Saturday, September 30, 2023

தமிழ், தமிழடையாளம்


#நன்னூல் இதழில் வெளியாகியுள்ள தமிழவனின் சிறப்புக் கட்டுரையானது தமிழ்த் தேசியத்தைக் கோருபவர்கள் கூனிக்குறுகி நிற்பதா? அல்லது மார்தட்டிப் பெருமை கொள்வதா? என்ற கேள்வியை முன்வைக்கிறது. சமகாலத்தில் பெரியாரின் தேவை என்ன என்ற கேள்விக்கும் சிறப்பான பார்வைகளை பதிலாக வைத்துள்ளார். பெரியாரை கடவுள் மறுப்பாளராக, பிரச்சாரகராக மட்டுமே குறுக்கிப் பார்க்க வைத்திருக்கிறோம். ஒரு தத்துவவாதியாக, தமிழின் தனித்த சிந்தனையாளராக காணத் தவறியதையும், அறிஞர் அண்ணாவின் "சிந்திப்பீர்" என்ற சொல்லின் குறியீட்டு விளக்கம் இன்றைய மேடைப் பேச்சுக்களில் காணாமல் போனதன் அரசியலில் தனிமனித சிந்தனையற்ற கும்பல் மனப்பான்மைகளின் பெருக்கமும் அதன் உளவியல் வெளிப்பாடுகளை ஜெர்மனியின் மார்க்சிய மனிதாபிமானி உளவியல் நிபுணர் வில்ஹெல்ம் ரைக் எழுதிய 'பாசிசத்தின் கும்பல் உளவியல்' எனும் நூல் கொண்டு ஹிட்லரின் இயக்கத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி விபரிக்கிறார். 


பல்கலைக்கழகங்கள் தமிழரின் இருபது நூற்றாண்டு வரலாறை எழுதத் தவறியதையும், அதனை எழுத அவர்களைப் பணிக்காததும் தவறான கருத்து திரிபுவாதங்கள் தோன்றுவதையும், ஜே.என்.யு போன்ற அறிவுசார் தளத்தைக் கண்டு பாசிசம் பயப்படுவது போல் தமிழகத்தில் எந்தப் பல்கலைக்கழகமாவது இருக்கிறதா? குறிப்பாக தமிழ்ப் பல்கலைக்கழகம் இதனைச் செய்யத் தவறியதை அறிவுஜீவிகளின் குடுமிப்பிடி சண்டைகளும், பதவி மோகங்களும் படுத்தும் பாடுகளினூடாகச் சுட்டிக் காட்டுகிறார். 


பெரியாரின் மண்ணில் சாதியம் மெல்ல மறைந்து வரும் வேளையில் சாதியச் சங்கம் தன்னை அரசியல் கட்சியாக்கி சாதியை மீண்டும் வளர்த்து பெரியார் முகத்தில் கரியைப் பூசியதை சுட்டிக்காட்டும் இடத்தில் நாம் வெட்கப்படுவதைத் தவிர வேறில்லை.  அதேபோல் ஈழ அரசியல் தோற்கடிப்புக்குப் பின்னால் உள்ள வெற்றுக் கூச்சலிடும் வாய்சவடால் தலைமைகளும், கோடரிக் காம்புகளும் காரணகர்த்தாக்களாகியதையும் சுட்டிக்காட்டுகிறார்.


காட்சிப் பண்பாட்டின் குழந்தைகளாக தலைவர்களின் சிந்தனையே நம் சிந்தனை, தலைவர்களின் மேடைப்பேச்சே நம் பொன்மொழி என்ற போக்கை பிரெஞ்சு சமூகவியல் நிபுணர் பியர் பூர்தியூ ஆய்வுகள் கொண்டு விளக்குகிறார். குமரி முதல் சென்னை வரை இந்தப் போக்கு ஒவ்வொருவரிடமும் உருவாகியுள்ளதையும், கர்நாடகத்திலும், கேரளத்திலும் இந்தப் போக்கு மட்டுப்பட்டு தனிமனித அறிவுசார் சிந்தனை வளர்ந்திருப்பதையும் ஒப்பிட்டு விளக்குகிறார். காட்சிப் பண்பாடு நம்மை கேளிக்கை மிகுந்த வாழ்வுக்குள் தள்ளியுள்ளது என்றால் மிகையாகாது.


மொத்தத்தில் பத்துப் பக்கம் கொண்ட இக்கட்டுரை "தமிழ் வாழ்க" என ஒலியெழுப்பிக் கொண்டிராது வளரும் தலைமுறை தமிழ், தமிழ்த்தேசியம் என்பவற்றை பேசுவதற்கு முன்பு தமக்கான வரலாற்றை உண்மையுடன் எழுதிய பிறகு கோரலாம் என்பதை அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறது. சிறந்த இக்கட்டுரையை தவறாமல் வாசியுங்கள்.


- சுகன்யா ஞானசூரி

30/09/2022


இதழ்: நன்னூல்

விலை: ₹100 (தனி இதழ்)

தொடர்புக்கு: 86104 92679, புலன எண்: 99436 24956. 

No comments:

Post a Comment