Tuesday, April 3, 2018

பஞ்சமர்



சாதிய அடக்குமுறைகளும் அதற்க்கெதிரான போராட்டங்களும் இந்த நூற்றாண்டுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. காலத்துக்குக் காலம் சாதியத்தின் கொடுந் நாவுகளுக்கு தாகம் எடுக்கும்போதெல்லாம் கீழ்மக்களின் இரத்தங்களைத்தான் ருசித்து வருகின்றன. இதற்கு மொழி, இனம், நாடு என்ற பாகுபாடுகளின்றி எங்கும் தம் கொடுந் நாவினை நீட்டுகின்றன.

பஞ்சமர்-ஈழத்தின் வடபுலமான யாழ் மாகாணத்தில் 60-70களில் நடந்தேறிய சாதிய அடக்குமுறைகளும் அதற்க்கெதிரான மக்கள் கிளர்ச்சிகளையும் மையமாகக் கொண்ட ஒரு வரலாற்று ஆவணமான நாவல். முதல் பாகத்தினை எழுதும்போதே ஆசிரியர் தலைமறைவு வாழ்வினை மேற்கொள்கிறார். பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைவாசம் அவரை இரண்டாம் பாகத்தினையும் எழுத வைத்திருக்கிறது. பஞ்சமர் முதல் பாகம் இலங்கையின் சாகித்ய மண்டல பரிசினை பெற்றுள்ளது. விருதுகளின் நோக்கத்தினைப் பற்றியும் ஆசிரியர் கூறுவதும் உண்மையாக இருக்கத் தோன்றுகிறது. எழுத்தாளனை அடக்கி வைப்பதற்கான அரசின் உத்திகளில் ஒன்றாக இருக்கக்கூடும்.

80-90களில் பிறந்தவர்களின் பிறப்புச் சான்றிதழில் சாதி எனும் பகுதியில் தமிழ் என்றே இருக்கும். எனது பிறப்புச் சான்றிதழில் அப்படித்தான் உள்ளது. இதற்கு காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சியே. புலிகளின் காலத்தில் சாதியம் முற்றாக ஒழிக்கப்படவில்லை என்றாலும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 2009 களுக்கு பின்னர் மீண்டும் மேற்குலகில் வாழும் அகதிச் சமூகங்கள் தங்களின் உயர்குடிப் பெருமைகளை மீண்டும் சீர்தூக்கிப் பார்க்க முனைகின்றனர். இது ஒரு தகவலுக்காக. வாருங்கள் நாவலுக்குள் போவோம்.

முதல் பாகம்: சின்ன கமக்காறிச்சி சிறு பருவக் கோளாறில் தங்கள் காணியில் குடிமை பார்த்துவரும் தாழ்த்தப்பட்ட செல்லையாவோடு கலந்து ஒரு ஆண் பிள்ளையை பெற்றுவிடுகிறாள். இதை அவள் தந்தைக்கு தெரியாமல் இருக்கும்பொருட்டு அந்தக் குழந்தையை சின்னாச்சி மற்றும் கிருட்டினனிடம் குடுத்துவிடுகிறாள். அக்குழந்தையை குடத்தனைக்குள் வளர்க்கக் குடுத்துவிடுகிறார்கள். பின்னாளில் அந்தக் குழந்தைதான் புரட்சியின் நாயகன் தோழர் குமார வேலனாக அறியவருகிறார். இதற்கிடையில் மாம்பழத்தி எனும் மகளையும் பெற்றுவிடுகிறாள. கோவில் திருவிழாவில் மாம்பழத்தியின் காதலனை (தாழ்த்தப்பட்டவன்) ஆளை வைத்து கொண்டுவிடுகிறாள் சின்னக் கமக்காறிச்சி. மாம்பழத்தியை லண்டனில் அப்புக்காத்தருக்கு திருமணம் செய்துவிடுகிறார்கள். குமாரவேலன் ஐய்யாண்ணன் போன்றவர்களோடு இந்த பஞ்சமர் மக்களுக்குள் புரட்சியின் விதைகளை விதைக்கிறார்கள். குமாரவேலனின் பிறப்பினை சின்னக் கமக்காறிச்சி அறிந்துகொள்கிறாள். எங்கே தன் மானம் மரியாதை போய்விடுமோ என்றும், தங்களின் உயர்வான சாதிப் பெருமைகளுக்கு பங்கம் வந்துவிடுமோ என்றும் நினைத்தவள் குமாரவேலனைக் கொல்ல முடிவெடுக்கிறாள். மக்கள் மத்தியில் மேடையில் குமாரவேலன் பேசிக்கொண்டிருக்கும் போது வடலிக்கரைகளிலிருந்து வெடிக்கும் துப்பாக்கி வேட்டுக்கள் குமரவேலனை பதம் பார்த்துவிடுகிறது. இதோடு முதல் பாகம் முடிகிறது.

இரண்டாம் பாகம்: தாழ்த்தப்பட்ட அந்த பஞ்சமர் மக்கள் நந்தாவில் கந்தசுவாமி கோவிலுக்குள் ஆலயப்பிரவேசம் செய்யும் ஒரு மக்கள் எழுச்சியை மய்யமாகக் கொண்டே நகர்கிறது. ஐய்யாண்ணன், தோழர் குமாரவேலன் போன்றவர்களின் சாணக்கியத்தனம் ஆண்டைகளுக்கு பெரும் கலக்கத்தினை உருவாக்குகிறது. பஞ்சமர் என்ற வாசகத்தினை பெருங்குளம் பிள்ளையார் கோவில் திருவிழாவில் அச்சுவாகனம் ஏற்றிய பால்குடி சண்முகம்பிள்ளை பின்னாளில் மரணமானபோது பஞ்சமர்கள் யாருமின்றி துடக்கு வேலைகள் செய்ய குடியானவர்கள் வராமல்போக மூன்று நாள்கள் நாறிப்போன பிணமாக கிடந்து சொந்த சாதி மக்களால் மூக்கைப் பொத்திக்கொண்டு அமரர் ஊர்தியில் ஏற்றிச் சென்று அடக்கம் செய்கிறார்கள். இதை புதிய முறையென தங்கள் உயர்சாதி பெருமைகளுள் ஒன்றாக கருதிக்கொள்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து திரும்பும் அப்புகாத்தர் செஞ்சட்டைத் தோழராக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் விதமாக வீட்டுக்கு சிவப்புப் பெயிண்ட் அடிப்பதும், சிவப்புக் காரில் பிரயாணிப்பதும், மாம்பழத்தியோடு சிவப்பு உடையில் திரிவதுமென பஞ்சமர்கள் மத்தியில் அப்புகாத்தர் பற்றி உயர்வான மதிப்பீடுகளை உருவாக்குகிறார். நந்தாவில் கந்தசுவாமி ஆலயப்பிரவேசம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஐய்யாண்ணன், தோழர் குமாரவேலன் போன்றவர்களின் சாணக்கியத்தனமான பேச்சினில் அப்புக்காத்தரின் செஞ்சட்டை சாயம் வெளுக்கிறது. அப்புக்காத்தரின் உயர்சாதித் திமிர் வெளிப்படுகிறது. அவரது ஆசையெல்லாம் பார்லிமெண்டுக்கு செல்வதிலையே குறியாக இருக்கிறது. தேர்த்திருவிழாவின் முதல்நாள் யாரும் எதிர்பாராத விதமாக கும்பல் கும்பலாக சனத்திரள் ஒவ்வொரு ஊரிலிருந்து திட்டமிட்டபடி ஆலயப்பிரவேசம் செய்ய வந்துவிட்டனர். சனக்கூட்டத்தினைப் பார்த்த உயர்குடியினர் கோயிலின் கதவுகளை பூட்டிவிடுகின்றனர். விடிந்தால் நந்தாவில் கந்தசுவாமியின் தேர்ப்பவனி. துப்பாக்கி வேட்டுக்கள் வெடிக்கும் சத்தம் மாயாண்டி, ஐய்யாண்ணன் குமாரவேலன் போன்றவர்கள் சரிந்து விழுகிறார்கள். எதற்கும் அஞ்சாதீர்கள் என்னும் வார்த்தைகள் உயர எழுந்து அடங்கி விடுகிறது.

அன்றைய செய்தித்தாள்கள் ஆலயப்பிரவேசம் குறித்து என்ன தலைப்புச் செய்தி வெளியிட்டது என்பதையும் பின்னிணைப்பாக ஆசிரியர் கொடுத்துள்ளார். வீமன் எனும் நாயின் கதாபாத்திரம் இரண்டு பாகத்திலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.

பஞ்சமர் நாவல் தலித்திய நாவல்களின் முன்னோடி என்றால் மிகையில்லை. ஒவ்வொருவரும் தவறாது வாசிக்க வேண்டிய முக்கியமான நாவல்.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:16
தலைப்பு: பஞ்சமர் - நாவல் (இரு பாகமும்)
ஆசிரியர்: கே.டேனியல்
வெளியீடு: ஒரு பிரகாஷ் வெளியீடு
மொத்தப் பக்கம்: 432

2 comments:

  1. அருமையான கண்ணோட்டம்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையில் மகிழ்கிறேன். அன்பும் நன்றிகளும்.

      Delete