Sunday, October 25, 2015

லிமரைக்கூ கவிதைகள் நிரல்-2






24.

தெய்வங்கள் கேட்டதா பலி?
படையலும் பந்தியுமாய் கொடையிட்ட மக்கள்
மனங்களில் இல்லை வலி!
25.
விநாயகர் ஊர்வலத்தில் கலவரம்
போதையில் பாதை மாறிய இளைஞர்கள்
இதுவே உண்மை நிலவரம்!
26.
இன்னும் நீளுது வறுமை
மக்களின் வரியில் ஆடம்பரச் செலவுகள்
அரசின் கஜானா வெறுமை!
27.
தமிழகத்தின் சிறப்பு முகாம்
அகதிகள் நலனில் அக்கறையற்ற
அரசின் இன்னொரு முகம்!
28.
சம்மதத்திற்கான அறிகுறி
சொல்லியது நாணல் கொண்ட
பெண்ணின் முகக்குறி!
29.
பேருந்தில் இருந்த ஓட்டை
பெண் விழுந்த அவலக் காட்சி
கேவலமாக்கியது அரசு நாட்டை!
30.
குழந்தைகள் மரணம்
அரசைத் தவிர மக்களுக்கு
ஆறாத இரணம்!
31.
உழைப்புக் கேற்ற ஊதியம்
எந்தத் துறையிலும் இதுவரை கிட்டவில்லை
சங்கங்கள் அரசுடன் மோதியும்!
32.
காட்டாறாய் வரவில்லை காவிரி
கடமைடைவரை நீரில்லை; பயிரிட்ட கழனி
பூண்ட கோலமோ தலைவிரி!
33.
தெருவுக்குத் தெரு கட்சி
தெளிவற்ற கொள்கை; மலிவான அறிக்கை
இதுதான் மக்கள் ஆட்சி!
34.
சொகுசாய்ச் செல்கிறது பயணம்
விபத்துகள் நேர்வது சகஜம்; நாற்கரச்
சாலை தந்த உபயம்!
35.
புத்தம் சரணம் கச்சாமி
காணி நிலத்தினில் இலட்சம் தமிழரைக்
கொன்றழித்துப் போட்டது ஏன்சாமி!
36.
மக்கள் கூட்ட நெரிசல்
சல்லாபம் தேடும் பொல்லாத
வக்கிர உடல்களின் உரசல்!
37.
மரங்கள் இல்லை காட்டில்
வனப்பாய் இருக்கிறது வண்ணக் குரோட்டன்கள்
வனத்துறை அமைச்சரின் வீட்டில்!
38.
பறித்த மலர்கள் கட்டிலில்
விடிந்ததும் முடிந்தது வாடிய மலர்களை
வீசினர் குப்பைத் தொட்டியில்!
39.
பதுக்கியவருக்கு வழங்கப்பட்டது வாய்ப்பு
முன்வரவில்லை பெயர்ப் பட்டியல் தருவதற்கு
தொடர்கிறது வரி ஏய்ப்பு!
40.
ஆற்று மணல் கொள்ளை
நிலத்தடி நீர் வற்றிய பூமியில்
மூன்று போகமும் இல்லை!
41.
வட்டிக் கடையில் அடகு
மூழ்கியது நகையோடு வைத்த மீனவன்
கடலில் உடைந்த படகு!
42.
மலர் தேடிவந்த வண்டு
கடித்தது ஆத்திரம் கொண்டு தேன்
மலரைச் சூடிய பெண்டு!
43.
உணவுதேடி வருகிறது தேனீ
மலர்களற்ற செடிகள் சுமந்த காணி
நிற்கிறது வெட்கத்தில் கூனி!
44.
எழுதினான் இறுதி மடல்
நிறைவேறாத காதல் நிம்மதியற்று; காதல்
நோய் சுமந்த உடல்!
45.
நடையைக் கட்டின வயல்நண்டுகள்
நாகரிக உலகில் பார்க்க முடிவதில்லை
நாற்று நடும் பெண்டுகள்!
46.
முடித்தார் தலைவர் நடைப்பயணம்
தேர்தலில் வென்றதும் மக்களை மறந்து
செல்வார் இன்ப சுற்றுப்பயணம்!

 - சுகன்யா ஞானசூரி,

லிமரைக்கூ கவிதைகள் நிரல்-1


1.
மங்கை ஒருத்தி வந்தாள்
மைவிழியில் கிள்ளை மொழியில் காதல்
தீபம் ஏற்றிச் சென்றாள்!
2.
மங்கையே மணாளனின் பாக்கியம்
சொல்லிவிட்டுச் சென்றவருக்கு இதுவரை அமையாததால்
அவருக்கு இதுவெறும் வாக்கியம்!
3.
அள்ள அள்ள குறையவில்லை
அமுதமாய் அட்சயப் பாத்திரத்தில்
காதல் தவிர வேறில்லை!
4.
லாரியில் ஆற்று மணல்
ஈரம் பொய்த்த பூமியில்
வெய்யிலோ கொளுத்தும் தணல்!
5.
விவசாயி வயிற்றில் சுருக்கம்
அண்டை மாநில தண்ணீர்ப் பிணக்கால்
காத்திருக்கும் நிலங்களுக்கு வருத்தம்!
6.
வெடித்தது நிலத்தில் கோடு
தண்ணீரற்று காய்ந்த பயிரை
மேய்கிறது ஆடு, மாடு!
7.
மறுக்கப்பட்டது திருமண அர்ச்சனை
சொன்னபடி செய்யவில்லையாம் அந்த
பூ மகளுக்கான தட்சனை!
8.
நொந்ததாய்த் தெரியவில்லை புத்தன்
புன்னகைத்தபடி இரசிக்கிறான் நிழலில் அமர்ந்து
இரத்தச் சகதியில் தமிழன்!
9.
எரிந்தது சாமி தேரில்
சாதிச் சண்டையில் சிக்குண்டு
அடித்துக் கொண்ட ஊரில்!
10.
காசநோய் வருமாம் காற்றில்
பொறுப்பாய் இருந்து தடுத்திட கண்ட
இடத்தில் துப்பாதீர் எச்சில்!
11.
முளைத்தது செல்போன் கோபுரம்
உடைந்தது மெல்லிதய சிட்டுக்
குருவிகளின் வாழ்க்கைச் சக்கரம்!
12.
ஆற்றில் அள்ளப்பட்ட மணல்
வெளிக் கொணர்ந்தது; புணர்ந்து புதைத்த
ஏழைப் பெண்ணின் உடல்!
13.
நடக்கிறது முதலீட்டாளர் மாநாடு
பசி பட்டினி கருகிய நிலமென
உழவன் கையில் திருவோடு!
14.
கடலுக்குப் போன மீனவர்
கரை ஒதுங்கினர் படகோடு பிணமாக
தொடர் நிகல்வாக்குகிறார் சிங்களவர்!
15.
கல்லுக்குள் ஈரம்
பறவையிட்ட எச்சத்தால் கட்டிடத்தில்
முளைத்தது தாவரம்!
16.
தேரோடு எரிந்தது சேரி
சாதிக்குப் பயந்து தானும்
எரிந்தாள் ஆத்தா கருமாரி!
17.
காய்ந்த குளத்தோரம்
செழிப்பாய் வளர்ந்து நிற்கிறது
கருவை மரம்!
18.
பனை ஓலையில் வீடுகள்
கூட்டாய் வாழச் சொல்கிறது
தூக்கணாங் குருவிக் கூடுகள்!
19.
முளைத்தன விதிமீறிய கட்டிடங்கள்
சுமை தாங்காது சரிந்த மலையில்
புதையுண்டு கிடக்கின்றன சடலங்கள்!
20.
நிகழ்கின்றன தொடர்கதையாய் படுகொலைகள்
மக்கள் நலனில் அக்கறையற்ற அரசு
கண்துடைப்பாய் நீளும் விசாரணைகள்!
21.
புதனுக்குக் காணிக்கையா ஈழம்?
மீண்டெழும் இனம் தமிழினம் மறந்து
கெக்கலிக்கிறது கூட்டாய்ச் சிங்களம்!
22.
அளவோடு உண்பீர் விருந்தை
மறப்பின் அனுதினம் அவதிகள் பெற்று
அன்றாடம் கைக்கொள்வீர் மருந்தை!
23.
நுளம்புக் கடியோ தொல்லை
மலேரியா, டெங்கு நீளும் வியாதிகள்
போதிய விழிப்புணர்வு இல்லை!

- சுகன்யா ஞானசூரி,

ஹைக்கூக்கள்


#அடர்வன இருள்
கொஞ்சம் வெளிச்சம்
மின்மினிகள்!

#சாதிகள் பார்க்காது
வேலிகள் தாண்டும்
காற்றும் காதலும்!

#பறக்கத் தவிக்கிறது
காற்றில் அசையும் உதிர்ந்த
இறகு!

#அடுக்ககக் கட்டிடத்தின் எழுச்சி
அழுது சரிகிறது
மலைகள்!

#அரிதாரம் பூசிய அழகி
அழகாய்ப் பறக்கிறாள்
வண்ணத்துப் பூச்சி!

#பால்வடியும் முகம்
பயமற்று இரவு உலா
முழுநிலவு!

#அளவுக்கதிக போதை
தாறுமாறாய் சுற்றுகிறது
ரீங்கார வண்டு!

#மலர்களை நாடும்
மது விரும்பிகள்
தேனீக்கள்!

#யார் உதைத்துத் தள்ளியது
ஆக்ரோசமாய் விழுகிறது
அருவி!

#மேகக் குடம் உடைந்தது
மலைவழியே வடிகிறது
அருவி!

#என் முகத்தில்மட்டும் தூறல்
செல்லக் குழந்தை துப்பிய
எச்சில்!

#ஒற்றைக்கால் கொக்கின் காத்திருப்பும்
உறுமீன் வரவும் உயிர்ப்போடு
சித்திரத்தில்!

#கரைமீது அதீத காதல்
கரைபுரண்டு ஓடுகிறது காட்டாற்று
வெள்ளம்!

@
சோம்பல் முறித்து
எழுகிறான் கீழ்வானில்
ஆதவச் சிறுவன்!

@
பஷ்பமானது பனித்துளி
காலை வேளை
பகலவன் பார்வை!

@
இரவு கூடல்
அதிகாலைப் புல்மேல்
பனி!

@
பயணக் களைப்பு
கடலில் ஓய்வு
நதி!

@
எண்ணற்ற மரங்களை அழித்து
எண்ணிட்ட மர நடுகை
நெடுஞ்சாலை!

@
ஆபாசமற்ற
குளியல் காட்சி மழையில்
வண்ணத்துப் பூச்சி!
@
ஆகாயத்தில் பறக்கும் அட்டையென
ஆற்றுப் பாலத்தில்
இரயில்!

@
உடைந்து கிடந்தது
முகில்களுக்கிடையில்
நிலவு!

@
தேகம் சிலிர்த்தது
தீண்டியது
தென்றல்!

- சுகன்யா ஞானசூரி,

கவிதைகள்-3



தமிழ்ப் பண்பாடு தேவை!அம்மா, அப்பா என்ற வார்த்தை
அரிச் சுவடியோடு போயே போச்சு!
மம்மி, டாடி என்றால் இப்போ
பெத்தவங்க மனம் குளிர்வ தென்றாச்சு!
தமிழ் என்றால் நாகரிகம் அற்றவராம்!
அயலவர் மொழிகள்தாம் சுவாசக் காற்றாம்!
நாகரிகம் தோன்றிய ஆதி நாட்களின்
தாய் மொழியே தமிழ் மொழிதானே!
இதை மறுப்பவர் வருவீர் என்னோடு!
பல ஆதாரம் செப்புவேன் பதத்தோடு!
பண்பட்ட சமூகம் தோன்றிட வந்த
மூத்த மொழி தமிழ் மொழி!
புண்பட்டு நிற்குது இன்றைய தலைமுறையில்!
புடம் போட வருவீர் இளையோரே!
முன்னேறிய உலகில் பண்பாடு தேவை!
மூச்சுக் காற்றில் தாய்மொழியை நீவை!
எத்தேசம் சென்றாலும் எந்நிலை நோற்றாலும்
பொற்காசு கிடைத்திடுமென பொல்லாங்கு செய்யாதே!
அப்பால் உளரெல்லாம் ஆர்ப்பரிப்பர் உன்மீதல்ல
இப்பால் உள்ளஉன் தாய்மொழி தமிழ்மீதே!
எந்நாளும் இதை மறவாதீர் இளையோரே!
பொன்நாளும் அமையுமே பண்பட்ட தமிழாலே!
இந்நாளே வளர்த்திடு இனியதமிழ்ப் பண்பாடு!
முன்னேறிய உலகிலே முன்னாலே சென்றிடு!
                            
==============================
=========================
அலைகளின் மீதலைதல்!

கடற்கரைக் காற்றினை
சுவாசிப்பவர்களே....
அலைகளில் கால்
நனைப்பவர்களே....
கொஞ்சம் நில்லுங்கள்.
வெட்டி வீழ்த்திய
மரக் கிளைகளாய்
மனித உடல்கள்
பிணக் குவியல்களாய்
ஈழ தேசம்
சவக் காடாய்....
உரிமைகள் கேட்டு
உடைமைகளை இழந்து
உறவுகளை விட்டு
புலம் பெயர்ந்தவர்கள் - நடுக்கடலில்
அக்கரையா இக்கரையா
தெரியாத வைகறையில்
உடைந்துபோன படகில்
உயிரை விட்டு.
காற்றோடு சேர்ந்து - அலை
கரை சேர்க்குது
பிரிந்துவிட்ட உயிர்களின்
மரண ஓலங்களை.....
மறந்தும்
கால் நனைப்பதாய்
மிதித்து விடாதீர்கள்
கரை தேடியே
அலைகளின் மீதலைகின்றது
அவர்களின் ஆன்மாக்கள்!

========================================================
முதிர்கன்னி!
மிக்சரும் பபல
தேநீர்க் குவளைகளும்
பரிமாறியாச்சு.......
இன்னும்
சில நாட்களில் - வயது
நாற்பதை எட்டிவிடும்
ஏக்கத்தோடு
முதிர்கன்னி!

========================================================
அழகி!
கறுப்புப் பேரழகி
கிளியோபாட்ரா
இந் நூற்றாண்டில்
வாழ்ந்திருந்தால்.....
அழகி எனும்
அந்தஸ்து கிடைக்காமல்
அழுதழுதே இறந்திருப்பாள்!
சிவப்புத் தோல் - மட்டுமே
அழகெனத் தீர்மானிக்கின்றன
விளம்பர நிறுவனங்கள்!

========================================================
சுதந்திர தேசத்தின் அடிமைகள்!
யார் சொன்னது
இந்த நாடு
வெள்ளைய ரிடமிருந்து
சுதந்திரம் பெற்றதென?
டோமினாஸ் பீட்ஷாவுக்கும்
கே ஃ எப் சி சிக்கனுக்கும்
இன்றைய
இளைய தலைமுறை
அடிமையாகி இருக்கையில்!

========================================================
நகரத்து மழை!
கொட்டித் தீர்த்த
கோடை மழையில்
கால் நனைத்து - காகிதக்
கப்பல் விட்டு
கொண்டாட முடியவில்லை....
நகரத்தின் கழிவுகளோடு
பயணிக்கிறது
மழை நீர்!

========================================================

தீ....

அக்னி
மீது ஏனோ
அடங்காத
கோபம் எனக்கு....
மழை நனைத்த
ஏழையின் குடிசையில்
அடுப்பெரிக்கத் தடுமாறிய
தீ....
கெட்டவர்
கரம் தீண்டியதும்
எப்படி முடிந்தது
சட்டென்று
பற்றி எரிக்க? - அந்த
ஏழையின் குடிலை!
==========================================================

நினைவுகளில்!

கிளுவை முள்முருக்கு
பூவரசமரக் கதியால்களோடு
தென்னை
பனையோலை வேலியென
நிழல் தரும்
ஒழுங்கைகளில் நான்
ஓடியாடி விளையாடினேன்!
ஆளுயர
நெல் வயலில்
பட்டம் விட்டு
மகிழ்ந்திருந்தேன்!
உப்புக்
காற்று வீசும்
அந்தி
மாலைப் பொழுதுகளில்
கடல்
அலைகளில் கால்நனைத்து
களிப்புற்றிருந்தேன்!
மாரி
காலக் குளங்களில்
மீன்
என எண்ணி
வால்
பேத்தைகள் பிடித்து
இரசித்திருந்தேன்!
அழகிய
என் கிராமத்தின்
இந்த
நினைவுகளைத் தவிர
இன்று
என் தேசமும்
என்னிடமில்லை!
=======================================================

பிக்காசோக்கள்!
தூரிகைகள் எதுவுமின்றி - வண்ணச்
சுண்ணம் கொண்டு...
தேசப்பற்று முதல்
தெய்வபக்தி வரை - அனைத்தையும்
அழகழகாய்த் தீட்டுகிறான்.
அவன்
வாழ்வில் மட்டும் - ஏனோ
கருப்பு வண்ணம்
நீங்க மறுக்கிறது.
பரபரப்பான
அந்தச் சாலையில் - பார்த்து
ரசிக்காது செல்லும்
மக்கள் மத்தியில்...
ஆட்சி மாற்றங்களை
விரைவாகவே நிகழ்த்துகிறான்!
அனைத்து மதங்களையும்
ஒன்றாக்கி வெல்கின்றான்!
பறவைகள், விலங்குகள் - ஏன்
பரபரப்பாய் பறக்கும் - இந்த
மனித இயந்திரங்களையும்
அவன் வண்ணமாக்கியிருக்கிறான்!
எனக்குத்
தெரிந்த வரையில் - பிக்காசோ
இவனாகத்தான் இருக்கமுடியும்!
ஆம்
நெட்டித் தள்ளும் - அவன்
நெஞ்சு எலும்புகளின்
எண்ணிக்கையை காட்டிலும் எண்ணிலடங்கா
ஓவியங்களை - அவன்
தீட்டிக் கொண்டேயிருக்கிறான்!
அடுத்தடுத்த சாலைகளிலும்
இவன்போல்...
ஆயிரமாயிரம் பிக்காசோக்கள்
இன்னுமின்னும் எதையெல்லாமோ
தீட்டிக் கொண்டேயிருப்பார்கள்
ஒருவேளை உணவுக்காக.
            
- சுகன்யா ஞானசூரி.



Saturday, October 24, 2015

கவிதைகள்-2


1.
விற்கப்பட்டுக் கொண்டும்
வாங்கப்பட்டுக் கொண்டுமாக....
வடிவங்களை மாற்றுகிற
அமீபாவாக
அவளுக்கான சந்தைகள்
வலம் வருகின்றன!
முதிர் கன்னியென
ஒற்றைச் சொல்லால்
அவளை எளிதாக
சொல்லிவிட்டு கடக்கலாம்!
எந்தச் சந்தையும் - இதுவரை
அவளுக்கான விலையை
அறுதியிட்டுக் கூறமுடியவில்லை
ஏனெனில் அவள்
விலைமதிப்பற்றவள்!
--------------------------------------------------------------------------
2.
அரசு வேலைகளுக்காக
பதிவு செய்துவிட்டு
பகட்டாய் இருப்பவர்களல்ல
நாங்கள்!
கிடைக்கும் வேலைகளை
செவ்வனே செய்திடும்
தீரர்கள் நாங்கள்!
அதனால்தான் என்னவோ
இன்றுவரை
துரத்தி யடிக்கப்படுகிறோம்
நாடற்றவர்களாக!
--------------------------------------------------------------------------
3.
நான் அவைகளை
விட்டுவிட்டு
வந்திருக்கக் கூடாது....
சிறுவயது முதல்
அவைகள்
எமது விளையாட்டுகளில்
ஒன்றாக இருந்ததை
எவ்வாறு நான்
மறந்து விடக்கூடும்?
தரையில் உரசி
தொடையில் வைத்தால்
சுருக்கென சுடும்!
முதல் முறையெனில்
அழுகை வரும்
கோபம் வரும்
பழகிவிட்டால் எல்லாம்
மறந்து போகும்!
என்
தேசம் செல்ல
நான்
காத்திருப்பது போல்....
என்
மகளோடு விளையாட
அந்த
சூடாங்கொட்டைகளும்
காத்திருக்கக்கூடும்!
--------------------------------------------------------------------------
4.
ஒவ்வொரு முறையும்
இவர்கள்
பகடைக் காய்களாய்
உருட்டப் படுகிறார்கள்.....
அப்படியென்ன
பாவம்
செய்துவிட்டார்கள்?
ஓட்டரசியலின்
வெற்றி தோல்விகளை
தீர்மானிக்கும்
துருப்புச் சீட்டுகளாய்
தூக்கிப் போடப்படுகிறார்கள்
தலித்துகளும் - ஈழத்
தமிழர்களும்!
- சுகன்யா ஞானசூரி.

கவிதைகள்-1



1.
நெடுஞ்சாலைப் பயணமொன்றில்
சன்னலோர இருக்கை.
கண்ணுக் கெட்டும்
தூரம் எங்கும்
வானாந்தர வெளியாகி
மன வெளியெங்கும்
வெப்பம் தகித்தது!
ஊராட்சி, பேரூராட்சி,
நகராட்சி, மாநகராட்சி
அன்புடன் வரவேற்பதாக
இழித்துக் கொண்டிருக்கிறது
பாதியுடைந்த பற்களென!
பச்சயம் தொலைத்த
வானாந்தர வெளியை
பார்க்கச் சகியாமல்
சன்னலை மூடிவிட்டு
கண்களை மூடி
ஒலிக்கும் பாடலுக்குள்
பசுமையைத் தேடி
பயணித்த கணங்களில்
எங்கிருந்தோ
மெலிதாய் வீசியது
மல்லிகையின் வாசம்!
---------------------------------
2.
புத்தம்
புதுப் பூவென
காலையில் மலர்ந்தும்
வாடிய பூவென
மாலையில் வதங்கியும்
பணிக்குச்
சென்று வருவதும்!
வாசனைத்
திரவியங்கள் பூண்டு
இரவுக் கேளிக்கையில்
ஆல்கஹாலோடு
ஆண்வாடை சுமந்து
அதிகாலையும்
அந்தி மாலையென
அறைக்குள்
அமிழ்ந்து கிடக்கும்
நகரத்துப் பெண்ணென
இருவேறு முகங்கொண்டு
மாநகரம்
நாட்களை நகர்த்துகிறது!
************************************
3.
அதோ
விக்ஸ் மரங்கள்
வெட்டப் படுகின்றது....
முந்திரி மரங்களும்
முறிந்து கிடக்கிறது....
சவுக்குத் தோப்புகளும்
வேலிகளும் காவல்களுமாய்....
கதிரவன்
மேற்கில் வீழும்வரை
காத்திருந்தோம்! - இனி
நிலவுகள் எழாத
அடர்ந்த இருளையே
வேண்டியிருப்போம்!
அடங்கக் கற்றுக்கொண்ட - நாம்
அடக்கவும் கற்றுக்கொண்டோம்
அடி வயிற்றுக்குள்
எழும் பிரளயங்களை!
இப்போது எமது
அவசர தேவை - அரசின்
காப்பீட்டுத் திட்டமல்ல
கழிவறைகளே!
அகதிகள்
முகாம் எல்லாம்
அவஸ்தைகளின் கூடாரமே!
*************************************
4.
பூவரசம் பீப்பியில்
இசை கற்றோம்!
தென்னங் குருத்தில்
தோரணம் செய்தோம்!
பனங் குருத்துப் - பிலாவில்
கூழ் சுவைத்தோம்!
குரும்பைகள் கொண்டு
தேர் செய்தோம்!
அன்னைத் தமிழை
உயிராய் சுவாசித்தோம்!
இப்படி எல்லாவற்றையும்
தாய்மண்ணில் கற்றுக்கொண்ட - நாம்
எங்கிருந்து கற்றோம்
புலப்பெயர்வை?
*************************************
5.
அமெரிக்காவிலிருந்து
வருவார்கள்......
ஐரோப்பாவிலிருந்து
வருவார்கள்......
இன்னும்பல நாடுகளிலிருந்தும் வருவார்கள்......
கதைப்பார்கள்.....
கட்டியணைப்பார்கள்......
புகைப்படமெடுப்பார்கள்.....
காலச் சக்கரம்
சுழன்று கொண்டேயிருக்கிறது...
காட்சிகள் மட்டும்
மாறவேயில்லை!
நாம்
இவர்களிடம் கேட்பதெல்லாம்
சுதந்திர
தமிழீழம் மட்டுமேயன்றி
அகதி முகாம்களின் - இந்த
அவலக் காட்சிகளையல்ல!

- சுகன்யா ஞானசூரி.

Friday, October 23, 2015

துளிப்பாக்கள்!

1.தட்சனையால் கொச்சையான
புனிதம்...
திருமணம்.

2.வானவீதியில்
கண்டன ஆர்ப்பாட்டம்...
கார்மேகம்.

3.கோடையில் வழிந்தோடும்
வற்றாத ஜீவநதி...
வியர்வை!

4.நிறைய முகங்கள்
பெயர் தெரியாமல்
இதயப் புகைப்படத்தில்!

5.ஆறறிவு கொண்ட
மிருகம்...
மனிதன்.

6.ஒளிரும் மகிழ்வில்
ஆனந்தக் கண்ணீர்
எரியும் மெழுகுவர்த்தி!

7.அழகிப்போட்டியில் வெற்றியோ
புல்லாள் தலையில்
பனித்துளிக் கிரீடம்.

8.காமனோடு காலன்
உருவாக்கிய கூட்டணி...
எயிட்ஸ்!

9.தன் வயித்தெரிச்சலை
காட்டுது புகைச்சலாக...
அடுப்பு.

10.மற்றவர்களின் தேவைக்காக
நாள்தோறும் உயிர்துறக்கிறது
தினசரி நாட்காட்டி.

11.தரிசாய் ஆவது
இவர்களது வாழ்வும்தான்
முதிர்கன்னி.

12.தூசு தட்டப்படாமல்
ஏக்கத்தோடு நூலகத்தில்
புத்தகங்கள்.

13.நிலவாளின் களியாட்டத்தில்
சிந்திய பழரசம்
பனித்துளிகள்!

14.இளந்தளிர்களுக்கு
வழிவிட்ட தியாகிகள்
சருகுகள்.

15.நவீன உலகில்
தொலைந்துபோன வார்த்தை
மனிதம்.

16.மனிதர்கள்
இரையாகிப் போனார்கள்
இலவசங்களுக்கு.

17.ஜனநாயகக் கடமை
ஜனங்களுக்கு தொந்தரவு
தேர்தல்!

18.கொலைக் குற்றவாளிகளே
பொது இடங்களில்
புகைப்பவர்களும்!

19.காற்றில் கரைவது
புகை மட்டுமல்ல
உயிரும்.

20.இருப்புப் பாதையெங்கும்
அட்டைப்பூச்சி...
இரயில்கள்.

21.பள்ளி மைதானங்கள்
கவலையில் குழந்தைகள்
விடுமுறையில்!

22.பூங்காக்கள் மகிழ்கிறது
குழந்தைகளின்
குதூகலத்தில்.

23.கருவறைக்கு
இரும்புக் கதவு
கடவுள் சந்நிதி.

24.நாடிருந்தும்
நாடோடிகளாய்
ஈழத்தமிழர்.

25.காட்சிப் பிழைகளாய்
காவியத் தமிழர்
ஈழதேசத்தில்.

- சுகன்யா ஞானசூரி,

ஐன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்-கவிதைத் தொகுப்பு

ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்-வைகறை

ஒரு வாசிப்பாளனின் பார்வையில்.....

கவிஞர் வைகறை அண்ணன் அவர்களுடனான எனது அறிமுகத்தை முதலில் சொல்லிவிட்டு நூலின் உள்ளே செல்வதே உசிதமாகும்.
ஆகத்து (07/08/2015) மாதம் 7ம் திகதி கவிஞரும் எனது நண்பருமான ஈழபாரதி அவர்களது இரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அப்போதுதான் நண்பர் ஈழபாரதி கவிஞர் வைகறை அண்ணன் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவர் நீண்டகாலம் என்னோடு பளகியவரைப்போல் கதைத்துக் கொண்டிருந்தவர் சட்டென்று ஒரு நூலை கொடுத்து இதை வாசித்து உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் என்று கொடுத்ததே ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்காப்படுகிறான் கவிதை தொகுப்பு. மிக நேர்த்தியான வடிவமைப்பு.

நூலைப் பற்றி...........

ஜெய்குட்டி தான் இந்த நூலின் அத்தனை கவிதைகளிலும் நாயகன். ஒவ்வொரு கவிதையிலும் ஜெய்க் குட்டி நம் இல்லத்து குழந்தையாகவே வலம் வருகிறான் கவிதைகளை வாசித்து முடித்த பின்னரும். ஒவ்வொரு வீட்டிலும் நிரல்யா (என் செல்ல மகளது பெயர்), நவீன், தமிழ் என ஜெய்குட்டி போல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எல்லாராலும் குழந்தைகள் கொண்டாடப் படுகிறார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். குழந்தைகளை கொண்டாடச் சொல்கிறது இந்த நூல். குழந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடும் நாம் குழந்தைகளை கொண்டாட மறந்து விடுகிறோம் என்பதை ஒவ்வொரு கவிதையும் உணர்த்திச் செல்கிறது.

குழந்தை இலக்கியம் படைக்கும் எத்தனை கவிஞர்கள் தம் குழந்தைகளை பாடியிருகிரார்கள்? தம் மகனை இந்தக் கவிதைகளினுடாக வைகறை அண்ணன் கொண்டாடிவிட்டார் என்றால் மிகையில்லை. இந்த தொகுப்பு நவீன குழந்தை இலக்கியம் என்பதும் சரியே.கவிப் பேராசான் மீரா அவர்களுக்கு அடுத்தபடியாக தம் பிள்ளையை பாடிய கவிஞர் என்ற பெருமை பெற்றுவிட்டார். பிள்ளைகளைக் கொண்டாடும் பெற்றோராக இருந்தால் நிச்சயம் பிள்ளைகள் பெற்றோரைக் கொண்டாட மறக்க மாட்டார்கள்.

கவிதைகளைப் பற்றி.....

தூத்துக்குடி மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டு தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் கவிஞர் கொஞ்சக் காலம் தருமபுரியின் ஒரு மலைக் கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். அந்த சூழல் அவரது ஜெய்க் குட்டிக்கு ஒவ்வாமையை கொடுத்திருக்கிறது. அதில் எழுந்த வரியாகவே நான் இதைப் பார்க்கிறேன். நுழை வாயிலேயே நம்மை ஆவலோடு அடுத்த பக்கத்தை புரட்ட வைக்கிறான் ஜெய்க் குட்டி. கவிஞர் இங்கேயே வெற்றி பெற்றுவிட்டார்.

அடர்வனம்
உள்நுழையத் தயங்கும் ஜெய்க் குட்டி
புரட்டுகிறான் அடுத்த பக்கம்.....

கூண்டுக் கிளியை திறந்துவிட்ட ஜெய் குட்டி மகிழ்ச்சியில் பறவை பறந்த வானத்தை பார்த்து புன்னகைக்கிறான். ஜெய் குட்டியின் பார்வையின் விசாலத்தை கவிஞர் அழகாய்ச் சொல்கிறார்,

முற்றத்திலிருந்து
வானம் பார்க்கிறான்
அங்கே
விரியத் தொடங்கியிருந்தது
அவன் புன்னகைக்கும் ஒரு சிறகு.....

வண்ண மீன்களைப் பார்த்து இரசிக்கும் ஜெய் குட்டியின் கண்களை தொட்டிக்கு அப்பால் இருந்து பார்க்கும் கவிஞர் இப்படி விவரிக்கிறார்,

எனது வண்ணமீன் தொட்டிக்குள்
இன்னும்
பயணித்துக் கொண்டுதானிருக்கின்றன
கூடுதலாய் ஒரு ஜோடி
கருப்பு வெள்ளை மீன்கள்!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததே உப்பு மூட்டை சுமத்தல் மற்றும் யானை சவாரி. அதிலும் தந்தையின் முதுகில் யானைச் சவாரி எவ்வளவு மகிழ்வைத் தரும் அந்தக் குழந்தைக்கு. ஜெய் குட்டியும் அப்படித்தான் சவாரி செய்கிறான். வலியெடுத்த தந்தையின் காலுக்கு ஜெய் குட்டியின் அன்பு முத்தமே வலி நீக்கும் மருந்தாகிறது,

யானை ஏறி மகிழ்கிறான்
என் முட்டி வலிக்க வலிக்க,
நிறைவாய் வைக்கிறான் முத்தமொன்றை
என் வலியின்மேல் மலரென.

கவிஞரின் கவிதை தாகத்தை இந்த ஜெய் குட்டி இப்படிக் கிளறிக்கொண்டே இருக்கிறான் பாருங்கள்,

புரட்டிக் கொண்டிருந்தான் ஜெய்குட்டி
ஒரு புத்தகத்தை.......
...........     ...................
ஓடிவரும் ஜெய்குட்டியை
வாரியணைத்து முகர்ந்து பார்க்கிறேன்
எழுத்துகளின் வாசனையை
இன்னும் சில கவிதைகளுக்காக!

குழந்தைகளின் உலகம் விசித்திரமானது, விசாலமானது, ஒளிவு மறைவற்றது. அவர்களது உலகை நாம் உணரத் தொடங்கி விட்டால் அதை விட்டு வெளிவர மனம் ஒப்பாது. ஜெய்குட்டியின் தோழி ஜெனி. ஜெனி குடும்பம் வீடு மாறிய பின்பு வேறொரு குடும்பம் அங்கு குடியிருக்க வருகிறது. வந்த குடும்பத்தில் குழந்தை இல்லை. எப்படி ஜெய்குட்டி எதிர்கொள்வான்? கனக்கும் வரிகளால் கவிஞர் அதை தருகிறார்,

இனி ஜெய்குட்டிக்கு அதிகரிக்க கூடும்
பக்கத்து வீட்டின் தூரம்....

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பெரும்பாலும் பதில் சொல்ல முடிவதேயில்லை. அப்படித்தான் கவிஞருக்கும் ஒரு அனுபவம் நிகழ்ந்திருக்கிறது,

பதில் சொல்லத்
தாமதப்படுத்துவதன் மூலம்
தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறேன்
ஒரு தோல்வியை.......

குழந்தை அன்பாய்க் கொடுக்கும் முத்தங்களில்தான் எதனை எதனை இன்பம். நம்மை நாமே மெய் மறந்து விடுவோம். கவிஞரும் அப்படித்தான் இரண்டு முத்தங்களை வாங்கியதில் வானமாகவும் கடலாகவும் நிறைவாகக் கவிதையை முடிக்கிறார்,

நிறைந்து கிடக்கிறேன் நான்
பாதி கடலாகவும்;
பாதி வானமாகவும்;
இரண்டே இரண்டு முத்தங்களால்.

ஜெய்குட்டி கவிதைகளால் மனதை நிறைத்து விடுகிறான். குழந்தைகளைக் கொண்டாடுவோம் வாருங்கள். என் நிரல்யா குட்டியை கொண்டாட நான் கிளம்பிவிட்டேன். நீங்கள்?

ஆசிரியர்: வைகறை

வெளியீடு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்,
                    பிள்சின்னாம்பாளையம்,
                    சமத்தூர்-642123,
                    அழைக்க: 90955 07547; 98422 75662.

விலை: ரூபாய் 50/=

ஆசிரியரின் பிற படைப்புகள்: ஒரிஜினல் தாஜ்மஹால்(2008)
                                                    நிலாவை உடைத்த கல் (2012)
இது இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு.

நந்தலாலா.காம் எனும் இணைய இதழையும் நடத்தி வருகிறார்.

கலைக்கப்படும் குருவிக் கூடுகள்-நம் குடும்பம் இதழில் வெளியான எனது கட்டுரை

தினசரி செய்தித் தாள்களை விரித்தாலே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை, குழந்தைகள் கடத்தல், பெண் கற்பழித்துக் கொலை, குடும்பத் தகராறால் கணவன் மனைவி தற்கொலை, பக்கத்து வீட்டு பெரியவரால் சிறுமி பாலியல் பலாத்காரம், முதியோர் இல்லங்கள் அதிகரிப்பு மற்றும் கொள்ளையென அன்றாட வேலைபோல் நடந்தவண்ணம் இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்? யாரும் சிந்திப்பதற்கு நேரம் இன்றி (நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்டு) பணம் எனும் ஒற்றைப் புள்ளியை நோக்கி அங்கலாய்த்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

    பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் இதுபோன்ற நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்தான் நிகழ்ந்தன. ஆனால் இன்று அப்படியா? இந்த செய்திகள் வராத செய்தித் தாள்களின் விற்பனை படுத்துவிடும் என்பதே உண்மை. ஊடகங்களும் தம் பங்குக்கு குடும்பத்தின் மாண்பை வளர்க்காமல் நடு வீட்டில் சிதைக்கும் வேலைகளையே செய்து கொண்டிருக்கிறது. குடும்பத்தின் ஸ்திரத்தை நிலை நிறுத்த வேண்டிய கனவான்களோ மதுபானக் கடைகளில் மயங்கிக் கிடக்கிறார்கள்.

   கூட்டுக் குடும்பம் எனும் கூடு சிதைவுற்றதின் விளைவு...... மேற்சொன்ன காரணங்கள் உருவாக்கம்.....

     வரலாறு நெடுகிலும் கூட்டுக் குடும்ப அமைப்பையே கொண்டு வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தில் தனிக் குடும்ப அமைப்பு வெள்ளையர் ஆதிக்கத்துக்குப் பின்னாலான நவீன காலத்தில், அதிலும் குறிப்பாக நகர்மயமான சமூகத்தில்தான் ஏற்பட்டது எனச் சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்,(பொ. வேல்சாமி, காலச்சுவடு). தமிழ்ச் சமூகம் மட்டுமே பல்லாயிரம் ஆண்டுகளாக கூட்டுக் குடும்பத்தை கட்டிக் காத்து வருகிறது. மேலை நாட்டு நாகரிக மோகத்தில் நாம் நம்மைத் தொலைத்து விட்டதின் விளைவு கூட்டு வாழ்வு அழிவின் விளிம்பில். வெளிநாடுகளில் 80 விழுக்காடுகளுக்கும் அதிகமாக கூட்டுக் குடும்ப வாழ்வு சிதைந்து விட்டதாகவும், தனிக்குடும்பத்தில் கவனிப்பாரற்று இருக்கும் சிறார்கள் பயங்கரவாத செயல்களுக்கு தம்மை இட்டுச் செல்வதாகவும் ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி தருகின்றன.

     "கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென" நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்? உணவுச் சங்கிலியில் எதாவது ஒன்றில் பழுது ஏற்பட்டாலும் சூழலியல் மாற்றம் ஏற்படும் என்பதைப் படித்தவர்கள் கூட்டுக் குடும்பச் சங்கிலியை உடைத்துவிட்டுச் செல்வது சரியல்ல. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணன், தங்கை, அக்கா, தம்பி, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா என தமிழ் சமூகம் உறவுகளால் பிணைக்கப்பட்டது. அதனால்தான் "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்", மாமன் உடையான் மலைக்கு அஞ்சான்" போன்ற பல பொன்மொழிகளை வழங்கிச் சென்றார்கள் நம் முன்னோர்கள்.

    குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். அவற்றை அலசி ஆராய்ந்து சொல்லிப் புரியவைத்து விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். சிறு சண்டைக்குக் கூட கூட்டுக் குடும்ப வாழ்வை விட்டு விலகுவது அபத்தம். சிறு சிறு சங்கடம் இருந்தாலும் கூட்டுக் குடும்பத்தை காப்பாற்றி வந்த என் பாட்டியின் மரணத்துக்குப் பின்பு எல்லாம் தலைகீழானது. பாட்டியின் மரணம் கூட்டுக் குடும்ப வாழ்வை வலியுறுத்தியது.

    கூட்டுக் குடும்பச் சிதைவுகளால் பெரியவர்களிடமிருந்து சிறுவர்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல போதனைகளும், நெறிமுறைகளும் கிடைப்பதில்லை. அதனால்தான் இன்றைய தலைமுறை பாட்டி மடியில் படுத்து கதை கேட்டேன் என்றோ நிலாச் சோறு உண்டேன் என்றோ சொல்லமுடிவதில்லை. அடுத்து கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகும் தனிக் குடித்தனத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறுசிறு உரசல்களுக்கு சரியான ஆலோசனைகளும், ஆதரவும் கிடைக்காமல் விவாகரத்து செய்வதும், மனது உடைந்து தற்கொலை செய்வதும் அதிகம் நிகழ்கிறது. "கிராமப் புறங்களில் விவாகரத்து குறைவாய் இருப்பதற்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையும், மனம் விட்டுப் பேசுவதற்கு அவர்களுக்கு வாய்க்கிற சந்தர்ப்பங்களுமே காரணமாகி விடுகின்றன,(சேவியர், தமிழோசை-களஞ்சியம்). உண்மைதானே?

     நகர, நரக வாழ்வில் கவனிக்க முடியாத பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது அதிகரித்து வருகிறது. மேலை நாட்டவர்கள் இப்போது நமக்கு நேர் எதிராக மாறி வருகிறார்கள்.

"காசோலையோடு
கால்வாசியாவது
அன்பையும் சேர்த்தனுப்பு
மகனே!
ஏக்கத்தோடு அன்னை
முதியோர் இல்லத்தில்!"
                  - ஈழக்கவிதாசன்.

    கருவில் சுமந்ததற்கு தண்டனையா? கடைசிக் காலங்களில் இன்பமாய் வாழ வேண்டியவர்கள் இப்படி துயருற்று இறப்பதுதான் சரியா? இதற்குத்தான் தவமிருந்து பெற்றார்களா? தனிமரம் ஒருபோதும் தோப்பாகாது என்பதை இன்றைய தலைமுறை புரிந்துகொள்ள வேண்டும்.

     நம் தமிழ்ச் சமூகம் உயிர்ப்புற கூட்டுக் குடும்ப வாழ்வை நாம் கட்டியமைத்துக் கொண்டாட வேண்டும். வாரத்திலோ, மாத்தில் ஒரு நாளோ அல்லது பண்டிகை நாட்களிலோ நாம் ஒன்றாய் அமர்ந்து உணவருந்தி உணர்வுகளை பகிர்ந்து கொண்டாலே போதும் இன்றைக்கு நாம் உருவாக்கி வைத்திருக்கும் நவீன உலகில்.

    மே மாதம் 15ம் நாளை உலகமே சர்வதேச குடும்ப தினமாக கொண்டாடுகிறது. கூட்டுக் குடும்பமாய் நாம் இருந்தவரையில் இதுபோன்ற தினங்கள் இல்லையே. பிறகெப்படி? குடும்ப தினம் கொண்டாடும் நாம் கூட்டுக் குடும்பத்தைக் கொண்டாடுவது எப்போது?
(நம் குடும்பம் அக்டோபர் 2015 இதழில் வெளியான எனது கட்டுரை)

இதழியல் முன்னோடியும் எனது பின்(னோ)னூட்டமும்!

இதழியல் முன்னோடியும் எனது பின்(னோ)னூட்டமும்!
                                    
                        - சுகன்யா ஞானசூரி.

      உரைநடைக் கவிஞன், புதுமைகள் புகுத்திய புதுக் கவிஞன் என இன்றுவரை பாரதியை அறிந்தேன்.பாரதிதான் இன்றைய இதழியல்களுக்கெல்லாம் முன்னோடி என்பதை இப்போதுதான் அறிய முடிந்தது. துபையில் வசித்து வருகின்ற அய்யா கிருஷ்ணசாமி இராமதாசு அவர்கள் பி.டி.எப் எனும் ஒளிப்பட வடிவில் என் மின்னஞ்சலுக்கு அனுபியிருந்த "இதழியல் முன்னோடி எங்கள் பாரதி" எனும் நூல் வழி...... பாரதியின் 115 வது பிறந்தநாள் பரிசாக மணிமேகலைப் பிரசுரம் பதிப்பித்திருக்கும் பொக்கிசம். இந்தப் பரிசைப் பெற பாரதி உயிருடன் இருந்திருந்தால் எப்படி உவகை கொண்டிருப்பான். அளவிட முடியாதது. காலம் கடந்த வாசிப்பு; ஆனால் கதைப்பதற்கு ஏராளம்........ படித்து முடித்ததும் நெஞ்சு கனத்துப் போனது.....

      1904 நவம்பர் மத்தியில் ஆரம்பித்து (சுதேச மித்திரன் சென்னை) 1920 நவம்பரில் மீண்டும் அதே சுதேச மித்திரன் சென்னை பதிப்பில் பணியாற்றிய காலத்திற்கு இடையில் நிகழ்ந்த பாரதியின் இதழியல் பணிகள் தொடர்பான அரிதிலும் அரிதான ஆய்வுத் தொகுப்பு. இலங்கையைச் சேர்ந்த ஆய்வறிஞர் தமிழ்மணி மானா அவர்களது அற்புதப் பணியால் கிடைத்த அரிய பொக்கிசம். பாரதி பணியாற்றிய ஒவ்வொரு இதழும் அவனது கனவுகள், தொலைநோக்குப் பார்வைகள், அர்ப்பணிப்பு, தரம் என நீளம்.....

       ஈழத்தை சிங்களத் தீவென பாடியதிலும், இந்தியை அனைவரும் ஒருமித்த பொது மொழியாக கற்க வேண்டுமென கூறியதாலும் பாரதியிடம் நான் முரண்பட்டு நின்றேன். அவன்மீது எனக்கு அடக்கமுடியாத கோபம் இருந்தது. "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்றவனா இப்படி உரைத்தான்? புதுக்கவிதைகளின் முன்னோடி, முண்டாசுக் கவிஞன் இவனா இப்படிக் கூறியது என்ற கோபமே இதுநாள்வரை என்னுள் இருந்தது. தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் நேசிக்கும் ஒருவனுக்கு இந்த வரிகள் கோபத்தை தருவதில் வியப்பொன்றும் இல்லைதானே. என்செய்ய அவன் கக்கிவிட்டுச் சென்ற கோபம்தானே இங்கு எச்சமாய்த் திரிகிறது.

       ஒரு பத்திரிகை நடாத்துவது அவ்வளவு சாமானியமான வேலை இல்லை என்பது பாரதியைப் படித்தவர்கள், அதிலும் இந்த நூலை வாசித்தவர்கள் புரிந்து கொள்வர். பத்திரிக்கைத் துறை பாரதியின் கனவுத் துறையெனில் மிகையில்லை. அனல் கக்கும் எழுத்துகளால் இந்த அடிமை தேசத்தை விடுதலை நோக்கி நகர வைத்தவனை இறந்த பின்பு இடுகாடு கொண்டுசெல்ல ஒரு சிலரைத் தவிர (20 அல்லது 23 நபர்கள்?) யாரும் வரவில்லை என்பது வேதனை. அதிலும் பத்திரிகை துறையில் உள்ளவர்கள் வராமல் போனது அவமானம். பெருமாள் முருகனுக்கு விடப்பட்ட மிரட்டல், கன்னட எழுத்தாளன் கொலையென இன்றும் எதிர்ப்புத் (வலைத்தள போராளிஸ் தவிர்த்து) தெரிவிக்க மறுத்துதானே வருகிறார்கள் சக எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும். இறந்துவிட்ட காக்கையை சூழ்ந்துகொண்டு கரைந்து கரைந்து தங்களின் துக்கத்தை, ஒற்றுமையை, இருப்பைக் காட்ட சக காக்கைகள் மறப்பதில்லை. மனித இனம்?

        பாரதியின் வாழ்வில்தான் எத்தனை இன்னல்கள்?  39 ஆண்டுகால வாழ்க்கைக்குள் எவ்வளவு அறிவுப் பொக்கிசங்களை யாத்துள்ளான். வறுமைப் பிடியிலும் தன் எழுத்தின்பால் தீராக் காதல் கொண்டவனிடம் எழுத்தை விற்கும் வியாபார எழுத்தாளர்கள் கற்கவேண்டியது நிரம்ப..... பெண்ணியம், கல்வி, ஆன்மீகம், விடுதலை வேட்கை, மொழிபெயர்ப்பு என அத்தனை இதழ்களிலும் முன்னோடியாய் தடம் பதித்துள்ளான். பாரதி எழுத்தை வாசிக்கும் ஒவ்வொருவரும் அவன் மனைவி செல்லம்மாவுக்கு நன்றி கூறுவதையும் மறந்துவிடக் கூடாது. தலைமறைவு வாழ்க்கையிலும் தளராது எழுதிட மறுப்புக் கூறாத மனைவி செல்லம்மாவுக்கு நன்றி கூறுவதில் தவறில்லையே?

        ஆங்கிலம், சமசுகிருதம், இந்தி, பிரஞ்சு மொழிகளில் புலமை பெற்று இருந்தாலும் பாரதி தமிழ் மொழியின் அவசியத்தை, தாய்மொழிக் கல்வியின் அவசியத்தையும் (இன்றைக்கு உள்ளவர்களைப் போல் வெளியில் ஒரு மொழியை எதிர்ப்பதும் தமது வாரிசுகளுக்கு உள்ளுக்குள் அந்த மொழியை கற்பிப்பதும் இல்லாதவன்) உயர்த்திப் பிடித்ததால் என் மனதுக்குள் சம்மணம் போட்டு அமர்ந்துவிட்டான். தன் தமிழ் உரைநடையில் பிறமொழிக் கலப்பின்றிப் பார்த்துக் கொண்டதால் தமிழ்த்தாயின் தலைமகன் என்பது பொருத்தமே. பாரதியை விமர்சனம் செய்தவர்கள் பின்னாளில் பிரபல்யம் பெற்றவர்களாக உருவானதையும் அறியமுடிகின்றது. அதுதான் பாரதியின் எழுத்துநடை.

      1910-14 வரையான காலத்தில் கடுமையான வறுமையில் வாடினாலும் பாரதியின் எழுத்துகளுக்கு வறுமையில்லை. இறப்பதற்கு முன்பும் அன்பர் நீலகண்ட பிரம்மசாரியிடத்து "அமானுல்லா கானை" (ஆப்கானித்தான் அரசன்) பற்றி ஒரு கட்டுரை எழுதி நாளை ஆபிசுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என கடமை தவறாத மகாகவி உறங்கியவன் எழவேயில்லை. "அமிர்தம்" "சித்திராவளி"(கேலிச் சித்திர இதழ்) கனவு இதழ்களைத் துவக்குவதற்கும் விடுதலை தேசத்தை கண்குளிரக் காண்பதற்கும் அந்த மகாசக்தி வல்லமை தரவில்லையே.... காலன் அழைத்துச் சென்றுவிட்டான்......அவனுக்கும் பாரதிமேல் கொள்ளை ஆசை போலும்.

            பாரதியின் உடல் இந்த மண்ணை விட்டுப் பிரிந்தாலும் இன்னும் உயிர்ப்புடன்தான் உலவுகிறான் எழுத்துகளினூடே.......

                                 =====  +  =====

நூல் : இதழியல் முன்னோடி எங்கள் பாரதி

ஆசிரியர் : தமிழ்மணி மானா (இலங்கை)

பதிப்பு : மணிமேகலைப் பிரசுரம் (லேனா தமிழ்வாணன்)

பதிப்பு ஆண்டு : 1997

விலை : ரூ. 17/-

(பின் குறிப்பு : இது எனது வாசிப்பு அனுபவம் மட்டுமே) 
--