Wednesday, January 20, 2016

ஒரு பழைய கட்டுரையும் இன்றைய உலகத்தின் நிலையும்.....

"வெகு மக்களிடம் ஓட்டு வாங்கித்தான் இந்த ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். ஆனால், அந்த மகா பெரிய ஓட்டுக்களை வாங்குவதற்கு ஆகிற மகா மகா செலவுகளை மறைமுகமாக ஏற்பது இந்த சர்வதேச சதி ஸ்தாபனம்தான்(பன்னாட்டு நிதி நிறுவனம்)."

"ஐரோப்பாவின் புதிய படையெடுப்பு" எனும் தலைப்பில் 1994 பிப்ரவரி "சாரதா" இதழில் "பெரியார் தாசன்" அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று வாசித்தேன். இன்றைக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதார சுரண்டல் குறித்து 20 வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு தீர்க்கமாக எழுதியுள்ளார்.

விவசாயம், மருத்துவம், கல்வி போன்றவற்றில் நிகழும் சுரண்டல் அரசியலுக்கு வளர்ந்த நாடுகள் தங்களுக்குள் ஜி-7 அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் வளரும் நாடுகளுக்கு கொஞ்சம் ஊட்டத்தைக் கொடுப்பதுபோல கொடுத்து பின்னர் மொத்தமாய் அவர்களது இரத்தத்தையே சுரண்டுவதுதான் இதன் நோக்கம் எனவும், அதற்காக உருவாக்கப்பட்டதே "டங்கல்" எனும் ஒப்பந்தம் என்பதையும் தொலைநோக்குப் பார்வையோடு எழுதியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை இந்தியாவில் முதலில் வேகமாக அமல்படுத்தியது தமிழ்நாடு (தீமைகளை முன்னெடுத்துச் செல்வதில் திராவிடக் கட்சிகளை மிஞ்ச முடியாதுதான்) என்பதையும், இதனால் அன்றைய ஆண்டில் அரசு வேலைக்கு ஆள் எடுப்பது இல்லை என்று செய்தித் தாளின் முதல் பக்கத்தில் அறிக்கை விட்டதையும், போலீஸ் மற்றும் இராணுவத்துக்கு மட்டும்  அதிகமாக ஆள் எடுக்கப்பட்டதையும், இவர்களைக் கொண்டு போராட்டக்காரர்களை அடக்க வழி செய்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆள்குறைப்பு செய்வதில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு இந்த டங்கல் ஒப்பந்தம் பெரிதும் உதவியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைக்கு கார்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கச் சூழலில் உலகம் சிக்கித் தவிப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். உற்பத்திகளையெல்லாம் சுரண்டிவிட்டதை நம் ஒவ்வொரு விவசாய மண்ணையும் பறிகொடுத்ததில் உணர முடிகிறது. வளர்ந்த நாடுகளோடு வளரும் நாடுகள் செய்கின்ற ஒப்பந்தங்களின் பின்னணியில் இப்படியான அரசியல் இருக்கக்கூடும் என்ற எண்ணம் மேலெழுவதை தவிர்க்க இயலாது.

வாய்ப்பு இருப்பவர்கள் வாசித்துப் பாருங்கள்.

(இந்த இதழை மின்னச்சு வடிவில் எனக்கு அனுப்பி உதவிய
கிருத்து. இராமதாசு ஐயா துபாய்(பெரம்பலூர்) அவர்களுக்கு எனது நன்றிகள்.......)

No comments:

Post a Comment