Sunday, January 15, 2017

மேய்ச்சலுக்குச் சென்றதில் மற்றபடி குறையொன்றுமில்லை...

பத்தாண்டுகளாக முயற்சி செய்து ஏதோ சில காரணங்களால் செல்ல முடியாமலே போனது. இந்த வருடமும் செல்வதற்கான முயற்சிகளை எடுத்தபோது குழந்தையின் உடல்நலம் தடுத்தது. இரண்டு தினத்தின் பின்பாக இன்றுதான் நிறைவேறியது 40வது புத்தகச் சந்தைக்கு செல்வதற்கு. இந்நிகழ்வுக்கு செல்ல பக்க பலமாக இருந்து என்னோடு கூட வந்தவர் முனைவர் Manikandan Thirunavukkarasu அவர்கள்.
எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் அவர்களோடு.(மேலே)

எழுத்தாளர்கள் லக்ஷ்மி சரவணக்குமார் மற்றும் கார்த்திகைப் பாண்டியன் ஆகியோரைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தோழர் கா.பா அவர்கள் தனது நூல்களுக்கு எனக்கு சிறப்புக் கழிவு செய்து தந்தது மறக்க முடியாத தருணம்.
எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன் அவர்களோடு(மேலே)

அகரமுதல்வன், பெருமாள் முருகன் மற்றும் சரவணன் சந்திரன் போன்றவர்களை சந்திக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.

ஒரே நாளில் பாதிக்குப் பாதி அரங்கங்களை மட்டுமே பார்க்க முடிந்தது.

வாங்க வேண்டுமென பட்டியலிட்டு எடுத்துச் சென்றவற்றில் சிலவற்றை வாங்க இயலாமல் போனதும், எதிர்பாராத சில நூல்களை வாங்கியதுமென 18 நூல்களை வாங்கியது கண்டு கொஞ்சம் பிரமிப்பாக உள்ளது.
முனைவர். மணிகண்டன்.தி மற்றும் எச்.டி.எப்.சி வங்கியின் துணை மேலாளரும் நண்பருமான பிரபு (நடுவில் நிற்பவர்) ஆகியோரோடு.

வாசிப்பாளர் அத்தனைபேரும் பெரிய தனவந்தர்கள் இல்லை என்பதை நினைவில் கொண்டு பதிப்பக நண்பர்கள் நூல்களுக்கான விலையினை நிர்ணயம் செய்ய வேண்டுகிறேன். ஏனெனில் உள்ளூர்வாசிகளைக் காட்டிலும் வெளியூர்வாசிகளே செலவு செய்து வருகிறார்கள் என்பதை இங்கு கண்கூடாய்க் கண்டேன்.

மேய்ச்சலுக்குச் சென்றதில் மற்றபடி குறையொன்றுமில்லை...

- சுகன்யா ஞானசூரி
15/01/2017

Sunday, January 1, 2017

கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க


"சக மனிதர்களின் குறைகளைப் பேசாமல் நம்முடைய நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் நம்மைப் பின்பற்றியும் சிலர் உருவாகக்கூடும்."(வி.சி.வில்வம்).

ஒரு சாமானிய நாயகனின் பெயர் சரவணன், நாயகியின் பெயர் கோமதி. நாயகன் பெரியாரிய சிந்தனையாளர். நூல்கள் மீது தீராக் காதலன். நாயகி பிறக்கும்போது சில இருதய நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர். தொடர் சிகிச்சைகள் பெற்றும் சரியாகவில்லையென கைவிடப்படுகிறார்.

நாயகன் நாயகி நிலையறிந்து உதவ முன்வந்து திருச்சி, மதுரை, சென்னையென பல ஊர்களின் சிறப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்கிறார். இப்படி திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஊர் ஊராகச் சுற்றுவதாக ஊராரும் உறவுகளும் தவறாக எண்ணி பிரச்சினை செய்கிறார்கள். (நம் சமூகம் அப்படித்தானே...அடுத்தவர் முதுகில் இருக்கும் அழுக்கை காண்பதில்தான் ஆர்வமாக இருப்பர்...தன் முதுகில் இருக்கும் அழுக்கினை சரிசெய்வதேயில்லை.) இங்கு நிற்க.

என் விசயத்தை முதலில் சொல்லிவிடுகிறேன். புது வருசத்தின் முதல் நாளில் புத்தக வாசிப்போடு துவங்க வேண்டும் என நினைத்திருந்தேன். அதன்படிதான் ஒரு நூலை இன்று வாசிக்கத் துவங்கினேன்...நல்லதொரு துவக்கமாக அமைந்துவிட்டது. ஒரு கட்டுரை மட்டுமே இப்போது வாசித்து முடித்தேன். இன்னும் 29 கட்டுரைகள் இருக்கிறது இந்நூலில். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வெளியீடு கண்ட நூலை நான்கு நாட்களுக்கு முன்னர் என் ஆய்வகத்திற்கு நேரில் வந்து தந்துவிட்டுச் சென்றார். பணம் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார். அவர் யார்? என்ன நூல்? என்பதினை இறுதியில் அறியத் தருகிறேன். "தலைசிறந்த மனிதநேயம்" எனும் முதல் கட்டுரை என்னை இப்படி எழுதத் தூண்டியது. எங்க கிளம்பிட்டீங்க? இருங்க கதைக்கு வருகிறேன் வாங்க... 

சரி, இப்படி சமூகம் தவறாக பேசவும் உடல்நலம் குன்றியிருந்த நாயகி மனதளவிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, இப்பவோ அப்பவோ என இறுதி நாளினை எண்ணியிருப்பவரை திருமணம் செய்வதா எனும் பெற்றோர் மற்றும் உறவுகளின் வசவுகளுக்கு மத்தியில் திருமணம் செய்துவிடுகிறார்.

இருபதாண்டு திருமண வாழ்வினை 26.04.2008 அன்றோடு முடித்துக்கொண்டு விடைபெற்றார். உடலுறவு கொள்வதற்கான உடல் வலிமை இன்மையால் குழந்தைகளும் இல்லை அவர்களுக்கு. புத்தகங்களோடும், காலன் அழைத்துச் சென்றவரின் நினைவுகளோடும் திருச்சி கே.கே நகரில் வாழ்ந்து வருகிறார் திருமணத்தின்மீது நாட்டமற்ற நாயகன் சரவணன் எனும் தோழர் தி.மா.சரவணன் அவர்கள்.

சரி, நூல் பற்றியும் ஆசிரியர் பற்றிய விபரம் அறியலாம் வருக...

நூல்: கிளம்பிட்டாங்கய்யா....கிளம்பிட்டாங்க

ஆசிரியர்: வி.சி.வில்வம்
(இவர் கியூபாவின் மறைந்த புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மீது கொண்ட ஈர்ப்பால் தன் மகளுக்கு கியூபா என பெயர் சூட்டியதோடு நில்லாமல் பெயர் சூட்டியது குறித்து பிடலுக்கு மடல் ஒன்றும் அனுப்பினார். பிடலும் பதில் மடல் ஒன்றினை அனுப்பி பெருமைப்படுத்தினார். புதுக்கோட்டையில் 2015 இல் நடாத்தப்பட்ட வலைப்பதிவர் சந்திப்பில்தான் நான் ஆசிரியரை முதலில் சந்தித்து உரையாடினேன்.)
நூல் வகை: கட்டுரை
விலை: ரூ. 100/-
பதிப்பகம்: கியூபா பதிப்பகம், 41, சுருளி கோயில் 3வது தெரு, திருவெறும்பூர்,
 திருச்சி-620 013. பேச- 98424 87645.

தொடரும்...