Saturday, April 13, 2019

நன்றேது? தீதேது?


நன்றேது? தீதேது?

கிட்டத்தட்ட பத்து ஆளுமைகளுடனான உரையாடல்களின் தொகுப்பே இந்நூல். தரமான தாள், சிறப்பான வடிவமைப்பு மற்றும் பொக்கேற் நாவல் அளவிலான கையடக்க உருவாக்கம் என சிறப்பாக இருந்தாலும், ஒற்றுப் பிழைகளும், பத்தாவது உரையாடல் ஒன்பதாவது உரையாடலின் தொடர்ச்சியா அல்லது தனி உரையாடலா எனும் குழப்பமான அச்சமைப்பும் சரி செய்யப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பதிப்பகத்தின் கவனக்குறைவையும் அவதானிக்க முடிகின்றது.
உரையாடல்கள் பற்றி நான் சொல்வதைக் காட்டிலும் ஆளுமைகளின் என் மனதைத் தொட்ட பொன்னெழுத்துக்களை தந்திருக்கிறேன். வாசித்துப் பாருங்கள்.

என் கவிதைகளின் அரசியல் பேசும்போது அவர்களுடைய கவிதைகளின் தோல்வியை ஒப்புக்கொள்கின்றனர்.
- கடங்கநேரியான்.

வணிகத்தன்மையான நூல்களை விற்றுத்தான் இலக்கியத்தரமான நூல்களையே பதிப்பிக்க முடிகிறது. பதிப்பகத்தின் பெயரை தக்க வைப்பதற்கு இலக்கியமும், இலக்கியத்தை தக்கவைக்க வணிகமும் தேவைப்படுகிறது.
- தோழமை பூபதி.

இந்திய இலங்கை இலக்கியச் சந்தையில் புலி எதிர்ப்புதான் இப்போது நல்ல வரவேற்பு. அதுதான் செளகரியமானதும் பாதுகாப்பானதும் கவனத்தை ஈர்க்கக்கூடியதுமாய் மாறிவிட்டது.
- தீபச்செல்வன்.

தமிழகத்தில் ஈழ விடுதலை தொடர்பாக பேசியவர்கள், பேசிக்கொண்டிருப்பவர்கள், பேசப்போகிறவர்கள் எல்லோருக்கும் பின்னால் ஒரு குழுமனப்பான்மையும் சூழ்ச்சியும் இருக்கிறது.
- யுகபாரதி.

குடும்ப அமைப்பிற்குள்ளும், பொது வெளியிலும் தாங்கள் நினைப்பவற்றையெல்லாம் செய்ய முடியாதவர்களாகவே பெரும்பாலான பெண்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள்.
- தமிழ்நதி.

தமிழினத்தின் பீடையான சாதி, வர்க்க, பாலின ஆதிக்கத்தன்மைகள் களையப்பட்ட, அனைத்து தமிழ் மக்களும் சமத்துவம் என்கிற ஒரே விசையில் உரிமைகளும் பண்பாடுகளும் மீட்டெடுக்கப்பட்டு தமிழர் நிலம், அவர்களின் வளம் என்பதோடு முற்போக்கு மிக்க தேசியமாக தமிழ்த்தேசியம் இருக்க வேண்டும்.
- திருமுருகன் காந்தி.

முகாம்களில் உள்ளவர்களின் குரல் சுடுகாட்டின் அமைதியாக்கப்பட்டிருக்கிறது.
- பத்திநாதன்.

சிவப்பணுக்களும் வெள்ளையணுக்களும் நம் உடலின் உள்ளே போராடும் வரைதான் வாழ்க்கை. அது போராட்டத்தை நிறுத்தும்போதுதான் நமக்கு மரணம் சம்பவிக்கும்.
- தேன்மொழி தாஸ்.

தங்கள் மதத்தில் நிர்வாணத்தை மார்க்கமாகக் கொண்டவர்கள், ஒரு இனத்தை நிர்வாணமாக்கிப் புசித்ததும், கொண்டாடியதும் நாகரீக உலகம் இதைப் பார்த்திருந்ததும் மனிதகுலப் பண்பாட்டுக்கே அவமானமாகும்.
சுதந்திரத்துக்காகப் போராடும் மக்களின் அரசியலுக்குள் உலக அதிகார நாடுகளின் அரசியல் தலையீடு செய்தால் அது ஒரு மனிதப் பேரழிவையே பரிசளிக்கும் நயவஞ்சகமானது என்பதற்கான எடுத்துக் காட்டாக முள்ளிவாய்க்கால் அழிவு நிகழ்ந்து விட்டது.
- குணா கவியழகன்.

விடுதலையே அரசியலைத்தான் குறிக்கிறது. பக்திப் பூர்வமாக அணுகினால் பிரபாகரன் வருவார் என்பதை மட்டுமே நம்பிக்கொண்டு போராட்டம் ஒருகட்டத்தோடு முடங்கி விடும். அரசியல் பூர்வமாக அணுகினால் பிரபாகரன் வந்தாலும் வராவிட்டாலும் ஏன் வருவதாக சொல்லிக்கொண்டே இருந்தாலும் போராட்டம் அடுத்த கட்ட தேவையினை நோக்கி நகரும்.
- மகா.தமிழ் பிரபாகரன் (விகடன் மாணவ நிருபர்).

6 comments:

  1. அனைவரின் விமர்சனம் நூலின் சிறப்பை சொல்கிறது...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. மதிப்புரை, நூலை வாங்கி வாசிக்கும் ஆவலைத் தூண்டியது. நன்றி.

    ReplyDelete
  3. நூல் அறிமுகம் நன்று. வாழ்த்துகள்.

    ReplyDelete