Saturday, July 31, 2021

நாடிலி தொகுப்பு குறித்து சுப்ரா. வே. சுப்ரமணியம் பார்வை

 







“ நாடிலி “ – கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் – சுகன்யா ஞானசூரி . [ 97903 50714 ]

வெளியீடு – கடற்காகம் வெளியீடு .

விலை – ரூ 110 . [ முதல் பதிப்பு ஜூன் 2021 ]

மா . ஞானசூரி எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் யாழ்ப்பாணம் அச்சுவேலி வடக்கில் 1984 ல் பிறந்து , 1996 ல் தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்ந்தவர் . தற்சமயம் திருச்சியில் வசித்து வருகிறார் . அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது .

தொகுப்பின் தலைப்பே போதும் உள்ளிருக்கும் கவிதைகள் வாசிப்பவர்களிடம் உருவாக்கப்போகும் வலிகளை உணர்த்துவதற்கு .

வருமானம் தேடி புலம் பெயர்தல் வேறு ; வாழ்விடம் இழந்து , வாழ்வாதாரம் இழந்து வலியோடு புலம் பெயர்தல் வேறு . வந்த இடத்திலும் தனியொரு அடையாளம் இன்றி அகதி என்ற ஒற்றை அடையாளத்தோடு வாழ்தல் தரும் வலி மிகப் பெரிது . அந்த வலி குறித்து பல புதினங்களும் , சிறுகதைகளும் வந்து கொண்டேயிருந்தாலும் கவிதை என்ற வடிவத்தில் அவை வாசிப்பவர்களிடமும் அந்த வலியை எளிதாகக் கடத்தி விடுகின்றன . இந்த தொகுப்பு முழுவதும் அத்தகைய வலி தரும் வரிகள்தான் . பழைய நினைவுகள் தரும் வலிகளையும் , வந்த இடத்தில் அனுபவிக்கும் வலிகளையும் மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார் கவிஞர் . கவித்துவமான வரிகளையும் மீறி வாசித்து முடிக்கையில் நம்மிடம் எஞ்சி நிற்பவை வலி …. வலி…. வலி …. தவிர வேறொன்றுமில்லை .

அரசின் பதிவேட்டில் / அங்க அடையாளங்களோடு

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் மிச்சம் மீதியாயிருக்கும்

உயிரைக் காக்கப் போராடும் / “ அடிமையான அகதி நாங்கள் “

வேறென்ன அடையாளம் சொல்ல ? 

அகதிகள் முகாம்களில் நிகழும் கொடுமைகளை பட்டியலிட்டு முடிக்கிறார் ஒரு கவிதையை - 

உங்களுக்கு யாழ்ப்பாணம் தெரிவதைப் போல

யாழினிகள் தெரிவதில்லை . 

முகாம்களில் வாழ்விடம் என்பது ஒருவகையான வெற்றிடமே எனக் காட்டும் வரிகள் -

பத்துக்கு பத்து என்பதொரு கணித சூத்திரம்

இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்

கல்லறையின் அளவை . 

அகதி வாழ்வு என்பது எவ்வளவு கொடுமையான மனநிலையைத் தருகிறது இந்த வரிகளில் -

மஞ்சள் கனியொன்றின் / பற்குறியில்

உறைந்து கிடக்கும் / குருதியென வீச்சமடிக்கிறது

இந்த வாழ்வு . 

பழைய நினைவுகளில் மூழ்கியெழுந்து வெளியேறி தற்போதைய வாழ்வு நிலையை எளிமையான வரிகளில் கடத்திச் செல்கின்றது கவிதை ஒன்று - 

சீவல் தொழிலற்று

சீவியம் போன மூத்த குடியானவன் பிள்ளை

பனை நிழலும் அற்றுப்போனான் . 

கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளை சற்றே மாற்றிப் போட்டுள்ள வரிகளின் வீரியம் எவ்வளவு வெப்பத்தைக் கொணர்கிறது -

சமுத்திரத்தின் பெருவெளியில்

படகுகளோடு மூழ்கிய குழந்தைகளையொதுக்கும்

கரையில் நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்

யாதும் ஊருமில்லை / யாவரும் உறவுமில்லை . 

அகதிகளின் வாழ்வில் எதுவுமே நிரந்தரமல்ல எனினும் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற நம்பிக்கையை தனக்குள்ளாகவே உருவாக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழி ?

அன்றன்றைக்குப் பெய்யும் / மழையை

அன்றன்றே ரசித்துவிடு / பிறிதொரு நாளில்

அது அதுவாகவும் நாம் நாமாகவும்

இருப்போமா தெரியாது .  

 


வாழ்வு தேடி வந்த இடத்திலும் வாடிக்கையான கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன – ஆனால் எவ்வளவு மனப்புழுக்கம் !

கந்து வட்டியில்தான் இந்த வருடமும்

எமக்கான தீபாவளி / அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது .  

தங்களது வலிகளை பிறரிடம் பகிர்கையில் எத்தனை சோகத்தை மனதில் தேக்கி வைத்திருந்தால் இந்த வரிகள் உருவாகும் –

இடப்பெயர்வின் வலிகளை

அகதியானவர்களிடத்து கேட்டுப் பாருங்கள்

கண்ணீரில் மிதக்கும் வாழ்வில்

நீந்த முடியாது அலைவுறுவீர்கள் . 

இந்த வரிகளை வாசிக்கையில் நமக்குள் ஏற்படும் குற்ற உணர்வை அவ்வளவு எளிதில் உதறிச் செல்ல முடியாது - 

போரை எவரும் விரும்பி ஏற்பதில்லை

ஆனால் அதுதரும் / விளைவுகள் குறித்து அச்சப்படுகிறேன்

போர் திணித்த இடப்பெயர்வில்

எப்படி நீங்கள் என்னை / அகதியென விளிக்கிறீர்கள் ?  

மழை குறித்துதான் எத்தனை கவிதைகளை வாசித்து விட்டோம் . ஆனால் அந்த மழை ஒரு நாடிலியின் பார்வையில் வேறு ஒரு உணர்வுகளை உருவாக்கி விடுவதை உணர்த்தும் வரிகள் -

யார் / கவிழ்த்துவிட்டது / அந்த மதுப்புட்டியை ?

இப்படிப் / பொங்கி வழிந்தோடுகிறதே

நிலமெங்கும் வெள்ளமென அகதிகளின் கண்ணீராய் . 

எவ்வளவுதான் வேதனைகள் சூழ்ந்திருந்தாலும் இயற்கையை இரசிக்காமல் இருக்க முடியவில்லைதான் . ஆனால் அந்த இயற்கையும் ஒரு சுய பச்சாதாபத்தைத்தானே உருவாக்கி விடுகிறது -

தாயகமிழந்த என்னை / நீங்கள்

அகதி என்றழைப்பதைபோல்

சாயமிழந்த வண்ணத்துப்பூச்சிகளை

என்ன பெயரால் அழைக்கிறீர்கள் ?  

உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பெருந்தொற்று காலக் காட்சிகள் ஒரு நாடிலியின் பார்வையில் தொற்று குறித்த பயத்தைவிட தனது எதிர்காலம் குறித்த அச்சத்தை மட்டுமே உருவாக்கி விடுகின்றன என்பதை உணர்த்தும் ஓர் ஒப்புமை -

ஊடகத்தில் நிரம்பி வழியும் / பெருந்தொற்றில்

சாலைகள் மரணித்துக் கிடக்கின்றன

நிச்சயமற்ற எதிர்காலத்தின் / சூனியத்துழலும் ஏதிலிபோல்

அச்சம் ஒவ்வொரு இல்லத்திலும் அடைந்திருக்கிறது . 

புலம் பெயர்ந்த வலியை மிகுதியாகப் பேசினாலும் , உலகின் பொதுவான பிரச்சினைகளையும் பாடுபொருளாகக் கொண்டு சில கவிதைகளைத் தருகிறார் – சற்றே பகடி கலந்து தன் வலி மறக்கும் முயற்சியாக .

மேலைத்தேய கார்ட்டூன்கள்

அறிவையும் அன்பையும் போதிக்கும்வேளையில்

அடைக்கல தேசத்தின் கார்ட்டூன்கள் நஞ்சூட்டுகின்றன . 

சிறு சிறு வார்த்தைகள்தான் ; ஆனால் எத்தனை அர்த்தம் பொதிந்தவை –

கடல்மீதும் / சிறுதுண்டு நிலம்

தேடும் / அகதியின் பாதம் . 

ஒரு சில வரிகள் படைப்பாளியின் குரல் வழியே அனைத்து நாடிலிகளின் மனக் குமுறல்களையும் வலி பொதிந்து தருகின்றன -

அடைக்கலமான தேசத்தில் / நடைப்பிணங்களாய்த் திரிகின்றோம் / நினைவில் / ஊரைச் சுமந்தபடி . 

*************************************

தினந்தினம் இப்படி இறப்பதைக் காட்டிலும்

போர் நிலத்தில் / ஒரு கணம்

இறந்தே போயிருக்கலாம் / புலம் பெயராது . 

வாசிக்கும் யாரையும் உலுக்காமல் விடாது இந்த வரிகள் -

துயர்மறந்து விடியலை நோக்கும் / என் கனவுகளை

அகதியென்னும் ஒற்றைச் சொல்லில் / சிதைத்துவிடுகிறீர்கள் . 

தொகுப்பை வாசித்து முடித்ததும் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்வு குறித்த வலி மிகுந்த உணர்வுகளை நம்மிடம் கடத்தி விடுவதன் மூலம் படைப்பாளி அவரது முயற்சிக்கான முழு பயனையும் அடைந்து வெற்றி பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும் ; நாடிலிகளின் வலி குறித்த வலிமையான வரிகளைத் தாங்கிய தொகுப்பு .   

- சுப்ரா .

No comments:

Post a Comment