Friday, February 16, 2018

ஆதிமுகத்தின் காலப்பிரதி-இரா.பூபாலன்

ஒரு கவிதை வாசிப்பவருக்கு சிறு அதிர்வை உருவாக்கிச் செல்லுமேயானால் அது சிறந்த கவிதையாக வாசிக்கும் மனதுக்கு இருக்கும். ஒரு சிறந்த கவிதை வாசிப்பாளருக்கும் வரிகளுக்குமிடையில் இடைவெளியைக் குறைக்கும் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

இரா.பூபாலனின் "ஆதிமுகத்தின் காலப்பிரதியில்" ஒவ்வொரு கவிதையும் அதிர்வை உருவாக்குகிறது. மனசை பிசைகிறது. இவரது கவிதைகளில் வலி, ஏக்கம், விரக்தி போன்றவைகள் அடிநாதமாக எல்லாக் கவிதைகளிலும் வெளிப்படுகின்றன. இது கவிமனத்தின் வெளிப்பாடா? சமூகத்தின் செயல்பாடுகளா? எனும் கேள்விகள் எழுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது.

இத்தொகுப்பில் தலைப்பில்லாத கவிதைகள் நிறைய விடையங்களை பேசுகின்றன. பெண்கள் மீதும், சிறுவர்கள் மீதும் நிகழ்த்தப்படும் கொடுமைகளைக் கண்டு கவிஞர் மனம் பதை பதைப்பதும், அவைகளை தட்டிக் கேட்க இயலாமையில் கவிதைகளாக அடையாளப்படுத்தும் சாமானிய மனிதன்தான் தானும் என்பதை இக்கவிதைகளை வாசிக்கையில் உணர முடியும்.
"இருளில் மட்டுமே
திரிந்து கொண்டிருந்த
ஓநாய்க் கூட்டங்கள்
வெளிச்சத்தின் ருசிக்குப்
பழகிவிட்டிருந்தன."

"ராமனை விடவும்
ராவணன் மீது
நல் அபிப்பிராயம்
வந்திருப்பது
உண்மைதான்."

"ஆதிப் பிணத்தின் 
மீதுதான்
புதைத்துக் கொண்டே
இருக்கிறோம்
நம்
ஒவ்வோரு பிணத்தையும்."

"தத்தித் தாவும் சாபம்", "போலச் செய்தல்" போன்ற கவிதைகளில் குழந்தையாக மாறிவிடுகிறார். குழந்தைகளை அதிகம் நேசிக்கிறார்.

வாழைப்பழத்தில் ஊசியைச் செலுத்துவது போல் அரசியல் கவிதைகளையும் ஆர்ப்பாட்டமின்றி எழுதி செல்கிறார். "ஆகாயத் தாமரையினடியில் ஒளியும் குளம்" மற்றும் "விதி" ஆகியவை இதில் அடக்கம். விதி டிஜிட்டல் இந்தியாவின் அலைவரிசையின் வேகத்தை பகடி செய்திருக்கிறது.

"காலாதிகாலக் கூறு" கவிதையில் சிலைவழி பெண்களின் நிலையைக் கூறும் நுட்பம் அசல். இக்கவிதையை வாசித்து முடித்ததும் நள்ளிரவில் கதறும் அச்சிலைகளை நீங்கள் காணக்கூடும். அவற்றின் கதறல் காதுகளை செவிடாக்கும்.

"என் ஆதிமுகத்தின் மேல்
தினமொரு முகத்தைப்
பூசிக்கொள்ள வேண்டியிருக்கிறது
உங்களுக்குத் தோதாக"
உண்மை முகங்களை மறைத்து நாளும்,பொழுதுக்குமாக ஒவ்வொரு முகங்களை மனிதர்கள் அணிந்துகொண்டு திரிவதை கூறுகிறார். இன்றைய எதார்த்தமும் இதுவாகத்தான் இருக்கிறது.

எளிமையான வார்தைகளைக் கொண்டு வலிமிகுந்த கவிதைகளை யாத்துள்ளார். இது கவிஞரின் மூன்றாவது தொகுப்பு.

#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல்:2
ஆதிமுகத்தின் காலப்பிரதி-கவிதைத் தொகுப்பு
ஆசிரியர்: இரா.பூபாலன்
மொத்தப் பக்கம்: 95
வெளியீடு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
விலை: ₹70.

- சுகன்யா ஞானசூரி (NV 104)

2 comments:

  1. ஆதிமுகத்தின் காலப்பிரதி. கவிஞர் இரா.பூபாலனின் கவிதைகள் பற்றி சிறப்பான அறிமுகம். நன்றி.

    ReplyDelete