Monday, September 3, 2018

மூக்குத்திக்காசி-புலியூர் முருகேசன்

ஒற்றை கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தி பன்னிரண்டு சிறுகதைகளை ஒன்றாக்கி நாவல் என தந்திருப்பதாக தடாலடியாக நான் சொல்வது என்பதைக் காட்டிலும் வாசிக்கும் ஒவ்வொரு மனதிலும் இவ்வெண்ணம் எழவே செய்யும். ஒரு ஆண் படைப்பாளி எப்படி பெண்ணின் அகம், புறம் பற்றி முழுவதும் எழுத இயலாதோ அதற்கு ஒப்பானது மூன்றாம் பாலினத்தவர் பற்றி மற்ற இரு பாலரும் எழுதுவது என்பது. அப்படி ஒரு சவால் மிகுந்த கதாபாத்திரத்தை கொண்டு இந்திய அரசியலையும், அரசு சாரா அமைப்புகளையும், தமிழின் இலக்கியவாதிகளையும் பகடி செய்து, நாவலுக்கான வரையறையை கட்டுடைத்து "மூக்குத்திக்காசி-முப்பாலி" எனும் நூலைத் தந்துள்ளார் தோழர் புலியூர் முருகேசன் அவர்கள். 

ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் மூன்றாம் பாலினமாக மாறும் ஒருவர் சமூக அவலங்களை அறுத்தெறியும் புரட்சியாளர் அவதாரம் எடுக்கும் கதை. திருநங்கைகள் மீதான சமூகத்தின் பார்வை என்பது மூக்குத்தி காசியின் கடையில் வேலை செய்யும் பெரியவரின் பார்வையை ஒத்தது. இன்றைக்கு அவர்களிலிருந்து எழுத்தாளர்களும், சமூக சேவையாளர்களும், காவல்துறையிலும் என தொடர்ச்சியான முன்னெடுப்புகளினூடு பார்வையை மாற்றி வருகிறார்கள். அதே நேரத்தில் நாவலில் மூக்குத்திக் காசியிடத்தில் மூன்று பத்தாக தன்மைகளின் உணர்வுகளை பிரித்திருப்பது என்பது ஆசிரியரின் மிகுபுனைவு. போபால் விஷவாயுவால் இறந்துபோகும் அக்பர் எனும் குழந்தைக்கு பால் புகட்டுவதில் மூக்குத்திக் காசி பூரண பிறப்பை எய்திருப்பதை குறியீடாக்குகிறார். ஓரின சேர்க்கையை விரும்பும் மாந்தர்களையும் அவர்களின் வெளியுலக மேட்டிமைகளையும் படம் பிடிக்கிறார். "வட மாநிலத்தில் வைத்து இந்துத்துவ வெறியனின் குறியறுத்தல் உச்சம்". எடுத்தாண்டிருக்கும் சில படைப்பாளர்களின் மேற்கோள்கள் அவர்களது நூலுக்கு விமர்சனமாக அமைந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. 

தனித்தனியான தலைப்புகளின் கீழ் முடிவதால் கதையோட்டத்தில் தொய்வும், புள்ளி விவரங்கள் விவரணையால் அயர்ச்சியும் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்று. தன் ஊர் மக்களால் அகதியாக்கப்பட்ட ஆசிரியருக்கு அதன் வலியும் வேதனைகளும் அதிகம். அகதி முகாமைக் கடந்து செல்லும் மூக்குத்தி காசியின் பார்வையிலிருந்து ஈழ ஏதிலிகள் தங்கியிருக்கும் தமிழக அகதி முகாம்களின் அவலங்களை புரிந்துகொள்ள செய்கிறார். 

"மூக்குத்தி காசியின் கூடடைதல் போல் நமக்கான கூடடைதலும் சாத்தியமாகும் என நம்புவோம் தோழர்."


6 comments:

  1. நல்ல பகிர்வு..

    ReplyDelete
  2. நூலைப் படிக்கும் ஆவலை உண்டாக்கிய பதிவு. நன்றி.

    ReplyDelete
  3. சுருக்கமான ஆயினும் அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள்

    ReplyDelete