Friday, April 19, 2019

யாதும் ஊரே யாவரும் கேளிர்!

தமிழக நண்பர்கள் சிலரது முகநூல் பக்கத்தில் ஈழத் தமிழர்கள் மீதும், ஈழ அகதிகள் மீதும் ஒவ்வாமை இருப்பதைக் காண முடிந்தது. இதை பாசிசவாதிகள் செய்திருந்தால் நாம் கடந்து செல்லலாம். அல்லது சிறு கண்டணத்தையாவது பதிவு செய்யலாம். ஆனால் கருஞ்சட்டைக்காரர்களும், செஞ்சட்டைக்காரர்களும் ஆகிய எம் நண்பர்கள், தோழர்கள் செய்திருப்பதுதான் மனசை வலிக்கச் செய்கிறது.

"அம்மணமாக ஓட விடுவோம் என்பதும்",  "உங்களுக்குத்தான் ஓட்டு உரிமை இல்லைல மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே", உன் எல்லையோடு நீ நின்றுகொள்". என எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? இப்படியான மனநிலை பாசிச மனநிலை இல்லையா? இதைத்தான் பெரியாரிசமும், கம்யூனிசமும் கற்றுத் தருகிறதா? தேசமற்று அலையும் அகதி தேசியங்களை பேசக்கூடாதா? அவர்களுக்கு அந்த உரிமை இல்லையா? இது தனிநபர் சார்ந்த பிரச்சினை என தோழர்கள் யாரும் சமரசம் செய்வீர்களா?

தொப்புள்க்கொடி உறவுகள் எனச் சொல்வதெல்லாம் வெறும் வார்த்தைகள்தானா? அகதிகள் மீதான உங்கள் பார்வை முற்போக்கு முகமூடி அணிந்த பாசிச மனம்தானா?

அகதிகளில் தமிழ்த்தேசியம் பேசுபவர்கள், பெரியாரிசம் பேசுபவர்கள், கம்யூனிசம் பேசுபவர்கள் என பலர் இருக்கிறார்கள். அது அவரவர் புரிதல் சார்ந்தது. அவரவர் சமூக, மனநிலை சார்ந்தது. நாம் நல்லவற்றை புரிய வைக்க முயற்சி செய்யலாமே ஒழிய கட்டாயப்படுத்தக்கூடாது. ஏற்றுக்கொள்ளவில்லை எனில் சகிப்புத் தன்மையோடு கடந்து செல்ல வேண்டும். இதைத்தான் நான் வாசித்த பெரியாரும், அம்பேத்கரும், மார்கஸும் எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். நீங்கள் எப்படி இவற்றிலிருந்து தவறினீர்கள்?

2009 ன் பேரழிவுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் சிறுபான்மையாக இருக்கும் நாம் தமிழ், தமிழர் எனும் உணர்வோடு, தொப்புள்கொடி எனும் உறவோடு உங்களோடு பெரும்பான்மையாக உணர்ந்தோம். ஆனால் உங்களிலிருந்து இப்படியான வன்மத்தோடும், ஒவ்வாமையோடும் வருபவர்களைக் கண்டு நாங்கள் அச்சப்படுகிறோம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதெல்லாம் வெறும் சொல்லல்ல என்பதை நம்பும் அதேநேரம் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

- சுகன்யா ஞானசூரி
18/04/2019

Saturday, April 13, 2019

நன்றேது? தீதேது?


நன்றேது? தீதேது?

கிட்டத்தட்ட பத்து ஆளுமைகளுடனான உரையாடல்களின் தொகுப்பே இந்நூல். தரமான தாள், சிறப்பான வடிவமைப்பு மற்றும் பொக்கேற் நாவல் அளவிலான கையடக்க உருவாக்கம் என சிறப்பாக இருந்தாலும், ஒற்றுப் பிழைகளும், பத்தாவது உரையாடல் ஒன்பதாவது உரையாடலின் தொடர்ச்சியா அல்லது தனி உரையாடலா எனும் குழப்பமான அச்சமைப்பும் சரி செய்யப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பதிப்பகத்தின் கவனக்குறைவையும் அவதானிக்க முடிகின்றது.
உரையாடல்கள் பற்றி நான் சொல்வதைக் காட்டிலும் ஆளுமைகளின் என் மனதைத் தொட்ட பொன்னெழுத்துக்களை தந்திருக்கிறேன். வாசித்துப் பாருங்கள்.

என் கவிதைகளின் அரசியல் பேசும்போது அவர்களுடைய கவிதைகளின் தோல்வியை ஒப்புக்கொள்கின்றனர்.
- கடங்கநேரியான்.

வணிகத்தன்மையான நூல்களை விற்றுத்தான் இலக்கியத்தரமான நூல்களையே பதிப்பிக்க முடிகிறது. பதிப்பகத்தின் பெயரை தக்க வைப்பதற்கு இலக்கியமும், இலக்கியத்தை தக்கவைக்க வணிகமும் தேவைப்படுகிறது.
- தோழமை பூபதி.

இந்திய இலங்கை இலக்கியச் சந்தையில் புலி எதிர்ப்புதான் இப்போது நல்ல வரவேற்பு. அதுதான் செளகரியமானதும் பாதுகாப்பானதும் கவனத்தை ஈர்க்கக்கூடியதுமாய் மாறிவிட்டது.
- தீபச்செல்வன்.

தமிழகத்தில் ஈழ விடுதலை தொடர்பாக பேசியவர்கள், பேசிக்கொண்டிருப்பவர்கள், பேசப்போகிறவர்கள் எல்லோருக்கும் பின்னால் ஒரு குழுமனப்பான்மையும் சூழ்ச்சியும் இருக்கிறது.
- யுகபாரதி.

குடும்ப அமைப்பிற்குள்ளும், பொது வெளியிலும் தாங்கள் நினைப்பவற்றையெல்லாம் செய்ய முடியாதவர்களாகவே பெரும்பாலான பெண்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள்.
- தமிழ்நதி.

தமிழினத்தின் பீடையான சாதி, வர்க்க, பாலின ஆதிக்கத்தன்மைகள் களையப்பட்ட, அனைத்து தமிழ் மக்களும் சமத்துவம் என்கிற ஒரே விசையில் உரிமைகளும் பண்பாடுகளும் மீட்டெடுக்கப்பட்டு தமிழர் நிலம், அவர்களின் வளம் என்பதோடு முற்போக்கு மிக்க தேசியமாக தமிழ்த்தேசியம் இருக்க வேண்டும்.
- திருமுருகன் காந்தி.

முகாம்களில் உள்ளவர்களின் குரல் சுடுகாட்டின் அமைதியாக்கப்பட்டிருக்கிறது.
- பத்திநாதன்.

சிவப்பணுக்களும் வெள்ளையணுக்களும் நம் உடலின் உள்ளே போராடும் வரைதான் வாழ்க்கை. அது போராட்டத்தை நிறுத்தும்போதுதான் நமக்கு மரணம் சம்பவிக்கும்.
- தேன்மொழி தாஸ்.

தங்கள் மதத்தில் நிர்வாணத்தை மார்க்கமாகக் கொண்டவர்கள், ஒரு இனத்தை நிர்வாணமாக்கிப் புசித்ததும், கொண்டாடியதும் நாகரீக உலகம் இதைப் பார்த்திருந்ததும் மனிதகுலப் பண்பாட்டுக்கே அவமானமாகும்.
சுதந்திரத்துக்காகப் போராடும் மக்களின் அரசியலுக்குள் உலக அதிகார நாடுகளின் அரசியல் தலையீடு செய்தால் அது ஒரு மனிதப் பேரழிவையே பரிசளிக்கும் நயவஞ்சகமானது என்பதற்கான எடுத்துக் காட்டாக முள்ளிவாய்க்கால் அழிவு நிகழ்ந்து விட்டது.
- குணா கவியழகன்.

விடுதலையே அரசியலைத்தான் குறிக்கிறது. பக்திப் பூர்வமாக அணுகினால் பிரபாகரன் வருவார் என்பதை மட்டுமே நம்பிக்கொண்டு போராட்டம் ஒருகட்டத்தோடு முடங்கி விடும். அரசியல் பூர்வமாக அணுகினால் பிரபாகரன் வந்தாலும் வராவிட்டாலும் ஏன் வருவதாக சொல்லிக்கொண்டே இருந்தாலும் போராட்டம் அடுத்த கட்ட தேவையினை நோக்கி நகரும்.
- மகா.தமிழ் பிரபாகரன் (விகடன் மாணவ நிருபர்).

Saturday, April 6, 2019

உயிர் எழுத்தும் நானும்...

உயிர் எழுத்தும் நானும்

நீண்ட நாட்களாக உயிர் எழுத்து இதழில் எனது ஒரு கவிதையாவாது வந்துவிட வேண்டும் எனும் அவா இருந்து வந்தது. கடந்தாண்டு உயிர் எழுத்து நிறுத்தப்படுகிறது என முகநூல் பதிவுகள் வழி அறிந்து மனவருத்தம் கொண்டிருந்த சமயத்தில் உயிர் எழுத்து மீண்டும் வெளிவரும் எனும் அறிவிப்பு அளவில்லாத மகிழ்ச்சியைத் தந்தது. 2013ல் உயிர் எழுத்து இதழை அறிமுகம் செய்து வாசிக்கத் தந்தவர் ஐயா மார்க்கண்டன் முத்துச்சாமி Markandan Muthusamy அவர்கள்.


கடந்தாண்டு உயிர் எழுத்து மறுபிறப்பு எடுத்து இரண்டாவது மாதத்தில் 16/07/2018 அன்று எனது ஏழு கவிதைகளை அனுப்பி வைத்திருந்தேன். நம்பிக்கை இல்லாமல்தான். அந்த ஆண்டுக்கான சந்தாவினை கட்டிவிட்டு, சில புத்தகங்களையும் வாங்கி வரலாம் என நானும், ஐயா மார்க்கண்டன், அண்ணன் மணிகண்டன் திருநாவுக்கரசு Manikandan Thirunavukkarasu ஆகியோருடன் 22/07/2019 அன்று முதல் முறையாக உயிர் எழுத்து அலுவலகம் செல்கிறேன். அப்போதுதான் நான் உயிர் எழுத்து ஆசிரியர் சுதீர் செந்தில் Sudheer Sendhil அவர்களை பார்க்கிறேன். குடோனைத் திறந்துவிட்டு உங்களுக்கு பிடித்த புத்தகங்களை எடுத்துக்கொள்ள சொன்னார்.


அப்போது நடந்த உரையாடல் என்றும் என்னால் மறக்கவே முடியாது. எனது கவிதைகள் குறித்து ஆகஸ்ட் மாதம் இதழில் வெளியாகும் இருக்கும் இதழில் ஒரு பையன் சிறப்பாக கவிதை எழுதியிருக்காரு. அதில் கடைசி கவிதை சின்னதா இருந்தாலும் ஆழமாக இருக்கிறது என மார்க்கண்டன் ஐயாவிடம் அச்சுக்கு போயிருக்கும் இதழின் புரூப்பை தந்து வாசித்துப் பார்க்கத் தந்திருந்தார். இந்தக் கவிதைகளை எழுதிய பையன் இவர்தான் என என்னை அறிமுகம் செய்து வைத்தார். கனவு போலவே இருக்கிறது இன்னும்.


அந்த மகிழ்ச்சியை நொறுக்கும் விதமாக ஏப்ரல் 2019 இதழ் தலையங்கம். மீண்டும் உயிர் எழுத்து தன் இயக்கத்தினை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. இதழ் நடாத்தும் துயரம் என்ன என்பதை தமிழக முகாம்களில் வாழும் ஈழ அகதி மாணவர்களுக்கான "வேர் விடும் நம்பிக்கை" இதழை இற்றைவரை கொண்டுவர இயலாமல் இருப்பதினூடாக நான் அறிந்து கொள்கிறேன்.


உயிர் எழுத்து பலருக்கான முகவரி தந்திருக்கிறது என்றால் மிகையல்ல. அதில் என்னையும் அடையாளப்படுத்தியிருக்கும் உயிர் எழுத்து இனி வராது என்னும் அறிவித்தல் அகதியான துயரத்தில் மீண்டும் ஒரு துயரத்தை தருகிறது.

வேதனைகளோடு
- சுகன்யா ஞானசூரி.

Sunday, October 21, 2018

ஒடுக்கப்பட்டவர்கள் - தெணியான்




ஈழத்து எழுத்தாளர் திருமிகு தெணியான் அவர்கள் எழுதி பல்வேறு சஞ்சிகைகளில் வெளிவந்த 25 சிறு கதைகள் அடங்கிய தொகுப்பு. 1967 துவக்கம் 2006 வரையிலான காலகட்டத்தில் எழுதப்படவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட கதைகளே "ஒடுக்கப்பட்டவர்கள்" தொகுப்பு. நாற்பதாண்டு கால இடைவெளியில் கால மாற்றத்தில் சாதியம், சாதிய ஒடுக்குமுறைகள் பற்றி ஆவணமயமாக்கப்பட்ட சிறப்பான தொகுப்பு. ஈழத்தின் ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்வை பேசுகிறது. யாழ்ப்பாணத்து சாதியவாதிகளின் திமிர்த்தனத்தை ஒவ்வொரு கதையிலும் காண முடிகிறது. புலிகள் காலத்தில் சாதியம் முற்றாக அழிந்து போகாமல் வேறு வடிவில் வலம் வந்த விடையங்களை சில கதைகள் சுட்டுகின்றன. எளிமையான சொல்லாடல்கள், இயல்பான கதை சொல்லும் முறை கதைகளை தொய்வின்றி நகர்த்துகிறது.

"தீண்டத்தகாதவர்கள்" எனும் தொகுப்பினை பாரதி புத்தகாலயம் வெளியீடாக திருமிகு ஈழத்து தலித் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான சுகன் அவர்கள் தொகுத்திருந்த தொகுப்பில் தெணியான் அவர்களின் இரு சிறுகதைகளை வாசித்திருந்தேன். அந்த இரு கதைகளும் மனதில் ஏற்படுத்திய சலனத்தை " ஒடுக்கப்பட்டவர்கள்" தொகுப்பு தெளிவு படுத்தியது என்றால் மிகையாகாது. ஈழத்து தலித் எழுத்தை ஆய்வு செய்ய முனைபவர்களுக்கு இந்த தொகுப்பு ஒரு வரப்பிரசாதம் என்பேன்.

நூல்: ஒடுக்கப்பட்டவர்கள் 
ஆசிரியர்: தெணியான்
மொத்தப் பக்கம்: 200
வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகக் கடை
விலை: ₹400

(குறிப்பு: நூலகம்.ஒர்க் எனும் இணையத்தில் பிடிஎப் வடிவிலும் கிடைக்கிறது)

தோட்டியின் மகன்




மண்வெட்டி, வாளி, மலக்கிடங்கு என வாழும் இசக்கி முத்துவின் மரணம் மகன் சுடலை முத்துவை தோட்டி ஆக்கிவிடுகிறது. ஆனால் சுடலை முத்துவிற்கு தோட்டியாக வாழ்வதில் விருப்பமில்லை. அவனது எண்ணங்கள் வேறுபடுகின்றது. தோட்டிகளின் கூட்டத்திலிருந்து தனித்தே வாழ்கிறான். கடற்கரை பகுதியை சேர்ந்த தூப்புக்காரி வள்ளியை திருமணம் செய்து ஆண்குழந்தை பெற்றெடுக்கிறார்கள். மோகன் என பெயர் சூட்டப்பட்டு தோட்டியின் மகன் என தெரியாதபடி க்கு வளர்க்கின்றனர் சுடலை முத்துவும்-வள்ளியும். காலம் அப்படியேவா இருந்து விடும்? இவர்களின் கனவுகளை நிராசையாக்கி விடுகிறது.

வைசூரி, காலரா போன்ற கொடிய நோய்கள் நிகழ்வுகளின் காலத்தை தெளிவாக புலப்படுத்தும் வேளையில் தோட்டி களின் வாழ்வை நிர்மூலமாக்கி விடுகிறது. தோட்டி களை ஏய்த்து பிழைப்பு நடத்தும் ஓவர்சீயர், அவருக்கு மேலுள்ள முனிசிபல் அதிகாரி என அரச அடக்குமுறையாளர்கள். தோட்டி கள் பள்ளிக்கூடம் சென்ற வரலாற்றையும், மோகனை பள்ளியில் சேர்க்க சுடலைமுத்து செய்த தியாகங்களும், இழப்புகளும் அடுத்த தலைமுறை வாழ்வுக்கான மூலதனம். ஒடுக்கப்படுபவர்களுக்கு கல்வி கிடைத்தால் அது ஒடுக்குவோருக்கு எதிராக சுட்டுவிரல் நீட்டும் என்பதை ஒடுக்கும் வர்க்கம் தெரிந்தே வைத்திருக்கிறது. இன்றைய நீட் கல்விமுறை நவீனப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறையின் பழைய வடிவம் என்பதறிக.

தோட்டியாக வாழ விரும்பாத சுடலைமுத்து சுடுகாட்டில் காவலாளி வேலைக்கு மாறுகிறான். காலரா நோய் உச்சமடைந்து நேரம் இரவு பகலாக சிறியவர் முதல் பெரியவர் வரை தோட்டிகள் முதல் எசமானர்கள் என பிணங்கள் வந்துகொண்டிருந்தது. மரணங்கள் வாழ்தலின் உன்னதத்தினை உணர்த்துகின்றன. காலரா சுடலை-வள்ளி தம்பதியரையும் காவு வாங்கிவிடுகிறது. மோகன் மண்வெட்டி, வாளி தூக்கி மலக்கிடங்கு செல்கிறான். காலம் வெகு வேகமாக சுழன்று விடுகிறது. மோகன் சுரண்டப்படும் மக்களின் ஒற்றைக் குரலாய் ஓங்கி ஒலிக்கின்றான்.

ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு மாபெரும் பேரணியை நிகழ்த்துகின்றனர். தோழர்களின் சிவப்பு மாலைகளை தோளில் சூடி, சிவப்பு கொடியை கையிலேந்தி பேரணிக்கு தலைமையேற்று மோகன் கம்பீரமாய் முன்னால் வருகிறான். தூத்துக்குடியில் நிகழ்ந்தது போலவே அதிகார வர்க்கம் துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறது. நான்கில் ஒரு பங்காக கூட்டம் குறைகிறது. இப்போதெல்லாம் சம்பளத்தினை எண்ணி வாங்குகிறார்கள். உரிமைகளுக்காக போராடுகிறார்கள். போராட்டம் இல்லையென்றால் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகள் கிடைக்காது என்பதை சம்மட்டியால் அடித்தது போல் சொல்கிறார். மழை கரைத்து செல்லும் அந்த மண் மேட்டில் சிவப்பு மாலை வெளித்தெரிகிறது. இந்த குறியீடு கதையின் முடிவை வாசிப்பவர்கள் உணர்ந்து மன கொந்தளிப்பை உருவாக்கி விடுகிறது. மனித மாண்பினை பறைசாற்றுகிறது. மனம் அலைக்கழிப்புக்கு உள்ளாகிறது. மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

தமிழில் இதுபோன்ற ஒரு புரட்சிகர சிந்தனையை விதைக்கும் சிறந்த நாவல் வாசித்த நினைவு இல்லை. அதியற்புதமான சிவப்பு சிந்தனையை விதைக்கும் எழுத்தை தந்த மலையாள எழுத்தாளர் தகழியாருக்கும், தமிழில் மொழி பெயர்த்த சுந்தர ராமசாமி அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

நூல்: தோட்டியின் மகன்
ஆசிரியர்: தகழி சிவசங்கரன் (தமிழில் சுந்தர ராமசாமி)
மொத்தப் பக்கம்: 176
வெளியீடு: காலச்சுவடு
விலை: ₹175.

Tuesday, October 9, 2018

பின்நவீனத்துவம்-புலம்பல்

சங்க இலக்கிய புரிதலுக்கு பள்ளியில் கோனார் நோட்ஸ் போடாமல் நேரடியாக விளக்கப்படுத்தியிருந்தால் பின்நவீனத்துவ கவிதைகளின் புரிதல் பற்றிய முறைப்பாடுகள் எழாமல் இருக்கும் எனக் கருதுகிறேன். பின்நவீனத்துவம் பற்றி நாம்தான் தேடித் தேடி வாசித்து புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் நாம் விளக்கவுரைகள் கோரி நிற்போமாயின் சங்கம்-நவீனம்-பின்நவீனம் போன்றவற்றிற்கு இடையிலான இடைவெளிகளின் நிலையை இன்னொரு புதிய இசத்தின் தோற்றுவாய்க்குள் வெற்றிடத்தை உருவாக்கும் துர்ப்பாக்கியத்தினை தமிழ் மொழி ஏற்கும்.

சங்கத்துக்கு பிறகு நம்மிடம் சொல்லும்படியான காலம் இல்லை. மேலைநாடுகளில் இருந்துதான் நாம் இன்னும் ஒவ்வொரு இசங்களையும், கோட்பாடுகளையும் விவாதித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். புதுக்கவிதைகள் புரிந்த அளவிற்கு தற்காலக் கவிதைகள் புரியவில்லை என்னும் கூற்று ஆழமற்ற, மேம்போக்கான வாசிப்புகளும், அனைத்துக்கும் விளக்கம் கோரி நிற்கும் மனமே.

குழுவாத சச்சரவுகள், படைப்பாளர்கள் மீதான தனிநபர் தாக்குதல்களும், ஆரோக்கியமற்ற விமர்சன பார்வைகள், குழப்பங்கள் சிறந்த படைப்புகள் புதியவர்களை சென்றடைவதிலும் தேக்க நிலையை அடைகிறது.

முயற்சித்தால் முடியாது என எதுவுமில்லைதானே?

- சுகன்யா ஞானசூரி
07/10/2018

Monday, September 3, 2018

மூக்குத்திக்காசி-புலியூர் முருகேசன்

ஒற்றை கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தி பன்னிரண்டு சிறுகதைகளை ஒன்றாக்கி நாவல் என தந்திருப்பதாக தடாலடியாக நான் சொல்வது என்பதைக் காட்டிலும் வாசிக்கும் ஒவ்வொரு மனதிலும் இவ்வெண்ணம் எழவே செய்யும். ஒரு ஆண் படைப்பாளி எப்படி பெண்ணின் அகம், புறம் பற்றி முழுவதும் எழுத இயலாதோ அதற்கு ஒப்பானது மூன்றாம் பாலினத்தவர் பற்றி மற்ற இரு பாலரும் எழுதுவது என்பது. அப்படி ஒரு சவால் மிகுந்த கதாபாத்திரத்தை கொண்டு இந்திய அரசியலையும், அரசு சாரா அமைப்புகளையும், தமிழின் இலக்கியவாதிகளையும் பகடி செய்து, நாவலுக்கான வரையறையை கட்டுடைத்து "மூக்குத்திக்காசி-முப்பாலி" எனும் நூலைத் தந்துள்ளார் தோழர் புலியூர் முருகேசன் அவர்கள். 

ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் மூன்றாம் பாலினமாக மாறும் ஒருவர் சமூக அவலங்களை அறுத்தெறியும் புரட்சியாளர் அவதாரம் எடுக்கும் கதை. திருநங்கைகள் மீதான சமூகத்தின் பார்வை என்பது மூக்குத்தி காசியின் கடையில் வேலை செய்யும் பெரியவரின் பார்வையை ஒத்தது. இன்றைக்கு அவர்களிலிருந்து எழுத்தாளர்களும், சமூக சேவையாளர்களும், காவல்துறையிலும் என தொடர்ச்சியான முன்னெடுப்புகளினூடு பார்வையை மாற்றி வருகிறார்கள். அதே நேரத்தில் நாவலில் மூக்குத்திக் காசியிடத்தில் மூன்று பத்தாக தன்மைகளின் உணர்வுகளை பிரித்திருப்பது என்பது ஆசிரியரின் மிகுபுனைவு. போபால் விஷவாயுவால் இறந்துபோகும் அக்பர் எனும் குழந்தைக்கு பால் புகட்டுவதில் மூக்குத்திக் காசி பூரண பிறப்பை எய்திருப்பதை குறியீடாக்குகிறார். ஓரின சேர்க்கையை விரும்பும் மாந்தர்களையும் அவர்களின் வெளியுலக மேட்டிமைகளையும் படம் பிடிக்கிறார். "வட மாநிலத்தில் வைத்து இந்துத்துவ வெறியனின் குறியறுத்தல் உச்சம்". எடுத்தாண்டிருக்கும் சில படைப்பாளர்களின் மேற்கோள்கள் அவர்களது நூலுக்கு விமர்சனமாக அமைந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. 

தனித்தனியான தலைப்புகளின் கீழ் முடிவதால் கதையோட்டத்தில் தொய்வும், புள்ளி விவரங்கள் விவரணையால் அயர்ச்சியும் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்று. தன் ஊர் மக்களால் அகதியாக்கப்பட்ட ஆசிரியருக்கு அதன் வலியும் வேதனைகளும் அதிகம். அகதி முகாமைக் கடந்து செல்லும் மூக்குத்தி காசியின் பார்வையிலிருந்து ஈழ ஏதிலிகள் தங்கியிருக்கும் தமிழக அகதி முகாம்களின் அவலங்களை புரிந்துகொள்ள செய்கிறார். 

"மூக்குத்தி காசியின் கூடடைதல் போல் நமக்கான கூடடைதலும் சாத்தியமாகும் என நம்புவோம் தோழர்."


Monday, August 13, 2018

மூன்று தலைமுறையின் இரயில் பயணம்



தஞ்சை பெரிய கோவில் தரிசனம், சிவகங்கை பூங்காவில் பொழுதுபோக்கு, என மூன்று தலைமுறையின் இரயில் பயணம் கனவை நனவாக்கியிருக்கிறது. அறுபதை நெருங்கும் தாய் தந்தை, முப்பது நடக்கும் உடன்பிறப்பு, மூன்றில் அடிவைக்கும் மகள் என மூன்று தலைமுறையின் கனவுப் பயணமாக அமைந்தது நேற்றைய (12.08.2018) திருச்சி முதல் தஞ்சை வரையான இரயில் பயணம். பெற்றோரின் இதுநாள் வரையான ஆசைகளில் ஒன்றான இரயில் பயணத்தை நேற்றைய தினம் குடும்பமாய் பயணித்து நிறைவேற்றியதில் பெருமகிழ்வு ஒன்று கிடைத்திருக்கிறது. பேத்தியின் விளையாட்டுகளை கண்டு மகிழும் தாத்தா, பாட்டி, அவர்களின் கனவுகளை நிறைவேற்றிய மகிழ்வில் பிள்ளைகள் (மருமகள்கள் உட்பட) என பொன்னான தினமாகவே அமைந்தது. பெற்றோரின் தேவைகளை பூர்த்தி செய்வது பிள்ளைகளின் கடமை என்பதை இந்த பயணம் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கூட்டுக் குடும்ப அமைப்பியல்  சிதைந்து கிடக்கும் இந்த தருணத்தில் இப்படியொரு பயணத்தை நாம் செய்ய வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. முதியோர் இல்லங்களை இல்லாமல் ஆக்க வேண்டும் எனில்  ஒவ்வொரு பிள்ளைகளும் தம் பெற்றோரை (இதில் ஆண் பெண் பிள்ளை பாரபட்சமின்றி) தம்மோடு வைத்து பாதுகாக்க வேண்டும் எனும் எண்ணம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். இதற்காக அரசாங்கமா விழிப்புணர்வு தரவேண்டும்? நாம் ஒவ்வொருவரும் நம் வீடுகளிலிருந்து ஆரம்பிப்போம். அவர்கள் கனவுகளை நனவாக்கிக் காட்டுவோம். அடுத்த முறை விமானத்தில் பயணிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். காலமும், பணியும் அந்தக் கனவினையும் நனவாக்கும் என நம்புகிறேன். வாழ்ந்துதான் பார்ப்போமே...வானம் என்ன வானம் தொட்டு விடலாம்.... 

Saturday, May 5, 2018

கீரனூர் ஜாகீர்ராஜா படைப்புகளில் பெண்ணியமும் அரசியலும்

 
 கீரனூர் ஜாகீர்ராஜா படைப்புகளில் பெண்ணியமும் அரசியலும்:

1. மீன்காரத்தெரு
2. மீன்குகைவாசிகள்
3. கருத்த லெப்பை
4. வடக்கேமுறி அலிமா
5. குட்டிச்சுவர் கலைஞன்
 
ஆகிய நான் வாசித்த ஐந்து படைப்புகளை முன்வைத்து பெண்ணியம் சார்ந்தும், அரசியல் சார்ந்தும் எனது அவதானத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
 
சாதியும் மதமும் சாமானிய மக்களுக்கானதில்லை. அது பெரிய மனிதர்களெனும் போர்வைக்குள் உளன்றுகொண்டிருப்பவர்களுக்கு வடிகாலாக, திமிர்த்தனத்தின் வெளிப்பாடாக, மற்றவர்களை அடக்கி ஆழ்வதற்கு, அவர்களுக்கு சேவகம் புரிவதற்கு கருவியாக தேவைப்படுகிறது. 

இந்து, கிறித்துவ மதங்களுக்கு இணையாக இஸ்லாமிய மதத்திலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் புரையோடிப் போயிருக்கின்றன. மீன்காரத் தெருவின் மனிதர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பங்களாத்தெருவாசிகள் உயர்குடிகளாகவும் வருகிறார்கள். இது மீன்குகைவாசிகளிலும் காணக் கிடைக்கிறது. கருத்த லெப்பை, வடக்கேமுறி அலிமா போன்றவற்றிலும் இந்த ஏற்றத்தாழ்வுகள் காணக்கிடைக்கின்றன. குட்டிச்சுவர் கலைஞன் இவற்றிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு அது இலக்கியத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, லாபிகளை, நக்கலும், நய்யாண்டியுமாக சொல்கிறது. இதில் இலக்கிய அரசியல் நிறையவே காணக்கிடைக்கிறது. அரசியலை எள்ளலோடு இன்னும் தூக்கலாக தந்திருக்கிறார். 

பெண்ணியம்: 
எந்த ஒரு நிகழ்வானாலும் பெண்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள்மீது நிகழ்த்துகின்ற வன்முறைகள், பாலியல் சீண்டல்கள், குடும்பச்சுமைகள் என பெண்களுக்கு நிகழ்த்தப்படும் நெருக்கடிகள் சாதிய, மத வேறுபாடின்றி ஓர்மமாகவே அமைகின்றன. மீன்காரத்தெரு மற்றும் மீன்குகைவாசிகள் படைப்புகளில் வருகின்ற நாயகி ஆமினா பரிதாபத்திற்குரிய பாத்திரமாக தோன்றினாலும் இறுதியில் பக்குவப்பட்டவளாக ஆகிவிடுகையில் பெரு மதிப்பு உருவாகிறது. அதுபோலவே ஆமினாவின் அண்ணியாக வரும் ரஜியா கூட்டுக்குடும்பத்தின் பொறுப்புமிக்க மருமகள். வள்ளிபீவி ஒரு மாறுபட்ட கதாபாத்திரம். கருத்த லெப்பை ருக்கையா மனம் பிறழ்ந்தவனுக்கு மனைவியாகி படும் அவலங்களும், முடமோ குருடோ எதுவானாலும் கணவனைப் பிரியாத மனைவியாக நெஞ்சை நெகிழ்த்துகிறார். வடக்கேமுறி அலிமா வாசிக்கும் நெஞ்சத்தை துயரத்தில் ஆழ்த்திவிடுகிறார். புனைகதையாக எழுதிய கதை தன் அண்ணன் மகளாக பிறக்கும் அலிமாக்கு கதையின் அத்தனை பாடுகளும் பொருந்திப்போவதைக் கண்டு ஹபிபுல்லாவின் மனைவி கணவன் எழுதும் இன்னொரு கதை தன் வயிற்றில் வளரும் குழந்தையின் வாழ்வினையும் தீர்மானிக்குமோ எனும் அச்சம் தாய்மையின் வெளிப்பாடு. சில எழுத்தாளர்கள் இப்படித்தான் சிலர் வாழ்வை முன்னமே கணித்து எழுதிவிடும் சோதிடக்காரர்களைப் போன்றவர்களாகிவிடுகிறார்கள். குட்டிச்சுவர் கலைஞனில் வரும் தாட்சாயணி சந்தேகக் கணவனின் கொடுமைகளை அமைதியாக கழுத்தில் சுருக்கிட்டு முடித்துக்கொள்கிறாள். அந்த அனுபூதி இல்லத்தில் அவள் ஆவியாகக்கூட வரத்தயங்குவாள். அவள் வீட்டின் துளசிச் செடியும், செம்பருத்தம் பூக்களும் வாடிப்போவதன்றி வேறென்ன நிகழ்ந்துவிடப்போகிறது. 

இந்தப் பெண்களுக்கெல்லாம் நேரெதிர் பாத்திரமாக வருகிறார்கள் ரமிஜாவும், அன்பம்மாவும், மும்தாஜும். ரமிஜா பங்களாத் தெருவில் இருக்கும் பெரிய வீடுகளுக்கு மீன்காரத் தெருவின் பெண்களை வேலைக்கு அழைத்துச் செல்வதும், எசமானர்களுக்கு பெண்களை தருவிக்கும் தரகுப் பெண்ணாக வருகிறாள். அன்பம்மாள் எசமானர்களால் சீரழிக்கப்பட்ட பெண்களின் கருவைக் கலைக்கும் தாதியாக வருகிறாள். அன்பம்மாள் ஓர் கிறித்துவப் பெண்மணி என்பதும் அறியமுடிகிறது. மும்தாஜ் நைனாவை பிடிக்காமல் உடல் வேட்கையில் வேறு ஒரு சிறு பையனை நிக்காஹ் செய்வதும், நைனாவை வெறுப்பேற்றும்படியாகவும் வருகின்ற ஒரு திமிர் பிடித்த பெண். 

அரசியல்: 
மீன்காரத்தெரு மற்றும் மீன்குகைவாசிகளில் வரும் காசிம் அன்றைய திராவிடக் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டு செல்லும் ஒரு இளந்தாரி. அண்ணாவின் புகைப்படம் ஒரு குறியீடு. காசிமின் மேடைப்பேச்சுகள் அவனது அரசியல் கனவினை எடுத்துச் சொல்கிறது. பொருளாதாரமே அரசியலின் மட்டங்களை நிர்ணயிக்கிறது. ஓதம் வியாதியோடும் குலாம் கடையின் டீ மாஸ்டராக பணிபுரிந்துகொண்டு கட்சியின் மேடைகளில் பேசி கணீர் காசிம் எனப் பெயர்பெற்றாலும் ஒரு வார்டு கவுன்சிலர் பதவியைக் கூட பணமே தீர்மானிக்கிறது. மீன்காரத்தெருவாசிகளுக்கு அந்தக் கொடுப்பினை இல்லாமல் போவதை காசிமின் ஏக்கங்கள் வாயிலாக அறியமுடிகிறது. 

ஈழப்பிரச்சினைகள் ஒவ்வொரு நாவலிலும் அங்கங்கே எதிரொலிக்கிறது. அதிலும் குட்டிச்சுவர் கலைஞனில் பிரமாதமாகப் பதிவு செய்கிறார். உண்ணாவிரதப் பந்தலில் திமுக தலைவர் திருமிகு கலைஞர் அவர்கள் சொன்ன "மழை விட்டும் தூறல் விடவில்லை" எனும் அந்த வாக்கியம் எழுத்தாளர் அரளி பூவுடனான நேர்காணலில் வெளிப்படுத்துகிறார். இந்த நேர்காணலில் ஈழதேசியத் தலைவர் திருமிகு பிரபாகரன் அவர்களது மரணத்தையும், இருப்பையும் குறித்தும் குட்டிச்சுவர்க் கலைஞனின் மரணம் மற்றும் இருப்பினூடாக விவரித்துச் செல்கிறார். இன்றைக்கு ஈழத்து இலக்கிய வெளியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கும், இஸ்லாமியத் தமிழர்களுக்குமிடையில் நடந்துவரும் கருத்து மோதல்கள் ஆரோக்கியமான சூழலாக இல்லை. அதேபோல் இறுதி யுத்தம் முடிந்து ஒரு தசாப்தத்தினை தொடும் இவ்வேளையில் தமிழர்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை. உலகநாடுகளும் வேடிக்கைதான் பார்க்கின்றன. "கடவுள் இருந்தால் நல்லாயிருக்கும் என மய்யத்தின் ஸ்தாபகர் சொல்வதுபோல் பிரபாகரன் இருந்திருந்தால் நல்லாயிருக்கும் என்றே சொல்ல துவங்கியுள்ளனர் ஒட்டுமொத்த தமிழர்களும்."

இங்குள்ள இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள். அவர்கள் தங்கள் ஆதியை வசதியாக மறந்துவிட்டு நேரடியாக அரேபியாவில் இருந்து வந்தவர்கள் என்ற மமதையில் திரிவதையும் முத்துகனி பாய் பாத்திரத்தினூடாக பதிவு செய்கிறார். தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இஸ்லாமியன் என்றால் தீவிரவாதி என பொதுப்புத்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது இந்துத்துவவாதிகளின் திட்டமிட்ட செயல். இதுபோலவே இஸ்லாமிய இளைஞர்களிடத்தில் துவேசத்தினை விதைப்பதாகவும் சாடியுள்ளார். முத்துகனி பாய் சொல்வதுபோல் "மதத்தை பக்குவமாக சொல்லித்தர வேண்டும் வெறியூட்டக்கூடாது." இது அனைத்து மதத்தினருக்கும் பொருத்தமானதே. 

ஒவ்வொரு நாவலிலும் எழுத்தாளரின் எழுத்து மெருக்கேறி வருவதை நாம் வாசிக்கும்போது உணர்ந்துகொள்ள இயலும். அதிலும் குட்டிச்சுவர் கலைஞனில் அவரது எழுத்துகள் நர்த்தனமாடியிருக்கின்றன. "எலுத்தாளர் பொம்மை" இருக்குங்களா என சிறுவன் கேட்குமிடம் சிரிப்பின் சரவெடி. நாவலில் இப்படியொரு நகைச்சுவையை வாசிப்பது புதியதொரு முறையாகவே தெரிகிறது. தொடரட்டும் இப்படியான புதிய முயற்சிகள். தமிழ் இலக்கிய வெளியில் இது புதிய பாய்ச்சல்.
 
அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல் எண்: 28,29,30,31&32
 

Sunday, April 22, 2018

பாதுகை-டொமினிக் ஜீவா முன்வைக்கும் தொழிலாளர் வாழ்வின் கதைகள்


டொமினிக் ஜீவா அவர்களது "பாதுகை" சிறுகதை யாழ் நகரத்து தொழிலாளர்களை மாத்திரம் அல்லாது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் வாழ்வை பறைசாற்றும் கதைகளாகவே இருக்கின்றன. ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கைப் போராட்டம். அவர்களின் வறுமை அவர்களின் சுய கெளரவத்தினை, அவர்களின் நேர்மையை ஒரு போதும் அசைக்க முடியாமல் தன் தோல்விகளை வறுமை ஒப்புக்கொண்டு விட்டது. பாதுகை சிறுகதை தொகுப்பினூடாக நாம் 1950-60களின் யாழ் மாகாணத்தின் அதை ஒட்டிய கிராமங்களை அதன் நிலைகளை, வளர்ச்சிகளை கதைகளின் ஊடே ஓவியமாக தீட்டியிருப்பதை மனக்கண்முன் கொண்டுவந்து விடுகிறார். எனக்கு 90களின் போர் சிதைத்த நகரங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அதோடு என் அம்மம்மா சொன்ன கதைகளினூடாக அறிந்த நகரங்களை இப்போது பாதுகையில் காண முடிகிறது.

"பாதுகை" ல் வரும் செருப்பு தைக்கும் தொழிலாளி முத்து முகம்மது, "நகரத்தின் நிழல்" லில் வரும் ரிக்ஸா வண்டியோட்டி சின்னட்டி, "தாளக் காவடி" ல் வரும் அரசுப் பேருந்தின் நடத்துனர் (இவர் ஊர் பெயர் பருத்தித்துறை என்பதை சொல்கிறார். ஆனால் அவர் பெயரை சொல்லவில்லை. இது ஏன் என்பது தெரியவில்லை. அது கதாசிரியருக்கு மட்டுமே தெரிந்ததாகவோ, புனைவாகவோ இருக்கலாம்.), "கைவண்டி" ல் வரும் நகரசுத்தித் தொழிலாளி செபமாலை மற்றும் "காகிதக் காடு" கதையில் வரும் நியூ புக் ஹவுஸ் ல் பணிபுரியும் மாலினி போன்றவர்களை இன்றும் நான் வேறு வேறு ரூபத்தில் பார்த்துதான் வருகிறேன். அதிலும் மாலினியின் கதாபாத்திரம் பணியிடத்தில் பெண்களின் பிரச்சினையை பேசுகிறது. நவநாகரீக உடையில் வருபவர்களின் சேட்டைகளும் ஐம்பது ஆண்டுகளாகியும் மாறாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

"குறளி வித்தை" கதையில் பிரசவத்திற்காக மனைவி பூமணியை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வீடு வருகிறார் தம்பிப்பிள்ளை. மனைவி கடுமையாக இருப்பதாக அனுப்பிய செவிலியர்களின் தவறான தந்தியால் மன உளைச்சலுக்கு ஆளாகும் தம்பிப்பிள்ளை கற்கண்டும், கப்பல் வாழைப்பழமும் வாங்கும் பாக்கியத்தில் அனைத்தையும் மறந்து மனைவியையும் குழந்தையையும் பார்க்க செல்கிறார். கற்கண்டும் கப்பல் வாழைப்பழமும் ஆண் குழந்தை பிறப்பை குறிக்கும் குறியீடு. இதிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது "சவாரி" கதை. அச்சுவேலி சந்தையில் மாட்டுவண்டி சவாரி செய்யும் சவாரிச் சரவணை எனும் பட்டப்பெயர் பெற்ற சரவண முத்தருக்கு நான்கு ஆண் பிள்ளைகளுக்கு பிறகு ஐந்தாங்கால் பெண் பிள்ளை. முப்பத்தி ஒன்றாம் நாளில் பிள்ளைக்கு கண்டம் இருப்பதாகவும், அப்படி பிள்ளை கண்டத்திலிருந்து தப்பினாலும் அது தகப்பன் உயிரை எடுக்கும் என சித்திவிநாயகம் சாத்திரி சொன்னதை நம்பும் சரவண முத்தருக்கு தெரியாது அது சுருளி சுந்தரம் செய்த தந்திரம் என்பது. மாட்டுச் சவாரியில் வெற்றிபெறுகிறார் சரவண முத்தர். பெண் பிள்ளை வந்த நேரம்தான் இந்த வெற்றியை தந்தது என பெருமைப்படுகிறார்.

"வாய்க்கரிசி" கதை மதம் மாறி காதல் மணம் புரிந்த குடும்பத்தின் வாழ்வைச் சொல்லும் கதை. தேவதாசன் தன் மாமனுக்கு சுடலையில் வாய்க்கரிசி போட முடியாத நிலையை சொல்கிறது. "பாபச்சலுகை" கதை நடேசலிங்கம் எனும் சாதிய திமிரும் அதனால் எழும் விவாதமும் மருத்துவமனையில் திருச்செல்வதுடன் நடைபெறுகிறது. தன் பிள்ளையை கண்ட சாதிகள் படிக்கும் பள்ளியில் சேர்க்காத நடேசலிங்கத்திடம் கூண்டில் பறவையை அடைத்து வைத்திருந்தால் அது பிறகு கூண்டுதான் தன் உலகமென அங்குதான் கிடக்கும், பிறகு ஏன் கண்ட சாதிகளும் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த ஆஸ்பத்திரியில் சேர்கிறீர்கள் என்ற திருச்செல்வத்தின் கேள்வியில் மௌனமாகிறார் நடேசலிங்கம். நடேசலிங்கத்தின் மகளுக்கு பெயர் தெரியாத பெரிய வியாதி. இதுவே பாபச்சலுகை. நீங்கள் சொல்லும் அந்த கண்ட சாதிகள்தான் தங்கள் மொழியை, தங்கள் பாரம்பரியத்தை காவிக்கொண்டு திரிகிறார்கள் என்ற திருச்செல்வத்தின் வார்த்தைகள் சாட்டையாக விளாசுகிறது.

இப்படியாக வாழ்வின் அவலங்களை, மனித வாழ்வின் இருப்பை, கிழிந்து தொங்கும் எல்லாவற்றையும் ஒரு ஊசி, நூல் சில ஆணிகள் கொண்டு புதுப்பித்து தருகிறது பாதுகை.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்: 27
தலைப்பு: பாதுகை (சிறுகதைகள்)
ஆசிரியர்: டொமினிக் ஜீவா
வெளியீடு: தமிழ் புத்தகாலயம் பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 134

Saturday, April 21, 2018

ஈட்டி- குமார் அம்பாயிரம்

சரியலிசம், மாய எதார்த்தம், பின்னை நவீனத்துவம் போன்ற வடிவங்களில் கதை சொல்லும் புதுமையை தன் சிறுகதைகளின் வாயிலாக நிரூபித்துள்ளார் குமார் அம்பாயிரம் அவர்கள். "ஈட்டி" ஒவ்வொரு விஷயங்களையும் மெல்ல வருடுவதுபோல் சதக்கென குத்திவிடுகிறது. ஈட்டி குறி தவறாது எய்யப்பட்டிருப்பதை மொத்தக் கதைகளையும் வாசித்து முடித்த பிறகு உணரமுடியும். உணர்ந்தேன்.

ஒவ்வொரு கதைக்குள்ளும் பல பாத்திரங்களை உரையாடவிட்டு சோழி உருட்டும் ஒரு மாயவித்தைக்காரனாக வலம் வருகிறார். அஃறிணை எல்லாம் உயர்திணையாகவும், உயர்திணைகள் எல்லாம் அஃறிணையாகவும் கதையெங்கும் ஊடுபாவுகிறது. வரிக்கு வரி கவிதைகளாலே கதை சொல்லுவது போன்ற பிரமை தோன்றுவது தவிர்க்கவியலாத ஒன்று.

ஒவ்வொரு கதையிலும் ஏதோவொரு சமூகத்தின் பிரச்சினைகள் எதிரொலிப்பதை நீங்கள் புரிந்துகொள்ள இயலும். புணர்ச்சியின் இயக்கவியலை இலைமறை காயாக ஒவ்வொரு கதையிலும் நிகழ்த்திகாட்டுகிறார். அதேபோல் மாய உலகிற்கும் எம்மை அழைத்துச் செல்கிறார். விந்தையான மனிதர்களை, அவர்களின் செய்கைகளை பின்னை நவீனத்துவ பாணியில் கதைகளாக்கியுள்ளார்.

ஆவிகளை ஆவி என அழைக்காமல் அவற்றுக்கு ஒரு பொதுவான பெயராக "ன்யாக்" என பெயரிட்டு உரையாடுவதும், காக்கைகளின் புணர்ச்சியை பார்த்ததால் சாபம் பெற்றவன் காக்கைகள் வெறும் காக்கைகளா அல்லது பித்ருக்களா என ஐய்யப்பட்டு கோபத்தில் காக்கைகளை கொத்துக்கொத்தாக கொன்றழிப்பதன் விளைவால் நிகழும் சூழல் மாற்றங்களும், பாதிப்புகளும், காக்கை இல்லாத வெறுமை சூழ்ந்த உலகமும், பிண்டம் வைபோரின் இழப்புகளையும் விவரித்துச் செல்கிறது "க்காக்கா" எனும் கதை. ஈட்டி கதையில் நண்பன் தன் பழைய வாழ்வுக்கு மீள்வதை ஒற்றைச் சொல்லின் வாயிலாக புரிய வைக்கிறார். "மண்யோனி" முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டிய புரிதலை தந்திருக்கிறது. "தேடூ", "வழக்கு எண்235/2020 போன்ற கதைகள் ஒத்த வடிவம் பெறுபவையாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கதைக்குள்ளும் கதையாளன் தன் ஆதி முகத்தை, ஆதி வாழ்வை, ஆதி பழக்கவழக்கங்களை தன்னோடு சுமந்தைலைபவனாக காணப்படுகிறான். நாகரீக உலகில் வாழ்ந்தாலும் மனதின் ஆழத்தில் ஆதியின் பிம்பம் படிந்ததின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம். இது நமது ஒவ்வொருவர் மரபணுவிலும் படிந்திருக்கலாம் என்பதை மறுக்கத்தான் முடியுமா? வாசித்துப் பாருங்கள் புதிய அனுபவம் ஒன்றைத் பெறுவீர்கள் என்பதை அந்த தொல்மக்கள் மேல் ஆணையாக சொல்கிறேன்.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்: 26
தலைப்பு: ஈட்டி (சிறுகதைகள்)
ஆசிரியர்: குமார் அம்பாயிரம்
வெளியீடு: உயிர் எழுத்து பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 96
விலை: ₹70

Thursday, April 19, 2018

ஒவ்வா-ஸர்மிளா ஸெய்யித்


தமிழ் இலக்கிய வெளியில் காத்திரமான இஸ்லாமிய படைப்புகள் என்பது அதன் மார்க்கத்தை, மார்க்கம் நிகழ்த்தும் அடக்குமுறைகளை எதிர் கேள்வி கேட்பதன் ஊடாக வெளிப்படுகிறது. அப்படியாக தங்கள் சிறுகதைகளுக்குள்ளும், நாவல்களுக்குள்ளும் தம் மக்களின் பாடுகளை, அடக்குமுறைகளையும் எடுத்தாண்டு ஊரை விட்டு வெளியேற்றப்பட்ட படைப்பாளிகள் இப்போதும் எம்மோடு இருக்கவே செய்கிறார்கள். இது தமிழக இலக்கியப் பரப்பில் நிகழ்ந்த மோசமான நிலையாகும். அதிலும் ஒரு பெண் தன் மக்களை, சமூக பழக்கவழக்கங்களை கேள்விக்கு உட்படுத்துதல் என்பது கனவிலும் நிகழ முடியாத ஒன்றாகவே நீங்கள் எண்ணலாம். தன் கவிதைகளின் மூலமாக அப்படியான ஒரு செயலை செய்திருக்கிறார் "ஒவ்வா" கவிதை தொகுப்பினூடே ஸர்மிளா ஸெய்யித் அவர்கள். ஈழத்தின் கிழக்கு மாகாணமான மட்டக்கிளப்பின் ஏறாவூர் அவரது பிறப்பிடம். ஒவ்வா இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. ஒரு களச்செயல்பாட்டாளரும் கூட.

"சீசாவில் அடைபட்ட ஆவியாக
மாற எனக்குச் சம்மதமில்லை"

இக்கவிதையிலிருந்து தான் ஒரு கட்டுக்கடங்காத காட்டாறு, என்னை நீங்கள் உங்களின் கட்டுப்பாடுகளை, சாமானிய பெண்களின் மீது நிகழ்த்தும் அடக்குமுறைகளை கொண்டு என்னை கட்டுப்படுத்த இயலாது. அதில் எனக்கு சம்மதம் இல்லை என்பதை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிடுகிறார். கடலும் ஒரு காட்சியும் எனும் தலைப்பின் கீழ் வரும் இக்கவிதையை வாசித்துப் பாருங்களேன்.

"இலைக்கற்று அலையும் பார்வையுடன் விரல் சூப்பும்
குழந்தையை சுமந்து நடக்கிறாள் அவள்
புதையும் கால்களை இழுத்தவாறே
மணலில் புரளும் நீண்ட புர்காவை
ஒரு கையால் தூக்கிப் பிடித்திருக்கிறாள்
அருகே அவள் துணைவன்
வெள்ளை ரீசேர்ட்டில்
மயிர் அடர்ந்த நீண்ட தடித்த கால்கள் தெரிய
அரைக்காற்சட்டையும்
அதன் இரு பாக்கட்டுகளிலும் கைகளை விட்டும்
மிக நிதானமாக நடக்கிறான்
காற்று தடங்கலின்றித் தழுவ
மிக அலாதியாகக் கடலை ரசிக்கிறான்
அலைக்கரங்களுக்குப் பாதங்களைத் தடவத் தருகிறான்
புரண்டுவரும் அலையை உதைத்துக் குதிக்கிறான்
அரண்டு அழும் குழந்தைக்கு
பால்புட்டியைத் திணித்தபடி
வியர்வை வழியும் முகத்துடன்
கரையோர மணல் மேட்டில் குந்தியிருக்கிறாள் அவள்
மங்கிய மாலை இருளில்
அலைகள் புரண்டெழுந்து இரைந்தது நிறுத்தாமலே..."

புர்காவுக்குள் புலம்பும் அப்பெண்ணின் அவலத்தையும், ஆணின் சுதந்திரத்தையும், பெண் மீது சுமத்தப்பட்ட சுமைகளையும் அப்பட்டமாக பேசும் கவிதை. இருண்ட ஒற்றை நிறம் கவிதையும் இதையே வேறு வடிவத்தில் பேசுகிறது.

"அவர்கள் சொல்கிறார்கள்
என்னை ஒழுக்கங் கெட்டவள்
தேவடியாள் என்று
காதல் அடிமையாய் இருக்கலாம்
புணர்ச்சியை பேசுதல் குற்றமென்கிறார்கள்
பிள்ளை பெறலாம்
எந்தத் துவாரம் வழி அதுயென
கூறுதல் குற்றமென்கிறார்கள்
துல்லியமாய்ச் சொல்வதானால்
உச்சபட்சமாக
மரணதண்டனையை எனக்கு."

சமூகத்திலிருந்து மாறுபட்டு தன்னை அடையாளப்படுத்த விரும்பும் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் தண்டனையாக மரணதண்டனை இருப்பதாக சொல்கிறார்.

ஹூரூல் ஈன்கள் கவிதை சொர்க்கத்தில் பெண்ணுடல் ஒரு பிண்டமாகவே பார்க்கப்படுவதை சொல்கிறது.

புராதன ஊர் கவிதையின் இறுதி வரிகள் எந்த தேசத்தினருக்குமாக பொருந்திப் போகிறது. அவர் தனது தாய் நிலத்தின்பால் கொண்ட பற்றை பேசுகிறது இந்த வரிகள்.

"இனி எதுவும் சொல்வதற்கில்லை
என் காலணிகளை அங்கேதான்
விட்டு வந்திருக்கிறேன்
என்றென்றைக்குமாக!"

இப்படியாக பெண்ணின் இருப்பை, சுக துக்கங்கள், இழப்புகள், போராட்டங்களை பற்றியதாக பேசுகிறது. பல கவிதைகளில் வசனத்தன்மை அதிகமாக வருகிறது. இவற்றை சுருக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். புரட்சி பேசும் பெண் யாருக்கும் ஒவ்வாதவளாகவே இருக்கிறாள். அவள் அப்படியே இருக்கட்டும். இந்த சமூகம் அவளிடம் ஒத்து வரும் தூரம் அதிகமில்லை.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்: 25
தலைப்பு: ஒவ்வா
ஆசிரியர்: ஸர்மிளா ஸெய்யித்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 72
விலை: ₹65

Tuesday, April 17, 2018

பாலஸ்தீனக் கவிதைகள்

பதினைந்து கவிஞர்களின் எழுபத்தியோரு கவிதைகள். மஹ்மூத் தர்வீஸ், பெளசி அல் அஸ்மார், ரஷீட் ஹுஷைன், சலீம் ஜூப்றான், தொளபீக் சையத், அந்தொய்னே ஜபாறா, சமீஹ் அல் காசிம், மூயின் பசைசோ, நிசார் காப்பானி, ஃபத்வா துக்கான், அமீனா கசக், ஹானான் மிக்காயில் அஷ்றாவி, சுலஃபா ஹிஜாவி, லைலா அல்லுஸ், சல்மா கத்றா ஜய்யுசி.

இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் சிறு குறிப்பு கொடுத்து பின்னர் அவர்களது கவிதைகள் தரப்பட்டுள்ளது. ஆண் கவிகளுக்கு இணையாக பெண் கவிகளும் போரியல் கவிதைகளை சிறப்பாக யாத்துள்ளனர். போரின் தோல்வி, இழப்பு, சிறைக்காவல், சிதிர்வதைக்கூடம், சிறுவர்கள் மீதான தாக்குதல், ஐக்கிய நாடுகள் சபையின் பாராமுகம், தாயகம் மீதான ஏக்கம் என கவிதையின் பாடுபொருள்கள் உள்ளன. ஈழத்தின் படுகொலைகளுக்கு நிகராகவே பாலஸ்தீனத்தில் படுகொலைகள் நிகழ்ந்துள்ளதையும் கவிதைகள் ஆவணப்படுத்தி நிற்கின்றன. கவிதை ஒரு பேராயுதமாக திகழ்ந்துள்ளதை காண முடிகிறது. ஏனெனில் கவிஞர்களை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது, சில கவிதைகளை தடை செய்துள்ளது. நிசார் காப்பானியின் பின்னடைவு நூலுக்கு எழுதிய அடிக்குறிப்புகள் கவிதை ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் கடத்தி பதிப்பித்து வினியோகிதிருக்கிறார்கள். மனப்பாடம் செய்துள்ளார்கள்.

ஈழத்துப் பரப்பில் பாலஸ்தீனக் கவிதைகள் பெரும் தாக்கத்தினை உருவாகியுள்ளன. ஏனெனில் இருவரும் அரசின் ஆக்கிரமிப்புக்கு, அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர்கள். துவக்குகளைக் காட்டிலும் கவிதை ஆட்சியாளர்களை, அடக்குமுறையாளர்களை கலங்கடிக்கும் பெரும் போராயுதம். ஒவ்வொரு கவிஞர்களது கவிதையிலும் வெடித்து சிதறிய சன்னங்களை சேகரித்து வைத்திருக்கிறேன் உங்கள் பார்வைகளுக்காக. உங்களுக்குள்ளும் அவை சிறு தெறிப்பையாவது உண்டாக்கும்.
1. மஹ்மூத் தர்வீஸ்
"யாரையும் நான் வெறுப்பவன் அல்ல
யாரையும் நான் கொள்ளை அடித்தவன் அல்ல..."
"பட்டினி வருத்தும் போதிலோ என்னைக்
கொள்ளை அடித்தவன் தசையினைப் புசிப்பேன்."
"நாம் எதையும் இழக்கோம்
நமது சவப்பெட்டிகளைத் தவிர."
"அன்புள்ள நண்பனே
அவன் எப்போது வருவான் என்று கேட்காதே
மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள்
என்று மட்டும் கேள்."

2. பெளசி அல் அஸ்மார்
"ஒவ்வொரு மூலையிலும் மரணத்தை எதிர்த்துப் பேசியவன்
ஒரு சகோதரத்துவ வாழ்வைக் கோரி அதற்காக வாழ்ந்தவன்"

3. ரஷீட் ஹுஷைன்
"இலக்கணத்தையும் அதன் விதிகளையும் தீயில் இட்டோம்
போராளிகளாக மாறினோம்."

4. சலீம் ஜூப்றான்
"தொங்கும் இம் மனிதன்
பெர்லினில் பிறந்த ஓர் யூதன் அல்ல
என்போல் ஓர் அராபியன்
உங்கள் சகோதரர்கள் அவனைக் கொன்றனர்
சியோனில் வாழும்
உங்கள் நாசி நண்பர்கள்".

5. தொளபீக் சையத்
"வெற்றியுடனும்
சுதந்திர மனிதனின் வைகரையுடனும்
எனக்கோர் சந்திப்பு நிகழ இருப்பதால்
இறுதி நாள்வரை நான் மறுபிறப்பெடுப்பேன்".

6. அந்தொய்னே ஜபாறா
"கையில் நாம் தங்கிய ஒலிவம் கிளையினை
நிலத்தில் வீச நிர்ப்பந்திக்காதீர்".
"கசக்கிப் பிழியும் அகதி வாழ்க்கை
சுமையாய் எம்மில் சுமத்தப்பட்டது".

7. சமீஹ் அல் காசிம்
"அவனது பெயர் அறியப்படாத மனிதன்
வெள்ளை மாளிகைகள் அவன் எதிரே
கதவுகளை அடித்து மூடின".
"அமினா
ஒரு குற்றவாளி
அவளுக்கு வயது எட்டு".

8. மூயின் பசைசோ
"சித்திரவதை அறையின் கூரை மீது
சொட்டுச் சொட்டாய் விழும்
ஒவ்வொரு மழைத்துளியும் அலறியது
எதிர்த்து நில்".

9. நிசார் காப்பானி
"கோபமுற்ற ஒரு தலைமுறை
நமக்கு வேண்டும்
வானத்தை உழுத்துவிட
வரலாற்றைத் துடைத்தெறிய
கோபமுற்ற ஒரு தலைமுறை
நமக்கு வேண்டும்
தவறுகளை மன்னிக்காத
வளைந்து கொடுக்காத
ஒரு புதிய தலைமுறை நமக்கு வேண்டும்
ராட்சதர்களின் ஒரு தலைமுறை நமக்கு வேண்டும்".

பாலஸ்தீனப் பெண் கவிதைகளை இனிக் காண்போம்.
10. ஃபத்வா துக்கான்
"திருடப்பட்ட
உன் குழந்தைகளின் சிரிப்பிலிருந்து
சிதைவுகளில் இருந்து
இரத்தம் உறைந்த சுவர்களில் இருந்து
வாழ்வினதும் மரணத்தினதும்
நடுக்கங்களில் இருந்து
புதிய வாழ்வொன்று கிளர்ந்தெழும்
அது எழவே செய்யும்".

11. அமினா கசக்
"இப்போது மெளனமாக
அசைவற்றுக் கிடக்கும் ஊர்க் குருவியைப்போல்
அந்த இரவின் இருண்ட தனிமையில் திரும்பிவர
உனக்கு ஒருபோதும் சுதந்திரம் இருந்ததில்லை".

12. ஹானான் மிக்காயில் அஷ்றாவி
"நிலம் இவ்வளவு பாரமாய் இருக்குமென்று
நான் ஒருபோதும் நினைத்ததில்லை".

13. சுலஃபா ஹிஜாவி
"நாங்கள்
இறுகப்பற்றி அணைத்து நின்றோம்
பாடினோம்; செய்த்தா எங்கள் பூமி
பூமியின் இதயம்
நாம் அதன் கிளைகள்".
"மனிதரும் கற்களும் அரைக்கப்பட்டு
புழுதியாய் மாறினர்
சாத்தியமற்றதின் வெளிச்சத்தில்
என்றைக்குமாக தூவிக் கலந்தனர்".

14. லைலா அல்லுஸ்
"ஓராயிரம் பெருவெளிகளை உருவாக்கி
நஞ்சூட்டிய அம்புகளை அவற்றுள் செருகி
என் நிலம் எங்கும் நட்டு வைத்துள்ளனர்
என் பாட்டனின் வாளை ஒளித்துவைத்துள்ளனர்
அவரின் எச்சங்களை
என் கண் எதிரே விளைகூறி விற்கின்றனர்".

15. சல்மா கத்றா ஜய்யூசி
"இளமைக் கனவுகள் போல
சவப்பெட்டியும் தொலைந்து போகட்டும்
என்றே நான் விரும்புகிறேன்".
அந்தொய்னே ஜபாறா வின் கவிதைகளைப் போலதான் ஈழத்தவர்களாகிய நாமும் ஐக்கிய நாடுகள் சபை முன்னால் முறைப்பாடுகளோடு காத்துக்கொண்டே நிற்கிறோம். ஒருநாள் எமக்கான நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்: 24
தலைப்பு: பாலஸ்தீனக் கவிதைகள்
ஆசிரியர்: எம்.ஏ.நுஃமான்
வெளியீடு: மூன்றாவது மனிதன் பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 164
விலை: ₹200

பிறப்பு - யு.ஆர். அனந்தமூர்த்தி

ஒழுக்கம் கெட்டவர்களுக்கு பிறப்பவர்கள் ஒழுக்கம் கெட்டவர்களாகவும், சில நேரங்களில் ஒழுக்க சீலர்களாக பிறப்பதும் இயற்கையின் சித்துவேலைகளில் ஒன்றாகிறது. சமூகத்தில் நாம் பார்த்து வியக்கும் பெரிய மனிதர்களுக்குள்ளே சில நேரங்களில் ஒழுக்கக்கேடான எண்ணங்கள் மறைந்திருத்தலும், நாம் துச்சமாக மதிக்கும் சில மனிதர்களுக்குள்ளே ஒழுக்கமான வாழ்வு மறைந்திருப்பதையும் இன்றைய உலகில் நாம் காண முடிகிறது. இவற்றுக்கெல்லாம் பிறப்பு எனும் ஒற்றைச் சொல் காரணமாகிவிடுகிறது. வாழ்வின் போக்கை சில சமயம் அது பண்படுத்துகிறது, சில சமயம் சீரழிக்கிறது. நூலில் ஆடும் பொம்மைகளைப் போல் பாத்திரங்கள் இந்த நாவல் முழுதும் இயங்குகிறது. அப்பாத்திரங்களின் இயக்கம் தேடல் மிகுந்த வலிகளோடு தொடர்கிறது.

சில பாத்திரங்கள் மீது நமக்கு கரிசனம் எழுகிறது, சில பாத்திரங்கள் மீது கோபம் எழுகிறது. பரிதாபத்திற்குரிய பாத்திரம் ஒன்றும், மெச்சத்தகுந்த ஒரு நாத்திகப் பாத்திரமும் இந்த நாவலில் காணலாம். மெட்ராஸில் இருந்து பெங்களூர் போகும் முதல் வகுப்பு இரயில் பெட்டிக்குள் இருக்கும் நான்கு நபர்களின் அறிமுகத்தோடு துவங்குகிறது நாவல். அதன் மையம் ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் நிகழும் பாலியல் உச்சங்களையும், உறவுகளின் நெருடல்களையும், ஏமாற்றங்களையும், அது நிகழ்த்தும் துயரங்களையும் மனிதப் பிறப்பின் சூட்சுமங்களையும், அதன் முடிச்சுகளை அவிழ்க்கும் கண்ணியாகவும் செல்லும் கதை ஒரு பிறப்புக்கு முக்தி கிடைப்பதுடன் உறவுச் சிக்கல்களை பேசும் நாவலாக உச்சம் பெறுகிறது கன்னட எழுத்தாளரான யு.ஆர்.அனந்தமூர்த்தி அவர்களது பவா, தமிழ் மொழிபெயர்ப்பாளர் நஞ்சுண்டானின் பிறப்பு நாவல்.

கிட்டத்தட்ட தமிழில் பெருமாள் முருகன் அவர்களது மாதொரு பாகன் உறவுச் சிக்கலைப் போன்றே இது வேறொரு பரிணாமத்தில் வார்த்தெடுக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான வாசிப்பனுபவம் இந்த நாவல். தினகர்-கங்கு-நாராயணன் எனும் மூவருக்குள்ளான உறவுகள், புணர்ச்சிகள் போலவே சரோஜா-பண்டிதன்-விஸ்வநாத சாஷ்திரி போன்றவர்களின் வாழ்வில் நிகழும் சம்போகங்கள். அங்கே சரோஜாவின் மகனாக தினகர் பிறப்பும், இங்கே கங்குவின் மகனான பிரசாத்தின் பிறப்பு. கங்குவை தாலி கட்டிய பரிதாபத்திற்குரிய பாத்திரம் சந்திரப்பா. அதேபோல் நாத்திக பெண்ணாக வரும் மங்களத்தின் பாத்திரம் பிராமணத் தந்தையை கேள்வி கேட்பதும், வீட்டை விட்டு வெளியேறுதலும் என ஒவ்வொரு பாத்திரமும் சிறப்பு. சீத்தம்மா எனும் பாத்திரம் கோபால் எனும் பேரனுக்கு, நாராயணன் எனும் மகனுக்கும் இடையில் சமரசம் செய்வதும், சரோஜா இறப்பிற்கு பிறகு தினகருக்கும் அம்மாவாக வாழ்வதும் நடுநாயகமாக வாழ்கிறது. விஸ்வநாத சாஷ்திரியா பண்டிதனா தினகரின் தந்தை என்பது வாசகர்கள் பார்வைக்கே விடப்பட்டுள்ளது. கொஞ்சம் பிசகினாலும் இக்கதை நீலப்படக் கதையாகிவிடும் பேராபத்தினை உணர்ந்து இலக்கிய செறிவுடன் பிறப்பித்த இக்கதை சிறப்பு.


அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:23
தலைப்பு: பிறப்பு
ஆசிரியர்: யு.ஆர்.அனந்தமூர்த்தி (தமிழில்: நஞ்சுண்டன்)
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 120
விலை: ₹50

Sunday, April 15, 2018

அவலங்களை அழகியலோடு எழுதும் நிகழ்த்துகலைக் கவிஞன் அகரமுதல்வன்


ஒரு நிலமற்று அலையும் நாடோடிக் கவிஞனின் வலிமிகுந்த வரிகளே இந்த தொகுப்பெங்கும் விரவிக் கிடக்கிறது. அவனிடத்தில் நாம் அழகியல் கவிதைகளை எதிர்பார்த்தல் என்பது அபத்தம். போர்க்களங்களுக்குள் வாழ்ந்தவர்களிடத்தில் குருதி வீச்சமும், குண்டுகளின் புகை நெடியும், கோரமான சிதைவுகளையும் கவிதை வெளிப்படுத்தும். பழைய நினைவுகளில்தான் போர்நிலத்தின் மக்களின் அழகிய வாழ்வை கவிதை வெளிப்படுத்தும். அகரமுதல்வனின் இந்த தொகுப்பில் அழகியல் இருக்கிறது. அது அவலங்களாய் முடிகிறது. ஒவ்வொரு கவிதையும் வாசித்து முடித்ததும் நம் நெஞ்சைக் குத்திக் கிழிக்கும். சில கவிதைகளுக்குள் நுழைதல் காடினமாகவே இருக்கிறது.

முல்லை நிலத்தில் பாலை நிலத்தை காணும் துர்பாக்கியம் எம் தலைமுறைக்கு நேர்ந்துவிட்டது. அதன் ஒரு ஆவணமாகவே நான் இந்த தொகுப்பைப் பார்க்கிறேன்.

"முண்டங்கள் தானிய வயலாய்
நிறைந்த நிலத்தில்
மிருதுவான இரத்தம் நீராவதை
பிள்ளைக்கு சோறூட்டும் போது காட்டுங்கள்"

நிலா சோறூட்டிய எம் பிள்ளைகளுக்கு எம் நிலத்தின் காட்சி சோறூட்டும் கால நிர்பந்தம் ஒவ்வொரு ஈழ தமிழ்ச்சியின் தலையாய கடமையாக நிற்கிறது.

"ஏறிகணைகளின் வெற்றுக் கோதுகளில்
பூக்கன்று பதியமிடும்
யுத்த பூமியின் பிள்ளைகளுக்கு
குண்டுகள் குறித்து கவலையில்லை"

உண்மைதானே யுதங்களை தங்கள் அங்கமாக கொண்ட எம் குழந்தைகள் எப்படி கவலை கொள்வார்கள் குண்டுகள் குறித்து. அவர்கள் அந்த நிலத்தின் கொடிய காட்சிகளைக் கண்டவர்கள் அல்லவா.

"நாடற்றவனாய் வாழ்கிறேன்
நாடற்றவனாய் எழுதுகிறேன்
நாடற்றவனாய் திமிருக்கிறேன்"

எனும் அகரன்

"துயரத்தின் துயரில் நாடொன்று இருந்தால்
அதையே தயாகமென்று சொல்லக் கடவேன்" என்கிறார்.

மேலும் எமக்கான நாடு நிச்சயம் கிடைக்கும் என்பதை இப்படிக் கூறுகிறார்.

"அஸ்தமனமில்லாத தாய் நிலத்தில்
ஒரு நாளில்
என் அம்மாவின் முத்தம்
நாடுள்ளவனாய் என்னை அறிவிக்கும்"

அந்த நாட்டில் கடல் இரத்தம் கலவாத துப்புரவான கடலாய் இருக்கும் எனும் தன் கனவை கூறுகிறார். அப்படியான கடலும், நிலமும் எம் அடுத்த தலைமுறைக்கு கிடைக்ககடவ.

"பேரழிவின் மிச்சமாய்
எல்லா மே மாதமும்
என்னுடல் அகல விரிகிறது"

முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்த ஒவ்வொரு மே மாதமும் எம் நெஞ்சம் விரிவதை தவிர்க்க முடியாது. ஒன்பது ஆண்டுகள் கடந்தோடி விட்டது. யூதர்கள் தங்கள் தங்கள் தேசத்தை சுமந்ததைப் போல், மஹ்மூத் தர்வீஸ் எனும் பாலஸ்தீனக் கவி தன் மொழிகளுக்குள் தேசத்தை சுமந்தலைந்ததைப்போல் இன்னும் எம் நினைவுகளுக்குள்தான் எம் தேசத்தை நாம் பாதுகாத்து வருகிறோம் என்றாவது ஒருநாள் அது மலரும் எனும் நம்பிக்கையோடு. ஆனால் இந்த நூற்றாண்டின் எல்லா நாட்களும் அந்த குரலின் கதறல் கேட்டபடியே இருக்கும்

"கோட்டையின் இருட்டிலிருந்து
யாரோ ஒருத்தி தமிழில்
கதறுகிறாள்
இந்த நூற்றாண்டின் எல்லா நாட்களும்
இப்படித்தான் கேட்கும்".


"இந்த நூற்றாண்டை பிளந்த கோடாரி
முள்ளிவாய்க்காலின் எலும்பு"

முல்லை நிலத்தில் தோன்றிய பாலையின் காட்சிக்கு இக்கவிதைகளே சான்று.

தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்களது முன்னுரை இந்த தொகுப்புக்கு மிகவும் வலு சேர்த்திருக்கிறது.

அகரமுதல்வன் அழகியலோடு அவலங்களை எழுதும் எம் தேசத்தின் நிகழ்த்துகலைக் கவிஞன். தொடர்ந்து எழுதுக தடம் மாறாமல்.


அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:22
தலைப்பு: டாங்கிகளில் சரியும் முல்லை நிலா
ஆசிரியர்: அகரமுதல்வன்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
மொத்தப் பக்கம்: 112
விலை: ₹80

Friday, April 13, 2018

வாடிவாசல்-சி.சு.செல்லப்பா


ஏறு தழுவுதல் குறித்து நுட்பமான முறையில் வெளிவந்த குறுநாவல் சி.சு.செல்லப்பா அவர்களது வாடிவாசல் குறுநாவல். இது காளைக்கும், காளையை அடக்குபவனுக்குமான நிகழ்வுகளை சுவை குன்றாது விவரித்துள்ளது.

தை எழுச்சி, மெரினா புரட்சி என சல்லிக்கட்டுக்காக நிகழ்ந்த போராட்டங்களை ஜீவ காருண்யம் பேசும் பலர் இந்த வாடிவாசலை வாசித்திருந்தால் கலித்தொகையால் சிறப்புப் பெற்ற ஏறு தழுவுதல் எனும் தமிழ்ப் பாரம்பரிய விளையாட்டின் மகத்துவத்தினை, வீரத்தினை உணர்ந்திருப்பர். துரதிஷ்டம் இந்த விளையாட்டு வேறு முகம் எடுக்க சாதிய கொடுங்கரங்கள் காரணமாகின. அதைத்தான் இந்த வாடிவாசல் நுட்பமாக விவரிக்கிறது.

காரி காளை மீது அணைந்த அம்புலி காரி காளையால் குத்துப்பாட்டு இறக்குறான். பல ரகக் காளைகளை அடக்கிய கிழக்குச் சீமையின் பேர்பெற்ற வீரன். மரணப் படுக்கையில் அம்புலி தன் மகன் பிச்சியிடம் கூறிவிட்டு இறந்து விடுகிறான். சிறுவனாக இருந்த பிச்சி வளர்ந்து இளைஞனாகும் காலத்துக்குள் காரி காளையும் பல சல்லிக்கட்டுகளில் பேர்பெற்ற காளையாக சமீன்தாரின் கவுரவத்தை காப்பாற்றி வருகிறது. சமீன்தாருக்கு காரிதான் எல்லாமும். பிச்சியின் மாடு அணைக்கும் லாவகமும், பேர்பெற்ற விளையாட்டு வீரனின் சாதுர்த்தியமும் சமீன்தாருக்குள் பதற்றத்தை உருவாக்குகிறது. எங்கே தன் காளையை அடக்கி தன் கவுரவத்தினை குறைத்து விடுவானோ எனும் பதற்றம் அது. மனுஷனுக்கு மாட்டுக்குமான சண்டை மனுஷனுக்கு மனுசனுக்குமான சண்டைகளாக மாறுவதும் உண்டு. அப்படித்தான் முருகு எனும் மாடுபிடி வீரனுக்கும் பிச்சிக்கும் நிகழ இருந்ததை பாட்டையா எனும் அந்த கிழவர் மடைமாற்றுகிறார். அந்தக் கிழவர்தான் பிச்சிக்கு ஒவ்வொரு காளையைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் விளையாட்டின் நுட்பம் தெரிந்தவர்.

காரி காளைக்கும் பிச்சிக்கும் இடையிலான நிகழ்வுகளை வாடிவாசலில் ஒரு போர்க்களமாக விறுவிறுப்பாக சொல்லியுள்ளார். ஒருவர் அணைந்த மாட்டை இன்னொருவர் அணைவது மறத்தமிழனுக்கு அழகல்ல என்பதையும், ஒரு வீரனை மாட்டிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய தருணத்தில் அணைக்க வேண்டிய தந்திரோபாயத்தையும் மருதன் மூலமாக நிறுவுகிறார். மருதனைப் பார்த்து பாட்டையா கிழவர் உன் தங்கச்சியின் தாலிக்கு சேதாரம் இல்லாம பார்த்துகிட வேண்டியது உன் பொறுப்பு என்று கூறுவதிலிருந்து பிச்சிக்கும் மருதனுக்குமான உறவு முறை புலப்படுகிறது. காரிக் காளையை அடக்கி தொடையில் குத்துப்பட்ட பிச்சியை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிய மகிழ்வில் பிச்சியும், தனது அத்தனை கவுரவத்திற்கும் பங்கம் உண்டுபண்ணிய காரி காளைமேல் உள்ள கோவத்தில் காளையை சுட்டுக் கொல்லும் சமீன்தாரும் என வாடிவாசல் இன்னொரு பரிணாமத்தை பேசுகிறது.

விளையாட்டு என்பது விளையாட்டாக இல்லாமல் அது சாதிய அதிகாரத்தின் பலிக் களமாக மாறியதே இந்த விளையாட்டின் மீதான வெறுப்புகளை அதிகமாக்கியது. விளையாட்டின் விதிமுறைகள் தெரியாமல் ஒரே காளைமேல் பலர் விழுந்து அடக்குவதும், அதை நேரடி ஒளிபரப்பாகி காசு பார்க்கும் கார்பரேட்டுகளின் கைகளுக்குள் சென்றுவிட்டதையும் தொலைக்காட்சி வழி பார்த்துக்கொண்டிருக்கிறோம் நாம். சல்லிக்கட்டு பற்றிய முக்கியமான ஆவணமாக "வாடிவாசல்" உள்ளது என்றால் மிகையல்ல.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:21
தலைப்பு: வாடிவாசல்
ஆசிரியர்: சி.சு.செல்லப்பா
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 88
விலை: ₹90

Tuesday, April 10, 2018

மஞ்சு-எம்.டி.வாசுதேவன் நாயர்


சுற்றுலா நகரங்கள் எப்போதும் மகிழ்ச்சிக்குரியது அல்ல. சீசனுக்கு சீசன் நாம் சுற்றுலா செல்லும் நகரங்களில் வாழும் மனிதர்களைப் பற்றி என்றாவது சிந்தித்து பார்திருப்போமா? அம்மனிதர்களின் சுக, துக்கம் பற்றி நினைத்துப் பார்திருப்போமா? இல்லை என்றே பெரும்பான்மையோர் சொல்லக்கூடும். நாம் மனிதத்தை நேசிப்பவர்களாக மாறும் கணத்தில் கேள்விக்கான பதில் கிடைக்கக்கூடும். "மஞ்சு" இந்தக் கேள்விகளை எனக்குள் எழுப்பிவிட்டாள்.

"மஞ்சு" மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்களது நெடுங்கதை அல்லது குறுநாவல் என்றே சொல்லலாம். தமிழ், மலையாளம் என இருமொழிப் புலமை பெற்ற ரீனா ஷாலினி அவர்களது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் மூடுபனி. கேரளத்தின் பேரழகை மலைகளை, சாம்பல் பூத்த வானத்தை, பஞ்சுத் துண்டம் போன்ற பறக்கும் வெண் பனித் திவலைகளை, மழையை, அந்திவானக் கருக்கலை, இரவுக் குளிரை இப்படியாக பலவற்றையும் சுற்றிக்காட்டிவிட்டு பெரும் எதிர்பார்ப்பின் மனங்களின் வலிகளோடு திரும்ப விடுகிறார்.

விமலா டீச்சரும், படகோட்டி புத்துவும் இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திரும்பவும் வராமல் போகமாட்டார்கள் என்ற எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கின்றனர். தாயின் பிறழ் உறவால் தடுமாறும் மகள், சுற்றங்களை விட்டுவிட்டு விடுதியில் வாழும் விமலா டீச்சர் சுதீர் மிஸ்ரா எனும் வட இந்தியக் காதலனுக்காக ஒன்பது ஆண்டுகளாக காத்திருக்கிறார். புத்து கதையோ வேறானது. அவன் வெள்ளைக்கார தந்தைக்காக காத்திருக்கிறான். இவர்களைப் போன்று இன்னும் தனிமையில் உரையாடிக்கொண்டு காத்திருக்கும் மனிதர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.

லங்ஸ் கேன்சரால் பாதிக்கப் பட்டிருக்கும் சர்தார்ஜி விமலா டீச்சரிடத்தில் இன்னொரு காதிருப்பை உருவாக்கிச் செல்கிறார். மரணத்தின் வாசலை விஸ்தாரமாய் காட்டும் சர்தார்ஜி உயிரோடு இருக்கப் போவதோ நான்கு மாதங்கள்தான். இங்கு சர்தார்ஜி ஒரு குறியீடாகவே எனக்கு தோன்றுகிறது.

மஞ்சுப்பனி நம்மையும் ஏதோவொரு கணத்தில் தழுவிச் சென்றிருக்கக் கூடும். தனிமையின் பேச்சும், காத்திருத்தலின் வலியும் மிகக்கொடியது. சீசனுக்கு வந்த பறவைகள் பறந்து சென்றபிறகு அந்த சூன்யத்தின் வெளியில் பேரமைதி காத்திருக்கிறது. அடுத்த சீசனுக்கு வராமல் போய்விடுவார்களா என்ன?

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:20
தலைப்பு: மஞ்சு
ஆசிரியர்: எம்.டி.வாசுதேவன் நாயர் (தமிழில்: ரீனா ஷாலினி)
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 96
விலை: ₹100

Sunday, April 8, 2018

பெட்ரோ பராமோ-யுவான் ருல்போ



யுவான் பிரீஷியாடோ எனும் கதாபாத்திரத்தின் வழியே யுவான் ருல்ஃபோ நாவலுக்குள் பயணம் செய்கிறார். நம்மை மெக்ஸிகோ தேசத்தின் இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் அலைக்கழித்து அழைத்துச் செல்கிறார். இது ஒரு புதிய வகைப் பிரயாணமாகவே இருந்தது எனக்கு. ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொண்டு பிரயாணிப்பது பெரும் சவால் நிறைந்தது.

பெட்ரோ பரமோவின் கதை சுருக்கம் இதுதான். தாய்க்கு செய்துகொடுத்த சத்தியத்தை காப்பதற்காக தாயின் இறப்புக்குப் பிறகு தந்தையைத் தேடி தனது சொந்த ஊரான கோமாலாவுக்கு வருகிறார் யுவான் பிரீஷியாடோ. அது இறந்தகாலத்தின் நகரம். அத்தனை துயரங்களையும் அது தேக்கி வைத்திருக்கிறது.

மதத்தின் பெயரால் அரசமைக்கும் அரசு மக்களுக்கு பேரழிவினைத் தந்தே தீரும். அது மக்களை அடிமைப்படுத்தியே வைத்திருக்க விரும்பும். கிறித்துவப் பாதிரிகளின் கொடும் நெஞ்சத்தின் இன்னொரு பக்கத்தினை பறைசாற்றுகிறது. அவர்களின் ஆலோசனைகளின்படி ஆயுதமேந்திய படைகள் நாத்திக அரசுக்கெதிராக செயல்பட்டதையும் மக்களை கொன்றழித்ததையும் சொல்லி செல்கிறது. மெக்சிகோவில் 1926-29 களில் நடைபெற்ற கிறிஸ்டெரோக்களின் கலவரத்தில் யுவான் தந்தையை இழக்கிறார். பிறகு ஆறாண்டுகளில் தாயையும் இழக்கிறார். யுவான் இங்கிருந்துதான் தன் தந்தையைத் தேடிப் பயணிக்கிறார்.

எஸ்.பாலச்சந்திரன் அவர்களது மொழிபெயர்ப்பு போற்றுதலுக்குரியது. தடங்கலற்ற சிறப்பான மொழிபெயர்ப்பு.

நீங்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான நாவல் என பெரம்பலூர் நூலகத்திலிருந்து எனக்காக எடுத்துவந்து கொடுத்த சிறந்த வாசிப்பாளர் திருமிகு மார்க்கண்டன் முத்துசாமி அய்யா அவர்களுக்கு எனது அன்பும் நன்றிகளும்.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:19
தலைப்பு: பெட்ரோ பராமோ
ஆசிரியர்: யுவான் ருல்ஃபோ (தமிழில்: எஸ்.பாலச்சந்திரன்)
வெளியீடு: விடியல் பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 144
விலை: ₹55

தண்ணீரும் கண்ணீரும்-டொமினிக் ஜீவா



ஈழத்தின் இலக்கியப் பரப்பில் மிகவும் விசித்திரமான எழுத்தாளர் டொமினிக் ஜீவா. தட்டையான எழுத்துகளின்றி மிகவும் எளிமையாகவும், பாமர மக்களும் படித்தறியும் வண்ணம் இலகுவாகவும் கதையாக்கிய சிறுகதையாளர். பதினோரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே தண்ணீரும் கண்ணீரும் தொகுப்பு. தன்னைக் குறித்து பெரிய எழுத்தாளர் எனும் ஜம்பத்தை கட்டியெழுப்பாமல், தொழிலாளர் வர்க்கத்தின் சக தொழிலாளியாகவே வாழ்ந்திருக்கிறார்.

1950-60 களின் ஈழ மக்களின் வாழ்நிலையை ஆவணமாக்கியதில் இத்தொகுப்பிற்கும் சிறு பங்களிப்பு இருப்பதை அவதானிக்கலாம். சாதிய நெருக்குதலும், பெரிய மனிதர்களின் அந்தஸ்தும், கெளரவ பிரச்சினைகளும், ஏழ்மையின் நேர்மையும், நன்றி விசுவாசம், வேட்டைக்குணம், பிறரை நேசிக்கும் மாண்பின் மகத்துவம் என ஒவ்வொரு கதைக்குள்ளும் நாம் காண முடிகிறது.

"தண்ணீரும் கண்ணீரும்", "முற்றவெளி" மற்றும் "காலத்தால் சாகாதது" போன்ற கதைகள் என் மனத்தைப் பிசையும் சிறந்த கதைகள். ஸ்டூடிபேக்கர் காரின் சாரதியும், பிளீமவுத் காரின் சாரதியும் மணியமும், கந்தையாவும் தங்கள் தங்கள் எசமானர்களுக்கு எதிரும் புதிருமாய் இருக்கும் சுந்தரம் பிள்ளை மற்றும் ஆறுமுகம் பிள்ளைகளுக்கு விசுவாசமாய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு முதலாளிகளும் ஒன்றாய் ரோல்ஸ்ராய்க் காரில் போகும்போதுதான் இரண்டு சாரதிகளுக்கும் முதலாளித்துவத்தின் மனநிலை புரிய வருகிறது. அவர்கள் அவர்கள்தான், இவர்கள் இவர்கள்தான் என்பதை "இவர்களும் அவர்களும்" புரிய வைக்கிறது.

"கொச்சிகடையும் கறுவாக்காடும்" மனிதநேயமிக்க மருத்துவரின் பணியையும், "வெண்புறா" இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிபுரியும் விமானப் பணிப்பெண்ணின் தியாகத்தையும் சொல்லும் அற்புதமான கதைகள். செய்தியாளர்கள் இன்றைக்கு இருப்பதைப்போலதான் அன்றைக்கும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் கயிறு திரிக்கும் வேலையை, செய்திகளை எப்படி வேட்டையாடி திரித்து எழுதுகிறார்கள் என்பதை நித்தியலிங்கம் எனும் கதாபாத்திரத்தின் வழியே "செய்தி வேட்டை" சிறுகதையில் சாடியுள்ளார்.

"முற்றவெளி" மற்றும் "கரும்பலகை" சிறுகதைகள் இருவேறு ஊனமுற்ற மனிதர்களின் வாழ்வைச் சொல்கிறது. முற்றவெளியில் வரும் மாடு மேய்க்கும் சின்னக்குட்டியன் கட்டச்சி மாட்டுக்குப் பார்க்கும் பிரசவமும், தனக்கு பிறந்திருக்கும் குழந்தையை மங்கிய வெளிச்சத்தில் தூக்கி வைத்து குழந்தையின் கை, கால் அசைப்பினை தடவிப் பார்க்கையில் கண்கள் குளமாகிவிடுகிறது.

"சிலுவை" தபால் விநியோகம் செய்யும் ஒருவருக்கு எழுத்தாளர் ஒருவர் கடிதம் எழுதுவதன் ஊடாக இருவரின் மனவெளியையும் விவரித்துச் செல்கிறது. சிலுவை சுமப்பதையும் ஒரு தொழிலாகவே எழுதிச் செல்கிறார்.

கொழும்பில் சொகுசாக வாழும் யாழ் குடா நாட்டின் பாரிஸ்டர் பரநிரூப சிங்கம் கொழும்பில் ஏற்படும் இனக் கலவரத்தில் சொகுசு வாழ்வுக்கு ஆசைப்பட்டு லண்டன் செல்கிறார் குடும்பத்தோடு. அவர் சென்ற நேரம் அங்கே கறுப்பின மக்களுக்கு எதிராக வெள்ளையர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அதில் அவரும் குடும்பமும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை "தீர்க்கதரிசி" கதையும். ஷோக்கல்லோ கந்தையாவின் கதாபாத்திரம் போதை தலைக்கேறிவிட்டால் உயர்சாதியின் பெருமையை பீத்துவதை சுட்டுகிறது. அவருக்கு போதையில்தான் ஞானம் கிடைப்பதை "ஞானம்" சிறுகதையும் விவரிக்கிறது.

"அக்கினிபகவான் உயர்சாதி இந்துக்களின் தீப்பெட்டிக்குள்ளிருந்துதான் அடிக்கடி தலையைக் காட்டும் ஆசாமியாச்சே", "இரண்டு இரத்தங்களும் ஒரே ரகமாம், ஒத்துப்போகுமாம் என்ன விசித்திரம்? ஜாதிக்கு ஜாதி இரத்தம் மாறுவதில்லை", நானும் மனிதன், நீயும் மனிதன், நீயும் நானும் தொழிலாளிகள்" போன்ற வரிகள் "தண்ணீரும் கண்ணீரும்" சிறுகதையில் தெறிக்கும் வரிகள். விபத்தில் சிக்கும் உயர்சாதி பஸ் கண்டக்டர் சாமிநாதனுக்கு இரத்தம் கொடுக்கும் கை ரிக்ஸா ஓட்டும் குருநகர் பண்டாரம் கதாபாத்திரத்தின் வரிகளே அவை. முன்பொருமுறை புட்டை தின்றுவிட்டு நல்ல தண்ணி குடிக்க கிணற்றில் தண்ணீர் எடுத்த குற்றச்சாட்டில் இதே சாமிநாதன்தான் பண்டாரத்தின் வீட்டை தீக்கிரையாக்கினான். இதுபோலவேதான் "காலத்தால் சாகாததும்" சிறுகதையும். மயில்வாகனம் எனும் பெரிய கமக்காரனின் சாதிய வெறியும் போலீஸ் வேலைக்கு சேர இருக்கும் தலித் இளைஞன் பொன்னுத்துரை மீது தீர்க்கப்படுகிறது. ஒருமுறை பெரிய கமக்காரனின் மகளை கிணற்றுக்குளிருந்து பொன்னுத்துரை காப்பாற்றிய போதும் இந்தியாவிலிருந்து யாழ்குடாநாட்டின் மயிலீட்டியில் வந்திறங்கிய சிங்க மாப்பாணரின் சாதிய வெறி காலத்தால் சாகாமல் இருப்பதை கிணற்றை இறைப்பதிலிருந்து புரியலாம்.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:18
தலைப்பு: தண்ணீரும் கண்ணீரும்-சிறுகதைகள்
ஆசிரியர்: டொமினிக் ஜீவா
வெளியீடு: சரசுவதி வெளியீடு
மொத்தப் பக்கம்: 138

Thursday, April 5, 2018

உடைந்த குடை-தாக் ஸூல்ஸ்தாத்

உடைந்த குடை

சாம்பல் நிற வானம் கவிந்திருக்கும் நோர்வே நட்டின் ஆஷ்லோ நகரத்தின் ஜாகொப் ஆல்ஷ் வீதியில் வெண்ணிற சட்டை அணிந்து சுருக்கி மடியும் குடையோடு பார்கபோர்க் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் ஐம்பது வயதைக் கடந்த ஆசிரியர் எலியாஸ் ருக்கலா ஹென்ரிக் இப்ஷனின் "காட்டு வாத்து" ( wild duck) நாடகத்தை நடாத்துவதிலிருந்து ஆரம்பிக்கிறது கதை. இங்கு குடை ஒரு குறியீடாக நிற்கிறது.

நோர்வே நாடு அமைதியான மக்களைக் கொண்ட நாடு என்றுதான் நானும் இதுவரையில் நம்பியிருந்தேன். ஆனால் அவர்களுக்குள்ளும் புறவயத் தாக்கங்களால் அகவயத்துள் எழும் வாழ்வின் போராட்டங்களை மெலிதாக இந்நாவல் அடிக்கோடிட்டு காட்டுகிறது.

மார்க்சியத்தின் மீதான ஆய்வுகளில் நாட்டம் கொண்டு தனது ஆய்வுப் பணியை அதில் நிறைவேற்றும் ஜோஹான் கார்னலுசன் ஏவா லிண்டே எனும் பேரழகு பெண்ணை மணம் செய்து காமிலா எனும் பெண் குழந்தையை பெற்றெடுத்து பிற்பாடு விளம்பர மாயங்களால் முதலாளித்துவத்தின் மீது ஈர்க்கப்பட்டு மனைவியையும் குழந்தையையும் நண்பன் எலியாஸ் ருக்கலாவின் பொறுப்பில் விட்டுவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் நியூயார்க் புறப்பட்டு விடுகிறான்.

பள்ளியில் மாணவர்களின் செயல்பாடுகளால் விரக்தியடையும் எலியாஸ் ருக்கலாவின் ருத்ரதாண்டவம் விரிய மறுக்கும் குடையின் மீது தனது தேக்கிவைத்த அத்தனை கோபத்தினையும் வெளிப்படுத்தும் அந்த நிமிடம், உதவிக்கு வந்த மாணவியின் மீது காட்டும் எரிச்சல் என பள்ளியின் வாசலில் நடக்கும் இந்த கூச்சல் உள்ளேயிருக்கும் சக ஆசிரியர்களுக்கும் கேட்டிருக்குமென நினைப்பதும், குடைக்கம்பிகள் கிழித்து ரத்தம் வடியும் கைகளோடு தெருவில் இறங்கி நடக்கும் எலியாசின் நினைவுகளில்தான் நாவலின் மையம் கவனம் குவிக்கிறது.

ஏவா லிண்டே எனும் அழகு பதுமையின் அகத்தினிலும் பெரும் போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஜோஹானால் ஏமாற்றப்பட்டு இன்று எலியாஸ் ருக்கலாவோடு அறைக்குள் அடைபட்டுக் கிடக்கும், விரும்பும் எதையும் நிறைவேற்றிக் கொள்ள இயலாத கணவரின் ஊதியம், அதன்பொருட்டு எழும் சச்சரவுகள் என ஒரு சாமானிய பெண்ணாக வலம் வருகிறாள். ஏவா லிண்டேவின் இறுதி முடிவு இதுநாள்வரையில் தேக்கிவைத்தவற்றின் வெளிப்பாடாகவே அமைகிறது.

ஆண்களின் அகவுணர்ச்சி, பெண்களின் அகவுணர்ச்சி என இரண்டும் என்றைக்குமே இணையாத இரயில் தண்டவாளம் போலவே பயணிக்கிறது.

"ஸூல்ஸ்தாத் சரியலிச எழுத்தாளர். இவர் எழுதுவதுதான் தீவிர இலக்கியம்" என முரகாமி கூற்று நாவலை முடித்தபிறகு உணர முடிகிறது. ஜி.குப்புசாமியின் தமிழ் மொழிபெயர்ப்பு வாசிப்புக்கு தடங்கலின்றி கொண்டுசெல்கிறது. தமிழிலும் ஒரு மாபெரும் எழுத்தாளர் இதைப்போல எழுத்தினை தந்திருப்பதாக ஜி.குப்புசாமி தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அவரையும் நான் வாசித்தாகவேண்டிய ஆவலை என்னுள் விதைத்துவிட்டார். இப்படித்தான் ஒவ்வொரு புத்தகமும் இன்னொன்றினை தேட வைப்பதாக அமைய வேண்டும். வாய்ப்பிருந்தால் நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:17
தலைப்பு: உடைந்த குடை
ஆசிரியர்: தாக் ஸூல்ஸ்தாத் (தமிழில்: ஜி. குப்புசாமி)
வெளியீடு: காலச்சுவடு
மொத்தப் பக்கம்: 128
விலை: ₹140