Monday, January 4, 2016

Earth and Ashes ஆப்கன் திரைப்படம் - என் அனுபவம்

புதுக்கோட்டை பிலிம் சொசைட்டி அமைப்பினர், கந்தர்வன் அரங்கத்தில் (புதுகை கம்யுனிஷ்ட் அலுவலகத்தில்) நேற்றைய தினம் (03.01.2016) மாலையில் ஒரு திரைப்படத்தை திரையிட்டனர்.

தஷ்தாகிர் (Dastaguir) எனும் பெரியவர், யாஸின் (Yassin) எனும் காது கேளாத சிறுவன், ஷைநாப் (zaynab) எனும் பெண் (தஷ்தாகிரின் மருமகள்) மொசாத் (Mosad) வெளியூர் சுரங்கம் ஒன்றில் வேலை செய்யும் தஷ்தாகிரின் மகன். பாலைவனத்தின் புழுதிகளோடு யுத்தத்தின் பின்னான வலிகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் சுமந்தபடி பயணிக்கிறது 2004 ல் அடிக் ரஹீமி (Atiq Rahimi) இயக்கத்தில் வெளியான எர்த் அண்ட் அஷெஸ் (Earth and Ashes) எனும் ஆப்கன் திரைப்படம்.
எரிக் குய்ச்சர்ட் (Eric Guichard) இன் ஒளிப்பதிவு ஆப்கானிஸ்தானின் இதுவரை பார்க்காத பாலைவன மலைகளையும், புழுதிகளை கிளப்பிச் செல்லுகின்ற பயணங்களையும், ஆள் அரவமற்ற பகுதிகளையும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்ற சில சிதிலமடைந்த வீடுகளையும், கருமை சூழ்ந்த சுரங்கத்தின் அருகில் இறுதியாக பசுமையான சில காட்சிகளையும் எதார்த்தமாக படம் பிடித்திருக்கிறார்.
யுத்தத்திற்கு முன்னால் வரை காது கேட்கும் நிலையில் இருந்த யாசின் பின்பு ஒவ்வொரு இடத்திலும் சப்தங்களை கேட்க முயற்சித்த வண்ணம் இருக்கிறான். குழந்தைகள் எப்போதும் தம் இயல்பிலிருந்து மாறுவதே இல்லை, சிறுமியோடு  பகிர்ந்து உண்பதிலும், ஒரு ஆடுடன் விளையாடுவதிலும் (மிதிவெடியில் சிக்கி இறந்து போகிறது அந்த ஆடு), ராட்டில் சுற்றுவது என குழந்தை குழந்தையாகவே இருக்கிறது என படம் முக்கால்வாசியும் வியாபிக்கிறான்.
தஷ்தாகிரின் நினைவுகளில், குண்டு விழுந்த வீட்டுக்குள் மருமகள் ஷைநாப் நிர்வாணத்தோடு எரிந்து இறப்பது அடிக்கடி வந்து துன்பத்தைத் தருகிறது. ஒவ்வொரு முறையும் அவர் அவளது நிர்வாணத்தை மறைக்க துணியோடு ஓடுகின்றார். சுரங்கத்தில் வேலை செய்யும் மகனிடத்தில் அவன் மனைவியும், சகோதரியும், அம்மாவும் இறந்துவிட்டதையும், மகனுக்கு கேட்கும் திறன் போனதையும் சொல்வதற்காக செல்வதும், இறுதிவரை மகனைப் பாராமல் அவன் பரிசாகக் கொடுத்த அந்த புகையிலைப்பொடி வைக்கும் அழகிய டப்பி ஒன்றை அங்குள்ள அலுவலரிடத்தில் கொடுத்து நாங்கள் உயிரோடு இருப்பதை என் மகன் நம்புவான் என கூறிவிட்டு வேறொருவரின் பொறுப்பில் விட்டுவிட்டு வந்துவிட்ட பேரனைக் காண புறப்படுவதோடு ஒரு வலி நிறைந்த கவிதையென முடிகிறது படம்.

யுத்தங்கள் எப்போதுமே பெண்களையும், குழந்தைகளையுமே பெரிதும் பாதிக்கின்றது என்பதை மீண்டும் இப்படம் உணர்த்திச் செல்கிறது. இரத்தமும் சதையுமாக அந்த மக்களையும் மண்ணையும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. எனக்கு ஒவ்வொரு காட்சியிலும் எமது ஈழத்தின் போர்க்களத்தையும், போரின் பின்னான நிகழ்வுகளையும், வலிகளையும், தாக்கதையுமே இப்படம் என்னுள் ஏற்படுத்தியது.
விரசத்தை உண்டுபண்ணும் துக்கடாத் துணிகளோடு நாலு பாட்டும், எதார்த்தத்தை மீறிய நாலு சண்டையும் வைத்து (காக்கா முட்டை போன்ற படங்கள் தவிர்த்து) படம் எடுக்கின்ற தமிழ்ச் சினிமா எப்போது தன்னை மாற்றிக்கொள்ளும்? கதைவளம் கொட்டிக் கிடக்கும் தமிழ்ச் சினிமாவில் பேய்ப் படங்களும், நகைச்சுவை எனும் பெயரில் அபத்தங்களைக் கொண்ட்டாடுவதும், பணம் சம்பாதிக்கும் விதமாக ஒரே நடிகர், நடிககைகளைக் கொண்டாடுவதும்தான் அடையாளமா?
2004 ல் கேன்ஸ் திரை விழாவில் திரையிடப்பட்ட படம்.
2005 ல் சான்சிபர் (zanziber international film festival) திரை விழாவில் கோல்டன் தோவ் (Golden Dhow) விருது பெற்ற திரைப்படம்.

ஐயா இளங்கோ அவர்களும், புதுகை செல்வா அவர்களும் இந்த விழாவினை ஒருங்கிணைத்தனர். கவிஞர்கள் மு.கீதா அம்மா, வைகறை அண்ணன், சிறுகதையாளர் அண்டனூர் சுரா, விமர்சகர்கள் ஸ்டாலின், சுரேஷ் மான்யா, பத்திரிக்கையாளர் புதுகை மதியழகன் போன்றவர்களோடு இன்னும் பெயர் தெரியாத பலர் கலந்து கொண்ட இந்த விழாவில் என்னையும் கலந்துகொள்ள வைத்து இந்த திரைப்படம் குறித்து பேசும்படி பணித்த ஐயா இளங்கோ அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மென்மேலும் இதுபோன்ற சிறந்த திரைப்படங்களை தமிழ் மொழியில் திரையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றியுடன்
சுகன்யா ஞானசூரி.

1 comment:

  1. மனதை விட்டு அகலாத திரைப்படம் ...அழகான வரிகளில் வேதனைகள் நிறைந்துள்ளதை உணருக்கின்றேன் பா..

    ReplyDelete