Thursday, April 19, 2018

ஒவ்வா-ஸர்மிளா ஸெய்யித்


தமிழ் இலக்கிய வெளியில் காத்திரமான இஸ்லாமிய படைப்புகள் என்பது அதன் மார்க்கத்தை, மார்க்கம் நிகழ்த்தும் அடக்குமுறைகளை எதிர் கேள்வி கேட்பதன் ஊடாக வெளிப்படுகிறது. அப்படியாக தங்கள் சிறுகதைகளுக்குள்ளும், நாவல்களுக்குள்ளும் தம் மக்களின் பாடுகளை, அடக்குமுறைகளையும் எடுத்தாண்டு ஊரை விட்டு வெளியேற்றப்பட்ட படைப்பாளிகள் இப்போதும் எம்மோடு இருக்கவே செய்கிறார்கள். இது தமிழக இலக்கியப் பரப்பில் நிகழ்ந்த மோசமான நிலையாகும். அதிலும் ஒரு பெண் தன் மக்களை, சமூக பழக்கவழக்கங்களை கேள்விக்கு உட்படுத்துதல் என்பது கனவிலும் நிகழ முடியாத ஒன்றாகவே நீங்கள் எண்ணலாம். தன் கவிதைகளின் மூலமாக அப்படியான ஒரு செயலை செய்திருக்கிறார் "ஒவ்வா" கவிதை தொகுப்பினூடே ஸர்மிளா ஸெய்யித் அவர்கள். ஈழத்தின் கிழக்கு மாகாணமான மட்டக்கிளப்பின் ஏறாவூர் அவரது பிறப்பிடம். ஒவ்வா இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. ஒரு களச்செயல்பாட்டாளரும் கூட.

"சீசாவில் அடைபட்ட ஆவியாக
மாற எனக்குச் சம்மதமில்லை"

இக்கவிதையிலிருந்து தான் ஒரு கட்டுக்கடங்காத காட்டாறு, என்னை நீங்கள் உங்களின் கட்டுப்பாடுகளை, சாமானிய பெண்களின் மீது நிகழ்த்தும் அடக்குமுறைகளை கொண்டு என்னை கட்டுப்படுத்த இயலாது. அதில் எனக்கு சம்மதம் இல்லை என்பதை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிடுகிறார். கடலும் ஒரு காட்சியும் எனும் தலைப்பின் கீழ் வரும் இக்கவிதையை வாசித்துப் பாருங்களேன்.

"இலைக்கற்று அலையும் பார்வையுடன் விரல் சூப்பும்
குழந்தையை சுமந்து நடக்கிறாள் அவள்
புதையும் கால்களை இழுத்தவாறே
மணலில் புரளும் நீண்ட புர்காவை
ஒரு கையால் தூக்கிப் பிடித்திருக்கிறாள்
அருகே அவள் துணைவன்
வெள்ளை ரீசேர்ட்டில்
மயிர் அடர்ந்த நீண்ட தடித்த கால்கள் தெரிய
அரைக்காற்சட்டையும்
அதன் இரு பாக்கட்டுகளிலும் கைகளை விட்டும்
மிக நிதானமாக நடக்கிறான்
காற்று தடங்கலின்றித் தழுவ
மிக அலாதியாகக் கடலை ரசிக்கிறான்
அலைக்கரங்களுக்குப் பாதங்களைத் தடவத் தருகிறான்
புரண்டுவரும் அலையை உதைத்துக் குதிக்கிறான்
அரண்டு அழும் குழந்தைக்கு
பால்புட்டியைத் திணித்தபடி
வியர்வை வழியும் முகத்துடன்
கரையோர மணல் மேட்டில் குந்தியிருக்கிறாள் அவள்
மங்கிய மாலை இருளில்
அலைகள் புரண்டெழுந்து இரைந்தது நிறுத்தாமலே..."

புர்காவுக்குள் புலம்பும் அப்பெண்ணின் அவலத்தையும், ஆணின் சுதந்திரத்தையும், பெண் மீது சுமத்தப்பட்ட சுமைகளையும் அப்பட்டமாக பேசும் கவிதை. இருண்ட ஒற்றை நிறம் கவிதையும் இதையே வேறு வடிவத்தில் பேசுகிறது.

"அவர்கள் சொல்கிறார்கள்
என்னை ஒழுக்கங் கெட்டவள்
தேவடியாள் என்று
காதல் அடிமையாய் இருக்கலாம்
புணர்ச்சியை பேசுதல் குற்றமென்கிறார்கள்
பிள்ளை பெறலாம்
எந்தத் துவாரம் வழி அதுயென
கூறுதல் குற்றமென்கிறார்கள்
துல்லியமாய்ச் சொல்வதானால்
உச்சபட்சமாக
மரணதண்டனையை எனக்கு."

சமூகத்திலிருந்து மாறுபட்டு தன்னை அடையாளப்படுத்த விரும்பும் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் தண்டனையாக மரணதண்டனை இருப்பதாக சொல்கிறார்.

ஹூரூல் ஈன்கள் கவிதை சொர்க்கத்தில் பெண்ணுடல் ஒரு பிண்டமாகவே பார்க்கப்படுவதை சொல்கிறது.

புராதன ஊர் கவிதையின் இறுதி வரிகள் எந்த தேசத்தினருக்குமாக பொருந்திப் போகிறது. அவர் தனது தாய் நிலத்தின்பால் கொண்ட பற்றை பேசுகிறது இந்த வரிகள்.

"இனி எதுவும் சொல்வதற்கில்லை
என் காலணிகளை அங்கேதான்
விட்டு வந்திருக்கிறேன்
என்றென்றைக்குமாக!"

இப்படியாக பெண்ணின் இருப்பை, சுக துக்கங்கள், இழப்புகள், போராட்டங்களை பற்றியதாக பேசுகிறது. பல கவிதைகளில் வசனத்தன்மை அதிகமாக வருகிறது. இவற்றை சுருக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். புரட்சி பேசும் பெண் யாருக்கும் ஒவ்வாதவளாகவே இருக்கிறாள். அவள் அப்படியே இருக்கட்டும். இந்த சமூகம் அவளிடம் ஒத்து வரும் தூரம் அதிகமில்லை.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்: 25
தலைப்பு: ஒவ்வா
ஆசிரியர்: ஸர்மிளா ஸெய்யித்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 72
விலை: ₹65

2 comments:

  1. அருமையான கண்ணோட்டம்
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete