Wednesday, March 9, 2016

மணலும் மணல் சரிந்த இடமும் - சுப்ரா


அரசாங்க அதிகாரிகளின் துணையின்றி, அரசியல் ஆதிக்கத்தின் அரவணைப்பின்றி, மக்களின் பொறுப்பற்ற, பேராசை மனங்களின்றி எந்தவொரு தவறும் இயற்கைமீது நிகழ்த்தப்படுவதில்லை. ஆற்றங்கரையோரமாய் வளர்ச்சி பெற்ற மனித நாகரிகம் இன்று ஆற்றின் வளங்களை கொள்ளையடிக்கக் கற்றுக் கொண்டது எந்த வகை நாகரிகத்திடமிருந்து என்பது கேள்வியாகவே உள்ளது.
நம்மைப் பாதுகாக்கும் இயற்கையின் வளங்களை கொள்ளையடிக்கும் செயல், பெற்றவளின் பிறப்புறுப்பை சிதைக்கும் வக்கிரம் பிடித்த பிள்ளையின் செயலுக்கு ஒப்பானதாகவே நான் பார்க்கிறேன்.
கடந்தாண்டு கொட்டித் தீர்த்த பெருமழையில் பல ஆண்டுகளாய் நீர் பாயாத பாலாற்றில் கரை புரண்டோடும் வெள்ளத்தைப் பார்க்க கூடிய கூட்டத்தைப் பார்த்தால் வெறுப்பாகவும், அவமானமாகவும் இருந்தது. அவ்வளவு மணலையும் கொள்ளையடிக்கும்போது எங்கே போனார்கள்? மொத்த நீரும் வீணாய் கடலில் கலந்தது. ஆறு மலடாய்ப் போனது.
இதே நிலைதான் இப்போது பல ஆறுகளுக்கு நிகழந்து கொண்டிருக்கிறது. தாமிரபரணியில் நிகழும் மணல் திருட்டையும், அந்த முதலாளிகளின் பேராசையையும், வேவு பார்க்கும் தொழிலாளியின் மன நிலைகளையும், அந்த மண்ணின் மணத்தோடு இம்மாத "புதுப்புனல்" சிற்றிதழில் "மணலும் மணல் சரிந்த இடமும்" எனும் சிறுகதை ஒன்றைப் படைத்திருக்கிறார் கவிஞரும், பரணி இலக்கியக் காலாண்டிதழின் ஆசிரியர்களில் ஒருவருமான சுப்ரா ஐயா அவர்கள்.
ம.ம.ச.இடமும் சரியான தண்டனையை முடிவாய் வழங்கியிருக்கிறது. இயற்கை நமக்களித்த கொடைகளை அடுத்த தலைமுறையிடம் பத்திரமாய் கையளிக்கத் தவறியமைக்கு நிச்சயம் அதற்கான தண்டனைகளை ஒட்டுமொத்த சமூகத்துக்குமாக இயற்கை வழங்கும். அப்போதும் நாம் வேடிக்கை மட்டுமே பார்ப்போம் உயிரோடு இருந்தால். 

1 comment:

  1. மிக்க நன்றி நண்பரே . வழங்கும் என்றே நம்புவோம் . வழங்கினால் மட்டுமே அடுத்த தலைமுறை வாழ முடியும் . குடிநீர் திட்டங்களுக்கு மணல் உள்ள இடங்களைத் தேடியலைகையில் ஏற்பட்ட மனக்குமுறலின் வெளிப்பாடுதான் இது .

    ReplyDelete