Sunday, April 22, 2018

பாதுகை-டொமினிக் ஜீவா முன்வைக்கும் தொழிலாளர் வாழ்வின் கதைகள்


டொமினிக் ஜீவா அவர்களது "பாதுகை" சிறுகதை யாழ் நகரத்து தொழிலாளர்களை மாத்திரம் அல்லாது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் வாழ்வை பறைசாற்றும் கதைகளாகவே இருக்கின்றன. ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கைப் போராட்டம். அவர்களின் வறுமை அவர்களின் சுய கெளரவத்தினை, அவர்களின் நேர்மையை ஒரு போதும் அசைக்க முடியாமல் தன் தோல்விகளை வறுமை ஒப்புக்கொண்டு விட்டது. பாதுகை சிறுகதை தொகுப்பினூடாக நாம் 1950-60களின் யாழ் மாகாணத்தின் அதை ஒட்டிய கிராமங்களை அதன் நிலைகளை, வளர்ச்சிகளை கதைகளின் ஊடே ஓவியமாக தீட்டியிருப்பதை மனக்கண்முன் கொண்டுவந்து விடுகிறார். எனக்கு 90களின் போர் சிதைத்த நகரங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அதோடு என் அம்மம்மா சொன்ன கதைகளினூடாக அறிந்த நகரங்களை இப்போது பாதுகையில் காண முடிகிறது.

"பாதுகை" ல் வரும் செருப்பு தைக்கும் தொழிலாளி முத்து முகம்மது, "நகரத்தின் நிழல்" லில் வரும் ரிக்ஸா வண்டியோட்டி சின்னட்டி, "தாளக் காவடி" ல் வரும் அரசுப் பேருந்தின் நடத்துனர் (இவர் ஊர் பெயர் பருத்தித்துறை என்பதை சொல்கிறார். ஆனால் அவர் பெயரை சொல்லவில்லை. இது ஏன் என்பது தெரியவில்லை. அது கதாசிரியருக்கு மட்டுமே தெரிந்ததாகவோ, புனைவாகவோ இருக்கலாம்.), "கைவண்டி" ல் வரும் நகரசுத்தித் தொழிலாளி செபமாலை மற்றும் "காகிதக் காடு" கதையில் வரும் நியூ புக் ஹவுஸ் ல் பணிபுரியும் மாலினி போன்றவர்களை இன்றும் நான் வேறு வேறு ரூபத்தில் பார்த்துதான் வருகிறேன். அதிலும் மாலினியின் கதாபாத்திரம் பணியிடத்தில் பெண்களின் பிரச்சினையை பேசுகிறது. நவநாகரீக உடையில் வருபவர்களின் சேட்டைகளும் ஐம்பது ஆண்டுகளாகியும் மாறாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

"குறளி வித்தை" கதையில் பிரசவத்திற்காக மனைவி பூமணியை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வீடு வருகிறார் தம்பிப்பிள்ளை. மனைவி கடுமையாக இருப்பதாக அனுப்பிய செவிலியர்களின் தவறான தந்தியால் மன உளைச்சலுக்கு ஆளாகும் தம்பிப்பிள்ளை கற்கண்டும், கப்பல் வாழைப்பழமும் வாங்கும் பாக்கியத்தில் அனைத்தையும் மறந்து மனைவியையும் குழந்தையையும் பார்க்க செல்கிறார். கற்கண்டும் கப்பல் வாழைப்பழமும் ஆண் குழந்தை பிறப்பை குறிக்கும் குறியீடு. இதிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது "சவாரி" கதை. அச்சுவேலி சந்தையில் மாட்டுவண்டி சவாரி செய்யும் சவாரிச் சரவணை எனும் பட்டப்பெயர் பெற்ற சரவண முத்தருக்கு நான்கு ஆண் பிள்ளைகளுக்கு பிறகு ஐந்தாங்கால் பெண் பிள்ளை. முப்பத்தி ஒன்றாம் நாளில் பிள்ளைக்கு கண்டம் இருப்பதாகவும், அப்படி பிள்ளை கண்டத்திலிருந்து தப்பினாலும் அது தகப்பன் உயிரை எடுக்கும் என சித்திவிநாயகம் சாத்திரி சொன்னதை நம்பும் சரவண முத்தருக்கு தெரியாது அது சுருளி சுந்தரம் செய்த தந்திரம் என்பது. மாட்டுச் சவாரியில் வெற்றிபெறுகிறார் சரவண முத்தர். பெண் பிள்ளை வந்த நேரம்தான் இந்த வெற்றியை தந்தது என பெருமைப்படுகிறார்.

"வாய்க்கரிசி" கதை மதம் மாறி காதல் மணம் புரிந்த குடும்பத்தின் வாழ்வைச் சொல்லும் கதை. தேவதாசன் தன் மாமனுக்கு சுடலையில் வாய்க்கரிசி போட முடியாத நிலையை சொல்கிறது. "பாபச்சலுகை" கதை நடேசலிங்கம் எனும் சாதிய திமிரும் அதனால் எழும் விவாதமும் மருத்துவமனையில் திருச்செல்வதுடன் நடைபெறுகிறது. தன் பிள்ளையை கண்ட சாதிகள் படிக்கும் பள்ளியில் சேர்க்காத நடேசலிங்கத்திடம் கூண்டில் பறவையை அடைத்து வைத்திருந்தால் அது பிறகு கூண்டுதான் தன் உலகமென அங்குதான் கிடக்கும், பிறகு ஏன் கண்ட சாதிகளும் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த ஆஸ்பத்திரியில் சேர்கிறீர்கள் என்ற திருச்செல்வத்தின் கேள்வியில் மௌனமாகிறார் நடேசலிங்கம். நடேசலிங்கத்தின் மகளுக்கு பெயர் தெரியாத பெரிய வியாதி. இதுவே பாபச்சலுகை. நீங்கள் சொல்லும் அந்த கண்ட சாதிகள்தான் தங்கள் மொழியை, தங்கள் பாரம்பரியத்தை காவிக்கொண்டு திரிகிறார்கள் என்ற திருச்செல்வத்தின் வார்த்தைகள் சாட்டையாக விளாசுகிறது.

இப்படியாக வாழ்வின் அவலங்களை, மனித வாழ்வின் இருப்பை, கிழிந்து தொங்கும் எல்லாவற்றையும் ஒரு ஊசி, நூல் சில ஆணிகள் கொண்டு புதுப்பித்து தருகிறது பாதுகை.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்: 27
தலைப்பு: பாதுகை (சிறுகதைகள்)
ஆசிரியர்: டொமினிக் ஜீவா
வெளியீடு: தமிழ் புத்தகாலயம் பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 134

4 comments:


  1. ஒரு காலத்தில இத்தொகுப்பு யாழ்ப்பாணத்தில அதிகம் பேசப்பட்ட சிறந்த நூல்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தங்களால் இதையும் அறிந்தேன். சிறப்பான கதைகள்...

      Delete
  2. நூலின் மதிப்புரையின் கடைசி வரிகள் (இப்படியாக வாழ்வின் அவலங்களை...) மிகவும் சிறப்பாக மிளிர்ந்ததைக் கண்டேன். அவசியம் படிப்பேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete