Monday, January 20, 2020

சிறீலங்காவின் தேசியத் தற்கொலை - பிரமிள்

இதுவொரு தாமதமான வாசிப்புதான். ஆனால் பிரமிளை கவிஞனாக, கறாரான விமர்சகனாக அறிந்திருந்த எனக்கு இந்த நூலை வாசித்த பிறகு சிறந்த சமூக நோக்குள்ள படைப்பாளனாகவும், கட்டுரையாளனாகவும் எனக்குள் அறிமுகமாகியுள்ளார். தமிழ்த்தேசியம், திராவிடம், மார்க்சியம் போன்ற பார்வைகளிலிருந்து இலங்கையின் தமிழ்-சிங்கள இனமுறுகல் எவ்வாறு பெரும் பகையாக மாறியது, அவற்றிற்கு காரணியானவர்கள் யார்? அதில் குளிர்காய்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என 1984 வரையான காலகட்டம் வரை சட்டகப்படுத்தியிருக்கிறார்.

இலங்கையின் பூர்வகுடிகள் யார் என்பதில் துவங்கி வரலாற்று ரீதியாக நிறுவுவதும், இலங்கைத் தமிழர்-மலையகத் தமிழர்-சிங்களவர் வாக்குவங்கிகள், இவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் தோற்றுவிக்கப்பட்டதன் காரண காரியங்களும், விஜயனின் வருகையில் ஆரம்பித்து ஈழ ஆயுதப் போராளிகள் உருவாகிய காலங்களுக்கிடையிலான காலகட்டத்தை சிறிய நூலுக்குள் இரத்தினச் சுருக்கமாக சொல்லியிருக்கிறார்.

1984 க்கு பிறகு நூல் விரிவாக்கம் கண்டதா தெரியவில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் வரைமட்டுமல்லாது இன்றும் புத்த பிட்சுகளுக்கு அச்சப்பட்டே சிங்கள ஆட்சியாளர்கள் தமிழின விரோதப் போக்கை கைக்கொள்கின்றனர்.

மதம் மக்களுக்கான அரசியலை சீரழிக்கும் ஒரு லாகிரி.

- சுகன்யா ஞானசூரி
20/01/2020

Sunday, January 19, 2020

துரோகங்களின் சதிராட்டம்

புள்ளிகள் கரைந்தபொழுது - ஆதிலட்சுமி சிவக்குமார்

துரோகங்களின் சதிராட்டம்.
*****************************

நம்பிக்கைத் துரோகங்களால் வீழ்த்தப்படும்போது அது தரும் வாதை வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஒன்று. 2009ல் எமது தேசம் வீழ்த்தப்பட்டது போது அடைந்த அதே வேதனையும், மனவுளைவும் 2019 முடிவில் எனது தொழிலில் நான் வீழ்த்தப்பட்ட போதும் உணர முடிந்தது. தீ விபத்து ஏற்பட்ட அந்த இரவில் (எனக்கு மகவு பிறந்து ஒரு வயதாக இருக்கும் இரு தினங்களுக்கு முன்னர்) உயிரைக் துச்சமாக நினைத்து நிறுவனத்தைக் காப்பாற்றி எனது தனித்துவத்தை, தரத்தை நிரூபித்தாலும் அந்த தீ எனது உடலில் கொடுத்த எரிச்சலைக் காட்டிலும் நம்பிக்கைத் துரோகத் தீ மிகவும் எரிச்சலாக இருக்கிறது. சிறியவர்கள் பெரியவர்கள் என்கிற பாகுபாடு மட்டும் துரோகமிழைப்பவர்களில் இருப்பதே இல்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. தற்கொலை ஒரு கோழைத்தனம் என நண்பர்களுக்கு அறிவுரை சொன்னாலும் இப்படியான சூழலில் அது எப்படி எழுகிறது என்பதை அறியும் போதுதான் ஊருக்கு மட்டும்தானா உன் உபதேசம் என மனம் அதைத் தவிர்க்கச் செய்தது வாசிப்பு என்பதைக் காட்டிலும் அன்பான ஆதரவான வார்த்தைகள் அவசியம் என்பதை உணர முடிந்தது. அப்படியான அன்போடும், ஆதரவோடும், தன்னம்பிக்கையையும் எனக்குக் கூறிய முகநூல் அன்புகளுக்கும், உள்பெட்டியில் உரையாடிய நட்புகளுக்கும், அலைபேசிய அரசெழிலன் ஐயா, ஓவியர் புகழேந்தி ஐயா போன்றவர்களுக்கும் பேரன்பும் நன்றிகளும். என்ன செய்வது அனைத்தையும் கடந்துதானே செல்ல வேண்டும். இதுவும் கடந்து போகும் என்பது உண்மைதான்.
*****************************

எந்த ஒன்றையும் வாசிக்க இயலாத மனநிலையில் இருந்த என்னிடம் ஆதிலட்சுமி சிவக்குமார் அவர்கள் எழுதிய "புள்ளிகள் கரைந்தபொழுது" நாவலை அனுப்பி இதை வாசிங்க தம்பி உங்கட மனத்துயர் இதன் கீழ் சிறு புள்ளியாகும் என்றார் ஓவியர் புகழேந்தி ஐயா. வாசித்து முடித்த பிறகு இது எவ்வளவு உண்மை என்பதை உணர்ந்தேன்.

புள்ளிகள் கரைந்தபொழுது நாவல் 2009 ல் தோற்கடிக்கப்பட்ட ஈழத் தமிழினத்தின் பாடுகளை செல்வராசா எனும் சாமான்ய கதாபாத்திரத்தினூடாக செல்வபுரத்தில் துவங்கி நந்திக்கடலில் மெளனிப்பது வரையான காலவெளிக்குள் நிகழ்ந்த அவலங்களை இரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்துகிறது.

செல்வராசாவை நம்பி வழிகளில் இணையும் இரண்டு மூன்று குடும்பங்களையும் உள்ளடக்கி ஒவ்வொரு ஊராக இடம்பெயர்வதன் வலிகளையும் வேதனைகளையும் கண்முன்னே காணும் அவலங்களையும் சுமந்துகொண்டு நந்திக்கடலில் இராணுவப் பகுதிக்குள் தன்னை நம்பி வந்தவர்களையும் சிக்க வைத்துவிட்டோமோ எனும் கையறு நிலையில் நிற்கும் செல்வராசா ஒரு குறியீடாகவே எனக்குத் தோன்றுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து 1995 ல் வன்னிக்கு இடம்பெயர்ந்த செல்வராசா கிளிநொச்சியிலிருந்து சற்றுத் தொலைவில் கண்டி வீதியில் செல்வபுரத்தில் ஒரு வீட்டை கடன் பட்டு கட்டிமுடித்து வாழ்ந்த நிலையில் மீண்டுமொரு இடப்பெயர்வு மனச்சிதைவுகளை ஏற்படுத்துகிறது. நாவலின் ஆரம்பத்தில் வருகின்ற பூவரச மரத்தின் காட்சிகளும் வர்ணனைகளும் பெருமாள் முருகனின் மாதொருபாகனை நினைவுபடுத்தினாலும் இரண்டும் வேறு வேறு களம்.

விமானங்களின் வகைகளையும், குண்டுகளின் வகைகளையும், வகைதொகை இல்லாமல் அழிக்கப்பட்ட சனங்களையும், சிதறிக்கிடந்த உடலங்கள், அழக்கூட நேரமின்றி சடலங்களை போட்டது போட்டபடியே விட்டுவிட்டு ஓடும் மனிதர்கள், இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்குள் நிலவுகின்ற ஒற்றுமைகள், வேற்றுமைகள், பொருள் இழப்பு, இடப்பற்றாக்குறை, அரசியல் பழிதீர்ப்புகள், சமாதான காலம் ஏற்படுத்திய மனமாற்றம், அரசியல்வாதிகளின் சுகபோக வாழ்வு, காட்டிக்கொடுத்தல், துரோகத்தின் சதிராட்டம் என மனசை கனதியாக்கும்படியாகச் செய்கிறது. இடையிடையே கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலாமல் மூடி வைத்துவிட்டு மனதைக் திடப்படுத்திக்கொண்டே வாசிப்பை தொடர முடிந்தது என்றால் மிகையில்லை.

"நான் அழியலாம்; நாங்கள் அழியக்கூடாது" என்ற கூற்றுக்கமைய ஒரு வரலாற்றுச் சம்பவத்துக்குள் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை கூறிச் செல்வதினூடாக அடுத்த தலைமுறைக்கு எமது வாழ்வின் துன்பியல் நிகழ்வுகளை அறியத்தந்து ஆவணமாக்கியிருக்கிறார். இந்நாவலை ஒவ்வொருவரும் தவறாமல் வாசிக்க வேண்டும். ஏனெனில் இதுவொரு நேரடிச் சாட்சியம்.

- சுகன்யா ஞானசூரி
19/01/2020.

ஆசிரியர்: ஆதிலட்சுமி சிவக்குமார்
பதிப்பகம்: தோழமை
விலை: ₹250.