Tuesday, April 7, 2020

அப்பல்லோ

அப்பல்லோ - சுகன்யா ஞானசூரி யின் வாசிப்பிலிருந்து....

அண்டனூர் சுரா மூன்று நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்பு என குறுகிய காலத்திற்குள் பலப் பரிசுகளுக்கும் பாராட்டுக்கும் உரியவராகி வருகிறார். அப்பல்லோ இவரது மூன்றாவது நாவல்.

அப்பல்லோ என்றதும் கிரேக்கத்தின் கடவுளென நம்பப்படும் உண்மையின் கடவுளை சமகாலதினருக்கு நினைவுக்கு வராதபடிக்கு செய்ய சமகால நிகழ்வொன்று சாட்சியம் ஆகிப்போனது. தினம் ஒரு அறிக்கையும், அவலமான கூத்தும் நிகழ்ந்த இடம் அது. இங்கிருந்துதான் அண்டனூர் சுரா தன் கதையை துவக்குகிறார். ஆதி மருத்துவ குடிகளின் அழிவை சொல்ல ஹோமரின் காப்பியங்களின் கதாபாத்திரங்களை நாவலின் கதாபாத்திரங்களாக்கி ராஜா காலத்து கதையில் நம்மையெல்லாம் அழைத்துச் சென்றாலும் பல்வேறு நிகழ்வுகளை, வரலாற்று சம்பவங்களை கதைகளினூடாக வாசிப்பவர்களிடத்து கடத்துகிறார்.

ஆரிய திராவிட யுத்தம் இக்கதையில் பிரதானமாக இருக்கிறது. தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் மந்திர தந்திரங்களை பயன்படுத்தி மன்னனை ஆட்டுவிக்கும் மந்திரவாதிகள் மருத்துவ குடியை வதைத்து அழிக்கின்றனர். வெண்மணி படுகொலையையும், கூடவே ஈழத்தின் இறுதிப் படுகொலையையும் நினைவுபடுத்துகிறது.

பல்வேறு சம்பவங்களை சிறப்பான ராஜா காலத்து கதை வழி சொல்லும் சுராவுக்கு நன்றாக கதை சொல்ல வந்திருக்கிறது. காட்சிகளின் வர்ணனை சிறப்பாக இருக்கிறது. நாட்டார் வழக்குகளின் சொற்றொடர்களையும் நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். அதேவேளையில் மிகு புனைவு வாசிப்பவருக்கு அயர்ச்சியையோ அல்லது சிரிப்பையோ வரவழைக்கும். இந்நாவலிலும் அது போலான வேகத்தடைகள் இருக்கவே செய்கின்றன. கொங்கையும் பிருஷ்டம் மட்டுமே பெண் உடல் இல்லை. பெண் உடல் மீதான மிகு வர்ணனையும், ஆங்கில படப் பாணியில் பாயும் விலங்கைப் போல் அந்த மருத்துவன் காடுமேடெல்லாம் பாய்வதும், யுத்தம் முடிந்து இரண்டு மாதங்களின் பின்னும் ஒருவன் உயிரோடு இருப்பது போன்ற நிகழ்வுகள் சினிமாத்தனமாக இருக்கிறது.

மூன் மன்னனின் சோரியாசிஸ் நோயும், மருத்துவ குடிகள் மயிர் மழிக்கும் குடியாகி போனதன் பின்னுள்ள தந்திரங்களும் சூழ்ச்சிகளும், காதுகள் கால்களில் இருந்தால் அந்த அரசும் மக்களும் என்னாவார்கள்? அதன் பாரதூரம் எத்தகையது என்பதையும் அந்தக் காலே அம்மன்னனுக்கு எமனாய் அமைவதையும், காலை தொழுதவர்கள் ஆட்சிக் கட்டிலுக்கு வந்தால் என்ன ஆகும் என்பதையும், அன்று முதல் இன்று வரை மருத்துவ கனவை சிதைக்க கொண்டுவரும் திட்டங்களும், திருத்தங்களும், நீட்டின் கொடுமைகள் என கதையின் போக்கில் எள்ளலோடு சொல்லிச் செல்கிறார்.

"முக்கோணக் காதல் கதைபோல் இது முக்கோண அரசின் அரசியல் கதை".

அப்லாஸ் எனும் வாரிசின் பெயரின் ஊடாகவே நாம் அப்பல்லோவை கண்டடைகிறோம். இங்கு அப்பல்லோ மருத்துவக் குடில் அல்ல மருத்துவக் குடியின் எச்சம்.

சரித்திரப் புனைவை தொய்வின்றி பல்வேறு முடிச்சுகளை அவிழ்த்து எதார்த்தமாக வாசிப்பதற்கு தங்குதடையின்றி கதை சொல்வதில் கல்கி, சாண்டில்யன், அகிலன், பாலகுமாரன் வரிசையில் அண்டனூர் சுராவும் இடம் பெறுகிறார்.

சுரா இந்த நிலையோடு தேங்கி விடாமல் மென்மேலும் சிறந்த படைப்புகளைத் தர வேண்டும்.

கால்களற்ற மெனிலாஸை அந்த தாழிக்குள் புதைப்பதாக கனவு காணும் சிறுமி சிந்தி போல் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமான அந்த சந்தேகம் தீராமல் இருக்கிறது. உண்மையிலேயே அவரது கால் வெட்டி எடுக்கப்பட்டதா?

ஆசிரியர்: அண்டனூர் சுரா
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை: ₹245

2 comments:

  1. வாசிக்க வேண்டிய நூல்... விமர்சனத்திற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றிங்க தோழர்

      Delete