Sunday, October 21, 2018

ஒடுக்கப்பட்டவர்கள் - தெணியான்




ஈழத்து எழுத்தாளர் திருமிகு தெணியான் அவர்கள் எழுதி பல்வேறு சஞ்சிகைகளில் வெளிவந்த 25 சிறு கதைகள் அடங்கிய தொகுப்பு. 1967 துவக்கம் 2006 வரையிலான காலகட்டத்தில் எழுதப்படவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட கதைகளே "ஒடுக்கப்பட்டவர்கள்" தொகுப்பு. நாற்பதாண்டு கால இடைவெளியில் கால மாற்றத்தில் சாதியம், சாதிய ஒடுக்குமுறைகள் பற்றி ஆவணமயமாக்கப்பட்ட சிறப்பான தொகுப்பு. ஈழத்தின் ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்வை பேசுகிறது. யாழ்ப்பாணத்து சாதியவாதிகளின் திமிர்த்தனத்தை ஒவ்வொரு கதையிலும் காண முடிகிறது. புலிகள் காலத்தில் சாதியம் முற்றாக அழிந்து போகாமல் வேறு வடிவில் வலம் வந்த விடையங்களை சில கதைகள் சுட்டுகின்றன. எளிமையான சொல்லாடல்கள், இயல்பான கதை சொல்லும் முறை கதைகளை தொய்வின்றி நகர்த்துகிறது.

"தீண்டத்தகாதவர்கள்" எனும் தொகுப்பினை பாரதி புத்தகாலயம் வெளியீடாக திருமிகு ஈழத்து தலித் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான சுகன் அவர்கள் தொகுத்திருந்த தொகுப்பில் தெணியான் அவர்களின் இரு சிறுகதைகளை வாசித்திருந்தேன். அந்த இரு கதைகளும் மனதில் ஏற்படுத்திய சலனத்தை " ஒடுக்கப்பட்டவர்கள்" தொகுப்பு தெளிவு படுத்தியது என்றால் மிகையாகாது. ஈழத்து தலித் எழுத்தை ஆய்வு செய்ய முனைபவர்களுக்கு இந்த தொகுப்பு ஒரு வரப்பிரசாதம் என்பேன்.

நூல்: ஒடுக்கப்பட்டவர்கள் 
ஆசிரியர்: தெணியான்
மொத்தப் பக்கம்: 200
வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகக் கடை
விலை: ₹400

(குறிப்பு: நூலகம்.ஒர்க் எனும் இணையத்தில் பிடிஎப் வடிவிலும் கிடைக்கிறது)

தோட்டியின் மகன்




மண்வெட்டி, வாளி, மலக்கிடங்கு என வாழும் இசக்கி முத்துவின் மரணம் மகன் சுடலை முத்துவை தோட்டி ஆக்கிவிடுகிறது. ஆனால் சுடலை முத்துவிற்கு தோட்டியாக வாழ்வதில் விருப்பமில்லை. அவனது எண்ணங்கள் வேறுபடுகின்றது. தோட்டிகளின் கூட்டத்திலிருந்து தனித்தே வாழ்கிறான். கடற்கரை பகுதியை சேர்ந்த தூப்புக்காரி வள்ளியை திருமணம் செய்து ஆண்குழந்தை பெற்றெடுக்கிறார்கள். மோகன் என பெயர் சூட்டப்பட்டு தோட்டியின் மகன் என தெரியாதபடி க்கு வளர்க்கின்றனர் சுடலை முத்துவும்-வள்ளியும். காலம் அப்படியேவா இருந்து விடும்? இவர்களின் கனவுகளை நிராசையாக்கி விடுகிறது.

வைசூரி, காலரா போன்ற கொடிய நோய்கள் நிகழ்வுகளின் காலத்தை தெளிவாக புலப்படுத்தும் வேளையில் தோட்டி களின் வாழ்வை நிர்மூலமாக்கி விடுகிறது. தோட்டி களை ஏய்த்து பிழைப்பு நடத்தும் ஓவர்சீயர், அவருக்கு மேலுள்ள முனிசிபல் அதிகாரி என அரச அடக்குமுறையாளர்கள். தோட்டி கள் பள்ளிக்கூடம் சென்ற வரலாற்றையும், மோகனை பள்ளியில் சேர்க்க சுடலைமுத்து செய்த தியாகங்களும், இழப்புகளும் அடுத்த தலைமுறை வாழ்வுக்கான மூலதனம். ஒடுக்கப்படுபவர்களுக்கு கல்வி கிடைத்தால் அது ஒடுக்குவோருக்கு எதிராக சுட்டுவிரல் நீட்டும் என்பதை ஒடுக்கும் வர்க்கம் தெரிந்தே வைத்திருக்கிறது. இன்றைய நீட் கல்விமுறை நவீனப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறையின் பழைய வடிவம் என்பதறிக.

தோட்டியாக வாழ விரும்பாத சுடலைமுத்து சுடுகாட்டில் காவலாளி வேலைக்கு மாறுகிறான். காலரா நோய் உச்சமடைந்து நேரம் இரவு பகலாக சிறியவர் முதல் பெரியவர் வரை தோட்டிகள் முதல் எசமானர்கள் என பிணங்கள் வந்துகொண்டிருந்தது. மரணங்கள் வாழ்தலின் உன்னதத்தினை உணர்த்துகின்றன. காலரா சுடலை-வள்ளி தம்பதியரையும் காவு வாங்கிவிடுகிறது. மோகன் மண்வெட்டி, வாளி தூக்கி மலக்கிடங்கு செல்கிறான். காலம் வெகு வேகமாக சுழன்று விடுகிறது. மோகன் சுரண்டப்படும் மக்களின் ஒற்றைக் குரலாய் ஓங்கி ஒலிக்கின்றான்.

ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு மாபெரும் பேரணியை நிகழ்த்துகின்றனர். தோழர்களின் சிவப்பு மாலைகளை தோளில் சூடி, சிவப்பு கொடியை கையிலேந்தி பேரணிக்கு தலைமையேற்று மோகன் கம்பீரமாய் முன்னால் வருகிறான். தூத்துக்குடியில் நிகழ்ந்தது போலவே அதிகார வர்க்கம் துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறது. நான்கில் ஒரு பங்காக கூட்டம் குறைகிறது. இப்போதெல்லாம் சம்பளத்தினை எண்ணி வாங்குகிறார்கள். உரிமைகளுக்காக போராடுகிறார்கள். போராட்டம் இல்லையென்றால் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகள் கிடைக்காது என்பதை சம்மட்டியால் அடித்தது போல் சொல்கிறார். மழை கரைத்து செல்லும் அந்த மண் மேட்டில் சிவப்பு மாலை வெளித்தெரிகிறது. இந்த குறியீடு கதையின் முடிவை வாசிப்பவர்கள் உணர்ந்து மன கொந்தளிப்பை உருவாக்கி விடுகிறது. மனித மாண்பினை பறைசாற்றுகிறது. மனம் அலைக்கழிப்புக்கு உள்ளாகிறது. மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

தமிழில் இதுபோன்ற ஒரு புரட்சிகர சிந்தனையை விதைக்கும் சிறந்த நாவல் வாசித்த நினைவு இல்லை. அதியற்புதமான சிவப்பு சிந்தனையை விதைக்கும் எழுத்தை தந்த மலையாள எழுத்தாளர் தகழியாருக்கும், தமிழில் மொழி பெயர்த்த சுந்தர ராமசாமி அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

நூல்: தோட்டியின் மகன்
ஆசிரியர்: தகழி சிவசங்கரன் (தமிழில் சுந்தர ராமசாமி)
மொத்தப் பக்கம்: 176
வெளியீடு: காலச்சுவடு
விலை: ₹175.

Tuesday, October 9, 2018

பின்நவீனத்துவம்-புலம்பல்

சங்க இலக்கிய புரிதலுக்கு பள்ளியில் கோனார் நோட்ஸ் போடாமல் நேரடியாக விளக்கப்படுத்தியிருந்தால் பின்நவீனத்துவ கவிதைகளின் புரிதல் பற்றிய முறைப்பாடுகள் எழாமல் இருக்கும் எனக் கருதுகிறேன். பின்நவீனத்துவம் பற்றி நாம்தான் தேடித் தேடி வாசித்து புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் நாம் விளக்கவுரைகள் கோரி நிற்போமாயின் சங்கம்-நவீனம்-பின்நவீனம் போன்றவற்றிற்கு இடையிலான இடைவெளிகளின் நிலையை இன்னொரு புதிய இசத்தின் தோற்றுவாய்க்குள் வெற்றிடத்தை உருவாக்கும் துர்ப்பாக்கியத்தினை தமிழ் மொழி ஏற்கும்.

சங்கத்துக்கு பிறகு நம்மிடம் சொல்லும்படியான காலம் இல்லை. மேலைநாடுகளில் இருந்துதான் நாம் இன்னும் ஒவ்வொரு இசங்களையும், கோட்பாடுகளையும் விவாதித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். புதுக்கவிதைகள் புரிந்த அளவிற்கு தற்காலக் கவிதைகள் புரியவில்லை என்னும் கூற்று ஆழமற்ற, மேம்போக்கான வாசிப்புகளும், அனைத்துக்கும் விளக்கம் கோரி நிற்கும் மனமே.

குழுவாத சச்சரவுகள், படைப்பாளர்கள் மீதான தனிநபர் தாக்குதல்களும், ஆரோக்கியமற்ற விமர்சன பார்வைகள், குழப்பங்கள் சிறந்த படைப்புகள் புதியவர்களை சென்றடைவதிலும் தேக்க நிலையை அடைகிறது.

முயற்சித்தால் முடியாது என எதுவுமில்லைதானே?

- சுகன்யா ஞானசூரி
07/10/2018