Tuesday, April 17, 2018

பாலஸ்தீனக் கவிதைகள்

பதினைந்து கவிஞர்களின் எழுபத்தியோரு கவிதைகள். மஹ்மூத் தர்வீஸ், பெளசி அல் அஸ்மார், ரஷீட் ஹுஷைன், சலீம் ஜூப்றான், தொளபீக் சையத், அந்தொய்னே ஜபாறா, சமீஹ் அல் காசிம், மூயின் பசைசோ, நிசார் காப்பானி, ஃபத்வா துக்கான், அமீனா கசக், ஹானான் மிக்காயில் அஷ்றாவி, சுலஃபா ஹிஜாவி, லைலா அல்லுஸ், சல்மா கத்றா ஜய்யுசி.

இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் சிறு குறிப்பு கொடுத்து பின்னர் அவர்களது கவிதைகள் தரப்பட்டுள்ளது. ஆண் கவிகளுக்கு இணையாக பெண் கவிகளும் போரியல் கவிதைகளை சிறப்பாக யாத்துள்ளனர். போரின் தோல்வி, இழப்பு, சிறைக்காவல், சிதிர்வதைக்கூடம், சிறுவர்கள் மீதான தாக்குதல், ஐக்கிய நாடுகள் சபையின் பாராமுகம், தாயகம் மீதான ஏக்கம் என கவிதையின் பாடுபொருள்கள் உள்ளன. ஈழத்தின் படுகொலைகளுக்கு நிகராகவே பாலஸ்தீனத்தில் படுகொலைகள் நிகழ்ந்துள்ளதையும் கவிதைகள் ஆவணப்படுத்தி நிற்கின்றன. கவிதை ஒரு பேராயுதமாக திகழ்ந்துள்ளதை காண முடிகிறது. ஏனெனில் கவிஞர்களை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது, சில கவிதைகளை தடை செய்துள்ளது. நிசார் காப்பானியின் பின்னடைவு நூலுக்கு எழுதிய அடிக்குறிப்புகள் கவிதை ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் கடத்தி பதிப்பித்து வினியோகிதிருக்கிறார்கள். மனப்பாடம் செய்துள்ளார்கள்.

ஈழத்துப் பரப்பில் பாலஸ்தீனக் கவிதைகள் பெரும் தாக்கத்தினை உருவாகியுள்ளன. ஏனெனில் இருவரும் அரசின் ஆக்கிரமிப்புக்கு, அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர்கள். துவக்குகளைக் காட்டிலும் கவிதை ஆட்சியாளர்களை, அடக்குமுறையாளர்களை கலங்கடிக்கும் பெரும் போராயுதம். ஒவ்வொரு கவிஞர்களது கவிதையிலும் வெடித்து சிதறிய சன்னங்களை சேகரித்து வைத்திருக்கிறேன் உங்கள் பார்வைகளுக்காக. உங்களுக்குள்ளும் அவை சிறு தெறிப்பையாவது உண்டாக்கும்.
1. மஹ்மூத் தர்வீஸ்
"யாரையும் நான் வெறுப்பவன் அல்ல
யாரையும் நான் கொள்ளை அடித்தவன் அல்ல..."
"பட்டினி வருத்தும் போதிலோ என்னைக்
கொள்ளை அடித்தவன் தசையினைப் புசிப்பேன்."
"நாம் எதையும் இழக்கோம்
நமது சவப்பெட்டிகளைத் தவிர."
"அன்புள்ள நண்பனே
அவன் எப்போது வருவான் என்று கேட்காதே
மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள்
என்று மட்டும் கேள்."

2. பெளசி அல் அஸ்மார்
"ஒவ்வொரு மூலையிலும் மரணத்தை எதிர்த்துப் பேசியவன்
ஒரு சகோதரத்துவ வாழ்வைக் கோரி அதற்காக வாழ்ந்தவன்"

3. ரஷீட் ஹுஷைன்
"இலக்கணத்தையும் அதன் விதிகளையும் தீயில் இட்டோம்
போராளிகளாக மாறினோம்."

4. சலீம் ஜூப்றான்
"தொங்கும் இம் மனிதன்
பெர்லினில் பிறந்த ஓர் யூதன் அல்ல
என்போல் ஓர் அராபியன்
உங்கள் சகோதரர்கள் அவனைக் கொன்றனர்
சியோனில் வாழும்
உங்கள் நாசி நண்பர்கள்".

5. தொளபீக் சையத்
"வெற்றியுடனும்
சுதந்திர மனிதனின் வைகரையுடனும்
எனக்கோர் சந்திப்பு நிகழ இருப்பதால்
இறுதி நாள்வரை நான் மறுபிறப்பெடுப்பேன்".

6. அந்தொய்னே ஜபாறா
"கையில் நாம் தங்கிய ஒலிவம் கிளையினை
நிலத்தில் வீச நிர்ப்பந்திக்காதீர்".
"கசக்கிப் பிழியும் அகதி வாழ்க்கை
சுமையாய் எம்மில் சுமத்தப்பட்டது".

7. சமீஹ் அல் காசிம்
"அவனது பெயர் அறியப்படாத மனிதன்
வெள்ளை மாளிகைகள் அவன் எதிரே
கதவுகளை அடித்து மூடின".
"அமினா
ஒரு குற்றவாளி
அவளுக்கு வயது எட்டு".

8. மூயின் பசைசோ
"சித்திரவதை அறையின் கூரை மீது
சொட்டுச் சொட்டாய் விழும்
ஒவ்வொரு மழைத்துளியும் அலறியது
எதிர்த்து நில்".

9. நிசார் காப்பானி
"கோபமுற்ற ஒரு தலைமுறை
நமக்கு வேண்டும்
வானத்தை உழுத்துவிட
வரலாற்றைத் துடைத்தெறிய
கோபமுற்ற ஒரு தலைமுறை
நமக்கு வேண்டும்
தவறுகளை மன்னிக்காத
வளைந்து கொடுக்காத
ஒரு புதிய தலைமுறை நமக்கு வேண்டும்
ராட்சதர்களின் ஒரு தலைமுறை நமக்கு வேண்டும்".

பாலஸ்தீனப் பெண் கவிதைகளை இனிக் காண்போம்.
10. ஃபத்வா துக்கான்
"திருடப்பட்ட
உன் குழந்தைகளின் சிரிப்பிலிருந்து
சிதைவுகளில் இருந்து
இரத்தம் உறைந்த சுவர்களில் இருந்து
வாழ்வினதும் மரணத்தினதும்
நடுக்கங்களில் இருந்து
புதிய வாழ்வொன்று கிளர்ந்தெழும்
அது எழவே செய்யும்".

11. அமினா கசக்
"இப்போது மெளனமாக
அசைவற்றுக் கிடக்கும் ஊர்க் குருவியைப்போல்
அந்த இரவின் இருண்ட தனிமையில் திரும்பிவர
உனக்கு ஒருபோதும் சுதந்திரம் இருந்ததில்லை".

12. ஹானான் மிக்காயில் அஷ்றாவி
"நிலம் இவ்வளவு பாரமாய் இருக்குமென்று
நான் ஒருபோதும் நினைத்ததில்லை".

13. சுலஃபா ஹிஜாவி
"நாங்கள்
இறுகப்பற்றி அணைத்து நின்றோம்
பாடினோம்; செய்த்தா எங்கள் பூமி
பூமியின் இதயம்
நாம் அதன் கிளைகள்".
"மனிதரும் கற்களும் அரைக்கப்பட்டு
புழுதியாய் மாறினர்
சாத்தியமற்றதின் வெளிச்சத்தில்
என்றைக்குமாக தூவிக் கலந்தனர்".

14. லைலா அல்லுஸ்
"ஓராயிரம் பெருவெளிகளை உருவாக்கி
நஞ்சூட்டிய அம்புகளை அவற்றுள் செருகி
என் நிலம் எங்கும் நட்டு வைத்துள்ளனர்
என் பாட்டனின் வாளை ஒளித்துவைத்துள்ளனர்
அவரின் எச்சங்களை
என் கண் எதிரே விளைகூறி விற்கின்றனர்".

15. சல்மா கத்றா ஜய்யூசி
"இளமைக் கனவுகள் போல
சவப்பெட்டியும் தொலைந்து போகட்டும்
என்றே நான் விரும்புகிறேன்".
அந்தொய்னே ஜபாறா வின் கவிதைகளைப் போலதான் ஈழத்தவர்களாகிய நாமும் ஐக்கிய நாடுகள் சபை முன்னால் முறைப்பாடுகளோடு காத்துக்கொண்டே நிற்கிறோம். ஒருநாள் எமக்கான நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்: 24
தலைப்பு: பாலஸ்தீனக் கவிதைகள்
ஆசிரியர்: எம்.ஏ.நுஃமான்
வெளியீடு: மூன்றாவது மனிதன் பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 164
விலை: ₹200

3 comments:

  1. அருமையான அறிமுகம்

    ReplyDelete
  2. அன்பும் நன்றிகளும் தங்கள் வருகைக்கு

    ReplyDelete
  3. பாலஸ்தீனத்தின் இலக்கியப் பார்வையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete