற்றொடர்களையும் நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். அதேவேளையில் மிகு புனைவு வாசிப்பவருக்கு அயர்ச்சியையோ அல்லது சிரிப்பையோ வரவழைக்கும். இந்நாவலிலும் அது போலான வேகத்தடைகள் இருக்கவே செய்கின்றன. கொங்கையும் பிருஷ்டம் மட்டுமே பெண் உடல் இல்லை. பெண் உடல் மீதான மிகு வர்ணனையும், ஆங்கில படப் பாணியில் பாயும் விலங்கைப் போல் அந்த மருத்துவன் காடுமேடெல்லாம் பாய்வதும், யுத்தம் முடிந்து இரண்டு மாதங்களின் பின்னும் ஒருவன் உயிரோடு இருப்பது போன்ற நிகழ்வுகள் சினிமாத்தனமாக இருக்கிறது.

மூன் மன்னனின் சோரியாசிஸ் நோயும், மருத்துவ குடிகள் மயிர் மழிக்கும் குடியாகி போனதன் பின்னுள்ள தந்திரங்களும் சூழ்ச்சிகளும், காதுகள் கால்களில் இருந்தால் அந்த அரசும் மக்களும் என்னாவார்கள்? அதன் பாரதூரம் எத்தகையது என்பதையும் அந்தக் காலே அம்மன்னனுக்கு எமனாய் அமைவதையும், காலை தொழுதவர்கள் ஆட்சிக் கட்டிலுக்கு வந்தால் என்ன ஆகும் என்பதையும், அன்று முதல் இன்று வரை மருத்துவ கனவை சிதைக்க கொண்டுவரும் திட்டங்களும், திருத்தங்களும், நீட்டின் கொடுமைகள் என கதையின் போக்கில் எள்ளலோடு சொல்லிச் செல்கிறார்.

"முக்கோணக் காதல் கதைபோல் இது முக்கோண அரசின் அரசியல் கதை".

அப்லாஸ் எனும் வாரிசின் பெயரின் ஊடாகவே நாம் அப்பல்லோவை கண்டடைகிறோம். இங்கு அப்பல்லோ மருத்துவக் குடில் அல்ல மருத்துவக் குடியின் எச்சம்.

சரித்திரப் புனைவை தொய்வின்றி பல்வேறு முடிச்சுகளை அவிழ்த்து எதார்த்தமாக வாசிப்பதற்கு தங்குதடையின்றி கதை சொல்வதில் கல்கி, சாண்டில்யன், அகிலன், பாலகுமாரன் வரிசையில் அண்டனூர் சுராவும் இடம் பெறுகிறார்.

சுரா இந்த நிலையோடு தேங்கி விடாமல் மென்மேலும் சிறந்த படைப்புகளைத் தர வேண்டும்.

கால்களற்ற மெனிலாஸை அந்த தாழிக்குள் புதைப்பதாக கனவு காணும் சிறுமி சிந்தி போல் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமான அந்த சந்தேகம் தீராமல் இருக்கிறது. உண்மையிலேயே அவரது கால் வெட்டி எடுக்கப்பட்டதா?

ஆசிரியர்: அண்டனூர் சுரா
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை: ₹245

Monday, March 16, 2020

பூமிப்பந்தின் நாஸ்டால்ஜியா மனம்

பூமிப்பந்தின் நாஸ்டால்ஜியா மனம்!
***************
வான்பாதைகள் நடைபாதைகள்
சனம் கூடும் பொதுவிடங்கள்
வெறிச்சோடிக் கிடக்கின்றன.
பொருளாதாரத்தின்
தேவைகளும் தேக்கங்களும்
இடத்திற்கொன்றாய் மாறுபட்டிருக்கிறது.
உற்பத்தியாளர் நுகர்வோர்க்கிடையில்
பெருத்த வெற்றிடம் ஒன்று இருக்கிறதுதானே?
வீசும் காற்றில் விசம் பரவட்டும் என
அறம் பாடிய தமிழ்க்கவியின் கூற்று
எதிரொலிக்கிறது என் செவிப்பறைக்குள்.
கவிகள் ஒரு தீர்க்கதரிசிகள்.
அபரிமிதமான ஆக்கமும் அழிப்பும்
நுண்ணிய ஒவ்வொன்றிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
அறிவார்ந்த சமூகத்தின் பெயர் சூட்டல்கள் அச்சுறுத்தலாம்
அச்சமே பெரும் மூலதனம்
அச்சப்படாதீர்கள்....
காலவெள்ளத்தில் அனைத்தும் நீர்த்துப்போகும்.
கரோனாவிற்கு
முன்பும் பல கொள்ளை நோய்களும்
பேரழிவுகளும் வந்தனதான்.
இனியும் வராதென்பதும் நிச்சயமில்லை
உலகத்தின் சமநிலைப் பேணல்
என சமாதானம் கூறிக்கொள்ளும்
அற்ப மனிதர்களோ
ஒன்றை விளங்கிகொள்வதேயில்லை.
நாஸ்டால்ஜியா மனம்
அனைத்துக்கும் பொதுவானதொன்று.
இந்தப் பூமிப்பந்து
பழைய இடத்தில் தன்னை
இருத்திப் பார்க்க எத்தனிக்கிறது.

- சுகன்யா ஞானசூரி
16/03/2020.

Sunday, February 2, 2020

தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்- ஓவியர் புகழேந்தி



2006 ல் முதல் பதிப்பு கண்டு, 2018ல் ஐந்தாம் பதிப்பாகவும் திருத்தப்பட்டும், விரிவுபடுத்தப்பட்டும் வந்திருக்கும் தொகுப்பு. ஒரு ஓவியன் தூரிகைகளால் தற்சமயம் இழந்து போன ஒரு தேசத்தை எழுத்தின்வழி ஆவணப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தில் இருந்து தமிழீழத்திற்குப் பயணப்பட்ட ஓவியர் தான் கண்டதையும் தன்னைக் கண்டதையும் தொகுப்பாக்கித் தந்திருப்பது பொய்மைகளற்ற நேரடிச் சாட்சியம்.

"ப்ராஜெக்ட் பேக்கன்" திட்டத்தின்படி 2009 ல் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ அரசாங்கத்தின் அத்தனை கூறுகளையும் 2004ல் முதன்முதலாகப் பயணப்படும் ஓவியர் புகழேந்தி அவர்கள் மீண்டும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஓவியம் பயிற்றுவிக்க செல்வதும் தமிழீழ நிலமெங்கும் ஓவியங்களை காட்சிப்படுத்துவதும், ஓவியங்களை பார்வையிட்ட போராளிகள், பொதுமக்கள், மாணவர்கள் எழுதிய குறிப்புகள் என ஒவ்வொரு ஊர்வாரியாக பதிவு செய்துள்ளார். இவர்களில் யாரும் உயிரோடு இருப்பார்களா? காணாமலாக்கப்பட்டவர்களுக்குள் இருப்பார்களா? என்பதை நினைக்கும்போது மனசு கனதியாகிறது. பெரும்பாலான போராளிகளும், தளபதிகளும், இல்லை என மனம் நம்ப மறுக்கிறது.

1943ல் மா வோசேதுங்கின் சென்சேனைப்படை யேனான் பகுதியையும், 1974ல் எரித்திரியா விடுதலை இயக்கம் அஸ்மாறா எனும் தலைநகரையும் இழந்து பின் மீட்டெடுத்த வரலாறு போலத்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் யாழ் மண்ணை இழந்து பின்னர் படிப்படியாக வெற்றிகொண்டு வரும் சந்தர்ப்பத்தில் சமாதானத்தின் பெயரால் வேவு பார்கப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்டு நந்திக்கடலில் தோற்கடிக்கப்பட்டார்கள். தோற்கடிப்பின் பின்னால் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் மட்டுமல்லாது எமது மக்களின் சாதிய மனோபாவமும், பிறர் பிள்ளைகள் களமாட தம்பிள்ளைகள் காப்பாற்றும் முகமாக மக்கள் மனம் மாறியதன் பின்னணிகளும் முக்கிய பங்காற்றியுள்ளன. நாம் நிலமிழந்து, நாடிழந்து ஏதிலிகளாக இருக்கும் இந்நேரத்தில் தனித்துவமான வரலாறிழந்து போய்விடும் துயரார்ந்த சூழலில்தான் அரசமைப்புகளும் சமூகச் சூழலும் நிறுத்தியிருக்கிறது.

விழிநீரைச் சுண்டிவிடும் விரலாக ஓவியர் புகழேந்தி ஐயா அவர்கள் தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும் நூலில் தமிழீழ அரசாங்கத்தின் அத்தனை துறைகளையும் பற்றி துறைசார்ந்தவர்களோடு நேரடியாக உரையாடி அவற்றைத் தொகுத்திருக்கிறார். ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாகச் சென்று அவற்றின் களநிலவரங்களையும், நிலக்காட்சிகளையும், வளங்களையும் காட்சிப்படுத்தியுள்ளார். வரலாற்றுப் புரட்டுகளுக்கு இடமளிக்காதபடி தேதி, மாதம், ஆண்டு விபரங்களோடு பல்வேறு போராட்டங்களையும், நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தியுள்ளார். மணலாறு விஜயனின் "மெளனப் புதைக்கழிக்குள்"  நூலை ஓவியர் வாசிப்பதனூடாகவும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பல்வேறு படுகொலைகளை வெளியுலகிற்கு காட்சிப்படுத்துகிறார். பெரும்பாலும் பொதுவெளிக்கு வராத படுகொலைகள் பலவற்றை இந்நூல் வழி அறியத்தருகிறார். நாவலுக்குள்ளும் செல்லாமல், பயணக் கட்டுரைக்குள்ளும் செல்லாமல் புதிய வடிவொன்றில் இந்நூல் வந்துள்ளது.

ஒவ்வொன்றையும் நான் இங்கே விவரித்து எழுதிவிட்டால் அதுவொரு நூலாகிவிடும் அபாயமிருப்பதால் சுருக்கமாக எழுதிவிடுகிறேன். நான் எழுதுவதைக் காட்டிலும் ஒவ்வொருவரும் இந்த நூலை வாசித்தால் மட்டுமே உங்களால் நிதர்சனத்தினை தரிசிக்க முடியும். இப்படியான ஒரு நூல் எம்மிடம் இருக்கிறதா என்ற கேள்விக்கு கேள்வியோடு நிற்காமல் பதிலளிக்கும் முகமாக ஆவணமாக்கி அனைவர் முன்னும் தந்திருக்கிறார்.

எப்போதும் அலைபேசியில் உரையாடும்போது ஓவியர் புகழேந்தி ஐயா அவர்கள் ஒன்றைச் சொல்லி மனம் வெதும்புவார். எந்த தமிழகம் விடுதலை வேட்கையோடு செயல்பட்ட புலிகளை ஆதரித்ததோ அதே தமிழகத்தில் புலிகளை கொச்சைப்படுத்தி எழுத களம் அமைத்துத் தருகிறார்கள். இது தெரியாமலே பலர் இந்த புதைக்குழிக்குள் வீழ்ந்துகிடக்கின்றனர். ஆயிரம் கைக்கொண்டு தடுத்தாலும் சூரியனை மறைத்திடத்தான் முடியுமா? என்பார். உண்மைதானே? சமீபத்தில் நடந்துமுடிந்த சென்னை புத்தகச் சந்தையில் எதிரும் புதிருமாக எழுதிவந்த ஈழ எழுத்தாளர்கள் ஒன்றாய் நின்றிருந்த காட்சியை காண நேர்ந்தது. இதுவொரு நல்ல முன்னேற்றம்தான். இவர்கள் ஒன்றாகியது கண்டு கிண்டலாகவும், தூற்றியும் எழுதியவர்களையும் காணமுடிந்தது. "நாம் ஒன்றாதல் கண்டு எம் பகைவர் எங்கோ மறைந்தனர்" என்ற கவிஞரின் வரிகளே நினைவிற்கு  வருகிறது.

வெற்றிபெற்றவர்களே வரலாற்றை எழுதுகிறார்கள். அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக தோற்கடிக்கப்பட்டவர்களை மேலும் காயப்படுத்துவதாகவே அமைகிறது. தோற்கடிக்கப்பட்டோர் எழுதும் வரலாறுகள் எப்போதும் அனைவருக்குமானதாக அமையும். நாம் நம் வரலாறுகளை மீட்டெடுக்க இதுபோன்ற ஆவணங்கள் இன்றியமையாத ஒன்று. ஈழவரலாற்றில் புலிகளின் தமிழீழ அரசின் வரலாற்றை அறிந்துகொள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய அவசியமான நூல் இதுவென்பேன்.

- சுகன்யா ஞானசூரி
02/02/2020

பதிப்பகம்: தோழமை
விலை: 400.

Monday, January 20, 2020

சிறீலங்காவின் தேசியத் தற்கொலை - பிரமிள்

இதுவொரு தாமதமான வாசிப்புதான். ஆனால் பிரமிளை கவிஞனாக, கறாரான விமர்சகனாக அறிந்திருந்த எனக்கு இந்த நூலை வாசித்த பிறகு சிறந்த சமூக நோக்குள்ள படைப்பாளனாகவும், கட்டுரையாளனாகவும் எனக்குள் அறிமுகமாகியுள்ளார். தமிழ்த்தேசியம், திராவிடம், மார்க்சியம் போன்ற பார்வைகளிலிருந்து இலங்கையின் தமிழ்-சிங்கள இனமுறுகல் எவ்வாறு பெரும் பகையாக மாறியது, அவற்றிற்கு காரணியானவர்கள் யார்? அதில் குளிர்காய்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என 1984 வரையான காலகட்டம் வரை சட்டகப்படுத்தியிருக்கிறார்.

இலங்கையின் பூர்வகுடிகள் யார் என்பதில் துவங்கி வரலாற்று ரீதியாக நிறுவுவதும், இலங்கைத் தமிழர்-மலையகத் தமிழர்-சிங்களவர் வாக்குவங்கிகள், இவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் தோற்றுவிக்கப்பட்டதன் காரண காரியங்களும், விஜயனின் வருகையில் ஆரம்பித்து ஈழ ஆயுதப் போராளிகள் உருவாகிய காலங்களுக்கிடையிலான காலகட்டத்தை சிறிய நூலுக்குள் இரத்தினச் சுருக்கமாக சொல்லியிருக்கிறார்.

1984 க்கு பிறகு நூல் விரிவாக்கம் கண்டதா தெரியவில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் வரைமட்டுமல்லாது இன்றும் புத்த பிட்சுகளுக்கு அச்சப்பட்டே சிங்கள ஆட்சியாளர்கள் தமிழின விரோதப் போக்கை கைக்கொள்கின்றனர்.

மதம் மக்களுக்கான அரசியலை சீரழிக்கும் ஒரு லாகிரி.

- சுகன்யா ஞானசூரி
20/01/2020

Sunday, January 19, 2020

துரோகங்களின் சதிராட்டம்

புள்ளிகள் கரைந்தபொழுது - ஆதிலட்சுமி சிவக்குமார்

துரோகங்களின் சதிராட்டம்.
*****************************

நம்பிக்கைத் துரோகங்களால் வீழ்த்தப்படும்போது அது தரும் வாதை வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஒன்று. 2009ல் எமது தேசம் வீழ்த்தப்பட்டது போது அடைந்த அதே வேதனையும், மனவுளைவும் 2019 முடிவில் எனது தொழிலில் நான் வீழ்த்தப்பட்ட போதும் உணர முடிந்தது. தீ விபத்து ஏற்பட்ட அந்த இரவில் (எனக்கு மகவு பிறந்து ஒரு வயதாக இருக்கும் இரு தினங்களுக்கு முன்னர்) உயிரைக் துச்சமாக நினைத்து நிறுவனத்தைக் காப்பாற்றி எனது தனித்துவத்தை, தரத்தை நிரூபித்தாலும் அந்த தீ எனது உடலில் கொடுத்த எரிச்சலைக் காட்டிலும் நம்பிக்கைத் துரோகத் தீ மிகவும் எரிச்சலாக இருக்கிறது. சிறியவர்கள் பெரியவர்கள் என்கிற பாகுபாடு மட்டும் துரோகமிழைப்பவர்களில் இருப்பதே இல்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. தற்கொலை ஒரு கோழைத்தனம் என நண்பர்களுக்கு அறிவுரை சொன்னாலும் இப்படியான சூழலில் அது எப்படி எழுகிறது என்பதை அறியும் போதுதான் ஊருக்கு மட்டும்தானா உன் உபதேசம் என மனம் அதைத் தவிர்க்கச் செய்தது வாசிப்பு என்பதைக் காட்டிலும் அன்பான ஆதரவான வார்த்தைகள் அவசியம் என்பதை உணர முடிந்தது. அப்படியான அன்போடும், ஆதரவோடும், தன்னம்பிக்கையையும் எனக்குக் கூறிய முகநூல் அன்புகளுக்கும், உள்பெட்டியில் உரையாடிய நட்புகளுக்கும், அலைபேசிய அரசெழிலன் ஐயா, ஓவியர் புகழேந்தி ஐயா போன்றவர்களுக்கும் பேரன்பும் நன்றிகளும். என்ன செய்வது அனைத்தையும் கடந்துதானே செல்ல வேண்டும். இதுவும் கடந்து போகும் என்பது உண்மைதான்.
*****************************

எந்த ஒன்றையும் வாசிக்க இயலாத மனநிலையில் இருந்த என்னிடம் ஆதிலட்சுமி சிவக்குமார் அவர்கள் எழுதிய "புள்ளிகள் கரைந்தபொழுது" நாவலை அனுப்பி இதை வாசிங்க தம்பி உங்கட மனத்துயர் இதன் கீழ் சிறு புள்ளியாகும் என்றார் ஓவியர் புகழேந்தி ஐயா. வாசித்து முடித்த பிறகு இது எவ்வளவு உண்மை என்பதை உணர்ந்தேன்.

புள்ளிகள் கரைந்தபொழுது நாவல் 2009 ல் தோற்கடிக்கப்பட்ட ஈழத் தமிழினத்தின் பாடுகளை செல்வராசா எனும் சாமான்ய கதாபாத்திரத்தினூடாக செல்வபுரத்தில் துவங்கி நந்திக்கடலில் மெளனிப்பது வரையான காலவெளிக்குள் நிகழ்ந்த அவலங்களை இரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்துகிறது.

செல்வராசாவை நம்பி வழிகளில் இணையும் இரண்டு மூன்று குடும்பங்களையும் உள்ளடக்கி ஒவ்வொரு ஊராக இடம்பெயர்வதன் வலிகளையும் வேதனைகளையும் கண்முன்னே காணும் அவலங்களையும் சுமந்துகொண்டு நந்திக்கடலில் இராணுவப் பகுதிக்குள் தன்னை நம்பி வந்தவர்களையும் சிக்க வைத்துவிட்டோமோ எனும் கையறு நிலையில் நிற்கும் செல்வராசா ஒரு குறியீடாகவே எனக்குத் தோன்றுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து 1995 ல் வன்னிக்கு இடம்பெயர்ந்த செல்வராசா கிளிநொச்சியிலிருந்து சற்றுத் தொலைவில் கண்டி வீதியில் செல்வபுரத்தில் ஒரு வீட்டை கடன் பட்டு கட்டிமுடித்து வாழ்ந்த நிலையில் மீண்டுமொரு இடப்பெயர்வு மனச்சிதைவுகளை ஏற்படுத்துகிறது. நாவலின் ஆரம்பத்தில் வருகின்ற பூவரச மரத்தின் காட்சிகளும் வர்ணனைகளும் பெருமாள் முருகனின் மாதொருபாகனை நினைவுபடுத்தினாலும் இரண்டும் வேறு வேறு களம்.

விமானங்களின் வகைகளையும், குண்டுகளின் வகைகளையும், வகைதொகை இல்லாமல் அழிக்கப்பட்ட சனங்களையும், சிதறிக்கிடந்த உடலங்கள், அழக்கூட நேரமின்றி சடலங்களை போட்டது போட்டபடியே விட்டுவிட்டு ஓடும் மனிதர்கள், இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்குள் நிலவுகின்ற ஒற்றுமைகள், வேற்றுமைகள், பொருள் இழப்பு, இடப்பற்றாக்குறை, அரசியல் பழிதீர்ப்புகள், சமாதான காலம் ஏற்படுத்திய மனமாற்றம், அரசியல்வாதிகளின் சுகபோக வாழ்வு, காட்டிக்கொடுத்தல், துரோகத்தின் சதிராட்டம் என மனசை கனதியாக்கும்படியாகச் செய்கிறது. இடையிடையே கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலாமல் மூடி வைத்துவிட்டு மனதைக் திடப்படுத்திக்கொண்டே வாசிப்பை தொடர முடிந்தது என்றால் மிகையில்லை.

"நான் அழியலாம்; நாங்கள் அழியக்கூடாது" என்ற கூற்றுக்கமைய ஒரு வரலாற்றுச் சம்பவத்துக்குள் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை கூறிச் செல்வதினூடாக அடுத்த தலைமுறைக்கு எமது வாழ்வின் துன்பியல் நிகழ்வுகளை அறியத்தந்து ஆவணமாக்கியிருக்கிறார். இந்நாவலை ஒவ்வொருவரும் தவறாமல் வாசிக்க வேண்டும். ஏனெனில் இதுவொரு நேரடிச் சாட்சியம்.

- சுகன்யா ஞானசூரி
19/01/2020.

ஆசிரியர்: ஆதிலட்சுமி சிவக்குமார்
பதிப்பகம்: தோழமை
விலை: ₹250.

Thursday, December 12, 2019

தமிழக வாழ் ஈழ அகதிகளும் இந்தியக் குடியுரிமையும்

#CAB

2009 ல் தி.மு.க-காங் கைவிட்டதாகக் கதறிய எம் உறவுகளே 2019 ல் அ.தி.மு.க-பாஜக முதுகில் குத்திவிட்டதே. என்ன செய்யப் போகிறோம்? ஈழத்தமிழர்கள் மத மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை இனியாவது உணர்ந்துகொள்ளுங்கள்.

இந்து ஈழம் பெற்றுத்தர மத்திய அரசு முன்வருமென சொன்ன அந்த புரட்சிப் பாவலனை நினைத்து அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை. ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத் தலைவரின் செயல்பாடுகள் மிகவும் மோசமான ஒன்று. அவர் அகதிகளின் பிரதிநிதித்துவத் தலைவர் இல்லையே?

போரில் பயந்து ஓடியவர்கள்தானே நீங்கள்? இங்கே நாங்கள் உயிரோடு வாழவில்லையா? போர்தான் முடிந்து விட்டதே நாடு திரும்பி அறப்போராட்டம் செய்யலாம்தானே? என்பது போன்ற இழிவான சொற்களை வீசிக்கொண்டிருக்கிறார்கள் ஈழத்திலே (நாம் நம்பிக்கொண்டிருக்கும் நாடு) இருக்கின்ற இளைஞர்களில் சிலர். அறப்போராட்டம் தோற்றுத்தான் ஆயுதப் போரட்டத்துக்குள் தள்ளப்பட்டோம் என்கிற வரலாறு கூடவா இவர்களுக்குத் தெரியவில்லை? சரி இப்போது இப்படிப் பேசுகின்ற இவர்கள் தங்களுடைய காணிகளை இங்குள்ள அகதிகளுக்கு (நாடு திரும்பும் பட்சத்தில்) பகிர்ந்தளித்து வாழ்வதற்கு தயாராக முன்வருவார்களா? வரமாட்டார்கள்.

தமிழகத்தில் உள்ள அகதிகளைப் பார்த்து வீசும் வசைச்சொற்களை அமெரிக்க, ஐரோப்பிய தேசங்களில் உள்ள "புலம்பெயரிகளை" (அவர்கள் அகதிகள் என்ற சொல் இழிவானது என்பதால் புதிதாக கண்டடைந்து மாற்றாக பயன்படுத்தும் சொல்) நோக்கி வீசமாட்டார்கள். ஏனெனில் அங்கிருந்து கிடைக்கின்ற பணம்தான் காரணம்.  அங்கிருந்து அவர்கள் பாடுபட்டு அனுப்புகின்ற செல்வங்களில் வசதியாக இருந்துகொண்டு எப்படி வேண்டுமானாலும் தமிழக அகதிகளை உதாசீனப்படுத்தலாம் என்கிற வீராப்பை இவர்களுக்கு யார் வழங்கியது? இங்குள்ள அகதிகள் உங்களுக்கு கிள்ளுக்கீரைகளா?

தமிழினம் பண்டைய காலந்தொட்டு ஒற்றுமையின்மையாலே பல்வேறு குழுக்களாக பிளவுபட்டுக் கிடக்கிறது என்பதுதான் வரலாறு. என்றைக்குமே இவர்கள் ஒற்றுமைக்கான காய்களை முன்னகர்த்த மாட்டார்கள்.

தமிழகத்தில் வாழ்கின்ற 63000 பேரில் 30000 பேர் வரை இந்திய வம்சாவழியினர். இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இருநாட்டு அரசுகள் காகிதங்களில் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களால் வாழ்விழந்து நிலமிழந்தவர்கள். இவர்களை அங்கேயும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இங்கும் இப்போது கைவிட்டு விட்டார்கள். போர்க்காலத்தில் கடல் தாண்டிய ஒரே தவறு சட்டவிரோத குடியேறிகளாக்கியது. இனி என்ன செய்வது? இன்னொரு பாரிய இடப்பெயர்வுக்கு நாம் தயாராகுவதைத் தவிர. சாதிய வன்மங்களும், மத பேதமைகளும், வர்க்க முரண்களும் கொண்ட இலங்கைக்கு அனுப்புவதைக் காட்டிலும் இந்துமகா சமுத்திரத்தினுள் எல்லோரையும் கொன்றழித்துவிடுங்கள்.

தமிழக அதிகளைக்குறித்து அக்கறையோடு இந்திய மக்களவையில் குரல்கொடுத்த, குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முனைவர் இரவிக்குமார், தொல். திருமாவளவன் மற்றும் திமுக வின் நல்லுள்ளங்களுக்கு இந்நேரத்தில் அகதிகளாகிய நாம் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

அகதிகளாகிய நமக்குள்ளும் பல்வேறு குழுவாதங்கள் இருப்பதை ஒத்துக்கொண்டு அடுத்தகட்ட முன்னகர்வை மேற்கொள்வோம்.

- சுகன்யா ஞானசூரி
12/12/2019

Wednesday, September 25, 2019

யாவும் சமீபித்திருக்கிறது- கடங்கநேரியான்

யாவும் சமீபித்திருக்கிறது- கடங்கநேரியான்.

வாழ்வின் அலைக்கழிவுகள், நிலத்தின் மீதான பற்றுதல், சாவின் மீதான இளக்காரம், தனித்திருப்பவனின் மன வேட்கைகள் என தத்துவார்த்தமான எளிய நடையில் கவிதைகளை யாத்திருக்கிறார் என்பதனைக் காட்டிலும் கவிதைகள் அவரை ஆட்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு கவிதையையும் வாசித்து முடித்ததும் அங்கிருந்து புதியதொரு கவிதை வாசிப்பவர் உள்ளத்தில் ஊற்றெடுப்பதை உணரலாம். தத்துவ விசாரங்களைத் தாண்டி எதார்த்த வாழ்வினை அத்தனை கவிதைகளும் வாசிப்பவர் நெஞ்சுக்கு எடுத்துச் செல்கின்றன. இழந்துவிட்ட வாழ்வினை மூளை தேடிக்கொண்டிருக்கக்கூடும் நினைவுகளில்.

இன்றைய அதிகார வர்க்கங்கள் ஆட்டுவிக்கும் நிலையில் ஒரு மந்தியென ஆட மறுப்பவர்கள் தம் ஆதிமிருகத்தை கண்டடைவர்.

"மரண மாலை" ல் உள்ள குறுங்கவிதைகளை வாசித்தால் அதிகாரத்தின் போதையில் ஆடுபவர்கள், பணம், பதவி போகம் என சம்போசித்திருப்வர்கள் பற்றற்று போகும் சாத்தியக்கூறுகள் கவிதையை உள்ளார்ந்து ஏற்பதில் இருக்கிறது.

"எழுத்தாளர்கள்" கவிதையில் தமிழ் எழுத்துலகை பீடித்திருக்கும் யார் ஆகச் சிறந்தவர் என்ற கேள்வியை எழுப்புகிறது. நாளை மற்றொரு நாளே என இலக்கிய குழுவாத சச்சரவுகளில் காயக் கட்டுகளோடு மருத்துவமனையில் கண்ணயரும் எழுத்தாளன் வேறு யாருமல்ல கடங்கநேரியானே. அவ்வளவு பகடியும், வேதனைகளும் நிறைந்திருக்கின்றன அக்கவிதைகளில்.

எப்போதும் வென்றவர்களே வரலாற்றை எழுதுகின்றனர் என்பார்கள். வென்றவர்கள் கூறும் வரலாற்றைக் காட்டிலும் தோற்றவர்கள் கூறும் வரலாறு அதிக அழுத்தம் மிகுதியானது. இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் உலக வல்லரசுக்களின் பொருளாதார சந்தைக்கும், சுரண்டலுக்கும் தடையாக இருப்பார்கள் என்ற காரணத்தால் தோற்கடிக்கப்பட்ட தமிழீழத்தின் போராட்ட வரலாறு "மாவீரன்" கவிதையில் உள்ளவாறுதான் சமகாலத்தில் பார்க்கப்படுகிறது.

புலம்பெயர் நிலத்தில் மனப்பிறழ்வுகளை உருவாக்கும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளில் "யாவும் சமீபித்திருக்கிறது"  வாசிப்பு எனக்கு தப்பித்தலைத் தருகிறது. 

சுகன்யா ஞானசூரி
25/09/2019.

Monday, September 23, 2019

வெக்கை - பூமணி


ஒரு நாவலை வாசிக்கும்போது வாசிப்பவரின் வாழ்வில் நிகழ்ந்த ஏதோவொரு நிகழ்வு இழையோடியிருந்தால் வாசிப்பின் கனதியை உணர முடியும். இவற்றில் ஒன்றையேனும் நான் அனுபவிக்கவில்லையே என வசிப்பவரின் மனதில் ஏக்கத்தையேனும் உருவாக்கும். "பூமணியின் வெக்கை" எனக்கு முதல்வகை வாசிப்பையே தந்தது.

ஒரு சமூக அமைப்பில் உறவுமுறைகள், வர்க்கம், பொருளாதாரம், அரசியல், சூழலியல், மூலதனம் இன்னபிறவென அங்கம் வகிக்கும். அல்லது ஒன்றையொன்று சார்ந்து இருக்கும். இவற்றில் ஏதோவொன்றில் உராய்வு ஏற்படுகையில் பகை பற்றிக்கொள்கிறது. இது ஒவ்வொரு சமூக அமைப்பிலும் இயல்பான ஒன்று. அப்படி இயல்பாக கரிசல் மண்ணின் வட்டார மொழியோடு அந்த மண்ணின் வெக்கையை வாசிக்கும் ஒவ்வொருவர் மனங்களுக்கும் கடத்திவிடுகிறார்.

இது கொழகொழப்பான திரவத்தின் வெக்கையோடு துவங்குகிறது. ஒரு பழிவாங்கும் கதையென தட்டையாக நாம் சொல்லிவிட முடியாது. இலக்கிய அழகியலோடு கரிசல் மண்ணின் வாழ்வை முப்பது ஆண்டுகளுக்கு பின்பு இன்றும் பொருத்திப் பார்க்க முடிகிறது. காலங்கள் வேண்டுமானால் மாறலாம். காட்சிகள் சமகாலத்திலும் எவ்வித மாற்றங்களும் இன்றி தொடர்ந்தபடிதான் இருக்கிறது.

சிறுவன் சிதம்பரம், சிதம்பரத்தின் தந்தை பரமசிவம், சிதம்பரத்தின் அம்மா, தங்கச்சி, சிதம்பரத்தின் மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, சிறுவயதில் இறந்து போகும் சானகி, வடக்கூரானால் அநியாயமாக கொல்லப்பட்ட சிதம்பரத்தின் அண்ணன், சிதம்பரத்தின் நாய் என இவர்களுக்குள் உள்ள அன்பு, பாசம் என்பவற்றால் வடக்கூரானை கொன்ற பின்னால் ஏற்படும் அலைச்சல் என சொற்ப கதைமாந்தர்களை வைத்து குறைவான பக்கங்களில் நிறைவாக தந்திருக்கிறார் வெக்கையை.

வடக்கூரானை கொன்ற நாள் துவக்கம் கோர்ட்டில் ஆயராகும் நாளுக்குள் உள்ள எட்டு நாட்களுக்குள் கரிசல் மண்ணின் காடு, மலை, வயல், வரப்பு, கண்மாய், வாய்க்கால், சுடலை, என இரவு பகலாக இடம் மாற்றி இடம் மாற்றிச் செல்லும் தந்தைக்கும் மகனுக்குமான உரையாடல்களாகட்டும், அத்தை மேலான பாசமாகட்டும், மாமனின் தைரியமாகட்டும், அம்மாவின் வைராக்கியமாகட்டும் ஒவ்வொரு பாத்திரமும் கனகச்சிதமாக செதுக்கப்பட்டிருக்கிறது.

இளங்கன்று பயமறியாது என்பார்கள். அப்படியாகத்தான் அவன் மரம் ஏறி பதனிப் பானையை கொண்டாந்து சோறாக்கிவிட்டு மீண்டும் அதே இடத்தில் கட்டுவதும், தேன் எடுப்பது, அத்தைக்கு பிடிக்குமென கருவேலம் பிசின் சேகரிப்பது, கரும்புத் தோட்டத்தில் மலங்காட்டுப் பன்றியை வெடி வைத்துக் கொல்லலாமா என நினைப்பதும் அந்த வயசுக்குரித்தான துடுக்குத்தனங்கள்.

தந்தை என்பவர் எப்போதும் பிள்ளைகளுக்கு வாழ்வைக் கற்றுக்கொடுக்கும் ஆசான். நீச்சல் கற்றுக்கொள்ள சுரைக்குடுவைகளை கேட்டவனை கிணற்றுக்குள் தள்ளிவிட்டு நீச்சலின் முதல்படியான பயத்தை போக்குவது முக்கியமானது. 1994 ல் யாழ் அச்சுவேலி மண்ணில் அப்போது எனக்கு பத்து வயது எங்கள் வயல் கிணற்றுக்குள் இடுப்பில் கயிறை கட்டிக்கொண்டு தேங்காய் வத்தையில் நீந்தும்போது வத்தையை தட்டிவிட்டு மூழ்கவிட்ட கணங்கள் எனக்குள் வந்து செல்கிறது. அந்த நீச்சல் பயிற்சி பின்னாளில் 1996ல் தனுஷ்கோடி கடலில் அகதியாக இறக்கிவிட்டபோதும் 1997 ல் புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை அகதிகள் முகாமுக்கு அருகில் உள்ள கண்மாய்க்குள் குளிக்கும்போது மூழ்கிய உடன்பிறப்புகளை காப்பாற்றியது என நினைவுகளை கிழப்பிவிட்டுச் செல்கிறது.

பெண்பாத்திரங்களின் இளகிய மனங்கள் தங்கள் வீட்டு ஆண்களுக்கு ஒரு பிரச்சினை என வருகையில் எப்படி இறுக்கமடைகிறது என்பதை அம்மா, அத்தை, சித்தி போன்றவர்களின் கொந்தளிப்பான மனங்கள் வெளிப்படுத்துகிறது. அதிலும் மாமாவை கட்டிவந்த நாள்முதல் பயந்த சுபாவமாக இருந்த அத்தை தைரியமானவளாக மாறுவது, தலைமறைவாக இருக்கும் மாமாவுக்கு காட்டுக்குள் சாப்பாடு எடுத்துப் போவது பெண்களின் இயற்கையான மனோவெளியை காட்டுகிறது.

சிறு நிலத்தைக் கூட விட்டுவைக்காமல் ஏமாற்றி மிரட்டி எழுதி வாங்கும் வடக்கூரான், ஜின்பேக்டரி முதலாளி போன்றவர்கள் செய்யும் அக்கிரமங்களும், அவர்கள் செய்த கொலைகளுக்கு தண்டிக்கப்படாமல் பெரிய மனிதர் எனும் போர்வையில் போலிஸின் அனுசரனையோடு வெளியே உலாவுவது என பணநாயகம் படுத்தும் பாட்டை தோலுரித்துக் காட்டுகிறார். பரமசிவத்தின் விவசாய நிலத்தின் மீதான வடக்கூரானின் கண் பகையை உருவாக்குகிறது. ஞாயத்தின்படி விவசாயம் செய்து சாப்பிட நினைப்பவனை அதிகாரத்தின் துணையோடு அடக்கியொடுக்க முனைபவர்களை தோலுரித்துக் காட்டுகிறார்.

பண்ணை நிலங்களின் பின்னணியில் எத்தனை ஏழை, எளிய மனிதர்களின் விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டிருக்கும்? வியர்வை சிந்த பாடுபட்டவர்களுக்கு இரத்தமும், கண்ணீருமே மிச்சமாகிறது.

வெற்றிப் படங்களைத் தரும் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற பெயரில் இந்த நாவல் திரைப்படமாக வெளியீடு காண இருக்கிறது. ஒட்டுமொத்த நாவலையும் திரைக்குள் குடுக்க முடியாது. குறைந்தபட்சம் கதையில் பங்கம் இல்லாமல் இருந்தால் சிறப்பு. 

- சுகன்யா ஞானசூரி
23/09/2019

Monday, July 29, 2019

கடவுளின் முகம்?

நடுநிசி தாண்டிய மாநகரத்தின் சாலையில்
நடந்துகொண்டிருக்கிறேன்.
இரண்டாம் காட்சி முடிந்த திரையரங்கென
சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது.

இயலாதவனின் குறியெழுப்பத்தினதாக
இருளைப் போக்கும் முயற்சியில் தோல்வியுற்று
மின்னும் விளக்கின்மீது காற்று
தூசிகள்கொண்டு தழுவிச் செல்கிறது.

பெயர்தெரியாப் பூச்சிகளின் சப்தத்தில்
கானகத்தின் படிமம் வந்து செல்கிறது.

நடைபாதைகளில் உறங்கும் இத்தேசத்தின் கடவுள்களை
நாளொரு அறிவிப்பின் பெயரால் இல்லாதழிக்க
சைத்தான்கள் பல்வேறு அவதாரங்களில் அரிதாரமிடுகிறது.

யாசகப் பாத்திரங்கள் சுத்தமாயிருக்கிறது
கடவுள் கருணை காட்டுவதேயில்லையென
விசனத்தோடு உறங்காமல் புரண்டுகொள்கிறது பசித்த வயிறு.

கடவுளின்மீது மோகித்திருக்கும் கலாச்சாரக் காவலர்களுக்கு
சைத்தான்கள் பரிசளித்திருக்கும் சொற்கள்
பல்லிளித்துக்கொண்டிருக்கின்றன சுவர்கள்தோறும்.

கருவறை புழுக்கம் தாளாமல்
தூமைத்துணியை மாற்றிவர
ஆலயத்திலிருந்து வெளியேறிய கடவுள்
சைத்தானால் வழிமறிக்கப்பட்ட அந்த முடக்கில்
அவசர ஊர்தி யாரையோ சுமக்கத் துவங்கியது.
இரவு என்பது உறங்குவதற்கில்லை என்ற
யவனிகாவின் கவிதைகளோடு உறங்கிப்போனவன்
விரித்த காலை செய்தித்தாளில்
வன்புணர்ந்து கொல்லப்பட்டவளின் முகம்
நேற்றைய இரவில் பார்த்த கடவுளுடையதாயிருந்தது.

- சுகன்யா ஞானசூரி
28/07/2019

Sunday, July 14, 2019

ஜாம்பழம்

என் மகளின் கையில் இருக்கும் இப்பழத்தினை ஈழத்தில் ஜாம்பழம் (jam fruit) என்போம். இங்கே தேன்பழம், சீனிப்பழம், நெய்ப்பழம் என்ற பெயர்களில் அழைக்கிறார்கள். அற்புதமான இனிப்புச் சுவையுடையது. மரம் நல்லா சடைத்து நிழல் தரும் வகையானது.

ஈழத்தில் நான் படித்த கொன்வேன்ற் (அச்சுவேலி-பலாலி போகும் சாலையில்) பள்ளியில் முதன்முதலில் இம்மரத்தினை பார்த்திருக்கிறேன். பழம் பறித்து தின்றது மீண்டும் நினைவிலாடுகிறது.

இப்போது குடியிருக்கும் வீட்டைச் சுற்றி ஐந்து மரம் நிற்கிறது. பழமோ பழுத்து விழுகிறது. பறவைகள் அதிகமாக வந்து சந்தோசத்தை அள்ளித் தருகிறது. பக்கத்து வீட்டுப் பாட்டி சொன்னாங்க சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து என்று.

அடர்த்தியாக பற்றைபோல மண்டிக் கிடந்த இந்த மரங்களை சில மாதங்களுக்கு முன்பு தறிக்க வேண்டும் என குடியிருக்கும் வீட்டின் ஓனர் அம்மா சொன்னபோது தடுத்துவிட்டு சில கிளைகளை மட்டும் வெட்டி சரிசெய்ததின் பலனை இந்தக் கோடையில் உணர்ந்து கொண்டனர்.

பறவைகளின் உன்னத சப்தங்களோடு காலை விடியல் அற்புதமான கவிதை.

- சுகன்யா ஞானசூரி
14/07/2019.

Monday, June 24, 2019

மொழிபெயர்ப்பு...



மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழி பேசும் சமூகத்தின் பண்பாடு, கலாச்சாரம், கலை இலக்கியத்தினை பிற மொழி பேசும் சமூகங்களின் மொழியில் அறியத் தருவது. தருமொழி, பெறுமொழி, வழிமொழி என மூன்றாக மொழிபெயர்ப்பின் தன்மையை குறிக்கிறார் முனைவர் ம. இளங்கோவன். தருமொழி என்பது மூல நூல். பெறுமொழி என்பது எந்த மொழிக்கு பெயர்க்க உள்ளோமொ அதுவே. வழிமொழி என்பது எடுத்துக்காட்டாக ரஷ்ய மூல நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கொண்டுவருவதாகும். பெரும்பாலும் தமிழில் வழிமொழி வழியாகவே நிறைய படைப்புகளை கொண்டுவருகின்றனர்.

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் யாவும் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" - மகாகவி பாரதி. மகாகவியின் கூற்றினை மெய்ப்பிற்கும்படியாக தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பாளர்கள் (என் வாசிப்பின் சிற்றறிவின் நினைவில்) சோவியத் ருஸ்யாவிலிருந்தும், லத்தீன் அமெரிக்காவிலிருந்தும், ஆப்பிரிக்காவிலிருந்தும், சீனம், வங்காளம், மலையாளம் என பன்மொழிகளின் அதி உன்னதமான படைப்புகளை தமிழுக்குத் தந்துகொண்டே இருக்கிறார்கள். எம்.ஏ.சுசீலா, எஸ்.பாலசுப்ரமணியன், வெ.சிறிராம், ஜி.குப்புசாமி, பிரம்மராஜன், சோ.தர்மன், தேவதாஸ், அமரந்தா, த.ந. குமாரஸ்வாமி, கே. கணேஷ், வீ.ப.கணேசன், ஏ.ஜே. கனகரட்ணா, இந்திரன், சமயவேல், கார்த்திகைப் பாண்டியன் போன்றவர்களின் பங்களிப்பில் தமிழில் பல்வேறுபட்ட இலக்கியச் சுவைகளை நாம் சுவைத்து வருகிறோம். சரி இப்படியே தமிழுக்கு இறக்குமதி செய்து சுவைத்துககொண்டிருந்தால் எம் தமிழ் சீரும் சிறப்புமாக வளர்ந்து விடுமா? தமிழ் மொழியினை பிற மொழி பேசுவோரின் மொழிகளில் கொண்டு சென்றால்தானே எம் தமிழின் சிறப்புகளை பிறர் அறியச் செய்ய முடியும். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லவா?

கவிஞர் அமரன், லதா ராமகிருஷ்ணன் போன்றவர்கள் தமிழ்க் கவிதைகளை பிற மொழிகளுக்கு கொண்டு சேர்க்கின்றனர். சமீபத்தில் எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன் அவர்கள் ஐந்து மொழிகளில் தமிழ் எழுத்துக்களை கொண்டு சேர்க்கும் சிறப்பினை செய்து வருகிறார். நாம் மாவுச் சண்டைகளுக்கும், மன்னர்களின் செய்கைகளுக்குமாக மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறோம். "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்" - மகாகவி பாரதி. எனும் மகாகவியின் இந்த வரிகளை மெய்ப்பிக்கத் துவங்கியிருக்கும் இவர்களை அடியொற்றி நாம் தமிழை பிற மொழிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உலகம் உள்ளங்கையில் சுருண்டு கிடக்கும் இந்தக் காலத்தில் நாம் தமிழ்மொழியினை காக்கத் தவறுவோமாயின் அடுத்த தலைமுறை நம்மைக் காறி உமிழும். இது மொழித் திணிப்பல்ல. மொழிகளை காக்கும் ஒரு உத்தி. "தமிழ் வாழ்க" என உரைத்தால் மட்டும் போதாது. அவற்றை நாம் செயல்பாட்டில் காட்ட வேண்டும். தமிழ்ப்படைப்புகளை பிற மொழிகளுக்கு கொண்டு சேர்க்கும் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

- சுகன்யா ஞானசூரி
24/06/2019

Saturday, June 1, 2019

நிலவெளி- இதழ் அறிமுகம்

எல்லா இதழ்களும் முதலில் வருவது போல் இறுதிவரை வருவதில்லை சிற்றிதழ்களின் ஆயுள் என்பது அதில் வரக்கூடிய படைப்புகளை பொருத்து மாறுபடுகிறது. ஆரம்பத்தில் காத்திரமான படைப்புகளை தரும் சிற்றிதழ்கள் போகப்போக தேய்ந்து போகிறது. நிலவெளியின் போக்கினை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொல்லியல் துறை சார்ந்த நல்ல விளக்கங்களை தொல்லியல் அறிஞர் திரு சாந்தலிங்கம் அவர்கள் மூலமாக தெளிவுபட வைத்திருக்கிறது அவருடனான நேர்காணல். கள ஆய்வின் மூலமே நாம் தொல்லியல் எச்சங்களை காணமுடியும். அதுவல்லாமல் சமூக வலைத்தளங்களில் இருந்து கொண்டு தொல்லியல் அறிஞர்கள் ஆக பெயர் எடுக்க முடியாது என இன்றைய தலைமுறையின் சோம்பல் போக்கினை சுட்டிக்காட்டுகிறார்.

என். ஸ்ரீராமின் துருத்தி நடனம் வட்டார வழக்கில் எழுதப்பட்ட சிறுகதை. அரிச்சந்திர புராணக் கதை நிழலாக கதையை நகர்த்திச் செல்கிறது. வட்டார மொழியில் சொல்லப்படும் கதைகள் எப்போதும் தனிக்கவனம் பெறக்கூடியவை. ஆனால் குமாரசெல்வாவின் கட்டுரை வட்டார மொழி எழுத்தாக்கத்தில் அடையும் சிக்கல்களை படைப்பு நிலையிலிருந்து பேசுகிறது. அடக்குமுறையாளர்களின் மொழிக்கும், அடக்கப்பட்டவர்களின் மொழிக்குமான வேறுபாடுகள் பாரிய அளவினதாக இருக்கிறது. ஒவ்வொரு பொருட்களுக்குமான அர்த்தங்கள் அவர்களுக்கும் இவர்களுக்கும் பேசும் வார்த்தைகளில் வேறுபடுகிறது. இவற்றை ஒவ்வொன்றாகச் சொல்லி விளக்கிச் சொல்லும்போது ஏற்றத்தாழ்வு கொண்ட வட்டார மொழிகளின் இருமுகத்தை அறிய முடிகிறது.

இப்படி இவைகள் இருக்க மூன்றாவதாக நாடற்று அகதிகளாக தமிழகத்தின் பல்வேறு வட்டாரங்களில் வசித்து வரும் ஈழத்தமிழ் அகதிகள் மூன்று தசாப்தங்களாக தங்கள் மொழிகளை, அடையாளத்தை அந்தந்த வட்டாரத்தின் வழக்கில் தொலைத்து நிற்கும் அவர்களுக்கு குடியுரிமை ஒன்றே தீர்வாக அமையும். அந்த குடியுரிமையின் சட்ட சிக்கல்கள் பற்றியும், தமிழக அரசியல்வாதிகளின் தெளிவற்ற வாக்குறுதிகள் என நண்பர் தொ. பத்திநாதனின் கட்டுரை விளக்குகிறது. "நாடற்ற அகதிகளின் வலியும் வேதனையும் பொதுவெளியில் கவனப்படுத்துமாறு சூழல் மாறியிருப்பது நம்பிக்கையளிக்கிறது." எனும் சொற்கள் சத்தியத்தின் வார்த்தைகள். எமக்கான சாதகமான இச்சூழலை நாங்கள் விவாதித்துதான் தெளிவுபடுத்த முடியும்.

குழுவாத அரசியலற்ற தமிழர், தமிழ்மொழி வளர்ச்சி சார்ந்தும், அடுத்த தலைமுறைகள் உண்மையை குழப்பமின்றி தெரிந்துகொள்ளும் ஒரு ஆவணமாக நிலவெளி  தொடர்ந்து சிறப்புற வெளிவர வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்களுடன்
சுகன்யா ஞானசூரி
01/06/2019

Friday, April 19, 2019

யாதும் ஊரே யாவரும் கேளிர்!

தமிழக நண்பர்கள் சிலரது முகநூல் பக்கத்தில் ஈழத் தமிழர்கள் மீதும், ஈழ அகதிகள் மீதும் ஒவ்வாமை இருப்பதைக் காண முடிந்தது. இதை பாசிசவாதிகள் செய்திருந்தால் நாம் கடந்து செல்லலாம். அல்லது சிறு கண்டணத்தையாவது பதிவு செய்யலாம். ஆனால் கருஞ்சட்டைக்காரர்களும், செஞ்சட்டைக்காரர்களும் ஆகிய எம் நண்பர்கள், தோழர்கள் செய்திருப்பதுதான் மனசை வலிக்கச் செய்கிறது.

"அம்மணமாக ஓட விடுவோம் என்பதும்",  "உங்களுக்குத்தான் ஓட்டு உரிமை இல்லைல மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே", உன் எல்லையோடு நீ நின்றுகொள்". என எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? இப்படியான மனநிலை பாசிச மனநிலை இல்லையா? இதைத்தான் பெரியாரிசமும், கம்யூனிசமும் கற்றுத் தருகிறதா? தேசமற்று அலையும் அகதி தேசியங்களை பேசக்கூடாதா? அவர்களுக்கு அந்த உரிமை இல்லையா? இது தனிநபர் சார்ந்த பிரச்சினை என தோழர்கள் யாரும் சமரசம் செய்வீர்களா?

தொப்புள்க்கொடி உறவுகள் எனச் சொல்வதெல்லாம் வெறும் வார்த்தைகள்தானா? அகதிகள் மீதான உங்கள் பார்வை முற்போக்கு முகமூடி அணிந்த பாசிச மனம்தானா?

அகதிகளில் தமிழ்த்தேசியம் பேசுபவர்கள், பெரியாரிசம் பேசுபவர்கள், கம்யூனிசம் பேசுபவர்கள் என பலர் இருக்கிறார்கள். அது அவரவர் புரிதல் சார்ந்தது. அவரவர் சமூக, மனநிலை சார்ந்தது. நாம் நல்லவற்றை புரிய வைக்க முயற்சி செய்யலாமே ஒழிய கட்டாயப்படுத்தக்கூடாது. ஏற்றுக்கொள்ளவில்லை எனில் சகிப்புத் தன்மையோடு கடந்து செல்ல வேண்டும். இதைத்தான் நான் வாசித்த பெரியாரும், அம்பேத்கரும், மார்கஸும் எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். நீங்கள் எப்படி இவற்றிலிருந்து தவறினீர்கள்?

2009 ன் பேரழிவுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் சிறுபான்மையாக இருக்கும் நாம் தமிழ், தமிழர் எனும் உணர்வோடு, தொப்புள்கொடி எனும் உறவோடு உங்களோடு பெரும்பான்மையாக உணர்ந்தோம். ஆனால் உங்களிலிருந்து இப்படியான வன்மத்தோடும், ஒவ்வாமையோடும் வருபவர்களைக் கண்டு நாங்கள் அச்சப்படுகிறோம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதெல்லாம் வெறும் சொல்லல்ல என்பதை நம்பும் அதேநேரம் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

- சுகன்யா ஞானசூரி
18/04/2019

Saturday, April 13, 2019

நன்றேது? தீதேது?


நன்றேது? தீதேது?

கிட்டத்தட்ட பத்து ஆளுமைகளுடனான உரையாடல்களின் தொகுப்பே இந்நூல். தரமான தாள், சிறப்பான வடிவமைப்பு மற்றும் பொக்கேற் நாவல் அளவிலான கையடக்க உருவாக்கம் என சிறப்பாக இருந்தாலும், ஒற்றுப் பிழைகளும், பத்தாவது உரையாடல் ஒன்பதாவது உரையாடலின் தொடர்ச்சியா அல்லது தனி உரையாடலா எனும் குழப்பமான அச்சமைப்பும் சரி செய்யப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பதிப்பகத்தின் கவனக்குறைவையும் அவதானிக்க முடிகின்றது.
உரையாடல்கள் பற்றி நான் சொல்வதைக் காட்டிலும் ஆளுமைகளின் என் மனதைத் தொட்ட பொன்னெழுத்துக்களை தந்திருக்கிறேன். வாசித்துப் பாருங்கள்.

என் கவிதைகளின் அரசியல் பேசும்போது அவர்களுடைய கவிதைகளின் தோல்வியை ஒப்புக்கொள்கின்றனர்.
- கடங்கநேரியான்.

வணிகத்தன்மையான நூல்களை விற்றுத்தான் இலக்கியத்தரமான நூல்களையே பதிப்பிக்க முடிகிறது. பதிப்பகத்தின் பெயரை தக்க வைப்பதற்கு இலக்கியமும், இலக்கியத்தை தக்கவைக்க வணிகமும் தேவைப்படுகிறது.
- தோழமை பூபதி.

இந்திய இலங்கை இலக்கியச் சந்தையில் புலி எதிர்ப்புதான் இப்போது நல்ல வரவேற்பு. அதுதான் செளகரியமானதும் பாதுகாப்பானதும் கவனத்தை ஈர்க்கக்கூடியதுமாய் மாறிவிட்டது.
- தீபச்செல்வன்.

தமிழகத்தில் ஈழ விடுதலை தொடர்பாக பேசியவர்கள், பேசிக்கொண்டிருப்பவர்கள், பேசப்போகிறவர்கள் எல்லோருக்கும் பின்னால் ஒரு குழுமனப்பான்மையும் சூழ்ச்சியும் இருக்கிறது.
- யுகபாரதி.

குடும்ப அமைப்பிற்குள்ளும், பொது வெளியிலும் தாங்கள் நினைப்பவற்றையெல்லாம் செய்ய முடியாதவர்களாகவே பெரும்பாலான பெண்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள்.
- தமிழ்நதி.

தமிழினத்தின் பீடையான சாதி, வர்க்க, பாலின ஆதிக்கத்தன்மைகள் களையப்பட்ட, அனைத்து தமிழ் மக்களும் சமத்துவம் என்கிற ஒரே விசையில் உரிமைகளும் பண்பாடுகளும் மீட்டெடுக்கப்பட்டு தமிழர் நிலம், அவர்களின் வளம் என்பதோடு முற்போக்கு மிக்க தேசியமாக தமிழ்த்தேசியம் இருக்க வேண்டும்.
- திருமுருகன் காந்தி.

முகாம்களில் உள்ளவர்களின் குரல் சுடுகாட்டின் அமைதியாக்கப்பட்டிருக்கிறது.
- பத்திநாதன்.

சிவப்பணுக்களும் வெள்ளையணுக்களும் நம் உடலின் உள்ளே போராடும் வரைதான் வாழ்க்கை. அது போராட்டத்தை நிறுத்தும்போதுதான் நமக்கு மரணம் சம்பவிக்கும்.
- தேன்மொழி தாஸ்.

தங்கள் மதத்தில் நிர்வாணத்தை மார்க்கமாகக் கொண்டவர்கள், ஒரு இனத்தை நிர்வாணமாக்கிப் புசித்ததும், கொண்டாடியதும் நாகரீக உலகம் இதைப் பார்த்திருந்ததும் மனிதகுலப் பண்பாட்டுக்கே அவமானமாகும்.
சுதந்திரத்துக்காகப் போராடும் மக்களின் அரசியலுக்குள் உலக அதிகார நாடுகளின் அரசியல் தலையீடு செய்தால் அது ஒரு மனிதப் பேரழிவையே பரிசளிக்கும் நயவஞ்சகமானது என்பதற்கான எடுத்துக் காட்டாக முள்ளிவாய்க்கால் அழிவு நிகழ்ந்து விட்டது.
- குணா கவியழகன்.

விடுதலையே அரசியலைத்தான் குறிக்கிறது. பக்திப் பூர்வமாக அணுகினால் பிரபாகரன் வருவார் என்பதை மட்டுமே நம்பிக்கொண்டு போராட்டம் ஒருகட்டத்தோடு முடங்கி விடும். அரசியல் பூர்வமாக அணுகினால் பிரபாகரன் வந்தாலும் வராவிட்டாலும் ஏன் வருவதாக சொல்லிக்கொண்டே இருந்தாலும் போராட்டம் அடுத்த கட்ட தேவையினை நோக்கி நகரும்.
- மகா.தமிழ் பிரபாகரன் (விகடன் மாணவ நிருபர்).

Saturday, April 6, 2019

உயிர் எழுத்தும் நானும்...

உயிர் எழுத்தும் நானும்

நீண்ட நாட்களாக உயிர் எழுத்து இதழில் எனது ஒரு கவிதையாவாது வந்துவிட வேண்டும் எனும் அவா இருந்து வந்தது. கடந்தாண்டு உயிர் எழுத்து நிறுத்தப்படுகிறது என முகநூல் பதிவுகள் வழி அறிந்து மனவருத்தம் கொண்டிருந்த சமயத்தில் உயிர் எழுத்து மீண்டும் வெளிவரும் எனும் அறிவிப்பு அளவில்லாத மகிழ்ச்சியைத் தந்தது. 2013ல் உயிர் எழுத்து இதழை அறிமுகம் செய்து வாசிக்கத் தந்தவர் ஐயா மார்க்கண்டன் முத்துச்சாமி Markandan Muthusamy அவர்கள்.


கடந்தாண்டு உயிர் எழுத்து மறுபிறப்பு எடுத்து இரண்டாவது மாதத்தில் 16/07/2018 அன்று எனது ஏழு கவிதைகளை அனுப்பி வைத்திருந்தேன். நம்பிக்கை இல்லாமல்தான். அந்த ஆண்டுக்கான சந்தாவினை கட்டிவிட்டு, சில புத்தகங்களையும் வாங்கி வரலாம் என நானும், ஐயா மார்க்கண்டன், அண்ணன் மணிகண்டன் திருநாவுக்கரசு Manikandan Thirunavukkarasu ஆகியோருடன் 22/07/2019 அன்று முதல் முறையாக உயிர் எழுத்து அலுவலகம் செல்கிறேன். அப்போதுதான் நான் உயிர் எழுத்து ஆசிரியர் சுதீர் செந்தில் Sudheer Sendhil அவர்களை பார்க்கிறேன். குடோனைத் திறந்துவிட்டு உங்களுக்கு பிடித்த புத்தகங்களை எடுத்துக்கொள்ள சொன்னார்.


அப்போது நடந்த உரையாடல் என்றும் என்னால் மறக்கவே முடியாது. எனது கவிதைகள் குறித்து ஆகஸ்ட் மாதம் இதழில் வெளியாகும் இருக்கும் இதழில் ஒரு பையன் சிறப்பாக கவிதை எழுதியிருக்காரு. அதில் கடைசி கவிதை சின்னதா இருந்தாலும் ஆழமாக இருக்கிறது என மார்க்கண்டன் ஐயாவிடம் அச்சுக்கு போயிருக்கும் இதழின் புரூப்பை தந்து வாசித்துப் பார்க்கத் தந்திருந்தார். இந்தக் கவிதைகளை எழுதிய பையன் இவர்தான் என என்னை அறிமுகம் செய்து வைத்தார். கனவு போலவே இருக்கிறது இன்னும்.


அந்த மகிழ்ச்சியை நொறுக்கும் விதமாக ஏப்ரல் 2019 இதழ் தலையங்கம். மீண்டும் உயிர் எழுத்து தன் இயக்கத்தினை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. இதழ் நடாத்தும் துயரம் என்ன என்பதை தமிழக முகாம்களில் வாழும் ஈழ அகதி மாணவர்களுக்கான "வேர் விடும் நம்பிக்கை" இதழை இற்றைவரை கொண்டுவர இயலாமல் இருப்பதினூடாக நான் அறிந்து கொள்கிறேன்.


உயிர் எழுத்து பலருக்கான முகவரி தந்திருக்கிறது என்றால் மிகையல்ல. அதில் என்னையும் அடையாளப்படுத்தியிருக்கும் உயிர் எழுத்து இனி வராது என்னும் அறிவித்தல் அகதியான துயரத்தில் மீண்டும் ஒரு துயரத்தை தருகிறது.

வேதனைகளோடு
- சுகன்யா ஞானசூரி.

Sunday, October 21, 2018

ஒடுக்கப்பட்டவர்கள் - தெணியான்




ஈழத்து எழுத்தாளர் திருமிகு தெணியான் அவர்கள் எழுதி பல்வேறு சஞ்சிகைகளில் வெளிவந்த 25 சிறு கதைகள் அடங்கிய தொகுப்பு. 1967 துவக்கம் 2006 வரையிலான காலகட்டத்தில் எழுதப்படவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட கதைகளே "ஒடுக்கப்பட்டவர்கள்" தொகுப்பு. நாற்பதாண்டு கால இடைவெளியில் கால மாற்றத்தில் சாதியம், சாதிய ஒடுக்குமுறைகள் பற்றி ஆவணமயமாக்கப்பட்ட சிறப்பான தொகுப்பு. ஈழத்தின் ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்வை பேசுகிறது. யாழ்ப்பாணத்து சாதியவாதிகளின் திமிர்த்தனத்தை ஒவ்வொரு கதையிலும் காண முடிகிறது. புலிகள் காலத்தில் சாதியம் முற்றாக அழிந்து போகாமல் வேறு வடிவில் வலம் வந்த விடையங்களை சில கதைகள் சுட்டுகின்றன. எளிமையான சொல்லாடல்கள், இயல்பான கதை சொல்லும் முறை கதைகளை தொய்வின்றி நகர்த்துகிறது.

"தீண்டத்தகாதவர்கள்" எனும் தொகுப்பினை பாரதி புத்தகாலயம் வெளியீடாக திருமிகு ஈழத்து தலித் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான சுகன் அவர்கள் தொகுத்திருந்த தொகுப்பில் தெணியான் அவர்களின் இரு சிறுகதைகளை வாசித்திருந்தேன். அந்த இரு கதைகளும் மனதில் ஏற்படுத்திய சலனத்தை " ஒடுக்கப்பட்டவர்கள்" தொகுப்பு தெளிவு படுத்தியது என்றால் மிகையாகாது. ஈழத்து தலித் எழுத்தை ஆய்வு செய்ய முனைபவர்களுக்கு இந்த தொகுப்பு ஒரு வரப்பிரசாதம் என்பேன்.

நூல்: ஒடுக்கப்பட்டவர்கள் 
ஆசிரியர்: தெணியான்
மொத்தப் பக்கம்: 200
வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகக் கடை
விலை: ₹400

(குறிப்பு: நூலகம்.ஒர்க் எனும் இணையத்தில் பிடிஎப் வடிவிலும் கிடைக்கிறது)

தோட்டியின் மகன்




மண்வெட்டி, வாளி, மலக்கிடங்கு என வாழும் இசக்கி முத்துவின் மரணம் மகன் சுடலை முத்துவை தோட்டி ஆக்கிவிடுகிறது. ஆனால் சுடலை முத்துவிற்கு தோட்டியாக வாழ்வதில் விருப்பமில்லை. அவனது எண்ணங்கள் வேறுபடுகின்றது. தோட்டிகளின் கூட்டத்திலிருந்து தனித்தே வாழ்கிறான். கடற்கரை பகுதியை சேர்ந்த தூப்புக்காரி வள்ளியை திருமணம் செய்து ஆண்குழந்தை பெற்றெடுக்கிறார்கள். மோகன் என பெயர் சூட்டப்பட்டு தோட்டியின் மகன் என தெரியாதபடி க்கு வளர்க்கின்றனர் சுடலை முத்துவும்-வள்ளியும். காலம் அப்படியேவா இருந்து விடும்? இவர்களின் கனவுகளை நிராசையாக்கி விடுகிறது.

வைசூரி, காலரா போன்ற கொடிய நோய்கள் நிகழ்வுகளின் காலத்தை தெளிவாக புலப்படுத்தும் வேளையில் தோட்டி களின் வாழ்வை நிர்மூலமாக்கி விடுகிறது. தோட்டி களை ஏய்த்து பிழைப்பு நடத்தும் ஓவர்சீயர், அவருக்கு மேலுள்ள முனிசிபல் அதிகாரி என அரச அடக்குமுறையாளர்கள். தோட்டி கள் பள்ளிக்கூடம் சென்ற வரலாற்றையும், மோகனை பள்ளியில் சேர்க்க சுடலைமுத்து செய்த தியாகங்களும், இழப்புகளும் அடுத்த தலைமுறை வாழ்வுக்கான மூலதனம். ஒடுக்கப்படுபவர்களுக்கு கல்வி கிடைத்தால் அது ஒடுக்குவோருக்கு எதிராக சுட்டுவிரல் நீட்டும் என்பதை ஒடுக்கும் வர்க்கம் தெரிந்தே வைத்திருக்கிறது. இன்றைய நீட் கல்விமுறை நவீனப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறையின் பழைய வடிவம் என்பதறிக.

தோட்டியாக வாழ விரும்பாத சுடலைமுத்து சுடுகாட்டில் காவலாளி வேலைக்கு மாறுகிறான். காலரா நோய் உச்சமடைந்து நேரம் இரவு பகலாக சிறியவர் முதல் பெரியவர் வரை தோட்டிகள் முதல் எசமானர்கள் என பிணங்கள் வந்துகொண்டிருந்தது. மரணங்கள் வாழ்தலின் உன்னதத்தினை உணர்த்துகின்றன. காலரா சுடலை-வள்ளி தம்பதியரையும் காவு வாங்கிவிடுகிறது. மோகன் மண்வெட்டி, வாளி தூக்கி மலக்கிடங்கு செல்கிறான். காலம் வெகு வேகமாக சுழன்று விடுகிறது. மோகன் சுரண்டப்படும் மக்களின் ஒற்றைக் குரலாய் ஓங்கி ஒலிக்கின்றான்.

ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு மாபெரும் பேரணியை நிகழ்த்துகின்றனர். தோழர்களின் சிவப்பு மாலைகளை தோளில் சூடி, சிவப்பு கொடியை கையிலேந்தி பேரணிக்கு தலைமையேற்று மோகன் கம்பீரமாய் முன்னால் வருகிறான். தூத்துக்குடியில் நிகழ்ந்தது போலவே அதிகார வர்க்கம் துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறது. நான்கில் ஒரு பங்காக கூட்டம் குறைகிறது. இப்போதெல்லாம் சம்பளத்தினை எண்ணி வாங்குகிறார்கள். உரிமைகளுக்காக போராடுகிறார்கள். போராட்டம் இல்லையென்றால் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகள் கிடைக்காது என்பதை சம்மட்டியால் அடித்தது போல் சொல்கிறார். மழை கரைத்து செல்லும் அந்த மண் மேட்டில் சிவப்பு மாலை வெளித்தெரிகிறது. இந்த குறியீடு கதையின் முடிவை வாசிப்பவர்கள் உணர்ந்து மன கொந்தளிப்பை உருவாக்கி விடுகிறது. மனித மாண்பினை பறைசாற்றுகிறது. மனம் அலைக்கழிப்புக்கு உள்ளாகிறது. மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

தமிழில் இதுபோன்ற ஒரு புரட்சிகர சிந்தனையை விதைக்கும் சிறந்த நாவல் வாசித்த நினைவு இல்லை. அதியற்புதமான சிவப்பு சிந்தனையை விதைக்கும் எழுத்தை தந்த மலையாள எழுத்தாளர் தகழியாருக்கும், தமிழில் மொழி பெயர்த்த சுந்தர ராமசாமி அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

நூல்: தோட்டியின் மகன்
ஆசிரியர்: தகழி சிவசங்கரன் (தமிழில் சுந்தர ராமசாமி)
மொத்தப் பக்கம்: 176
வெளியீடு: காலச்சுவடு
விலை: ₹175.

Tuesday, October 9, 2018

பின்நவீனத்துவம்-புலம்பல்

சங்க இலக்கிய புரிதலுக்கு பள்ளியில் கோனார் நோட்ஸ் போடாமல் நேரடியாக விளக்கப்படுத்தியிருந்தால் பின்நவீனத்துவ கவிதைகளின் புரிதல் பற்றிய முறைப்பாடுகள் எழாமல் இருக்கும் எனக் கருதுகிறேன். பின்நவீனத்துவம் பற்றி நாம்தான் தேடித் தேடி வாசித்து புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் நாம் விளக்கவுரைகள் கோரி நிற்போமாயின் சங்கம்-நவீனம்-பின்நவீனம் போன்றவற்றிற்கு இடையிலான இடைவெளிகளின் நிலையை இன்னொரு புதிய இசத்தின் தோற்றுவாய்க்குள் வெற்றிடத்தை உருவாக்கும் துர்ப்பாக்கியத்தினை தமிழ் மொழி ஏற்கும்.

சங்கத்துக்கு பிறகு நம்மிடம் சொல்லும்படியான காலம் இல்லை. மேலைநாடுகளில் இருந்துதான் நாம் இன்னும் ஒவ்வொரு இசங்களையும், கோட்பாடுகளையும் விவாதித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். புதுக்கவிதைகள் புரிந்த அளவிற்கு தற்காலக் கவிதைகள் புரியவில்லை என்னும் கூற்று ஆழமற்ற, மேம்போக்கான வாசிப்புகளும், அனைத்துக்கும் விளக்கம் கோரி நிற்கும் மனமே.

குழுவாத சச்சரவுகள், படைப்பாளர்கள் மீதான தனிநபர் தாக்குதல்களும், ஆரோக்கியமற்ற விமர்சன பார்வைகள், குழப்பங்கள் சிறந்த படைப்புகள் புதியவர்களை சென்றடைவதிலும் தேக்க நிலையை அடைகிறது.

முயற்சித்தால் முடியாது என எதுவுமில்லைதானே?

- சுகன்யா ஞானசூரி
07/10/2018

Monday, September 3, 2018

மூக்குத்திக்காசி-புலியூர் முருகேசன்

ஒற்றை கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தி பன்னிரண்டு சிறுகதைகளை ஒன்றாக்கி நாவல் என தந்திருப்பதாக தடாலடியாக நான் சொல்வது என்பதைக் காட்டிலும் வாசிக்கும் ஒவ்வொரு மனதிலும் இவ்வெண்ணம் எழவே செய்யும். ஒரு ஆண் படைப்பாளி எப்படி பெண்ணின் அகம், புறம் பற்றி முழுவதும் எழுத இயலாதோ அதற்கு ஒப்பானது மூன்றாம் பாலினத்தவர் பற்றி மற்ற இரு பாலரும் எழுதுவது என்பது. அப்படி ஒரு சவால் மிகுந்த கதாபாத்திரத்தை கொண்டு இந்திய அரசியலையும், அரசு சாரா அமைப்புகளையும், தமிழின் இலக்கியவாதிகளையும் பகடி செய்து, நாவலுக்கான வரையறையை கட்டுடைத்து "மூக்குத்திக்காசி-முப்பாலி" எனும் நூலைத் தந்துள்ளார் தோழர் புலியூர் முருகேசன் அவர்கள். 

ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் மூன்றாம் பாலினமாக மாறும் ஒருவர் சமூக அவலங்களை அறுத்தெறியும் புரட்சியாளர் அவதாரம் எடுக்கும் கதை. திருநங்கைகள் மீதான சமூகத்தின் பார்வை என்பது மூக்குத்தி காசியின் கடையில் வேலை செய்யும் பெரியவரின் பார்வையை ஒத்தது. இன்றைக்கு அவர்களிலிருந்து எழுத்தாளர்களும், சமூக சேவையாளர்களும், காவல்துறையிலும் என தொடர்ச்சியான முன்னெடுப்புகளினூடு பார்வையை மாற்றி வருகிறார்கள். அதே நேரத்தில் நாவலில் மூக்குத்திக் காசியிடத்தில் மூன்று பத்தாக தன்மைகளின் உணர்வுகளை பிரித்திருப்பது என்பது ஆசிரியரின் மிகுபுனைவு. போபால் விஷவாயுவால் இறந்துபோகும் அக்பர் எனும் குழந்தைக்கு பால் புகட்டுவதில் மூக்குத்திக் காசி பூரண பிறப்பை எய்திருப்பதை குறியீடாக்குகிறார். ஓரின சேர்க்கையை விரும்பும் மாந்தர்களையும் அவர்களின் வெளியுலக மேட்டிமைகளையும் படம் பிடிக்கிறார். "வட மாநிலத்தில் வைத்து இந்துத்துவ வெறியனின் குறியறுத்தல் உச்சம்". எடுத்தாண்டிருக்கும் சில படைப்பாளர்களின் மேற்கோள்கள் அவர்களது நூலுக்கு விமர்சனமாக அமைந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. 

தனித்தனியான தலைப்புகளின் கீழ் முடிவதால் கதையோட்டத்தில் தொய்வும், புள்ளி விவரங்கள் விவரணையால் அயர்ச்சியும் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்று. தன் ஊர் மக்களால் அகதியாக்கப்பட்ட ஆசிரியருக்கு அதன் வலியும் வேதனைகளும் அதிகம். அகதி முகாமைக் கடந்து செல்லும் மூக்குத்தி காசியின் பார்வையிலிருந்து ஈழ ஏதிலிகள் தங்கியிருக்கும் தமிழக அகதி முகாம்களின் அவலங்களை புரிந்துகொள்ள செய்கிறார். 

"மூக்குத்தி காசியின் கூடடைதல் போல் நமக்கான கூடடைதலும் சாத்தியமாகும் என நம்புவோம் தோழர்."


Monday, August 13, 2018

மூன்று தலைமுறையின் இரயில் பயணம்



தஞ்சை பெரிய கோவில் தரிசனம், சிவகங்கை பூங்காவில் பொழுதுபோக்கு, என மூன்று தலைமுறையின் இரயில் பயணம் கனவை நனவாக்கியிருக்கிறது. அறுபதை நெருங்கும் தாய் தந்தை, முப்பது நடக்கும் உடன்பிறப்பு, மூன்றில் அடிவைக்கும் மகள் என மூன்று தலைமுறையின் கனவுப் பயணமாக அமைந்தது நேற்றைய (12.08.2018) திருச்சி முதல் தஞ்சை வரையான இரயில் பயணம். பெற்றோரின் இதுநாள் வரையான ஆசைகளில் ஒன்றான இரயில் பயணத்தை நேற்றைய தினம் குடும்பமாய் பயணித்து நிறைவேற்றியதில் பெருமகிழ்வு ஒன்று கிடைத்திருக்கிறது. பேத்தியின் விளையாட்டுகளை கண்டு மகிழும் தாத்தா, பாட்டி, அவர்களின் கனவுகளை நிறைவேற்றிய மகிழ்வில் பிள்ளைகள் (மருமகள்கள் உட்பட) என பொன்னான தினமாகவே அமைந்தது. பெற்றோரின் தேவைகளை பூர்த்தி செய்வது பிள்ளைகளின் கடமை என்பதை இந்த பயணம் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கூட்டுக் குடும்ப அமைப்பியல்  சிதைந்து கிடக்கும் இந்த தருணத்தில் இப்படியொரு பயணத்தை நாம் செய்ய வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. முதியோர் இல்லங்களை இல்லாமல் ஆக்க வேண்டும் எனில்  ஒவ்வொரு பிள்ளைகளும் தம் பெற்றோரை (இதில் ஆண் பெண் பிள்ளை பாரபட்சமின்றி) தம்மோடு வைத்து பாதுகாக்க வேண்டும் எனும் எண்ணம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். இதற்காக அரசாங்கமா விழிப்புணர்வு தரவேண்டும்? நாம் ஒவ்வொருவரும் நம் வீடுகளிலிருந்து ஆரம்பிப்போம். அவர்கள் கனவுகளை நனவாக்கிக் காட்டுவோம். அடுத்த முறை விமானத்தில் பயணிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். காலமும், பணியும் அந்தக் கனவினையும் நனவாக்கும் என நம்புகிறேன். வாழ்ந்துதான் பார்ப்போமே...வானம் என்ன வானம் தொட்டு விடலாம்....