Friday, March 11, 2016

ஒரு மழை வந்து போகவேண்டும்- பா.செல்வகுமார்

                        சில கவிதைகளை வாசிக்கும்போது குழந்தைப் பருவத்தின் நினைவுகளைக் கூட்டிவரும், பால்யத்தின் நினைவுகளில் பரவசம் கொள்ளும், காதல் நினைவுகளை கிழர்த்திவரும், ஊரின் நினைவுகளோடு உறவாடும். அந்த மண்ணின் மனத்தினை, மொழியினை பறைசாற்றும். இங்கு தோழர் "பா.செல்வகுமார்" அவர்களின் "ஒரு மழை வந்து போகவேண்டும்" கவிதைத் தொகுப்பை வாசித்து முடித்ததும் அத்தனை நினைவுகளோடும் சாதியின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அந்த கொடுமைகளின் வலிகளையும் அழைத்து வந்தது. வேறென்னத்தை நான் சொல்லிவிட?

                      கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல்தான் கவிஞரின் சிறு கவிதைகள் கவனம் கொள்கின்றன. சிறுகதை வடிவிலான கவிதையிலும் பொருள் இருக்கிறது. ஓட்டோகிராப் சினிமா பாணியிலான சில கவிதைகள் ஞாபகங்களை உண்டுபண்ணுவதையும் தவிர்க்கவியலவில்லை. இத்தோடு நின்றுவிடாமல் கவிதையின் அடுத்த கட்டத்தை அவர் கைக்கொள்ள வேண்டும். கவிதைகளை நான் குறிப்பிடுவதைக் காட்டிலும் வாங்கி வாசித்துப் பாருங்கள்.

                       மீண்டும் "ஒரு மழை வந்து போகவேண்டும்" சாதியத்தை துடைத்தழித்துப் போக. வாழ்த்துக்கள் தோழரே.
- சுகன்யா ஞானசூரி,

அடையாளம்....

நீங்கள்
வெற்றியும் பெறலாம்
தோல்வியும் தழுவலாம்
ஓட்டுக்கள் பிரிந்தால்
நட்ட நடுவிலும் நிற்கலாம்
பேரம் நிகழ்த்தியபடி.

இம்முறையும்
உங்கள் தேர்தலுக்கு
நாங்கள்
பகடைகளாவதை அறிவோம்.

சாதிய மரணத்துக்காகவும்
மதவெறி மரணத்துக்காகவும்
எதிர் முழக்கமிடும்
எழுத்தர்களும், உழுத்தர்களும்
எமக்காக வரப்போவதில்லை
இன்னும் பல
ரவீந்திரன்கள் மரணித்தாலும்!

இயற்கையாகவும்
செயற்கையாகவும்
நிகழும் உபத்திரவங்களை
எங்கே சொல்ல?
எப்படிச் சொல்ல?

பெருங் குரலெடுத்துக்
கத்தத் திராணியற்று
விசும்பலோடு நகர்த்துகிறோம்
தகரக் கொட்டிலுக்குள்.

அரசின் பதிவேட்டிலும்
இறப்புச் சான்றிதழிலும்
அங்க அடையாளங்களோடு
இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...
மிச்சம் மீதியாயிருக்கும் உயிரை
காப்பாற்றப் போராடும்
அடிமையான அகதி நாங்கள்
வேறென்ன அடையாளம் சொல்ல?

- சுகன்யா ஞானசூரி,

Wednesday, March 9, 2016

மணலும் மணல் சரிந்த இடமும் - சுப்ரா


அரசாங்க அதிகாரிகளின் துணையின்றி, அரசியல் ஆதிக்கத்தின் அரவணைப்பின்றி, மக்களின் பொறுப்பற்ற, பேராசை மனங்களின்றி எந்தவொரு தவறும் இயற்கைமீது நிகழ்த்தப்படுவதில்லை. ஆற்றங்கரையோரமாய் வளர்ச்சி பெற்ற மனித நாகரிகம் இன்று ஆற்றின் வளங்களை கொள்ளையடிக்கக் கற்றுக் கொண்டது எந்த வகை நாகரிகத்திடமிருந்து என்பது கேள்வியாகவே உள்ளது.
நம்மைப் பாதுகாக்கும் இயற்கையின் வளங்களை கொள்ளையடிக்கும் செயல், பெற்றவளின் பிறப்புறுப்பை சிதைக்கும் வக்கிரம் பிடித்த பிள்ளையின் செயலுக்கு ஒப்பானதாகவே நான் பார்க்கிறேன்.
கடந்தாண்டு கொட்டித் தீர்த்த பெருமழையில் பல ஆண்டுகளாய் நீர் பாயாத பாலாற்றில் கரை புரண்டோடும் வெள்ளத்தைப் பார்க்க கூடிய கூட்டத்தைப் பார்த்தால் வெறுப்பாகவும், அவமானமாகவும் இருந்தது. அவ்வளவு மணலையும் கொள்ளையடிக்கும்போது எங்கே போனார்கள்? மொத்த நீரும் வீணாய் கடலில் கலந்தது. ஆறு மலடாய்ப் போனது.
இதே நிலைதான் இப்போது பல ஆறுகளுக்கு நிகழந்து கொண்டிருக்கிறது. தாமிரபரணியில் நிகழும் மணல் திருட்டையும், அந்த முதலாளிகளின் பேராசையையும், வேவு பார்க்கும் தொழிலாளியின் மன நிலைகளையும், அந்த மண்ணின் மணத்தோடு இம்மாத "புதுப்புனல்" சிற்றிதழில் "மணலும் மணல் சரிந்த இடமும்" எனும் சிறுகதை ஒன்றைப் படைத்திருக்கிறார் கவிஞரும், பரணி இலக்கியக் காலாண்டிதழின் ஆசிரியர்களில் ஒருவருமான சுப்ரா ஐயா அவர்கள்.
ம.ம.ச.இடமும் சரியான தண்டனையை முடிவாய் வழங்கியிருக்கிறது. இயற்கை நமக்களித்த கொடைகளை அடுத்த தலைமுறையிடம் பத்திரமாய் கையளிக்கத் தவறியமைக்கு நிச்சயம் அதற்கான தண்டனைகளை ஒட்டுமொத்த சமூகத்துக்குமாக இயற்கை வழங்கும். அப்போதும் நாம் வேடிக்கை மட்டுமே பார்ப்போம் உயிரோடு இருந்தால். 

Wednesday, March 2, 2016

நட்சத்திரங்களினூடே...

இரவுப் பாடலை மரித்துவிட்டு
கருநீலப் போர்வைக்குள்
உறங்கும் ஆழ்கடலில்
நடு இரவின் நட்சத்திரங்களை
அவன் எண்ணிக் கொண்டிருக்கிறான்.

மெளன மொழியில் அவைகள்
அவனிடத்தில் எதையோ சொல்வதுபோல்
மின்னிக் கொண்டிருக்கின்றன.

ஊமைப் பெண்ணென நிலவும்
அமைதியாய் அழுதபடி
நசுக்கும் பூத முகில்களுக்கிடையில்
எட்டியெட்டிப் பார்க்கிறது.

காற்றின் சலனமற்றுத்
தளும்பும் தோணியொத்த
ஊசலாடும் வாழ்வில்-அவன்
மனமும், மக்கள் வாழ்வும்.

காதுகளை கையால்
பொத்துவதும் எடுப்பதுமாய்
சத்தங்களை ஆய்வு செய்தபடி இருக்கிறான்
ஒரு விசரனைப்போல்.

மூலை முடுக்கெல்லாம்
அழுது குழறிய
முள்ளி வாய்க்காலின்
மரண ஓலங்கள்-அவன்
காதுகளை செவிடாக்கி யிருக்கக்கூடும்....

நள்ளிரவு தாண்டியும்
அவன்
நட்சத்திரங்களை எண்ணுகிறான்
ஊமை நிலவோடு சேர்ந்து...

விடியலுக்குள்
எண்ணிவிடும் முனைப்போடு இருக்கும் 
அவனுக்கு தெரியாமல் இல்லை
வகை தொகை தெரியாமல்
அழிக்கப்பட்ட எம் உறவுகளை
நட்சத்திரங்களினூடே 
எண்ணிவிட முடியாதென்பது.

- சுகன்யா ஞானசூரி.

எம் வாழ்வின் மிச்சமாய்...


அந்த
ஒற்றை மரத்தின்
உச்சக் கொப்பில்தான்
காதல் மொழி கதைத்தபடி
களித்திருந்தன
அத்தேசத்தின் பறவைகள்.
நடுநிசி கடந்து
இரண்டாம் சாமமொன்றில்
வேட்டைக் கூட்டமொன்று
ஊருக்குள் புகுந்திருப்பது தெரிகிறது
மிகச் சமீபமாய்க் கேட்கிறது
சுடுகுழலின் சத்தங்கள்.
காலைக் கதிரவன்
பின்காலைக்குள் செல்லும் வேளை
ஓய்ந்திருந்தது சுடுகுழல் சத்தம்.
கனத்த மௌனத்தின்
பெரு வெளியில்
பதுங்குகுழி தாண்டியும்
பரவிக் கிடந்தன!
முறிந்த மரக் கொப்புகளோடு
பறக்க மறுத்து
சிதறிக் கிடந்த
ஒவ்வோர் இறகினின்றும்
வழிந்தபடி இருக்கிறது
பெருந்துயரம் சுமந்த
வாழ்வின் நிகழ்வொன்று!

- சுகன்யா ஞானசூரி.