Friday, October 15, 2021

நாடிலி - தோழர் பொதியவெற்பன் ஐயா பார்வையில்



புலம்பெயர் ஏதிலி நினைவில்

'உடனலைந்து எரியும் ஒருபிடி நிலம்':2

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


2.'கடல்மீதும் சிறுதுண்டு நிலந்தேடும் ஏதிலிபாதம்' -

ஞானசூரியின் 'நாடிலி' மீதான என் வாசிப்பின் பிரதி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


"உலகத்தின் வீதிகளில் ஒரு முகவரி தேடி

அலைகிறது என்னினம்...." -

கிழவன் வைகறை வாணன்  


"இங்குவந்த எனக்கு/

புலம்பெயர்ந்த புள்ளிவிபரம் பொருந்தாது/

ஊன்றிய காலை எடுத்து இன்னொரு/

இடத்தில் வைத்தால்/

முந்திய இடமும் பிந்திய இடமும்/

பூமிதான் எனக்கு/

எனவே எனக்கு நாடில்லை/

நாமம் இதுவென்று ஒன்றில்லை."


இப்படியாகப் புலம்பெயர் வாழ்விலும் பிறந்த மண்ணையும் புகலிட மண்ணையும் தமக்கான பூமிதான்என வீற்றிருக்கும் பிரமிளாலும் கூட,


"பார்த்த இடமெல்லாம்/ கண்குளிரும்/ பொன்மணல்

என் பாதம் பதித்து/ நடக்கும்/ இடத்தில் மட்டும்/

நிழல் தேடி/ என்னோடு அலைந்து/ எரிகிறது/

ஒருபிடி  நிலம்"

புகலிட நிகழ்தகவிலும்    புலம்பெயர்ந்துடனேயே

அலைந்து எரியும் ஒருபிடி நிலத்தை உதறிடவா முடியும்?


இதனால்தான், சச்சிதானந்தனின் ' நினைவில் காடுள்ள மிருகம் போல் எரியும் தம் நிலத்தை நினைவுகளில் தூக்கிச் சுமந்தலைகிறோம் என்னும் ஞானசூரி அதுதரும் வாதையிலிருந்து தப்பித்துக்கொள்ளப் படைப்பிலக்கியத்தின் வழியே சற்று ஆசுவாசம் கொள்கின்றோம் என்கின்றார்.


புகலிட வாழ்வூடே முந்தைய இடமும் பிந்தைய இடமும்

பூமிதான் தமக்கென்றாலும் 'உடன் அலைந்தே தான்

தீரும் ஒருபிடி நிலம்'. அந்த அல்லாட்டமே 'நாடிலி'.


*


"யாதும் ஊர்தான் யாவரும் கேளிர்தான்/

வேறு வழியில்லை/ ஊரற்றவனுக்கு உலகே வீடு/

என்பதெல்லாம் ஊரற்றுப்போன துயரம்/

மறக்கவே" - கலியமூர்த்தி

 மாறாக மறக்க அல்லாமல் அதனை மறுக்கவே 

செய்கின்றன ஏதிலியர் கவிக்குரல்கள்:


"சமுத்திரத்தின் பெருவெளியில்/ படகுகளோடு  மூழ்கிய குழந்தைகளை ஒதுக்கும் /கரையில்/நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்/ யாதும் ஊருமில்லை/யாவரும் உறவுமில்லை" 


"வெளித்திசை என்பது/ முகாம்வாசிகளின் ஒன்பதாவது

திசை."


"போர் திணித்த இடப்பெயர்வில்/ எப்படி நீங்கள்/என்னை/ அகதியென விளிக்கின்றீர்கள்?"

"முகாம்வாசிகளின் உள்ளத்தில்/ தீயின் கங்கு எப்போதும்/

கனன்றுகொண்டே இருக்கிறது/ அகதியென/ நீங்கள்

விளிக்கும் போதெல்லாம்/ நீராவி என்ஜினைப் போல்

எரிந்தடங்கும்" - ஞானசூரி


"அடையாளங்களற்ற நான்/ அதை நினைப்பதிலோ

நடுக்கம் எழுகிறது/ தலையைப் பிடித்தாட்டும் கைகள்

ஆயிரம்/ நாடுமில்லை/ இது என் பெயருமில்லை/

அடையாளங்களற்ற நான் அகதியும் இல்லையாம்" -

தர்மினி ('இருள் மிதக்கும் பொய்கை)


*


'கடல்வழி வந்த அகதி நதிபார்த்தல் ' சிவரமணியின்

வண்ணத்துப்பூச்சி பார்த்தலை நினைவூட்டுகின்றது.

இரண்டுமே நம்மனோர் முருகியலைப் போலாது அதில்

லயிக்கொணா வாழ்மானத்தின் சித்திரிப்புகளே:


மாலைவெய்யில்/ இரவு ஒளிகள்/ நதிநீரின் சலசலப்பு/

குறுமணலின் பளபளப்பு எல்லாம் அழகென்று நீங்கள்

வர்ணிக்கின்றீர்கள்/ இதுகாறும் நான் பார்க்கவில்லை

என்பதை விட/ இரசிக்க விடப்படவில்லை" எனத் தொடரும் கவிதை நதிக்கரை நாகரிகங்களில் சிறந்த இனவழி வந்தும் அகதியெனப்பட்ட தானடைபட்டாக வேண்டிய பட்டிக்குள் மாலைக்குள் சென்றடைந்தாகணுமே என அத்தருணப் பதைபதைப்பை முன்னிறுத்துகிறார்.


செவ்வலரி பூத்தவானமும் செங்குருதி தேங்கியதம்

நிலத்தையே பிரதிபலிப்பது  ஆகிப்போகையில்

அந்த அழகை எல்லாம் அவர்களால் எவ்வாறு ரசிக்க ஏலும்?


"இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு/ துப்பாக்கி

நீட்டப்படும் போது/ ஒரு மெல்லிய பூநுனியில்/

உக்காரக்கூடிய/ வண்ணத்துப்பூச்சியின் கனவு / எனக்குச் சம்பந்தமற்ற / ஒரு சம்பவிப்பு மட்டுமே."- சிவரமணி ('செல்வி சிவரமணி கவிதைகள்')

Thiru Arasu 

*


 

"ஒட்டஒட்ட வெட்டப்பட்ட/ அவர்களுடைய புன்னகை

போன்றே/ என்னுடைய புன்னகையும் இருந்தது/

என்னைப் போன்றே மொழி தெரியாத/ இரவல் முகங்கள்இரண்டை அகதிகள் தேசத்தில் / அவர்களும் அணிந்திருந்தனர்" - தில்லை Thillai Jeganathan 


"ஒட்டஒட்ட வெட்டப்பட்ட அவர்களுடைய புன்னகைபோன்றே/ என்னுடையபுன்னகையும் இருந்தது - என்ற வரிகளில் உறைந்திருக்கும் இறுக்கம் நாட்டை இழந்து துயரைச் சுமக்கும் பெண்களின் அடையாளம்.


'ஒரு தேசத்துக்காகக் கடலைத் தந்த/ எனது கண்களைப் போன்று/ அவர்கள் கண்களும் பூமிக்கே தாழ்ந்திருந்தது என்ற வரிகளுங் கூட, அத்துயரின் பிரமாண்டமான வடிவத்தை ஒரு சில வார்த்தைகளால் சொல்லிச் செல்வது." - குட்டிரேவதி ('ஆண்குறிமையப் புனைவைச்சிதைத்த பிரதிகள்') Kutti Revathi 


இவ்வாறே ஞானசூரியும்  'புன்னகைக்கும் ஒவ்வோர் முகத்திலும்/ வலியின் ரேகை பாதாளம் பாய்கிறது' என்னும் போது  வெவ்வேறு அகதிதேசப் புன்னகைகளும் ஒருசேர அதளபாதாளம் பாய்வன ஆகிவிடுகின்றன.


*


"உன் பாட்டனின் மூஞ்சியில்/ செத்த மாட்டீரலைச் சுட்டுத் தின்றுவிட்டு/ என் பாட்டன்விட்ட/ குணமும் மணமும் நிறைந்த குசுவிலிருந்து/ எடுத்துக் கொண்டிருக்கிறேன்/என் அசலான கவிதைக்கான/ கச்சாப் பொருட்களை." - ம.மதிவண்ணன் Mani Mathivannan 


"தத்துவார்த்தப் பின்புலத்திலிருந்து சாதியத்தின்

வேர்களைக் கோபத்தோடு அசைத்துப் பார்ப்பவை

ம.மதிவண்ணன் கவிதைகள்."


"இதற்கான கவிதைமொழியைக் கவனியுங்கள். அருள்

பாலித்தல்,உபதேசம்,அபயம், ஆக்கினை,ஸ்மிருதி

முதலிய பிராமணைத்துவச் சொற்கள் ஒரு பக்கம்;

இதற்கு முரணாக வெளிப்படுகின்ற சொற்கள் எவை?

குணமும் மணமும் என்ற வழமையான தொடரோடு 'குசு'என்ற சொல் செய்கிற வேலை என்ன? இத்தகைய கவிதை எழுதுவதற்குரிய மொழிச்சாதனத்தை மனத்திலாக்கிக் கொள்ளவேண்டும்." - தி.சு.நடராசன்

('கவிதை என்னும் மொழி')


ஞானசூரி தனக்கான மொழியை எங்கெங்கிருந்து

எல்லாம் எடுத்துக்கொள்கின்றார்:


"பிரபஞ்சத்தின்/ ஒவ்வொரு துகள்களுக்குள்ளும்/ என்

கவிதைக்கான சொற்களை / ஒளித்து வைத்து/

வேடிக்கை காட்டுகிறது மொழி."


"களமாடிக் காலிழந்து /ஒண்டிக் குடித்தனமாய்/

ஒடுங்கிப்போன/ ஒற்றைக்கால் அண்ணனின்/ மேனியில் விளாசிய/ பலநூறு கசையடித் தழும்புகளில்/ எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்/ என் மொழியை"


*


ஆதிவாணியரும் (மாற்றுப் பாலினத்தார்) ஏதிலியரும்

அன்பின் அரவணைப்புக்கு ஏங்கிக்கிடப்போரே.


"நடு இரவில்/ திடுக்கிட்டெழும் குழந்தையைப்போல்/

அலறியெழுபவனுக்கு ஆதுரமான/ ஒரு சொல்

தேவையாயிருக்கிறது


" விழவில் தப்பிய செங்கட் சேய்/ கொளுவிய கூறினும்

ஒழுகாது அலமர/ஒருதாய்த் தேடி உவந்து/ பெருமடி

புதைக்கும் பெற்றித்தே தோழீ! - பெருஞ்சித்திரனார்

('நூறாசிரியம்' - நினைவிலிருந்து)


திருவிழாக் கூட்டத்தில் தாயைப் பிரிந்தே தப்பிய குழந்தை யார் தேற்றுதலுக்கும் அமைதியடையாது அதற்கப்பால் அன்னையைக்கண்டதும் ஓடோடி வந்தவள் மடியில் முகம்புதைக்கும் தன்மையே போல..


"எத்தனை / வசந்த காலம் வந்தென்ன/ ஒரு போதும்

துளிர்ப்பதேயில்லை/ பட்டமரம்"


"ஒரு /பச்சிலையின் துளிர்ப்பைப் போல்/ நம்பிக்கை

அளிக்கும் /ஒற்றைச் சொல்லைக் / கேட்கும் நாளே/

அகதிகளின் வசந்தகாலம்


*


அடைக்கலமாகிய தேசத்தின் தேர்தலுக்கு அவர்கள்

பகடைகள் ஆக்கப்படுவதையும்: மக்களின் சிறு வாழ்வையுங் களவாடும், ஆண்டுமுழுதும் பறக்கும் தேசமன்னர் மாதவிலக்கு நாட்களின் எண்ணிக்கையில் மட்டும் தேசத்தில் இருப்பதாகச் சொல்லப்படுவதையும் சுட்டாமல் விட்டாரில்லை.  நம்மனச்சான்றை உலுக்கி முகத்தில் அறையும் நிகழாய் நம்மில் குற்ற உணர்வைப் பற்றவைக்கின்றது 'நாடிலி' அதனதன் பேசுபொருளை நம்முள் தொற்றவைத்துக் கடத்தவல்ல கவித்துவமும் வாய்க்கப் பெற்றுள்ளதே ஞானசூரியின் கவிதைமொழி.


 இன்னமுங் கூட தம்மைத் தாமே செதுக்கிச் செதுக்கிச் சிற்பிக்கவும் அவர்களாலும் இயலும். நாளாந்தமும் பதைபதைப்பான பாதுகாப்பின்மையில் உழல்தரும்  அத்தகு ஏதிலிவாழ்வில் ஆதுரமான அரவணைப்பை நாமும் அவர்கட்க்கு வழங்க முற்படுகையில் பத்திநாதன்களும் ஞானசூரிகளும் விஸ்வரூபித்தே விகசிப்பார்தாமே? (பத்திநாதன்களும் Pathi Nathan 

இங்கில்லாவிடிலும் எம்மூடேதானே அவர்கள் இருப்பும்!)


*


இவ்வாசிப்பின் பிரதியில் இறுதி முத்தாய்ப்பாக

ஒரு தொகுப்பாக்கக் கவிதை:


நமோ நமோ ததாகதா!

~~~~~~~~~~~~~~~~~

 

"போதி மரத்தின் நிழல்/ இருள்மண்டிக் கிடக்கிறது/ஒன்று/அவ்விடம் விட்டு விலகு/ இல்லையேல்/ நிழலை/வெட்டி வீழ்த்து.

அச்சமோ/ அழுகையோ /ஏதோவொன்று/ஒரு முறையாவது/ புத்தனின் கண்கள் திறந்து மூடுவதைப் / பார்த்துவிடும்/ அவாயெனக்கு"


"குறுநுண் பெரும்புயல் அசைத்திருந்தது/ வேம்பின்

கிளையில் முளைத்திருந்த காக்கைக் கூட்டினை.../

அடுத்தடுத்துக் கிளையுரசி குருதித் தோய்வோடு/

இறையாண்மை நதியில் வீழ்ந்திருந்த/ குஞ்சிற்குப்

புலியின் கண்கள்.


இறந்து காய்ந்திருந்த/ தவளையைத் தின்ற வாயோடு

பாய்ந்து நீந்திக்/ கவ்விப் பிடித்திழுத்துச் செல்கின்ற/

நாய்க்கு/ அச்சு அசலாய்ப் புத்தனின் கண்கள்"


"லட்சம் உடல்களில் ஓற்றை மரணம்/

ஆம் ஒற்றை உடலின் ஒரு லட்சம் மரணம்/

நமோ புத்தா"


"நரமாம்ச இரைவேட்டைச் சிங்களப் புத்தனுக்கு 

எதிரான  வியூகத்தில் சைவப்புலிகள்

காவி ஆக்டோபஸோடு கைகோத்த முரண்நகை!

நமோநமோ ததாகதா"

(சுகன்யா ஞானசூரி *  த.விஜய்ராஜ்  * ரமேஷ் பிரேதன்  *பொதிகைச்சித்தர் *)


Suganya Gnanasoory.  Vijayaraj Cholan. Ramesh Predan


#EXILE.


 

2 comments:

  1. மகிழ்ச்சி. மதிப்புரையானது நூலைப் படிக்கும் ஆவலை மிகுவித்துள்ளது.

    ReplyDelete