Sunday, April 15, 2018

அவலங்களை அழகியலோடு எழுதும் நிகழ்த்துகலைக் கவிஞன் அகரமுதல்வன்


ஒரு நிலமற்று அலையும் நாடோடிக் கவிஞனின் வலிமிகுந்த வரிகளே இந்த தொகுப்பெங்கும் விரவிக் கிடக்கிறது. அவனிடத்தில் நாம் அழகியல் கவிதைகளை எதிர்பார்த்தல் என்பது அபத்தம். போர்க்களங்களுக்குள் வாழ்ந்தவர்களிடத்தில் குருதி வீச்சமும், குண்டுகளின் புகை நெடியும், கோரமான சிதைவுகளையும் கவிதை வெளிப்படுத்தும். பழைய நினைவுகளில்தான் போர்நிலத்தின் மக்களின் அழகிய வாழ்வை கவிதை வெளிப்படுத்தும். அகரமுதல்வனின் இந்த தொகுப்பில் அழகியல் இருக்கிறது. அது அவலங்களாய் முடிகிறது. ஒவ்வொரு கவிதையும் வாசித்து முடித்ததும் நம் நெஞ்சைக் குத்திக் கிழிக்கும். சில கவிதைகளுக்குள் நுழைதல் காடினமாகவே இருக்கிறது.

முல்லை நிலத்தில் பாலை நிலத்தை காணும் துர்பாக்கியம் எம் தலைமுறைக்கு நேர்ந்துவிட்டது. அதன் ஒரு ஆவணமாகவே நான் இந்த தொகுப்பைப் பார்க்கிறேன்.

"முண்டங்கள் தானிய வயலாய்
நிறைந்த நிலத்தில்
மிருதுவான இரத்தம் நீராவதை
பிள்ளைக்கு சோறூட்டும் போது காட்டுங்கள்"

நிலா சோறூட்டிய எம் பிள்ளைகளுக்கு எம் நிலத்தின் காட்சி சோறூட்டும் கால நிர்பந்தம் ஒவ்வொரு ஈழ தமிழ்ச்சியின் தலையாய கடமையாக நிற்கிறது.

"ஏறிகணைகளின் வெற்றுக் கோதுகளில்
பூக்கன்று பதியமிடும்
யுத்த பூமியின் பிள்ளைகளுக்கு
குண்டுகள் குறித்து கவலையில்லை"

உண்மைதானே யுதங்களை தங்கள் அங்கமாக கொண்ட எம் குழந்தைகள் எப்படி கவலை கொள்வார்கள் குண்டுகள் குறித்து. அவர்கள் அந்த நிலத்தின் கொடிய காட்சிகளைக் கண்டவர்கள் அல்லவா.

"நாடற்றவனாய் வாழ்கிறேன்
நாடற்றவனாய் எழுதுகிறேன்
நாடற்றவனாய் திமிருக்கிறேன்"

எனும் அகரன்

"துயரத்தின் துயரில் நாடொன்று இருந்தால்
அதையே தயாகமென்று சொல்லக் கடவேன்" என்கிறார்.

மேலும் எமக்கான நாடு நிச்சயம் கிடைக்கும் என்பதை இப்படிக் கூறுகிறார்.

"அஸ்தமனமில்லாத தாய் நிலத்தில்
ஒரு நாளில்
என் அம்மாவின் முத்தம்
நாடுள்ளவனாய் என்னை அறிவிக்கும்"

அந்த நாட்டில் கடல் இரத்தம் கலவாத துப்புரவான கடலாய் இருக்கும் எனும் தன் கனவை கூறுகிறார். அப்படியான கடலும், நிலமும் எம் அடுத்த தலைமுறைக்கு கிடைக்ககடவ.

"பேரழிவின் மிச்சமாய்
எல்லா மே மாதமும்
என்னுடல் அகல விரிகிறது"

முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்த ஒவ்வொரு மே மாதமும் எம் நெஞ்சம் விரிவதை தவிர்க்க முடியாது. ஒன்பது ஆண்டுகள் கடந்தோடி விட்டது. யூதர்கள் தங்கள் தங்கள் தேசத்தை சுமந்ததைப் போல், மஹ்மூத் தர்வீஸ் எனும் பாலஸ்தீனக் கவி தன் மொழிகளுக்குள் தேசத்தை சுமந்தலைந்ததைப்போல் இன்னும் எம் நினைவுகளுக்குள்தான் எம் தேசத்தை நாம் பாதுகாத்து வருகிறோம் என்றாவது ஒருநாள் அது மலரும் எனும் நம்பிக்கையோடு. ஆனால் இந்த நூற்றாண்டின் எல்லா நாட்களும் அந்த குரலின் கதறல் கேட்டபடியே இருக்கும்

"கோட்டையின் இருட்டிலிருந்து
யாரோ ஒருத்தி தமிழில்
கதறுகிறாள்
இந்த நூற்றாண்டின் எல்லா நாட்களும்
இப்படித்தான் கேட்கும்".


"இந்த நூற்றாண்டை பிளந்த கோடாரி
முள்ளிவாய்க்காலின் எலும்பு"

முல்லை நிலத்தில் தோன்றிய பாலையின் காட்சிக்கு இக்கவிதைகளே சான்று.

தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்களது முன்னுரை இந்த தொகுப்புக்கு மிகவும் வலு சேர்த்திருக்கிறது.

அகரமுதல்வன் அழகியலோடு அவலங்களை எழுதும் எம் தேசத்தின் நிகழ்த்துகலைக் கவிஞன். தொடர்ந்து எழுதுக தடம் மாறாமல்.


அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:22
தலைப்பு: டாங்கிகளில் சரியும் முல்லை நிலா
ஆசிரியர்: அகரமுதல்வன்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
மொத்தப் பக்கம்: 112
விலை: ₹80

4 comments:

  1. ஒரு நல்ல கவிஞ்ரை அறிமுகம் கொடுத்ததுக்கு நன்றி தம்பி...

    ReplyDelete
  2. கவிஞர் அகரமுதல்வனின் "டாங்கிகளில் சரியும் முல்லை நிலா" - நல்ல நூலறிமுகம் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையில் மகிழ்கிறேன். அன்பும் நன்றிகளும் ஐயா...

      Delete