Thursday, January 7, 2021

திருச்சியில் இலக்கியச் செயல்பாடுகளின் தொய்வு ஏன்?

 

இன்று திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் ஒரு சுவரொட்டி. இலக்கிய தாகம் எனும் இதழ் அறிமுகம் செய்யும் நிகழ்வினை ஒரு அறக்கட்டளை ஒருங்கிணைக்கிறது. திரைப்பட இயக்குநர் சிறப்பு விருந்தினர். நிகழ்வு நேற்றா, இன்றா அல்லது நாளையா என சுவரொட்டியின் நான்கு மூலையைத் தாண்டியும் தேடினேன். நிகழ்விடம், நேரம், நாள் ஏன் ஒரு தொடர்பு எண்கூட இல்லை. ஆனால் கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஆன்மீக அன்பர்கள் அனைவரும் வருக என ஒரு கேப்சன். யாருக்காக இப்படியான நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார்கள்?

திருச்சியில் இலக்கியக் கூட்டம் என்பதே அத்தி பூத்தாற்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இப்போது நிகழ்கின்றன. அதுவும் வெளியூர் (உள்ளூர் ஆட்டக்காரர்களுக்கு மதிப்பில்லை) படைப்பாளர்களாலே சாத்தியமாகிறது. சில வருடங்களுக்கு முன்னால் தமிழ் இலக்கியக் கழகம், கிராமியன், நோயல் இருதயராஜ், சுதீர் செந்தில் என இலக்கியங்களை சோறு போட்டு வாழ வைத்தவர்கள் என நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டு வியப்படைந்தேன். அப்படி சிறப்புற்று விளங்கிய திருச்சி இலக்கிய நிகழ்வுகள் ஏன் இப்படி ஆயின?

கடந்த பத்தாண்டுகளாக திருச்சியில் வசித்து வருகிறேன். ஜோ.டி.குரூஸ், சு.வெங்கடேசன், சமயவேல், பெருந்தேவி, அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி, இனியன் என சில நண்பர்கள் உரையாற்றிய சில நிகழ்வுகளில் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. அதுவும் Markandan Muthusamy ஐயா மற்றும் Manikandan Thirunavukkarasu அண்ணன் போன்றவர்கள் தகவல் அறிந்து அழைத்தாலோ அல்லது உரையாற்ற வருகின்ற நம் நண்பர்கள் தகவல் தந்தாலோ மட்டுமே சாத்தியமாகும். 2019 ல் எழுத்தாளர் கலைச்செல்வி அவர்கள் கூட திருச்சியில் ஒரு இலக்கிய அமைப்பை உருவாக்க வேண்டும் என முகநூலில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அது எந்த நிலையில் இருக்கிறது என தெரியவில்லை. புதுக்கோட்டை வீதி, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், கோவை வசந்தவாசல் போன்றவற்றின் தொய்வற்ற செயல்பாடுகளைப்போல் எல்லா ஊர்களிலும் இலக்கியம் பரவவேண்டும்.

110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பாகவே திருச்சி சார் இலக்கிய அறிவிப்புகள் செல்கின்றன. கவிஞர் Yavanika Sriram தோழரை பிரதம ஆசிரியராகக் கொண்டு இதழ் ஒன்றை கொண்டுவர வேண்டும் என மார்கண்டன் ஐயாவும் மணிகண்டன் அண்ணனும் நானுமாக கடந்தாண்டு முடிவு செய்திருந்தோம். பெருந்தொற்றின் அடைப்பினால் சுணங்கிவிட்டது. அது இப்போது அவசிய தேவையாகவே இருக்கிறது என நினைக்கிறேன். கூடவே மாதாந்திர இலக்கிய நிகழ்வொன்றும் நடாத்த வேண்டும். வெற்றிநடை போடும் தமிழகத்தில், ஐயா எடப்பாடி ஆட்சியில் காவிரிகூட திருச்சியில் தொய்வின்றி பாய்கிறாள். தமிழ் இலக்கியம் பாயும் சேதி இன்பத் தேனாய் நம் செவிகளில் பாய வேண்டாமா தோழர்களே?

- சுகன்யா ஞானசூரி
07/01/2021.

No comments:

Post a Comment