Sunday, October 21, 2018

தோட்டியின் மகன்




மண்வெட்டி, வாளி, மலக்கிடங்கு என வாழும் இசக்கி முத்துவின் மரணம் மகன் சுடலை முத்துவை தோட்டி ஆக்கிவிடுகிறது. ஆனால் சுடலை முத்துவிற்கு தோட்டியாக வாழ்வதில் விருப்பமில்லை. அவனது எண்ணங்கள் வேறுபடுகின்றது. தோட்டிகளின் கூட்டத்திலிருந்து தனித்தே வாழ்கிறான். கடற்கரை பகுதியை சேர்ந்த தூப்புக்காரி வள்ளியை திருமணம் செய்து ஆண்குழந்தை பெற்றெடுக்கிறார்கள். மோகன் என பெயர் சூட்டப்பட்டு தோட்டியின் மகன் என தெரியாதபடி க்கு வளர்க்கின்றனர் சுடலை முத்துவும்-வள்ளியும். காலம் அப்படியேவா இருந்து விடும்? இவர்களின் கனவுகளை நிராசையாக்கி விடுகிறது.

வைசூரி, காலரா போன்ற கொடிய நோய்கள் நிகழ்வுகளின் காலத்தை தெளிவாக புலப்படுத்தும் வேளையில் தோட்டி களின் வாழ்வை நிர்மூலமாக்கி விடுகிறது. தோட்டி களை ஏய்த்து பிழைப்பு நடத்தும் ஓவர்சீயர், அவருக்கு மேலுள்ள முனிசிபல் அதிகாரி என அரச அடக்குமுறையாளர்கள். தோட்டி கள் பள்ளிக்கூடம் சென்ற வரலாற்றையும், மோகனை பள்ளியில் சேர்க்க சுடலைமுத்து செய்த தியாகங்களும், இழப்புகளும் அடுத்த தலைமுறை வாழ்வுக்கான மூலதனம். ஒடுக்கப்படுபவர்களுக்கு கல்வி கிடைத்தால் அது ஒடுக்குவோருக்கு எதிராக சுட்டுவிரல் நீட்டும் என்பதை ஒடுக்கும் வர்க்கம் தெரிந்தே வைத்திருக்கிறது. இன்றைய நீட் கல்விமுறை நவீனப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறையின் பழைய வடிவம் என்பதறிக.

தோட்டியாக வாழ விரும்பாத சுடலைமுத்து சுடுகாட்டில் காவலாளி வேலைக்கு மாறுகிறான். காலரா நோய் உச்சமடைந்து நேரம் இரவு பகலாக சிறியவர் முதல் பெரியவர் வரை தோட்டிகள் முதல் எசமானர்கள் என பிணங்கள் வந்துகொண்டிருந்தது. மரணங்கள் வாழ்தலின் உன்னதத்தினை உணர்த்துகின்றன. காலரா சுடலை-வள்ளி தம்பதியரையும் காவு வாங்கிவிடுகிறது. மோகன் மண்வெட்டி, வாளி தூக்கி மலக்கிடங்கு செல்கிறான். காலம் வெகு வேகமாக சுழன்று விடுகிறது. மோகன் சுரண்டப்படும் மக்களின் ஒற்றைக் குரலாய் ஓங்கி ஒலிக்கின்றான்.

ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு மாபெரும் பேரணியை நிகழ்த்துகின்றனர். தோழர்களின் சிவப்பு மாலைகளை தோளில் சூடி, சிவப்பு கொடியை கையிலேந்தி பேரணிக்கு தலைமையேற்று மோகன் கம்பீரமாய் முன்னால் வருகிறான். தூத்துக்குடியில் நிகழ்ந்தது போலவே அதிகார வர்க்கம் துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறது. நான்கில் ஒரு பங்காக கூட்டம் குறைகிறது. இப்போதெல்லாம் சம்பளத்தினை எண்ணி வாங்குகிறார்கள். உரிமைகளுக்காக போராடுகிறார்கள். போராட்டம் இல்லையென்றால் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகள் கிடைக்காது என்பதை சம்மட்டியால் அடித்தது போல் சொல்கிறார். மழை கரைத்து செல்லும் அந்த மண் மேட்டில் சிவப்பு மாலை வெளித்தெரிகிறது. இந்த குறியீடு கதையின் முடிவை வாசிப்பவர்கள் உணர்ந்து மன கொந்தளிப்பை உருவாக்கி விடுகிறது. மனித மாண்பினை பறைசாற்றுகிறது. மனம் அலைக்கழிப்புக்கு உள்ளாகிறது. மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

தமிழில் இதுபோன்ற ஒரு புரட்சிகர சிந்தனையை விதைக்கும் சிறந்த நாவல் வாசித்த நினைவு இல்லை. அதியற்புதமான சிவப்பு சிந்தனையை விதைக்கும் எழுத்தை தந்த மலையாள எழுத்தாளர் தகழியாருக்கும், தமிழில் மொழி பெயர்த்த சுந்தர ராமசாமி அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

நூல்: தோட்டியின் மகன்
ஆசிரியர்: தகழி சிவசங்கரன் (தமிழில் சுந்தர ராமசாமி)
மொத்தப் பக்கம்: 176
வெளியீடு: காலச்சுவடு
விலை: ₹175.

No comments:

Post a Comment