Wednesday, February 28, 2018

புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்- ஈழபாரதி


நேற்று முந்தினம் (26/02/2018) எனது சகோதரனின் திருமணத்திற்கு அம்மா மற்றும் அண்ணாவோடு வந்திருந்த ஈழபாரதி தனது நான்காவது நூலான "புலம்பெயர்ந்தோர் கவிதையும்,வலியும்" எனும் நூலினை தந்துவிட்டு சென்றிருந்தார். முழுக்க முழுக்க புலம் பெயர்ந்தவர்களால் எழுதப்பட்ட கவிதைகளை தேடிக் கண்டடைந்த கட்டுரைத் தொகுப்பு.

ஈழபாரதிக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அதுதான் எமக்கான அடையாளமும் கூட. "ஏதிலி" என்பதே அது.

எனக்கு ஈழபாரதியை மாணவப் பருவத்திலிருந்தே அறிமுகம். மாணவர் விடியல் எனும் இதழில் (முகாம்களுக்குள் உள்ள மாணவர்களுக்காக திண்டுக்கல் பெஸ்கி இல்லத்திலிருந்து அருட்தந்தை வின்னி ஜோசப் அவர்களால் கொண்டுவரப்பட்ட இதழ்) நானும் சிறு சிறு கவிதைகள் எழுதிய போது, நிக்சன் எனும் பெயரில் வெளிவந்த இவரது கவிதைகளை வாசித்து வந்தேன். பிறகு கல்லூரி மாணவர்கள் பேரவையின் சந்திப்பின் ஊடாக நேரில் சந்தித்து உரையாடினோம். அதன்பிறகு "வேர்விடும் நம்பிக்கை", "வளரி" போன்ற சிற்றிதழ்கள் எம்மை அடையாளப்படுத்தின.

நான் "அலைகளின் மீதலைதல்" எனும் எனது கவிதை நூலினை வெளியிட்ட ஆண்டில்தான் என நினைக்கிறேன் ஈழபாரதி "சருகுகள்" என்ற முதல் கவிதைத் தொகுப்பினூடாக விருட்சம் பெற துவங்கியிருந்தார். பின்னர் "பனைமரக் காடுகள்" மற்றும் நாட்குறிப்பற்றவனின் இரகசியக் குறிப்புகள்" எனும் கவிதைத் தொகுப்புகள் மூலமாக கவனம்பெறத் துவங்கியிருந்தார். அவரது நான்காவது நூலே இந்தக் கட்டுரைத் தொகுப்பு.

 சிறு சிறு கட்டுரைகளாக மொத்தம் பதின்நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான கவிதைகளை இரண்டாக வகைப்படுத்தியுள்ளார்.
1. ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் வலிகளை தாங்களே எழுதுவது
2. புலம் பெயர்ந்தவர்கள் பற்றி மற்றவர்கள் எழுதியது.

"இராமேசுவரத்தில் எல்லோரும்
குளித்துக் கரையேறுகிறார்கள்
நாங்கள் குதித்துக் கரையேறுகின்றோம்"
எனும் கவிஞர் அறிவுமதியின் கவிதையோடு முதல் கட்டுரை நிறைவு பெறுகிறது.

தமிழக முகாம்களில் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கவிதைகளின் வாயிலாக பல கவிஞர்கள் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்கள் அல்லாமல் முகாம்களுக்கு வெளியே வெளிப்பதிவில் இருந்தும் சிலர் தங்கள் படைப்புகளின் வாயிலாக புலம் பெயர்ந்தோர் வலிகளை பதிவு செய்துள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து சிலர் அங்குள்ள வலிகளையும், வாழ்வியலையும் பதிவு செய்துள்ளனர்.

ஐக்கூ வடிவிலும் எமது புலம்பெயர் வாழ்வின் வலிகளை பதிவு செய்துள்ளதை தனிக் கட்டுரையாக உருவாக்கியுள்ளார். அதிகாரத்தின் அடக்குமுறைகள், வலிநிறை வாழ்வு என கட்டுரைகள் பேசுகின்றன.

"கரை சேராப் படகுகள்" எனும் கட்டுரையில் எனது கவிதையினையும் இணைத்து எழுதியுள்ளது எனக்குக் கிடைத்திருக்கும் அடையாளமாகவே பார்க்கிறேன். இதே போல உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், வ.ஐ. ச.ஜெயபாலன், சு.சிவா,தொ. பத்தினாதன்,அகரமுதல்வன், தமிழ்நதி, ஈழவாணி, பேனா. மனோகரன், பன்னீர்செல்வம், வேலனையுர் பொன்னன்னா, ஞானக்குமரன், சு.செங்குட்டுவன், தமிழினி போன்றவர்கள் அல்லாமல் இன்னும் விடுபட்டவர்கள் ஏராளம் இருக்கக்கூடும். இவர்களைக் கண்டடைய வேண்டியதும் அவசியமாகும்.

கனடா டொரண்டோ நகரத்தில் மட்டும் 1,70,000 அகதிகளை அதிகளவில் ஏற்றுக்கொண்ட நாடு என நோபல் பரிசு பெற்றிருக்கிறது. அடுத்தபடியாக இந்தியாவில் தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 110 முகாம்களில் 1,07,435 அகதிகளில் முகாம்களில் வாழ்பவர்கள் சுமார் 60,185, முகாமுக்கு வெளியில் தங்கி வாழ்பவர்கள் 37,000 பேரும், இருப்பதாக 2000ல் வெளியான தேசபக்தன் இதழின் புள்ளிவிபரம் கூட அரசிடம் இல்லாமல் போன கூத்தையும் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். இன்னும் இதில் தெளிவில்லாத நிலையே உள்ளது என்பதும் இந்தியாவின் அகதிகள் கொள்கையின் அவலப் போக்கு வெட்டவெளிச்சம் ஆகிறது. இப்புள்ளி விபரங்களை கட்டுரையில் எடுத்தாண்டு இருப்பது சிறப்பு.

இக்கட்டுரைத் தொகுப்பு இன்னும் ஆழமாகவும், தெளிவாகவும் அடுத்தகட்டத்துக்கு பயணப்படவேண்டிய தொலைவு இன்னும் இருக்கிறது. இவற்றை மனதில் கொண்டு இன்னும் விரிவாக மேன்மைப்படுத்த வேண்டுமாக கேட்டுக்கொள்கிறேன். இது எமது புலம்பெயர் சமூகத்திற்கு கிடைத்திருக்கும் ஒரு வரலாற்று ஆவணம் என்றே நான் கருதுகின்றேன்.

அடையாள எண்: NV 104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:7
புலம்பெயர்ந்தோர் கவிதையும்,வலியும்-கட்டுரைகள்
ஆசிரியர்: ஈழபாரதி
மொத்தப் பக்கம்: 72
வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம்
விலை: ₹80

6 comments:

  1. புலம் பெயர்ந்தோர் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள்... எத்தனை எத்தனை.

    நல்லதோர் நூல் அறிமுகம் நண்பரே.. நன்றி.

    ReplyDelete
  2. புலம்பெயர்ந்தோர் கவிதையும்,வலியும்
    அறிமுகம் அருமை நண்பரே...!!

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றிகளும் தங்கள் வருகைக்கு...

      Delete
  3. "இராமேசுவரத்தில் எல்லோரும்
    குளித்துக் கரையேறுகிறார்கள்
    நாங்கள் குதித்துக் கரையேறுகின்றோம்"
    புலம்பெயர்ந்தோர் வாழ்க்கையில் தோன்றும் வலியினை விளக்க இந்த ஒரு கவிதை போதுமே.

    ReplyDelete