Sunday, March 18, 2018

சொற்கள்

உன் விருப்பம் போல் எழுது
உனக்கு பிடித்த முறை எதுவாயினும்
அந்த முறையில் எழுது
பாலத்துக்கடியில்
மிக அதிகமான ரத்தம் பாய்ந்துவிட்டது
தொடர்ந்து நம்பிக் கொண்டிரு
அந்த ஒரே ஒரு பாதைதான் சரியானதென்று
கவிதையில் எல்லாவற்றுக்கும் இடமுண்டு
இயல்பாகவே ஒரே ஒரு நிபந்தனைதான்
ஒரு வெற்றுப் பக்கத்தை நீ மேம்படுத்த வேண்டும்.

ஸ்பானிஷ் கவி நிகனோர் பர்ராவின் இக்கவிதை புதிதாக எழுதவரும் இளம் கவிஞர்களுக்கான ஒரு எளிய வழிகாட்டி.

சொற்கள் முழுக்க முழுக்க கவிதைகளுக்கான காலாண்டிதழ்.

சிக்மா, பத்மஜா அய்யங்கார், எலிசபெத் குரியன் மோனா மற்றும் மந்திரபு ஹைமாவதி கவிதைகளை மதுமிதா மொழியாக்கம் செய்துள்ளார். யயாதி மதன் காந்தி கவிதையை பத்மஜாவும் நிகனோர் பர் ராவின் கவிதைகளை எம்.கார்திகேயனும் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்.

என்.பெரியசாமி, வெய்யில், இசை, கார்த்திக் நேத்தா, மோகனரங்கன், லட்சுமி மணிவண்ணன், ஆகாசமுத்து, ப.தமிழ்ச்செல்வன், சிவமணி, இர. தங்கபாலு, மீரா வில்வம், அழகு நிலா, ஆத்மாஜீ, வே.பாபு, ஆனந்த், ஷா அ, வேல் கண்ணன், ஜான் சுந்தர், ஸ்ரீ சங்கர விஸ்வநாதன், ஜேப்ராங்க்ளின் குமார், யாழி, கனிமொழி ஜி, குமார நந்தன், விஷ்ணுகுமார், பின்னி மோசஸ், ராஜேஷ் ஜீவா, கௌதம சித்தார்த்தன், பழனி பாரதி என இருபத்தி எட்டு கவிஞர்களின் கவிதைகளோடு தனது முதல் பயணத்தை துவங்கியுள்ளது சொற்கள். இவர்களில் சிலரை நான் முகநூல் வழியே வாசித்திருக்கிறேன், சிலரை வேறு சில சிற்றிதழ்களில் வாசித்திருக்கிறேன். சிலர் இப்போதுதான் புதியவர்கள். எல்லோரையும் ஒரே இதழில் வாசிக்கும்போது கவிதைகளின் வெளியையும், போக்கையும் அவதானிக்க முடிகிறது.

ஆத்மாநாம் உடனான பிரம்மராஜனின் நேர்காணல் மிக அருமை. நிறைய விடையங்களை விபரித்து சென்றுள்ளது. இதுபோன்ற நேர்காணல்கள் கவிதைகள் மீதான சந்தேகங்களுக்கு நிவர்த்தியாக அமையும்.

சிற்றிதழ்கள் நீண்டகாலம் உயிர் வாழ்தல் என்பது நடவாத ஒன்றாகவே உள்ளது. ஆனால் வாழும் காலத்தில் அவை தரமாக வாழ்ந்துவிடுவதில் இன்னும் உயிர்ப்பு இருக்கிறது.

தலையங்கத்தில் ஆசிரியர் சாத்வீக முறையிலான கவிதைகளோடு இருக்க விரும்புகிறார். இது இன்றைய நிலையில் எழும் மனதின் நிலைப்பாடுதான். அதேபோல் கவிதைகளைத் தருவிப்பதிலும், கவிஞர்களை அடையாளம் காணுவதிலும் சோர்வுற்றுப் போனதாக எழுதியுள்ளார். வரும் இதழ்களில் அந்த சோர்வுகள் இருக்காது என்ற நம்பிக்கையை இந்த இதழ் வெளிப்படுத்தியுள்ளது.

சி.மணிக்கு சமர்ப்பணத்தோடு கவிதைகளுக்காகவே சிறப்பாக தன்னம்பிக்கையோடு வெளியிட்டிருக்கும் திரு. கே.சி.செந்தில்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காது தொடர்ந்து இதழ் தனது வெற்றி பயணத்தை தொடர வாழ்த்துக்கள்.


அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:12
தலைப்பு: சொற்கள் (கவிதைக்கான காலாண்டிதழ்)
ஆசிரியர்: கே.சி.செந்தில்குமார்
மொத்தப் பக்கம்: 48
விலை: ₹50 

No comments:

Post a Comment