Wednesday, July 6, 2016

மரநிறப் பட்டாம்பூச்சிகள்.

பேருந்தில் என் அருகில் நெடுநேரமாய் நெளிந்து கொண்டிருந்தார் ஒருவர். என் கையில் இருப்பது குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவர் கண்களில்...


மனிதனுக்குள் மட்டும்தான் பல குணங்கள் உறைகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைமையானவை. அதிலிருந்து நான்கு வேறுபட்ட மனித குணத்தை "நிழலாட்டம்" உணர்த்துகிறது. "பெருத்த மார்புகளையுடைய ஆணின் கதை" வேறுபட்ட வகைமையானது, இதுவரை யாரும் தொடாதது. ஆற்றாமைகளின் வெளிப்பாடு.  மகளையொத்த வயது சிறுமியைப் புணரும் மனிதன் கன்னியாகுமரி கடலுக்குள் சங்கமமாகிப் போவதும், பாறைகளில் பட்டுத் தெறிக்கும் அலைகளில் சிதறிய நீர்த் துளிகள் நம்மை அசைக்கிறது. "சிலுவை..." புதிய வாசிப்பனுபவம்.

"இணைய மும்மூர்த்திகள்" ஆதர்சங்களின் இடம் குறித்தான நிலைகளை எடுத்தியம்புகிறது. இப்படியும் கதை சொல்லலாம் என்பதை இதனூடு தெரிந்துகொள்ள முடிகிறது.

மரநிற பட்டாம்பூச்சிகளில்தான் எத்தனையெத்தனை வகைமையான பட்டாம் பூச்சிகள். வண்ணங்களைச் சூட்டிக்கொண்டு சிறகசைத்து பறக்கும் அழகாய். இங்கு வண்ணங்களைத் தொலைத்துவிட்டு என்பதைக் காட்டிலும் மறைத்து வைத்துவிட்டு இருண்மையான தனி உலகினிற்குள் தங்கள் சிறகுகளை அசைக்கின்றன. குருதி வாடை வீசத் துவங்கும் அந்த நொடியில் அத்தனை காமமும் அடங்கிப் போகிறது.

காமமும், மரணமும் மனிதர்களை எப்படியெல்லாம் பாடாய்ப் படுத்துகிறது. ஆதிமனிதர்போல் நிர்வாணமாய் இந்த உலகம் இருந்துவிட்டால் காமமும், மரணங்களும் இங்கு அதனதன் போக்கில் இருந்திருக்குமோ என்ற நினைவெழுவது தவிர்க்க இயலாதது. 
இறுதியாக என்னருகில் பயணித்தவர் கேட்டே விட்டார் நீங்கள் வாசிப்பது 
என்னவென்று. 

கார்த்திகைப் பாண்டியனின் மரநிறப் பட்டாம் பூச்சிகள் சிறுகதைத் தொகுப்பு எனக் கூறி அவர் கையில் கொடுத்தேன். வாங்கிப் பார்த்தவர் நல்லா வடிவமைப்புச் செய்துள்ளார்கள் என்றார். கதைகளும் நல்லா இருக்கிறது என்றார் மறுநாள் நூலை தந்துவிட்டு. வாழ்த்துக்கள் தோழர் கா.பா.
தோழமையுடன்
சுகன்யா ஞானசூரி