Monday, March 16, 2020

பூமிப்பந்தின் நாஸ்டால்ஜியா மனம்

பூமிப்பந்தின் நாஸ்டால்ஜியா மனம்!
***************
வான்பாதைகள் நடைபாதைகள்
சனம் கூடும் பொதுவிடங்கள்
வெறிச்சோடிக் கிடக்கின்றன.
பொருளாதாரத்தின்
தேவைகளும் தேக்கங்களும்
இடத்திற்கொன்றாய் மாறுபட்டிருக்கிறது.
உற்பத்தியாளர் நுகர்வோர்க்கிடையில்
பெருத்த வெற்றிடம் ஒன்று இருக்கிறதுதானே?
வீசும் காற்றில் விசம் பரவட்டும் என
அறம் பாடிய தமிழ்க்கவியின் கூற்று
எதிரொலிக்கிறது என் செவிப்பறைக்குள்.
கவிகள் ஒரு தீர்க்கதரிசிகள்.
அபரிமிதமான ஆக்கமும் அழிப்பும்
நுண்ணிய ஒவ்வொன்றிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
அறிவார்ந்த சமூகத்தின் பெயர் சூட்டல்கள் அச்சுறுத்தலாம்
அச்சமே பெரும் மூலதனம்
அச்சப்படாதீர்கள்....
காலவெள்ளத்தில் அனைத்தும் நீர்த்துப்போகும்.
கரோனாவிற்கு
முன்பும் பல கொள்ளை நோய்களும்
பேரழிவுகளும் வந்தனதான்.
இனியும் வராதென்பதும் நிச்சயமில்லை
உலகத்தின் சமநிலைப் பேணல்
என சமாதானம் கூறிக்கொள்ளும்
அற்ப மனிதர்களோ
ஒன்றை விளங்கிகொள்வதேயில்லை.
நாஸ்டால்ஜியா மனம்
அனைத்துக்கும் பொதுவானதொன்று.
இந்தப் பூமிப்பந்து
பழைய இடத்தில் தன்னை
இருத்திப் பார்க்க எத்தனிக்கிறது.

- சுகன்யா ஞானசூரி
16/03/2020.

1 comment:

  1. சிறப்பு

    கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!
    http://www.ypvnpubs.com/2020/03/blog-post_15.html

    ReplyDelete