Friday, April 13, 2018

வாடிவாசல்-சி.சு.செல்லப்பா


ஏறு தழுவுதல் குறித்து நுட்பமான முறையில் வெளிவந்த குறுநாவல் சி.சு.செல்லப்பா அவர்களது வாடிவாசல் குறுநாவல். இது காளைக்கும், காளையை அடக்குபவனுக்குமான நிகழ்வுகளை சுவை குன்றாது விவரித்துள்ளது.

தை எழுச்சி, மெரினா புரட்சி என சல்லிக்கட்டுக்காக நிகழ்ந்த போராட்டங்களை ஜீவ காருண்யம் பேசும் பலர் இந்த வாடிவாசலை வாசித்திருந்தால் கலித்தொகையால் சிறப்புப் பெற்ற ஏறு தழுவுதல் எனும் தமிழ்ப் பாரம்பரிய விளையாட்டின் மகத்துவத்தினை, வீரத்தினை உணர்ந்திருப்பர். துரதிஷ்டம் இந்த விளையாட்டு வேறு முகம் எடுக்க சாதிய கொடுங்கரங்கள் காரணமாகின. அதைத்தான் இந்த வாடிவாசல் நுட்பமாக விவரிக்கிறது.

காரி காளை மீது அணைந்த அம்புலி காரி காளையால் குத்துப்பாட்டு இறக்குறான். பல ரகக் காளைகளை அடக்கிய கிழக்குச் சீமையின் பேர்பெற்ற வீரன். மரணப் படுக்கையில் அம்புலி தன் மகன் பிச்சியிடம் கூறிவிட்டு இறந்து விடுகிறான். சிறுவனாக இருந்த பிச்சி வளர்ந்து இளைஞனாகும் காலத்துக்குள் காரி காளையும் பல சல்லிக்கட்டுகளில் பேர்பெற்ற காளையாக சமீன்தாரின் கவுரவத்தை காப்பாற்றி வருகிறது. சமீன்தாருக்கு காரிதான் எல்லாமும். பிச்சியின் மாடு அணைக்கும் லாவகமும், பேர்பெற்ற விளையாட்டு வீரனின் சாதுர்த்தியமும் சமீன்தாருக்குள் பதற்றத்தை உருவாக்குகிறது. எங்கே தன் காளையை அடக்கி தன் கவுரவத்தினை குறைத்து விடுவானோ எனும் பதற்றம் அது. மனுஷனுக்கு மாட்டுக்குமான சண்டை மனுஷனுக்கு மனுசனுக்குமான சண்டைகளாக மாறுவதும் உண்டு. அப்படித்தான் முருகு எனும் மாடுபிடி வீரனுக்கும் பிச்சிக்கும் நிகழ இருந்ததை பாட்டையா எனும் அந்த கிழவர் மடைமாற்றுகிறார். அந்தக் கிழவர்தான் பிச்சிக்கு ஒவ்வொரு காளையைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் விளையாட்டின் நுட்பம் தெரிந்தவர்.

காரி காளைக்கும் பிச்சிக்கும் இடையிலான நிகழ்வுகளை வாடிவாசலில் ஒரு போர்க்களமாக விறுவிறுப்பாக சொல்லியுள்ளார். ஒருவர் அணைந்த மாட்டை இன்னொருவர் அணைவது மறத்தமிழனுக்கு அழகல்ல என்பதையும், ஒரு வீரனை மாட்டிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய தருணத்தில் அணைக்க வேண்டிய தந்திரோபாயத்தையும் மருதன் மூலமாக நிறுவுகிறார். மருதனைப் பார்த்து பாட்டையா கிழவர் உன் தங்கச்சியின் தாலிக்கு சேதாரம் இல்லாம பார்த்துகிட வேண்டியது உன் பொறுப்பு என்று கூறுவதிலிருந்து பிச்சிக்கும் மருதனுக்குமான உறவு முறை புலப்படுகிறது. காரிக் காளையை அடக்கி தொடையில் குத்துப்பட்ட பிச்சியை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிய மகிழ்வில் பிச்சியும், தனது அத்தனை கவுரவத்திற்கும் பங்கம் உண்டுபண்ணிய காரி காளைமேல் உள்ள கோவத்தில் காளையை சுட்டுக் கொல்லும் சமீன்தாரும் என வாடிவாசல் இன்னொரு பரிணாமத்தை பேசுகிறது.

விளையாட்டு என்பது விளையாட்டாக இல்லாமல் அது சாதிய அதிகாரத்தின் பலிக் களமாக மாறியதே இந்த விளையாட்டின் மீதான வெறுப்புகளை அதிகமாக்கியது. விளையாட்டின் விதிமுறைகள் தெரியாமல் ஒரே காளைமேல் பலர் விழுந்து அடக்குவதும், அதை நேரடி ஒளிபரப்பாகி காசு பார்க்கும் கார்பரேட்டுகளின் கைகளுக்குள் சென்றுவிட்டதையும் தொலைக்காட்சி வழி பார்த்துக்கொண்டிருக்கிறோம் நாம். சல்லிக்கட்டு பற்றிய முக்கியமான ஆவணமாக "வாடிவாசல்" உள்ளது என்றால் மிகையல்ல.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:21
தலைப்பு: வாடிவாசல்
ஆசிரியர்: சி.சு.செல்லப்பா
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 88
விலை: ₹90

4 comments:

  1. சிசு.செல்லப்பாவின் வாடிவாசல் சிறப்பான அறிமுகம்.

    ReplyDelete
  2. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

      Delete