Tuesday, April 17, 2018

பிறப்பு - யு.ஆர். அனந்தமூர்த்தி

ஒழுக்கம் கெட்டவர்களுக்கு பிறப்பவர்கள் ஒழுக்கம் கெட்டவர்களாகவும், சில நேரங்களில் ஒழுக்க சீலர்களாக பிறப்பதும் இயற்கையின் சித்துவேலைகளில் ஒன்றாகிறது. சமூகத்தில் நாம் பார்த்து வியக்கும் பெரிய மனிதர்களுக்குள்ளே சில நேரங்களில் ஒழுக்கக்கேடான எண்ணங்கள் மறைந்திருத்தலும், நாம் துச்சமாக மதிக்கும் சில மனிதர்களுக்குள்ளே ஒழுக்கமான வாழ்வு மறைந்திருப்பதையும் இன்றைய உலகில் நாம் காண முடிகிறது. இவற்றுக்கெல்லாம் பிறப்பு எனும் ஒற்றைச் சொல் காரணமாகிவிடுகிறது. வாழ்வின் போக்கை சில சமயம் அது பண்படுத்துகிறது, சில சமயம் சீரழிக்கிறது. நூலில் ஆடும் பொம்மைகளைப் போல் பாத்திரங்கள் இந்த நாவல் முழுதும் இயங்குகிறது. அப்பாத்திரங்களின் இயக்கம் தேடல் மிகுந்த வலிகளோடு தொடர்கிறது.

சில பாத்திரங்கள் மீது நமக்கு கரிசனம் எழுகிறது, சில பாத்திரங்கள் மீது கோபம் எழுகிறது. பரிதாபத்திற்குரிய பாத்திரம் ஒன்றும், மெச்சத்தகுந்த ஒரு நாத்திகப் பாத்திரமும் இந்த நாவலில் காணலாம். மெட்ராஸில் இருந்து பெங்களூர் போகும் முதல் வகுப்பு இரயில் பெட்டிக்குள் இருக்கும் நான்கு நபர்களின் அறிமுகத்தோடு துவங்குகிறது நாவல். அதன் மையம் ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் நிகழும் பாலியல் உச்சங்களையும், உறவுகளின் நெருடல்களையும், ஏமாற்றங்களையும், அது நிகழ்த்தும் துயரங்களையும் மனிதப் பிறப்பின் சூட்சுமங்களையும், அதன் முடிச்சுகளை அவிழ்க்கும் கண்ணியாகவும் செல்லும் கதை ஒரு பிறப்புக்கு முக்தி கிடைப்பதுடன் உறவுச் சிக்கல்களை பேசும் நாவலாக உச்சம் பெறுகிறது கன்னட எழுத்தாளரான யு.ஆர்.அனந்தமூர்த்தி அவர்களது பவா, தமிழ் மொழிபெயர்ப்பாளர் நஞ்சுண்டானின் பிறப்பு நாவல்.

கிட்டத்தட்ட தமிழில் பெருமாள் முருகன் அவர்களது மாதொரு பாகன் உறவுச் சிக்கலைப் போன்றே இது வேறொரு பரிணாமத்தில் வார்த்தெடுக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான வாசிப்பனுபவம் இந்த நாவல். தினகர்-கங்கு-நாராயணன் எனும் மூவருக்குள்ளான உறவுகள், புணர்ச்சிகள் போலவே சரோஜா-பண்டிதன்-விஸ்வநாத சாஷ்திரி போன்றவர்களின் வாழ்வில் நிகழும் சம்போகங்கள். அங்கே சரோஜாவின் மகனாக தினகர் பிறப்பும், இங்கே கங்குவின் மகனான பிரசாத்தின் பிறப்பு. கங்குவை தாலி கட்டிய பரிதாபத்திற்குரிய பாத்திரம் சந்திரப்பா. அதேபோல் நாத்திக பெண்ணாக வரும் மங்களத்தின் பாத்திரம் பிராமணத் தந்தையை கேள்வி கேட்பதும், வீட்டை விட்டு வெளியேறுதலும் என ஒவ்வொரு பாத்திரமும் சிறப்பு. சீத்தம்மா எனும் பாத்திரம் கோபால் எனும் பேரனுக்கு, நாராயணன் எனும் மகனுக்கும் இடையில் சமரசம் செய்வதும், சரோஜா இறப்பிற்கு பிறகு தினகருக்கும் அம்மாவாக வாழ்வதும் நடுநாயகமாக வாழ்கிறது. விஸ்வநாத சாஷ்திரியா பண்டிதனா தினகரின் தந்தை என்பது வாசகர்கள் பார்வைக்கே விடப்பட்டுள்ளது. கொஞ்சம் பிசகினாலும் இக்கதை நீலப்படக் கதையாகிவிடும் பேராபத்தினை உணர்ந்து இலக்கிய செறிவுடன் பிறப்பித்த இக்கதை சிறப்பு.


அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:23
தலைப்பு: பிறப்பு
ஆசிரியர்: யு.ஆர்.அனந்தமூர்த்தி (தமிழில்: நஞ்சுண்டன்)
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 120
விலை: ₹50

2 comments:

  1. யு.ஆர்.அனந்தமூர்த்தியின் பிறப்பு (தமிழில் நஞ்சுண்டன்) நூலறிமுகம் சிறப்பு

    ReplyDelete