Saturday, April 6, 2019

உயிர் எழுத்தும் நானும்...

உயிர் எழுத்தும் நானும்

நீண்ட நாட்களாக உயிர் எழுத்து இதழில் எனது ஒரு கவிதையாவாது வந்துவிட வேண்டும் எனும் அவா இருந்து வந்தது. கடந்தாண்டு உயிர் எழுத்து நிறுத்தப்படுகிறது என முகநூல் பதிவுகள் வழி அறிந்து மனவருத்தம் கொண்டிருந்த சமயத்தில் உயிர் எழுத்து மீண்டும் வெளிவரும் எனும் அறிவிப்பு அளவில்லாத மகிழ்ச்சியைத் தந்தது. 2013ல் உயிர் எழுத்து இதழை அறிமுகம் செய்து வாசிக்கத் தந்தவர் ஐயா மார்க்கண்டன் முத்துச்சாமி Markandan Muthusamy அவர்கள்.


கடந்தாண்டு உயிர் எழுத்து மறுபிறப்பு எடுத்து இரண்டாவது மாதத்தில் 16/07/2018 அன்று எனது ஏழு கவிதைகளை அனுப்பி வைத்திருந்தேன். நம்பிக்கை இல்லாமல்தான். அந்த ஆண்டுக்கான சந்தாவினை கட்டிவிட்டு, சில புத்தகங்களையும் வாங்கி வரலாம் என நானும், ஐயா மார்க்கண்டன், அண்ணன் மணிகண்டன் திருநாவுக்கரசு Manikandan Thirunavukkarasu ஆகியோருடன் 22/07/2019 அன்று முதல் முறையாக உயிர் எழுத்து அலுவலகம் செல்கிறேன். அப்போதுதான் நான் உயிர் எழுத்து ஆசிரியர் சுதீர் செந்தில் Sudheer Sendhil அவர்களை பார்க்கிறேன். குடோனைத் திறந்துவிட்டு உங்களுக்கு பிடித்த புத்தகங்களை எடுத்துக்கொள்ள சொன்னார்.


அப்போது நடந்த உரையாடல் என்றும் என்னால் மறக்கவே முடியாது. எனது கவிதைகள் குறித்து ஆகஸ்ட் மாதம் இதழில் வெளியாகும் இருக்கும் இதழில் ஒரு பையன் சிறப்பாக கவிதை எழுதியிருக்காரு. அதில் கடைசி கவிதை சின்னதா இருந்தாலும் ஆழமாக இருக்கிறது என மார்க்கண்டன் ஐயாவிடம் அச்சுக்கு போயிருக்கும் இதழின் புரூப்பை தந்து வாசித்துப் பார்க்கத் தந்திருந்தார். இந்தக் கவிதைகளை எழுதிய பையன் இவர்தான் என என்னை அறிமுகம் செய்து வைத்தார். கனவு போலவே இருக்கிறது இன்னும்.


அந்த மகிழ்ச்சியை நொறுக்கும் விதமாக ஏப்ரல் 2019 இதழ் தலையங்கம். மீண்டும் உயிர் எழுத்து தன் இயக்கத்தினை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. இதழ் நடாத்தும் துயரம் என்ன என்பதை தமிழக முகாம்களில் வாழும் ஈழ அகதி மாணவர்களுக்கான "வேர் விடும் நம்பிக்கை" இதழை இற்றைவரை கொண்டுவர இயலாமல் இருப்பதினூடாக நான் அறிந்து கொள்கிறேன்.


உயிர் எழுத்து பலருக்கான முகவரி தந்திருக்கிறது என்றால் மிகையல்ல. அதில் என்னையும் அடையாளப்படுத்தியிருக்கும் உயிர் எழுத்து இனி வராது என்னும் அறிவித்தல் அகதியான துயரத்தில் மீண்டும் ஒரு துயரத்தை தருகிறது.

வேதனைகளோடு
- சுகன்யா ஞானசூரி.

6 comments: